தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

வீர நாயக்கன் -5 )


               ஆள் அரவமற்ற அந்த ஏரியை சுற்றி இருந்த அப்பகுதி, நிசப்தமாய் இருந்தது,நிலவின் ஒளியில் வெள்ளிப் பாளமிட்டு அலங்கரிக்கப் பட்ட அக்குளம், அங்கு வீசிய தென்றலின் காரணமாய் சிறு சிறு அலைகளை எழுப்ப முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. குளத்தின் மேல் பரப்பில் நீந்திக் கொண்டிருந்த கெண்டை மீன்கள் யாவும்  வெள்ளி நிற ஆடை தரித்தது போல் நிலவின் பாலொளியில் தம்மைக் காட்டிக் கொண்டிருந்தன.

'தொப்' என்று ஒரு சத்தம், அப்பகுதியின் நிசப்தத்தை கலைப்பது போல் அக்குளத்தில் இருந்து எழுந்தது.தம்மை விட வேகமாக நீந்தி வரும் மானிடனைக் காண, நீர் பரப்பில் இருந்த மீன்கள் கொஞ்சம் எழும்பி குதித்து அம்மனிதன் யார் என்று பார்த்தன, நம் வீரன் தான் நீந்தி வருகிறான்.அன்று மட்டும் ஏன் இந்த திடீர் உற்சாகம் இவனுள் ?தமக்காகவே நிலவை ஆண்டவன் படைத்தது போல் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.நிலவின் பிம்பம் ஒரு பெண்ணின் வதனமாய் தெரிந்தது.அவள் யார் என்று புதிர் போடுதல் இக்கதையில் தேவையற்ற ஒன்று.ஆம், அவள் தான் கோதை!

      

இயற்கை அழகு என்பதும் கூட ஒரு மாயை தான், அதன் இருத்தல் என்றுமே உள்ளது.மனிதர்களாகிய நாம் தான் நமது வாழ்க்கையின் கோரப் பிடியில் அந்த இருத்தலை மறந்து, நம் மனதின் நிலைக்கு ஏற்றவாறு இயற்கையை உணர்கிறோம்.வீரனும் மனிதன் தானே, அவன் நித்தமும் நடந்து செல்லும் குளக்கரையில் ,இந்த நிலவும், மீனும், நிசப்தமும் கூட அவனுக்கு பரிட்சயம் ஆனது தானே!ஆனால் அவன் அவற்றை முதன் முதலாக பார்ப்பது போல் ரசித்துக் கொண்டு தான் கற்ற இலக்கியப் பாடல்களை ஒன்றிரண்டு பாடிக் கொண்டிருந்தான்.வேடனாகப் பிறந்தும் அவ்வினத் தலைவனின் உறவுக்காரனாய்  பிறந்ததால், அவன் இளம் பிராயத்தில் ஒரு பாட சாலை சென்று குருவிடம் கொஞ்சம் கல்வி பயின்றான்,ஆனாலும் தான் படித்தவற்றை வெளியே காட்டி தன்னை மற்றோர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் இயல்பு இல்லாதவன் அவன்.அன்று மட்டும் ,தன்னை ஒரு பக்குவமிக்க புலவன் போல் நினைத்துக் கொண்டும், பாடிக் கொண்டும் ,தன்னையே மறந்து நீந்திக் கொண்டிருந்தான்.

                வீரன் தன் ஈர உடையுடன் கரை ஏறி ஒரு விசில் ஒன்று அடிக்க தான் வளர்த்த நாய் நான்கு கால் பாய்ச்சலில் வந்து அவன் காலடியில் நின்றது.தனக்கு என்ன நேர்ந்தது என்று தன் நாய்க்கு விளக்க ஆரம்பித்தான்,"ஏலேய் ஒய்யா!! என்னடா அப்படி பார்க்குற!" என்று தன் நாயை அழைக்க, அது அவனை ஆச்சரியமாக பார்த்தது.தன் வாழ்க்கையில் அவ்வளவு சந்தோசமான நாள் இது வரை இருந்ததில்லை என்று வியந்து கொண்டான். தன் கூட்டத்தில் உள்ள குறி சொல்லும் கிழவி , தன்னால் தான் சமூகத்திற்கு விடிவு காலம் வரப் போவதாகவும், அதுவும் ஒரு மேற்க்குடியை சேர்ந்த ஒரு எழிலரசி தான் அதற்கு காரணமாவாள் என்று பல முறை சொல்லும் வாக்கு மெய்யாகுமோ என்று தன்னை தானே கேட்டுக் கொண்டான்.. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
                       அன்று,  அப்புலியை கொன்ற பின்னர் தான் தன் எதிரில் உள்ள அப்பெண்ணை  அவன் கண்டான். அவள் கண்களில் கண்ணீரும், ஆச்சரியமும் , கனிவும், கண்ணியமும் அவனுக்கு ஒளியாய் தெரிந்தது.குறி சொல்லும் கிழவி மறுபடியும் தன் முன்னே வந்து ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அதை கடந்து இரண்டடி முன்னே சென்று அவளை நோக்கினான்.

                           தான் காப்பாற்றப் பட்ட அடுத்த நொடி அங்கே செத்துக் கொண்டிருக்கும் புலியை பரிவுடன் நோக்கிய அவள் கண்களை கண்டு பிரமிப்புற்றான்.தன்னை காப்பாற்றியமைக்கு நன்றி சொல்லும் போது ஒலித்த அவள் குரல் யாழிசையாய் கேட்டது, அதற்கு பின் அவனை பாராட்டிய முத்தரசனின் குரலோ, அவளின் தந்தையின் குரலோ,  பொம்மனின் குரலோ , ஏன் அருகிலிருந்து குறைத்துக் கொண்டிருந்த அவன் நாய் ஒய்யனின் குரல் கூட அவனுக்கு கேட்கவில்லை. நனைந்த உடையுடன் அக்குளத்தின் கரையில் அமர்ந்திருக்கும் போது கூட அவனுக்கு அவளின் குரல் தான் கேட்டுக் கொண்டிருந்தது.

அவன் நினைவில் வந்த அவள் குரல் எனும் யாழிசையில், அவன் கவி இயற்றத் தொடங்கினான்.

" நிலவின் நிழலும் வெண்நிறமோ ?
அந்நிழலும் வருவது பகல் பொழுதோ?
உன்னை நான் பார்க்க மழை வருமோ !!"...

என்று தன்னை கவிஞனாய் இவ்வுலகுக்கு அறிமுகப் படுத்தினான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------

              கோதை அன்று புலியினால் ஏற்பட்ட பீதியில் உணவு உண்ணாமல் துயிலச் சென்றுவிட்டாள் என்று அவளின் அன்னை அவளை வற்புறுத்தாமல் சென்று விட்டாள்.
கோதையின் தந்தையும் அன்று நடந்த சம்பவத்தை நினைத்து மனம் கொதித்து இருந்தார்.புலி வேட்டையாடிய அவ்விளைஞனுக்கு பாண்டியனின் பரிசில் பெற்றுத்தருவதாய் வாக்களித்திருந்த முத்தரசன், இனி தன்னை பழி வாங்க எவ்வாறெல்லாம் முயற்சிப்பான்? அவனை எப்படி சமாளிக்கலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
             புலி வேட்டையாடிய இளைஞனுக்கு பாராட்டு விழா நடத்தும் பொருட்டும், கோயில் மற்றும் குளம் கட்டுமானத்தில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து வரவும் அந்த ஊரிலே சிறிது நாள் தங்கி இருப்பதாக - ஓலை ஒன்றை பாண்டியனின் ராஜாங்க மந்திரிக்கு அனுப்பினான் முத்தரசன்.தான் உண்மையிலே அவ்வூரில் தங்குவதற்கு காரணம் அக்கோயிலா? குளமா? இல்லை பழி வாங்கவேண்டிய அந்த ஆலய அர்ச்சகர் -தன்னுடைய எதிரி நம்பியா ? இல்லை அந்த வேட்டையாடிய வீரனா? என்று நாம் யோசித்தால், முத்தரசனின் கை அக்கோயிலில் செதுக்கி கொண்டிருந்த ஒரு ஆடலரசியின் சிலையின் இடுப்பில் வைத்திருந்த கையில் இருந்து அவன் காம நோயில் ஆட்கொள்ளப் பட்டதை உணர்த்தியது.

அந்த பௌர்ணமி இரவில், வீரன், ராகவ நம்பி, முத்தரசன் ஆகிய மூவரும் ஒவ்வொரு கோணத்தில் கோதையை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க, வீரன் செய்த அந்த புலி வேட்டை அவ்வூரில் புரட்சி ஏற்படுத்தும் நாள் வெகு தூரம் இல்லை என்றவாறு காய்ந்து  கொண்டிருந்தது...


தொடரும்    



(தொடரும்)




 


சனி, 8 ஜனவரி, 2011

வீர நாயக்கன் - பகுதி -4

வெள்ளியனையின் வரலாறு

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்த வெள்ளியனை எனும் சிற்றூர் இன்றும் கருவூர் மாவட்டத்தில் உள்ளது, ஆயிரம் ஆண்டுகட்கு முன்னாள் அப்பகுதி அடர்த்தி இல்லாத காட்டுப் பகுதி, அதை நாம் பாலை நிலத்திலும் சேர்க்கலாம். அன்று  கருவூருக்கு தெற்கே பாயும் அமராவதி நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரிதாக குடியிருப்பு இருக்கவில்லை , ஆனால் தெற்கே உள்ள மதுரைக்கும்; கிழக்கே உள்ள உறையூருக்கும் செல்ல அக்காட்டு பகுதியை தான் உபயோகிக்க வேண்டும்.

அந்த பிராந்தியத்தில் நரி,சர்ப்பம், புலி என ஆபத்துகளும் இருந்தது, இதுபோக அவ்வனப் பிரதேசம் பல சமயம் எதிரிகளின் கூடாரமாகவும் ஆகிவிடும்.எனவே, வாணிபம், போக்குவரத்து, எதிரிகளிடமிருந்து பாதுகாக்க அமராவதிக்கு தெற்கில் சிறு சிறு குடியிருப்புகளை அமைக்க கரூரை ஆண்டு வந்த எல்லா அரசர்களும் முயன்று வந்தனர்.ஆனால், அந்த பகுதியில் புலியின் பயமும், சர்ப்பத்தின் எண்ணிக்கையும் இதற்கு தடையாய் இருந்து வந்தன.

.மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு பிறகு வஞ்சியை கைபற்றிய பாண்டியனும் அப்பகுதியில் சில ஊர்களை நியமித்தான், மதுரையிலிருந்து கருவூருக்கு எளிதில் வர அவை உதவும் என்பதால்.ஆனால் அங்குள்ள புலிகளின் எண்ணிக்கையை குறைக்காமல் மக்கள் அங்கே அதிகம் வரமாட்டார் என்பதை உணர்ந்து இதற்கென இரு ஆணைகளை பெயர்த்தான்.
1. புலிகளை வேட்டையாட உத்தரவிட்டு, வேட்டை ஆடுபவர்களுக்கு நிறைய சன்மானங்களும்,அவர்களுக்கு நிரந்தர இடமும் வசதியும் செய்து கொடுக்கப் படும்
2. அப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட இடங்களில் எல்லாம் கோயில் கட்டுவது அல்லது தேவை இருப்பின் புதுபிப்பது.(அப்படித் தான் புனரமைத்துக் கட்டிக் கொண்டிருந்தது இந்த கதையில் வரும் கோயில்)

அவ்வூரில் கோயிலை ஏற்படுத்தி, அதற்கென பல காத நிலங்களை வழங்கி அதில் வேளாண்மை செய்ய தேவைப் படும் தண்ணீருக்காக ஒரு குளமும் வெட்டப் பட்டுவந்தது.அந்த குளத்தை சுற்றி தான் நாயக்கன்மார்களின் குடியிருப்பு இருந்தது. அவர்கள் காஞ்சிக்கும் வடக்கே கோசல நாட்டு அரசும் சோழர்களுடன் ஏற்பட்ட உறவின்பால், அந்நிலத்து மக்கள் பலர் தெற்கு மண்டலத்திற்கு வந்தேறினர்.அப்படிப்பட்ட வந்தேறிகளில் ஒருவன் தான் நம் வீரா எனும் வீரா நாயக்கன்.

கொஞ்சம் கொஞ்சமாக அவ்வூரில் குடியிருப்பு வந்து கொண்டிருந்தது.அவ்வூரின் ஓரத்தில் சந்தை ஒன்றும் உருவானது.இப்படி வேக வேகமாக வளர்ந்து வரும் ஊரில் புலி பயம் மட்டும் குறையவே இல்லை.இரவில் தனியாக ஊரின் எல்லையோரம் கூட செல்வதை தவிர்த்து வந்தனர்.ஓரளவுக்கு அந்த இளம் வேடர்களின் (பொம்மன்,வீரன் போன்றோர்) வீரச் செயல்கள் அவ்வூர் மக்களுக்கு நிம்மதி அளித்தது.

ஆனால் அன்றோ! ஊரினுள் புகுந்த புலி ஒன்று பல நிரைகளைக் கொன்றது ,மக்கள் ஒன்று கூடி கல்லினால் அதை தாக்க வெறி கொண்ட புலி பாய்ந்து வந்து அவர்களையும் தாக்கியது. காயங்களின் வலி அதற்கு மிகவும் வெறி தூண்டியது, பாய்ந்து ஊரை விட்டு  வெளியே செல்ல நினைத்த புலி அவ்வூரின் கிழக்கு எல்லையின் புனரமைத்துக் கொண்டிருக்கும் கோயிலுக்குள் சென்றது.அங்கிருப்போர் இதைக் கண்டு சிதறி ஓடினர், ஏற்கனவே புலியினைப் பார்த்து பயந்து செய்வதறியாது நின்று கொண்டிருந்த கோதையை ஒரு கை மேலே இழுத்தது.

புலியிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள கோயிலின் உத்திரத்தில் மேல் தொற்றிக் கொண்டிருந்த நொண்டி முத்தன் தான் அது.அவள் தந்தையோ, மூலவரை கட்டி பிடித்து நின்று கொண்டிருக்க.புலி கோயில் வாசலில் எந்த காலை முதலில் வைப்பது என்ற யோசனையில் இருந்தது.இவ்வளவு திகிலிலும் தன் கையில் உள்ள கோதையை எப்படி விழுங்குவது என்பது போல் ஒரு நொண்டி புலி ஒன்றும் நினைத்துக் கொண்டிருந்தது. கோதை தன்னை தூக்கியது யார் என்று கூட பார்க்கவில்லை ஆனால் தன் மேல் விஷம் போன்ற பார்வையை ஒருவன் கக்குகிறான் என்று நினைத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

முத்தரசன், கைக்கு எட்டிய கனியை ருசி பார்க்கும் ஆவலில் அங்கிருக்கும் புலியினை மறந்து அவளை கொஞ்சம் கொஞ்சமாக மேலே இழுத்தான், அவள் கைகளை பற்றிய அவன் முரட்டுக் கரங்கள் அவள் இடையினை பற்ற முயற்சித்தபோது.சட்டென்று அவன் பிடியில் இருந்து நகர்ந்து கீழே விழுந்தாள்.இதெற்கென காத்துக் கொண்டிருந்த புலி ஒரு உறுமலோடு கோயிலினுள் நுழைந்தது.

கோதை கல்லாய் சமைந்தாள், அவள் தந்தையோ செய்வதறியாது பெருமாளிடம் முறையிட்டார்.முத்தரசனின் இதயமும் பல மடங்கு துடித்தது.நம்பியின் கண்கள் தன் மகளை காப்பாற்றுமாறு முதன் முதலாக முத்தரசனிடம் பணிந்து யாசகம் கேட்டது. முத்தனும் குதித்து விட துணிந்தான்,ஆனால் இந்த மாதிரி சமயத்தில் அவன் கால்கள் உதற ஆரம்பித்துவிடும்.அப்பொழுதும் முத்தரசனுக்கு அவன் நொண்டி முத்தன் என்று ஞாபகம் வந்தது.தன் கண் எதிரே அந்த கோதைக் கனி பிணமாவதை பார்க்க இயலாத முத்தன் தன் கையிலிருந்த சிறு கத்தி ஒன்றை கோதையிடம் போட்டுவிட்டு கண்களை மூடினான்.அக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமாளோ, 'இன்னும் சிலை வைக்கப் படாத கருடரோ ,மாருதியோ இக்கோயிலில் இருந்தால் உன்னை காப்பாற்றுவர் ஆனால் நானோ வெறும் பத்து அவதாரங்களுக்கு உட்பட்டவன், உன்னை காக்கவும் ஒருவன் வரக் கடவுக' என்று வரம் அளிப்பது போல் காட்சி தர,கோயில் மணி ஓசை ஒன்று "தங்","டங்" என்று கேட்டது.

பெருமாள் வரம் அளித்து விட்டார், நாம் எதிர் பார்த்தது போல் கோயில் நடை வாசலில் கைகளை கட்டியவாறு சிரித்தபடி நம் வீரன் நின்று கொண்டிருந்தான், அவன் கையிலே ஒரு வேல் இருந்தது.ஏற்கனவே இருந்த திகிலில் பாதி மூர்ச்சை நிலையில் இருந்த கோதை, அம்மணிச் சத்தம் கேட்டு திக்கித்து போக, புலியும் சற்றே பயந்து திரும்பியது. புலியைக் கொல்வதற்கு தயாராய் வீரனும் இருந்தான்.தனியாக புலியை எதிர்க்கும் தைரியம் கொண்ட வீரனை முத்தன் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருக்க, வீரன் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

வேறு எந்த பக்கமும் வழியும் இல்லாததால் புலி கண்டிப்பாக தம் மீது  பாயும் என்பதை அவன் கணக்கு போட்டிருக்கவேண்டும், புலி திரும்பி அந்த பெண்ணையும் தாக்க கூடாது, அதே சமயம் பாய்ந்து வரும் புலியை தாக்கும் போது லாவகமாக ஒதுங்க இடம் வேறு இல்லாததால், வேறு ஒரு புதிய யுக்தி ஒன்றை கையாண்டான்.அவன் தாய் மொழியில் தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டிருந்தது அந்த யுக்திக்கான கணக்காகத் தான் இருக்கும்.

சட்டென்று ஐந்தடி உயரத்தில் பாய்ந்து வந்து வீரனை தாக்க வந்த புலி, ஐந்தரை அடி வீரன் எட்டரை அடியில் கணப் நேரத்தில் வளர்ந்ததை கண்டு மிரண்டது.ஆம், வீரனின் தோளில்  கால் வைத்து ஈட்டியுடன் ஏறி நின்றான் பொம்மன், புலி அவனை எப்படி தாக்குவது என்று நினைக்கும் ஒரு இமைப்பொழுதில், பொம்மனின் வேல் ஒன்று புலியின் கழுத்திலும்,வீரனின் வேல் புலியின் வயிற்றிலும் ஆழமாக பாய்ந்தது.அப்புலியும் உறுமிக் கொண்டே கோதையின் காலடியில் விழுந்தது.கோதையின் கண்ணீரில் மங்கித் தெரிந்த வீரனின் முகம், இப்போது நன்கு தெரிந்தது.புலியை சற்று குழப்பம் அடையச் செய்து அந்த கணப் பொழுதில் அதை வீழ்த்தி விடவும் செய்தனர் அவ்வேட்டயர்கள்.

"யாம் காக்கும் கடவுள்" என்று மூலவரான பெருமாள் தன்னை நிரூபித்ததாய் சிரித்துக் கொண்டிருந்தார்.அவ்வூரில் ஒரு புரட்சி உருவாகும் வேளை வந்து விட்டதாய், மாலை வானத்து கதிரவன் தன் மஞ்சள் தூரிகையால்  சமைத்துக் கொண்டிருந்தது     

(தொடரும் )

செவ்வாய், 14 டிசம்பர், 2010

வீர நாயக்கன் - பகுதி 3




பாண்டிய நாட்டுத் தங்க நாணயம் 

சோணாடு கொண்ட சுந்தர பாண்டியன்.

நொண்டி முத்தன் என்று அவனை நாம் அழைப்பது அவன் மட்டும் அவன் காதில் விழுந்திருந்தால், இந்நேரம் நம் கழுத்து அவன் இடக்கையில் வைத்திருக்கும் ஒரு சிறு கத்தியால் கீறப் பட்டிருக்கும், அதுவே அவனை முத்துராஜா என்று அழைத்திருந்தோமானால்,அவன் கச்சையில் இருக்கும் தங்க நாணயம் அடுத்த கணம்  நம் கையில் விழுந்து விடும்.என்ன, இப்பொழுது நாம் முத்துராஜாவின் தங்க நாணயத்தினை பார்ப்போமா?

 அந்த இரட்டை மீன் பொறிக்கப்பட்டிருக்கும் நாணயத்தின் மறுபக்கம் "சோநாடுகொண்டான்" என்றும் பொறிக்கப் பட்டிருந்தது.இந்த நாணயத்தின் வரலாற்றில் இம்முத்தனின் பங்கும் ஒரு கடுகளவேனும் உண்டு.ஆனால் அது பெருமையான வரலாறு அல்ல.ஆம்,யார் இந்த முத்தன்?அவன் அன்று சோழ நாட்டின் பிரதான ஒற்றன். குலோத்துங்க சோழனின் பிரதான ஒற்றர்களில் ஒருவன் தான் இந்த முத்தரசன். அவன் எப்படி பாண்டியனின் அதிகாரி ஆனான் ?.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

 இன்றிலிருந்து கிட்டத்தட்ட 1882 ஆண்டுகட்கு முன் ஒரு நாள், ஆயிரட்டளி ( இன்றைய தஞ்சை மாவட்ட) எனும் ஊரின் சோழ அரண்மனையின் மகுடாபிசேக மாளிகை மிகவும் ஆரவாரத்துடனும்,ஒரு வித பரபரப்புடனும் நிரம்பப்பட்டிருந்தது.வாகைப் பூமாலை சூடி யாக குண்டத்தின் எதிரே ஒருவன் அமர்ந்திருந்தான்.அவ்வூர் அன்று வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வுக்காக காத்திருந்தது.

வெற்றித் திலகமிட்ட அந்த இளைஞனின் உடலில் சில காயங்கள் இருந்தாலும், அவனுக்கு அணிவிக்க இருக்கும் மகுடத்தின் ரத்தினங்களை விட உயர்ந்ததாக காட்சி அளித்தது.ஆம் அது மதுரையை மீட்டு, சோழனை முடி கொண்ட அதிசய பாண்டிய தேவன் அல்லவா ?பொன் அமராவதியில், மூன்றாம் குலோத்துங்கனை வீழ்த்தி கலியுக ராமனென்றும்,சோணாடு கொண்டு முடி கொண்ட சோழபுரத்து வீராபிஷேகம் பண்ணியருளிய ஸ்ரீ சுந்தர பாண்டியத் தேவர் என்று வீரபிஷேகம் சூட்டப் பட்டது.

பல ஆயிரம் ஆண்டுகளாய் ஒளிர்ந்து வந்த பாண்டியனின் மகுடம்,தனது அண்ணனான குலசேகர பாண்டியன் காலத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் வீரத்தில் வீழ்ந்து,  அழிக்கப்பட்ட தமது பரம்பரையின் மகுடாபிசேக மண்டபம் தகர்க்கப் பட்ட போது சுந்தர பாண்டியன் எடுத்த சத்தியம் நிறைவேற்றப் பட்டது.

எந்த அரசும் தந்திரம் செய்யாமல் பிழைப்பதில்லை, தன் வீரத்தால் மட்டுமின்றி தன் விவேகத்தாலும் வெற்றி கண்ட பாண்டியனின் மகுடத்தில் முத்துக்கள் இருப்பது போல்,தமது ஆட்சியில் முத்துராசனுக்கும் ஒரு பதவி கொடுத்தான் பாண்டியன்.மணப்பாறையில்(இன்றும் திருச்சி அருகே உள்ள ஒரு ஊர்),குலோத்துங்க சோழனை வீழ்த்த தான் செய்த சூழ்ச்சிக்கு உதவியாக, பகடையாக உருட்டப் பட்டது குலோத்துங்க சோழனின் பிரதான ஒற்றர்களில் ஒருவரான முத்துராசன் எனும் நொண்டி முத்தன் தான்.

தான் செய்த ராஜ துரோகத்திற்கு பரிசாக, பாண்டியனிடம் லட்சம் பொன் அடங்கிய முடியும், தன் கீழுள்ள சேர நாட்டு மண்டலத்தில் ஆலயப் பணிகளை மேற்பார்வையிடும் வேலைக்காக சுந்தர பாண்டியனிடம் உரிமை பெற்ற மீன் பொறி பதித்த இலட்சினை கொடுக்கப் பட்டது. தனக்கு கொடுக்கப் பட்ட பரிசுகளை பார்க்கும் போது தனது வெட்டப் பட்ட காலின் காயத்தினையும் மறந்து பெருமிதத்தோடு உறுமினான்.

தான் வெட்டி வீழ்த்திய தன் சக ஊழியனான தன் எதிரி அருள் முருகனின் ஞாபகம் தான் அவனுக்கு வந்தது.,குலோத்துங்கன், ஆலோசகனான ஸ்ரீனிவாச ராகவ நம்பி எனும் அந்தணர் ஒருவரை- தன் பிரதான ஆலோசகராய் வைத்திருந்தார்.என்னதான் முத்தன் குலோத்துங்கனின் பிரதான ஒற்றனாய் இருந்தாலும், வேங்கி நாட்டு யுத்தத்திற்கு பின் வந்த இளம் வயது வஞ்சி வாலிபன் அருள் முருகனை அந்த அந்தணரின் அறிவுரையின் பெயரில் தலைமை ஒற்றனாக நியமித்தார்.

தன் வயதுக்கும், தனது இத்தனை நாள் விசுவாசத்துக்கும் மரியாதை தராத குலோத்துங்கனுக்கு பாடம் கற்பிக்கும் குரோத விஷச்செடி முத்தனுக்கு  முளைத்தது. தன் விசுவாசத்தினை பாண்டியனிடம் காட்டினான், குலோத்துங்கனிடம் தன் வேஷத்தினை காட்டினான். ஆம் , சோழனை வீழ்த்த குறிக்கப்பட்ட ஒரு நாளில், முதல் பலியாக - தன் எதிரியான அருள் முருகனின் முதுகில் தன் இடை வாளினைக் கொண்டு தன் பழியினை தீர்த்தான். முதுகினில் குத்திவிட்டு ஓடிக் கொண்டிருந்த முத்தனின் காலில் அருள் முருகனின் வேல் பாய்ந்தது.முத்துராசன் நொண்டி முத்தனாக உருவானான், அருள் முருகன் மறைந்தான்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------.
பத்துப் பனிரெண்டு வருடங்கள் நொடிகளாய் கரைந்தன ,தனக்கு கிடைத்த மரியாதையை மிகவும் சுயநலமாக பயன் படுத்த தொடங்கிய முத்துராசனுக்கு தான் பழி வாங்க வேண்டிய ஒரு ஆள் நினைவில் வந்தார்.பெயர் -ஸ்ரீனிவாச ராகவ நம்பி. பத்து ஆண்டுகட்க்கும் மேலாகிவிட்டது அவரை பற்றிய செய்தி அறிந்து, குலோத்துங்கனின் அரசு கவிழ்ந்த பின், பெருமாளுக்கு சேவை செய்வதை தன் கடமையாய் ஏற்று புதுப்பித்து கட்டப் பட்டு வரும் வெள்ளியனை பெருமாள் கோயிலில் பனி புரிந்து வந்தார்.

கிட்ட தட்ட பனிரெண்டு வருடங்களுக்கு பிறகு தன் பழைய எதிரி ஒருவனைப் பார்க்க வெள்ளியனை வந்து சேர்ந்தான். நொண்டி முத்தனுக்கு ஒரு எதிரி உருவாகப் போவது இங்கே தான் என்று தெரியாமல்,கட்டப் பட்டுவரும் கோயிலை பார்த்துக் கொண்டே வர,ராகவ நம்பி அவன் எதிரிலே வந்து நின்றார்.ஆனால், அப்பொழுது நொண்டி முத்தனின் பார்வை அவருக்கு பின் நின்றுகொண்டிருந்த மஞ்சள் நிறப் பாவை கோதையை நோக்கியது...விஷமப் பார்வை காமப் பார்வையாய் மாற உத்தேசித்த நேரத்தில் ஒரு பெருஞ்சப்தம் ஊரின் கிழக்கு பகுதியில் இருந்து கேட்டது.

ஐயோ ஐயோ!! என்ற கூச்சல் ஊரிலே இருந்து எழ,உடம்பில் சிறு சிறு காயங்களுடன் ஊருக்குள்ளே  பாய்ந்து பாய்ந்து ஓடி வந்த ஒரு புலி ஒன்று முத்தனின் கண் முன்னே தோன்றியது..

(தொடரும்)

சனி, 20 நவம்பர், 2010

வீர நாயக்கன் - பகுதி 1

 கதை முன்னோட்டம்





 13 -ஆம் நூற்றாண்டின் பாதியில் இக்கதை ஆரம்பிக்கிறது.....................


பகுதி -1 குளக்கரையில் ஒரு ஆபத்து

நித்திரைக்கு செல்ல வேகமாக தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான் கதிரவன்.பறவை எழுப்பும் சத்தம் தவிர அந்த ரம்மியமான சூழலை கெடுப்பதற்கு அவ்வேளையில் பொதுவாக யாரும் வருவதில்லை.ஆனால், அன்று மட்டும் அந்த வறண்ட காட்டுப் பகுதியில் சிறிது பதட்டம் நிலவிக் கொண்டிருந்தது.ஆம்பிராவதி நதியிலிருந்து 30 காத தொலைவில் உள்ள சிறிதும் அடர்த்தியற்ற ஆனால் ஆபத்தான அந்த காடு, அப்பொழுது அசாதரணமான தோற்றம் கொண்டிருந்தது.

அங்கிருந்த ஒரு குளக்கரைக்கு குளிக்க சென்ற சிலர் எதையோ விரட்டிக் கொண்டு வந்தனர்.கையில் அம்புடனும், வேலுடனும் மூன்று வாலிபர்களும் ஒரே ஒரு வேலினை ஏந்திக் கொண்டு ஒரு தோற்றத்தில் மிக சாதரணமான(இளைத்த தேகத்துடன்) ஒரு இளைஞனும் யாரையோ தாக்க ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு முன்னாலே அந்த குளத்தில் தாகம் தணிக்கச் சென்ற ஒரு புலி.ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டு, அந்நால்வரில் யார் நமக்கு முதல் விருந்து என்று நோட்டம் விட்டபடி உறுமிக் கொண்டிருந்தது.நால்வரும் வேடர்களாக இருந்தாலும்,பொழுது சாய்ந்த களைப்பிலும்,எதிர்பாராத இந்த சந்திப்பிலும்(புலியுடன்) சற்று பதட்டமடைந்து இருந்தனர்.எனினும், பொம்மன் எனும் வேடன் ஒருவன் கையிலிருந்த அந்த வில்லிலிருந்து ஒரு அம்பு நேராக புலியின் காலில் ஒன்றினை பதம் பார்த்தது.

கழுத்துக்கு வைத்த குறி காலில் பட்டதில், கொஞ்சம் நிதானம் தவறினான்,மறுபடியும் சுதாரிப்பதற்குள் அவன் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்தது அப்புலி.இந்த தாக்குதலை யாரும் எதிர்பார்க்காத போதிலும் கையில் வேல் மட்டும் ஏந்திய அந்த இளைஞன் புலியின் இடுப்பில் தன் வேலினால் குத்தினான்.சட்டென்று புலி அவனை நோக்கித் திரும்பியது.அவன் சுதாரித்துக் கொண்டு பாய்வதற்கு வந்த புலியிடம் லாவகமாக தப்பி அந்த குளக்கரை மேட்டில் ஓட்டம் பிடித்தான்.

அந்த புலியோ அம்மூவரையும் விட்டு விட்டு ,ஓட்டமெடுத்த அந்த இளைஞனைத் துரத்தியது.அம்முவரும் புலியின் பின்னரே தொடர்ந்து வந்து அம்பேய்தினாலும் அங்கங்கு காயப்படுதியவாறு உராய்ந்துச் சென்றதே தவிர அதன் துரத்தலை நிறுத்தவில்லை. ஆனால் அந்த வேட இளைஞனோ குளக்கரையின் சரிவான பகுதிகளில் புயலென ஓடினான்.அச் சரிவில் புலியினால் சரியாக காலினை ஊன்ற முடியவில்லை.

அவர்களுக்கு இடையே இருந்த தூரம் அதிகரிக்க, அங்கு அருகில் இருந்த ஒரு குன்றின் பாறையை பிடித்து தாவி ஏறினான்.துரத்தி வந்த அந்த புலியினைக் காணவில்லை, எண்ணெயில் தெறிக்கும் கடுகு போல் படபடத்துக் கொண்டிருந்த அவன் இதயத் துடிப்பு அப்பொழுதும் அடங்கவில்லை.சட்டென்று,வேகமாக அச்சிறிய குன்றின் உச்சியில் ஏறி, புலி எங்கு சென்றது என்று நோட்டம் விட்டான்.அவனுடன் வந்த மூவரும் பாறையில் நின்றவனைக் கண்டு நிம்மதியுடன் அவனை நோக்கி விரைந்தனர்

"ஏலே!! வீரா.. சரிதாம் ...புலியை விட உனக்கு சடுதியா ஓடத் தெரியும்னு நிருபிச்சிட்ட,, கீழ இறங்கி வா, ராவோட ஊருக்குள்ள போவம் " என்றவாறே அவன் தோழனான பொம்மன் அவனிடம்  சொல்லிக் கொண்டே அக்குன்றருகே சென்றான்.கொஞ்சம் நிதானத்துக்கு வந்த வீரனின் நம்பிக்கையை குலைக்கும் வகையில், பொம்மன் மறுபடியும் கத்தினான்."வீரா !!! புலி உமக்கு பின்னால நிக்குதுலே !! குதிச்சு வந்துடு !!! பெருமாளே...நீ தான் காப்பத்தொனும் "என்று உரக்க அலறினான்.

"எங்கப்பா ஆஆ "என்றவாறே திரும்பிக் கூட பார்க்காமல் அப்பாறையில் இருந்து வீரனும் குதிக்க,அவன் மேலேயே அப்புலியும் குதித்தது.40 அடி உயரத்திலிருந்து தொப்பென விழும் சத்தம் அம்மூவரின் நெஞ்சிலும் ஊசி இறங்குவது போல் இருந்தது.கண்களை திறத்து பார்க்கும் போது, கால் பங்கு உயிருடன்,கழுத்தில் வேலுடனும் உடம்பெல்லாம் குருதியுடனும் உறுமிக்கொண்டே இருந்தது அப்புலி.

வீரனோ,அப்பாறையில் இருந்த ஒரு இடுக்கில் ஒரே கையினை பிடித்து தொங்கியவாறே அந்த புலியை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தான்.எல்லோரும் அதிசயமாக அவ்வீரனை பார்த்துக் கொண்டிருந்தனர்."எப்பே !! நீ நெசமாலும் வீரன்தான்" என்று சிரித்தவாறே பொம்மன் அவனை பார்த்து சொல்ல.

வீரன் "உன்னை கொல்ல வந்த புலியை தான நான் குத்த,அது என்னை துரத்தியது..தொங்கிகிட்டு இருக்கிற என்னை தூக்கிவிடுரிகளா, இல்லை அந்த பாவப் பட்ட புலியோட நானும் போய்ச் சேரட்டுமா" என்றான்". கிடுகிடுவென அப்பாறை மீது ஏறி அவனை காப்பாற்றியவாறே,"ஏ வீரா!! அந்த புலிய ஒரே போடுல கொன்னுட்டு பரிதாபமா படுற ?? ஏய் !நீ சாதிச்சிட்ட டோய்! " என்றான் பொம்மன்.

"உசிரு மேல உள்ள பயம் டா! இனி என்னை எவனும் குறை கூறி சிரிக்க மாட்டிங்களே??!"என்றவாறே தன் மீது இருந்த சிராய்ப்புகளில் எச்சிலை தடவிக் கொண்டு அந்த புலியை நோக்கினான்.

இந்த புலி வேட்டையில் இருந்து தான் அவ்வூருக்கு ஆரம்பித்தது ஒரு மிகப்பெரிய மாற்றம்..அங்கு ஆட்சிசெய்து வந்த மன்னனுக்கும் அவ்வூரிலேயே ஒரு தலைவலி ஆரம்பித்தது. ஒரு சாதாரண குடிமகனுக்கு  நாட்டின் அரசியலில் பங்குகொள்ளும் காலமும் நெருங்கி வந்தது.எல்லாம் அந்த சேரநாட்டின் சிறு கிராமமான வெள்ளியனை எனும் ஊரில் தான்.வெள்ளியனை எனும் சிற்றூர் சேர நாட்டில்,ஆம்பிராவதி ஆற்றில் இருந்து சுமார் 30௦ காத தூரம் தெற்க்கே செல்லும் காட்டு பகுதியின் தொடக்கத்தில் உள்ளது.அவ்வூர் முழுதுமாக நிர்மாணிக்கப் படவில்லை சில ரகசியக் காரணங்களுக்காக அங்கிருக்கும் காட்டு பகுதியில் அவ்வூர் நிர்மாணிக்கப் பட்டுவந்தது.இந்த சிற்றூர் பல அரசியல் முடிச்சுகளின் கூடாரமாய் அப்போது இருந்தது.

இந்நிலையில் அவ்வூரின் கிழக்கு பகுதியில் உள்ள கோயிலை ஒட்டிய குடியிருப்பில், எந்த பாவமும் தெரியாத ஒரு பூவை ஒருத்தியை நாம் காணப் போகிறோம், அவள்  கோதை என்ற பெயர் கொண்ட பேதை ஒருத்தி - அப்பொழுது பூக்களை தோரனமாக்கி கொண்டிருந்தாள்.யாருக்குத் தெரியும்? தான் நித்தம் தொழும் தன் தெய்வமான பெருமாள் ஒரு பெருஞ்சோதனையினை தனக்கு தருவார் என்று தெரியாமல், அப்பெருமானுக்கு மாலையை தொடுத்துக் கொண்டிருந்தாள்.




தொடரும்
கரி-காளி.

(உங்கள் விமர்சங்கள் வரவேற்க்கப்படுகின்றன )