பஜ்ஜி -சொஜ்ஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பஜ்ஜி -சொஜ்ஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 நவம்பர், 2018

சுஜாதாவின் எந்திரனை இரும்பு வீரனாக்கிய குக்கூ..




எப்படியும் இரண்டு நாட்களில் காசுக்கு வேலை பார்க்கும் ரெவ்யூ புஜ்ஜிமாக்கள் அமைதியாகிவிடுவார்கள். 2.0 விற்கு வந்திருக்கும் நெகடிவ் விமர்சனங்களை மறைப்பதற்காக வழக்கம்போல் ரசிகக்குஞ்சுமணிகள் தான் அவ்ளோ வசூல், இவ்ளோ வசூல் என internal audit செய்துகொண்டிருப்பார்கள்.

அறிவியல் புனைவா? ஜோக் அடிக்காதிங்க பாஸ்

இதை SCI-FI என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள், அதேநேரம் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். ஹாலிவுட் படங்களில் இப்படியான சிக்கல் இருப்பதில்லை. விக்கிபயலிடம் கேட்டால் சொல்லிவிடுவான் : IRONMAN, AVENGERS போன்ற சூப்பர் ஹீரோ படங்கள் வேறு TRANSFORMERS போன்ற அறிவியல் புனைவு படங்கள் வேறு வகையறா என்று. இந்தக் கலவை சாத குழப்பம் தான் 2.0 படத்தின் basement weak ஆன கதை. ஆனாலும் 2.0 அதிலும் ஒருபடி மேலே போய் ஆவியெழுப்பி கூடு விட்டு கூடு புகும் காட்சிகளை எல்லாம் காண்பித்து அதையும் அப்படியே தராமல் அறிவியல் ஆக்க ஒரு டாகுமெண்டரி எல்லாம் திரையிட்டு விளக்கம் தந்து பல்லிளிக்கிறது.


சவால்களைக் கடந்ததா 2.0.? சும்மா கிச்சுகிச்சு மூட்டாதிங்க பாஸ்

படம் வெளிவரும்போதே தக்ஸ் ஆஃப் ஹிந்தொஸ்தானோடு சவால் வேறு, அப்படத்தில் அமிதாப் ஒரு கிழவனாகவே வந்து அத்தனை சாகசமும் செய்திருப்பார். தக்ஸ் அருகிலென்ன தொலைவில் வைத்து கூட ஒப்பிட முடியாத திராபையான உருவாக்கம் 2.0. வசீகரனுக்கு டயலாக் டெலிவரி உள்ளிட்ட பல முடியாமைகளின் தொகுப்பாக, சிட்டி ரோபோ முதல் காட்சியில் ஓடும்போதோ, 2.0 வில்லத்தனமாக சிரிப்பதாக மெனக்கெடும் போதோ, வடிவேலுவை ஞாபகத்தில் கொண்டு வருவதாக 2.0 நாக்கை தொங்கப்போடும் காட்சியோ சில உதாரணங்கள்

திரைப்படம் காட்டும் அரசியல்

இது அறிவியல் புனைவா, சூப்பர் ஹீரோ சாகஸமா என்று விவாதங்கள் ஒருபுறம். இந்தப் புனைவு நடக்கின்ற தளம் சென்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் போல் தோற்றம் கொண்ட ஆனால் பேச்சில் மலையாள வாசம்வீசும் ஒரு கேபினெட் அமைச்சரும், அவருக்கு பாஸாக இருக்கும் மற்றொரு அமைச்சர் அடில் ஹூசைன் ஒரு காட்சியில் வசீகரனிடம் பேசும் வசனத்தில், சட்டத்தை மீறினால் பிரச்சனை ஒன்றும் வாராது ஏன்னா தமிழகத்தில் இருக்கும் 40 எம்.பீ சீட்டுகளும் நாம தான் என்று பேசுவது போல காட்சியமைத்திருக்கிறார்கள். 

பீ.ஜே.பி அல்லது பீ.ஜே.பியின் ஆதரவுள்ள ஒரு அரசு ஆட்சி அமைத்திருக்கும் தமிழகமாக அதை கவனிக்கலாம். அரசாங்க அலுவலகத்தில் பிரதமர்கள் போட்டோக்களை காட்டும் காமிரா கோணம் வாஜ்பேயினைக் காட்டும் போது வேறு காட்சிக்கு செல்கிறது. 

இங்கிருக்கின்ற திராவிட கட்சிகளின் எந்த சாயலுமற்ற அரசியல் தலைவர்கள் படத்தில் வலம் வருவது என்பது ஷங்கரின் அபரிமிதமான அதிபுனைவாக இருக்கிறது.

தாமரை மலரும் என்கிறதா ஷங்கர் – ஜெமோ – ரஜ்னி கூட்டணி !

குழந்தைகளுக்கான படமா? ஐயோ சத்யமா இல்லைங்க

எந்த விதத்திலும் இது குழந்தைகளுக்கான படமில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். கோரமாக உடல் வெடித்துக் கொல்லப்படும் மனிதர்களைக் காட்டும் காட்சி ஷங்கருக்கு புதிதல்ல. அந்நியனில் இதேமாதிரி தான், ஐ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளும் மிக அருவருப்பானவை தான். இந்தப் படத்தின் சாகஸ நாயகன் 3.0 வில்லனை தனது கண்ணிக்குள் சிக்க வைக்க புறாக்களை கொல்லப் போவதாக மிரட்டுகிறது.

குழந்தைகள் விரும்பும் படங்களில் வரும் சாகஸ நாயகன் Eco System குறித்தும், அதன் தகவமைப்புகள் குறித்தும் கவலைப்படுபவனாகவும் அதற்காகப் போராடுபவனாகவும் தான் இருக்கும்.

சுஜாதாவை மட்டம் தட்டும் ஆஸ்தான பீடம் பொறுப்பேற்றும், இத்தகைய மிகத்தவறான ட்ரீட்மெண்ட்டை உருவாக்கியிருப்பது என்பது திரைக்கதை அமைப்பைப் பொருத்தவரையில் அபத்தத்திலும் அபத்தம்.

இங்கே Eco சிஸ்டத்திற்காகப் போராடும் சூப்பர் ஹீரோவை (பக்ஷிராஜன்) தந்திரத்தால் கொலை செய்யும் 2.0. எது தேவையோ அது தர்மம் என்கிற மஹாபாரத வெண்முரசு suggestions தான் இப்படியான அபத்தமான காட்சியமைப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம்.

எதற்கு தேவையில்லாமல் இதை இங்கே பேசுகிறேன் எனில், பீடத்தின் இணையதளத்தில் தொடர்ச்சியாக வலையேற்றி வரும் சினிமா சார்ந்த ரெகமண்டெஷன்கள் தான் காரணம்.

ஆக நிச்சயமாக இது ஒரு குழந்தைகள் படம் இல்லவே இல்லை.

கிராஃபிக்ஸ் காட்சிகள் எப்படி?

ஐயோ பாவம் அக்‌ஷய் குமார்.
படத்தில் ஒரேயொரு performerஐயும் நிறுவனத்திற்கு எதிராகப் போராடும், தீய ஷக்தியாக (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல?..) மாற்றி அதனையும் பாழாக்கிய உபயம் CGக்கே.

அக்‌ஷய் குமார் பெர்ஃபார்மென்ஸ் எப்படி ?
அதான் மேலயே சொன்னனே.

அப்படியென்றால் எமி ஜாக்ஸன் ?
அதுக்கென்ன இப்போ – அதான் மதராஸப்பட்டினம் பார்த்தாச்சுல்ல

அது சரி இது ஷங்கர் படமா?
யார் இல்லைன்னு சொன்னா, சத்தியமா இது ஷங்கர் படம்தான். சுஜாதா இல்லாத ஷங்கர் படம். அதனால்தான் தேவையற்ற வகையில் ஒரு மனிதனின் ஆரா குறித்த விளக்கங்களும், பாஸிடிவ் எனர்ஜி, நெகடிவ் எனர்ஜி பற்றி கொடுத்த விளக்கங்களும் இருக்கின்றன. ’பலேபாலு பாட்டில் பூதம்’ போல, உடலில் இருந்து ஆவி வெளியேறும் ஜமீன் கோட்டை காட்சிகளையெல்லாம் ஏன் வைக்கிறார்களோ தெரியவில்லை.
இப்படியான வெறுப்பேற்றும் அறிவியல் விளக்கங்கள் சுஜாதாவை தான் மிஸ் யூ சொல்ல வைக்கின்றன.

எந்திரன் படத்தில் ஒரு காட்சி, ’சிட்டியை’ டெமோ காண்பிக்கும் போது அதை அவர்கள் ரிஜக்ட் செய்து விடுகிறார்கள். பின்னர் இரண்டு மாத அவகாசம் கேட்டு சிட்டிக்கு மனித உணர்வுகளை உணர்ந்து கொள்ளும் feedings நடக்கிறது. எதுவுமே ரியாக்ட் செய்ய இயலாத சிட்டியைப் பார்த்து வசீகரன் திட்டுகிறார், நொந்தபடி நடந்து செல்கையில் அவரைப் பின்தொடர்கிறது சிட்டி, திடீரென வானத்திலிருந்து சிட்டி மீது ஒரு மின்னல் வெட்டுகிறது. உடனே சிட்டியை தூக்கிவந்து சரிசெய்கிறார்கள், ஆனால் இப்போது சிட்டிக்கு உணர்வு வந்துவிடுகிறது.

சுஜாதாவுக்கு எந்த மாயாபஜார் அதிரிபுதிரியும் தேவைப்படவில்லை – ஷங்கர் எதிர்பார்த்ததெல்லாம் இப்படியான ஒன்றைத்தான். சிவாஜியில் கூட காசை சுண்டும் போது இயற்கையோ தற்செயலோ என் பாதையைத் தீர்மானிக்கட்டும் என வசனம் வரும். ஒரு வெகுஜன எழுத்தாளன் என்கிற விமர்சனத்திற்கு பின்னிருக்கும் இத்தனை perfection தான் 2.0 படத்தில் இல்லை.

“என்னைப் படைத்த கடவுள்” என்றும், ”எம்பெருமானே” என்றும் சிட்டி வசீகரனை அழைக்கும் காட்சியில் எமோஷன்ஸ்க்கு பதிலாக எரிச்சலே வருகிறது.

எந்திரன் படத்தில் செய்தது போல 2.0 வில்லத்தன சிரிப்பைக் கூட செய்ய முடியாத அளவுக்கு இருக்கும் மனுஷனை கஷ்டப்படுத்துறது உலக அளவில் 10000 தியேட்டர்களில் ஒரு தமிழ்படம் திரையிடப்படணும் என்பதெல்லாம் ஒரு தமிழனின் கனவு என்றால் தமிழன் INSOMNIA விலேயே கிடந்து அவதியுறட்டும்.

2.0 is simply a flaw.

டாட்.

ஜீவ கரிகாலன்


ஞாயிறு, 25 நவம்பர், 2018

சென்னையில் வாழும் மெட்ராஸ்வாசி (பஜ்ஜி - சொஜ்ஜி 112)

(2018 தி இந்து தீபாவளி மலருக்கு எழுதிய கட்டுரை - ஊரும் தொழிலும்)


மெட்ராஸ் என்பது சென்னையாக மாறிய பின்னர்தான் வேலைத் தேடி ரயிலேறினேன். இப்போது நான் சென்னைவாசியாக வாழ்ந்து வந்தாலும், அப்போது மெட்ராஸ்காரனாகத்தான் என் வேலையைத் தொடங்கினேன். 

சென்னையின் நீண்ட வரலாற்றில் சென்னை ஒரு தொழில்நகரமாக உருவெடுத்து வந்த, வளர்ந்து கொண்டிருக்கும் கதையில் இரண்டு தசாப்தங்களின் மாற்றங்களை என்னால் முழுமையாகப் பகிர்ந்துகொள்ள முடியும். 1990களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுத்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை, Y2Kவிற்குப் பின்னால் அடைந்த அசுர வளர்ச்சி, குறிப்பாக முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட ராஜிவ்காந்தி ஆறுவழிச் சாலைக்குப் பின்னரான சென்னையின் வளர்ச்சி என்பது OMR (Old Mahabalipuram Road), ECR (East Coast Road) ஆகிய பிரதேசங்களை புதிய சென்னையாக உருமாற்றம் பெறச் செய்தவை.

2007:

ஆனால் நான் மெட்ராஸ்வாசியாகவே கையில் ஃப்ளாப்பி டிஸ்க்கில் எனது பயோ டேட்டாவைச் சுமந்தபடி, பாரிஸ் கார்னருக்குப் பின்னே இருக்கின்ற அரசு அலுவலகங்களின் பிரதானமான சுங்க அலுவலகத்தில், யாரோ ஒரு கஸ்டம்ஸ் குமாஸ்தாவிற்கு முன்னர் காத்திருக்கும்போது 15 கி.மீட்டர் தொலைவில் தகவல் தொழில்நுட்பத்துறை தனது அடுத்த கிளைகளுக்கான வான் நோக்கிய கட்டடங்களை எழுப்ப, சதுப்பு நிலங்களில் இடம் பார்த்துக்கொண்டிருந்தது.

நான் போக்குவரத்துத் தளவாடங்கள் துறையில் ஒரு சிறு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கே மூன்று விதமான நபர்களைச் சந்திக்க வேண்டும், கஸ்டமர்கள் – ஏற்றுமதி & இறக்குமதி நிறுவனங்கள் ஒருபுறமும், அவர்கள் பொருட்களை கையாள்வதற்கான கப்பல், லைனர் நிறுவனங்கள், கிட்டங்கி மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுடன் இன்னொரு புறமும், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றொரு புறமும் இருப்பார்கள். இந்தத் தொழிலில் இருக்கும் ஒரு விசேஷம் என்னவென்றால் பாரம்பரியமாக உற்பத்தி செய்து ஏற்றுமதி அல்லது கொள்முதல் செய்யும் நிறுவனங்களும் வாடிக்கையாளராக இருப்பார்கள். பன்னாட்டு நிறுவனங்களும் வாடிக்கையாளராக இருப்பார்கள். தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு இவ்வகையான தொழில்களைப் பிரித்து வைக்கிறது. அதுவே சமூகப் பொருளாதார விழுமியங்களுடனும் இம்மாநகரைப் பிரித்துப் பார்ப்பதற்கும் இடமளிக்கிறது. இவ்வாறே சென்னையின் மூன்று வகையான அடுக்குகளைப் பார்க்க முடிகிறது. வாழ்வியல் தரம், நுகர்வுப் பண்பு, அரசியல் அல்லது பொழுதுபோக்கு இவற்றைத் தகவல் தொழில்நுட்பப் புரட்சி வெவ்வேறாகப் பிரிக்கவும் செய்கிறது, சில பிரிவுகளை உடைத்தும் போட்டிருக்கிறது.

மெட்ராஸ்:

காலணிய ஆதிக்கத்தில், மாகாணத்தின் தலைமைப்பட்டணமாக இருந்த காலத்திலிருந்து 1990-கள் வரை மெட்ராஸ் என்பது துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்ட மாநகரமாகவே இருந்து வந்துள்ளது. அதன்பொருட்டே கிண்டி, அம்பத்தூர், மெப்ஸ் (MEPZ) ஸ்ரீபெரும்புதூர் என்கிற சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் யாவுமே அமைக்கப்பட்டன. சரக்கு அல்லது உற்பத்திப் பொருளாதாரமே மையமாக இருந்து வந்தது. மெட்ராஸின் பெரும்பான்மை மக்கள் தொழிலாளர்களே. 90களுக்கு முன்னர் வரை அவர்களது பிரதான உடை காக்கி ட்ரவுசரும், சட்டையுமே. மத்தியத்தர வர்க்கம் என்பது இன்றைக்கு இருப்பது போன்ற உயர் மத்தியத்தர வர்க்கம், குறைந்த மத்தியத்தர வர்க்கம், மத்திய மத்தியத்தர வர்க்கம் என்றெல்லாம் பார்க்க முடியாத வடிவத்திலேயே இருந்தது. இன்றும்கூட அதன் பழைய கூறுகளைப் பார்ப்பதற்கு சென்ட்ரலுக்குப் பின்னால் இருக்கும் வால்டாக்ஸ் சாலையிலிருந்து, மிண்ட் ரோடு, யானைக்கவுனி முதல் தம்புச்செட்டி சாலை, ப்ராட்வே, செகண்ட் லேன் பீச் வரை தென்படும் உழைப்பாளர்கள் அதன் எச்சமாகவே இருக்கிறார்கள். என்ன? அவர்தம் கைகளில் செல்போனும், வாட்ஸப்பும் மட்டுமே வித்தியாசம். ஆனால் இந்த வித்தியாசம் பெரிய பெரிய மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதார அழுத்தங்களால் நகரின் மையத்திலிருந்து வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும் மக்கள் வாழ்ந்த இடங்களில் நவீன சவுகார்பேட்டைகள் GATED COMMUNITY ஆக மாறியிருக்கிறது, அவை சென்னை என்று அழைக்கப்படும்.

2008-ல் மெட்ராஸில் வேலை செய்ய ஆரம்பித்த எனக்கு 2010-வரை கஸ்டம்ஸ் அலுவலத்திற்கு வரும்போது ஃப்ளாப்பிகளில் கோப்பினை சேமிப்பதற்கு காலாவதியான தொழில்நுட்பங்கள் அங்கே தம்புச் செட்டி ஸ்டேஷனரி கடைகளில் கிடைத்தன. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு உடனடித் தகவல்களை அளித்திட எங்களைப் போன்ற முகவர்களுக்கு ப்ளாக்பெரி செல்போன்கள் வாங்கிக்கொடுத்தார்கள். சந்தைப் பொருளாதாரத்தில் தேய்-கலாச்சாரமும் (Credit card culture/Cashless culture) சூடுபிடித்த காலம் அது. அநேகமாக பிரபல தனியார் வங்கிகள், வேலைக்குச் சேரும் எல்லோருக்கும் டை கட்டிவிட்டு 3000 ரூபாய் சம்பளத்திற்குகூட எக்ஸிக்யூட்டிவ் என விசிட்டிங் கார்டு அடித்துக்கொடுத்து முடித்த காலம் அது. அவர்கள் எல்லோர் கையிலும் கிரெடிட் கார்டுகளை கொடுத்து முடித்த திருப்தியில் ஷேர் ஆட்டோ, செல்போன் கடை எனத் தப்பிவிட, தேய்த்துப் பார்த்து சுகம் கண்டவர்கள் லோக் அதாலத் வார்டுகளில் கடன்காரர்களாக அட்மிட் ஆகியிருந்தார்கள். அசுரப் பாய்ச்சலாக தொழில்நுட்பத்துறையில் இருப்பவர்கள் ஆண்ட்ராய்டு போன்களை வாங்கி உபயோகிக்க, நாங்கள் அதற்கேற்ற கொரியன் மொபைல்போன் வாங்கி கானா பாடல்களை ஸ்பீக்கரில் போட்டு இரயில் நேரங்களில் உலாவர பாக்கெட் நாவல்கள் பரிதாபமாக ஊசலாடிக்கொண்டிருந்த காலம் 2005-2010.

ராஜிவ்காந்தி ஆறுவழிச் சாலை வந்த நேரம் என்று சொல்வதற்கு ஏதுவாய் நிகழ்ந்த இத்தனை மாற்றங்கள், 2007 அமெரிக்க சப்-பிரைம் இஸ்யூ என்று சொல்லப்பட்ட சில முக்கிய நிறுவனங்களின் திவால் நிலை.  2007க்கு முன்னர் கடந்த பத்தாண்டுகளாய் உருவாகி வந்த உச்சத்திலிருந்து இறங்குமுகம் கண்டது. அதற்கு முந்தைய ஆண்டு பொறியியல் பட்டம் படித்தவன் – கல்வியில் சுமாரான தேர்ச்சி பெற்றே வளாக நேர்முகத்தில் தேர்வாக, அதற்கடுத்த வருடம் நல்லத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கூட நேர்முகத்தில் தேர்வு பெற்றும் வேலைக்குச் செல்ல இரண்டு வருடங்கள் வரை காத்திருந்தார்கள். சிலர் சிம்கார்டு விற்றார்கள். அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு வளாக நேர்முகம் நடைபெறும் கல்லூரிகளின் எண்ணிக்கை சென்னையிலேயே பாதியாகக் குறைந்தது என்றும் சொல்லலாம். ஆனால் இதை ஒரு வட்டமாகப் புரிந்து கொள்ளும் பொருளாதார வல்லுனர்கள், எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாற்றம் இருக்கும் என்று சொல்வது நிச்சயம் ஒரு ஆறுதல்தான்.

அரசாங்கம் e-governance, Rural BPO என்றெல்லாம் நிறையவே பேசிவிட்டாலும் 2000-லிருந்து சொல்லப்படும்படியான எந்த முன்னேற்றங்களும் நிகழவில்லை. நான்குநேரி போன்ற Decentralize என்று சொல்லும் எல்லாத் திட்டங்களும் கனவாகவே இருந்து வருகிறது. மெல்ல மெல்ல தமிழகத்து இளைஞர்கள் இஞ்சினியரிங் கல்லூரிகளால் சென்னைக்கே கடத்தப்படுகிறார்கள். ஆனால் மும்பைப் போல் அல்ல. சென்னை, தன்னை விரிவாக்கிக்கொள்ளும் நிலப்பரப்பைக் கொண்டது. ஆனால், சூழல் குறித்த அக்கறை அற்ற அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்த வளர்ச்சியை நோயாகத்தான் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், தினமும் காலை ஐந்து மணிக்கெல்லாம், ஓம்னி பஸ்களில் தொழிற்சாலையிலிருந்து வரும் கொசுவர்த்தி வாசனையில் பல்லாவரத்தில் தூக்கம் கலைத்து கோயம்பேட்டில் இறங்குகிறார்கள் இளைஞர்கள்.

ஐ.டி நிறுவனங்களிலேயே இப்போது மத்தியத்தர வர்க்கங்களைப் போல் உயர்தர, மத்தியத்தர, கீழ்நிலை என வித்தியாசங்கள் இருக்கின்றன. வளாக நேர்முகங்கள் குறைந்து, கட்டணம் செலுத்தி பயிற்சி பெற்றவர்களையே நிறுவனங்கள் தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டன. இதுபோன்ற இன்ஸ்டிட்யூட்களும், பயிற்சி மையங்களும் அப்படியான நிறுவனங்களில் வேலைச் செய்யும் ஆட்களாலேயே பெரும்பாலும் தொடங்கப்படுகின்றன. அதற்கும் மேலே நிறைய உப்புமா கம்பெனிகள், ஆறுமாத சம்பளமற்ற அப்ரென்டிஸ்களாக பொறியாளர்களை அமர்த்துகின்றன. 

ஆனால் இப்போது மூன்றாம்நிலை ஊழியர்கள் பலர் ஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ், ஜொமேட்டோ போன்ற வாகன ஓட்டிகளாக இருப்பது எந்தத் தனித்திறனையும் வளர்க்காத மிகப்பெரும் தவறான முடிவை எடுக்கத் தூண்டுகிறது. இருந்தபோதும் நகரமயமாதல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

2005-க்குப் பிறகிலிருந்தே உலக அளவில் நகரமயமாதல் அதிகமாகும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகமும் இருக்கிறது எனச் சென்னையைச் சுட்டுகிறது புள்ளிவிபரங்கள். சென்னையின் மக்கள்தொகைப் பெருக்கம் 2030-ல் மும்பையைத் தொடும் என்பது, உலக அளவில் பத்து இடங்களில் சென்னைக்கு அந்தஸ்து வந்துவிடும் என்பதாகும். இதில் சரக்கு உற்பத்தி துறையைவிட, சேவைத் துறையின் பங்கே அதிகம். அதிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு மிகமிக அதிகம். அதே நேரம் உற்பத்தி துறையிலும் சென்னை முக்கியமான வளர்ச்சிகளை எட்டியிருக்கிறது. ஒரகடம் இந்தியாவின் டெட்ராய்ட் (Detroit) என்று சொல்லப்படுகிறது. பிரதான வாகனத் தொழிற்சாலைகள் போக கணிசமான துணை நிறுவனங்கள் (Ancilliary units, Original equipment manufacturing units) உருவாகியுள்ளன. இவை அனைத்தும் தலைநகரத்தின் பிரதான தொழில்களில் ஒன்றான சென்னைத் துறைமுகத்திற்கு வலுச் சேர்ப்பவை.

ஆனால் சில தனியார் துறைமுகங்களின் வரவு, தொலைநோக்கில் சென்னையின் வணிகத்தில் கணிசமான அளவைப் பிரித்து எடுத்துவிடும் என்பதும் உண்மை. தெற்கே காரைக்காலில் பன்னாட்டு நிறுவனமான MARG துறைமுகம், காட்டுப்பள்ளி எல் & டி துறைமுகம் மற்றும் ஆந்திராவின் கிருஷ்ணப்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் இப்போது போட்டிப்போடத் தொடங்கிவிட்டன, அடிப்படைக் கட்டுமான வசதிகள் மிகமிகப் பெரிய குறைபாடாக இருக்கிறது, அதுபோக, போக்குவரத்து நெரிசலும்.

மென்பொருள் துறை இந்தியாவில் வரும்போதே பெரும்பாலும் இரண்டு துறைகளில் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. ஒன்று நிதி மற்றொன்று தளவாடங்கள் (Logistics). பல பெரிய கப்பல் நிறுவனங்கள் (உதாரணம் : Maersk) தங்களுக்கான தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் பிரிவை அவர்களே தனியாக ஆரம்பித்துக்கொண்டார்கள். ஆனால், மற்ற நிறுவனங்கள் முழுமையாக மாறுவதற்கு 2015 வரை ஆகிவிட்டது. தற்போது சுங்கவரி ஆணையமும் முழுமையாகக் கணினிமயமாகி விட்டது. ஃப்ளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள் எங்கள் அலுவலகங்களின் ப்ராஸசர்களில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன அல்லது புதிய கணினிகள் வந்துவிட்டன.

இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்து உலகின் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் சென்னையின் பங்களிப்பு ஏதோ ஓர் அளவில் இருந்து வருகிறது (2007 பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னரும்). உலகப் பொருளாதார மண்டலங்களில் உற்பத்தி துறையிலும், சேவைத் துறையிலும் சென்னையின் பங்களிப்பு வளர்ந்துதான் வருகிறது. இதில் சுனாமி, பெருமழைக்கால வெள்ளம் போன்ற பேரிடர்களையும் சமாளித்து மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையும் மீண்டு எழுந்த வேகம் சென்னையின் பெரும்சாதனையில் ஒன்று.

இனி, வரும் காலங்களில் பேரிடர்களைச் சமாளிப்பதற்கு நிறுவனங்கள் தயாராக BCP [Business Continuity Plan]  போன்ற திட்டங்களுக்காக நிறையவே ஃபர்னிச்சர்களை இறக்குமதி செய்கின்றன. GST (General Sales Tax), டிஜிட்டல் பணம் போன்ற சில அதிரடித் திட்டங்கள் கணிசமான அளவு சிறுதொழில் மற்றும் சில துறைகளையே கடினமாகப் பாதித்தாலும் அரசின் அறிக்கைகளில் GDP (Gross Domestic Product) புள்ளிவிபரங்கள் முன்னேற்றம் கொண்டிருப்பதாகவே காட்டுகின்றன.  என்ன ஆனாலும் பல்வேறு திட்டங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் சென்னையின் எதிர்காலத் தொழில்வளத்தின் குறியீடுகளாகவும் புலனாகின்றன.

சர்வமும் டிஜிட்டல்மயமாகிவிட்ட சென்னைத் துறைமுகச் சுங்க ஆணைய அலுவலகத்தில் இனி கோப்புகளை எளிதாகக் கடத்தி ஒப்புதல் வாங்க முடியுமா? என்றால், இல்லை. அதற்கென இரு விஷயங்களை முக்கியமாகச் செய்ய வேண்டியிருக்கலாம்.

டிஜிட்டல் யுக லஞ்சப் பணமாக அரசாங்க அதிகாரிகளின் க்ளப் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்யலாம் அல்லது இந்தியிலாவது சரியாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

மே மதராஸி ஹெ!!




****
-ஜீவ கரிகாலன்
சென்னை.



புதன், 24 மே, 2017

நிசப்தமாய் ஒரு புரட்சி



மூன்றாம் நதி இரண்டாம் பதிப்பிற்கு செல்கிறது

லிண்ட்சே லோஹன் நான்காம் பதிப்பு , மசால் தோசை இரண்டாம் பதிப்பு ஆகியன விரைவில் வெளிவரும். 

இன்னும் சில புத்தகங்கள் இந்த ஆண்டிலேயே வரும், எல்லாவற்றையும் விட நண்பனாக இருப்பதற்கு பெருமைப்பட எத்தனையோ விசயங்கள் இருக்கிறது.

நான் வந்திருந்த சில மணி நேரங்களில் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்த நபர்கள் அவரை சந்திக்க வந்திருந்தார்கள் ஒருவரோடு பள்ளிக் கல்விச் செயல்பாடு குறித்து, மற்றவரோடு சில மருத்துவ உதவிகள் குறித்து, இன்னுமொரு கட்சிக்காரரோடு சூழல் குறித்த அவரது முயற்சிகளைத் தொடர்ந்தபடி சென்றுக் கொண்டிருந்தது அவர் பேச்சு.

இதற்கிடையில் மூன்று மாணவர்களைச் சந்தித்தேன், ஒருவன் தன் தாய் தந்தையை இழந்தவன், ஒவ்வொரு வார இறுதியிலும் ஆட்டுக்கறி விற்று தனக்கும் தன் சகோதரிக்குமான பொருளைச் சம்பாதித்துக் கொள்கிறான். அவர்கள் நிசப்தம் அறக்கட்டளையின் அரவணைப்பில் இருப்பவர்கள்.

இரண்டாவது 1123 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளியில் முதலாம் மதிப்பெண் பெற்றவன். என்ன படிக்க வேண்டும் என்று கூடத் தெரியாத நிலையில் இருந்தான், அவனுக்குப் பொறியியல் கல்வி அதன் எதிர்காலம் குறித்து அவனுக்கு விளக்கிவிட்டு அவனை அனுப்பிவைத்தார். அவனும் அவனைப் போன்ற அவ்வட்டாரத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருந்த மாணவர்களை அவர்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அவர்களை ஊக்குவித்ததில் நிசப்தம் மற்றும் அதன் ஆர்வலர்களின் பங்கும் இருக்கிறது.

இடையில் ஒரு கல்லூரியின் செயலாளரைச் சந்தித்து அருகே உள்ள ஒரு குடியிறுப்பில் உள்ள மாணவர்களுக்காக அவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பைக் கேட்டறிந்தார் (அவர்கள் யாவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட கலை கூத்தாடிகள் எனும் தொழில் செய்தவர்கள்), சென்ற முறை அவர்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்து, பள்ளியில் படிக்கும்போதே அவர்களைக் கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் Quotaவில் சேர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதால் அதில் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அவர்களின் விளையாட்டிற்கான செலவுகளைத் தொடர்ந்து நிசப்தம் அறக்கட்டளை ஏற்பதாகச் சொன்னார்.

அடுத்ததாக சந்தித்த மாணவன் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான், Fisheries படித்துக்கொண்டிருக்கிறான். ஏற்கனவே உதவி பெறும் மாணவன். இந்த வருடம அவனே சில மாணவர்களை ஊக்குவிப்பதாகச் சொன்னான், சிலர் அதில் பலனடைந்ததாகவும். ஓய்வு நாட்களின் தானும் நிசப்தத்தின் வேலையை செய்வதாகவும் சொன்னான். அந்த ஓய்வு நாட்களில் சிவில் சர்வீஸ்க்கு தயார் செய்வியா என்று கேட்டார் வா.ம.

”ம்ம் சரி” என்றான் யோசிக்காமலேயே.

“யோசிக்காம எதையும் சொல்லாத யோசிச்சு சொல்லு உன்னால முடியுமான்னு” என்று வா.ம சொல்லும் போது எனக்கு குழப்பமாக இருந்தது. ஏன் அவன் தான் இஷ்டம்னு சொல்றானே, ஏன் டைம் கொடுக்குறிங்கன்னு அவரிடம் கேட்டதற்கு,

”அப்படி ஒருவன் யோசித்து, உழைப்பதாக மனப்பூர்வமாகச் சொன்னால், ஏனென்றால் ஒரு ஐ ஏ எஸ் பதிவியிலோ வேறு ஏதும் க்ரூப் 1 அலுவலர்கள் யாரையாவது அவனுக்கு mentor ஆக இருக்கச் சொல்லிக் கேட்கவேண்டும். அவர்களுக்கும் நேரம் என்பது எவ்வளவு முக்கியம்” என்றார்.

ஒரு மாநிலத்தின் நலன் , பிராந்தியத்தின் நலன் என்று பேசுவதோடு நின்றால் போதுமா அந்த நலனைச் செய்பவர்கள் அதிகாரம் கொண்டவர்களாகத் தானே இருக்க வேண்டும். அவர்கள் நம் மண்ணிற்கு வேண்டும் தானே என்று மணிகண்டன் என்னிடம் சொல்லும் போது அவர் கண்ணில் ஒரு பரந்த வெற்று நிலம் தெரிந்தது.. அதில் மணியின் கனவு நிச்சயம் கட்டமைக்கப்படும் நிஜமாக.

இத்தனையும் ஞாயிற்றுக்கிழமையின் ஒரு அரை நாளில் நான் கண்ட காட்சிகள், அதுவும் என் பொருட்டு மூன்றாம் நதிக்காக கல்லூரிப் பேராசிரியரைச் சந்திப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த நேரத்தில் நிகழ்ந்தவை. இவற்றோடு தன் அம்மாவின் மனநிலை குறித்தும், தன் ஓய்வற்ற உடல்நிலை குறித்தும் கூட நண்பனாக சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளும் போது, இவரை Alienஆக நினைத்துக்கொள்ளக் கூடாது என்று சத்தியம் செய்து கொண்டேன்.

வார இறுதியில் மட்டும் இத்தனை வேலைகளை ஒருவன் தொடர்ச்சியாக சில வருடங்கள் செய்த சிறு சிறு முன்னெடுப்புகள் எல்லாம் எத்தனை ஆரோக்கிய விளைச்சல்களாக இருக்கின்றது எனப்பார்க்கும் போது, அப்படியே கண்ணம்மாவிடம் சொன்னேன்.

நீயுந்தான் இருக்கியே சோம்பேறி என்றாள். பாக்கெட்டிலிருந்த மாத்திரைகள் இனி எப்போதும் தேவைப்படப்போவதில்லை.

நிசப்தம் என்பதும் ஒரு புரட்சியாகத் தான் இருக்கிறது.

என்றும் மாறா ப்ரியங்கள் மணி..

திங்கள், 22 மே, 2017

திமுகவின் சாபம்

காதலும் அரசியலும் தான் ஒரு தனி மனிதனை எங்கே வேண்டுமானாலும் துரத்திவிடும், அரவணைப்பதைப் போலவே.

ஃபேஸ்புக்கில் சிறிது நாள் விலகி இருந்தாலும், சில முக்கிய அலுவல் ரீதியான வேலைகளுக்காக பதிப்பக ஐடியில் நுழைந்துப் பார்த்தேன்.

விநாயக முருகனின் அருவருக்கத்தக்கப் பதிவுக்கு எழுந்த ஒரு கண்டனத்தை மட்டும் வைத்து இதனை எழுதவில்லை. அவருக்கு சென்னை மெட்ரோவிற்காக இறந்துபட்ட தொழிலாளர்களுக்குத் தன் முதல் நாவலைச் சமர்பித்த, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு உயர்நடுத்தர வாழ்க்கையினை நாவலாகவே எழுதிச் சலித்த ஒரு மனிதநேய எழுத்தாளர் அதற்கு மேல் வற்றிவிட்டதினால், தன் பார்வைகளை மாற்றியிருக்கக்கூடும்.

நேற்றைக்கு கோபியில் ஒரு நண்பரைச் சந்தித்தபோது, அவரைப் பற்றி வா.மவிடம் விசாரித்தேன், ஒரு காலத்தில் தீவிரமாக ஈழ ஆதரவு போராட்டங்களில் இருந்தவர். ஒரு கட்டத்திற்குப் பின்னர் இப்போது முழுமையாக ஆசிரியராக மாணவர்களோடு இருக்கிறார் என்றார். வா.மவின் அறக்கட்டளைக்கு நிறைய உண்மைக்கே உதவி தேவைப்படும் நன்கு படிக்கக்கூடிய மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொண்டு சேர்க்க பெரும் உதவி செய்கிறார். வத்திராயிறுப்பில் ஒரு மனிதரைக் கண்டிருக்கிறேன், ஜடாமுடியோடு இருக்கிறார். அவர் யாரோடும் பேசுவதில்லை, மிக இளைய வயதிலேயே வத்திராயிறுப்பில் கேம்ப் வைத்திருந்த இயக்கத்தின் மீது கொண்ட அபிமானத்தில் ஒரு ஈழ ஆர்வலராக ஈழம் கிடைக்கும் வரை யாரிடமும் சகஜமாகப் பேசவும் கூடாது, முடி வெட்டவும் கூடாது என்று இருக்கிறார் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். அவர்கள் தலைவர் இருக்கிறார் என்றே நம்புகிறார்கள், இல்லை என்று புரிந்தால் மட்டும் என்ன செய்ய முடியும்? இப்படி நிற்கதியாய் நின்று போனவர்களும் இருக்கிறார்கள், அந்த காயம் ஆராமல் புலம்புபவர்களும், சாபமிடுபவர்களும் இருக்கிறார்கள்.

இதுபோக, ஒரு புதிய இளைஞர் கூட்டம், இந்தத் தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு வருகிறது. ஜல்லிக்கட்டிற்கும், நெடுவாசலுக்கும், டாஸ்மாகிற்கு எதிராகவும் இன்று நிற்கும் பல புதியவர்கள் அந்த வலியிலிருந்து எழுந்தவர்கள் தான். அவர்களுக்கு ஒரு தலைவன் புகுத்தப்படவில்லை, ஆனால் ஏற்கப்பட்டிருக்கிறான். அரசியல் கற்பிக்கப்படவில்லை, ஊடக ஆதரவு இல்லை, எந்த எழுத்தாளனோ கலைஞனோ விழிப்புணர்வு செய்யவில்லை. ஆனாலும் கூடுகிறார்கள் - எப்படி?

ஒரு காலத்தில் திமுக காரன் என்று சொன்ன நிறைய பிராமணர்களே இருந்திருக்கிறார்கள். அவர்களையும் அனைத்துச் செல்லுமளவுக்கு விசாலமான கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. மொழிப்போர், சூழல், தொழில், சமூகக்கட்டமைப்பு, பகுத்தறிவு செயல்பாடு என நிறைய அம்சங்களால் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். இன்று திமுகவில் இணைவது என்பது ஊருக்கு வெளியே நிலம் வாங்கிப் போடுவது போலே. ஆட்சியைப் பிடிப்பது என்பது வாங்கி வைத்திருக்கும் நிலம் அருகே பைபாஸ் வருவது போன்ற கனவு கொண்டிருக்கும் எழுத்தாளச் சமூகத்தில் இப்படி எழுதுபவர்களை ஒத்துக்கொள்ளப்போவதேயில்லை என்றாலும் சொல்ல வேண்டியிருக்கிறது.

இன்றைக்கு திமுகவைத் திட்டிக்கொண்டிருக்கும் அநேக தமிழ் தேசியவாதிகள் முன்னால் திமுக தான் என்பது சந்தேகமேயில்லாத உண்மை. ஆனால், சென்ற வருடம் முதல் கவனித்து வருகிறேன் திமுகவின் சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து அல்லது கடந்த தேர்தலிலிருந்து இதுவரை காட்டாதத் தன் முகத்தை காட்டுவதாகத் தெரிகிறது. அது தன் குற்ற உணர்வை மறைத்துவிட்டு, வீழ்ந்துவிட்ட எதிரியின் கல்லறையை அவமதிப்பது. சரி நீங்கள் உங்களை அடையாளம் காட்டுகிறீர்கள்.

திமுகவை விமர்சிக்கும் போது பல மூத்த ஆரம்பத்திலிருந்து கட்சிக்கு உழைத்த பலர் மவுனமாக அதைக் கடந்துவருவதை இன்றளவும் பார்த்து வருகிறேன். ஏனிந்த மாற்றம், இன்றைக்கு இனப்படுகொலையின் கறைகளிலிருந்து திமுகவைப் காப்பாற்ற நினைப்பவர்களை செலுத்துகின்ற விசை எது?

அடிப்படை பிழைப்புவாதமின்றி வேறேதுமில்லை, ஒரு பகுத்தறிவு இயக்கத்தால் பரிணமிக்கப்பட்டு வேறு எங்கோ தன் சமூகப்பொருளாதார நிலையை கொண்டு சென்றிருக்க வேண்டிய சமூகம். இன்று ஆளுனரும், ஸ்திரமான முதல்வரும் கூட இல்லாத மாநிலமாக மாறுவதற்குக் காரணம் திமுகவின் bio-memoryஆக மாறிவிட்ட இந்த அடிப்படைப் பிழைப்புவாதம் தான் காரணம்.

எத்தனைக் கடுமையாகவும் கட்சியையும், தலைமையையும் விமர்சித்திருந்தும் தன் தலைவன் பிரபாகரன் என்று சொல்லும் சில ஆறுதல் தரும் நல்லுள்ளங்களும், மவுனமாக தங்கள் பக்கத் தவறைக் கடந்து வேறு பணிகளுக்குச் செல்லும் அதிகாரம் கொண்டவர்களும் கூட உங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என்று எனக்கும் மகிழ்ச்சி இருக்கிறது.
ஆனால், ஈழ ஆதரவு நிலைப்பாட்டால் திமுகவை எதிர்ப்பது என்பது வெறும் ஈழ ஆதரவு மட்டுமல்ல, கடந்த அறுபது ஆண்டுகளாக எங்களையும் எங்கள் வளங்களையும் சுரண்டி அகபரித்துக் கொண்டிருக்கும் உங்கள் சூப்பர் குடும்பமே ஒரு இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் என்று சொல்லலாம்.

அப்படியான ஈழத்துக்குக் குரல் கொடுக்க ஒன்று கூடி நினைவேந்தலை ஆரம்பித்த மக்கள் தான், மெதுமெதுவாக தமிழகத்தின் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுக்கும் அடிப்படைத்தமிழர் உணர்வை பலப்படுத்திக்கொண்டே வருகிறது. ஆம் பலப்பட்டுவருவது யார் – இப்போது நன்கு வாசிக்கக் கூடிய எழுதக்கூடிய எழுத்தாளனாய் இருக்க வேண்டிய அவசியமற்ற, ஐடி போன்ற பெரு நிறுவனங்களில் வேலை பார்க்கக்கூடிய சாமான்யனும் என்பதில் தான் இன்றை பிழைப்புவாதப் போராளிகளுக்கும், அரிப்பெடுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும், அரசியல் கனவு காணும் இரண்டாம் தர முதலாளிகளுக்குமான எரிச்சல். ஆகவே கண்டபடி குமுறுகிறார்கள்.
இன்றைக்குத் தமிழ்நாட்டின் சூழல் சார்ந்த ஒவ்வொரு பிரச்சினைக்கும் அடிப்படையாக இருப்பது சிவப்புச் சித்தாந்தமோ, திராவிடச் சித்தாந்தமோ இல்லை அது தமிழர் நலன் என்கிற நேரடி அரசியல், அது தற்காலத்திற்கு அவசியமான அரசியல்.

இன்று விவசாயிகளுக்காகப் போராடும் திமுக ஆதரவு கோஷ்டிகளுக்கு எண்டோ சல்பைன் நுழைந்த கதையும் தெரியாது, கேரளா போன்ற மாநிலம் தடை செய்திருந்தும், ரசாயன அமைச்சகமே கையிலிருந்தும் அது குறித்துக் கிஞ்சித்தும் பரிசீலிக்காத மந்திரியைப் பெற்ற கட்சி தான், ஈழப் போர் சமயத்தில் மந்திரி பதவிக்காகவே பரிதவித்தது – 13 ஜூன் 2009 (அழகிரி மந்திரியாகப் பொறுப்பேற்ற நாள்). உண்மையில் ஸ்டாலின் அன்றே கட்சித்தலைவராக இருந்திருந்தால் கூட இந்த மாதிரி அவப்பெயரை சுமந்துவந்திருக்க மாட்டார்கள் என்று கூட நினைத்துப் பார்த்ததுண்டு. அபத்தம் – இப்படி யோசனை செய்வதில்.

இப்படியான ஒவ்வொரு துறைக்கும் தன் மகன், மகள், பெயரன், பெயர்த்திகளை வைத்துத் தனித்தனியாக நிறுவனங்கள் நடத்தி ஊடகங்களைப் பிடித்து, வளங்களைச் சூரையாடி, ஜாதிச் சண்டைகளைப் பெரிதுப்படுத்தி எல்லாவற்றையும் தன் குடும்ப நலனுக்காகவே சமரசம் செய்துகொண்ட ஒருவரை தலைவராகப் பெற்ற சமூகம்.

உங்களுக்குத் தலைவர் திரு. கருணாநிதியாக இருந்துவிட்டுப் போகட்டும், அதனால் எங்களுக்குப் பிரச்சனையேயில்லை.

ஏனெனில் நாங்கள் தமிழர்கள், எங்கள் தலைவன் – ஒரு போராட்டத்திற்காக தன் குடும்பம் மொத்தத்தையும் களத்திலேயே போரிட்டு இழந்தவன். அதனை, அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் கிடைக்கப் போகும் லாபங்களை எண்ணி மட்டுமே திமுகவை ஆதரிக்கும் ஆர்வலர்/எழுத்தாள சமூகத்திற்கு புரிந்துகொள்ளவே முடியாது.

வியாழன், 11 மே, 2017

பஜ்ஜி சொஜ்ஜி - கோடை மழை

ரமேஷ் ரக்சனும் நானும் மாலை உணவு முடித்துத் திரும்பும் பொழுது. தேநீர் குடிக்கலாம் போலிருந்தது. அவன் குல்ஃபி சாப்பிடலாம் என்று சொன்னான். உண்மையில் இரவில் வயிறு நிறைய உண்ணும் போது, டெஸ்ஸர்ட் எடுப்பது நல்லதா? அல்லது தேநீர் குடிப்பது நல்லதா எனக் குழம்பினாலும், குல்ஃபிக்கே மனம் திரும்பியது.

மழை தூறிக்கொண்டிருக்க, டாஸ் போட்டுப்பார்த்துவிட்டு அவனோடு தங்காமல் கிளம்பினேன். சரியாக ஆர்காட் ரோட் - லிபர்டி நிறுத்தம் அருகே, சினிமாவிலோ அல்லது ரேஸிலோ வருவது போல வரிசையாக ஒன்பது வாகனங்கள் சரிந்து விழுந்தன. என்னுடைய டோக்கன் நம்பர் ஆறு. ஒரே கூச்சலும் களேபரமுமாக சற்றைக்கெல்லாம் ஒரு எமர்ஜென்சி சூழலை நகரம் எதிர்கொண்டது போன்ற தோற்றம், பேருந்து நிறுத்தத்திலிருந்து volunteerஆக வந்து விழுந்தவர்களைத் தூக்கிவிட, புதிதாகப் போடப்பட்டிருக்கும் சாலையின் அதிகப்படியான வளவளப்புத்தன்மை தான் காரணம் என்று கவனித்து தொடர்ந்து வந்த மற்ற எல்லா வாகனங்களையும் தடுத்து நிறுத்தி மெதுவாகப் போகச் சொல்ல, தியேட்டரில் இல்லாத படிகளில் எட்டு வைத்து நடப்பது போல் ஒன்றன் பின் ஒன்றாக தள்ளிச்செல்ல ஆரம்பித்தார்கள்.


நம்மோடு சேர்த்து கூட ஏழு, எட்டு பேர் விழுந்திருக்கிறார்கள் என்பதாலும் அத்தனை ரணகளத்திலும் பெரிதாக ஏதும் நிகழவில்லை என்பதாலும் ஒருவரோடு சிரித்துக்கொண்டோம். காலில் லைட்ட ஒரு கீறல் தான்.

பின்னே என்ன - மாநகராட்சியின் இப்படியான மட்டமான சாலை அமைப்பைக் கண்டித்துப் போராடவா முடியும்? இதில் காலைச் செய்தியில் குப்பை லாரி வழியாக சிந்திய எண்ணெய் கசிவால் தான் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படும்போது என்ன சொல்ல.

குழிகளுக்கு நடுவே ஆங்காங்கே தெரியும் சாலைகள் மட்டுமே மழையிலும் சரி, இரவிலும் சரி நாம் பாதுகாப்பாய் கடக்க உதவுகிறது என்று உணர்ந்ததும் ஐயப்பந்தாங்கல் பகுதி கவுன்சிலருக்கு கீழிருந்து எழும்முன்பே நான் நன்றி சொல்லிக்கொண்டேன். பாக்கெட்டிலிருந்து விழுந்த செல்போனையும் இத்யாதிப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு, மாநகராட்சிக்கு நன்றி சொல்லி ஒரு சுடச்சுட பதிவு ஒன்றைப் போடலாமென்று பார்த்தால், சென்னையில் மழையிரவு விபத்து ட்ரெண்டிங் ஆகிட. “இந்த சென்னைப் பசங்க அலப்பற தாங்கல”ன்னு கவிஞர் பழனிவேள் திட்டுற மாதிரி ஒரு காட்சியும் வந்து போனது.

இருந்தாலும் உணவிற்குப் பிறகு தேநீர் குடித்திருந்தால் இத்தனை மந்தமாக இருந்திருக்காது என்று தோன்றியது, இப்ப தான் ஏழாயிர ரூபாய் கொடுத்து இஞ்சின் வேலை பார்த்து வைத்த வண்டி பரிதாபமாய் இருக்க, ஒரு நபர் அதை எடுத்து சைடு ஸ்டாண்ட் போட்டார்.
வடபழனி லஷ்மன் ஷ்ருதி அருகே ஒரு தேநீர்கடை இன்னமும் திறந்திருக்கும் என்று சொல்லு ஓரத்தில் நிறுத்தியிருந்த வாகனத்தை சைடாக எடுக்க, இத்தனை களேபரத்தையும் சல்வார் கொள்ளாத ஒரு யுவதியொருத்தி நேராக தன் ஆக்டிவாவை என் வாகனத்தில் நேராக வந்து மோதினாள். டோக்கன் நம்பர் 10.
அப்போதும் இந்தக் களேபரத்தை எதுவுமே கவனிக்காமல் என் மீது அப்படியான ஒரு கரிசனம் அவளிடமிருந்து
“அறிவு இல்ல?”
ஓ அதுவும் கீழ விழுந்திருக்கும்

செவ்வாய், 28 மார்ச், 2017

கனவு மெய்ப்படும் கதை - 4


பரிமலை மலைக்கு செல்லும் போதுதான் முதன்முதலில் சூஃபி இசையைக் கேட்கத்துவங்கினேன் (ஏன் இங்கிருந்து கட்டுரையை ஆரம்பிக்கிறேன் என்று தெரியவில்லை). சினிமாப்பாடல்கள் கேட்கக் கூடாது என்றும், இறைநிலையில் கவனம் குவிந்திருக்கும் என்கிற கட்டளைக்குப் பணிய விரும்பிய எனக்கு, ‘சந்நிதியில் கட்டும்கட்டியில்’ கவனம் கோர்க்கவில்லை. செயற்கையான பஜனையை செய்வதால் என்ன நஷ்டம் ஆகப்போகின்றது? ஆனால் எழுதப்போகும் பரிட்சைக்கு கேட்கப்படும் துணைப்பாடப்பிரிவில் முதல் மூன்று பாடங்களில் ஏதோ ஒன்று இறுதித்தேர்வில் வந்துவிடும் என்று வாசித்துச்செல்ல என்னால் இயலாது. விடுபடும் இடங்களில் தான் மனம் லயிக்கிறது. முட்டாளென்று உங்களைப் போலவே அவளும் என்னை ஏசுவது என் காதில் விழுகிறது. என்ன செய்ய சூஃபி இசையில் அடிபணிதலும், ஒப்படைத்தலும் இயல்பாக செலுத்துகிறது, பதினெட்டுப்படிகளேறும் போது களைப்பைக் காட்டிலும், வலியைக் காட்டிலும், தவறான இசையைக்கேட்டுவிட்டேனோ என்று குழம்பியபடியே தூக்கிவிடப்பட்டேன். மேலே ஏறியவுடன் முதலில் தெரிந்தது தத்வமஸி. நானே அதுவாக இருக்கிறேன் என்று அதுவே சொன்னது. ‘இன்ஷா அல்லா’ என்றும் சொல்ல வேண்டிய அவசியம் வரவில்லை, அதற்குப் பின்னர் தரிசனம் செய்ய அழைத்துச்சென்றார்கள் எதுவும் நினைவில் இல்லை. என்னைப் பொருத்தவரை ‘தத்வமஸி’ என்கிற தத்துவத்தைப் புரிவதற்கு தான் குறைந்தபட்சம் பதினெட்டு முறை வரவேண்டுமென்று காரணம் வைத்திருக்கலாம். உண்மையான தரிசனம் எதுவென்றால் அதுவே. எனக்கு இரண்டாம் முறை என்பதில் லேசான பெருமிதம் தான். அவளிடமும் அதைத்தான் சொன்னேன், நான் வேறுயாராகவும் இல்லை அதுவாக உருமாறிக்கொண்டிருக்கிறேன் என்று.

சூப்பர் ஈகோ, ஈகோவை அடுத்த கீழடுக்கில் தான் அது இருக்கிறது என்று ஃப்ராய்ட் சொல்கிறார். அது(ID) மேலான நிலையில் இருப்பது. சூப்பர் ஈகோவைத் துறந்து, ஈகோவை ஒப்படைத்தால் தான் அதுவாக இருக்க முடியும், அவளை அடையும் வழியும் கூட அதுதான். அவ்வாறே அந்தவழிமுறை தான் கலையாகிறதோ என்று பேசுமிடம், மனிதர்களற்றப் பகுதியில் ஓடும் தொந்தரவு அற்ற நதியைப் போன்றது.

கணபதியோடு அகமும்,புறமும் கலைவசப்பட்ட மாலையொன்றைப் பகிர்ந்த வேளையில், ஏதோ ஒரு வேலை ஒன்று தயாராவதைக் கடலுக்குச் சொல்லிவிட்டேன். அவர் சொந்தமாக தனக்கேயான ஒரு கதையை கிராஃபிக் பண்ணுவதற்காகத் தயாரித்து வைத்திருந்தார். அதில் சில பகுதிகளை வாசித்திருக்கிறேன். கைத்தறியில் இங்குமங்கும் போய்வரும் கட்டை போல் தத்துவங்களோடு தர்க்கங்கள் புரிந்து கொண்டிருந்த ஒரு கதை அது, நாவலாகவும் சொல்லலாம். ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. பத்துவருடங்களுக்கு மேலாகவும் அவர் கனவிலிருந்த கிராஃபிக் நாவல் வரும்போது தமிழில் என் கதை எனும் தற்செயலின் அற்புதம்.
கடந்த 19(மார்ச்17)ஆம் தியதி கூவ நதிக்கரையில் இருக்கின்ற சிவஸ்தலங்களை தொடர்ந்து கொண்டிருந்த என்னுடன் வரலாற்றறிஞர்களும், ஆர்வலர்களும் இருக்க, மனம் தனித்திருந்தது. கிட்டதட்ட நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் தனது கிராஃபிக் நாவல் வேலைகளுக்காக, ஒரு ட்ரான்ஸ் கிரியேட்டராக தன்னைப் பாவித்துக்கொண்டு கதையினை உருவங்களாக்கிக் கொண்டிருந்த அவருக்கு அந்த மாலை சுமார் 4.30 மணி போல நாம் ஏன் இப்படி வரைந்து கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வி எழுந்திருக்க வேண்டும். நானும் அதே கட்டத்தில் தான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன் என்று தெரியாமலே பயணித்துக்கொண்டிருக்கும் சுவாரஸ்யத்தின் ரஸவாத மோகத்தில் என்னை ஆழ்த்தியபடியும் குழம்பியபடியும் போய்க்கொண்டிருந்தேன்.

குசத்தலையும் கூவம் ஆறும் பிரியும் இடத்திலிருந்த கேசவராம் சிவன்கோயிலில் இருந்து தக்கோலம் நோக்கிச் செல்ல ஆரம்பித்த பாதை குசத்தலை நதியின் தடத்தில்.. ஆற்றினுள் இறங்கி செல்லும் வழியில் மேடும் பள்ளமுமாக இறங்கி ஏறிக்கொண்டிருந்தோம். புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கானச் சுவடுகள் தென்படும் இந்நதியென்று உடனிருந்த ஆய்வாளர்கள் செல்ல வண்டி நின்றது. இப்போது மாஃபியாக்கள் மண்ணைச் சுரண்டியதால் மழைபெய்தால் கூட மண்ணில் மழை தங்குவதில்லை, ஆனால் அவ்விடத்திலிருந்து ஐம்பது அறுபது அடிக்கும் மேலே நதிநீர் ஓடிய தடயமிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

braking home ties - norman rockwell
அமெரிக்காவின் பிரபல இல்லஸ்ட்ரேட்டரான நார்மென் ராக்வெல் – தன் வாழ்நாளில் நிறைய அவமானங்களைச் சந்தித்ததாக அவரது நண்பரான உளவியலாளர் எரிக்சன் சொல்லியிருக்கிறார். ஒரு விபரணப்பட ஓவியராக இருப்பது சமகாலத்தில் தாழ்வாகப் பார்க்கப்படுவதாக அவர் மனம் வெதும்பியிருப்பதாக அவர் சொல்கிறார். அவரது ஓவியங்கள் யதார்த்த பாணியில் இருப்பதால் 20ஆம் நூற்றாண்டின் மத்திமத்தில் உருவாகியிருந்த புதியபுதிய கோட்பாடுகளின் பின்னேயிருந்தும், அரூபங்களுக்கு மாறியிருந்த பல ஓவியர்களும் விமர்சகர்களையும் உருவாக்கியிருந்தார்கள். இன்றைக்கு அவரது ஓவியங்கள் யாவுமே கிளாஸிக்குகளாக சந்தையில் முக்கிய இடம்வகிக்கின்றன. அவரது ப்ரேக்கிங் ஹோம் டைஸ் எனும் ஓவியம் கிட்டதட்ட 90 கோடிகளுக்கு* விற்பனையாகி இருக்கிறது. இங்கும் கூட கே.மாதவனின் ஒர் சிற்றிதலில் கே.மாதவனின் ஓவியங்களைக் கிளாசிக்காக பாவித்துக் கட்டுரை எழுதமுடியும், கொண்டாட முடியும். (தமிழ் சிறுபத்திரிக்கையுலகில் அட்டைப்படத்தில் வந்தால் – வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு சமானம் தானே). நார்மென் ராக்வெல் ஓவியத்தில் அமெரிக்காவின் வளர்ச்சி, சமூக மாற்றம், உலகப்போர், வாழ்வியல் மாற்றங்கள் குறித்த அவரது ஏக்கம் ஒன்று தென்படுவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் ஒரு அரூபம் தருகின்ற உணர்வைப் போன்றே அவரது ஓவியங்களும் கலையம்சமானது என்று சொல்லலாம். இதைப்பற்றிய கவலை அவருக்கு இல்லை, தன் பாணியிலேயே அவர் தொடர்ந்தார். இன்று அவர் பெயரில் உள்ள அருங்காட்சியகம் உலக அளவில் பெயர்பெற்றது.
சிவில் சமூகத்தில் புதிய மாற்றங்கள் குடும்பத்தை
முன்வைத்து வருவதைச் சித்தரிக்கும்
அவரது மை இன்ஷுயரன்ஸ் பிளான் ஓவியம்

“அது ஒரு கனவு” இந்த இருபது பக்க கதையை, திரைக்கதை போல ஷாட் ஷாட்டாகப் பிரித்துக்கொடுத்தால் அதனை கிராஃபிக்காக மாற்றுவது சரியான பேட்டர்னாகக் கூட இருக்கக்கூடும். ஆனால் ஏற்கனவே சொன்னது போல வெறும் கதைக்கு உருவம் கொடுப்பதாக மட்டும் இந்த வேலை இருந்துவிடக்கூடாது. இப்படியான ஒரு வாழ்நாள் கனவு நனவாகும் போது,  தொடர்ந்து வேலை செய்ய பாதை அமைத்துக்கொடுக்குமா என்பது பிங்க் நோட்டு பத்து லட்ச ரூபாய் கேள்வி(எத்தனை காலம் மில்லியன் டாலர்னு மட்டும் சொல்ல – டினாமினேஷனையும் சேர்த்து சொல்வோம்).

தமிழ் வாசிப்புலகத்தின் எண்ணிக்கையைத் தெரிந்தும் இப்படியான முயற்சியில் இறங்கியபின்னர், இருபது பக்கங்களையும் கிராஃபிக்காக விரிப்பதற்காக அவர் இதுவரை அறுபது பக்கங்களைத் திட்டமிட்டிருக்கிறார்.

இந்த அறுபது பக்கங்களில் சுமார் 350 சட்டகங்களில் ஓவியங்கள் வரையவேண்டும். அதுவும் அவர் திட்டமிட்டிருக்கின்ற பாணி முற்றிலும் பரிட்சார்த்த முறையும் கூட என்பது கூடுதலான சுமை.
  1. முதலில் கதைக்கான காட்சிகளுக்கு உருவம் கொடுக்கும் சாத்தியக்கோடுகளை உருவாக்குதல்
  2. நாவலுக்குத் தேவையான ஃப்ரேம்களின் எண்ணிக்கைகள், பக்க அளவுகள்
  3. முக்கியமான தருணங்களுக்கு ஏற்றவாறு பின்னர் மாற்றி அமைத்துக்கொள்ளுதல்
  4. உருவங்கள், நிலக்காட்சி எதுவும் மடிப்பினில் இருக்கின்ற விஷயங்கள் குறித்த முடிவு, திட்டமிடல்
  5. காட்சிகளை வரைதல்
  6. கதையோடு ஆசிரியரின் ஒப்பிடல் மற்றும் திருத்தம்
  7. இறுதி வடிவம் நோக்கி வரைதல்
  8. கணினித் தரவேற்றத்துடன் – அதை சரிபார்த்தல் மெருக்கூட்டல்
  9. புத்தகத்திற்கு ஏற்ற மாதிரியான வடிவமைப்பு
  10. அலங்காரங்கள் 
  11.  அட்டைப்படம்
அதற்குப்பின்னர் வேலை பப்ளிஷரின் கைக்கு மாறுகிறது.

உருவச்சித்திரங்களிலிருந்து அரூபத்திற்கு இயல்பாக நகர்ந்துக் கொண்டிருந்த கணபதியின் பயணத்தில், திடீரென்று ரோலர் கோஸ்டர் பயணமாக ஒரு பழமையான மாங்கா ஓவியரைப் போல தரையில் அமர்ந்து சமணமிட்டு வரைந்துகொண்டிருந்த நாளொன்றில் தான் இது தோன்றியிருக்க வேண்டும். அவர் சொன்ன போது நான் உணர்ந்து கொண்டேன். அவர் மனதிற்குள் தன் செயல்கள் குறித்த கேள்வியாய் எழுந்த சுயம்சார்ந்த கேள்வி அது.

*
ஒரு நூறு கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலே, ஆற்றின் தடையமாக அங்கு குவிந்திருந்த கூழாங்கற்களை வெவ்வேறு வடிவத்தில் கண்டோம். சின்ன பால்ரஸ் குண்டுகளைப் போன்ற கற்களை, எங்கள் சாரிதியாக வந்திருந்த வைட்காலர் சம்சாரி தன் குழந்தைகளுக்காக சேமித்துக்கொண்டிருந்தார். ஆனால் எனக்கோ ஓவல் வடிவத்தில் தான் அந்த வெயிலில் பொறுக்க முடிந்தது. சுப்ரமணியசாமியாய் தெரிந்த ஒரு அன்பர் என்னை தேர்ந்த பொறுக்கியெனப் பாராட்டினார். பொதுவாக இந்த மாதிரியான கற்களை எடுத்து நாம் விரும்பும் தெய்வமாக நினைத்து வழிபட்டால், அது அதுவாகவே பலனளிக்கும் என்றார்.

அரூபம் ரூபம் என்கிற எல்லாவகையான அளவுமே மனிதனுக்குத் தானே, கற்களுக்கோ, பிரபஞ்சத்திற்கோ அதற்கான அக்கறை எதற்கு வைக்கனும் ? கல்லெனும் அரூபத்தில், ஒரு உருவத்தை மனதளவில் Install செய்வதற்கும், இன்றைய installation கலையைப் புரிந்துகொள்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதா என்ன?  இப்படியே கேள்விகேட்டு எழுதிக்கொண்டிருந்தால் – எந்த இதழிலும் பத்தி எழுத வாய்ப்பே கிடைக்காது. பதிப்பிக்க வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது என்று சொன்னபோது தான் அதுவாகவே ஆனேன். இப்போது என்னென்னவோ ஓடிகின்றது அந்த காலத்திற்குள் தன்னைப் புதைத்துவைத்த குசத்தலை நதியென அவை ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த சுப்ரமணியசாமியிடம் இந்தக் கல்லை நதியென நினைத்து வழிபட முடியுமா என்றேன் நதியை அழித்துவிட்டு கேன்சர் கிருமியாக உலகத்தில் ஜீவித்துக்கொண்டிருப்பவனாகிய நான்.

அன்றைய உலா முடித்து திரும்புகையில் திநகரில் பார்கிங்கில் போட்டிருந்த வண்டியை எடுக்கும்போது, ஏனோ பிள்ளையாராக வழிபடவிருந்த கூழாங்கல்லினை கணபதிக்கு கொடுக்கத் தோன்றிற்று. நேரே அவரிடம் சென்று கூழாங்கல்லினை நீட்டுகையில் அவர் உணர்வு வயப்பட்டிருந்தார்.

”நானும் நினைத்துக்கொண்டிருந்தேன் நான் வரைவது ஏன் கூழாங்கல்லைப் போல இல்லை” என அவர் என்னிடம் சொல்லும்போது அதற்கு பதில் சொல்லத்தெரியவில்லை. ஆனால் அக்கல்லினை அவரிடம் கொடுத்துவிட்டு மட்டும் வந்துவிட்டேன். அதை அவர் புத்தருக்கு அருகில்  வைத்திருப்பார் போல, முதன்முதலில் புத்தருக்கு அமைதி கிட்டியிருக்கும், என்று சிரிக்கையில் அதில் அரசியலும் கலந்திருந்தது.சித்தார்த்தருக்கும் சரி, நாமும் சரி எல்லாவற்றிட்கும் மொழியில் பதில்கூறிவிட முடியும் என்று முயற்சிக்கையில் தான் கலவரப்பட்டுக்கிடக்கிறோம்.

தத்வாக்களை நான் தெரிந்துகொள்ளும் போது தான் அவளையும் தெரிந்துகொண்டிருந்தேன் இருந்தபோதும் அவற்றை அடைவதற்கு முயற்சிக்கும் வினைகள் பயனற்றே போயின. ஆனால் ஒரே ஒரு சாத்தியம் அதுவாக ஆவதுதான்.

ஒரே சமயத்தில் கோடுகளோடு காகிதத்தில் உருவப்படங்களை வரைந்துகொண்டும் அதற்கிணையாக அரூப ஓவியத்தீட்டல்களை செய்துகொண்டிருந்தக் கலைஞன் ஏன் கூழாங்கல் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டும். இத்தனை ஒலியாலும், காற்றாலும் மாசுபட்ட சூழலில் ஒருமித்த மனநிலையில் வேலை செய்யும் ஒருவன் கல் தானே, அதிலும் அவன் கலையைச் செய்பவனாக இருந்தால் அவனே கூழாங்கல் தானே. 



             * Isn't it amazing the Buddha and the pebble are same color and texture? amusing!
             * Stunned to see this... Pebbles are senior to Buddha..
             * Not only by ages... But also by the Zen

- ஜீவ கரிகாலன்

செவ்வாய், 21 மார்ச், 2017

கனவு மெய்படும் கதை - 3

சென்ற பதிவில் தமிழில் இது முதல் முயற்சி என்று சொல்லிவிட்டேன். எந்தவித Claiming அல்லது தலைக்கணத்திலிருந்து சொல்லாமல், ஒன்றை உருவாக்குகின்ற excitementல் இருந்துதான் சொல்லிச்சென்றாலும், அதற்கான கருத்து ஒன்றாக அமேசானில் கிடைக்கின்ற கிராஃபிக் நாவல்கள் குறித்த பட்டியல் ஒன்றினைப் பட்டியலிட்டுக் கருத்திட்டத் தோழமை தான் இந்தப் பகுதி எழுதுவதற்கான காரணம். இப்படி தொடர்ந்து கேள்விகள் எழுப்பியும், விவாதம் நடத்தினால். அந்தப் பக்கம் கிராஃபிக் நாவல் உருவாகும் பொழுது இந்தப் பக்கம் நல்லதொரு supplementary ஒன்றை உருவாக்கிவிடலாம்.


நாங்கள் கொண்டு வரும் முயற்சி, தமிழில் வருகின்ற முதல் மாங்கா வடிவம். மாங்காவைப் புரிந்து கொள்ள கிராஃபிக் நாவலைப் புரிந்து கொள்ள வேண்டும். கிராஃபிக் நாவலைப் புரிந்து கொள்ள அவற்றை மற்ற காமிக்ஸ்களுடன் பிரித்துப் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.
காமிக்ஸ் VS கிராபிக் நாவல்
ட்ராட்ஸ்கி மருது, கிங் விஷ்வா போன்றோர்கள் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு இடங்களில் இதற்கான விளக்கங்கள் அளித்து வந்திருக்கின்றனர். இருந்தாலும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

காமிக்ஸ் எனும் சித்திரக்கதைகள் – பெரும்பாலும் ஒரு கதையை வரைவது என்கிற நோக்கத்தில் அல்ல, ஒரு கதாப்பாத்திரத்திற்கான கதையை என்று எடுத்துக் கொள்ளலாம். பேட்மேன், ஸ்பைடர்மேன், மாயாவி, மாடஸ்டி, இரும்புக்கை மாயாவி, டெக்ஸ்வில்லர், லக்கி லுக், மாண்ட்ரேக், சிக்பில் இப்படி யாரோ ஒரு கதாப்பாத்திரத்தின் சாகசங்களை அத்தியாயங்களாக பகுதிகளாகப் பிரித்துச் சொல்வது என்பது காமிக்ஸ் ஆகும்.
கிராஃபிக் நாவல் என்பது கதாப்பாத்திரத்தை முன்னிறுத்தாமல் கதையை முன்னிறுத்தி வரைவது. இது ஒரு நாவலென்றால் என்னவென்று நினைக்கிறோமோ அதையே கிராஃபிக் பண்ணுவது என்று புரிந்துகொள்ளலாம். வேறு எந்த வகையிலும் எடுத்துக்கொள்ள முடியாத வடிவங்களை நாவலென்று சொல்லலாம் என்று ஒரு சொலவடை இருக்கிறது இலக்கியத்தில். இதை நாவலின் இலகுத்தன்மைக்கு உதாரணமாகவும் சொல்லலாம். கிராஃபிக் நாவலின் சிறப்புத்தன்மை என்றும் இதையே சொல்லலாம். காமிக்ஸ் தனக்கென வைத்த எல்லைகளை தகர்த்தெறியும் போது தனக்குத் தானே சூட்டிய பெயராக கிராஃபிக் நாவலைச் சொல்லலாம்.
அதாவது கிராஃபிக் நாவலால் ஒரு எழுத்துவடிவம் சந்திக்கக் கூடிய அனைத்துச் சவால்களையும் சந்திக்க முடியும்.

அநேகமாக இந்த ஸ்டேட்மண்ட்டில் சிக்கல்களோ, சர்ச்சைகளோ எழலாம் என்பதால் இதை நானே அடிக்கோடிட்டு வைக்கிறேன். இதை விவாதிக்கும் முன் இன்னும் சில வித்தியாசங்கள்.
மாங்கா கதைகள்

நானும் கணபதியும் சென்ற பதிவிற்கு வந்த, அந்த சில கருத்துகளுக்கு பதிலைச் சொல்லிப் பார்க்க மேற்சொன்ன வித்தியாசமே கிடைத்தது. ஆனால் அந்த வித்தியாசம் தான் இணையத்தில் தேடினாலோ எந்த விவாத்தில் தேடினாலோ கிடைக்கக் கூடிய பதில். ஆனால் நேரடியாக ஒரு கிராஃபிக் நாவல் உருவாக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டு வரும் எங்களால் வேறு ஒருத் தகவலையும் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

அது கதாசிரியருக்கும், ஓவியருக்குமானத் தொடர்பு.

காமிக்ஸில் கதாசிரியர் என்பவர், ஓவியர் என்பவர் இருவருமே பெரும்பாலும் commissioned வேலையாட்களாக தனித்தனியாகவே வேலை செய்வார்கள். ஒரு காமிக்ஸ் தொடர் முழுக்க ஒரே ஓவியர் தான் வரைய வேண்டும் என்றில்லை, அவர்கள் வேறுவேறாக இருக்கலாம்.

உதாரணம் கதாசிரியர் போனாலியும் (Gian Luigi Bonelli), ஓவியர் கலேப்பினியும்(Aurelio Galleppini) சேர்ந்து உருவாக்கியக் கதாப்பாத்திரம் இத்தாலிய காமிக்ஸ் உலகின் ஹீரோக்களில் தமிழ்நாட்டில் ரசிகர்மன்றம் வைத்திருக்கும் திருவளர்.டெக்ஸ்வில்லர் அவர்களுக்கு கதாசிரியர்களாக 11 நபர்களும், இல்லஸ்ட்ரேட்டர்களாக 39 ஓவியர்களும் இதுவரைப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் கிராஃபிக் நாவலுக்காக இப்படி நடைபெற வாய்ப்பில்லை உதாரணமாக விகடனில் வந்திருந்த சந்திரஹாசன் நாவலைச் சொல்லலாம் (சு வெங்கடேசன் கதையும், க.பாலசண்முகம் ஓவியமும்).
மாங்கா ஜப்பானிய வடிவம், மாங்காவின் தந்தை என அழைக்கப்படும் ஜப்பானிய ஓவியர் ஹோகுசாயின் காலக்கட்டம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றால், ஜப்பானிய சித்திரக்கதைகள் என்பது ஒரு மரபாகப் பார்க்கப்படுகிறது. அந்த காலத்தில் கிடைக்கப்பெற்ற எழுதுப்பொருட்கள் கொண்டு மினிமலிசமாக ஆனால் மிகவும் ஆழமானதாக உருவாக்கப்பட்ட ஓவிய வடிவங்களே மாங்காவாகக் கருதப்படும். நமது முயற்சி கிட்டத்தட்ட அதைப் போன்ற ஒன்றே, கிராஃபிக் நாவலென்று முத்து திரைப்படத்தின் ஸ்டோரி போர்டை அப்படியே அச்சில் கொண்டுவந்தது போலன்று.
சந்திரஹாசம் வெளிவந்தபோது அது எதிர்கொண்ட விமர்சனத்தை நினைத்துப் பார்த்தேன். உண்மையில் அப்படியானதொரு புத்தகம் மாங்கா போன்று எளிமையாக வந்திருந்தால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அந்த முயற்சி உருவாக்கிய தடத்தில் தொடர்ந்து நிறைய ஆக்கங்கள் உருவாகித் தொடர்ந்திருக்கும். ஒரு நிறுவனம் மேற்கொண்ட நல்ல முயற்சியாக அதைக் கவனத்தில் கொள்ளலாம் அவ்வளவு தான்.

இந்த நாவலுக்கான கதை ஒரு யதார்த்தப்பாணியிலான ஒரு புனைவு. ஆனால் கிராஃபிக் நாவலுக்கான சவாலாக சிலவற்றை அது ஓவியருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் தன்மையும் கொண்டிருக்கிறது. உதாரணமாக “அது” என்கிற வார்த்தைப் பிரயோகம், எனது ஃபேஸ்புக் பதிவுகளிலேயே அது என்கிற பதிவுகளைப் பார்த்து எரிச்சல்கொண்டோர் பலரும் சிலாகித்த சிலரும் உண்டு. அது என்பது பல நேரங்களில் காதலாகவே எழுதப்பட்டாலும், அது ஆரம்பத்தில் ஒரு நோய்க்கு பயந்தே எழுதப்பட்டது, நோயினால் வந்த மரணபயம் அதுவானது, பின்னர் மரணபயத்தால் உருவான அல்லது அபயமளித்த ஆன்மீகம், எல்லாவற்றிட்கும் பின்னர் எஞ்சியிருக்கின்ற காமம் என அதுவாக எல்லாவற்றையும் சொல்ல முடிந்தது. இந்தக் கதை கூட “அது ஒரு கனவு மட்டும்” என்கிற தலைப்பு,, அது ஒரு பாதை மட்டும், அது ஒரு ஒளி மட்டும் என்கிற கதைகளைத் தொடர்ந்து எழுதப்பட்டிருந்த கதை தான். இப்படியான ஒரு வார்த்தைப் பிரயோகம் வருகின்ற இடங்களை, கணபதி எப்படி எதிர்கொள்கிறார். இந்த சவாலை மேற்கொள்ளும், கையாள்கின்ற இடமளிக்கும் வடிவம் தான் கிராஃபிக் நாவல், இதன் ஆன்மீக வடிவரீதியிலான கனெக்டிவிட்டி தான் ஜப்பானிய மாங்காவுடனானது.
புத்தா - கிராஃபிக் நாவல்
தொகுப்பிலிருந்து
புத்தா - கிராஃபிக் நாவல்
தொகுப்பிலிருந்து
மற்றபடி இது சந்தைக்கு வரும்வரை முழுக்க முழுக்க தன்னை அறிந்து கொண்டிருக்கின்ற ஒரு கலைஞனது யோகப்பயிற்சி என்றே நான் புரிந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் புரிய வேண்டுமென்றால் – ஒரு கூழாங்கல்லினை எடுத்துத் தடவிப் பாருங்கள்.

-(நன்றி : யாவரும்.காம்)

ஜீவ கரிகாலன்

புதன், 15 மார்ச், 2017

கனவு மெய்ப்படும் கதை - 2

SOME PAINTERS TRANSFORM THE SUN INTO A YELLOW SPOT, OTHERS TRANSFORM A YELLOW SPOT INTO THE SUN – PICASSO

தன் வாழ்நாள் முழுதும் ஒரே பாதையில் சீராக சென்றுக்கொண்டிருப்பவன் சாதாரணமாக பயணிப்பதாகக் கூட எடுத்துக்கொள்ளமுடியாது. மாற்றங்களை சூழலை தனது கலையில் தகவமைத்து வந்து கொண்டிருப்பவனது பயணமே நல்ல ஆக்கங்களைத் தரும்.

***
கிராஃபிக் நாவல் தமிழில் இதற்கு முன்னர் வந்திருக்கிறதா என்று பார்த்தால், சில குறிப்பிடத்தகுந்த கிராஃபிக் நாவல்கள் மொழிபெயர்ப்புக் கதைகளாக வந்துள்ளன பெரும்பாலும் அவை லயன்,முத்துவில் வெளிவரும் புகழ்பெற்றக் கதைகள் தான். முக்கியமான ஒரு படைப்பாக மர்ஜானோ சத்ரபியின் “ஈரான்” எனும் ’ஒரு குழந்தைப் பருவத்தின் கதை’யாக மொழிபெயர்க்கப்பட்டு விடியல் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது என்று கவிஞர் பழனிவேள். முன்னா எனும் காஷ்மீரிய வாழ்க்கையை குறியீட்டுச் சித்திரங்களோடு சித்தரித்த ஒரு கிராஃபிக் நாவலை கணபதி என்னிடம் காட்டுவதற்கு முன்னரே நாங்கள் வேலைகளைத் தொடங்கியிருந்தோம். இது முதன்முறையாக நேரடித் தமிழ் கிராஃபிக் நாவல் என்று சொல்லலாம், மாங்கா போன்றே எளிமையாகவும் சற்றே ஆழமாகவும் சித்திரங்களை உருவாக்கி வருகிறார் கணபதி. இதில் மிக முக்கியமாக நான் கருதுவது, கிராஃபிக் நாவல் உருவாகிவரும் கதையினை முடிந்தமட்டும் பதிவு செய்வது அவசியமாகப்படுகிறது...

“If you haven’t found it yet, keep looking” – Steve jobs
இந்த இடத்தில் ஸ்டீவ் ஜாப்ஸைச் சொல்வது பொருத்தமாக இருக்கிறது, ’அது ஒரு கனவு’ இதனோடு தொடர்பு கொண்டது தான். ஆனால் கணபதியின் வாழ்க்கையையும் அது சொல்வதாகவே நான் உணர்கிறேன்.
கணபதியின் வாழ்க்கையை, அவர் தேடலை, தாகத்தை அன்று அவர் வீட்டிற்கு சென்றிருந்த போது தெரிந்துகொள்ளும் வாய்ப்புகிட்டியது. வழக்கமான அவர் ஸ்டூடியோ முற்றிலுமாக மாறியிருந்தது. கீழே பாய் விரித்து தரையில் அமர்ந்து வரைந்து கொண்டிருந்தார். ஒரு ஜப்பானிய மாங்கா ஓவியர் போல அந்த சூழல் அவரை Oriental கலைஞனாக orientation செய்து கொண்டிருந்தது..

அவர் விரித்திருந்த பாயில் அமர்வதற்கு என் தொப்பையோடு சற்று சூமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே அவரது Stationeryகளைப் பார்த்தவுடன் கிடைத்த உற்சாகம் தான். ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன வார்த்தைகள்.

டிஜிட்டல் யுகத்திற்கு வந்த பின்னர், பேனா தேவையில்லை என்றாலும். கணிணி உபயோகிப்பது தான் உற்பத்திக்கான அதிக சலுகைகளை நேரம், அலங்காரம் உள்ளிட்ட சமாச்சாரங்களை வழங்குகிறது என்றாலும், கையினால் வரையும் பொழுது கிடைக்கின்ற உணர்வு அலாதி. ஏற்கனவே சொன்னது போல FUN அல்லது joy என்கிற வார்த்தைகளை இங்கே பயன்படுத்துகிறேன் என்றால், அதைவிட சிறந்த வார்த்தைகள் இதை justify செய்துவிட முடியாது. பல வருடங்களாக அவரது கனவில் இருந்த ஒரு பயணத்தை திடீரென்று ஒருநாள் தொடங்கும்போது கிடைப்பது ஆனந்தமின்று வேறென்ன இருக்க முடியும், ஆனந்தம் தெவிட்டாத ஒன்றாக ஒவ்வொரு ஃப்ரேம்களை அவர் வரையும்போது கதையினை காட்சிகளாக மாற்றும் போதும் அது தொடர்ந்துவருகிறது என்றால் அங்கே fun இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்.


அவர் வரைவதற்காக வைத்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன் அத்தனையும் கிட்டதட்ட பத்து ஆண்டுகளாக இந்தப் பொருட்களை சேகரித்து வருவதாகச் சொன்னார், Orthodox fountain pen, கணிசமான எண்ணிக்கையில் பேனா நிப்புகள், கருப்பு மை புட்டி என அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தேன். அந்த பேனா மரத்தால் செய்யப்பட்ட பழமையான பேனா குறைந்தது அந்தப் பேனா தயாரிக்கப்பட்டு 150 வருடங்களாகியிருக்கும், ஒவ்வொரு நிப்புமே அப்படியான பழமையான ஒன்றே. ஒவ்வொரு நிப்பாக எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன், எத்தனை ஆண்டுகள் ஆகியும் கொஞ்சம் கூட துருப்பிடிக்காத, உறுதியான நிப்புகள் தயாரிக்கப்பட உற்பத்திக்கான அடிப்படைத்தன்மை எத்தனை தரமானதாக இருந்திருக்கிறது என்று என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது. இந்த பழமையான பேனாவில் நிப் எப்படி செயல்படுகிறது, அதன் Flexibility ஆகியவற்றை ஆர்வமாக என்னிடம் விளக்கினார். எதற்காக நாம் Use and Throw என்கிற கான்செப்டிற்கு மாறினோம் என்கிற கேள்விக்கு வேறு ஒரு ஆய்வு செய்ய வேண்டும். அங்கிருந்த மை புட்டியை எடுத்துப் பார்க்கச்சொன்னார். அந்த மைபுட்டி வாங்கிப் பல வருடங்கள் இருக்கும் அதில் “specially made for manga drawing” என்கிற பொருள் வரும்படியான வாசகம் இருந்ததைக் காணும் போதே ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது ஞாபகத்தில் வந்தது.








ஓவியங்கள் குறித்த சில கட்டுரைகளுக்காக ART VS WORK OF ART, ART & WORK OF ART என வெவ்வேறு கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். ஆனால் ஒன்றை அசலாக உருவாக்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் தான் அதன் உண்மையான சப்தங்கள் எழுந்து அதனை நிகழ்த்திக் காண்பிக்கின்றன. உண்மையில் கணபதி செய்து கொண்டிருந்த கிராஃபிக் நாவலுக்கான அடிப்படை செயல்பாடுகள், மேற்சொன்ன விவாதங்களின் நிகழ்த்துகலையாக அரங்கேறுவதாக உணர முடிந்தது. உண்மையில் அந்த பேனல்களில் இருக்கின்ற சில குறிப்பிட்ட ஃப்ரேம்களை அவர் தனி ஓவியமாகவும் வரையலாம், மிக முக்கியமான படைப்புகள் அவை.

இன்னும் The Story of Tamil Manga நீளும் என்றே நம்புகிறேன்…

-ஜீவ கரிகாலன்