வெள்ளி, 27 டிசம்பர், 2013

கிராஃபிக் நாவல் vs காமிக்ஸ் - பஜ்ஜி-சொஜ்ஜி - 52

கிராஃபிக் நாவல் vs காமிக்ஸ் 


கிராஃபிக் நாவலுக்கும்,காமிக்ஸிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது தெரியுமா? "என்னடா இன்னும் காமிக்ஸ் வாசிச்சுக்கிட்டு இருக்கிற?" என்று என்னைக் கேட்கும் நண்பர்களுக்குத் தெரியாது தமிழ்நாட்டின் காமிக்ஸ் சாம்ராஜ்யம் பற்றி. விக்கிப்பீடியாவில் சென்று டெக்ஸ்வில்லர் என்று தேடினால் அந்த ஸ்பானிய கௌபாய்க்கு தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்கள் பற்றிய தகவல் இருக்கும். பெரிய ஹீரோக்களான டெக்ஸ், லக்கிலுக்,ஸ்பைடர், இரும்புக்கை மாயாவி மட்டுமின்றி காமிக்ஸ் உலகில் பெரிதாக சோபிக்க முடியாத மாயஜால மன்னன் மான்ட்ரேக், கார்த், ப்ளாஸ்மா போன்றவர்களுக்கும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் ரசிகர்கள். ஆனால், 25-15 வருடங்களுக்கு முன்பு யாரெல்லாம் வாசித்து வந்தார்களோ, இன்றும் அவர்கள் தான்  தமிழ் காமிக்ஸ் வாசிக்கும் பெரும்பான்மையானவர்கள்.

சீரியஸ் Literature இல் இல்லாத மரியாதை இதுபோனற படக்கதை Illustratorகளுக்கு இருப்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால் மட்டுமே, காமிக்ஸ் ரசிகர்களின் taste என்னவென்று உங்களுக்குத் தெரியும். காரணம் இந்த illustratorகளை மதிக்கக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் விஜயனின் முயற்சிகள் தான்,  Aurelio Galleppini, Jesus Blasco போன்ற Illustratorகள் பற்றி காலச்சுவடு எனக்கு அறிமுகமாகும் முன்னரே தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் இன்று வரை illustratorகளை தூக்கி வைத்துக் கொண்டாடும் மரபினை சிறுபத்திரிக்கைகளில் பார்க்கவில்லை, அதில் விஜயன் மிகக் கவனமாய் செயல்பட்டிருக்கிறார்.

 கிராஃபிக் நாவல் என்றால் அட்டைப்படம், வண்ணங்கள், பக்கங்கள் என எல்லாவற்றிலும் உங்களுக்கு வித்தியாசம் தெரியும், ஆனால் அது கிராஃபிக்ஸ் நாவலுக்கான விளக்கமல்ல. கிராஃபிக்ஸ் நாவலும் காமிக்ஸ் இதழில் வருவது தான், ஆனால் மற்ற தொடர்களைப் போன்று ஒரு கதாநாயகரின் சாகசம் என்றில்லாமல் ஒரு தனிக் கதை மட்டும் காமிக்ஸில் வருவதை கிராஃபிக் நாவல் என்று தெரிந்து கொள்ளலாம். அது காமிக்ஸ் எனும் வடிவத்திற்காக எழுதப்படாமல், எழுதி வைத்திருந்த நாவலை கிராஃபிக்ஸ் ஃபார்மில் கொண்டு வருவது என்று எளிதாகச் சொல்லலாம். சில பப்ளிகேஷன்ஸ் தனிப் பிரதியாய் ஒரு கிராஃபிக்ஸ் நாவலை உருவாக்கும், அதே சமயம் இவை தொடராகவும் வரும். முதன்முதலில் அமெரிக்காவில் 1960லிருந்தே புளங்கப்பட்ட வார்த்தை தான் கிராஃபிக்ஸ் நாவல் - நமக்கு இப்போது தான் அறிமுகமாகிறது.


சமீபத்தில் நான் வாசித்த ’சன்ஷைன்’ கிராஃபிக்‌ஸ் நாவலான  -”சிப்பாயின் சுவடுகள்” வாசித்த பின், கிராஃபிக்ஸ் நாவலின் scope பற்றி உணர்ந்தேன். கதை ஆரம்பத்திலிருந்து, முடியும் வரை, தொடர்ச்சியாக வாசித்து வந்த காமிக்ஸ்களைப் போன்றில்லாமல் அதிரடி தாக்குதல்கள், கொடூர முகம் கொண்ட வில்லன்கள், பஞ்ச் வசனங்கள் என எதுவில்லாமல் ஒர் சோகப் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் கதைக்களமது. 70களில் இருந்த ரயில் பாதை செல்லும் தாய்லாந்தின் நெல் வயல்கள், மறு ஆக்கம் பெற்ற ஜெர்மனியின் பெர்லின் என காட்டும் Landscapeகளிலிருந்து. கதையில் வரும் FLASHBACK காட்சிகளிலிருந்து, கதை நடக்கும் காலத்திற்கு பயணிக்கும் காட்சிகளின் கிராஃபிக் யுக்திகளை உணரும் பொழுது, உங்களுக்கு ஒரு திரைப்படத்தின் அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி.

 தாய்லாந்து வயல் வெளி  

  இந்த பீரியட் நாவல் வழியாக கிடைக்கப்பெறும் சில செய்திகள், நமக்குத் தெரியாத வரலாறு தான். ஆனாலும் ஒரு நாட்டுப் புரட்சியில் மற்றொரு நாடு தலையிடுவதும், அக்கிரமம் செய்வதும், அதே அணியில் ஒரு துரோகி - இன்னொரு நாட்டின் தலைவன் ஆக்கப்படுவதும். இனப்படுகொலை, அத்துமீறல்கள், ஊழல் என்பனவற்றை இயல்பாகத் துப்பறியும் ஒரு ரிப்போர்ட்டரின் கதையாக உருவாக்கப் பட்டிருக்கின்றது. 1963 வியன்னா ஒப்பந்தம் போன்று  உலக விஷயங்களைப் பேசும் இந்நாவலில் சுவாரஸ்யம் என்பது வேறு ஒரு தனிச்சுவை .

இது போன்ற கதைகள் தொடர்ந்து வந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் நிகழும் அது - மீண்டும் தேவனின் கதைகளோ, சுஜாதா, அ.மி போன்றோரின் கதைகள், இது போன்ற கிராஃபிக் நாவலாக வரும் சாத்தியம் உருவாகலாம் அல்லது சில பப்ளிஷர்கள் test drive பண்ணுவார்கள்.



-ஜீவ.கரிகாலன்





திங்கள், 23 டிசம்பர், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி - 51, கொற்றவையின் காலம்

கொற்றவையின் காலம்


முதல் பகுதியைப் பார்க்க

மாமல்லை அர்ஜூனன் தபசு வழியாக மேலேறினால் பழைய கலங்கரை விளக்கத்திற்கு கீழே இருக்கும் குகைக் கோயிலில் தான் மகிஷாசுரமர்த்தினியின் போர் சிற்பக் காட்சித் தொகுதி அமைந்திருக்கிறது. அநேகமாக அவர்கள் ஆட்சியில் கடைசியாக செதுக்கப்பட்ட தொகுதி என்று ஒரு வழிக்காட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன், அது எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை.

மகிஷாசுரனை எதிர்த்து கொற்றவை செய்யும் உக்கிரமான போர்க் காட்சி புடைப்புச் சிற்பமாக்கப் பட்டுள்ளது. இந்தியா முழுதும் பல கோயில்களில் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் மஹிஷாசுரமர்தினியின் சிற்பமும், போர் காட்சியும் படைக்கப்பட்டுள்ளது, வராக சிற்பமத் தொகுதியை நாம் பார்த்தது போலவே மற்ற படைப்புகளில் இருந்து மாமல்லையின் படைப்புகள் எவ்வளவு தூரம் வித்தியாசமாய் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் இந்த சிற்பங்கள் கடலில் இருந்து வீசும் உப்புக் காற்றினாலும், தொழிற்சாலை மற்றும் வாகனங்களின் மாசினாலும் தன் பொலிவை இழந்து கொண்டே இருக்கின்றன என்பதும் வருத்தப் படவைக்கும் விஷயம்.

இந்த போர் காட்சி சிற்பங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஓவியர் சந்ருவின் ஓவியம் எனும் மொழி, நா.பாலுச்சாமியின் அர்ஜூனன் தபசு போன்ற நூல்கள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றது, இவற்றோடு இணையம் வாயிலாக கொற்றவையின் பல்வேறு சிற்பங்களைப் பார்த்து வரலாம். இணையத்தில் கிடைக்கும் பல்வேறு கொற்றவை குறித்த சிற்பங்களில் மகிஷாசுரனின் சிரத்தை வெட்டிய பின்பு இருக்கும் காட்சி தான் உருவாக்கப் பட்டுள்ளது. மாமல்லையின் சிற்பங்கள் தான் அந்தப் போரின் உச்ச கட்டத்தை காட்சிப் படுத்தியுள்ளது.

மகிஷாசுரமர்தினி சிற்பத் தொகுதி, மாமல்லை


அர்ஜூனன் தபசு எனும் நூலில் இந்த போர் காட்சியானது நாகர்ஜுனகொண்டாவில் உள்ள ஒரு போர்க் காட்சியோடு ஒப்பிடப்பட்டு, இரண்டு போர் காட்சிகளுக்கும் இடையேயான ஒற்றுமையை ஆசிரியர் கூறுகிறார் (பக்கம்:395), இது ஒரு முக்கியமான ஒப்பிடல். இது பல்லவ மன்னர்களின் கலைத் தேடல்களைப் பற்றிய ஒரு பிரக்ஞையை நம் மனதில் உருவாக்கிவிடுகிறது. இந்த தேடலைச் சாதாரணமான தேடல் என்று எண்ணிவிட முடியாது, ஏனென்றால் அந்தத் தேடலின் காலம் முழுமை பெற ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்திருந்தது என்று சொல்லலாம். இதற்கு ஆதாரமாகத் தான் கிட்டதட்ட 200 (590லிருந்து -730 வரை)ஆண்டுகளாக , அதாவது ஏழு தலைமுறைகளாக ஒரு கலை அதன் முழு வேகத்தில் இயங்க வேண்டுமட்டும் தேவைப்படும் ஒரு அதியுன்னத லட்சியத்தை அவர்கள் மனதில் வைத்திருந்தனர். மன்னர்களும் சிற்பத்துறையில் வல்லுனர்களாகவே இருந்துள்ளனர்கள் என்றும் தெரிந்து கொள்ள இடம் வகுக்கிறது.  ஏனென்றால் இங்கிருக்கும் முக்கிய சிற்பப் படைப்புகள் 02ம் நூற்றாண்டு வாக்கில் உருவான மாபெரும் கலைப் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு( நாகர்ஜுனகோண்டா, மகேந்திரபுரி, அஜந்தா- எல்லோரா) ஒரு நாட்டினையே கலைவளமிக்க நாடாக உருவாக்கி வந்திருந்தனர் இந்த பல்லவ மன்னர்கள். சிற்பங்கள், ஓவியங்கள், ஆடைகள் நெசவு என பல்லவர்களின் தேசம் சிறப்புற்றிருந்தது. இந்த தாகம் தான் அங்கோர்வாட் எனும் உலகிலேயே மிகப்பிரம்மாண்டமான படைப்பின் அடித்தளம்.

இந்த சிற்பத் தொகுதியில் நாம் பார்க்கும் காட்சி போரின் உச்சக்கட்டம்; மகிடன் தோல்வி அடைந்து கொண்டிருக்கும் காட்சி உடனிருக்கும் அசுரர்கள் யாவரும் தோல்வி முகத்தோடு இருக்க, மகிடன் மட்டும் அடுத்தடுத்த தந்திரங்களை கையாண்டு கொற்றவையோடு போர் புரியும் பாவனையுடன் இருக்கிறான். தன் இடக் காலை சிறிது மடக்கி, வலக்காலை சாய்வாக ஊன்றி ஒரு கையில் ஆயுதத்தைத் தூக்கியபடியும் மற்றொரு கையால் அதைத் தாங்கியபடியும் நிற்கின்றான். புராணத்தின் படி பல உருவங்கள் மாறி உருப்பெற்று போர் புரிகின்றான்.  எல்லா நிலைகளிலும் உக்கிரமான  போர் புரியும் கொற்றவை மற்றும் அவளது கணங்கள் சூழந்த படை வெற்றி பெற்று வருகிறது. இறுதியில் மகிடனும் கொற்றவையும் நேருக்கு நேர் போர் புரிகிறார்கள்.

சிற்பக் காட்சியில் நீங்கள் பாருங்கள் கொற்றவையின் படையைச் சேர்ந்த கணங்கள் முகத்தில் இறுதி வெற்றியை நோக்கி முன்னேறும் பரவசம் தெரியும், கொற்றவையின் முக்கிய படை வீரராக முன்னே நின்று போர் செய்யும் மற்றொரு பெண் கையில் வாளினைச் சுழற்றியபடி கீழே அமர்ந்து எழும் நிலையிலும், ஒரு அசுரன் தேவியின் தாக்குதலில் உயிரிழந்து கீழே விழும் காட்சியும் நம்மை ஒரு நிமிடம் போர்க் காட்சியை நம்மை பயமுறுத்தத் தான் செய்கிறது என்பது உண்மை, மகிடனின் பின்புறம் நிற்கும் சில அசுரர்கள் புற முதுகுக் காட்டி போகிறார்கள். மகிடனின் சிற்பம் அழகுணர்வையும் (Aesthetic) தருகிறது என்று சொன்னால் அது மிகையில்லை. ஏனென்றால் ஒரு தாக்குதலில் இருந்து தந்திரத்தால் தப்பித்து அடுத்த தாக்குதலைத் தொடங்குவதற்கு எத்தனிப்பது போல மகிடனின் சிலை அமைந்திருப்பது ஒரு சிற்பத் தொகுதி மூலமாக கடத்தப்படும் அற்புத உணர்வு, ANTI-HEROக்களின் பலம் தான் HEROக்களின் திறனை வெளிக்கொணரப் பயன்படுகிறது என்பதால் தானோ மகிடனின் சிற்பம் அத்தனை கலையுணர்வோடு நம்மைக் கவர்கிறது??

கொற்றவை போர் புரியும் காட்சி, தன் நான்கு ஜோடி கைகளில் ஒரு கை வில்லினை ஏந்திக் கொண்டும் மற்றொரு கை அடுத்த அம்பை எடுப்பதற்கும் தயாராக இருக்க, மற்ற கரங்களிலெல்லாம் பல ஆயுதங்கள் இருக்கின்றன. சிவனிடமிருந்து பெற்ற சூலம், விஷ்னுவிடம் பெற்றிருந்த சக்கரம், பிரம்மனிடம் பெற்றிருந்த வில் அம்பு , இவற்றுடன் கதை, வட்டு, கேடயம், சுருக்குக் கயிறு, சங்கு என இருக்கின்றது. கொற்றவை மற்றும் போர் புரியும் மற்ற யாவரின் கைகளிலிம் உலோகங்களால் ஆன ஆயுதம் என்று சொல்லப் போனால் வாளாக மட்டும் இருக்கக் கூடும் மற்ற ஆயுதங்கள் யாவும் உலோகமின்றி தயாரிக்கக் கூடியதே அவை கற்களாலும், மரத்தினாலும், யானைத் தந்தத்தினாலும், கடற்பாறைகள்/ஓடுகள்/விலங்கினங்களின் எலும்பினைக் கொண்டோ தயாரிக்கப் படும் (புராணத்தின் படி இந்திரனின் ஆயுதமான வஜ்ரமும் ஒரு முனிவரின் தியாகத்தால் அவரது முதுகெலும்பில் இருந்து எடுக்கப்பட்டது தான்). அதே சமயம் வாள்களும் கற்களினால் வடிக்கப் பட்டிருக்கின்றன, அவை வரலாற்றிட்கு முந்தைய காலக் கட்டத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

இந்த சிற்பக் காட்சியில் பயன்படுத்தப் பட்டிருக்கும் மொத்த ஆயுதங்களையும் கணக்கில் கொண்டால் இந்தப் புராணம் உலோகக் காலத்திற்கு (Metal Age)முந்தைய காலக்கட்டத்தையே குறிக்கின்றது என்பது இந்த மாமல்லையின் சிற்பக்காட்சி வாயிலாகவும், அதனையொட்டி வாசித்த சில புத்தகங்கள் மட்டும், இணைய வாசிப்பினையும் வைத்து வரும் முடிவு.. எதற்காக நான் இந்த முடிவுக்கு வர வேண்டும்?? என்ன அவசியம் இருக்கிறது ? என்று நீங்கள் கேட்டால் - நான் மீண்டும் சொல்லப் போவது  - புராணம் எனும் கருவியில் புதைத்து வைத்து தலைமுறை, தலைமுறைகளில் ஒளிந்திருக்கும் நமது வரலாறுகள், இன்றைய காலத்தின் தேவை என்பதை நான் உணர்வதாலேயே. ஆக கொற்றவையின் காலமாக நாம் வழிபடுவது 10000 ஆண்டுகள் பழமையானது என்று சொல்வதற்கு இடமிருக்கிறது

ஆம், ஆங்கிலத்தில் Syncretism என்று ஒரு சொல் உள்ளது, அது பல்மத தன்மைக் கொண்ட ஒரு பொருளையோ, தத்துவத்தையோ அல்லது சடங்கினையோ குறிக்கும் தன்மை. இந்தியத் துணைக் கண்டம் போன்ற  பெரும் நிலப்பரப்பு பல்வேறு வகையான வழிபாடுகள் மற்றும் சடங்குகளையும், மத நடவடிக்கைகளாலும் பல்வேறு மாறுதல்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டே உருவானது தான் என்பதை பல வரலாற்றாய்வாளர்கள் கருதுவதற்கு இந்த SYNCRETISM எனும் பரிமாணம் தான் அடிப்படை. இந்த அடிப்படை தான் மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு நான்கு திசைகளில் இருக்கும் பல்வேறு வித்தியாசங்களுக்கும் மத்தியிலும் ஒரு மையப் புள்ளியை கண்டுணர வகை செய்கிறது. இதற்கு கொற்றவை வழிபாடும் ஒரு எடுத்துக் காட்டு என்று சொல்ல இடமிருக்கிறது. ஆனால் இந்த வழிபாடு வாயிலாகக் கிடைக்கும் ஒரு உண்மை தமிழர்களின் தொன்மையை இந்த மண்ணில் மிக முக்கியமான ஆதாரத்தோடு நிரூபிக்கிறது அதை அடுத்தப் பகுதியில் காண்போம்...



9ம் நூற்றாண்டு சிற்பம் - ஜாவா தீவு
இந்தோனேஷியா
ப்ரூக்லின் அருங்காட்சியகம் - 18ம் நூற்றாண்டு ஓவியம்
image courtesy: Wikipedia

நன்றி
ஜீவ.கரிகாலன்

வியாழன், 19 டிசம்பர், 2013

பஜ்ஜி - சொஜ்ஜி 50 - சுவாரஸ்யம் எனும் அஜினா மோட்டோ



இணையத்தில் தொடர்ந்து எழுதுவது என்பது சாதாரணமான விசயம் இல்லை, தள்ளுவண்டி பவன்களின் வியாபரத்தைப் பார்த்து பொறாமைப் படும் மனநிலையை சற்று ஆராய்ந்து பார்த்தீர்களாயின், நான்கு அல்லது ஐந்து மணி நேரத்தில் வியாபாரம் முடித்து 2000-3000 வரை கையில் கொண்டு போகும் ஒரு திருவண்ணாமலை பிரஜையோ, வடநாட்டு இளைஞனோ நம் கண்களில் ஆச்சரியமாகப் படுவதுண்டு. ஆனால் அவன் கார்ப்பரேஷன், போலீஸ் மாமுல்( அதிலும் தின வசூல் மற்றும் மாதச் சந்தா), ஏறி இறங்கும் காய்கறி விலையில். மழை, கார்த்திகை, புரட்டாசி மாத விரதக் காலங்கள் போன்ற இடர்களையும் தாண்டி வீட்டிற்குப் போனதும் உறங்குபவனா?? அடுத்த நாளுக்கு தேவையானவற்றை வாங்கி வைப்பது, ஊறல் போடுவது, காய்கள் வெட்டுவது என்ற உற்பத்தி சார்ந்த வேலைகளும் அவனுக்கு 08 மணி நேரம் இருக்கும். உற்பத்தி, பண்டங்களை சேல்ஸ் பாயிண்ட்டிற்கு அனுப்பும் தளவாட வேலைகள் என 16 மணி நேரமாவது உழைக்கிறான் என்பதை நாம் உணர்வது கிடையாது.

தினசரி ப்ளாக் எழுதும் என் நண்பர்களையும், சில வலைப்பதிவர்களையும் பார்க்கும் பொழுது இன்னும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் அன்றைய சமாச்சாரங்களை பிடிப்பதைக் காட்டிலும் கஷ்டமான விஷயம் இரண்டு இருக்கிறது.

முதலாவது - கிடைக்கும் மேட்டரை, எப்படி முலாம் பூசி, வெங்காயம் தூவி , சாஸ் வைத்து என்று ஏதோ ஒரு வண்ணத்தோடு கலந்து கொடுக்கும் ஓபனிங் வரிகளைத் தேர்ந்தெடுப்பது தான் (அதாவது எங்கிருந்து தொடங்குவது என்று). தொடர்ந்து எழுதலில் மட்டுமே இந்த வடிவம் அவர்களுக்கு எளிதாகக் கைகூடும். பெரும்பாலான வாசகர்கள் அலுவலகத்தில் Alt + Tab கீகளில் கை வைத்துக் கொண்டே தான் வாசிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருப்பதால், சொல்ல வேண்டிய மேட்டரில் அதிகப்பட்ச இன்ட்ரஸ்டிங் ஸ்பாட்-ஐ நாடி பிடித்துக் கண்டுபிடித்து எழுத ஆரம்பிக்கிறார்கள். இது தொடர்ந்து எழுதும் பளாகருக்கு சாதாரன(ண)மாகி விடுகிறது.

இரண்டாவது - இது மிக முக்கியமானது அவர்கள் குடும்பத்தை சமாளிப்பது,    “ இராப்பாடி மாதிரி லொட்டு லோட்டுன்னு தட்டுறான்” என்பன போன்ற விமர்சனங்களை எல்லாம் கடந்து சென்று நிற்பது, வா.மணிகண்டன் போன்று அடிக்கடி பைக்ல விழுந்து எந்திரிப்பவர்களுக்கு வீட்டில் இரவு விழிப்பதற்கான எதிர்ப்பை சமாளிப்பது எத்தனைக் கடினம்??

மூன்றாவது  -


அதான் முதலிலேயே இரண்டு காரணங்கள் என்று தானே சொன்னேன்.. மூன்றாவது என்னவாக இருந்தாலும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, ஏனென்றால் இந்தப் பதிவு ப்ளாகரின் மெனக்கெடல் மற்றும் அவர்களின் தொழில் ரகசியம் பற்றி அலசுவதற்காக அல்ல.

****************

இப்படி உரைநடை எளிமையாக, சின்ன சின்ன அங்கதங்கள் மற்றும் ஆங்கிலக் கலப்புடன் இருக்கும் சுவாரஸ்ய எழுத்து உண்மையில் ஆரோக்கியமானதா?? இது கிட்டதட்ட ப்ளாக் எழுத்து என்பது போல் மாறி விட்டது. ஒரு முக்கிய எழுத்தாளாரிடம் பேசும் பொழுது இது போன்ற எழுத்துகள் தமிழ் உரைநடையை முற்றிலுமாக அழித்து விடும் என்று கவலைப் பட்டார், ஏனென்றால் இன்னும் சில ஆண்டுகளில் வலை எழுத்தே அதிகம் கவனம் கொள்ளப் படும் என்பது அவரது நம்பிக்கை. அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. பொதுவாகவே வலையெழுத்து என்பதால் நெடும் பதிவாக எழுதுவது மிகக் குறைவாக இருக்கிறது. ஆனால் அதைக் குற்றம் சொல்லவும் முடியாது, ஒருவருக்கு சுருங்கச் சொல்ல வருகின்றது என்பதில் எந்தத் தவறும் இருப்பதாக என்னால் கருத முடியவைல்லை.

ஆனால் அவர் மொழியின் அழகை -உரைநடையின் CONTENT மீது வாசகர்களுக்கு வரும் தவறான மோகம், மெல்ல மெல்ல வாசிப்பின் தரத்தை கரையான்கள் போல் கரைத்து விடும் என்று சொன்னார். இதை அப்படியே புறக்கணிக்க முடியாது, ஏனென்றால் என் வலைதளத்தில் இருக்கும் எழுத்துப் பிழைகளைப் பார்த்தாலே தெரியும். சாதாரணமாக எந்த மெனக்கெடலும் இல்லாமல் பதிவேற்றம் செய்ய முடிவதால், பிழைகளைப் பற்றிய அக்கறை குன்றி விடுகிறது (கு.பட்சம் :- பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்கிற அலட்சியம் செய்தல்).

இந்த வடிவம் பாக்கெட் நாவல் காலத்தில் இருந்தே இருக்கிறது என்று இந்த வடிவத்தின் வரலாற்றை ஆராய்வதும் முக்கியமானதே, 1960-1970களில் இருந்த தீவிர இலக்கிய எழுத்தாளர்களின் உரைநடையின் தரத்தை மட்டுமல்ல அன்றைய CONTENTஐ பார்த்தோமேயானால், இன்றைய நிலையில் அதுவும் குறிப்பாக non-Fiction எழுத்துகள் குறிப்பிடும் படியாக இல்லவே இல்லை. ஆனால் இந்த Parellel journey இருந்தே வருகின்றது.

ஒரு பக்கம் தீவிரமாக வரலாற்று நாவல்கள் கல்கி, சாண்டில்யன், விக்ரமாதித்தன், அகிலன் = இன்னொரு பக்கம் சு.ரா, தி,ஜ, மௌனி, நகுலன், கி.ரா, அ.மி என்கிற வரிசை சரியாகவே அமைந்தது. பின்னர் - பாக்கெட் நாவல், பாலகுமாரன், சுஜாதா (சுஜாதாவை ஒரு வரிசைக்குள் அடக்க முடியாது, இது பெரும்பான்மையான வாசகர்களை அடைந்திருக்கும் எழுத்தை வைத்து கோர்த்திருந்த வரிசை) அவர்களோடும் தொடர்ந்து வந்த தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றது.

இப்பொழுது கமர்சியல் எழுத்து என்று சொல்லப்படும், வெகுஜனத்திற்கு எளிதில் சென்றடையும் எழுத்து இணையத்தை நன்கு பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. தீவிர இலக்கிய எழுத்தும் உயிரோசை, மலைகள், வல்லினம் போன்ற வலைதளங்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அன்றிருந்த தீவிர இலக்கியப் படைப்புகளைப் போல, இன்றும் இருக்கின்றதா என்றால் அது கேள்விக்குரியதே!!

ஏனென்றால் இன்னமும் க்ளாசிக் நாவல்கள் தான் அதிகப்படியான ரீப்ரிண்டுகள் போடப் படுகின்றன. ஓவியங்கள் - சிற்பங்கள் பற்றி 1970களிலும், 1990களிலும் பேசிக் கொண்டிருந்தவர்கள் தான் இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள் (வெங்கட சாமிநாதன், இந்திரன், சி,மோகன், ரவி.சுப்ரமணியம்). ஆனால் வணிக எழுத்து இன்று வரை வணிகம் செய்து கொண்டு தான் இருக்கிறது. இணைய எழுத்தினையோ, சுவாரஸ்யமாக எழுதுவதையோ குறை சொல்வதில் எனக்குத் துளியும் உடன்பாடு இல்லை. உடம்பு நன்றாக இருக்கும் வரை, மருத்தவரிடம் செல்லும் அவசியம் வரும் வரை நம் சமையலில் அஜினோ மோட்டோ போட்டுக் கொள்ளலாம். காலம் எல்லா மாயங்களையும்  நிராகரித்து விடும். எஞ்சி விடுவது அசலான, உண்மையை பிரதிபலிக்கும், வலிமையான படைப்புகள் மட்டுமே, அவை மட்டுமே CLASSIC என்று போற்றப் படும்.சிலருக்கு 30, சிலருக்கு 35, சிலருக்கு 40-60என எந்த வயதிலாவது கட்டுப்பாடு செய்து கொள்ளத் தோன்றும், அப்பொசுது மாறிக் கொள்வார்கள்... So இணைய எழுத்தாளன், முகநூல் எழுத்தாளன் என்றெல்லாம் சொல்லி எரிச்சலூட்டாதீர்கள் நண்பர்களே!!
*************************************

நீங்கள் காமிக்ஸ் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாயின் உங்களுக்கு நான் எழுதப் போகின்றவை புரியும். (குறிப்பாக முத்து மற்றும் லயன் காமிக்ஸ் வாசகர்களுக்கு)

காமிக்ஸ் கதைகளை விட கதைக்கு முன்னே -பின்னே வரும் சமாச்சாரங்கள் எனக்கு அலாதி தான், ஹார் லைன், காமிக்ஸ் -டைம், ட்ரையிலர், மாதம் ஒரு வாசகர் போன்றவை தரும் பரவசம் எப்போதுமே ஹையர் தான். மூன்றாம் வகுப்பு படிக்கையிலேயே - என்னையும் அறியாமல் என்னுள் நுழைந்து விட்ட சில ஆங்கிலச் சொற்களெல்லாம் - விஜயன் மாம்ஸின் எழுத்தினாலே தான்.  நேராக ஒரு கோடு, முழுதாக ஒரு வட்டம் கூட வரையத் தெரியாத மக்குப் பையனாகிய எனக்கு டெக்ஸின் ஓவியங்கள் பற்றி, ஏஜெண்ட் XIIIன் சோகம் ததும்பும் இமேஜ்கள், ஓவிய பாணிகள் -வெளிநாட்டில் ஓவியர்களுக்கு இருக்கும் மதிப்பு பற்றியெல்லாம் நம்ம விஜயன் சாப் எழுதிய வரிகளே, நான் சித்திரங்கள் மீது காதல் கொள்ளச் செய்தது.

என்னிடம் பழகும் சில பேருக்கு மட்டும் தான், என்னோட ஹ்யூமர், டைமிங் ஜோக்குகள், சுய-எள்ளல் மற்றும் ரசனை பற்றித் தெரியும்(ஆமா தற்புகழ்ச்சி தான்). அவை எல்லாவற்றிட்கும் காரணம் இந்த ஆசான் விஜயன் தான். இந்த வாயில் கதவு தான், என் சிறுவயதில் நான் பார்த்த உலகின் சாளரம். எத்தனை சோகமான நேரங்களிலும் விட்டு (ஜோக்கு) அடிப்பது நம்ம விஜயனின் அசாத்திய திறமை தான்

அதற்கு ஒரு எ.கா:  (சமீபத்தில் வந்திருந்த ஒரு சிப்பாயின் சுவடுகள் - கிராபிக் நாவலின் - ஆசிரியர் பக்கமான காமிக்ஸ் டைமிலிருந்து :

 கடந்த 2 மாதங்கள் முன்பாகவே சலூனில் வில்லன்களின் தாடையில் டெக்ஸ் விடும் குத்துக்களின் பாணியில் - காகித விலைகளும் - அயல்நாட்டுப் பணங்களின் மதிப்பும் நம்மைத் துவைத்துக் காயப்போட்டு வருவதால் -புக்கின் விலையினை உயர்த்தாமல் தாக்குப் பிடிப்பது துளியும் முடியவில்லை




(டெயில் பீஸ்: இனி தொடர்ந்து காமிக்ஸ் பற்றிய பதிவுகள் போடலாம் என்று நினைக்கிறேன், எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்)

நன்றி
ஜீவ.கரிகாலன்

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

மகிஷாசுர மர்தினி - நமது வரலாற்றில்



போர் மற்றும் காதல் பற்றிய செய்திகள் தான் வரலாற்றை வாசிக்கத் தூண்டும் வஸ்துக்கள். புராணங்கள், இதிகாசங்கள், மத வரலாறு, கலைப் படைப்பு என வரலாற்றின் அடுத்த அத்தியாயங்கள் இந்த இரண்டில் ஒன்றைப் பற்றியபடி தான் அடுத்தடுத்து நகர்கின்றன. அதே சமயம் ,

வரலாறு என்பது உண்மை மீது சுதை பூசி, வெள்ளையடித்து, வர்ணம் தீட்டுவது...
*அதிகாரம் கொண்டு சுரண்டிப் பார்த்தால், உண்மையை உயிருடன் மீட்க முடியாது.
*சில சமயம் அந்த உண்மையை மீட்பதாய் சொல்லி,  அவற்றின் மீது SAND BLAST செய்யப் படலாம்
*காலத்தின் கணக்குகளில் எல்லா லேயர்களும் உரிந்து நிர்வாணம் அடைந்து விடும்

#நாம் செய்ய வேண்டியது எல்லாம் 35 மார்க் வாங்கி பாஸாகிவிட வேண்டும் என்பது தான்..
***************************************
கொஞ்சம் பெரிய இடைவெளி தான் மாமல்லை சிற்பங்களைப் பற்றி பேசுவது என்பது என்னைப் பொருத்தவரை எந்த அளவு மகிழ்ச்சி தரக்கூடியதோ, அதே அளவு பொறுப்பினையும் தந்துவிடுகிறது. தவறான விவரனைகள் ஜோடனைகளான வார்த்தைகளிலோ, தவறான குறிப்புகள் அல்லது தரவுகளையோ தந்து செல்லும் கட்டுரையாக இருப்பது மிக ஆபத்தானது. வாசிப்பின் சௌகரியத்திற்காக வரலாறு மட்டுமல்ல தவறான பின்புலத்தோடும், சரியான அளவீடுகள் கொண்டு பார்க்கப்படாத அறிவியல் தகவல்களும் கூட ஒட்டு மொத்தமாக நோக்கத்தை சிதறடித்து விடும்.
அது எப்படி அறிவியல் முடிவுகள்/தகவல்கள் கூட ஒரு கலை விமர்சனம் பற்றிய தீர்ப்புகள்/வரைவுகள்/கருத்துகளுக்கு ஆபத்தாகின்றன என்றால், அது அப்படித் தான்:

 ரோமன் தகவல் களஞ்சியத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் நிறைய அறிவியல் கூற்றுகள், தேற்றங்கள், கண்டுபிடிப்புகள் பொய்த்துப் போயிருக்கும் அல்லது காலாவதியாயிருக்கும். இதற்கு காரணம் அறிவியல் தன்னை பாம்புச் சட்டையைக் கழட்டுவது போல் தன்னிடமிருந்தே தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தேர்ந்த உயர்ரக மற்றும் எளிமைப் படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அறிவியலை எந்தப் பக்கமும் எளிதில் சாய்த்து விடுகிறது.


சரி, உங்களுக்கு என்ன தான் பிரச்சினை?? மாமல்லை சிற்பங்கள் பற்றிப் பேசுவதற்கு எதற்கு இத்தனை சுத்தி வளைப்புகள் என்று கேட்கிறீர்களா??
ஆமாங்க அரசியல் இருக்கு, புரானங்களை இப்படிப் பார்ப்பதற்கு உங்கள் மனம் இடமளிக்கிறதா என்று உங்களையே நீங்கள் சோதித்துப் பார்க்க ஒரு வழி:
அந்தக் காலக்கட்டத்தில் வரலாற்றைப் பதிந்து வைப்பதற்கான Toolகள் என்னென்ன என்று யோசித்துப் பாருங்கள். . இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் இதிகாசம் மட்டும் புராணங்களை அன்றைய வரலாற்றை தொகுக்கப் பயன்படுத்திருக்கும் கருவியாக நான் பார்க்கிறேன், என்ன அவற்றிற்கு அழகியல்(Aesthetic) மற்றும் கலை(Artistic) முலாம்கள் பூசப்பட்டிருக்கும். என்னளவில் தெளிவாக சொல்ல முடிந்ததெல்லாம் பெரிய புராணம் எனும் நூல் ஒரு வரலாற்று ஆவனம் என்று சொல்ல முடியும், ஆனால் இன்றைய அறிவியல் மற்றும் கல்விக் கொள்கைக்கு அவை எதிரானது. நிற்க.. மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள் புராணங்களும், இதிகாசங்களும் முன்வைக்கும் வரலாற்று செய்திகள் இன்றைய கல்விக் கொள்கைகளின் காரணமாகவே நீக்கப் படுகின்றன.


”இது என்ன அபத்தம் கல்வியைச் சாடுகிறாய்?” என்ற கேள்வி வரலாம். பின்நவீனத்துவம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய சிந்தனையான குறியீட்டுத் தன்மை எனும் படிமம் நமது புராண,இதிகாச/பக்தி இலக்கியங்களில் கூட நிறைந்திருக்கிறது. பாரதத்தில் யமுனா நதிக்கரையோர யாதவப் பெண்களுடனே உல்லாசமாக வாழும் கிருஷ்ணன் தன் கையில் வைத்திருக்கும் குழல் மாடு மேயத்தலின் போது பாடுவதற்காக வைத்திருக்கிறான், பலராமர் ஏந்திக் கொண்டிருக்கும் ஏர் உழவனுக்கானது.. ஒரு உழவனும், ஆயரும் சேர்ந்து வாழ்ந்த யமுனா நதிக்கரையின் வாழ்வியலை இது போன்ற ஆயுதங்களைப் பற்றிய அறிவினைக் கொண்டு  தெரிந்து கொள்ளலாம், ஒரு விவசாயம் செழிப்பாக நடைபெற வேண்டுமென்றால் அதற்கு முக்கியப்பங்கு மாடுகளுக்கு தான் இருந்தது என்பது இன்றளவும் கூட உண்மையான விஷயம் தான்.. ஆற்றோரங்களிலே விவசாயம் எனும் தொழில் மூலம் நாகரிகம் அடைந்து விட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளாக அவர்கள்(க்ருஷ்ண - பலராமன்) காட்டப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அவதாரங்களிலும் ஹீரோக்களின் வதம் செய்யும் ஆய்தங்களைல் கொண்டு அவர்கள் வாழ்ந்திருப்பதாய் நம்பப்படும் காலத்தை நாம் புரிந்து கொள்ள இடமளிக்கிறது.. Symbolism என்பதை நவீன இறக்குமதிச் சிந்தனையாகப் பார்ப்பது எத்தனை கயமைத் தன்மை கொண்டது. தசாவாதாரத்தில் தனது உடல் பலத்தால் முதல் மூன்று அவதாரங்களிலும், நான்காவது அவதாரத்தில் நகங்களாலும் வதம் செய்திருப்பது மிகப் பழமையான  காலத்தை காட்டுகிறது (Pre-Historic Times: Upper Paleolithic to Neolythic), அடுத்து ஞானவதம் (வாமண) அதற்கடுத்த காலம் கோடாரியை வைத்திருக்கும் பரசுராமனிடமிருந்து உலோகக் காலம் ஆரம்பிக்கின்றது. அங்கிருந்து  வருபவை வில், அம்பு, சக்கரம் என்றெல்லாம் கொண்டு வரும் குறியீடுகள் காலத்தை கண்டரிய உதவும்.


இப்படித் தான் மஹிசாசுரனை வதம் செய்யும் துர்கையின் சக்தியை வியந்து பார்ப்பதோடு அவள் காலத்தின் போர் செய்தியை, இந்த சிற்பத் தொகுதியின் உதவியோடு தெரிந்த கொள்ள இடமிருந்தால் தேடுவதும் /பரப்புவதும்; இல்லா விட்டால் கலை விமர்சனம் செய்வதோடும் நகர்ந்து விடுதல் நல்லது தான். அப்படிப் பட்ட ஒரு முக்கியமான சிற்பத் தொகுதி தான்  மகிஷாசுரமர்த்தினி செய்யும் யுத்தக் காட்சி, இவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று தனியாகவே மாமல்லை சென்று திரும்பி வந்தது உண்டு. அதுவும் வெறும் மகிஷாசுர மர்த்தினியின் சிற்பக் காட்சியை மட்டும் பார்த்து விட்டு (சில மணி நேரங்கள்) கிளம்பி வந்துள்ளேன்.


அடுத்தப் பகுதியில் மகிஷியின் சிற்பத் தொகுதியை அருகில் நின்று பார்ப்போம்...

ஜீவ.கரிகாலன்

வியாழன், 21 நவம்பர், 2013

2 C - பஸ்ரூட்

 (மலைகள் இதழில் வெளிவந்த எனது சிறுகதை)
2 C -  பஸ்ரூட்

கரூர், பழையபஸ் ஸ்டாண்ட், லைட்ஹவுஸ் தியேட்டர், திருமாநிலையூர், சுங்ககேட், மில்கேட், தாந்தோனிமலை, அரசுக்கலைக் கல்லூரி, காளியப்பனூர் கலெக்டர் ஆபீஸ், RTO ஆபீஸ் எல்லாம் தாண்டிய பின் வெங்கக்கல்பட்டியைக் கடந்து செல்லும் அத்தனை வாகனங்களும் வேகத்தைக் கூட்டி விடும். அதற்கு அப்பால் செல்லாண்டிபட்டி அல்லது வெள்ளியணை வரை வேகத்தைக் குறைக்கத் தேவையில்லை. மணவாடி, கல்லுமடை, காலணி என நின்றுச் செல்பவை பெரும்பாலும் 2ம் நம்பர் கொண்ட அரசுப் பேருந்துகளும், தனியார் டவுன் பஸ்ஸுகளும் தான்.
 அப்பொழுது கூட்டம் அதிகமாக இருந்தால் போதும் மணவாடி, கல்லுமடை, அடுத்து வரும் காலணியில் என எந்தப் பேருந்துகளுமே நின்று செல்லாது. கலெக்சனுக்காக சில தனியார் பஸ் நிற்குமளவிற்குக் கூட அரசுப் பேருந்துகள் நிற்காது. இந்த ஐந்து –ஆறு வருடத்தில் தான் சில தனியார் டெக்ஸ் கம்பெனிகள் ஸ்டாஃப் பஸ் விடுகின்றன. முன்னரெல்லாம் பாளையம், குஜிலியம்பாறை மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள கிராமங்களிலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கரூர் வந்து செல்கின்றனர். கட்டிட வேலைக்கு, டெக்ஸ் வேலைக்கு, பஸ்பாடி கட்டும் வேலைக்கு, தையல் காண்ட்ராக்ட் வேலைக்கு, கொசுவலை பேக்டரிகளுக்கு, சாயப் பட்டறைகளுக்கு என வந்து போகின்றனர். டவுன் பஸ்ஸுகளுக்கு சரியான கல்லா கட்டும். சனிக்கிழமைகளில் உங்கள் உறவினர் யாரையாவது பார்க்க இந்த வழியில் உள்ள ஊர்களுக்கு வர விரும்பினால், நல்லது நீங்கள் வர விரும்ப வேண்டாம். எப்போதும் இருக்கும் வியர்வைப் புழுக்கத்தோடு, சரக்கு வாசனையும் கலந்து குடலைப் புரட்டும். ஆனாலும் இளையராஜா, டீ.ராஜேந்தர், எஸ்.ஏ. ராஜ்குமார் இருக்கும் பொழுது கூரையைத் தட்டிக் கொண்டே ஒவ்வொரு ஸ்டாப்பாக பார்த்து வந்தால் உங்கள் ஊர் வெள்ளியனையோ, கூடலூரோ, பாளையமோ வந்துவிடும்.
 அதே திங்கள் காலையில் நீங்கள் கரூர் செல்ல வேண்டுமாயின் சிறந்த வழி பால் டெம்போ, ட்ராக்டர் போன்ற எதிலாவது லிஃப்ட், இல்லை இல்லை வாடகைக் கொடுத்துப் போகலாம், வாடகை என்பது பஸ் கட்டணம் தான். ஆனால் நின்று கொண்டே போக வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் டூவீலரில் ஓசிப் பயணம் போக விரும்பினால் கண்டிப்பாக உங்களுக்கு முனீஸ்வரனின் அருள் உண்டு, அங்கு இறங்கி குழாயில் கால் கழுவி, கையைக் குவித்துக் கொஞ்சம் தண்ணீர் அருந்தியும் கொள்ளலாம். பின்னர், காணிக்கையிட்டு சாமி கும்பிட்டவுடன். அகண்ட கண்ணாடியில் உங்கள் முகம் பார்த்து சந்தனம், குங்குமம் வைத்துக் கொள்ளலாம், நீங்கள் வேலை வெட்டி இல்லாதவராக இருந்தால் அங்கிருக்கும் பூசாரியிடம் “ஏதாவது வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா” என்று குறி கேட்கலாம். அப்பொழுது தாராளமாக நீங்கள் எந்த கம்பெனியை மனதில் நினைத்தும் கேட்கலாம் நம்ம ஊர் “ராயல் கோச்சிலோ, வீகேஏ பாலிமர்சிலோ, சபரி டெக்ஸ்டைலிலோ அல்லது அதையும் தாண்டி இன்ஃபோசிஸிலோ, டீ.சீ.எஸிலோ அல்லது க்ரிண்ட்லேஸ் பேங்கிலோ கூட வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?” என்று கூட கேட்கலாம், அவரும் சோளியை உருட்டிக் குறி சொல்லுவார். அதனால் உங்களுக்குக் கட்டாயம் வேலை கிடைக்கும் என்று சொல்லவில்லை.அது தான் அவருடைய வேலை என்று சொல்கிறேன். அந்தப் பூசாரி மிகவும் நல்லவர், சிரித்த முகமும் கூட, எப்பொழுதுமே நல்ல சகுனம் தான் சொல்லுவார். ஆனால் அவருக்கு உங்கள் கனவு நிறுவனத்தின் பெயர் வாயில் நுழைய வேண்டும். மற்றபடி நிற்காத வாகனங்களில் நீங்கள் பயணிக்கும் பொழுது கன்னத்தில் போட்டுக் கொள்ளலாம்.
 முனீஸ்வரன் கோயில், செல்லாண்டிபட்டி ரயில் பாலத்திலிருந்து, CC பாலத்திற்கு இடையே உள்ள …………………….. 30 வருடம் முன்பு வரலாறு தெரியாத, 26 வருடம் முன்பு வெயிலில் காய்ந்த, அடுத்த ஆண்டு விலங்குகளுக்கு பலி கொடுக்க ஒரு பீடமும், 23 வருடம் முன்பு சிறிய கூடாரத்தின் முன் சில வேல்களுடனும், 20 வருடத்திற்கு முன்பு சிறிய கான்கிரீட் கோயிலாய் – போர்வெல் வசதியுடன், அருகில் ஒரு பெட்டிக் கடையுடனும், 18 ஆண்டுகளுக்கு முன்பு கிடா வெட்டி சமைக்க ஒரு சமையற்கூடமும், அடுத்த இரண்டாண்டுகளில் எதிரே ஒரு குதிரை வீரனாகவும், அதற்கும் அடுத்த ஆண்டே அருகில் ஒரு பிள்ளையார் கோயிலும் அதற்கடுத்த ஆண்டே ஒரு நிழற்குடையுமாக மாறிய எல்லை காக்கும் அவ்வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முனீஸ்வரன் கோயில். எல்லா புதிய வண்டிகளுக்கும் அங்கே தான் பூஜை பரிகாரங்கள் நடைபெறும், தனியார் பேருந்துகள் எல்லாம் வெள்ளிக்கிழமை தோறும் வீடு திரும்புகையிலோ அல்லது கரூர் செல்கையிலோ தேங்காய் உடைப்பார்கள். உழவர் சந்தைக்கு இருந்து வரும் முதல் லோடு எழுமிச்சை நம் கோயிலுக்குத் தான். மற்ற நாட்களில் எல்லாம் பயணிகளிலிருந்து ஓட்டுனர் வரை சல்யூட் போடுவது போலவோ, ஃபிளையிங் கிஸ் போலவோ கண்களை ஒற்றிக் கொள்வார்கள். சாலை விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் அங்கு வந்து பொங்கல் வைப்பார்கள். பலர் கிடா வெட்ட நேர்ந்து கொள்வார்கள். அவர்கள் இறந்தவர்களோடு தொடர்பு உடையவரா?, அல்லது பிழைத்தவர்களோடு தொடர்பு உடையவரா? இல்லை அக்கோயிலுக்கு முறை செய்ய வந்த உண்மையான பாத்தியம் உடையவர்களா? என்று ஆராய முடியாது. எல்லாருமே பக்தர்கள் தான் என்று விட்டுவிடுவோம்.
 முனீஸ்வரனிடம் கேட்கப்படும் வேண்டுதல்களில் பெரும்பான்மையானவை நமது பயணத்தில் எந்த விபத்தும் நிகழாதிருக்க வேண்டும் என்பது தான். அந்த தொழில் நகரின் அசுர வளர்ச்சியை அங்கு சென்று வந்து கொண்டிருக்கும் அதிவேகப் பயணங்களும் சாத்தியப் படுத்திக் கொண்டிருந்தன. இதில் செட்டிநாடு சிமெண்ட் பேக்டரிக்கு செல்லும் லாரிகளின் எண்ணிக்கை வேறு. ஆக இக்கதை இதைப் பற்றியது தான், சாலை விபத்துகள்; பெரும்பாலும் ஒவ்வொரு சனிக்கிழமையிலோ, வெள்ளியிலோ மணவாடிக்கு பக்கத்துல ஒரு “ஆஸ்ஸிடென்ட்” என கதை சொல்லும் அக்காக்களை நீங்கள் வெள்ளிக் கிழமை கோயில்களிலோ, சனிக் கிழமை சந்தைகளிலோ அல்லது கடைத் தெருவிலோ பார்க்கலாம். அந்தப் பகுதியில் அவசர சிகிச்சை செய்யப்படும் என்று போர்டு வைக்கும் MBBS டாக்டர்களுக் கெல்லாம் உடனடியாக அரசு வேலைக் கிடைத்தது. அதனால் விபத்தென்றால் ஒரே வழி பத்து கிலோமீட்டர பறந்து கரூர் செல்வது தான். அங்கு நிகழும் விபத்துகளில் பெரும்பாலும் இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்கள் தான் மரணித்துப் போவார்கள். சில சமயம் பேருந்தில் தொங்கியபடி வருபவர்கள், குடித்து விட்டு அப்பகுதியில் உள்ள மரத்திலோ, சின்ன பாலத்திலோ அல்லது வேறு வாகனத்திலோ முட்டிச் சாகும் சொகுசுக் கார்களும் உண்டு. அந்தப் பகுதிகளில் மட்டும் நிகழும் விபத்துகளில் பெரும்பாலும் பிழைக்கும் எண்ணிக்கைக் குறைவு தான்.
 வெங்கக்கல்பட்டியைத் தாண்டியதும் பொதுவாக எல்லோரும் ஆக்ஸிலேட்டரில் அழுத்தம் கொடுத்து விடுவார்கள். ஏனென்றால் தொழில் நகரான கரூரில் டவுன் பஸ்ஸுகளும், மஃப்சல் பஸ்ஸுகளும் மந்தைகளைப் போல பயணிகளை அடைத்து வைக்க எடுத்துக் கொள்ளும் கூடுதல் வெய்ட்டிங் நேரத்தையும்; நகரில் ஊர்ந்து செல்லும் நேரத்தையும் கனக்கிட்டு, இந்தப் பகுதியில் வேகமாகப் பேருந்தை விரட்டினால் தான் சமன் செய்து வெள்ளியனையிலோ, கூடலூரிலோ, பாளையத்திலோ வரும் மினிபஸ்களின் பயணிகளுக்கு கனெக்‌ஷன் கொடுக்க வேண்டும். இதில் தனியார் பேருந்துகளின் மத்தியில் போட்டி வேறு. வெங்கக்கல்பட்டியில் இருக்கும் ஒரு கோழிப் பண்ணையைக் கடந்ததும் சாலையானது மேட்டில் ஏறும் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் தான் விபத்துப் பகுதி. அந்த மேட்டிலிருந்து வேகமாகக் கீழிறங்கி ஒரு சின்ன வாய்க்கால் பாலம் வழியாகத் தூக்கிப் போட்ட மறுபடியும் மேடேறி வளைந்தபடி மணவாடியைக் கடந்து செல்லும் சாலையில் தான் விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அங்கு இறந்தவர்களின் துஷ்ட ஆவிகள் அங்கே தான் உலாவுகின்றன என்ற கட்டுக் கதைகள் வேறு. சிலர் வாகனங்களில் செல்லும் பொழுது வெள்ளையாக, புகை போல ஆவிகள் கடப்பது போலவும், சில மனித உருவில் லிஃப்ட் கேட்பது போலவும் தோன்றும், தனித்து இருசக்கர வாகனத்தில் செல்லும் சிலருக்கு திடீரென்று டபுள்ஸ் போவது போலே தோன்றும் அப்பொழுது நீங்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று பொதுவாக அறிவுறுத்தப் பட்டிருக்கும், நீங்கள் CC பாலத்தைக் கடந்து செல்கையில் முனீஸ்வரன் கோயில் உங்கள் கண்ணில் படும் நேரம் மறுபடியும் நீங்கள் தனியாக உங்கள் பயணத்தைத் தொடர்வீர்கள். ஆனால் இந்த பயத்திற்காக யாரும் இவ்வழியே பயணிப்பதைத் தவிர்க்க முடியாது, ஏனென்றால் நாம் போய் தான் ஆகவேண்டும், வெள்ளியணை பெரிய குளத்திலிருக்கும் தண்ணீர் வருடா, வருடம் நிரம்பியும், காய்ந்தும் தான் போகிறதே தவிர அம்மடை வழியே பாசனத்திற்கு திறந்துவிட யாரும் இல்லை. கிணறு இல்லாத தரிசாகவே சாலையின் இரு மருங்கிலும் உள்ள பெரும்பான்மையான ஊர்களில் நிலங்கள் இருக்கின்றது.
 ஆவிகள் என்பதை ஒரேடியாகக் கட்டுக் கதை என்று சொல்லி விட முடியாது,விபத்தில் அகால மரணமடைந்து விடுபவர்கள் ஆவிகளாக அந்தப் பகுதியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நம்பக்கூடியது தான் என்னைப் பொருத்தவரை. அவர்கள் / அவைகள் தான் மேலும் மேலும் விபத்துகள் நடைபெறக் காரணம் ஆகிறது. நான் அந்த வழியாக செல்லும் போதெல்லாம் அந்த துஷ்ட ஆவிகள் இருக்குமே என்று கவனமாகவே செல்வேன். சில சமயம் வண்டியில் யாரோ பின்னாடி அமர்ந்திருப்பதைப் போல உங்களுக்கு கூடுதல் சுமை தெரியும், அவ்வேளைகளில் திரும்பிப் பார்க்காமலோ கண்ணாடியைப் பார்க்காமலோ வண்டியை ஓட்ட வேண்டும் என்பது பொதுவாக அங்கு போய் வருவோரின் நம்பிக்கை. அதே போல யாரும் அந்தப் பகுதியில் நடந்து சென்றால் கூட அவர்கள் மனிதர்கள் தானா என்று சந்தேகம் வந்துவிடுவதால் அவர்களை வேகமாகக் கடந்து விடுவேன், இல்லைத் தெரிந்த அளவுக்கு கந்த ஷஷ்டி கவசம் பாடுவேன். டு டு டு டு டு டு டு டு டு டு, டகு டகு, டிகு, டிகு, டிங்கு, டிங்குகு வரை. அதற்குள் மணவாடியைக் கடந்து விடுவேன். அதே சமயம் இப்படி பாடிக் கொண்டே இரவில் வரும் வேளை வண்டியில் காலைத் தூக்கியும் வைத்தவாறே தான் வர வேண்டும், அதுவும் வேகமாக. ஏனென்றால் இரவில் தான் நிறைய பாம்புகள் சாலையைக் கடக்கின்றன, இந்தப் பகுதியில் பாம்புகள் மிக அதிகம் என்பதால் வெள்ளைக்காரனே குஜிலியம்பாறையில் பாம்புக்கடிக்கென மருத்துவமனை கட்டியிருக்கிறான் தெரியுமா??. நானே இது வரை 5-6 பாம்புகளில் வண்டியை ஏற்றியிருக்கிறேன் எல்லாமுமே அந்தப் பகுதியில் தான். இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் ஊர் மக்கள் யாவரும் தினமும் நகரத்திற்குப் போய் வர வேண்டிய வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் என்று எழுதுவது சமூகப் - பொருளாதாரக் கட்டுரை போல மாறி விடும்.
 அந்த இடத்தில் நிகழும் விபத்துகள் மிகவும் கோரமாகவே நிகழ்ந்து வந்தாலும், அங்கு செல்லும் யாவரும் மெதுவாக செல்வதேயில்லை. ஆனாலும் முனீஸ்வரனைக் காணும் பொழுது ஒவ்வொரு முறையும் நன்றி சொல்வதை நாங்கள் வழக்கமாய் வைத்திருக்கிறோம். திடீரென்று அந்தப் பகுதியில் நிகழும் விபத்துகள் குறைய ஆரம்பித்தன. அதாவது முனீஸ்வரன் கோயிலைக் கடந்தும், ஏன் ஊருக்குள்ளேயும் கூட விபத்துகள் நிகழ ஆரம்பித்து விட்டன. ஆனால் அந்த விபத்துப் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தன. சில மாதங்களாக எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருந்தது. இதற்கும் என் நண்பன் தங்கவேலுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று தெரிய வரும் போது நான் அவ்வளவு எளிதாக நம்பவில்லை, ஒரு சந்தேகம் மட்டுமே இருந்தது. சில வருடங்கள் கழித்து இன்று அவனிடம் போனில் பேசும் போது தான் நம் சந்தேகம் சரிதான் என்று தோன்றியது.
 தங்கவேல் ஒரு மினிபஸ் கம்பெனியின் செக்கர் பணியில் இருந்தான். அவன் என் பள்ளி நண்பன், எங்களுக்குள் பெரிய தோழமை சரித்திரம் இல்லாது போனாலும். எங்கே போனாலும், பார்த்தாலும் “நீ எப்படியிருக்கிற? அவள் எப்படியிருக்கிறா? இன்னும் அவ உனக்கு செட் ஆகலையா?” என்று கேட்கும் பள்ளி மாணவர்களில் அவனும் ஒருவன். அவன் எப்படி இந்த சாலை விபத்துகள் குறையக் காரணம் ஆனான் என்று தெரிய வேண்டுமாயின். அவன் எப்படி வாழ்க்கையில் உயர்ந்தான் என்று நீங்கள் அறிய வேண்டும். தினமும் கரூர் சென்று பிழைப்பதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று நொந்து கொள்ளும் பிரஜை தான் என்றாலும், தொழில் தொடங்குவதற்கு ஒரு தைரியம் வேண்டும் அல்லவா? அவனுக்கு அந்த தைரியத்தை அவன் சார்ந்த அச்சமூகம் கொடுத்திருக்கிறது. அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் அவ்வூரில் பெரும்பான்மையானவர்கள்.
 அவர்கள் வீடு மணவாடிக்கு முன்னே, சரியாக அந்த விபத்துப் பகுதியில் மையத்தில் உள்ள தோட்டத்தில் அமைந்திருக்கும். ஹாலோ பிளாக்குகளை வைத்து தன் வீட்டிற்கு பின் புறம் சில கட்டுமானங்கள் செய்து நாட்டுக் கோழிப் பண்ணை ஒன்றை ஆரம்பித்தான். பண்ணை தொடங்கிய காலத்திலேயே எல்லோர் கவனமும் பெற்றது. அங்கே போவோர் வருவோரெல்லாம் அந்தப் பகுதியில் புதிதாய் வந்திருக்கும் கோழிப் பண்ணையை பற்றி பேச ஆரம்பித்தனர். வெங்கக்கல்பட்டியிலே முன்னர் இருந்தது பிராய்லர் கோழிப் பண்ணை. ஆனால், தங்கவேல் வைத்திருப்பது நாட்டுக்கோழிப் பண்ணை. இரண்டாம் கையாக ஒரு பஜாஜ் எம்.80 ஒன்றும் வாங்கியிருந்தான். என்ன நேரமென்று தெரியவில்லை, அவனுக்கு வியாபாரம் நல்லபடியாக போக ஆரம்பித்தது. அந்த இடம் அவ்வழியாக போவோர் வருவோரால் பேசப்பட்டு, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
 இரண்டு பள்ளிகள் அங்கே புதிதாய் திறக்கப்பட்டன, ஒன்று அந்தக் கோழிப் பண்ணைக்கு அருகிலும், மற்றொன்று சாலைக்கு மறுபுறமும் தொடங்கப்பட்டது. அந்த மண்ணின் ராசி இரண்டு பள்ளிகளுமே வெகு சீக்கிரமாக நல்ல பெயர் எடுத்தன. பள்ளியில் மாணவர்கள் வரவை கணக்கிட்டு ஒரு பெட்டிக் கடையும், பஞ்சர் கடையும் வந்தது. பள்ளி பிரபலமாக ஆரம்பித்தது, எல்லாப் பேருந்துகளும் கட்டாயம் நிற்க வேண்டும் என்று ஆணையும் வந்தது கலெக்டரிடமிருந்து. பண்ணையும் நல்லபடியாக போக ஆரம்பித்தது, ஆனால் அவன் பண்ணையைப் பற்றி எல்லோரும் பேசுவது சுவாரஸ்யமாகவே இருந்தது. பள்ளி இருக்கும் பகுதி என்பதால் வேகமாக வரும் வாகனங்கள் தணிக்கை செய்யப் பட்டன. அதே சமயம் அங்கு உலவிய பேய்க் கதைகளும் குறைய ஆரம்பித்தன. பைக்கில் வருவோர் சிகெரட் பற்ற வைத்து ஆசுவாசம் அடையுமிடமாக அந்த பெட்டிக் கடை திகழ்ந்தது. கலெக்டர் ஆபிஸ் அருகிலேயே இருப்பதாலும், 2008ல் ஏற்பட்ட ஷேர் மார்கெட் வீழ்ச்சியின் தொடர்ச்சியாக பங்கு வர்த்தனையில் ஏற்பட்டிருந்த பெரும் சரிவின் பொருட்டு தங்கள் முதலீட்டை நிலங்களில் அசுர வேகத்தில் நிலத்தில் பாய்ச்சினர். இப்பொழுது தங்கவேலின் பண்ணையைச் சுற்றிலும் வீட்டு மனைகள்.
 முனீஸ்வரன் கோயிலும் மிகச் சிறப்பாக வளர்ந்து விட்டது. கடைசியாக நான் அவ்வூருக்கு சென்ற போது, அந்தக் கோயிலின் பின்புறம் ஏதோ ஒரு கட்டடம் கட்டப்பட்டு வந்தது. புறவழிச் சாலையும் வெங்கக்கல் பட்டி வழியாக வந்துவிட்டது. ஆனால் நேற்று கூடலூரைச் சேர்ந்த என் நண்பன் ’அருள்’ வண்டி ஓட்டிய படியே என்னுடன் பேசி வந்தான். இப்பொழுது எங்கேயடா இருக்கிற என்று கேட்டேன், “மணவாடிக்கு கொஞ்சம் முன்னாடி” என்றான். “வண்டியை ஓட்டியபடியே பேசுவது ரிஸ்குடா” என்று கண்டித்தபடி போன் இணைப்பை துண்டித்தேன். சற்று நேரம் கழித்து வீடு சென்ற என்னை அழைத்த அவனிடம், “இப்போது சாலை விபத்துகள் எப்படி?” என்று கேட்டேன்.
“அத ஏன் கேக்குற!! தெனமும் ஒன்னுரெண்டு நடக்குது எல்லாமே ஸ்பாட்லயே ஆயிடுது” என்றான். அதிகமாக “எந்தப் பகுதியில நடக்குது?”என்று அவனிடம் நான் கேட்க, “அவன் அதே வெங்கக்கல் பட்டிலயிருந்து மணவாடிக்கு இடையில தான் நெறைய நடக்குது. ஒரு பயலும் மெதுவாப் போறதில்லை, பத்தாதைக்கு இந்த பைபாஸ் ரோட்டுல வர்ற வண்டிகளாலத் தான் பெரிய பிரச்சினை” என்றான். “இப்போலாம் லைனுக்கு தனியா அந்தப் பக்கம் போறதுக்கே பயமா இருக்கு தெரியுமா?? நெறைய ஆவிங்கள்ளாம் சுத்துதாம், கொஞ்ச காலம் எந்த ஆக்ஸிடெண்டும் பார்க்காம இருந்தேன், ஆனா இப்போ?? போன வாரம் ஒரு காட்டான் மாறி என்னை முந்திக்கிட்டு போனான். வந்த வேகத்துல நேரா போயி அந்த வாய்க்கா பாலத்துல முட்டி, ஓட்டி வந்தவனுக்கு செம அடி, கூட வந்தவன் ஸ்பாட்டாயிட்டான்!! அந்தச் சத்தம் கூட இன்னும் எங்காதில கேட்குது” என்று தான் பார்த்த காட்சியை விளக்கினான்.
நான் அவனிடம், “ டே!! ஆவிகளால எல்லாம் ஒரு கெடுதலும் நடக்காது, எல்லாம் பைபாஸினால் வந்த வினை, காவேரில இருந்து மண் எடுத்துப் போகும் லாரிலாம் இந்தப் பக்கமாத்தான வருது?? “ என்று கேட்டேன், ஆமோதித்தான். “ஏன் இந்த தங்கவேல் பயலும் கோழிப் பண்ணைய நிறுத்திட்டானோ?” என்று சந்தேகத்துடன் கேட்டேன். “ஆமாடா!! உனக்கும் தெரிஞ்சு போச்சா?”, “கிரவுண்டு வெல ஏறிக்கிட்டே போதும்ல, அழகா வித்துட்டு, வெள்ளைக் கதர் சட்டை மாட்டிட்டு ஜாலியா வாழலாமே!! தவிர வெள்ளியணையிலயே மூணு வாத்துக் கறிக் கடை வந்துருச்சு அதுவும் டாஸ்மாக் பக்கத்துல. இதுல போயி கறிக்கோழி விக்குறதுக்குன்னு எவ்வளவு நாள் தான் இருக்கமுடியும்? அதனால அவனுக்கும் தொழில் சுத்தமா படுத்துகிச்சு” என்று அவன் தரப்பு ஞாயங்களை எடுத்து வைத்தான் அருள். அப்படித் தான் ரொம்ப நாட்களாக தீராமல் இருந்த என் சந்தேகம் ஊர்ஜீதமாகியது. ஆம் தங்கவேல் தான் அங்கு இது நாள் வரைக்கும் வண்டிகள் மெதுவாக செல்லவும், விபத்துகள் குறையவும் காரணமாக இருந்திருக்கிறான். அந்தப் புதிய பள்ளியும், கிராமச் சாலையும், பேருந்து நிறுத்தமும் கூட ஒரு பட்டாம்பூச்சி தேற்றம் போலே ஏதேச்சையாக அவனே காரணம் ஆனான். அதற்கு அவன் நிர்வாகம் செய்து வந்த தொழிலின் பெயரை பிளெக்ஸ் போர்டில் அடித்து, இருட்டிலும் பளிச் என்று தெரியும் பச்சை வண்ணத்தில் வடிவமைத்தது தான். அது தான் அவன் வெற்றிக்குக் காரணம் என்பது புரிந்தது
அந்தக் கடையின் பெயர் “நமீதா நாட்டுக்கோழிக் கடை”. ஃபிளக்ஸ் போர்டின் இரு புறமும் சிவப்பு ஆடையணிந்த நமீதாவின் கவர்ச்சியில் “இங்கே நாட்டுக் கோழி கிடைக்கும்” என்ற வாசகம் விளம்பரமாக நட்டு வைக்கப் பட்டிருந்தது.
- ஜீவ.கரிகாலன்


இந்த படத்திற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை ..ஹி ஹி ஹி



செவ்வாய், 19 நவம்பர், 2013

பாரத ரத்னா சச்சின் - பஜ்ஜி - ஜொஜ்ஜி 48


வழக்கம் போல மக்கள் கவனம் இருக்கும் இடத்தில் எல்லாம் அரசியல் செய்து லாபம் பார்க்கும் மீடியாக்களும், அரசியல் கட்சிகளும் சேர்ந்து சமீபத்தில் கொள்ளையடித்த இடம் கிரிக்கெட் மைதானம்.

கடந்த உலகக்கோப்பையுடனோ அல்லது இன்னமும் விளையாடும் ஆசையுடனோ இருக்கும் சச்சினை 200 என்கிற Benchmarkஐ வைத்து கேட்கப்பட்ட கேள்விகள், அவரை ஓய்வு குறித்த ஒரு முடிவை எடுக்க வைத்தது. சுமார் 2 மாதங்களுக்கு முன்னராகவே அவர் சொன்ன ஓய்வுத் தேதியை மட்டும் வைத்து எத்தனையோ கோடிகள் அள்ளப் பட்டிருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே, அவர் ஓய்வு பற்றிய தகவல் சொன்ன அன்றே ஓய்வு எடுக்க ஆரம்பித்தது போல் எத்தனை விஷேசக் கட்டுரைகள், செய்திகள் , விவாதங்கள்.

இது ஒரு குறிப்பிட்ட ஒரு விளையாட்டின் மீது மட்டும் அக்கறை கொண்டுள்ள ஒரு நாட்டின் அவல நிலையினைக் காட்டுகிறது. உண்மையில் இது பணத்தைக் கொட்டிக் குவிக்கும் விளையாட்டாக இருந்த கிரிக்கெட், ஐ.பி.எல்-ற்குப் பின் சூதாட்டங்களை சட்டப்பூர்வமாக்கும் கோரிக்கைகளின் சப்தமும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடந்த சி.பி.ஐ அமைப்பின் கருத்தரங்கில் அதன் இயக்குநர் ரஞ்சித் சிங் பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்கினால் கருப்புப் பணப் புழக்கத்தைக் குறைக்கலாம் என்று கருத்து சொன்னது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பேச்சு.

நாட்டு மக்களின் ஒட்டு மொத்த கவனமும், ஆர்வமும் ஒரே விளையாட்டின் மீது படிந்திருப்பது வளர்ச்சி ஆகாது அது ஒரு வீக்கம் மட்டுமே. கடந்த ஆண்டு மகளிருக்கான கபடிப் போட்டியில் தங்கம் வென்று வந்த மகளிரைக் கண்டு கொள்வாரில்லை. சிறப்பு ஒலிம்பிக்குல் 2 பதக்கங்கள் வென்ற சீதாசாஹூ இன்னமும் சாலையோரம் பாணி பூரி விற்கும் தொழிலையே செய்து வருகிறார்.

செஸ் நமது நாட்டின் தொன்மையான விளையாட்டு என்பதைக் கூட நாம் மறந்து விட்டிருக்கிறோம், கபடியை சீண்டுவாரில்லை, தேசிய விளையாட்டான ஹாக்கியைப் பற்றிப் பேசுவாரில்லை, உலகத்திலேயே தலை சிறந்த விளையாட்டாகக் கருதப்படும் கால்பந்து விளையாட்டின் நிலைமை நம் நாட்டில் பரிதாபம். பாய்சங் பூட்டியா இந்திய கால்பந்திற்குக் கிடைத்த கடவுளின் குழந்தை என்று பாராட்டப் பெற்றவர். இந்த சிக்கிம் மனிதரைப் பற்றிய கேள்விகள் கூட நமது பள்ளிக்கூட விநாடி வினாக்களில் கேட்கப் படுவது இல்லை. அரசு நினைத்திருந்தால் உலக அரங்கில் ஒரு நல்ல கால்பந்து அணியை உருவாக்கியிருக்க முடியும், சரவதேச தரத்துடன் விளையாடி வந்த இவர் வேறு நாட்டில் பிறந்திருந்தால் இந்நேரம் மிகப்பெரிய புகழும் பணமும் ஈட்டியிருப்பார் என்பது மட்டும் உறுதி.

அது போல சர்வதேச ஹாக்கிப் போட்டிகளில் மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்த தியான் சந்த் நம் நினைவுகளில் இருந்து காணாமல் போய்விட்டார். இவர் பிறந்த ஆக்ஸ்டு 09 தான் இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. விஸ்வநாதன் ஆனந்தின், லியண்டர் பயஸ் போன்ற அத்தனை பேரும் அவரவர் துறைகளில் சாதித்தவர்களே, இதில் கிரிக்கெட்டிற்கு மட்டும் இத்தகைய கௌரவம் கொடுப்பது அரசின் பொருப்பற்ற தன்மையினையே காட்டுகிறது.

நமது மற்ற அமைச்சகங்களைப் போன்றே நாட்டின் விளையாட்டு அமைச்சகமும் ஊழல் மிக்கதாகவே காணப்படுகிறது, கிரிக்கெட் மட்டுமே விளம்பரங்களாலும், கார்ப்பரேட் நிறுவனங்களில் ஈடுபாட்டிலும், இப்போது ஆட்டம், பாட்டம் கவர்ச்சி என்று மாறி விட்ட 20-20 போட்டிகளாலும் மற்ற விளையாட்டுகளை இன்னமும் சீரியதாக அகற்றிக் கொண்டிருக்கிறது. இதில் சச்சினுக்குக் கொடுக்கும் பாரத ரத்னா மற்ற துறையை, சமூகத் தொண்டு புரிந்து வருபவர்களை அவமதிப்பதைக் காட்டிலும், கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டைப் பற்றிய கனவையும் நம் இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்காது என்பது மட்டும் உறுதி.

- ஜீவ கரிகாலன்


ஞாயிறு, 17 நவம்பர், 2013

ஒரு ஆக்ஸிடெண்டல் ஸ்டோரி அல்லது புத்தகப் பார்வை

பஜ்ஜி -சொஜ்ஜி - 47

ஒரு ஆக்ஸிடெண்டல் ஸ்டோரி அல்லது புத்தகப் பார்வை



இந்த புத்தகத்தின் திறனாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அன்றிரவு வீடு திரும்புகையில் நள்ளிரவு மணி 12.30 இருக்கும், இடையில் நண்பர் பாலாவை வீட்டில் சேர்த்து விட்டு என் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். நான் மட்டும் தனியாக தெருக்களின் வழியே குறுக்கு வழியில் சென்று கொண்டிருந்த பொழுது, ஒரு வளைவில் திரும்பியவுடன் வண்டியை நிறுத்திவிட்டேன். நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ.. அந்த நேரம் நான் எங்கிருக்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன்.. ஆம், ஏதோ ஒரு நள்ளிரவில், ஏதோ ஒரு நகரத்தில் (நான்கைந்து- நகரங்களில் நான் தங்கியிருக்கிறேன்) இருக்கிறேன் என்ற உணர்வு மட்டுமே இருந்தது. வேறு எந்த பிரக்ஞையும் இல்லை.
எல்லா நகரங்களுமே கிட்டதட்ட இரவில் இப்படித்தான் ஒரே மாதிரியான விளக்கொளி, நாய்கள், நிசப்தம் என்ற ஒழுங்கில் இருக்கின்றன. நான் எப்படி இந்த இக்கட்டில் இருந்து வீடு திரும்பப் போகின்றேன்.....???

**************************

சுஜாதா எழுதிய புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்கள் என்று ஒரு பத்து பேரிடம் பட்டியலை வாங்கிப் பாருங்கள், பெரும்பாலோனோர்களின் பட்டியலில் ஒரு புத்தகம் இடம் பெற்றிருக்கும் -அது ஸ்ரீரங்கத்து தேவதைகள். அவர் கொஞ்சம் கூட சிரமப்படாமல் எழுதியிருக்க வேண்டிய புத்தகம் இது. அவருடைய Nostalgic பக்கங்கள் தான், ஆனால் ஒரு மனிதன் இழந்துவிட்ட தன் பால்யங்கள், தனக்குத் திரும்பவும் கிடைக்காத சந்தோஷங்கள், காணாமல் போன பழமையின் சுவடுகள் போன்ற சமாச்சாரங்கள், நமக்கு சம்மந்தமே இல்லாத ஒரு அக்ரகாரத்து நினைவுகள் கூட நமக்கு நெருக்கமான புத்தகமாகப் பிடித்துப் போகக் காரணமாயின.

அப்படிப் பட்ட ஒரு புத்தகமாகத்தான் எனது favorite பட்டியலில் சேர்ந்து கொண்டது இந்த புத்தகம். அந்த புத்தகத்தின் பெயர்  “நம்மோடு தான் பேசுகிறார்கள்”. இரண்டு நண்பர்களின் உரையாடல்கள் தான் இந்த தொகுப்பு. இவர்கள் நண்பர்கள் என்பதால் தான் அவர்களுக்கு இடையே இருக்கும் மீடியத்தில் எந்த வித அலங்காரமும் இன்றி(?) எளிமையாக உரையாடல் நடந்தேறக் காரணமாகிறது, ஆனால் அலங்காரம் பற்றிய உரையாடல்கள்  இதில் அதிகம் இருக்கிறது என்பது வேறு விஷயம் (அதைப் பற்றி பல கட்டுரைகள் வந்துவிட்டன). இதைப் பற்றி நான் கூட முன்னரே ஒரு பதிவு செய்திருக்கிறேன். இப்படி இரண்டு ஆத்மார்த்தமான நண்பர்கள் முன் வைக்கும் உரையாடல்களும், அவர்கள் கையாளுகிற மொழியும் தான் நம்மையும் அவர்கள் அருகில் சம்மணமிட்டு அமர வைத்து, கலந்து கொள்ள வைக்கிறது.

அப்படி அவர்கள் நம்மோடு என்னதான் பேசுகிறார்கள்?? என்று கவனிக்கும் போது முதலில் மிகச் சாதாரணமாய் தோன்றுகிற விசயங்கள் தான் நமக்கு அணிவகுத்து நிற்கின்றன. ஆனால் அவை எதற்கு அப்படி ஒருமித்து க்யூவில் நிற்கின்றன என்று மறுமுறை வாசிக்கும் பொழுது தான் விளங்க ஆரம்பித்தது. கடந்து செல்ல முடியாத வலிகள் தான் இந்த தொகுப்பிற்கான உந்துதல் என்று என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அது நவீன உலகில் பிழைப்பதை மட்டுமே வாழ்க்கையாக நம்பிவிட்டு நாம் அப்புறப்படுத்திவிட்ட கலையுணர்வு மற்றும் தொன்மைகள் மீது நமக்கிருக்கும் கடமைகளை எண்ணி அவர்கள் வருந்தியிருப்பதைக் காட்டுகிறது. எவ்வளவு எளிதாக சுவர் ஓவியங்கள் மீது நமது பெயரை எழுதி அதை சேதப்படுத்தும் மனநிலை பொது ஜனங்களுக்கு உருவாகிவிட்டது என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பொறுப்பற்றச் சமுதாயம் மீது, இளைஞர்கள் மீது தமது கோபத்தையும், ஆற்றாமையும் வெளிப்படுத்தி எத்தனையோ எழுத்துகளையோ பார்த்துவிட்டாயிற்று, இவர்கள் என்னப் பேசப் போகிறார்கள் என்று கேட்கிறீர்களா?? ஆம் அவர்களும் மீட்டெடுப்பைப் பற்றித் தான் பேசுகிறார்கள். ஆனால் இந்த மீட்டெடுப்பு ஒரு புரட்சிப் படையை உருவாக்கி நம் அரும்பெரும் பொக்கிசங்களைக் காப்பதோ அல்லது மீட்டெடுப்பதோ அன்று. இயல்பான வளர்ச்சியில் இருந்து, திடீரென்று ஒரு அசுர வேகத்தில் நமக்கு ஏற்பட்ட வளர்ச்சி நிலை, அறிவியல் தொடர்பு சாதனங்கள், மேலைநாட்டு மோகங்கள் கட்டிபோட்டு விட்ட நம் கண்களை அவிழ்த்து விடுவது தான் இந்த மீட்டெடுப்பு.

இங்கேயும் எப்படி உலகமயமாக்கல் பற்றிய உரையாடல் வந்து விட்டதே என்று சலிப்படையத் தேவையில்லை. உலகமயமாக்கல் பற்றி நேரிடையாக அவர்கள் பேசவில்லை, அவற்றின் நல்லது கெட்டது பற்றிய உரையாடல்கள் நடத்தவில்லை, இந்த தொன்மையான தேசம், தன் கலைத் தன்மையை உலகம் முழுக்க வியாபித்திருந்த காலம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே. ஆனால் இந்த உலகமயமாக்கல் தந்திருக்கும் வளர்ச்சியில் நமது மனநிலையில் ஏற்பட்டிருக்கும் அதீத மாற்றங்கள் தான் எவ்வளவு பெரிய இடைவெளிகளை விட்டிருக்கிறது என்று இத்தொகுப்பு பேசுகிறது, நம்மோடுதான்.

செவ்வியல் கலைகளை நோக்கித் தேடியலையும் பயணம் என்பது ஏதோ சில கலைஞர்களுக்கானது மட்டுமல்ல, நமது வாழ்க்கையில், பொருளாதாரத்தில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் அதே சமோசா கடை, அதே காபி கடையைத் தேடிச் சென்று அருந்துவதைப் போலத் தான் என்று நம்மைவிட்டு அந்நியப்படாமல், வாசகர்களாகிய நம்மையும் அவர்கள் தேடலில், உரையாடலில் இணைத்துக் கொள்கிறார்கள் இந்த கலைஞர்கள்.

சமோசா, காபிக் கடை  என்றும் தஞ்சாவூர் கோயில், ஓவியங்கள், பேராசிரியர் இராமனுஜம் மீட்டெடுத்த ஒரு நாடகம் என்று ஆரம்பிக்கின்ற உரையாடல் ரசனை என்றால் என்ன? அலங்காரம் என்றால் என்ன? கலையுணர்வு என்றால் என்ன? thought process என்றால் என்ன? என்ற கேள்விகளைக் கேட்டுவிடுகின்றனர். சரியாக ஒவ்வொரு கேள்வியாய் நாம் பயணிக்கிற வழியும் சுவாரஸ்யமாகத் தான் செல்கிறது, தேர்த் திருவிழா, கோலங்கள், அம்மாவின் கலையுணர்வு, அப்பாவுடன் உரையாடல், பிராண்டிங் பற்றிய உரையாடல், ஸ்ரீதர் படத்தின் வண்ணங்களின் நேர்த்தி என்றெல்லாம் நம்மை ஒரே மூச்சில் வாசிக்க வைக்கத் தூண்டுகின்றன. முதன் முறை வாசிக்கும் போது உங்களுக்கு இந்த சுவாரஸ்யங்கள் மட்டுமே தென்படலாம், இவர்கள் அடுக்கும் கேள்விகளை கோர்த்துக் கொண்டே வந்தால் தெரியும் அவர்கள் மிகவும் திட்டமிட்டு பின்னப்பட்ட உரையாடல்களின் தொகுப்பு தான் இத்தனை எளிமையாகத் தோற்றமளிக்கிறது.

கலை உணர்வு ஒரு மீடியத்தைத் தேடி அது உருப்பெரும் முன் அது எப்படி இருக்கிறது என்ற உரையாடலைப் பதிவு செய்வதற்கான முயற்சி தான் அது, thought process & intellectual thought process பற்றிய பதிவுகள் தான் அவை, ஒரு படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இடையே இருக்கும் இயக்கம் பற்றி கலைஞர்கள் பேசிக் கொள்ளலாம், ஆனால் நம் போன்ற வாசகர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு சமோசா கடை, ஊர்த் திருவிழா, ஸ்ரீதர்,பாலா திரைப்படங்கள், சின்ன யானை வழியாகக் கூட்டி வருகிறார்கள். இப்போது அந்த கேள்வியை உற்று கவனிக்கலாம் அல்லவா??ஒரு படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இடையே இருக்கும் இயக்கம் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவல் எழுகிறது. இது இந்த நண்பர்களின் வெற்றி

இப்புத்தகம் வாசித்தவுடன், முழுமையாக நாம் எத்தனையோ சந்தோசங்களை பறிகொடுத்து விட்டு நிற்கிறோம் என்ற வெறுமை அப்பிக் கொள்கிறது. எங்கேயோ ஓடுகிறோம், தேடிகிறோம், ஏதோ கிடைத்துவிட்டதாக மகிழ்வடைகிறோம், ஆனால் அந்த மகிழ்ச்சி நிறைவானதா அல்லது உண்மையானதா என்றால் இல்லை. அது எப்படி மகிழ்ச்சியானதாக இல்லை என்ற பட்டியலும் இந்த புத்தகத்தில் கிடைக்கிறது.

*1980களில் தஞ்சை சுவோரோவியங்கள் மீது Distember பூசும் பொழுது, சாலையில் நின்று போராடிய மனங்கள் இன்று எந்த அக்கறையும் காட்டாமல் வெறும் இஞ்சினியர்களாய் மட்டும் எண்ணிக்கை காட்டுகிறது.

*மஹாராஸ்ட்டிராவில் 450க்கும் மேற்பட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆர்ட் சொல்லிக் கொடுக்கும் கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. (ஆனால் நம்மூரில்???)

*பரவலாக இயல்பாக இருந்த தொழிலை  அரிதாக்கி, இது அரிதாகிவிட்டது காப்பாற்ற நான் மட்டுமே மிச்சம் என்று கொள்ளையடிக்கும் பண்பாட்டுக் காவலர்கள்

இது போன்ற கேள்விகள் எழுப்பும் தாக்கம் எளிதில் சொல்லி விட முடியாது தான். ஆனால் ஒரு பொறுப்புணர்வைத் தூண்டும், ஆனால் செயல்பாடுகளைக் கோருமா என்கிற கேள்வி Out of the context தான். அதே சமயம் செயல்பாடுகளைத் தூண்டும் என்பது உறுதி, “ஒரு சாதாரணமான, ஒரு இயல்பான, ஒரு சந்தோஷ்மான, ஒரு முழுமையான வாழ்க்கையை வாழக்கூடிய ஒவ்வொருத்தனுமே ஒரு படைப்பாளி, ஒரு நல்ல இயக்குமுடன் கூடிய படைப்பைப் படைப்பவன்”, இதை மனதிற்குள் கோயில் கட்டி இறைவனுக்கு சேவை செய்த முக்கிய நாயன்மார்களுள் ஒருவரான பூசலார் நாயனாருடன் இந்த உரையாடல் முடிவடைகிறது.

அதற்குப் பின்னர் இருக்கும் அரூபம் பற்றிய பதிவுகள் இந்த கருத்துகளோடு முழுதும் ஒத்த நிலையில் தான் முழுமையாக நாம் ஒன்ற முடியும், அது நவீன ஓவியங்களோடு பரிச்சயமாகத் தேவைப்படும் மனநிலை.
*******************************
ஒரு மனநிலை ஓர் இரவில் ஒரு பத்து நிமிடம் என் இயக்கத்தை, என்னை ஒரே இடத்தில் நிறுத்தியிருக்கிறது. நிச்சயமாய் இது மரணம் இல்லை, இது விபத்து இல்லை உறுதியாக இது தியானமும் இல்லை. இந்த புத்தகத்தின் தாக்கம் இல்லை என்று என்னால் சொல்லிவிட முடியவில்லை ( இரண்டு முறை வாசித்திருந்தேன்), ஏனேன்றால் எனக்குள் உரையாடல் நிகழத் துவங்கியிருந்தது. நான் அந்த நேரத்தில் எதை மறந்திருந்தேன் என்பதை உறுதிப் படுத்த வேண்டியிருந்தது. நான் முதலில் என்னை யார் என்று நினைவில் கொள்ள வேண்டுமா?? அல்லது எனது முகவரி எங்கு என்று தெரிந்து கொள்ள வேண்டுமா??

இப்போதைக்கு என் முகவரி மட்டும் போதும் என்று நினைத்தேன், ஆனால் பிரயோஜனம் இல்லை. எங்கிருந்து வந்தோம் என்று கூட மறந்து விட்டது. சரி, நான் யார்?? என்றெல்லாம் கேள்வி கேட்பது எனக்கே ”கொஞ்சம் ஓவரா போறோமா??” என்று கேட்க வைத்தது. கொஞ்ச நாட்களாக SELF பற்றிய விவாதங்களில் வேறு நிறைய கலந்து கொண்டேன், ஒரே ஒரு வழி தான் இருந்தது, நான் மறந்து விட்டது மற்றும் நினைவில் மீந்து கொண்டு இருப்பது இவ்விரண்டிற்கும் இருக்கும் இடைவெளி பற்றி கொஞ்சம் கவனிப்பது

ஆம், சற்று நேரத்தில் அந்த இடைவெளி நன்கு புலப்பட ஆரம்பித்தது, இடையே இருப்பது கொஞ்ச தூரம் தான், வண்டியை எடுத்துக் கொண்டு செல்வோம் என்பது தான் அது. பயணப்பட்டால் வேறு ஏதாவது ஸ்தூலங்கள் நமக்கு நியூரான்களுக்கு SMS அனுப்பி ஞாபகம் கொள்ள வைக்கும் என்று தோன்றியது. சில தெருக்கள் தாண்டும் வரை இல்லாத ஞாபகம், ஒரு விமானத்தில் ஒலியைக் கொண்டு - இது சென்னை கண்டிப்பாக 2008க்குப் பிறகு (2008ல் தான் நான் சென்னை வந்தேன்) என்று முடிவுக்கு கொண்டு வந்தது. பின்னர் கூவத்தின் நாற்றம், ஆஹா இது ஜாஃபர்கான் பேட் என்று ஞாபகம் அளித்தது. அப்படியெ கத்திப்பாரா வரை ஒரே Mental work தான், வண்டியை ஓட்டியது எல்லாமுமே -Sub-conscious தான். கத்திப்பாரா பாலத்தில் இருந்த சோடியம் விளக்கொளி, இரவல் நிலவொலி, மெட்ரோ ரயில் கட்டுமானச் சத்தங்கள், வாகனங்கள் இல்லாத சாலைகள் எல்லாமுமே ஒரு கம்போஷிசனாகி... என்னை மீட்டுத் தந்தன.

“நீ காளிதாசன் எனும் இயற்பெயர் கொண்ட ஜீவ கரிகாலன், படா குண்டன், லாஜிஸ்ட்க்ஸில் வேலை பார்க்கிற, அம்மா உன்னை வசைபாட வீட்டில் காத்திருக்கிறாள், வீட்டிற்கு போனதும் பாலாவுக்கு //am reached//என்று தகவல் கொடு, அந்த நிகழ்வைப் பற்றி ஒரு பதிவிடு , முக்கியமா மூனு ட்ரை ஜாமூன் சாப்பிட்டிருக்கிற ENO போட்டுக்கோ” என்று என்னை சகஜநிலைக்குத் திருப்பியது.

இந்தப் பதிவில் வரும் ஒர் இரவில் நடந்த கதையினை இவர்கள் தொகுப்பில் இறுதியாகப் பேசிய ஓவியத்தின் ILLUSTRATION ஆக நான் செய்திருக்கிறேன் (ஆனால் இது உண்மைச் சம்பவமும் கூட). ஏனென்றால் இந்த தமிழ்ச் சூழலில் ILLUSTRATION பற்றிய உரையாடல்களைக் கூடத் தேடிப் பிடிக்க முடியவில்லை,  நாம் ஏன் ஓவியத்திற்கு ILLUSTRATION ஆக கதைகள் சொல்லக் கூடாது என்று தோன்றியது.

பல புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன, வெகு சில புத்தகங்கள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. நான் கொண்டாடுகிறேன் இந்த புத்தகத்தை, இவர் படைப்புகளைப் பற்றி பேசுவதற்கான பயிற்சியை, அந்த SPACEஇனை அவரிடம் இருந்தே எடுத்துக் கொள்கிறேன், இந்தப் புத்தகம் வழியாக இந்த புத்தகத்தை மீண்டும் வாசிக்கையில், அரூபம் எனும் கடைசிப் பகுதியில் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எழுந்து தான், இந்தப் பதிவை எழுதுகிறேன்.
நன்றி

புத்தகம் : நம்மோடுதான் பேசுகிறார்கள்
ஆசிரியர்கள் : சீனிவாசன் - பாலசுப்ரமணியன்
பதிப்பகம் - வம்சி

ஞாயிறு, 10 நவம்பர், 2013

அலங்காரம் என்றொரு கலையுணர்வு - பஜ்ஜி-சொஜ்ஜி /046


எல்லா விடியல்களுமே அன்றைய இரவு எப்படி ஒரு மனநிலையைத் தரும் என்ற ரகசியத்தை மறைத்து வைத்தபடியே தான் விடிகின்றன..

நேற்று  “நம்மோடு தான் பேசுகிறார்கள்” எனும் ஒரு உரையாடல் தொகுப்பிற்கான விமர்சனக் கூட்டத்திற்கு சென்று வந்தேன். நண்பர்களோடு அமர்ந்து சினிமா பார்ப்பதெல்லாம், இது போல கூட்டங்களுக்குச் செல்லும் நிறைவில் பத்து சதவீதம் கூட தராது என்று சொல்லலாம். அப்படியொரு நாள் தான் நேற்று.

இன்றைய நவீனச் சூழலில் தொன்மை, கிராமியம், ஆறு, இழப்புகள் என்று பேசிக் கொள்ளும் இடங்களில் பெரும்பாலும் மிஞ்சுவது எல்லாம் விரக்தி தான் இருக்கும் என்பது என் அவதானிப்பு, நேற்றோடு அவை மடிந்துவிட்டன. அப்படிப் பட்ட ஒரு உற்சாகமான கூட்டம் இந்த புத்தகத்தை முன் வைத்துப் பேசியது, அந்தவகையில் இந்த புத்தகம் சாதித்திருப்பது ஒரு பெரிய விஷயம் தான் என்று தோன்றியது. கலையானது எப்படி சாதாரன வாழ்வியலில் இருந்து உருப்பெற்று தன் மீடியத்தைத் தேடிப் பிடித்து ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுத்து தேவையைத் திட்டமிட்டு ஒரு வடிவத்தில் சென்று அமர்கிறது என்று இந்த புத்தகத்தைப் பார்க்கும் பொழுது ராட்டினச் சக்கரப் பயணமாக உற்சாகம் தொற்றிக் கொள்கிறது, இந்த புத்தகம் பற்றி இன்னொரு பதிவில் பேசுவோம்.

புக்பாயிண்டில் நடந்த இந்த புத்தகத்தைப் பற்றிய விமர்சனக் கூட்டத்தில் பவா, சைலஜா, சௌமியா, தமிழச்சி தங்க பாண்டியம், பாரதி கிருஷ்ணக் குமார் மற்றும் இந்த புத்தகத்தின்ஆசிரியர்களான ஓவியர்கள் ஸ்ரீநிவாசனும், பாஸ் என்கிற கே.பாலசுப்ரமணியன் அவர்களின் பேச்சுகளில் கிளம்பிய உற்சாகம் அறை முழுதும் பரவியிருந்தது. பாரதி கிருஷ்ணக்குமார் இதுவரை நான் பார்த்திராத மாதிரி வேறு மாதிரியான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

இதில் கோணங்கியின் ஓவியங்கள் பற்றிய ஒரு பதினைந்து நிமிடங்கள் நிகழ்ச்சியின் உச்சம் என்று உணர்த்தியது, இந்தப் பேச்சினை என் ஆயுள் உள்ளவரை மறக்க இயலாது. சித்திரங்கள் பற்றிய அவரது பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வெடிப்பு நிகழ்ந்துக் கொண்டிருந்தது. Naked Eyeன் மகத்துவம் பற்றி ஒரு மாபெரும் கதை சொல்லி சில

வந்துப் பேசிய எல்லோருமே, சிலாகித்த ஒரு சொல்லானது என்னவென்றால் “அலங்காரம்” என்பது தான். தமிழச்சி ஞாபகம் கொண்ட தன் அப்பாவின் ஞாபகம் மற்றும் அலங்காரம் பற்றிய அவரது அபிப்ராயங்கள் (அதில் அவரது பூ, வளையல்கள் பற்றி அவர் பேசுவதற்கான வாய்ப்பை இந்த புத்தகம் உருவாக்கி வைத்திருப்பதை அவர் பேசும் பொழுது, என்னைப் போஒல பலருக்கும் அவரது அலங்காரம் பற்றி மனதில் இருக்கும் சில கேள்விகளுக்கான விடைகளை அவரே கேள்விகளை முன் வைத்து பதில்களையும் அளித்தார்). B.கிருஷ்ணக்குமார் ஞாபகம் வைத்திருந்த தன் அம்மாவின் நினைவுகள் எனக்கான குரலாக அவர் பேசியது போன்று இருந்தது. அலங்காரம் எனும் கலையம்சம் கொண்ட வார்த்தையானது மிகப்பெரிய உரையாடலை அந்த அரங்கில் முன்வைத்திருந்தது.

நிகழ்வு மிகவும் வித்தியாசமாக, நமது இலக்கியக் கூட்டம் போன்ற இறுக்கம் இல்லாமல் நடந்து முடிந்தது.

அலங்காரம்
************

ஓவியர் ஸ்ரீநிவாசனோடு கேட்டுக் கொண்டிருக்கையில் அலங்காரம் எப்படி கலையுணர்வாக மாறுகிறது என்ற transformation தான் இந்த நூலின் அடிநாதம் என்று தெரிய வருகிறது. அதற்கான யுக்தி தான் - இது போன்ற ஒரு உரையாடலைத் திட்டமிடுவது, அப்படி வந்திருக்கும் இந்த புத்தகம் தான் தான் இது போன்ற ஒரு அரங்கத்தை சாத்தியப்படுத்தியது. அதுவும் சரியான பதில் தான் வெற்றிகரமாக முடித்து விட்டனர் அந்த இரு நண்பர்களும்.

இவ்வளவு பேர் அலங்காரம் பற்றிப் பேசினார்களே என்று யோசிக்கும் பொழுது, கண்டிப்பாக இதன் ஆசிரியர் என்பவர் இது போன்ற ஒரு உரையாடல் உருவாகும் என்று எப்படியும் எதிர்பார்த்திருப்பார்கள் என்று தோன்றியது. அலங்காரம் பற்றி தனது ஏற்புரையில் ஃநிவாசன் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பும் கூடவே இருந்தது, உலகம் முழுக்க சுற்றி வந்தாலும் தன் நிலத்தின் மக்கள் தரும் அன்பும் மரியாதையும் சேர்ந்து உணர்ச்சி வயப்பட்ட நிலையில் நன்றிவுரையாக முடித்து விட்டுக் கீழிறங்கி விட்டார். கடைசியாக வெளியே வரும் பொழுது, பாலசுப்ரமணியன் அவர்களிடம் சென்று என்னை சுய அறிமுகம் செய்யும் பொழுது, அவர் என்னை முன்னமே அறிந்திருந்தார் (ஸ்ரீநிவாசன் சார் மூலம் தான்) என்பது எனக்குக் கிடைத்த ஒரு பரிசாகவே தோன்றியது. கீழே இறங்கும் போது தான் சிந்தித்தேன், அங்கே தேனீரோடு வழங்கப்பட்ட இனிப்பு மற்றும் சமோசாவும் தான் இந்நிகழ்வை மிக அழகாக அலங்கரப்படுத்தியிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அடடா இந்த ஏற்பாட்டை யாரும் கவனிக்கவில்லையா என்று வியந்தேன்

இந்திய ஓவியச் சூழலில் இருக்கும் பிரதான ஓவியப் பள்ளிகள் என்று எடுத்துக் கொண்டால் பாம்பே, வதோதரா(குஜராத்) மற்றும் வங்காளத்தின் பாரம்பரியமிக்கப் பள்ளிகளே, இந்த தென்னிந்தியக் கலைஞர்களின் (madras movement)  விழாவுக்கு அலங்காரம் செய்வது போல் - முறையே பாம்பே சமோசா, வதோதரா மில்க் ஸ்வீட் ஒன்று(டோட்லாவோ கோட்லாவோ பெயர் அடிக்கடி மறந்து விடுகிறது) மற்றும் பெங்காலி ஸ்வீட்டான ட்ரை ஜாமூன் என்று அலங்காரப் படுத்தியவற்றை நான் உணர்ந்து கொண்டேன். அலங்காரம் எனும் சொல் இத்தனை கலைநயம் மிக்கதா என்று சந்தோஷத்துடன் உறங்கச் சென்றேன்..

What A Sweet Memories

ஜீவ.கரிகாலன்




வியாழன், 31 அக்டோபர், 2013

வசந்தகால நினைவுகள்

இந்தப் பதிவு முழுதும் எனது கல்லூரி நண்பர்களுக்காக!!

ஒரு கதை எழுதத் தோன்றிய நள்ளிரவில் உங்களுக்கு ஒரு கடிதம் எழுத விரும்புகிறேன்... ஏனென்றால் இது தான் கடவுள் வாழ்த்து....

நண்பர்களே எங்கே இருக்கிறீர்கள்!! நலமா?? உங்கள் குடும்பம் நலமா??

இங்கே நான் நலமாகத் தான் இருக்கிறேன், என்னைச் சுற்றி எல்லோருமே நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நான் தான் நல்லவனாக இருக்க முடியவில்லை, அவர்களுக்கு ஏற்றவனாக இருக்க முடியவில்லை. எத்தனை களிப்புடனும், நிறைவுடனும் வந்தாலும் வீட்டிற்குத் திரும்பியதும் வெற்றிடம் தான் மிஞ்சுகிறது.

அப்போது தான் உணர்கிறேன் நானாகிய என்னில் அரிதாரம் மட்டுமே வெளி உலகிற்குள் உலவுகிறது, என் அகம் விரும்புவது உங்கள் அண்மை தான். உலகம் நன்றாகத் தான் இயங்குகிறது, அது நான் பிறப்பதற்கு முன்பு சுழன்ற அதே அச்சில் தான் இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது... எனக்குத் தான் வித்தியாசமாகத் தெரிகிறது.

எனக்கென்று இந்த சமூகம் பல செயல்களைப் பணித்திருக்கிறது, உங்களுக்கும் கூட அப்படித் தான் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் முன்னரே சொன்னேன் அல்லவா?? "நான் தான் எனக்குப் பிரச்சினையாக இருக்கிறேன்" என்று, நண்பர்களே எல்லாம் பொருள் சேர்க்கும் ஒரே அச்சில் தான் நாமும் சுழன்றுக் கொண்டிருக்கிறோம். நமக்கு வயதாவது தெரிவதில்லையா??

நாம் இன்று பேசிக் கொண்டிருக்கிறோம் !! நல்லவேளை இந்தத் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தி விட்டது, நமக்கிருக்கும் இடைவெளியை அது குறைக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை. நானும் மனிதன் தானே எல்லோரையும் போலவே ஆசை வருகிறது, நான் யார்?? நீ யார்?? உன் அந்தஸ்து என்னவாகிப் போகிறது? நீ என்னவாகப் போகிறாய்? இவள் மகிழ்ச்சியாய் இருப்பாளா?? இவன் வெற்றியடைவானா? இவன் மேலே படிப்பானா? இவள் காதல் கைகூடுமா என்றெல்லாம் நாம் நினைத்துப் பார்க்கவில்லை.

நமக்கு இருந்ததெல்லாம், நாம் தினமும் பேச வேண்டும், சிரிக்க வேண்டும் அவ்வப்போது அழவேண்டும், குட்டிக் குட்டிச் சண்டைகள் போட வேண்டும்.. களிப்போடு கழித்தோம். இப்போது நிழற்படங்களில் தெரியும் எடை குறைந்த அன்றைய நான் இன்று நானாகயில்லை, அது போல தான். ஒருவொருக்கொருவர் பிடுங்கித் தின்ற பண்டங்களின் சுவை, திரும்ப கிடைக்கவேயில்லை. என் தோள் சாய்வதும், அடிப்பதும், கிள்ளுவதும் நம்மில் நிகழ்ந்துக் கொண்டு தான் இருந்தது. வகுப்புகளின் போது நாம் பேசிக் கொள்ள கிழித்த பேப்பர்களின் சத்தம் இன்னும் என் ஆழ்மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஏதாவது ஒரு நிகழ்விலும், விழாக்களிலுமே என்னைக் கிண்டல் செய்த வார்த்தைகள் எவ்வளவு மென்மையானவை, இங்கே வாழ்த்தும் சொற்களிலேயே வலையும் வீசுகின்றனர். என் டைரிக் குறிப்பில் இருந்த உங்கள் வாழ்த்துகள் தான் என்னை எழுப்பி விடுகிறது, நான் அடிக்கடி விழுந்துவிட்டேன்.

நம் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ஒரு காதல் கதை இருந்து, நமக்குள்ளும் சில காதல்கள் இருக்கவே செய்தது. காதலுக்கு உதவிகள் நடந்தன, ஆலோசனைகள், புத்திமதிகள், வசவுகள் இருந்தன. காதல் பயணித்தது. அது தன் வேலையைச் செய்து கொண்டிருந்த போதும் நம் நட்பில் திளைத்துக் கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட உங்களின் இல்லாமையைத் தான் நான் பெரிதும் உணர்கிறேன். உண்மையான பாராட்டுகளும், புத்திமதிகளும் எனக்குத் தெரியாத வண்ணங்களில் வலம் வருகின்றன.

ஒட்டுமொத்தமாக மொத்த வகுப்பும் ஒரு குடும்பமாய் மூன்று நாட்கள் வாழ்ந்தோம், அந்தச் சுற்றுலா போல் திரும்ப கிட்டாத சந்தோஷம் என் வாழ்வில் இதுவரை இருந்ததில்லை, இனிமேலும் கூட வராது என்பதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன். நாம் ஒரு மரணத்தைக் கடந்து வந்தோம், வெறுமனே அல்ல கரைந்திருப்போம் ஒரு துளியாவது..

ஒருவரை ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொண்ட பொழுதுகளில் எல்லாம் யாரோ ஒருவர் தேவதையாக்கப் பட்டிருந்தோம். நமது சிரிப்பொலிகள் பதிந்த திரையரங்கு நினைவுகளில் ஒட்டடை மட்டுமே படிந்திருக்கிறது. யாரோ ஒருவர் குடும்பத்தின் வேதனைகளை, நண்பர்கள் பகிர்ந்து கொள்ள பாடங்களில் படித்ததில்லை. ஏன் நாமெல்லாம் அருகருகே வாழ்ந்து முடிக்கும் வரம் கிடைக்கவில்லை??!!

நண்பர்களே!! வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் சந்திக்கிறோம். முதலில் அதே நெருக்கம் இருந்தது, பின்னர் நெ ரு க் க மானது, அடுத்து நெ
                                                                                                               ரு
                                                                                                                க்
                                                                                                                க
                                                                                                                மாகின்றது.

உலகில் எல்லோருக்கும் இப்படித் தான். அதை மாற்ற முடியாது. ஆனால் ஒரு அரிய புகைப்படமோ!! திரைக்காட்சியோ அல்லது திடீர் தனிமையோ நம்மை ஞாபகப்படுத்தும். நம் கண்ணீர்களை எண்ணிப் புன்னகைப்போம், சிரிப்பொலிகளின் நினைவு கண்ணீரை வரவழைக்கும். சிலருக்கு வாய்ப்பு கிட்டும், சிலருக்கு அது வெறும் வாய்ப்பாக மட்டுமிருக்கும்.பின்னொரு நாள் காதோர நரையிலோ, பல் விழுந்த வயதிலோ நம் அண்மை தேவைப்படும், அதற்காவது நமது பிரிவில் சேர்க்கின்ற பணம் பயன்படட்டும் என்று நம்புவோமாக.

ஆம் உங்களை எண்ணுகிற இந்த நிசி தான் என்னை தூண்டுகிறது ஒரு கதை சொல்ல, நம் தாக்கம் இருக்கின்ற ஒரு காதல் கதை, நண்பர்களைப் பற்றிய கதை.. எத்தனையோ முறை சொல்லப்பட்ட மற்றுமொரு அதே கதை.. எண்ணிக்கைகளுக்காக இல்லாமல், உங்களோடு மீண்டும் கல்லூரி செல்வதாக நினைத்து எழுதுகிறேன், அநேகமாக அடுத்த வருடத்திற்குள்ளாவது இந்தக் கதையினை முடிக்கலாம்,, முடிப்பேன். இதுவே அதற்கு முன்னுரை..

நண்பர்களே!! உங்களால் தான் நான் படிப்பினைத் தொடர்ந்தேன்!! அந்த மூன்று வருடம் என்னும் வசந்த காலம் வாழ்ந்தேன்.... எனக்குத் தெரியாது திரும்பக் கிடைக்காது என்று, ஆனால் இதில்  அந்த வாழ்க்கை திரும்பவும் பயணிக்கும்... மீண்டும் ஒரு கல்லூரிக் காலம்.

வருகிறேன்...

செவ்வாய், 29 அக்டோபர், 2013

பஜ்ஜி -சொஜ்ஜி - 45 / சூழலை மதிக்கும் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமா??

 சூழலை மதிக்கும் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமா??


என்னடா இது? பட்டாசையும் ஜீன்ஸையும் ஒன்றாக வைக்கும் அளவிற்கு ஜீன்ஸ் என்ன அவ்வளவு ஆபத்தானதா என்று யோசித்தீர்களாயின் உங்களைத் தான் இந்தக் கட்டுரை டார்கெட் செய்கிறது. தவிர இதை பட்டாசுகளோடு ஒப்பிடுவதற்குக் காரணம் பட்டாசைப் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஓரளவுக்கு உங்களை சென்றடைந்திருப்பதால் ஜீன்ஸினை இதனோடு Tag செய்கிறேன்.

உடலுக்குத் தீங்கு:-

பட்டாசுகள் : இதன் புகைகள் நம் உடலுக்குக் கேடு விளைவிக்கும், மூச்சுத் திணறல், ஆஸ்மா, தீப்புண்கள், சரும நோய் என்றெல்லாம் சொல்லலாம், ஜீன்ஸிற்கு???

ஜீன்ஸ் எனப்படும் பருத்தி ஆடைகள், மலைவாசத் தளங்களிலோ, குளிர் பிரதேசத்திலோ அணிந்து கொள்ளுதலை மட்டுமே உடலால் ஏற்றுக் கொள்ள முடியும்.

மற்றபடி ஜீன்ஸ் மிக மிக ஆபத்தான ஒரு ஆடையாக அதைப் பற்றி தெரிந்து கொள்வது தேவையாயிற்று. ஜீன்ஸ் வந்த பிறகு இருபாலரும் அதை எளிதாக ஏற்றுக் கொண்டு தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர், இப்பொழுது மிக இறுக்கமான ஆடையாக அணிகிறார்க்ள். முதலில் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் வரும் ஆபத்துகளும், இரண்டாவதாக சுழலில், பொருளாதாரத்தில், செய்முறையில் உள்ள ஆபத்தையும் என விவாதிப்போம்.இறுக்கமான ஆடையாக ஜீன்ஸை அணிவதில் என்ன பலன் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்துப் பார்த்தால், ஒரு பலனுமில்லை, எனும் பதில் தான் வருகிறது. கவர்ச்சி, அழகு எனும் பெயரில், ஜீன்ஸ் ஆடையை உடலோடு இறுக்கமாய் அணிவது, நமது உடல் அமைப்பை வெளியே எடுத்துக் காட்டும் வேலை ஒன்றை மட்டுமே செய்கிறது. இன்னும் சொல்லப் போனால் நவீன யுகத்தில் இறுக்கமான ஆடை அணியும் வழக்கம் கலாச்சாரமாக மாறிட ஜீன்ஸின் பங்கு தலையாயது. இதனால் வரும் நோய்களின் பட்டியலும் மிகப் பெரியது.

*இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகள் தொடைகளில் ஏற்படுத்தும் வியர்வை மற்றும் அழுத்தம் காரணமாக பித்தப் பை, அண்டம் போன்றவற்றில் தொற்றுநோய் (infection) பரவலாம். அடிவயிற்று வலி காரணமாகக் குடல் வலி, ஆண்களுக்கு உறுப்புகளில் எரிச்சல், வியர்வைக் கொப்புளம் போன்றவற்றோடு விதைகளின் இடமாற்றம், meralgia paresthetica போன்ற நரம்புக் கோளாறுகள், lipoatrophia semicircularis என்பன போன்ற நோய்கள் வரும் அபாயம் இருக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டெலிகிரஃப் பத்திரிக்கைக்காக எடுத்த ஒரு ஆராய்ச்சியில் 2000 ஆண்கள் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டனர் (2012ல்). அவர்கள் இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகளைத் தொடர்ந்து உபயோகப் படுத்த ஆரம்பித்தனர். அதன் முடிவில் பத்தில் ஒருவர் ஆடையை அசௌகரியாகக் கருதி அதைத் தவிர்க்கும் மனநிலையில் இருந்தது தெரிய வந்தது. கிட்டத்தட்ட பாதி பேருக்கு இரைப்பை மற்றும் பாலுறுப்புகளில் தொற்று நோயால்(infection) பாதிக்கப் பட்டனர், கால்வாசி பேருக்கு இரு தொடைகளுக்கு மத்தியில் படை இருந்தது, ஐந்தில் ஒருவருக்கு விதை இடமாற்றமாகியிருந்தது, பலருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டிருந்தது. .இங்கிலாந்திலேயே இத்தனை ஆபத்துகளையும் தீங்குகளையும் தரும் ஜீன்ஸ் ஆடைகள் இந்தியாவின் தட்பவெப்பத்தில் எத்தனைக் கேடுகளைத் தரும் என்பது எல்லாருக்கும் எளிதில் விளங்கக் கூடியதே..


சுற்றுச்சூழல்

பட்டாசுகளை சுற்றுச்சூழலுக்கான எதிரியாக நம்மில் பெரும்பாலானோர் கவனிக்கத் தொடங்கிவிட்டோம்!!

ஜீன்ஸ் உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு எத்தனைக் கெடுதல் தரும் என்று பார்க்கும் பொழுது முதலில் உலகின் ஜீன்ஸ் உற்பத்தியைப் பற்றிய விவரங்களைப் பார்க்க வேண்டும் (பார்க்க பட்டியல் 1). அவற்றுள் கிட்டதட்ட 60% சதவீத உற்பத்தியை ஆசிய நாடுகளே கொண்டுள்ளது. இந்த பட்டியல் வளர்ச்சியைக் கணக்கிட்டு ஒரு தொழிற் கூட்டமைப்பில் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தான். ஆனால், இவை நமக்கு கொடுக்கும் அதிர்ச்சிகளோ ஏராளம். இதன்மூலம் வளர்ச்சி என்பது மிகவும் கேள்விக்குரியதாகிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். உலகில் உள்ள பிரபலமான எல்லா வகை ஜீன்ஸ் பிராண்டுகளும் நம் நாட்டில் உற்பத்தியாகிறது என்பது தெரியுமா (killer, denim, trigger போன்றன கர்நாடகாவில் தான் தயாராகின்றன)

1.உலகில் உள்ள நாடுகளில் 21% சதவீத உற்பத்தியும், 4.5 சதவீத வளர்ச்சியும் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது. மிகப் பெரிய தொழிற்துறையாகவும் ஜீன்ஸ் உற்பத்தி இருக்கின்றது.

2.ஒரு ஜீன்ஸ் துணிக்கான பருத்தியைக் உற்பத்தி/கொள்முதல் செய்ய 6800 லிட்டர் தேவைப்படுகிறது, ஒரு டெனிம் துணியினை நீலச் சாயத்தில் ஊறல் போட்டு நிறம் மாற்றிடத் தேவைப்படும் நீர் மற்ற துணிகளை சாயம் போடுவதை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கின்றது.

3.ஜீன்ஸ் துணிக்கான கொள்முதல் செய்யப்படும் பஞ்சின் பற்றாக் குறையை, விலையேற்றத்தை சமாளித்துக் காப்பதற்கு பஞ்சின் தேவை அதிகமாகிறது. இந்தப் பற்றாக்குறையை சமாளித்திட முதல் அழைப்பாக BT பருத்திகளை இறக்குவார்கள்.

4.இந்தியாவில் பருத்தி உற்பத்திற்கு 5% சதவீத நிலத்திலேயே பயரிடப்படுகிறது, ஆனால் இந்த உற்பத்திக்காக நாட்டின் 25% இருந்து 50% வரை சில பூச்சிக் கொல்லி மருந்து பருத்தி உற்பத்திக்காகவே பயன்படுத்தப் படுவதால் நிலத்தின் நச்சுத் தன்மை அதிகரிக்கிறது.

5.நீல நிறத்திறகாக எடுத்துக் கொள்ளப்படும் செயல்முறைகள் தான் மிக மிக ஆபத்தானது. இதற்காக உபயோகிக்கப் படும் சிந்தடிக் சாயங்கள் (முந்தைய காலத்தில் தாவரங்களிலிருந்து சாயம் எடுத்துவரப் பட்டது) பெரிய அளவில் ஆசியா நாடுகளில் நீர்நிலைகள் மாசுபடக் காரணமாக இருக்கின்றது. சீனா, இந்தோனெசியா, இந்தியா ஆகிய நாடுகளில் பாயும் நதிகளில் பல நிறங்கள் இருக்கின்றது. சீனாவில் Guang Zhou நகரில் உள்ள Pearl எனும் நதி நிறம் மாறிய அவலம் உலகின் மிகப் பெரிய தொழில் நகரம் என்று தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் இந்நகரத்தின் வரலாற்றில் இருக்கிறது
சீனாவில் ஜீன்ஸ் தொழிற்சாலைகளினால் மாசடைந்த பியர்ல் நதி செல்லும் வழி


6. ஆற்று நீரில் கலந்த சாயங்கள், பல குளங்களைத் தொடக் கூட இயலாதவாறு குடிநீர் பிரச்சனையையும், விவசாயம் பண்ண முடியாத சூழலையும் உருவாக்கிவிட்டது.



பொருளாதாரம் :
பட்டாசினைத் தவிற்பதற்கு தலையாய காரணமாக இதைச் சொல்லலாம், ஒரு தனி மனிதனின் அல்லது குடும்பத்தின் செலவாகப் பார்க்கப் படும் பொழுது, அதுவும் இன்றைய விலைவாசியில் குறிப்பிடத்தகுந்த அளவு ஒரு தொகையினை சேமித்து விட முடியும் என்பது முக்கியமான காரணமாகிறது. 

இதுவே ஒரு நாட்டின் பொருளாதாரக் கணக்குகளில் இந்த துறை நசுங்குவதால் ஏற்படும் இழப்பை ஏதோ ஒரு வகையில் வேறு பொருட்களிலோ சந்தையிலோ குடும்பங்களால் செய்யப்படும் நுகர்வு இதனை ஓரளவிற்கு ஈடுகட்டும், அதே போல சூழலுக்கு கொடுக்கும் விலையாகவும் இதைக் கொடுக்கலாம். ஒரு சமூக Cluster அடிப்படையாக இருப்பதால் சிவகாசியில் வேறு ஏதாவது தொழிலைப் பிரதானமாக எடுத்துக் கொள்ளும் சாத்தியம் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைத் தொழிலாளர்களுக்கு இனி அந்த ஆபத்தான வேலையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

ஜீன்ஸ் ஆடை உற்பத்தி செய்யும் தொழிலாளார்களில் நிலையிலிருந்து பார்த்தால், இவ்வாடைகளை சாயமிட்டு முடித்தவுடன் செய்யப் படும் வண்ணநீக்கம் பற்றியும் தெரிந்துக் கொள்ளவேண்டும், இதைSand Blast என்று சொல்லுவார்கள். அதாவது ஜீன்ஸ் ஆடை/துணி குழாய் வழியாக ஆடை மீது பக்குவப்படுத்தப்பட்ட மணலை ஆடைகளின் மீது சூடாக உயர் அழுத்தத்தில் உருவாக்கப்பட்ட குழாய் மூலம் செலுத்தி ஆடைகளில் நிறத்தை மங்கச் செய்கின்றனர். ஆனால் இந்த வேலையைச் செய்யும் தொழிலாளர்களுக்கு நிறைய பக்கவிளைவுகளும், உடல் பிரச்சனைகளும் வருகின்றன. பல மேலை நாடுகளில் இந்த பணி செய்வதற்கு தடை வந்துவிட்டது, ஆகவே இதை முற்றிலுமாக ஆசியா நாடுகள் தான் செய்து வருகின்றன

நமது பலம் என்ன? நமக்கு உகந்தது என்ன? என்றும் தெரியாமல் இருக்கின்றோம். இப்பொழுது eco-friendly ஜீன்ஸ் உற்பத்தி என ஆர்கானிக் காட்டன் மற்றும் உற்பத்தி முறையில் உள்ள மாற்றங்கள் செய்து சந்தையில் விலையுயர்ந்த ஜீன்ஸ்களை கொணர்ந்துவிட்டனர்.

ஜீன்ஸ் ஆடையின் உளவியலே ஒரு வெளிக்காட்டுதலியல் (exhibitionism) தான் அதாவது, ஜீன்ஸ் பேண்ட் என்றால் துணி என்பதற்கும் மேலே அதில் இருக்கும் லேபிள், உலோக பட்டன்கள், ஜிப் மற்றும் பட்டன்களின் அளவு, சில அலங்கார சங்கிலி, அலங்கார எம்பிராய்டரி மற்றும் பிரிண்டுகள் முதலியன சேர்ந்தது ஆகும். அதன் லேபிள் தான் ஜீன்ஸ் பேண்ட்டின் அதி முக்கிய பாகம் எனக் கருத முடியும், அதை வைத்து தான் பெரும்பான்மையான பேண்ட்கள் வாங்கப் படுகின்றன. அதாவது பிராண்ட் ஃப்ரீக்காக நம்மை வைத்திருக்கிறது.இதை வைத்துக் கொண்டு ஜீன்ஸ் ஆடைகள் வெறும் மோகத்தையும், பகட்டையும் அடிப்படையாகக் கொண்டது என்ற முடிவிற்கு எளிதில் வரலாம். ஏனெனில் இந்தியாவில் 80% ஜீன்ஸ் உற்பத்தி லேபிள் செய்து தான் விற்கப் படுகின்றன.

final arguement:

ஜீன்ஸுக்கு எதிரான குரலை நான் நுகர்வுத்தன்மைக்கு எதிரான ஒரு முக்கிய படிக்கட்டாகப் பார்க்கிறேன், மேற்கத்திய ரெஸ்டாரெண்ட்கள், திண்பண்டங்கள், அதிவேக பைக்குகள், Accesoriesகள் போன்ற பல கட்டங்களுக்கு நகர்த்திட உதவும்.

நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள் எவ்வளவு தூரம் உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு அறியாமல் justify ஆகாத நுகர்வுக்குள் உங்களை செலுத்திவிட்டீர்கள் என்று. அது  நீங்கள் காலையில் எழுந்தவுடன் பல் தேய்ப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது. சந்தையில் இருக்கும் நல்ல பற்பசையை விட நான்கு மடங்கு விலையுயர்ந்த சென்சிடிவ் டூத் பேஸ்டில் இருந்து ஆரம்பிக்கிறது. அதற்கு காரணம் முந்தைய நாள் நீங்கள் ஜீன்ஸ் வாங்க ஷாப்பிங் செல்லும் பொழுது ஒரு சிக்கன் பர்கரையும் கோக்கையும் நீங்கள் கையில் வைத்திருந்தீர்கள்.

ஆம், இந்தக் கட்டுரை எழுதுவதற்காக நான் ஒரு வருடங்களுக்கும் மேலாக ஜீன்ஸ் அணிவதில்லை. எனது தீபாவளி ஓரளவுக்கு ECO-FRIENDLY தான். 
Happy Diwali friends

-ஜீவ.கரிகாலன்


திங்கள், 28 அக்டோபர், 2013

அலைந்து திரிந்து கொண்டிருக்கும் சிவனின் காதல்



காதல் தரும் துயரத்தில் மீள முடியாத நிலை அது, உலகையே அழித்து விடச் சொல்லும் வெறி மட்டுமே அதில் மேலோங்கியிருக்கும். அதுவரை கண்களுக்கு அழகாக பிரசன்னமாகியிருந்த இயற்கையின் அழகுகள் எல்லாம் வெறுப்பாக மாறி விடும். எத்தனை கனவுகள்?, எத்தனை போராட்டங்கள் ? எல்லாமுமே ஒரு வாழ்வுக்கான ஆரம்பத்திற்காகத் தான், ஆனால் அப்படி துளிர் விட்ட காதல் தான், அதற்குள் கருகிப் போனது எத்தனை கொடுமையானது??

இனம் மாறித் திருமணம் செய்து கொண்டது தானே ஒரு சமூகத்திற்கு அவமானகரமாய்ப் போய்விட்டது? ஒட்டுமொத்த நாடும் ஒரு காதலைப் புறக்கணித்தது.  காதலில் மூழ்காமல் இருந்தது பாசப்போராட்டம், இறுதியில் தான் வாழும் சமூகம் தன்னை அவமதிப்பதைத் தாளாது தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்குத் தூண்டியது. ஒரு பக்கம் தன் காதலி இறந்த சோகமும், மற்றொரு பக்கம் தங்களை ஒதுக்கிய, தூற்றிய சமூகத்தின் கோபமும். காதல் தரும் துயரத்தில் ஆற்ற முடியாத கோபம் இது, சர்வமும் நிர்மூலமாக்கப் பட்டது.

தீக்கிரையான தன் காதலியின் உடல் கருகித் தான் கிடக்கிறது. தனது வலிமையான தோள்களை கெஞ்சிடச் சொல்லிப் பணித்த அந்த மென்மையான உடலும், கருமையான விழிகளும் கருகித் தான் கிடக்கிறது. தன் ஏழ்மையை, கடின வாழ்க்கை முறையினை, தன் குறைகளை என எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட மேன்மை பொருந்திய அரசிளங்குமரி தன்னை விட்டு அகன்று விட்டாள்.

”நம் இத்தனைக் கால காதல் வாழ்க்கையில் அதிகப்பட்சமாய் ஒரேயொரு கடுஞ்சொல், ஆனால் அது உண்மையாகிப் போய்விடும் என்று யாருக்குத் தெரியும்?. அந்த சொல்லுக்கு மட்டும் என்ன அப்படிப்பட்ட சக்தி? அப்படியென்றால் எத்தனை முறை சொல்லியிருப்பேன், ’நீயின்றி நானில்லை ’ என. ஒருவேளை நானும் இறந்து விட்டேனா என்ன??.
’நீ என்னுள் பாதி’ என்றேனே, இனி எப்படி உனக்கு நான் இடம் தருவது? நீ எப்படி என் இடம் பெயர்வாய்??”...

 ”சொல் தாட்சாயினி!! நீ ஏன் அப்படி செய்தாய்”.
 ”என் ஒரு பாதியாகிய நீ மரித்துப் போன பின்பு நான் மட்டும் எப்படி சிவம்?? நான் என்பது இனி ஒரு சவம். எனினும், இப்பொழுதும் உன்னை விட்டு என்னால் பிரிய முடியாது.”

தன் கையில் வைத்திருந்த சூலத்தால், கருகிய நிலையில் இறந்து போன சதியின் உடலை ஏந்திய படி எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் நாடு முழுதும் அலைந்து திரிகிறான்...

இப்படி ஒரு ஓவியத்தில் மறைந்திருந்த முன் கதையானது என் கண் முன்னே வந்து போனது, புராணக் காலங்களில் இருந்தே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் தனியுலகத்தின் பொது எதிரியாகவே சமூகம் இருந்து வருகிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இது புராணச் செய்தியாக இருந்தாலும் இதை வரையும் மனநிலை எப்படி இருந்திருக்கும்? சூலத்தின் கூர்மைகளில் கிழிந்தபடி தொங்கும் சதியின் நிலை அவ்வோவியருக்கு எத்தனை துயரத்தை தந்திருக்கும்?

அந்த ச(வி)தியின் கோடுகளே, சிவனை உலகைப் பற்றிய பிரக்ஞை இல்லாத ஒரு மனிதனாகவும், தன் காதலி சவமாக இருக்கும் நிலையினை மறந்தவனாகவும், தான் எங்கே செல்கிறோம் என்று கூட தெரியாதவனாகவும் இருக்குமாறு அவன் முகத்தின் வெளிறியத்தன்மை காணப்படுகிறது. பின்னர் ஒருநாள் மரணம் பற்றியத் தெளிவு, வாழ்வினை மீச்சிறிய ஒரு  குறிக்கோள் ஒன்றின் பகுதியாகவும் எல்லையற்ற,  முடிவற்ற ஒரு வாழ்வின் ஒரு துளியாகவும் இருக்கும் பிறவியின் மீது ஒரு தெளிவு உண்டாகிறது. பின்னர் இந்தக் காதலே இவர்களை புராணங்களின் வாயிலாக வழிபடச் செய்யும் தெய்வங்களாக்கிறது என்பது வேறு கதையாகின்றது. இப்போது, இந்தக் கதையைப் போலவே இந்நாட்டில் காதல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது, இன்றைய போராட்டங்கள் நாளைய வரலாறாக மாறவே செய்யும்..



கிட்டதட்ட இவ்வோவியம் வரைந்து முடித்த நிலையில் ஓவியருக்கு கிடைத்திருக்கும் அமைதி நிலை. இதைக் கடக்கும் பொழுது நமக்கும் தான் இத்தகைய நிலை ஏற்படுகிறது, அந்த நீண்ட நெடிய துயருக்குப் பின் வரும் அமைதி நிலை, அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது!. எத்தனை யுகங்களானாலும் இன்னும் காதல் வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற நிம்மதியில் விளையும் அமைதி தான் அது.

18ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஒரு ஓவியம் தான் இது,
நீர்வண்ணங்களைக் கொண்டு காகிதத்தில் வரையப்பெற்ற இவ்வோவியத்தில் தங்கத்தினையும் அழகிற்காகப் பயன்படுத்தியுள்ளார் இதை வரைந்தவர். இதை வரைந்தவர் பெயர் தெரியவில்லை, இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா பகுதியில் வரையப்படும் மினியேச்சர் ஓவியங்கள். இப்போது இந்த ஓவியம்  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அரசுப் பொருட்காட்சியில் வைக்கப் பட்டுள்ளது. அதை மீட்டுக் கொண்டு வர நம்மால் ஏதும் செய்ய முடியாது தான், மீண்டும் கொண்டு வந்து நம் நாட்டில் வைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, ஆனால் நம் அருங்காட்சியங்களில் படிந்திருக்கும் தூசிகள் அவ்வோவியத்தில் வேறு யாரின் படத்தினையும் கூடுதலாக வரைந்து விடக் கூடும்

இந்த ஓவியத்தைப் பார்த்துச் செல்லும்  ஒரு அமெரிக்கனுக்கு இந்தப் புராணம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் காதல் என்பது உலகில் ஒன்று தானே!! சிவனின் துயரம் எந்த மொழி பேசுபவனுக்கும் புரியும்.


(பஜ்ஜி -சொஜ்ஜி - 44, ஓவியம் -01)
ஜீவ,கரிகாலன்

பஜ்ஜி - சொஜ்ஜி 43 /ஸ்விஸ் பாங்க் விவகாரம்



அனைத்து நாடுகளில் இருந்தும், அதுவும் குறிப்பாக இந்தியாவில் இருந்தும் அரசியல் வாதிகள், மற்றும் தொழில் அதிபர்கள், திரையுலகினர் என்று தங்களது கருப்பு பணத்தை  பதுக்கி வைக்கும் இடமாக சுவிட்சர்லாந்து வங்கிகள் செயற்பட்டு வந்தன.

அமெரிக்காவின் கடும் நிதிநெருக்கடியைச் சந்தித்ததன் விளைவாக, சமாளிப்பதற்கு எடுத்த பல நடவடிக்கைகளில் ஒன்றாகத் தான் ஸ்விஸ்பாங்கின் இந்த திடீர் நிலை மாற்றம். ஆமாம், நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாயும் என்பது போலவே, பல ஆண்டுகளாக இந்திய அரசு கருப்பப் பணம் பற்றிய கணக்குகளைக் கேட்டுப் போராடிக் கொண்டிருந்ததற்கு, அமெரிக்காவும் அதே கோரிக்கையை அழுத்தமாகக் கோரியதும், இப்போது ஸ்விஸ் அரசு செவி பணிந்து சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருப்பதன் மூலம் இனி ரகசியம் காக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

வரி தொடர்பான நிர்வாக தகவல்களை பரஸ்பரம் தரும் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அளவில் பல நாடுகள் இடையே பேச்சு நடந்தது. அதில் அமெரிக்கா, இந்தியா, சுவிட்சர்லாந்து உட்பட 58 நாடுகள் பங்கேற்றன. அதில் சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் 48 நாடுகளும் கையெழுத்திட்டன. இதில் சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டது.

மேலும், இந்த வங்கிகளில் யார் யார் எவ்வளவு பணம் பதுக்கி வைத்து இருக்கிறார்கள்  என்பது மட்டும் படு ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆனால்,சொந்த நாடுகளை விட்டு, இந்தியா  உள்ளிட்ட வெளிநாடுகளின் வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அவர்களது வங்கி கணக்குகள் பற்றி முழு விவரத்தையும் வெளியில் அறிவிக்க வேண்டும் என்கிற சர்வதேச ஒப்பந்தத்தில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கை எழுத்து ஒப்பந்தம் போட்டுள்ளதால் இனி சுவிஸ் வங்கி தங்களது வங்கி கணக்கு பற்றிய அறிக்கையில் ரகசியம் காக்க முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் இதற்கான போராட்டம் சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்த பணம் இரண்டரை லட்சம் கோடியை தாண்டும் என்று பாஜ உட்பட பல கட்சிகளும் பெரும் கோஷமெழுப்பின. இதன் விளைவாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வெள்ளையறிக்கை சமர்பித்த போது கருப்பப் பணத்தின் பதுக்கல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது, அதாவது சுமார்  பதினாலாயிரம் கோடிகள் மட்டுமே கருப்புப் பணம் இருப்பதாகத் தெரிந்தது.
யூதர்களின் பணத்தை சேமித்து வைப்பதற்காக இரண்டாம் உலகப் போரினை ஒட்டியக் காலக்கட்டத்தில் கருப்புப்பணப் பெட்டகமாக மாறிய சுவிட்சர்லாந்து வங்கிகள். கிட்டதட்ட உலகம் முழுவதும் இருந்து வரும் கருப்புப் பண பதுக்கல் சுமார் 90லட்சம் கோடிகளைத் தாண்டுகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம்.

பொதுமக்கள் இந்த விசயத்தில் கவனம் கொள்ள ஆரம்பித்ததன் விளைவாகவும், எதிர்கட்சிகளின் பிரச்சாரத்தின் விளைவாகவும் வெள்ளையறிக்கைத் தாக்கல் செய்த மத்திய அரசு அந்தப் பட்டியலை வெளியிட மறுத்து விட்டது. அந்த பட்டியலில் கருப்புப் பணத்தின் அளவு எவ்வளவு என்று வெளியிட்ட அரசு, அதைப் பதுக்கியவரின் பெயரை வெளியிடப் போவதில்லை, ஏனென்றால் அவர்கள் இந்த நாட்டிற்கு மிக முக்கியமானவர்கள்.

- தொடரும்
 ஜீவ.கரிகாலன்