புதன், 15 மே, 2013

பஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்

அம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை, அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் மிக மலிவான விலையில் தங்கள் உணவை எடுத்துக்கொள்ளும் நுகர்வோர் இருந்தாலும். இது போன்ற உணவகங்களின் எண்ணிக்கை கூடுமாயின் இதனால் நஷ்டம் அடையும் சிறு வியாபாரிகளின் (தள்ளுவண்டி, கையேந்தி உணவகங்களிலும், சிறு உணவகங்களிலும்) எண்ணிக்கையும் அதிகரிக்கும். அம்மா உணவகத்திற்கு அருகில் ஏற்கனவே அமைந்துள்ள் காலை நேர இட்லிக் கடைகளில் விசாரித்துப் பாருங்கள். எவ்வளவு தூரம் தங்கள் வியாபாரத்தில் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்று. அதுவே அம்மா உணவகங்களில் பொங்கல், சப்பாத்தி என்று புது ஐட்டங்கள் சேரும் போது, ஒரு பக்கம் பொது மக்கள் நலன் என்ற பார்வை இருந்தாலும் இன்னொரு பக்கம் அதை விட சற்றே அதிகம் விலை வைத்து நடத்தப்படும் கடைகள் பல காணாமல் போகும் அபாயம் வந்துவிடும்.

இந்தக் கடுமையான விலைவாசி ஏற்றம் கொண்ட சந்தையில் இது போல ஒரு மலிவு விலை உணவகங்கள் திறப்பதற்கு ஆதாரமாக இருக்கும் நிதியை வழங்கும் துறை எதுவென பார்த்தால் மதுபானக் கடையே (டாஸ்மாக்). ஒரு பாமரன் அம்மா உணவகங்களால் பெற்றிடும் லாபத்தினை விட, டாஸ்மாக்கினால் இழக்கும் உடல் நலம், பண இழப்பு, குடும்ப அமைதி கெடுத்ல என இழப்பின் நிரை மிகுதி. நுகர்வுக் கலாச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வை பெருமளவு நாம் செய்ய வேண்டி இருந்தாலும், இது போன்ற அரசியல் லாபத் திட்டங்களினால் பாதிக்கப் படும் சிறுவியாபாரிகளின் நலனுக்காகவும் போராட வேண்டும், அது தான் சமூகத்தின் சமநிலையை

அரசியல் லாபங்களுக்காக இது போன்ற நற்பணிகள் செய்யும் நன்மைகளை ஆராய்ந்துப் பார்த்தால் தொலை நோக்குப் பார்வையற்றதாகத் தான் இருக்கும். இப்பொழுது இருபது ரூபாய்க்கு அரிசி கிடைக்க வழிவகுத்தாலும், குடும்ப அட்டையின்றி வாங்கலாம் என்ற சலுகை, அரிசி மூட்டைகளை கட்சிக் கொடி ஏந்திய டாட்டா சுமோக்களின் பின்புறம் ஏற்றுவதற்குத் தான் அதிகம் உதவுகிறது.

மாநகரங்களில் வேலைக்கு அதிகம் செல்லும் மக்களிடையே உணவகங்களில் தங்கள் மதிய உணவை முடித்துக் கொள்ளும் கட்டாயம் ஏற்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களில் ஏற்பட்டிருக்கும் நம் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்துப் பார்த்தால் எவ்வளவு தூரம் நாம் திசை மாறியிருக்கிறோம் என்று புரியும். தனிக் குடித்தனம் இருக்கும் வீட்டில் கணவன் மனைவி என்று இருவருமே வேலைக்கு செல்வதால், மதிய உணவுக்காக உணவகங்களைப் பெரும்பாலும் நாடுவது அவசியமாகிறது.

மாற்றம் 1.

சரவண பவன், ஆனந்த பவன், சங்கீதா போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் மதிய உணவுக்காக ரூபாய் 200 அல்லது அதற்கும் மேலே வசூலிக்கின்றனர். 30 ரூபாய்க்கு அளவுச் சாப்பாடு கொடுத்து வந்த நடுத்தர உணவகங்கள் கூட இப்பொழுது 60 ரூபாய்க்கும் மேலே கூட்டி விட்டன. 50 ரூபாய்க்கும் கீழே நல்ல சுகாதாரமாக உள்ள உணவகங்களை தேடிப் படித்து உண்பது அரிதான ஒன்றாகிவிட்டது. கலவை சாதங்களுக்கான விலையே ஐம்பதினை எட்டிவிட்டது, பழச்சாறு, தயிர் போன்ற எல்லா மாற்று உணவும் இரண்டு மடங்கு ஏறிவிட்டது. வீட்டில் சமைத்து எடுத்து வர முடியாத அளவுக்கு நேரப் பற்றாக்குறையுடன் வேலைக்கு செல்லும் மக்கள் இனி மதிய உணவிற்கென ஒன்று நாம் சாப்பிடும் அளவைக் குறைக்க வேண்டும் அல்லது மாற்றம் 2 ஐ நோக்கி செல்ல வேண்டும்.

மாற்றம் 2

மெக்.டொனால்டு, பீஷா ஹட், கே.எஃப்.சி போன்ற பன்னாட்டு உணவகங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மிக முக்கியமாக நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது. சாதாரணமாக குறைந்தபட்ச விலையே நூறு ரூபாய்க்கும் குறையாமல் இருந்த அவ்வுணவகங்களின் நிலையினை மாற்றம் பெற்று தீடீரென விலை குறைந்து மாபெரும் புரட்சியாக எழுந்துள்ளது. ஆம் அவர்கள் உற்பத்தி செய்து வந்த எல்லா பண்டங்களிலும் சிறிய அளவில்  பண்டங்கள் செய்து அதை ஐம்பது ரூபாய்க்கும் கீழே விலை நிர்ணயித்துள்ளன.


பீஷா  38 ரூபாய்க்கும், பர்கர் வகையறாக்கள்  25 ரூபாய்க்கும், மில்க் ஷேக்,
ஐஸ்கிரீம், ஃபிங்கர் சிப்ஸ், ஐஸ் டீ மற்றும் மிகவும் விலை உயர்ந்த ஃப்ரைடு சிக்கன் கூட 25 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது இந்திய மக்களுக்காவே செய்யப்பட்ட சிறப்பு பேக்கிங் மற்றும் பேக்கேஜ்கள். டொமினோஸில் ஆரம்பித்த இந்த விலை குறைப்பு புரட்சி இப்பொழுது கே.எஃ.சி வரை பரவியிருப்பது மிகப்பெரிய ஒரு கலாச்சார மாற்றத்தின் அறிகுறி எனச் சொல்லலாம்.

இந்த மாற்றம் கொஞ்சம் வேகமாக மாறி வரும் நம் உணவுப் பழக்க வழக்கத்தை லிஃப்ட்டில் ஏற்றி அருகில் கொண்டு வந்து, முற்றிலுமாகவே நம் அன்றாட உணவுப் பட்டியலில் சேர்க்கும் அளவுக்கு அருகே கொண்டு வந்துள்ளது. அதுவும் காம்போ பேக்குகளில் 65 ரூபாய்க்கு நீங்கள் ஏதேனும் மூன்று வகைகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு இருக்கும் பொழுது. அப்போ சரவண பவனில் இட்லி வடை சாப்பிடும் காசில் மோமோ,கோக்,பர்கர் சாப்பிடலாம் என்றால் உங்கள் வாய் திறக்குமா திறக்காதா?? இந்த பண்டங்களே அகல வாய் திறப்பு பண்டங்கள் தானே!!

இப்போது எல்லா மேலை நாட்டு உணவு விடுதிகளும் தம்து ஃபிரான்சைஸ் வணிக யுக்தியில் பெரிய அளாவு வெற்றி கண்டு விட்டன என்று சொல்லலாம். இதற்கு ஆதாரமாக சொல்ல வேண்டுமென்றால் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்தினைச் சுற்றி இந்த ஒரே வருடத்தில் முளைத்த சில பன்னாட்டு (கே.எஃப்.சி), மெக்டொனால்டு, டாமினோஸ், பீட்ஷா கார்னர், பீட்ஸா ஹட் மற்றும் சில ஐஸ்கிரீம் கடைகளைச் சொல்லலாம், ஒரு பெருநகரத்தின் வளர்ச்சியில் இது சாதாரண நிகழ்வாகத் தோன்றலாம், ஆனால் இந்தக் கடைகளின் வணிகத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் பெரும்பானமை மத்திய தர, வேலை பார்க்கும் வர்கத்தின் மாறிவிட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து நாம் தெளிவான பட்டியல் விட முடியாது, ஆனால் ஐரோப்பா, அமெரிக்கா போல இளைஞர்களின் பீ.எம்.ஐ ஏற்றம், உடல்நலக் குறைவினைக், மிகச் சிறிய அவ்யதிலேயே பூப்படைதல் போன்ற குறைபாடுகளைக் கண்டறிந்தால் நமக்கு இந்த பாதிப்பு குறித்து நமக்கு தெளிவு பிறக்கும்

இப்பண்டங்கள் பழைய(அதிக) அளவிலும், விலையிலும் விற்ற போது ருசி பார்க்காதவர்கள் கூட தங்கள் அன்றாட மதிய உணவாக மெக் டொனால்டு செல்வதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம். இந்த விகிதாச்சாரம் இன்னும் அதிகரிக்கும். அதே நேரம் நம் தென்னிந்திய உணவுகள் நம்மை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கும். இந்த மாற்றத்திற்கு நம் சம்பளத்தில் ஒரு பகுதியை ஃபுட் கார்டுகளாக, சொடெக்ஸோ(SODEXO) பாஸ்களாக கொடுக்கும் முறை வந்ததும் உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலே அந்த போலி பன்னாட்டு மோகம் பர்கர்களையும், பீஸாக்களையும் உண்பது நம் வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் அடைந்தது போல எண்ணத்தைக் கொண்டு வருகின்றது. ஆனால் நாம் தான் அவர்கள் விரித்த வலைக்குள் விழுந்திருக்கிறோம் என்பது புரியாது. முதலில் நாம் அடிமையாகி விட்டால் பின்னர் என்ன விலை இருந்தாலும் கொடுத்து வாங்கச் சொல்லும்.
உதாரணம் : இப்படித் தான் நம் சீயக்காயை விரட்டி ஷாம்புக்களும் (சாஷே முதன்முதலில் வந்தது இந்தியாவில் தான்), நீராகாரம், மோர், சுக்குத் தண்ணீரை விரட்டி காபி, டீ போன்ற பானங்களும் இடம் பெயர்ந்தன இந்த மாற்றம் தானாகவே நிகழ்ந்து வந்தாலும், இது மிகப்பெரிய உணவுக் கலாச்சார மாற்றத்தின் அடையாளம் என்பது மறுக்கவியலா உண்மை. இது மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில், ஆரோக்கியத்தில் என நம் மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

-- 
ஜீவ.கரிகாலன்

செவ்வாய், 14 மே, 2013

ஸ்டெரிலைட் - அடுத்த யூனியன் கார்பைடு??

ஸ்டெரிலைட் - அடுத்த யூனியன் கார்பைடு??

ஒரு நச்சு ஆலை பற்றிய ஆய்வுக் கட்டுரை (விமர்சனங்கள்/கருத்துகள் வரவேற்கப்படுகின்றன)



ஸ்டெரிலைட், பெரிய அளவில் சுற்றுப்புற சீர்கேட்டிற்கு காரணமாக இருக்கும் இந்த ஆலையை எதிர்த்து வரும் போராட்டங்கள் எந்த ஊடகங்களிலும் போதிய கவனம் கொடுக்கப்படாமல் உள்ளூர் மக்களின் ஞாயமான கோரிக்கைகள் எதுவும் மக்கள் மன்றத்தில் வைக்கப்படாமல் ஒரு பிராந்தியப் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டு உதாசீனப்படுத்தப் பட்டு வருகிறது. ஒரிசா மக்களைப் போல ஒற்றுமையாய் தங்கள் உரிமைக்காகப் போராடி வெற்றி கொள்ள முடியாத தூத்துக்குடி மக்களின் நிலைக்கு காரணம் என்ன ??




ஸ்டெர்லைட் ஆலையினை மூடிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையை நீக்கி கடந்த 2ஆம் தேதி வந்த உச்சநீதிமன்றத்தின் ஆனை, தூத்துக்குடி மக்களை மட்டுமல்லாமல், பல இயற்கை ஆர்வலர், சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்தது ஒரு புறமிருக்க, வழக்கை விசாரிப்பதில் உள்ள சிக்கல்களை காரணப்படுத்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு இன்னும் தொய்வடைந்து போய் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலே NEERI {National Environmental Engineering Research Institute}எனப்படும் அமைப்பு பசுமைத் தீர்ப்பாயத்தில் கொடுத்த மாசு பற்றிய அறிக்கையில் அரசு விதித்த மேலே மாசு அடையவில்லை என்ற அறிக்கை வருகிறது. இந்த வழக்கில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றங்கள் குறித்து சில கேள்விகளை பொதுவில் வைப்பது மிக அவசியமாகிறது.

ஸ்டெரிலைட்டின் செயல்பாடுகளில்/உரிமத்தில் எழும் சந்தேகங்கள்:
இப்பொழுது ஸ்டெரிலைட் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம்  இருக்கிறது. தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலை ஒரு தனியார் தாமிர உறிஞ்சு(Copper Smeltor) ஆலை. 1992ல் திறந்து விடப்பட்ட தாராளமயமாக்கலில், தாமிர, அலுமனியம் உற்பத்தி செய்யும் துறைகளில் தனியார் பங்கு பெற அனுமதியளித்தது.1994ல் மஹாராட்டிரத்தின் இரத்தினகிரி மலைப் பகுதியில் அந்த ஆலை நிறுவக் கிளம்பிய எதிர்ப்பில், தமிழகத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்தது, கூடுதலாக துறைமுக வசதியும் சேர்ந்தே கிடைத்தது

ஆனால் தமிழ்நாட்டில் உரிமம் பெறும் இடத்தில் இருந்தே ஸ்டெரிலைட்டின்
சட்டவிரோதப் போக்கு தெரிகிறது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25
கிலோமீட்டர் தொலைவிற்குள் இது போன்ற பெரிய ஆலைகள் நடத்த மாசுக்
கட்டுப்பாட்டு வாரியத்திடமும், சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சகம் எப்படி அனுமதி வாங்கியது என்கிற 19 ஆண்டு கால விடை தெரியா கேள்வி ஒன்றிருக்கின்றது.

தெரியுமல்லவா மன்னார் வளைகுடா எவ்வளவு முக்கியமான பாதுகாக்கப்பட
வேண்டிய பகுதியென்று?? 560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா  தேசிய பூங்காவில் 0.25 ஹெக்டர் முதல் 125 ஹெக்டர் அளவிலான 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் மீன்களின் (2200இந்திய மீன் வகைகளில் 510 மன்னார் வளைகுடாவில் தான் இருக்கிறது) இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. இந்த ஆலை நல்லதண்னித் தீவு, வந்தீவு, காசுவார் தீவு, விலங்குச் சல்லி ஆகிய தீவுகளுக்கு மிக அருகாமையில் உள்ளது. இந்த ஒரு காரணமே ஸ்டெரிலைட்டை மூடுவதற்கு போதிய காரணம் தான்.(#01) Rule 5 of the Environment (Protection) Rules 1986.

வணிகத்தில் Backward Integration என்று தொழில் முறையைப் பற்றி சொல்லுவதுண்டு, தாமிர ஸ்மெல்டர் ஆலையாக மட்டுமே செயல்பட்ட ஸ்டெரிலைட், இன்னும் சில பொறித் தொகுதிகளை(Plant) கந்தக ஆக்ஸைடு உற்பத்தி செய்யும் பொறி, ஆனோடு  பொறித் தொகுதிகளையும் சட்டவிரோதமாக – அனுமதி பெறாமல் தன்னுடன் இணைத்துக் கொண்டது என்றும் சொல்லப் படுகிறது, இந்தக் குற்றத்தையும் சேர்த்து  தான் 2010-லேயே ஆலையை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால்  இறுதியில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எல்லாம் வேலை வாய்ப்பு என்கிற காரணத்துடன், ஸ்டெரிலைட் நிறுவனம் மேற்கொள்ளும் சமூகப் பணிகளையும், தொழிற்சாலை விதிகளை தற்பொழுது கடைபிடித்து வருகிறதுஎன்றும் கருதியதாகக் கூறப்பட்டது.

இந்த இடத்தில் தான் அரசின் புள்ளியியல் விவரங்கள் மீதும் தணிக்கை முறை மீதும்  சந்தேகம் வருகிறது .இந்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் சில முரண்கள்:-

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தொழிற் வகைபடுத்துதலில் ஸ்டெர்லைட்
நிறுவனத்திற்கு அட்டவணையில் சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சிவப்பு நிற வகையில் உள்ள ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு (இந்திய தொழிற்சாலைகள் வகை குறியீட்டு எண் :1012 – சிவப்பு) மாதத்திற்கு ஒருமுறை நேரடிச் சோதனையும், மாதிரிச் சேகரிப்பும் கட்டாயம் எடுக்க வேண்டியது என்று கூறப்பட்டுள்ளது.

ஜெர்மனியிலிருந்து இந்திய தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப இறக்குமதி
செய்யப்பட்டு தூத்துக்குடியில் நிறுவப்பட்ட அந்த மூன்றாம் அதிநவீன
கண்காணிப்பு நிலையத்தின் நிலை என்ன? (இதில் வைத்திருக்கப் பட்டிருக்கும்
இயந்திரமும் பரிந்துரைக்கப்பட்ட காற்றுக்கு எதிர்திசையில் வைக்கப் பட்டிருக்கிறது  என்று இந்த வழக்கைத் தொடுத்தவர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் சரியான அளவு காற்றில் ஏற்பட்டிருக்கும் மாசுக்களை கண்டறிய முடியாது போகும் என்பது உறுதி)


நகரங்களில், புறநகரங்கள்/ தொழில் மையம்/ குடியிருப்பு பகுதிகளில்
காற்று மாசடைவதைக் கண்காணிக்க வைக்கப் படும் கண்காணிப்பு நிலையத்தை ஏன் தூத்துக்குடி சிப்காட்டில் நிறுவவில்லை என்பது முதல் கேள்வி?, ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் (Reuters) ஐந்து கிலோமீட்டர் தள்ளியே கண்கானிப்பு நிலையம் இருக்கின்றதை சுட்டிக் காட்டுகிறது. இந்தக் கண்கானிப்பு நிலையம் 2008ன் மாசுக் காட்டுப்பாட்டு அறிக்கையில் தூத்துக்குடியில் மொத்தம் 03 நிலையங்களாக இருக்கின்றது, அதுவே 2010ம் ஆண்டின் அறிக்கையைப் பார்க்கும் பொழுது எண்ணிக்கை மூன்று என இருந்தும். அதன் ரீடிங் (reading) கணக்கெடுத்துக் கொள்ளப் படவில்லை. SO2, NO2, PM10 என எல்லா பட்டியலிலும் இரண்டு நிலையங்களில் (இடம்: ராஜா ஏஜன்ஸீஸ், fisheries college) இருந்து தான் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் நிலையத்தின் (இடம் :ஏ.வி.எம் நகைக்கடை) கதி என்ன? என்பது இரண்டாம் கேள்வி SO2 எனப்படும் சல்ப்யூரிக் ஆக்ஸைடு அளவு 2008ன் நிலையை விட 2010ல் உயராமல் இருக்க, கட்டுக்குள் இருக்கும் நிலையில் இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது மூன்றாம் கேள்வி? ஏனெனில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டது, மார்ச் 23 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து காற்றில் கலந்திட்ட ஒரு கனமீட்டரில் 2941.82 மில்லிகிராம் அளவு, கண்காணிப்பு நிலையத்தின் சென்சாரின் அதிகப்பட்ச பதியும் திறனே 3000 மில்லிகிராம்/ஒரு கன மீட்டர் தான். இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கேள்வி ஸ்டெரிலைட் ஆலையை ஆய்வு செய்த குழுவில் அங்கத்தினராக அந்த நிறுவனத்தின் சார்பாக ஒருவரை சேர்த்தது எந்த விதத்தில் நியாயம் என்பது முக்கியமான கேள்வி ?

ஏற்கனவே சொன்னது போல, ஸ்டெர்லைட் ஆலைக்கு மாதம் ஒரு முறை தணிக்கை செய்து வரும் பொழுது, அவர்கள் ஆய்வு செய்யும் தகவல்கள் சரியானது தானா என்பதற்கு உத்திரவாதம் உண்டா ? இது போன்ற நவீன ஆலைகளில் மிக முக்கியமான பணி கருவிமயமாதல் மற்றும் கட்டுப்பாட்டுத் துறையின் பங்கு. இதன்படி ஆலையின் மொத்த செயல்பாட்டையும் நவீன முறையில் கருவிமயமாக்கப் பட்டு அதை தொழிற்சாலை தரக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அம்சங்கள், கழிவு வெளியேற்றம், சுத்தகரிப்பு போன்றவற்றைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். அது போலத் தான் ஸ்டெரிலைட்டிலும் இது போன்ற கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டு காற்றில் கலக்கும் மாசுகளை, கழிவுநீரை என கட்டுப்படுத்த இயலும். அதே சமயம் இதைக் கண்காணிக்கும் உணரி(சென்சார்)யின் தகவல்களையும் மாற்றவும் இயலும் என்பது சாத்தியமே. ஒரு நவீன ஆலை தமது தவறுகளை மாற்றியமைக்கும் (மறைக்கும்) தொழில்நுட்பம் இருக்கிறது என்பதால் அரசின் தீவிர கண்காணிப்பு இருந்தால் மட்டுமே இதை செயல்படுத்த முடியும் என்பதும் உண்மை.

சுப்ரீம் கோர்ட் விதித்திருந்த நூறு கோடிகள் அபராதம் கூட 2005ல் எடுக்கப்பட்ட ஆய்வில், உலக சுகாதார நிறுவனத்தின் அதிகப்பட்ச நிர்ணயங்களை விட எட்டு மடங்கு அதிகமான அளவு தண்ணீரில் மாசடைய, கன உலோகங்கள் கலப்பதற்கு காரணமாய் ஸ்டெரிலைட் ஆலை இருக்கிறது என்று கூறிய 15 வருட தகவல்களை உடைய அறிக்கை தான் அபராதம் விதிக்கக் காரணமாகிறது. இதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்திருந்த அபராதம் (அதுவும் ஐந்து வருட அவகாசத்துடன்) பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் இருக்கும் மூன்று கோடி பங்குகளின் EPS (Earning Per Share)-இல் வெறும் ரூபாய் 0.3-ஐ மட்டுமே எடுத்துக் கொள்வதால் முதலீட்டாளர்கள் இதைப் பற்றி பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பது மேலும் வருத்தம் தருகிறது.

உலக அளவில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்கள்:-



தூத்துக்குடியைப் போலவே வேதாந்தா நிறுவனம்(ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனம் 54% வீத பங்குகளை வைத்திருக்கிறது), உலகம் முழுவதும் சுரங்கங்களையும், ஆலைகளையும் நிறுவியும், வாங்கியும் உள்ளது, அதே போல உலகம் முழுவதிலுமிருந்து எதிர்ப்புகளும் வலுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலேயே ஒடிஸ்ஸா மாநிலத்தில் வரவிருக்கும் பாக்ஸைட் சுரங்கத்திற்கான திட்டத்தை எதிர்த்து பெரிய அளவில் போராட்டம் நிகழ்ந்து, தற்காலிகமாக அந்த ஆலை மூடப் பட்டது. அது போல கோவாவிலும் இந்நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நிகழ்ந்தது. ஒடிஸ்ஸாவில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக உள்ளூர் போலீஸை வைத்து மிரட்டியும், பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியும் கொடுமைப் படுத்தியதைக் கண்டு இங்கிலாந்தில் உள்ள தலைமை அலுவலகத்திலும், நியூயார்க்கிலும், ஒடிஸாவிலும் கடந்த ஜனவரி 11ல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் போராட்டங்கள் செய்து கண்டனம் தெரிவித்தன.

ஸ்டெரிலைட் நிர்வாகமோ இது போன்ற கசிவினால் யாரும் இதுவரை உடல் ரீதியாக பாதிக்கப்படவில்லை என்று தனது வலைதளத்தில் எழுதி வைத்திருக்கிறது. அப்படியானால இதுவும் ஆய்வு செய்ய அதிகாரிகள் வரும் பொழுது மாசடைவதைக் குறைவாக காட்டுவது போலான கண்கட்டு வித்தை தானோ என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஏனென்றால் கடந்த மே 11ம் தேதி அன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அந்த ஆலைக்கு எதிராகப் போராடி வரும் அமைப்பினர் (NTCE) கிட்டதட்ட 2400க்கும் மேற்பட்ட கேன்சர் நோயாளிகள் ஒரு நகர எல்லைக்குள் ஒரே வருடத்தில் (ஒரே மருத்துவமனையில் எடுக்கப்பட்ட தகல் உரிமை ஆவனம்) உருவாகியுள்ளனர் என்று அச்சுறுத்தும் தகவல் ஒன்றை எடுத்து வைத்தனர்.

அடுத்ததாக ஸ்டெரிலைட்டின் கழிவுகள் ஏற்படுத்திய மண் மற்றும் நீரின் நிலை எப்படி இருக்கிறது என்று அவ்வூர் மக்களிடம் கேட்டறியும் பொழுது இந்நிறுவனம் பல பொது நீர் நிலைகளை, கிணறுகளை உபயோகப்படுத்த முடியா வண்ணம் ஆக்கியுள்ளது என்று சொல்லப் படுகிறது. அவ்வாலையின் திடக் கழிவு மேலாண்மையைப் பார்க்கும் பொழுது அது மண்ணில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தெளிவாக விளங்கும். தாமிர உற்பத்திக்குப் பின் கழிவாக வரும் மண் போன்ற துகள்கள் பாதுகாப்பாக அடுக்கிவைக்கப் பட வேண்டும். அதற்கு பெரிய அளவில் இடவசதியும், அதை பராமரிக்க கண்காணிப்பும் அவசியம். ஏனென்றால் அந்த மண்ணிலும் கதிரியக்கம் உள்ளது என்று கூறுவார்கள் (பார்க்க பட்ம் -2). ஆனால் சுற்றியிருக்கும் கிராமங்களில் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அங்கிருக்கும் குளங்களை அடைப்பதற்கு உதவுவதாக தன் செல்வுகளைக் குறைத்து லாபம் அடைந்திருக்கிறது. (படம் – 3)






(படம் -3)
ஸ்டெரிலைட்டை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களின் உற்பத்தித் திறன் மிக அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் தூத்துக்குடிக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் மிக ஆபத்தானவை. நீர், நிலம், மட்டுமில்லாமல் மண்ணிலும் விளைவை ஏற்படுத்திருயிருக்கிறது, பருவநிலையிலும் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. ஆலையிலிருந்து இரண்டு கி.மீ தள்ளியிருக்கும் சமூக ஆர்வலர் தர்மராஜ் அவர்களின் வீட்டிலிருந்து பரிசோதனைக்கெடுத்துக் கொள்ளப்பட்ட மண்ணில் கலந்துள்ள ஒரு ரசாயன மூலகம் பிரிட்டனின் தர நிர்ணய அளவைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம் கலந்திருக்கிறது என்றும் தெரிய வந்தது.

அது போல தூத்துக்குடியின் கடலோரங்களில் அடிக்கடி மீன்கள், கடல்குதிரைகள் போன்றன அதிக அளவில் செத்து ஒதுங்குகிறது என்பதை உள்ளூர் மக்கள் அறிவர், பவளப் பாறைகளின் இன்றைய நிலைமையும் எவ்வளவு ஆபத்தில் இருக்கிறது என்பதும் நாம் அறிந்ததே. தொழிற் கழிவுகளால் மாசடைந்து வரும் கடலில் வாழும் மீன்களை அன்றாட உணவாய் உட்கொள்ளும் பாமர மனிதர்களும் என்ன நிலைக்கு ஆளாகின்றனர் என்பது இன்னும் தீவிரமாக ஆராயப் பட வேண்டிய விசயம். ஏனென்றால் மாசடைந்த நீரில் வாழும் மீன்களை தினமும் உணவாக ஒருவன் உட்கொள்ளும் போது அதில் அதிக அளவு கன உலோகமான க்ரோமியம், கேட்மியம் போன்றன இருந்தால், அவனை கேன்சர் போன்ற கொடிய நோய்கள் தாக்குவது எளிது. நமக்குக் கிடைத்த தகவலின் படி அதே போன்ற ஒரு சூழ்நிலையைத் தான் இன்றைய நிலை இருக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. நமது சட்டப் படி மனிதனை வைத்து இத்தகைய ஆராய்ச்சி செய்வதற்கு அவ்வளவு எளிதாக நம் அரசு அனுமதி கொடுக்காது, அதைத் தான் இது போன்ற ஆலைகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன

உச்சநீதிமன்றம் முன்வைத்தது இதைத் தான்: வளர்ச்சி எனும் நோக்கில் பெரிய அளவில் வேலைவாய்ப்பைத் தருவதையும், அரசுடன் சேர்ந்து நலத் திட்டங்கள செய்வதையும், இரண்டு ஆண்டுகளாக மாசுபடுதலை குறைப்பதற்கான முயற்சி எடுத்தலையும் மேற்கோள் காட்டி, மூடிய ஆலையைத் திறக்க உத்தரவிட்டது. தூத்துக்குடியின் பூகோள அமைப்பும், உலக மயமாக்கலில் மாறிவிட்ட தொழில் நிலைமையும் வேறு எந்தத் தமிழக நகரங்களுக்கும் இல்லாததால். தூத்துக்குடியின் வளர்ச்சியை ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சியால் மட்டுமே மாற்றிட முடியாது என்பது திண்ணம்

பொருளாதார பாதிப்பு மற்றும் அதன் தீர்வு
இத்தனை ஆபத்துகளிலும் ஸ்டெரிலைட்டை உச்ச நீதி மன்றம் அனுமதித்திட காரணங்கள் நேரடியாக 1300 தொழிலார்களும், மறைமுகமாக சில ஆயிரம் தொழிலாளர்களும் சில ஒப்பந்தகாரர்களுக்கும் ஏற்ப்படும் பணியிழப்பு தான் என்றால், தூத்துக்குடியின் வளர்ச்சிக்கான சாத்தியங்களையும், புதிய வேலை மற்றும் வருமான வாய்ப்புகளையும் மாநில அரசு சார்பில் சுட்டிக் காட்டவில்லை என்பது மிகப் பெரிய வருத்தத்தை தருகிறது. அதாவது தென்னிந்தியாவில் கப்பல் கட்டும் தளத்தோடு புதிப்பிக்க இருக்கும் துறைமுகமும் அது சார்ந்த துறைகளுமே இந்த வேலை வாய்ப்பினை ஈடுகட்ட வல்லது என்பது சாத்தியமே. இன்னும் அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்து தூத்துக்குடி வரையிலான சாலை வழித்தடங்கள் விரைவு சரக்குப் போக்குவரத்திற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தாலே இன்னும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பதும் உறுதி.

இதன் உற்பத்தியை நிறுத்தும் பொழுது வரும் தாமிரத்திற்கான உள்நாட்டுத் தட்டுப்பாடு, ஏற்றுமதிக் குறைவு, அரசின் வருமானக் குறைவு, வேலைவாய்ப்பு போன்றவற்றை வாதமாக முன்வைக்கும் பொழுது, அந்நிறுவனத்தின் நிதியறிக்கையைப் பார்க்கும் அவசியம் ஏற்படுகிறது.

1. வேலைவாய்ப்பு :- 2011-12ம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனையின் மூலம் ரூ 19,051 கோடி ஈட்டியிருக்கிறது. அதில் ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு வெறும் ரூ 92 கோடி மட்டுமே அதன் விற்பனை வருமாந்த்தில் 0.5 சதவீதத்திற்கும் குறைவு. ஆனால், மிகப் பெரிய மீன்பிடித் துறைமுகம், வளமிக்க பவளப் பாறைகள், விலையில்லா காற்று,நீர் போன்றவற்றை மாசடையச் செய்வதன் மதிப்பைக் கணக்கிட்டால். ஸ்டெரிலைட்டை மூடுவதில் தவறில்லை

2. ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்கு செலுத்திய வரிச்செலவுகளையும் மேல் சொன்ன காரணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்

3. அந்நிறுவனத்தின் பங்கு வைத்திருப்பு முறையினைப் பார்த்தால், அந்நிறுவனத்தின் நிகர லாபத்தில் அதன் தாய்க் கம்பனியான வேதாந்தா குழுமத்திற்கு 57.24% சதவீதமும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள்(FII) 16.18% போக மீதமிருக்கும் 16.11 % தான் பொது மக்களுடைய லாபம் . (அதுவும் 8.21 சதவீதம் தான் நேரிடையான பங்குகள்)

4. இந்தியாவில் தாமிரமானது பாதுகாப்பு, எரிசக்தி, மின்சாதனம், வாகனம், கட்டமைப்புத் துறைகளுக்கெல்லாம் அத்தியாவசியமாகத் தேவை படுவதால் இந்த ஆலை மிகப்பெரிய தேவையை உருவாக்கிவிடாதா என்றால் அதற்கும் பதில் இருக்கிறது. இந்தியாவைன் தற்பொதைய தேவை வெறும் 5,75,000 டன் தான். 2008லேயே படி நம் நாட்டின் உற்பத்தி 900000 டன்களுக்கும் மேலே வந்ததால், இந்த ஆண்டும் அது 7-11% சதவீதம் அதிகரிக்கும். ஸ்டெரிலைட் உற்பத்தி செய்யும் 400000 டன்களால் எந்த உள்நாட்டுத் தேவையும் பாதிக்கப் படாது.


ஸ்டெரிலைட்டின் அக்கறை போன்ற சூழ்ச்சி:-

ஸ்டெரிலைட்டின் நிறுவன-சமூகப் பொறுப்பு(Corporate Social Responsibility):-
தொடர்ந்து ஊடகங்களுக்கு விளம்பரம், கிராம அமைப்புகளுக்கு அடிப்படை வசதி, அரசியல்வாதிகளுக்கு நன்கொடை, தொண்டு நிறுவனங்கள், கோயில்களுக்கு தாராள நிதி, கல்வி நிறுவனங்களுக்கு கொடை என அக்கறை காட்டுவதை ஆவனப் படுத்தியது தான் சுப்ரீம் கோர்ட்டின் தடையை நீக்கக் கோரிய வழக்கில் வெற்றி கிட்டிடப் பெரிதும் உதவியது.

பொதுவாக உலகெங்கும் உள்ள எல்லா பெரிய நிறுவனங்களும் நிறுவன-சமூகப் பொறுப்பு எனும் விசயத்தில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் காண்பிக்கும். இன்றைய டோவ் கெமிக்கல் (போபால்-யூனியன் கார்பைட்) நிறுவனமும் இத்தகையப் பணியை செய்து வருகின்றது. ஒரு நிறுவனம் அமைவதற்கும் நிலம் கொடுக்கும் சமூகத்திடமிருந்து அந்நிறுவனம் நிலமட்டுமின்றி அங்கு தொழிலாளர்கள், வாழ்வியல் சூழல், உபதொழிலகள், போக்குவரத்து, இயற்கை வளங்கள் போன்ற பல வசதிகளை எடுத்துக் கொள்கின்றது (தினமும் இந்த ஆலைக்கு தாமிரபரணி அணையிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர்கள் கொண்டு வரப்படுகின்றன), இதே சமுதாயத்திற்கு அந்த நிறுவனங்கள் ஓரளவுக்குத் திருப்பித் தரும் கடமையைத் தான் தாமாக முன்வந்து சமூகப் பொறுப்பாக நலத்திட்டங்கள் செய்கின்றது. இதைத் தான் ஸ்டெரிலைட்டும் செய்கின்றது, இது நமக்கு அண்டை வீட்டு மளிகைக் கடைக்காரர் நம் வீட்டின் சுகதுக்கங்களில் கலந்து கொள்வது போன்ற சாதாரண நிகழ்வே, இதைத் தான் எல்லா நிறுவனங்களும் செய்து வருகின்றன. ஆனால் ஸ்டெரிலைட் இதை மிகைப் படுத்தி தன்னை ஒரு அரசியல்வாதி போல காண்பிக்கின்றது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி
மேலும் ஸ்டெரிலைட் நிறுவனமும் தனது உரிமத்தினை சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிப்பு 1994ன் (Environmental Impact Assessment Notification)படி எந்த ஒரு பொதுமக்களின் கருத்துகளைக் கேட்காமல் ஆலையை நிறுவ முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டது. அதற்கேற்றார் போல் இதற்கு பதிலளித்த மாசுக்கட்டுப்பட்டு வாரியமோ, வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்பட்ட 30 சுற்றுசூழல் பாதுகாப்பு அம்சங்களில் 29 வழிமுறைகளை ஸ்டெரிலைட் பின்பற்றுவதாக ஸ்டெரிலைட்டிற்கு ஆதரவான தகவல்களை அறிக்கையாகத் தெரிவித்தது ஆச்சரியமாக இருந்தது. ஸ்டெரிலைட் போன்ற பெரிய ஆலைகளைச் சுற்றி இருக்கவேண்டிய பசுமை வளையங்களை(Green zone) மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 250 மீட்டரிலிருந்து 25 மீட்டராகக் குறைத்தது ஏன் என்று தெரியவில்லை. இதுவே நீதிமன்றத் தீர்ப்பு ஸ்டெரிலைட்டிற்கு சாதகமாக அமைய முக்கியக் காரணம். இப்படி பொது மக்களின், சுற்றுப்புறச் சூழலின் நலனுக்கு எதிரியாக இருக்கும் இந்த ஸ்டெரிலைட் ஆலை மூடப்பட வேண்டியது மிக அவசியம் என இக்கட்டுரை முன் வைக்கிறது.


ஆனால் வளர்ச்சி என்பதை ஒரு தவறான அலகாகக் கொண்டு பல பன்னாட்டு நிறுவனங்கள் நமது சூழலினையும், உடல்நலத்தையும் விலையாகக் கேட்கிறது என்றால் அந்த வளர்ச்சியின் தேவை குறித்த வாதங்கள் எழ வேண்டும். பொதுமக்களுக்கு இந்த உண்மைகள் எடுத்துச் செல்லப் படவேண்டும், அவ்வூர் பொதுமக்களிடம் பெரிய அளவில் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற வேண்டும்.

அப்பொழுது தான் செயல்படாத மாசு கண்டறியும் நிலையத்தின் நிலையினையும், அதன் செயல்பாட்டையும் கண்டிப்பதுடன் ஆலையை மூடிவதற்கான பொது மக்களின் எழுச்சியைக் காண வேண்டும். ஒடிஸாவில் பொது மக்களின் எழுச்சியின் விளைவாக ஸ்டெரிலைட் சுரங்கத்தை மூடிய வரலாற்றை மறுபடியும் எழுதிப் பார்க்க வேண்டும். நமக்கு நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற சுத்தமான நீரையும், காற்றையும் நம் சந்ததிகளுக்கும் கொடுக்க வேண்டும் அல்லவா??

- ஜீவ.கரிகாலன்

பஜ்ஜி சொஜ்ஜி - 19 செல்லரித்துப் போன நான்காம் தூண்



நாட்டைப் பற்றிப் பேசும் பொழுது, எப்பொழுதும் அரசியல்வாதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும் குற்றம் சொல்லிப் பழகிய மனதுக்கு கடைசி நம்பிக்கை என்று நினைத்துக் கொண்டிருந்த மீடியாக்கள் மீதுள்ள என் கோபம் தான் இந்த பதிவு.

முதன் முதலில் பிரஸ் மீட் ஒன்றை நேரில் பார்க்கப் போகிறோம், அதுவும் நம் சொந்த மண்ணின் பிரச்சனை என்பதால் முன்கூட்டியே சென்னை பிரஸ் கிளப் வளாகத்திற்கு சென்று விட்டேன். தூத்துக்குடியிலிருந்து ஸ்டெரிலைட் ஆலைக்கு எதிரான 32 பேர் அடங்கிய குழுவொன்று NTCE (National Trust of Clean Environment) சார்பாக வந்திருந்தது. அதில் அந்த ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், உடல்நலம் பாதித்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என வந்திருந்தனர். முதலில் பிரஸ் மீட்டாக ஒன்றரை மணி நேரமும், அதன் பின்னே தனித்தனியாக வெவ்வேறு பேட்டியெடுத்து முடித்தனர். மொத்தம் 31/2 மணி நேரம் இருக்கும் புதிய தலைமுறை, NDTV, AAJ THAK, கலைஞர், ஜெயா, தந்தி, வின், கேப்டன், தூர்தர்ஷன் என அனைத்து முன்னணி ஊடகங்களும், ஹிந்து, குரோனிகல் போன்ற நாளிதழ்களின் நிருபர்களும் பேட்டி எடுத்தனர்.

கிட்டதட்ட 2400க்கும் மேற்பட்ட கேன்சர் நோயாளிகள் ஒரு நகர எல்லைக்குள் ஒரு வருடத்தில் (ஒரே மருத்துவமனையில் எடுக்கப்பட்ட தகல் உரிமை ஆவனம்) உருவாகியுள்ளனர் என்ற தகவலில் கூட அவர்களுக்கு செய்தி இல்லாமல் போய் விட்டதோ என்னவோ இந்த மூன்று நாட்களில் அந்த பிரஸ் மீட் பற்றிய ஒரு செய்தியும் வரவில்லை.

ஏற்கனவே அரசு அமைத்த ஆய்வுக்குழுவில் அங்கத்தினராக இருக்கும் ஆலையின் அதிபர் அனில் அகர்வால், டெல்லிக்கு மாற்றப்பட்டிருக்கும் வழக்கினை தன் பக்கத்திற்கு மாற்றி விடுவது உறுதி, அதற்கு உதவி செய்தார் போல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையிலும் மாசுபடுதல் குறைந்திருப்பதற்கான ஆவனம் சமர்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த செய்தி மட்டும் அனேக ஊடகங்களில் வெளிவந்து விட்டன.

ஒரு ஆர்வலர் கூறினார், ஸ்டெரிலைட் ஆலை வேண்டாம் என்று கையெழுத்து வாங்க வேண்டி பொது மக்களிடம் கையெழுத்து கேட்க செல்லும் பொழுது அம்மக்கள் சொன்னார்களாம், “போன வாரம் ஆலையை மூடக் கூடாதுன்னு கையெழுத்துப் போடச் சொல்லி நூறு ரூபா கொடுத்தாக, இப்போ நீங்க எவ்வளவு கொடுப்பீக”என்று. நானும் அதைத் தான் கேட்கிறேன் “மீடியாக் காரர்களே!! நீங்கள் அந்தச் செய்தியைப் போடாமல் இருக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள்”.

உங்க உளுத்தம் பருப்பு மீடியாக்கள விட இணையங்களும், சமூக வலைதளங்களும் ஆயிரம் மடங்கு மேல்



- ஜீவ.கரிகாலன்

ஞாயிறு, 5 மே, 2013

கால இயந்திரம்

1.  இப்படிக்கு நான்


இன்று மே 05 2013,
நாளை மே 05 1945
காலங்காலமாய் பேசிவந்த
புனைவுகள் பொசுங்கப் போகின்றன
ஊழிக்காலத்திற்கும், கற்காலத்திற்கும்
இடையே கட்டங்கள் கட்டி
சதுரங்கம் விளையாடி மகிழ்வேன்.
நீங்கள் யாவருமே காய்களாக!!
இப்படிக்கு கடவுள் ஜெக்தீஷ்



***********************************
2. காலம் “0”

இன்று தான் டைம் ஜீரோவாம்
இன்று ஒரு கொலை நடக்க இருக்கிறது, 
முதல் முயற்சி இதே நாள் மே மாதம் 1927
அடுத்த முயற்சி இதே நாள் மே மாதம் 2014
இன்று நடக்க இருக்கும் கொலை :
தொடங்கும் நேரம் இன்னும் சற்று நேரத்தில் 
முடியும் நேரம் இன்னும் சற்று ஒளி ஆண்டுகளில்
ஆனால் கொலை மட்டும் நிச்சயம்

- ஜீவ.கரிகாலன்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

என்ன சம்பந்தம்??


கந்து வட்டி அசலுக்காக
தன் பெட்டிக் கடையை விற்றவனுக்கும்
சைபரஸில் வங்கியை முடக்கி வைத்திருக்கும்
ஐரோப்பிய யூனியனுக்கும் என்ன சம்பந்தம்??

புகழூர் தொழிற்சாலையில்
வேலை பார்த்துக் கிடைத்த உபகாரப் பணம் பற்றி
பனமாவில் முகவரி இல்லாத கம்பெனியின்
ஃபண்ட் மேனேஜருக்கு தகவல் எப்படிப் போய்
சேருகிறது?

தர்மபுரி ஜாதிக் கலவரத்திற்கு
கண்டனம் சொல்லும் பிரிட்டனின் சதுரங்கத்தில்
டெஸ்கோவுக்கும், ஆர்.பி.எஸ்க்கும், வேறு சிலவற்றிட்கும்
இந்தியாவின் பெயில் அவுட் கிடைத்துவிடுமா?

நோவர்டிஸை துரத்தி விட்ட
இந்தியாவின் கைகளில்
எத்தனை ஆராய்ச்சிக் கூடங்கள்
தமக்கு இத்தனை எலிகள் இன்னும் வேண்டும் என்று
ஆருடம் சொல்லப் போகின்றன??

மருத்துவ உபகரணம் என்று
இறக்குமதியாகும் பொம்மைகளில்
சுங்கவரித் துறையின் டார்கெட்டுகளை
எத்தனை ஆண்டுகளில் நிவர்த்தி செய்யும்
சீனா??

இன்று சாப்பிட்ட மோர் மிளகாய் வற்றலுக்கும்
நாளை நடக்கவிருக்கும் அண்ணாச்சியின் தற்கொலைக்கும்
அடுத்தநாள் பங்குச்சந்தைப் பட்டியலில்
சேரவிருக்கும் வால்மார்ட்டிற்கும் என்ன சம்பந்தம்??

--ஜீவ.கரிகாலன்

வியாழன், 25 ஏப்ரல், 2013

அவன்,இவன்,இன்னொருவன்


அவனுக்கும், இவனுக்கும், இன்னொருவனுக்கும்
தனித்தனியாகக் கூட்டம் இருக்கின்றது....

இவன் இங்கே கெட்டவன்,
அங்கே நல்லவன்,
இன்னொரு இடத்தில் அப்பாவி,
மற்றொரு இடத்தில் மகத்தானவன்.

அவன் இங்கே அப்பாவி,
அவன் அங்கே நல்லவன்,
அவன் இன்னொரு இடத்தில் கெட்டவன்,
மற்றொரு இடத்தில் மறைந்து வாழ்பவன.

இன்னொருவன் எங்கேயும் நல்லவன்,
எங்கேயும் கெட்டவன்,
இன்னொரு இடத்தில் அப்பாவி,
அதே இடத்தில் சதிகாரன்
மற்றொரு இடத்தில் கோமாளி

நீங்கள் எந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்??
எந்த நாட்டைச் சேர்ந்தவர்??


ஜீவ.கரிகாலன்

திங்கள், 22 ஏப்ரல், 2013

ஐயப்ப மாதவன் கவிதைகள் : நண்பனின் துயர்

எப்போதும் போலவே ரயில்களில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறாள்
மாதச்சம்பளத்தை எண்ணி வாங்குவதற்காகவே ராஜி
சில வருடங்களாகவே நன்கு பழகிவருகிறேன்
மிருதுகொண்ட உள்ளத்திற்காய்
எப்படியாவது பார்த்துபேசிவிடுவதுண்டு இருவருக்குமிடையிலான
தேநீர்கோப்பைக்களுக்கிடையில
ஒவ்வொரு உறிஞ்சுதலுக்குமிடையில்
நான் அவளுக்கான அன்பில் அக்கறைகொள்வேன்
அவள் எனக்கான அன்பில் அக்கறைகொள்வாள்
நான் அவள் காதலனுடன் நண்பனாக இருந்தேன்
அவள் என் காதலனுடன் தோழியாக இருந்தாள்
நண்பனும் தோழியும் எங்களுக்கிடையே
ஊடல்களை தீர்த்துக்கொள்ள விழைந்தனர்
ராஜி அவள் பெயரில் என் காதலை உணர்ந்துபோது
உயரப்பறக்கும் பட்டத்தின் வாலில் மகிழ்வேன்
திட்டமிட்டதுபோல் சில நாட்களாய் அழைத்திருக்கவில்லை
தேநீர் விடுதிக்கு வருபவள் வரவுமில்லை
அன்றிரவு ஆனால் நான் எதிர்பார்க்கவில்லை
ராஜி ஏறி இறங்கும் ரயிலின்
தண்டவாளத்திற்குள் உயிரை விடுவாளென்று
இரும்புச்சக்கரங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவள்
தேநீர் பருக வரும் ராஜிபோல இல்லை
நான் அழவே இல்லை
இது வேறு ராஜி என்று நினைத்துக்கொண்டேன்
ஆனால் அவள் எனக்கு இப்போது அழைப்பதில்லை
அந்த தேநீர்கடைக்கு வருவதுமில்லை
என் ராஜிதான் இறந்திருப்பாள் போலும்
அவளைக் காணாத கண்களில் அவள் காதலுனும்
என் காதலியும் கரைந்துபோயிருந்தார்கள்.

நண்பனின் ஆறுதலுக்காய்.....

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி - 18 சந்தைப் பொருளாதாரமும் தலித் நலனும்


பஜ்ஜி-சொஜ்ஜி - 18 சந்தைப் பொருளாதாரமும் தலித் நலனும்


ஒரு கட்டத்தில் முழுக்க முழுக்க பொதுவுடைமைச் சித்தாந்தத்தை மட்டும் விரும்பி வந்தேன், அதுவே உண்மையான சமூக நீதியைப் பெற்றுத் தரும் என நம்பினேன். தனியார்மயமும், கட்டற்ற சந்தைப் பொருளாதாரம் நமது சமூகத்திற்கு மிகப் பெரிய ஆபத்து என்று நினைத்து வந்தேன்.
மராட்டியத்தின் சங்கிலி எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் தான் அஷோக் காடே, இன்று கிட்டதட்ட 5000 பேருக்கு மேல் அவரது பொறியியல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்(DAS Offshore Engineers Pvt Ltd ), மேலும் அவர் வைத்திருக்கும்  கார்ப்பரேட் பண்ணையிலும் நூற்றுக்கும் அதிகமானோர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் அந்தப் பகுதியில் வாழும் உயர் சாதியினர் ஆவார்கள்.

அஷோக் காடே செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்த தந்தைக்கு மகனாகப் பிறந்தவர். வறுமையில் வாடிய குடும்பத்தில் அவர் தன் வெற்றிப் பயணத்தைத் தொடங்கிய இடம் இது தான்: ஒரு மழை நாளில் தொழில் செய்ய முடியாது போன தன் தந்தையால் அன்றைய உணவுக்கு வழி தேடிக் கொடுக்க முடியவில்லை, அடுத்த நாள் தன் கணிதத் தேர்வை வெற்று வயிற்றுடன் எழுதினார். அந்தக் கணிதத் தேர்வில் அவர் பசி அவருக்கு நூற்றுக்கு நூறைப் பெற்றுக் கொடுத்தது. ஆனால் அவர் வறுமை அவர் பள்ளியில் தொடர்வதைத் தடுத்து நிறுத்தியது.

அதில் சோர்ந்து விடாத அஷோக் காடே, வேலை தேடி மும்பை சென்றார், துறைமுகம் சார்ந்த பணியில் ஆரம்பித்த இவர் பயணம், ஜெர்மனியில் சில காலம் வேலை பார்த்து தன் திறன்களை, தொழிலறிவு போன்றவற்றை வளர்க்க உதவியது. அது அவரை 1992ல் தன் வேலையைத் துறந்து சொந்தமாக தொழிலைத் தொடங்கிட நம்பிக்கையைக் கொடுத்தது. இன்று 150க்கும் மேற்பட்ட பொறியாளர்களுக்கும் வேலை கொடுத்துள்ளது இவர் நிறுவனம். தான் வாழ்ந்த கிராம்த்திற்கு திருப்பி செய்ய வேண்டும் என்று விரும்பிய அஷோக் காடே அந்த ஊரில் 80 ஏக்கர் பண்ணையை நிறுவி தன் கிராம மக்களுக்கு வேலையளித்தார். அவர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட கோயிலையே அவர் புதிப்பித்து அந்தச் சமூகத்திற்கு சாதியிலிருந்து கிடைத்த சமூக விடுதலையை பதிவு செய்துள்ளார். அஷோக் காடே தலித் சமுதாயத்தின் மிகப் பெரிய தலித் தொழிலதிபராக இன்று முன்னுதாரணமாக வாழ்கிறார்.

பொருளாதாரத்தில், இப்படிப்பட்ட சாத்தியங்களை உருவாக்கிக் கொடுக்கும் சந்தை சாதிப் பிரிவினைகளிலிருந்து வெளி வரும் சூழலை உருவாக்குகிறது. இந்த தடைகளற்ற சந்தை யாரையும் உள்ளே வர, வர்த்தகம் செய்ய, முன்னேற வாய்ப்பளிக்கிறது என்றால் இந்த அமைப்பைக் குறை சொல்வது தவறு. அமெரிக்காவின் பென்னிசில்வேனியா பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் ,இன்று இதே சங்கிலி மாவட்டத்தில் 17க்கும் மேற்பட்ட தலித் தொழிலதிபர்கள் இருக்கின்றனர் என்றுத் தெரிய வருகிறது. இவர்கள் தொழிலில் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் உயர் சாதி வகுப்பினர்கள் வேலை பார்த்து வருகின்றனர் என்பது தான் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

உத்திரப் பிரதேசத்திலும் இன்றையப் பொருளாதாரச் சூழலில் தங்களது சமூக நிலைகளில் (தாழ்த்தப்பட்ட நிலை) இருந்து தங்களை விடுவித்துக் கொண்ட ஆய்வை CASI கண்டறிந்துள்ளது. தலித்துகள் கையில் இருக்கும் முதல், சாதிக்கு எதிரான ஆயுதமாக உபயோகிக்க முடியும் என்று சாத்தியப் படுத்தியுள்ளன இந்த ஆய்வுகள். மேலும் இந்த ஆய்வில், இன்று டெல்லியில் உள்ள நவீன வர்த்தகக் கட்டிடங்களில் பணியாட்களாக தலித்துகளின் எண்ணிக்கையை விட அதிகமான அளவில் தலித்துகள் அல்லாதோர் தான் இருக்கின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது.

தலித் நலன்களுக்காகவே உருவான DICCI எனப்படும் தலித்துகளுக்கான வர்த்தக மற்றும் தொழில் அமைப்பு இந்தியாவின் எல்லா மூலைகளிலும் தலித்துகளுக்கான தொழில் வாய்ப்புகளில் உதவி செய்து வருகிறது. சங்கிலி மாவட்டத்தைப் போல இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றம் நிகழுமாயின், மிகப் பெரிய அளவில் சாதி பற்றிய நம் வேற்றுமைகள் மறையும் என்பது நிதர்சனம். அதற்கு சந்தைப் பொருளாதாரம் மிக முக்கியமான பங்கை ஆற்றுகிறது என்பதை மறுக்க முடியவில்லை.

முதலாளித்துவமோ, தளர்த்தி வைக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரமோ தலித் நலனைக் கொள்கையாகக் கொண்டவையல்ல தான், ஆனால் சரியான முறையில் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் சாதிப் பாகுபாடுகளை, வேற்றுமைகளை ஏன் சாதியமைப்பையே மாற்றியமைக்கும் என்பதும் நிதர்சனம்.

- ஆதாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா, சந்திர பான் பிரசாத்தின்(தலித் இதழியலாளர்) பல்வேறு கட்டுரைகளை முன் வைத்து







பஜ்ஜி-சொஜ்ஜி

தொடரும்

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

திசை



சரியாகச் சொல்லப் போனால் இந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் அவளிடம் நாற்பது ஐம்பது முறையாவது "ப்ளீஸ் கேட்டிருப்பேன், அவள் கண்டிப்பாக வந்துவிடுவாள் என்று நம்பிக் கொண்டிருந்தேன்.  அந்த ரெஸ்டாரெண்ட் உள்ளே அடிக்கடி சென்று அந்த டேபிளிள் யாராவது அமர்ந்து விடுவார்களோ என்று பார்த்துக் கொண்டேன். இழவெடுத்த மேனேஜர் “என்னாச்சு !! இன்னைக்கு என்ன கால்ஸ்என்று சேல்ஸ் ரிப்போர்ட் கேட்டுக் கொண்டிருந்தான். பதில் சொல்லி முடிக்கும் முன்னே அவள் சாலையில் வருவதைப் பார்த்துவிட்டேன்.

மானேஜரோடு பேசியதில் வியர்த்திருந்தது, அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். அவள் என்னைப் பார்க்கும் போது “என்ன நினைத்திருப்பாள்?. “இவனிடம் இப்படி மாட்டிக் கொண்டுவிட்டோமேஎன்றா?, “நறுக்குன்னு இன்னைக்கே எல்லாவற்றையும் தீர்த்துவிடனும் என்றா?, “பாவமாக இருக்கிறது, ஆனால் இரக்கப் பட்டால் அதை அவன் advantage  ஆக எடுத்துக் கொள்வானோ என்றா?. அவள் நினைப்பதை எப்படி என்னால் கண்டுபிடிக்க முடியும்?. அவள் என்ன லீனியர் ஈக்வேஷனா, இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என மாற்றி மாற்றி அவள் இதைத் தான் நினைத்திருப்பாள் என்று கூற.

 “வேலை இருக்கிறது, இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று என்னிடம் சொன்னாளே!! ஆனால் அவள் குறைந்தது அரை மணி நேரமாவது மேக்கப் போட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவள் எப்படி இருந்திருப்பாள், தளர்வடைந்திருந்த தோள்களில் சோர்வைக் கண்டுபிடிக்கத் தெரியாதவனா நான்?
இல்லை காது மடல்களைத் தாண்டி இறங்கியிருக்கும் முடிக் கற்றைகளின் எண்ணிக்கை அரியாதவனா நான்? மஞ்சள் சுடிதாரில் இன்று தான் அவளை நான் பார்க்கிறேன். மஞ்சள் சுடிதார், வெள்ளை துப்பட்டாவோடு, தன் கூந்தலை முடித்து வைத்திருந்த விதமும் இதுவரை நான் அவளிடம் கண்டிராதது. ஒருவேளை பியூட்டி பார்லர் போய் வந்திருப்பாளா

எந்த சினிமா காட்சியோடவும் இணைத்துச் சொல்ல முடியவில்லை, இந்த மாலை வேளையில் நாங்கள் பரிமாரிக் கொண்ட பார்வையைப் பற்றி எப்படி சொல்வது. பிண்ணனி இசையில்லை, ஸ்பெசல் எஃபக்ட்ஸ் இல்லை, கனவும் இல்லை. ஆனால், ஒரு பெண் எனக்காக சில மணித்துளிகளை ஒதுக்கியிருக்கிறாள் என்ற உணர்வு என்னை என்னவோ செய்துக் கொண்டிருந்தது. அதுவும் தன்னை அலங்காரம் செய்துக் கொண்டு. சில விழாக்களில் அவள் உதட்டுச் சாயம் பூசியிருக்கிறதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று எனக்காக, நான் ரசிப்பதற்காக அல்லது நான் வருந்துவதற்காக. இன்னும் அவள் சாலையைக் கடக்கவில்லை, ஒன்றிரண்டு வாகனங்களை தன்னைக் கடந்து போக அனுமதித்தால். நகர்ந்து சென்ற வாகனங்களுக்கு ஊடாக அவள் புன்னகையை கவனித்தேன்.

இது வரை அவள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் எளிமையாக “ஹாய் சொல்லியிருக்கிறேன். இன்று எதற்காக அதைக் கூட சொல்லிப் பார்த்து ஒத்திகை செய்துக் கொள்கிறேன் என்று தெரியவில்லை. கடந்து வருகிறாள் சாலையை, ஒரு படி இறங்கி வந்து அவளிடம் “ஹாய் சொன்னேன். என் குரலை உற்று கவனித்ததில் நான் அவளிடம் இன்று பிச்சை கேட்கும் தொனியில் தான் பேசுகிறேன் என்று உணர்த்தியது. அவளிடம் தானே பரவாயில்லை. பதிலுக்கு ஹாய் சொன்னாள், புன்னகை செய்தேன். கைகளை முறுக்கினேன். “சரி லேட்டாகுது, நாம் அப்புறமா இன்னோர் நாள் பார்க்கலாமா ப்ளீஸ் என்றாள்.

 “என்னது லேட்டா!! அப்புறம் ஏன் இந்த மேக்கப்?? என்று அவளைக் கேட்க வேண்டும் என்பது போல் இருந்தது. ஆனால் கேட்க முடியவில்லை, அவளிடம் எப்படிக் கெஞ்ச வேண்டும் என்று யோசித்தேன். நான் இப்போது உணரும் அவஸ்தையை ஏ.ஆர். ரஹுமான் இசையில் ஒரு பத்து வருடம் கழித்து மணிரத்னம் தான் விசுவல் ஆக்க முடியும் என்று தோன்றியது. இன்னொரு தடவை “ப்ளீஸ் என்றேன், “இது தான் லாஸ்ட் என்றேன், அப்புறம் தலையை சொறிந்தேன்.சரி வா என்றாள்!!. அவள் முன்னே இறங்கி சென்றாள், பின்னே...அவள் பின்னே, நெருங்கியபடி நானும் தொடர்ந்தேன். அவள் மீது ஒரு செயற்கை மனம் இருந்தது, ஆனால் எனக்குப் பிடித்திருந்தது.  முக்கியமான ஒன்றை நான் என் நண்பர்களிடம் கேட்க மறந்துவிட்டேன். அது என்னவென்றால் காதலியைக் கூட்டிச் செல்கையில் அவளோடு ஒரே சீட்டில் அமர்ந்து சாப்பிடனுமா, இல்லை எதிர் திசையில் அமர வேண்டுமா ??.
எதிரெதிரே அமர்ந்தோம். இப்படித் தான் அன்றும் என் எதிரே அமர்ந்திருந்தாள்...........

(தொடரும்......)

#tag கதைகள்

முதல் பாகம்
இரண்டாம் பாகம்


###015

அவள் என் கவிதைகள் பிடிக்கவில்லை என்றாள் என உன்னிடம் சொன்னேன்
ஒருவேளை அவள் உன்னையும் மணந்து விட்டாளோ என்றாய் நீ
அவள் உன்னைப் பற்றி சரியாகத் தான் சொன்னாள் “அது பொல்லாதது” 

###016

அவள் திருமணத்திற்கு நினைவுப் பரிசு???என்றேன்.
”நான் அவளுடன் செல்கிறேன் ஸ்தூலமாய் இருந்து அவளை துன்புறுத்துவேன்” என்றாய் நீ..      நீ என்னுடனும் இருப்பாய்


###017

பிழைகளைக் காட்டி ”அவளைப் பற்றிய உன் கவிதைகள் வாசிக்க விரும்பவில்லை” என்றாய். நல்லது தான், உன்னிடமிருந்து விலகி
இனி என் பிழைகளில் மட்டும் அவள் இருக்கட்டும்.

###018

நாளை அவள் திருமணம் என்று சொன்னது, நீ உறங்கச் செல்கிறாய்.
நீ இரவில் தூங்கச் செல்வது இது தான் முதல் முறை.
நாளை காலை நான் நினைத்தபடி.....


###019
இத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்தபோதும்,
அவள் கண்களில் நீ தழும்பாய் தெரிகிறாய்.
அதனால் தான் அவளைப் பார்த்ததை நான் உன்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டேன்.


###020

அந்த இரவு ஞாபகம் இருக்கிறதா,
அவளை என் வண்டியில் ஏற்றி வீடு சேர்த்தேன்
அன்று தான் நீ பிறந்தாய்!!

###021

இத்தனைக்கும் பின்னே,
அது எப்படி உன்னால் மட்டும் முடிகிறது??
அவள் பெயரை உச்சரிக்கும் போது அனுபவித்து, மெய்மறந்து, கண்களை மூடித் திறக்க.


###022

அன்று அவள் என்னிடம் கேட்டுக் கொண்டதைத் தான்
இன்று உன்னிடம் கேட்கிறேன் “நாம் நண்பர்களாக இருப்போம்”




பஜ்ஜி-சொஜ்ஜி - 17 ஜீன்ஸ் அணிவது ஆபத்து

(கடந்த ஆறு மாதமாக நான் ஜீன்ஸ் பேண்ட்டோ, டெனிம் சர்ட்டோ அணிவதில்லை -எதற்காக என்றால் இந்தக் கட்டுரையை எழுதுவதற்காகத் தான்)

Clothing isn't designed to give us a shape that we don't have, and that's where people get in trouble
- Some one
(*படங்களைப் பார்ப்பதற்கு படத்தை கிளிக் செய்யவும்)

பார்ட்டி வேர், கேசுவல்ஸ், செமி கேசுவல்ஸ் என்று உடைகளைப் பகுத்துப் பார்த்து நாம் அதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகின்றது. "வெறும் உடை தானே அதற்கு ஏன் இத்தனைக் கூப்பாடு?" என்று வியக்காதீர்கள். நமது அன்றாட வாழ்வில் ஜீன்ஸ் வெகு சாதாரணமாக உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது.  ஜீன்ஸ் நம் நாட்டின் பாரம்பரிய உடை என்று யாராவது வருங்காலங்களில் சொன்னால் கூட ஆச்சரியம் வருவதற்கில்லை.

ஜீன்ஸ் எனப்படும் பருத்தி ஆடைகள், மலைவாசத் தளங்களிலோ, குளிர் பிரதேசத்திலோ அணிந்து கொள்ளுதலை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்.
மற்றபடி ஜீன்ஸ் மிக மிக ஆபத்தான ஒரு ஆடையாக அதைப் பற்றி தெரிந்து கொள்வது தேவையாயிற்று. ஜீன்ஸ் வந்த பிறகு இருபாலரும் அதை எளிதாக ஏற்றுக் கொண்டு தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர், இப்பொழுது மிக இறுக்கமான ஆடையாக அணிகிறார்க்ள். முதலில் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் வரும் ஆபத்துகளும், இரண்டாவதாக சுழலில், பொருளாதாரத்தில், செய்முறையில் உள்ள ஆபத்தையும் என விவாதிப்போம்.

இறுக்கமான ஆடையாக ஜீன்ஸை அணிவதில் என்ன பலன் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்துப் பார்த்தால், ஒரு பலனுமில்லை, எனும் பதில் தான் வருகிறது. கவர்ச்சி, அழகு எனும் பெயரில், ஜீன்ஸ் ஆடையை உடலோடு இறுக்கமாய் அணிவது, நமது உடல் அமைப்பை வெளியே எடுத்துக் காட்டும் வேலை ஒன்றை மட்டுமே செய்கிறது. இன்னும் சொல்லப் போனால் நவீன யுகத்தில் இறுக்கமான ஆடை அணியும் வழக்கம் கலாச்சாரமாக மாறிட ஜீன்ஸின் பங்கு தலையாயது. இதனால் வரும் நோய்களின் பட்டியலும் மிகப் பெரியது.

*இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகள் தொடைகளில் ஏற்படுத்தும் வியர்வை மற்றும் அழுத்தம் காரணமாக பித்தப் பை, அண்டம் போன்றவற்றில் தொற்றுநோய் (infection) பரவலாம். அடிவயிற்று வலி காரணமாகக் குடல் வலி, ஆண்களுக்கு உறுப்புகளில் எரிச்சல், வியர்வைக் கொப்புளம் போன்றவற்றோடு விதைகளின் இடமாற்றம்meralgia paresthetica போன்ற நரம்புக் கோளாறுகள், lipoatrophia semicircularis என்பன போன்ற நோய்கள் வரும் அபாயம் இருக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டெலிகிரஃப் பத்திரிக்கைக்காக எடுத்த ஒரு ஆராய்ச்சியில் 2000 ஆண்கள் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டனர் (2012ல்). அவர்கள் இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகளைத் தொடர்ந்து உபயோகப் படுத்த ஆரம்பித்தனர். அதன் முடிவில் பத்தில் ஒருவர் ஆடையை அசௌகரியாகக் கருதி அதைத் தவிர்க்கும் மனநிலையில் இருந்தது தெரிய வந்தது. கிட்டத்தட்ட பாதி பேருக்கு இரைப்பை மற்றும் பாலுறுப்புகளில் தொற்று நோயால்(infection) பாதிக்கப் பட்டனர், கால்வாசி பேருக்கு இரு தொடைகளுக்கு மத்தியில் படை இருந்தது, ஐந்தில் ஒருவருக்கு விதை இடமாற்றமாகியிருந்தது, பலருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டிருந்தது. இங்கிலாந்திலேயே இத்தனை ஆபத்துகளையும் தீங்குகளையும் தரும் ஜீன்ஸ் ஆடைகள் இந்தியாவின் தட்பவெப்பத்தில் எத்தனைக் கேடுகளைத் தரும் என்பது எல்லாருக்கும் எளிதில் விளங்கக் கூடியதே..

jeans weaving

சூழலுக்கும், பொருளாதாரத்திலும் எத்தனைக் கெடுதல் தருகிறது:


ஜீன்ஸ் உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு எத்தனைக் கெடுதல் தரும் என்று பார்க்கும் பொழுது முதலில் உலகின் ஜீன்ஸ் உற்பத்தியைப் பற்றிய விவரங்களைப் பார்க்க வேண்டும் (பார்க்க பட்டியல் 1). அவற்றுள் கிட்டதட்ட 60% சதவீத உற்பத்தியை ஆசிய நாடுகளே கொண்டுள்ளது. இந்த பட்டியல் வளர்ச்சியைக் கணக்கிட்டு ஒரு தொழிற் கூட்டமைப்பில் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தான். ஆனால், இவை நமக்கு கொடுக்கும் அதிர்ச்சிகளோ ஏராளம். இதன்மூலம் வளர்ச்சி என்பது மிகவும் கேள்விக்குரியதாகிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். உலகில் உள்ள பிரபலமான எல்லா வகை ஜீன்ஸ் பிராண்டுகளும் நம் நாட்டில் உற்பத்தியாகிறது என்பது தெரியுமா (killer, denim, trigger போன்றன கர்நாடகாவில் தான் தயாராகின்றன)

1.உலகில் உள்ள நாடுகளில் 21% சதவீத உற்பத்தியும், 4.5 சதவீத வளர்ச்சியும் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது. மிகப் பெரிய தொழிற்துறையாகவும் ஜீன்ஸ் உற்பத்தி இருக்கின்றது.

2.ஒரு ஜீன்ஸ் துணிக்கான பருத்தியைக் உற்பத்தி/கொள்முதல் செய்ய 6800 லிட்டர் தேவைப்படுகிறது, ஒரு டெனிம் துணியினை நீலச் சாயத்தில் ஊறல் போட்டு நிறம் மாற்றிடத் தேவைப்படும் நீர் மற்ற துணிகளை சாயம் போடுவதை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கின்றது.

3.ஜீன்ஸ் துணிக்கான கொள்முதல் செய்யப்படும் பஞ்சின் பற்றாக் குறையை, விலையேற்றத்தை சமாளித்துக் காப்பதற்கு பஞ்சின் தேவை அதிகமாகிறது. இந்தப் பற்றாக்குறையை சமாளித்திட முதல் அழைப்பாக BT பருத்திகளை இறக்குவார்கள்.

4.இந்தியாவில் பருத்தி உற்பத்திற்கு 5% சதவீத நிலத்திலேயே பயரிடப்படுகிறது, ஆனால் இந்த உற்பத்திக்காக நாட்டின் 25% இருந்து 50% வரை சில பூச்சிக் கொல்லி மருந்து பருத்தி உற்பத்திக்காகவே பயன்படுத்தப் படுவதால் நிலத்தின் நச்சுத் தன்மை அதிகரிக்கிறது.

கடலில் கலக்கும் பியர்ல் ஆற்றின் நீல நிறம்
5.நீல நிறத்திறகாக எடுத்துக் கொள்ளப்படும் செயல்முறைகள் தான் மிக மிக ஆபத்தானது. இதற்காக உபயோகிக்கப் படும் சிந்தடிக் சாயங்கள் (முந்தைய காலத்தில் தாவரங்களிலிருந்து சாயம் எடுத்துவரப் பட்டது) பெரிய அளவில் ஆசியா நாடுகளில் நீர்நிலைகள் மாசுபடக் காரணமாக இருக்கின்றது. சீனா, இந்தோனெசியா, இந்தியா ஆகிய நாடுகளில் பாயும் நதிகளில் பல நிறங்கள் இருக்கின்றது. சீனாவில் Guang Zhou நகரில் உள்ள Pearl எனும் நதி நிறம் மாறிய அவலம் உலகின் மிகப் பெரிய தொழில் நகரம் என்று தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் இந்நகரத்தின் வரலாற்றில் இருக்கிறது

6. ஆற்று நீரில் கலந்த சாயங்கள், பல குளங்களைத் தொடக் கூட இயலாதவாறு குடிநீர் பிரச்சனையையும், விவசாயம் பண்ண முடியாத சூழலையும் உருவாக்கிவிட்டது.

7.இதில் ஆபரணங்களாகத் தொங்கவிடப் படும் உலோக துணைக் கருவிகள் (accessories) தவறான உடைக் கண்ணோட்டத்தையும், ஆடை மீது அதிக விலை கொடுப்பதும் நடக்கின்றது.

8.ஜீன்ஸ் ஆடைகளை சாயமிட்டு முடித்தவுடன் செய்யப் படும் வண்ணநீக்கம் பற்றியும் 
sand blast
தெரிந்துக் கொள்ளவேண்டும், இதைSand Blast என்று சொல்லுவார்கள். அதாவது ஜீன்ஸ் ஆடை/துணி குழாய் வழியாக ஆடை மீது பக்குவப்படுத்தப்பட்ட மணலை ஆடைகளின் மீது சூடாக உயர் அழுத்தத்தில் உருவாக்கப்பட்ட குழாய் மூலம் செலுத்தி ஆடைகளில் நிறத்தை மங்கச் செய்கின்றனர். ஆனால் இந்த வேலையைச் செய்யும் தொழிலாளர்களுக்கு நிறைய பக்கவிளைவுகளும், உடல் பிரச்சனைகளும் வருகின்றன. பல மேலை நாடுகளில் இந்த பணி செய்வதற்கு தடை வந்துவிட்டது, ஆகவே இதை முற்றிலுமாக ஆசியா நாடுகள் தான் செய்து வருகின்றன

 நமது பலம் என்ன? நமக்கு உகந்தது என்ன? என்றும் தெரியாமல் இருக்கின்றோம். இப்பொழுது eco-friendly ஜீன்ஸ் உற்பத்தி என ஆர்கானிக் காட்டன் மற்றும் உற்பத்தி முறையில் உள்ள மாற்றங்கள் செய்து சந்தையில் விலையுயர்ந்த ஜீன்ஸ்களை கொணர்ந்துவிட்டனர்.  

ஜீன்ஸ் ஆடையின் உளவியலே ஒரு வெளிக்காட்டுதலியல் (exhibitionism)  தான் அதாவது, ஜீன்ஸ் பேண்ட் என்றால் துணி என்பதற்கும் மேலே அதில் இருக்கும் லேபிள், உலோக பட்டன்கள், ஜிப் மற்றும் பட்டன்களின் அளவு, சில அலங்கார சங்கிலி, அலங்கார எம்பிராய்டரி மற்றும் பிரிண்டுகள் முதலியன சேர்ந்தது ஆகும். அதன் லேபிள் தான் ஜீன்ஸ் பேண்ட்டின் அதி முக்கிய பாகம் எனக் கருத முடியும், அதை வைத்து தான் பெரும்பான்மையான பேண்ட்கள் வாங்கப் படுகின்றன. அதாவது பிராண்ட் ஃப்ரீக்காக நம்மை வைத்திருக்கிறது.இதை வைத்துக் கொண்டு ஜீன்ஸ் ஆடைகள் வெறும் மோகத்தையும், பகட்டையும் அடிப்படையாகக் கொண்டது என்ற முடிவிற்கு எளிதில் வரலாம். ஏனெனில் இந்தியாவில் 80% ஜீன்ஸ் உற்பத்தி லேபிள் செய்து தான் விற்கப் படுகின்றன.

டாம் ரியான் என்பவர் கண்டுபிடித்துள்ள சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் ஜீன்ஸ் என்று டைட்டானியம் டை ஆக்ஸைடால் பூசப்பட்ட ஜீன்ஸ் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காது என்று ஜீன்ஸ் மோகம் கொண்டு வாதாடினால் மீண்டும் 2-8 வரை வாசிக்கவும்.


கோக், பெப்சி போன்ற பானங்களை ஒதுக்கும் விழிப்புணர்வு இப்பொழுது ஓரளவு இருப்பதால், ஜீன்ஸ் பற்றிய உண்மையைப் பரப்புவதும் அவசியமாகிறது. ஜீன்ஸ் அணிவது உங்கள் சுதந்திரம் தான், ஆனால் அது அவசியமா??

 பட்டியல் 1
பிரதேசம்
ஜீன்ஸ் துணி தயாரிக்கும்  டெனிம் தொழிற்சாலைகள்
ஆசியா (சீனா)
297
ஆசியா(மற்றவை)
104
வட அமெரிக்கா
019
ஐரோப்பா
41
லத்தீன் அமெரிக்கா
46
ஆப்பிரிக்கா
15
ஆஸ்திரேலியா
01
        ***மொத்தம் 543 தொழிற்சாலைகள்
நன்றி
ஜீவ கரிகாலன்

பஜ்ஜி-சொஜ்ஜி 
தொடரும்