வியாழன், 19 மார்ச், 2015

ப்ளீட்ஸ் கூட்டம் - 04

ப்ளீட்ஸ் கவிதைக்கான ஒரு கூட்டம் என்ற ஒரு தீர்மானத்தைத் தவிர வேறு எந்த மாதிரி டிசைன்களும் இல்லாத ஒர் ஏற்பாடு. ஒரு கூடல் மட்டுமே சாத்தியப்படுத்தும் சில இலக்குகளை என்று அவர் சொல்லும் போது நிச்சயமாக இத்தனை தூரம் அது பயணப்படும் என்று நினைக்கவில்லை. மூன்றாவது கூட்டம் முடிந்த பின் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்,

அது தானா

அதே தான்

***


கணையாழியில் நான் சேர்ந்த நாளும் ப்ளீட்ஸின் முதல் கூட்டமும் ஒரே நாளில் தான். அன்று ப்ளீட்ஸை ஏற்பாடு செய்ததோடு சரி – அடுத்தக் கூட்டத்தில் கவிஞர் உமாசக்தி சிறப்பு அழைப்பாளராய் வந்திருந்தார். உமாசக்தியின் கவியுலகம் பற்றி ஆரம்பித்த பேச்சு, வேல்கண்ணன் மற்றும் அர்விந் யுவ்ராஜ் ஆகியோர் வந்தவுடன் சுவாரஸ்யம் கூட்டியது. இளங்கோ ஃபேஸ்புக்கில் எழுதிய ஒரு கவிதையை வாசித்து நீண்டதொரு சர்ச்சையைக் கிளப்பி விவாதம் செய்தோம். எந்த முடிவுக்கும் வந்துவிடாத கூட்டம் நிறைவாகவே இருந்தது தோன்றியது. எல்லோரும் கவிதை வாசித்தோம்.

உமாசக்தியிடம் பெர்சனலாகவே கேட்டேன் – உபநிஷதங்கள் போன்ற மிகப்பழமையான வடிவங்கள் தருகின்ற டெம்பிளேட்டைக் கூட நவீன கவிதைக்கான வடிவத்தில் பார்க்கமுடிகிறது போன்று எனக்குத் தோன்றுவது குறித்துக் கேட்டேன். ”அப்படிப் பார்க்க முடியும் என்று சொன்னார். சில கவிதைகளை முன்வைத்துப் பேசினேன்.

மூன்றாவது கூட்டம் அத்தனை விசாலமாக இருந்தது. பிரமாதமானதொரு நிலவின் அழகில் கவிதை குறித்துப்பேசுவது உன்மத்தமாக – ஷான் கருப்பசாமி ஒர் இன்ட்ரெஸ்டிங்கான மனிதர். ஏன் இப்படி எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களை, அவர்களின் நியாயங்களை (புரட்டுவாதங்களை) முன்வைத்துப் பேசினார். தனக்கென்று ஒரு சித்தாந்தமோ அல்லது தத்துவமோ உடன்வைத்துக் கொள்ளாதவன் கவிதை எழுதக்கூடாதா என்கிற தொனியில் அமைந்தது அவரது பேச்சு - கூட்டம் முடிந்து இரவு உணவு அருந்தும் வரை பின்னவீனத்துவம் பற்றிய பேசிக்கொண்டிருந்தார் அந்த சீரியஸ் கவிஞர்.

மூன்றாவது கூட்டத்தில் பல விஷயங்கள் பேசினோம்
ஆர்ட் ஃபார்ம் குறித்து,
ஒரு நல்ல CRAFTஐ குறித்து
துறை சார்ந்த கவிதைகள் குறித்து
நேட்டிவிட்டியோடு இருக்கின்ற கவிதைகள் குறித்து
ஃபேஸ்புக்கில் எழுதுபவர்களின் கவிதைகள் குறித்து

நிகழ்வு பிரம்மராஜனின் கவிதை ஒன்றை வாசித்துத் தான் ஆரம்பிக்கப்பட்டது, முடியும் போதும் அவரின் மொழிபெயர்ப்பில் சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதைகளோடு முடிந்தது. இடையில் – ஆத்மாநாம், ப்ரமிள், பசுவைய்யா, நகுலன், ஞானக்கூத்தன் போன்ற Legendsஉடன், நக்கீரனின் ஜிப்ஸி, சவரக்காரனின் மயிர் கவிதைகள் தொகுப்புடன் முகநூலில் எழுதுபவர்கள் வடிவங்கள் பற்றி நிறைய ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்க வேண்டிய தொகுப்பாக ஐயப்பமாதவனின் நிசி அகவல் ஆகிய தொகுப்புகளைப் பரிந்துரைக்கப்பட்டன.
**
இந்த முறை நான்காம் கூட்டம் – ஸ்டார் வேல்யூ உள்ளக் கூட்டம் தான். சரியாகப் பவுர்ணமி அன்று 04ஆம் தேதி மாலை 06.00 மணி அளவிலோ அல்லது சற்றுத் தாமதமாகவோ இல்லை கொஞ்சம் முன்னாடியோ ஆரம்பிக்கப்படலாம். மிகவும் முக்கியமான இந்தத் தலைமுறை கவிஞராக அறியப்பட்டுத் திடீரென்று “நான் இலக்ஸ்” என்று இனி அறியப்படமாட்டேன் என்று V.R.S கொடுத்த வா.மணிகண்டனைத் தான் இந்த மாதம் சிறப்பு அழைப்பாளராக அழைத்திருக்கிறோம். மறுபடியும் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கும்வரை அவர் ரிட்டயர்ட் ஆனதாகச் சொல்வதே உசிதம்.

அண்ணாச்சி கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டதாகச் சொன்னாலும், அவரது வலையில் கவிதைகள் குறித்த பகுதிகள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப் பதிவு வந்தவுடன் சில பிரதிகள் விற்பனை ஆவதையும் நானே கண்டிருக்கிறேன். கவிதைகள் மீது அப்படியென்ன சலிப்பு? என்பதில் ஆரம்பித்து நிறையக் கேள்விகள் கேட்கலாம். வேல்கண்ணனுடன் - வா.ம கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டதை முன்வைத்து நிறைய பேசியிருக்கிறோம். இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. வா.மவும் அழைப்பு விடுத்தவுடன் ஏற்றுக்கொண்டதோடு அவருக்குப் பிடித்த சில கவிதைளோடு வருவதாகச் சொன்னார். நிச்சயமாக இந்தக் கூட்டம் வேறு சில DIMENSIONகளைக் காட்டும் என்பது உறுதி. அத்தோடு கூட்டத்தில் கொளுத்திப் போடுவதெற்கெனச் சில தயாரிப்புகளை நானும் செய்து வருகிறேன்.


கவிதைகள் மீது ஆர்வமிருக்கின்ற யாவரும் பங்கு கொள்ளலாம். முக்கியமாக இதுவரை எந்தத் தொகுப்பும் கொண்டு வராமல் இருக்கும் புதிய தலைமுறைக்கான நிகழ்வாகத்தான் PLEATSஐ ஆவனப்படுத்த விரும்புகிறோம்.

ஜீவ கரிகாலன்

ஞாயிறு, 1 மார்ச், 2015

பஜ்ஜி - சொஜ்ஜி - 77 // எண் எனும் மாயை

நிகழ்வின் எண் – 29 என்று போடுவது அவசியம் தானா என்று தோன்றியது போல் இருந்தது, நேற்றைய டிஸ்கவரி புக் பேலஸ் சிற்றரங்கத்தை யாவரும்.காம் நிகழ்வு நடைபெற்றது. இதுவரை கவிதைகளுக்காகவே அதிகம் கூட்டங்களை நடத்திய நாங்கள் – சிறுகதைக்காகக் கொஞ்ச காலம் ஒதுக்குவோமே என்று நினைத்தபோது, எனக்கு அதில் தனி மகிழ்ச்சி (சிறுகதை என் ஏரியா என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்).

எண் எனும் மாயை

29ம் நிகழ்வு ஆரம்பிக்கப்படும் வரை இரட்டை இலக்கத்திற்குக் கூட நண்பர்கள் வரவில்லை எனும் போது நேராக விஜய மகேந்திரன் வந்து கேட்டார். ”ஏங்க யாவரும்னு ஒரு 15 பேர் தலைகாட்டுவிங்களே” உங்க ஆட்களைக் கூட காணுமே என்றார். அந்தக் காலம் மலையேறிப் போச்சு என்று அவர் புத்தகத்திற்கு அகநாழிகை ஏற்பாடு செய்தக் கூட்டங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். இன்று அவர் சொன்னது போல மீண்டும் ஒரு கூட்டம் சாத்தியமா என்று அவர் சொன்னதில் உண்மையிருந்தது. தினமும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி ஒரு மாதிரியாக அலுப்பு வந்துவிட்டது.

சாத்தப்பன் வராதது ஏன் என்று தெரியவில்லை, கோணங்கிக்கு விளக்கு விருது அளிக்கும் நிகழ்வுக்கு சென்றதால் ஐயப்ப மாதவன் வரவில்லை. திருநெல்வேலி, பாண்டிச்சேரி, சிவகாசி என்று எங்கு நடந்தாலும் – தனது பங்கேற்பு இல்லாவிடினும் கூடப் பார்வையாளனாகவாது சென்றுவிடும் மூத்த எழுத்தாளர் கணேசகுமாரனோ, சமீபத்தில் புத்தகம் வெளியிட்ட – அடுத்த நாவலை எழுதிக்கொண்டிருக்கும் ரமேஷ் ரக்சன் அவர்கள் என யாரும் வரவில்லை. அதைத் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை என்றாலும் கூட அவர்களை எதிர்பார்த்து இருந்தது என்பது உண்மை தான்.
***
குமாரநந்தன்
நந்தன்ஸ்ரீதரன்

அழைப்பிதழடிக்க கோகுலனிடம் கொடுக்கும் போது தான் எதேச்சையாக இந்தப் பெயரைப் பார்த்தேன் மணமக்கள் போன்ற உணர்வைத் தந்தது. கவிஞர் இந்திரனும் வரமுடியாது போய்விட்டது கூடுதல் இறுக்கத்தைத் தந்தது. வழக்கம் போல அரைமணி நேரத் தாமதமாக ஆரம்பித்தோம். வேடியப்பனின் வரவேற்பு எப்போதும் போல உற்சாக டானிக்.

வேல்கண்ணனின் அறிமுகத்தோடு விஜயமகேந்திரன் இரண்டு நூல்கள் குறித்தும் தன் பார்வைகளை முதலாவதாக முன்வைத்தார். விஜய்மகேந்திரனை இப்போது தான் நாங்கள் OFFICIALஆகப் பேச அழைத்திருக்கிறோம். கடந்த சில மாதங்களில் 12 கூட்டம் வரை பேசியாயிற்று என்கிற களைப்பு தெரியவில்லை அவர் பேச்சில். எந்தப் பூச்சுமற்ற அவர் பேச்சு சிறந்தவைகளை முன்வைத்துப் பின்னர் விமர்சனங்களையும் சொல்லி வந்தார். ஃபேண்டசியாக, மாய யதார்த்த சிறுகதைகள் எழுதும் ஒருவன் ஏன் யதார்த்த வகை – அதிலும் குடிகாரக் கணவன் வீட்டின் நிலையைச் சொல்லும் 80களின் தொனியாக அதைப் பார்ப்பதாக தன் கருத்தினை முன்வைத்தார். தாழி – (நந்தன் ஸ்ரீதரன்) குறித்துப் பேசும் போதும் சிறுகதை நிறைவுறும் இடத்தைச் சுட்டிக் காட்டி அதற்குப் பிந்தைய வரி அவசியம் தானா என்று கேட்டார். ”நண்பர்களாக இல்லாவிடில் நிறைகளை மட்டும் தான் சொல்லியிருப்பேன்” என்றபடி தன் உரையை நிறைவு செய்தார்.

கவிதைக்காரன் இளங்கோ – யாரிடமும் அதிகம் பேசவே மாட்டார் , இளங்கோவின் கண்கள் ஷார்ப், நீங்கள் பார்ப்பதற்கு கன்னடப்பட ஹீரோ மாதிரி இருக்கிங்க என்கிற கலாய்த்தலுக்கு மத்தியில் தனது பிராண்டட் கருப்புச் சட்டையணிந்து மேடையேறினார். இளங்கோ எந்தக் கதைகளையும் உளவியல் பூர்வமாக ரசிக்கக் கூடியவர். நிதானமான – சற்றே நீளமான பேச்சு தான் என்றாலும், கதைகள் எழுதும் ஒருவனுக்கு இத்தகைய வாசிப்புடையவன் இருந்தால் அவன் திருப்தியடையும் தருணம் இளங்கோவை சந்திப்பதாகவே இருக்கும். இளங்கோ கதாப்பாத்திரங்கள் வழியாக, டைம்லைன் வழியாக என்று எறும்பு போல் ஊர்ந்து வந்த உணர்வு. இந்த எறும்பிற்காகவே என் சிறுகதைத் தொகுப்பிற்கான முயற்சியை வெகு விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென்று தோன்றியது.

ஏற்புரை வழங்கவந்த இரு நண்பர்களும் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப் பட்டவர்களாகத் தெரியவில்லை. நிறைவான கூட்டமாகவே இருந்தது. விஜயின் விமர்சனங்களுக்கான அவர்களது பதில் எதிர்ப்பார்த்தது போலவே- அது விஜயின் தனிப்பட்டப் பார்வையாகவே இருந்தது என்கிற பதிலாக வந்தது. இதுவும் கூட ஒரு விமர்சனத்தை எளிதாகக் கடந்துவிடும் SUBWAY பதிலாக இருப்பது பற்றி ஒரு கவலையாகவே இருக்கிறது. ஒருபக்கம் முகம் தெரியாத நபர்களின் கூட்டுமுயற்சி விமர்சனங்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என்கிற வாதம் ஏற்புடையதாக இருக்க, மற்றொரு புறம் நேரிடையாக விமர்சனம் வைப்பவர்களை இப்படி எளிதாகக் கடந்து செல்லும் போக்கு சரிதானா என்கிற ஐயமும் எழுகிறது எனக்குள்.

இந்த நிகழ்வில் – சிறுகதைக் குறித்த விமர்சனங்கள் செய்யும் போது கதைகளைச் சொல்ல வேண்டுமா? நேர்கோட்டுக் கதைகள் என்பதற்கான வியாக்யானங்கள்? முகம் தெரியாத குழுவாத ஃபேக் ஐடிக்களுக்கு ஆதரவு நல்கும் ஆரோக்கியமற்ற போக்குகள் ஆகிய பொதுவான விசயங்கள் குறித்தும் பேசப்பட்டன.


வந்திருந்த நண்பர்களோடு – நிறைவாக ஒரு கூட்டம் நடந்தேறியது இந்த எண்களைப் பற்றிய கவலையை மறைத்தது. இப்போது இப்படி வாசகர்கள் கூட்டம், புத்தக விற்பனை, வரலாற்றில் பெயர் பதிவது, சான்றோர்கள் ஆசி போன்ற எந்த எண்ணிக்கை பற்றிய கவலையும் அல்லாமல் நடத்தப்படும் கூட்டங்கள் தொடரவேண்டுமானால் இந்த எண்ணும் தேவையாயிருக்கிறது. அடுத்தது யாவரும் -30 ??? யாருக்கு

- ஜீவ கரிகாலன்