சனி, 27 அக்டோபர், 2012

உயிர் விளையாட்டு




உனக்காய் மீட்டிய இசையில் 
ஈனம் ஒலித்திடநோய்மையாய் 
தெரிகிறது நம்காதல்.

மழை குளிர்விப்பதாலே
எரிந்துக் கொண்டிருக்கிறேன்.
அகத்தில் ஈரப்பதத்துடன் 

முரணாகப் 
புணர்ந்துக் கொண்டிருக்கும்
அணுக்களுக்குள் அதிர்வுகளில்லை
கதிரியக்கம் கண்வழியே வழிந்தோடுகிறது.


ஞாபகமீனாக தூண்டில் தேடுகிறது,
தூண்டிலுக்கான உவமையாக
நீண்டப் பிரிதலைப் பரிசளித்தாய்.

தராத முத்தம் யாவும்
பழி வாங்கப் புறப்பட்டும்
மடிந்துவிடுகிறது 
ஒழுக்கத்தின் மயானவெளி

போதுமே 
இந்த உயிர் விளையாட்டு

வியாழன், 25 அக்டோபர், 2012

பஜ்ஜி சொஜ்ஜி-4

சப்தங்கள்


நீங்கள் வாசிக்கப் போவது கவிதை என்று முதலில் நம்பிவிடுங்கள்

தனிமை

தவிர்க்க முடியாத
நிசப்தப் பேரிரைச்சல்
காதைப் பிளக்க,
செவிடாகிப் போனேன்....

தனிமையின் வாதையை சொல்லிப் போகும் இந்த கவிதை நிசப்தத்தினை ஒரு இரைச்சலாக, பேரொலியாக பாவிக்கிறது. சப்தங்களைப் பற்றிதான் இந்த பஜ்ஜி சொஜ்ஜியில் சுவைக்கப் போகிறோம்.

சப்தங்கள், ஒலி, ஓசை, இரைச்சல், ஸ்வரம், இசை, பாடல், மொழி என பல பெயர்கள், பயன்கள், பரிமாணங்கள் என நம் வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் சப்தங்களுடன் பிண்ணிப் பினைந்திருக்கின்றன. ”ஆதியில் ஒசை இருந்தது”!! ஏன்? மொத்த பிரபஞ்சமும் ஒரே ஒசையாக அக்ஷ்ரமாக சொல்வது ப்ரணவ மந்திரமாய் ஒலிக்கின்றது என்று வேதம் கூருவதாக சொல்லுவர். சூக்குமமான சப்தங்கள் பற்றி பேசுவது ஒரு புறம் இருக்கட்டும், நம் அன்றாடம் கேட்கும் சப்தங்களின் தனித்தன்மை பற்றி ஏதாவது பேசுவோம்.

நமது ஊர்களில் டீக் கடைகளிலும், பரோட்டா, பிரியாணிக் கடைகளிலும் கடைக்காரர்களின் வியாபரத்தில், அவர்களுடைய பணியின்போது நாம் சில ஓசைகளை கவனிக்கின்றோமா ? அதாவது டீ மாஸ்டர் டீயை ஆற்றிவிட்டு, கிளாசை அவர் பாய்லரை வைத்திருக்கும் ட்ரேயில் ஒரு தட்டு தட்டுவதும், பிரியாணிக்கடையில் சிக்கன் பீஸ், முட்டை வைத்து மேலே பிரியானியை அடிக்கும் ஒவ்வொரு இடைவெளியிலும் அந்தப் பாத்திரத்தை தட்டுவதும்,  வெறும் கல்லில் கொஞ்சம் தண்ணீரை தெளித்து சில ஈர்க்குச்சிகளால் வாரிவிட்டு வெறும் இட்லியுடன் எழுந்துவிட எத்தனிக்கும் வாடிக்கையாளாருக்கு குறைந்தபட்சம் ஒரு ஆஃப் பாயிலாவது வாங்க வைப்பதும், குழந்தையோடு கடற்கரைக்கோ;கோயிலுக்கோ செல்லும் பொழுது குழந்தைக்கு கேட்குமாறு தந்திரம் செய்யும் ஐஸ்கிரீம், பஞ்சுமிட்டாய், பலூன் வியாபாரிகளின் சைக்கிள் ஹாரன்களும், பலூன் கீரல்களும் நாம் அன்றாடம் சந்திப்பவையே, கடினமான தொழில் செய்கின்றோமே என்று வெறுமனே வாழ்க்கையை நொந்துக் கொண்டே இருக்காமல், ஒரே ஒரு அற்புத நிமிடத்திற்காக வேண்டிக் கொண்டே சோம்பேறியாகவும் இல்லாமல், அதே சமயம் தங்கள் இருப்பையும், நம்பிக்கையையும் உலகிற்கு தெரியப் படுத்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது. முதன் முதலில் உங்கள் வீட்டில் ஒலித்த ரேடியாவின் கானம் தந்த ஈர்ப்பு இன்று லட்சம் பாடல்களை மெமரியில் வைக்கும் கேட்ஜட்டுகளில் கண்டிப்பாய் இராது தானே?? வைரமுத்து தன் வரிகளில் சொல்லும் “பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம் என்ற வரிகளில் பாருங்கள் - எவ்வளவு எளிதாக ஒரு உளவியல் செய்தி இருக்கிறது? வெறும் அற்பமான சப்தம் நம் பசிக்கும் நேரத்தில் சங்கீதமாகும் ரசவாதம் என்று.

ஆனால் புதிய கரும்பலகையில் சாக்பீஸால் கீறும் கணித வாத்தியாரின் செயலைப் போல அருவருக்கச் செய்யும், வெறுக்க வைக்கும் சப்தங்களும் அன்றாட வாழ்வில் நிறைய இருக்கின்றன, மஞ்சள் விளக்கைக் கண்டு நிறுத்தக்-கோட்டோரம்(stop line) நம் இரு சக்கர வண்டியை நிறுத்தும் போது, நம் பின்னால் வந்து அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் எழுப்பும் சப்தமான ஒலி மிகவும் கண்டிக்கத் தக்கது. அது போல, பொது இடங்களில் கொரியன் மொபைல்களில் பெரும்பாலும் கானாப் பாடல்களை லவுட் ஸ்பீகரில் வைத்துக் கொண்டு செய்யும் வாலிப மந்திகளின் பேரிடர்கள் மிகக் கொடுமையானது. சில பெரிசுகளும் அதே போல MGR ரொமான்ஸ் ,ரவிச் சந்திரன் ரொமான்ஸ் பாடல்களைக் கேட்பதும் அதே அளவுக் கொடுமையானது. பக்தி என்ற பெயரில் போடும் காட்டுக் கூச்சல்களை வைத்து கன்னாபின்னாவென்று டெசிபல்கள் எகிறும் பிரார்த்தனைப் பாடல்கள் பல இடங்களில் (முக்கியமாக பொது இடங்களில்) ஒரு இடரே1 (இது சர்வ சமயத்திற்கும் பொருந்தும்).

*எங்கேயாவது கேட்கும் ஆம்புலன்ஸ் சைரனில் எல்லாம், ந்ம்மையும் அறியாது ஒரு நடுக்கமோ, பயமோ வந்துவிடுகிறது, அடுத்த விநாடி நம்மை எந்த பாதளாத்திற்கும் கொண்டு செல்லும் வலிமை மிக்கது என்று எண்ணும் அதே நேரம், காதில் கேட்டுக் கொண்டே இருக்கும் சைரன் ஒலியில் ஆம்புலன்ஸில் செல்லும் யாரோ ஒருவருக்கு பிரார்த்தனை என்ற மலர் எடுத்து வைக்க நம்மைப் பணிக்கும்.
* சினிமாவில் ஹீரோயிசத்தைக் கொண்டுவர உபயோகப் படுத்தும் “விஷ்”, “ஷ்க் என்கிற வாயுச் சப்தங்களும், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றில் நவநகாரிகத் தம்மிள் பேசும் தொகுப்பாளார்களின் மொழியும் நான் அறவே வெறுக்கும் சப்தங்கள்.
*உலகம் அழியப் போகிறது, லாஸ்ட் சான்ஸ், கலிகாலம் போன்ற பயமுறுத்தி மதக் கேன்வாஸ் செய்யும் சப்தங்களுக்கு நான் செவியெடுப்பதில்லை. கரை படியாத கை, லட்சியம், அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, வாழ்க ஒழிக கோஷங்களைக் கேட்பதற்கு நான் காது கேளாதவனாகவே போகலாம்.


நமது கிராமத்தின் விடியல் அன்று எப்படியெல்லாம் இருந்தது? நீரின் சலசலப்பு, பறவைகளின் கூச்சல், மெல்லியக் காற்று எழுப்பும் புழுதி ஒலி,
காலையிலேயே வேலைக்கு செல்லும் சைக்கிள் பெல்கள், சிறிய தட்டிச் சுவர்களுக்குள் கேட்கும் குளியல் ஓசைகள், தெரு நாய்களின் கொட்டாவி அல்லது சுரம் குறைந்த குரைப்பு, பால் சுரந்து கொண்டிருக்கும் பசுமாட்டின்  “மா..சப்தம் , பால் காரனின் பாத்திர இழுவை சப்தம், பேருந்துகளில் - டி.எம்.எஸ் பக்திப் பாடல்கள், தேய்ந்துப் போன கிராமத்து கோயில்களின் சுப்ரபாதமும், தேவாலய மணியும், ஆல் இண்டியா ரேடியோவில் நேரம் அறிவிப்பு “ஆறு மணி, ஐந்து நிமிடம்என்று சொல்லியவுடன் ஒலிக்கும் நாகூர் ஹனீபாவின் “இறைவனிடம் கையேந்துங்கள்பாடலும் எல்லாமுமாய் சேர்ந்து ஒரு நாளை எப்படி இனிமையாகத் துவக்கியது அந்நாளில் என்று வியக்கிறேன். எத்தனை துயரங்களில் கிராமம் உறங்கச் சென்றாலும் அதற்கு ஒவ்வொரு விடியலும் உற்சாகமே.

முடிந்தால் ஒரு ஞாயிறு அதிகாலையிலேயே நகரத்தின் பார்வையில் இருந்து தொலைந்து ஏதாவது ஒரு கிராமத்திற்கு சென்று அல்லது ஒரு இயற்கையான சூழ்நிலையில் விடியலின் சப்தங்களைக் கேட்டு வருவோமா??

சென்னைக்கு மிக அருகில் வேடந்த்தாங்கல், புலிக்காட் ஏரி ஏன் வேளச்சேரியை அடுத்து இருக்கும் சதுப்பு வனக் காடுகளில் (இப்பொழுது குப்பைகளின் புகலிடமாகவும் இருக்கும்) வந்து செல்லும் பறவைகளிடம் எப்போதாவது விடியலின் செய்தியை கேட்டு அனுபவித்திருக்கிறீர்களா? 

பஜ்ஜி-சொஜ்ஜி
இன்னும் சுவையாக அடுத்த பாகத்தில்
ஜீவ.கரிகாலன்

குமாரின் குடும்பச் சித்திரங்கள் (மினி தொடர்கதை)




அந்தக் காம்பவுண்ட் வீட்டில் - குமாரின் பக்கத்து போர்ஷனில் குடியிருக்கும் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர் கல்யாணம் ஆகாத பிரம்மசாரி, தாடியும், ருத்திராட்சமுமாய் இருக்கும் அவர் எல்லோரிடமும் சிரித்த முகத்தோடு பேசுவார். அந்த தெருவில் இருந்த எல்லா இளசுகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டதால், கிராமத்துப் பெண்கள் புரளி பேச ஆட்களே இல்லாமல், அந்த ஆசிரியரைத் தான் இரண்டு, மூன்று மாதமாக பாடுபொருளாக்கியுள்ளனர். அந்த கூட்டத்தின் தலைவியே குமாரின் மனைவி கமலா தான்.

இரண்டு வாரம் முன்பு எதிர்த்த வீட்டு லெட்சுமியக்கா, வயிறு சரியில்லாமல் அதிகாலை மூனுமணிக்கும் முன்பே வெளியே கிளம்பும்போது தான், குமார் தங்கியிருக்கும் காம்பவுண்டிற்கு வெளியே உள்ள மாட்டுக் கொட்டகை வழியே யாரோ போவது போல இருந்ததைப் பார்த்துள்ளார், அதனால் வந்த சந்தேகத்தை ஊர்ஜீதப் படுத்த அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று மறைந்திருந்து பார்க்கும் போது தான் அப்படிப் போவது ஒரு பெண் என்றுத் தெரிய வர, அது வாத்தியாரைப் பார்க்கத் தான் ரகசியமாக அந்த நேரத்தில் பார்க்க வருகிறது என்று தீர்மானித்தனர். வாத்தியாரைப் பற்றிய புரளிக் கதையில் மேலும் ஒரு அத்தியாயம் உருவாகியது. அவர்களை எப்படியாவது கைய்யும் களவுமாய் பிடிக்க ஒரு ஐந்தாறு பெண்கள் கூடி திட்டம் வகுத்தனர். அதன் படி, ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அந்தத் தெருவின் வீரமான ஆண்மகன்  குமார், அடுத்த நாள் அந்தப் பெண் உள்ளே நுழைந்த சற்ற நேரத்தில் இவனும் பின் தொடர்ந்து சென்று வத்தியாரின் ரகசியத்தை வெளியே அம்பலப் படுத்துவதென்று.

அன்றிரவு குமாருக்கும் மட்டுமல்லாது, அந்த ஐந்தாறுப் பெண்களுக்குமே தூக்கம் வரவில்லை, குறிப்பாக குமாரின் மனைவி கமலாவிற்கு தான் அதிக சந்தோசம், தன் கண்வன் மூலம் தனது மதிப்பு கூடி விடும். அதுமட்டுமில்லாமல், அந்தப் பெண்ணும் யாரென்றும் தெரிந்துவிடும். குமார் இரண்டரைக்கெல்லாம் எழுந்தாயிவிட்டது ஒரு ஸ்வெட்டரும், குரங்குக் குல்லாவும், கையில் ஒரு டார்ச் லைட்டும் சகிதமாய் அவன் காத்திருக்க மாட்டுக் கொட்டகை கதவு கிறீச்சிடும் ஓசை கேட்டது. அவன் வேக, வேகமாய் வீட்டை விட்டுக் கிளம்பினான். காம்பவுண்ட் கேட்டைத் தாண்டி, காம்பவுண்டிற்கு பக்கவாட்டில் உள்ள புங்கை மரத்தோடு கட்டி வைத்துள்ள தகரக் கதவை சப்தமில்லாமல் திறந்து மாட்டுக் கொட்டகை வழியாக நுழைந்து அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்பது தான் திட்டம்.

பயத்தில் அந்த இளம்பனிக்காற்றிலும் அவனுக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. குமார், கொஞ்சம் குனிந்த வாறே அந்தக் கதவைத் தள்ளினான், அவ்வாறு குனிந்து கொண்டே தள்ளும் போது டார்ச் லைட்டை தன் குரங்குக் குல்லாவில் சொறுகியிருந்தான். அதுவரை மெல்லத் திறந்துக் கொண்டிருந்த கதவு திடுமென இரைச்சலுடன் வேகமாக திறக்கவும், அவன் எதிரே அந்தப் பெண் உறுவம் கம்பீரமாய் நிற்கவும் சரியாய் இருந்தது. தீடிரென்று தன் கண் முன்னே வந்த அந்த பெண் உருவத்தைப் பார்க்க தலையினைத் தூக்க, அதில் சொருகியிருந்த டார்ச் வெளிச்சத்தில் அந்த டைலர் பொண்டாட்டி சாந்தியின் தெத்துப் பற்கள் அகோரமாய்த் தெரிந்தது. குரங்குக் குல்லாவோடு வந்த குமாரும் எதிர்பாராமல் அலற அவளைப் பார்த்த சாந்தியும் ஓவென்று அலறினாள். அடுத்த நொடி எழும்பிய “பளார், பளார் என்ற சப்தம் எல்லா திட்டத்தையும் தவிடுபொடி ஆக்கிட. இந்த எதிர்பாராத திருப்பம் அவர்கள் புரளிக்கு ஒரு முற்றுபுள்ளியை வைத்தது. பின்னர், குமார் இரண்டு நாள் குளிர் ஜுரம் வந்து அவதிப்பட்ட கதையும் இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அன்று முதல் சாணித் திருடி சாந்தி என்று இப்போது அந்த தெருவில் உள்ள யாவரும் அவளைக் கிண்டலடித்தாலும், சாணியைத் திருடியதால் பல பெண்கள் அவளை வசவு பாடி தங்கள் வெறியைத் தீர்த்துக் கொண்டாலும், கமலாவைத் தவிர்த்த மற்ற பெண்களின் கூட்டத்தில்சாணிக் கையால அடி வாங்குனவன் பொண்டாட்டிஎன்று அவளை அழைப்பது கமலாவிற்கு இன்னும் தெரியவில்லை.

பாவம், நம் குமார் - ஒரு நாள் அந்த ஆசிரியரோடு தண்ணியடிக்கும் வாய்ப்பு கிட்டிய போது அழுதுக் கொண்டே இந்த விசயத்தைப் பற்றி அவரிடம் சொன்னான். அந்த ஆசிரியர் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், அவனைப் ஆறுதல் படுத்த சில வார்த்தைகள் சொன்னார் , ஆனல் மனதிற்குள்  “அப்பாடா!! தப்பித்தேன்!! நம் திட்டம் பலித்தது என்று தன் தாடியை தடவிக் கொண்டே நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஒன்றும் அறியாத குமார் வாத்தியாரிடம் மன்னிப்பு கேட்டான்.

திங்கள், 22 அக்டோபர், 2012

மான்செஸ்டெரிலிருந்து கரூர் வரை


செய்திகள்

இன்று
அனேகமாக இப்பொழுது மகாராணி ஆசைத் தம்பி அண்ணனிடம் மறுபடியும் கடன் கேட்டுக் கொண்டிருப்பாள். BBC-இல் ஒலிவியாவிடம் சில கேள்விகளை இன்னும் கொஞ்ச நேரத்தில் கேட்க இருக்கின்றனர் இது நேரடி ஒலிபரப்பு ????


நேற்று
மான்செஸ்டர், உச்சி வெயில் இருபது டிகிரியைத் தொட்டிருக்கும். நகரத் தெருக்களில் வாகனங்கள் இரைச்சலின்றி சீரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தன, ஒலிவியா அலுவலகத்தில் தொடர் விடுமுறையில்  எடுத்திருந்தாள். அவள் வசிப்பது நாற்பத்து மூன்றாம் மாடியில் உள்ள ஒரு டூப்ளெக்ஸ் அபார்ட்மெண்டில், அதன் பெயர் பீத்தம் அபார்ட்மென்ட்ஸ் . மான்செஸ்டரில் அது தான் மிக உயர்ந்த கட்டிடம். அந்த கட்டிடத்தின் கீழேயே உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு அவள் அடிக்கடி போவது கிடையாது ஆனால் இன்று வீட்டின் கதவை லாக் செய்யும் போதே அவள் அங்கு தான் போக வேண்டும் என்று தீர்மானித்து இருந்தாள்.


ஹோட்டலுக்குள் வந்தவுடனேயே சற்றும் தாமதியாமல் ஒரு ஹம்பென் பீர் ஆர்டர் பண்ணினாள், அவளுக்கு பீர் சப்ளை செய்த நொடியே சற்றும் தாமதியாமல் அவள் அதை எடுத்துக் குடிக்கும் வேகத்திலேயே அவள் வெறியும், கோபமும் இன்னும் இரண்டு ஹம்பென் ஆர்டர் பண்ணிடத் தூண்டும் என்று தெரிந்தது. அவள் கண்களில் கோபம் மிகுந்திருந்தது, கொஞ்சம் கொஞ்சமாய் தலைக்கேறிய போதையால் அவள் ஸ்டீபனின் தாயைப் பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் வசை பாடிக் கொண்டிருந்தாள். ஒலிவியா வேலை பார்க்கும் அலுவலகத்தில் அவளுடைய டீம் லீடர் தான் இந்த ஸ்டீபன், இவளது முன்னாள் காதலன். அவனைத் திட்டிக் கொண்டே ஒன்றரை லிட்டர் பீரில் நனைந்திருந்த அவள் மனது, குடித்து முடித்த பின்பு தான் சற்று ஆறுதலடைந்ததிருக்க வேண்டும். மங்கிய கன்களுடன் அருகில் இருந்த பார் கவுண்ட்டரில் உள்ள கண்ணாடியில் தன் முகம் பார்த்துக் கொண்டாள். பீரில் நனைந்திருந்த சிவந்த உதடு அவள் அழகை அதிகமாக்கியது

********

கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை பார்த்தவுடன், உடனேயே பாத்ரூமிற்கு சென்று ஒரு பிளாஸ்டிக் கப்பில் தண்ணீர் மொண்டு கழுவினால், தன் மணிபர்ஸில் வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டு ஒன்றை எடுத்து தன் நெற்றியில் ஒட்டிக் கொண்டாள். அவள் கைகளில் உடைந்திருந்த கண்ணாடி வளையல் தனக்கு காயம் கொடுத்திருப்பதை அப்போழுது தான் உணர்ந்தாள். கலைந்துக் கிடந்த தன் உடைகளை சரி செய்துக் கொண்டே அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள் மகாராணி .

பால்வாடியில் படிக்கும் தன் பிள்ளைக்கு வாங்கவேண்டிய ஸ்கூல் பேக், ஃபைனான்சில் அடகு வைத்திருந்த ஒரு ஜோடித் தோடுகளை மீட்பது அப்புறம் முக்கியமாய் தன் கணவரின் மேலாளர் எழுதிக் கொடுத்த தாளில் இருக்கும் மாத்திரை என்று மனதிற்குள் பட்டியலிட்டுக் கொண்டே வந்தாள். கடிகாரம் இரவு ஏழே முக்கால் என்றிருந்தது, வெளியே வந்தாள். வெளியே, அவளுக்காக காத்துக் கொண்டிருந்த மகாராணியின் கணவன் தன் முகத்தில் செயற்கையாக ஒரு சோகத்தை வரவழைத்துக் கொண்டான். மகாராணி அவனிடம் எதுவும் பேசவில்லை. அவனும் அவள் தன்னருகில் வந்ததும் தான் கொண்டுவந்திருந்த இரவல் டி.வி.எஸ் சாம்ப் வண்டியில் ஒரு உதை விட்டுக் கிளம்பலானான்.

*******
அலுவலகத்தில் இருந்தபோது ஸ்டீபனோடு கொண்ட காதலில், தன் கணவரிடமிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு விவாகரத்து வாங்கியவள் ஒலிவியா. அலுவலகத்திலும், வார விடுமுரை நாட்களிலும் இருவரும் ஒன்றாகவே இருந்தனர். சில மாதங்கள் மட்டுமே நீடித்த உறவு ஸ்டீபனுக்கு புளித்துப் போய்விட, கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தவிர்த்து வந்தான். குடும்பத்தை விட்டு தன்னுடன் வருவதாக சத்தியம் செய்துக் கொடுத்த ஸ்டீபன், மறுபடியும் அவனுடைய குடும்பத்தில் தஞ்சம் அடைந்தது அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவள் தொடர்ந்து வற்புறுத்தியும் கூட கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு விலகினான், அலுவலகத்திலும் ஒலிவியாவின் மேல் அதிகாரியாக மட்டுமே நடந்துக் கொண்டான். கொஞ்ச நாட்களில் தன்னிடம் வருவதை முழுவதுமாக நிறுத்திவிட, இரண்டு மாதம் பொறுத்துப் பார்த்த ஒலிவியா அவனைப் பழி வாங்கிட துடித்துக் கொண்டிருந்தாள்.


ஸ்டீபனின் குடும்பம் தங்கியிருப்பது சால்ஃபோர்டில், அது மான்செஸ்டருக்கு வெளியே உள்ள ஒரு புறநகர். அழுக்கு நதியான இர்வெல்லை ஒட்டிய ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் அவன் குடும்பத்துடன் தங்கியிருக்கும் ஃப்ளாட்டைக் கண்டுபிடிப்பதற்கு ஒலிவியா அதிக சிரமம் எடுத்துக் கொள்ளவில்லை. ஸ்டீபன் தன் மனைவி மற்றும் ஒரே மகனுடன் வசிப்பதை அறிந்த ஒலிவியா அவர்களை எப்படிப் பழி வாங்கலாம் என்று பல நாட்களாய் யோசித்து வைத்து இன்று அதை செயல்படுத்த நேரம் வந்து விட்டதை உணர்ந்தாள்.

********
இருவரும் ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்க,“இதோ வருகிறேன் என்று அவளை அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அவன் கையில் மகாராணி அன்று ஈட்டிய பணம் இருந்தது. அவன் மேலாளர் எழுதிக் கொடுத்த மாத்திரைச் சீட்டை ஒரு மெடிக்கலில் சென்று நீட்ட, அவனை சந்தேகக் கண்களில் பார்த்தவாறே அந்த மாத்திரைக்கு கூடுதல் விலையுடன் அவன் கையில் நீட்டினான் அந்த மெடிக்கல் ஓனர். பஸ்ஸ்டாண்டிற்கு திரும்பும் வழியில் அருகில் உள்ள ஒரு செல்போன் கடையில் அவன் உள்ளே நுழைந்தான். செல்போன் மீது கொண்ட அளப்பறிய மோகத்தில் அவனிடம் அவள் கொடுத்து வைத்த இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயில் இரண்டாயிரத்து இருநூறு மதிப்புள்ள கேமிரா போனை வாங்கியபடி அவளிடம் செல்ல, அதைக் கண்ட அவளுக்கு அந்த செல்போனிற்காகத் தான் அவளை அங்கு அனுப்பினானோ என்று நினைத்து பேச்சடைத்து நின்றாள், தலை சுற்றியது.

திடீரென்று கோயில்களில் பூஜையில் வரும் சாமி ஆட்டம் போல் தன்னை மறந்தபடி தன் கணவனை வசை பாட ஆரம்பித்தாள். அவன் குடும்பத்தில் யாரையும் விட்டு வைக்கவில்லை தன் கணவனின் தாய், தந்தை தன்னுடைய தந்தை என எல்லோர் பிறப்பையும் விமர்சித்தாள், அருகிலுள்ள கடையிலிருப்போர் அனைவரும் அவர்களைத்தான் கவனித்துக் கொண்டிருந்தனர். மெல்லத் அடங்கிய அவள் கோபம் கண்ணீராக மாறியது,
அப்பொழுது தான் தன்னை எத்தனை பேர் பார்க்கிறார்கள் ?, தன் ஊர்க் காரர்கள் யாராவது இருக்கிறார்களா?, கோபத்தில் இன்று நடந்ததையும் உளறிவிட்டோமே? என்று எண்ணி நெளிந்துக் கொண்டிருந்தாள். மறுபடியும் அவளை சமதானப் படுத்த அவண் கணவன் அவள் அருகில் வந்தான்.

இருவரும் பேருந்திலேறி அமர்ந்தனர், பேருந்து அவர்களை சுமந்துக் கொண்டு மெதுவாக நகர்ந்தது. கலெக்டர் ஆபிஸ் தாண்டும் வரை இருவரும் பேசவில்லை, அவள் கணவன் தான் மெதுவாக அவளை சமாதானம் செய்ய முயன்றான்,        ஏய்! இந்தெ.. இப்படியே எவ்ளோ நேரந்தே இருப்பே, இந்த வருசமில்லாட்டி என்ன அடுத்த வருசம் போவட்டும், ஜெகதாபில இருக்குற தோட்டத்துல கல்லு நட்டிருக்காங்கள்ள, அத நாங்க தான் பட்டா போட்டு பிரிக்க போறொம், தலைவர்கிட்ட இருந்து எப்படியாவது எதாவது ஒரு மனையாவது தேத்திடலாம்னு ரோசனை. அப்புறம் பாரு நம்ம புள்ளைய அந்த பாரதி ஸ்கூல்லயே சேத்திடுவோம். என்ன சொல்லுற கண்ணு?? எதுக்கும் நம்ம வெள்ளியனையில எறங்கி நம்ப ராசுக்கு அதிரசம், முறுக்கு வாங்குவோம் ன ?  என்று ஒருவழியாக தன் மனைவியை சமாதானப் படுத்தினான். அப்பொழுது அவன் கண்களில் அதிரசக் கடைக்கு அருகிலிருந்த டாஸ்மாக்  மின்னியது.

 **********

ஸ்டீபனை அன்று எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என்று ஒலிவியா தீர்மானித்திருந்தாள். மறுபடியும் தனது அறைக்கு சென்று தாளிட்டு அங்கிருந்த கவுச்சில் அமர்ந்து ஸ்டீபனை எப்படி பழி வாங்குவது என்று போட்டு வைத்த திட்டங்களைப் பார்த்துக் கொண்டாள். தன்னுடைய டைரியை எடுத்து சில வட்டம் வட்டமாக வரைந்தாள் அதனுள் எதோ எழுதினாள். பார்ப்பதற்கு ஃப்லோ சார்ட் போல் இருந்தது, தன் அலுவலகத்தில் எந்த ஒரு பணியைத் தொடங்கும் முன்னர் எல்லோரும் ஃப்லோசார்ட் வரைந்து வைக்க வேண்டும் என்பது ஸ்டீபன் விதித்த விதி. இப்பொழுது அவனை எப்படி பழி வாங்குவது என்று இருந்தது அதை அவள் வரைந்து வைத்து ஒரு வாரம் ஆகியிருக்கும், அதன் பிரதான வட்டங்களில் இருந்த செயல்கள் :

*
ஒன்று அவனைக் கொலை செய்யவண்டும்
*
இரண்டு அவனை அவன் குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும்.
அவனைக் கொல்ல வேண்டும் என்றால் என்ன செய்யலாம் என்று தீர்மானிக்கும் போதே, இதற்கென்று அசாசின் வைக்கும் அளவிற்கு இவளிடம் பணம் இல்லை, தன் வெறி தீர வேண்டும் என்றால் எக்சிக்யூசனும் தன்னாலே ஆக வேண்டும், ஆகவே அவன் நிம்மதியைக் கெடுக்க என்ன செய்யலாம் ? அவன் குடும்பத்தை எதாவது செய்ய வேண்டும்என்று அவளுக்குத் அந்த ஃப்லோ சார்ட் சொல்லியது.

இதற்காக போலிசில் சிக்கிக் கொண்டாலும் கவலையில்லை என்று தீர்மானித்திருந்தாள். தனது லேப்டாப்பில் கூகிளித்த போது valley arms என்ற வெப்சைட்டில் கிடைக்கும் துப்பக்கி ரகங்களை  பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் கிடைத்தவை எல்லாம் வேட்டையாடுபவர்களுக்கு உதவுவதாகவே இருந்தது. தேடல் இருந்தால் எதுவும் சாத்தியம் தான், ஆனால் இங்கிலாந்தில் இப்போழுது சட்டம் மிகக் கடுமையாக இருக்கிறது, இருந்தும் எப்படி அவளால் அந்த மாதிரியான மனிதர்களை எல்லாம் சந்தித்து அந்த துப்பக்கியை வாங்க முடிந்தது ??

*********
"
அந்த துப்பாக்கி எவ்வளவு"

"
இருபது ரூபா"

"
சரி அதையும் கொடு !! இதுல எங்க தண்ணி ஊத்தோனும்"

"
மேல இருக்குற மூடிய தொறந்து தான்"

"
சரி! பத்து ரூபாய்க்கு வராதா ??"

"
வராது"

"
சரி எனக்கு ரெண்டு அதிரசப் பாக்கெட் வேணாம்!! இத வச்சுக்கிட்டு .. அந்த துப்பாக்கி ஒன்னு கொடு"

"
ஏக்கா ! வாங்கினத திருப்பி கொடுக்குற , பதினஞ்சு கொடு போதும் ஒனக்காக வாங்கிக்கிறேன்"

"
அஞ்சு ரூபாவும் இல்லையே! கரெக்டா பஸ்சுக்கு தான் இருக்குது. இருப்பா , ஊட்டுக்காரர் கிட்ட கேக்குறேன்"

தன் ஊருக்கு போகும் வழியில் வரும் சிற்றூரான வெள்ளியனையில்  தன் மகனுக்கு அதிரசம் வாங்கலாம் என்று தன் மனைவியுடன் அவ்வூரில் இறங்கிய ஒரு இரண்டு பாக்கெட் அதிரசம் வாங்க மகாராணியின் கையில் காசைக் கொடுத்துவிட்டு ரியல் எஸ்டேட் பார்டியைப் பார்க்கப் போகிறேன் என்று அங்கிருந்து டாஸ்மாக் கடைக்குள் நேராக சென்றிருந்தான்.

தள்ளாடிய படி நடந்து வந்த தன் கணவனின் நிலைமையைப் புரிந்து கொண்ட மகராணி, கண்களில் தேங்கியக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அந்த பொம்மைத் துப்பாக்கி வேண்டாம் என்று அங்கிருந்து நகர்ந்தாள். திடீரென்று அங்கிருந்து நகர்ந்ததைக் கண்டு மகாராணியை அழைத்து பத்து ரூபாய்க்கே தருகிறேன் என்று அந்தக் கடைக்காரன் உரக்க கத்தியும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மகராணி அங்கிருந்து நகர்ந்தாள். நடுத் தெருவில் தன் கணவன் மீது கோபம் கொள்ள முடியாததால், கண்களில் வழியும் கண்ணீரையும் அடக்க முடியவில்லை. அந்தப் பக்கமாக போன டிராக்டர் ஒன்றைப் பார்த்து, "அண்ணே! என்னை அப்படியே செகதாபில வுட்டுட்டு போங்கண்ணே"என்று கேட்டாள். டிராக்டர் ட்ரைவரும் தலையை சொறிந்தவாறே சம்மதித்தார்.

போதையில் தள்ளாடிய அவள் கணவனின் முகம் பார்க்கப் பிடிக்காமல் அவள் மட்டும் டிராக்டரில் ஏறி அமர்ந்துக் கொண்டாள். தன்னை விட்டுச் செல்லும் மகராணியை அவள் கணவன் தன் வாய்க்கு வந்தபடி திட்ட  ஆரம்பித்தான், கரூர் பஸ்ஸ்டாண்டில் அவள் மனைவி கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரமாரியாக பதில் தொடுத்துக் கொண்டிருந்தான், அவர்களுக்குள் மட்டும் அந்தரங்கமாய் மறைந்திருக்கும் என்று தீர்மானித்த விசயம் ஒரே நாளில் காற்றில் பறந்தது.  

******
அவள் முடிவு செய்து வாங்கத் தீர்மானித்து பின்னர் மிகுந்த சிரமப் பட்டு வாங்கியது, டாரஸ்(taurus)9 mm பிஸ்டல் என்ற ரகம். குண்டு உடலைத் துளைத்தால் அடுத்தப் பக்கம் வெளியே வரும். இங்கிலாந்தில் 2006க்குப் அவ்வளவு எளிதாக யாரும் இல்லீகல் வெப்பன்ஸ் வாங்கிட முடியாது என்று அவளுக்குத் தெரியும். அதுவும் அவ்வூரில் ஆசியர்கள் அதிகமாகக் குடியேறிய பின்னர் கெடுபிடிகள் அதிகமாகிவிட்டது. இன்டெர்னெட் உதவியில் அதற்கும் ஒரு வழியை எளிதாகக் கண்டுபிடித்து விட்டாள். ஒரு அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவன் ப்ளாக் மார்கெட்டில் விற்கிறான் என்று அறிந்தாள். உலகில் எந்த ஒரு மூலையில் வசிக்கும் மனிதனையும் சந்திப்பதற்கு ஒருவனுக்கு அதிகப்பட்சம் ஆறு நபர்கள் போதும் என்று ஒரு தியரி இருக்கிறது. நேற்றைக்கு, ஒலிவியாவிற்கு இரண்டு நபர்களே தேவைப்பட்டனர் அவனை சந்திப்பதற்கு ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி என இரு இடைத் தரகர்கள் மூலம் நேராக அந்த அமெரிக்கனைப் பிடித்து விட்டாள் . அருகிலிருந்து சுடுவதற்கு இந்த 9 mm பிஸ்டல் போதுமானது என்று அவனிடம் கேட்டு அறிந்தாள். Can you trigger the target?” என்று அவன் கேட்டதற்கு, சிரித்துக் கொண்டே வெளியேறினாள்

கண்ணாடி முன் நின்று முகம் கழுவி நிமிர்ந்தாள், குடித்திருந்த போதை கொஞ்சம் கூட தெளியவில்லை. அவளும் அந்த போதை தெளிந்திட விரும்பவில்லை. லோட் செய்யப்பட்ட பிஸ்டலை சரிப்பார்த்துக் கொண்டு தன் கருப்பு நிறக் கோர்ட்டில் வைத்தாள். வீட்டைப் பூட்டி விட்டு, ஒரு டாக்சியைப் பிடித்து ஸ்டீபனின் மகன் ஹென்றி படிக்கும் பள்ளிக்கு விரைந்துக் கொண்டிருந்தாள். இன்னும் சில நிமிடங்களில் அவள் சால்ஃபோர்டை அடைந்து விடுவாள். தன் பிஸ்டலில் அவ்வப்பொழுது தன் கை வைத்து பிஸ்டல் இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொண்டாள். டாக்சியும் வந்து சேர்ந்தது....

*******

மெதுவாக வண்டியிலிருந்து இறங்கிய பின் ட்ரைவருக்கு நன்றி தெரிவித்து அவருக்கு கை காட்ட, அங்கிருந்து ட்ராக்டர் மெதுவாக நகர்ந்தது. அவள் இறங்கிய உடனேயே அவளுக்காக காத்திருந்தது போல் அவள் தலையில் இடி ஒன்று விழுந்தது, அந்த இடியை பெட்டிக் கடை கிழவன் தான் சொன்னான். தலையிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு அவள் வீட்டை நோக்கி ஓடினாள். அவள் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழையும் பொழுது, அவள் மகன் ராசுவைத் தூக்கிக் கொண்டு இரண்டு மூன்று பேர் பேருந்து நிறுத்தத்திற்கு ஓடிக் கொண்டிருந்தனர் தெருவிலுள்ள மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த ராசு கீழே விழுந்து,  தலையில் ஒரு சிறு பிளவு வழியாக ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.

மாலை ஆறு மணியை நெருங்கியிருக்கும் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட பலர் தூக்கிக் கொண்டு வரும் ராசுவைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து வெளி வர முடியாமல் கல்லாய் நின்றுக் கொண்டிருந்த்தாள். பக்கத்து வீட்டு ஆசைத் தம்பியண்ணன் தான் அந்த நிலைமையை சமாளித்துக் கொண்டிருந்தார். அடுத்த பேருந்து ஏழரைக்கு தான் என்பதால் வெள்ளியனையிலிருந்து டேக்ஸி கிடைக்குமா என்று போனில் விசாரித்துக் கொண்டிருந்தார். அது முகூர்த்த சமயம் என்பதால் அங்கு ஒரு டேக்சி கூட கிடைக்கவில்லை.

பக்கத்திலிருக்கும் எல்.ஜீ.பி தொழிற்சாலையில் சில தொழிலாளர்கள் நம்பரை அழைத்து உதவியைக் கேட்க, அந்த நிறுவன மேனஜரின் காரை எடுத்துக் கொண்டு வருவதாய் தகவல் சொல்லிவிட்டார்கள். அன்று மாலை அவள் கையிலிருந்த இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயும் கரைந்து போன விதத்தை எண்ணி கண்ணீர் வீட்டுக் கொண்டு இருந்தாள். வலி தாங்க முடியாமல் அழுதுத் தீர்த்த ராசு கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்துக் கொண்டிருந்தான். அவனோடு சேர்ந்து மரத்திலேறி விளையாண்ட சிறுவர்களின் கன்னங்கள் வீங்கியிருந்தன. மொத்த ஊரும் எல்.ஜீ.பியிலிருந்து வரும் வாகனத்திற்காக காத்துக் கொண்டிருந்தது. மகாராணியின் கணவன் பற்றிக் கேட்டவற்கு அவள் பதிலேதும் சொல்லாமல் அவன் குடித்துக் கொண்டு எங்கேயாவது இருப்பான் என்று புரிய வைத்தாள்.

மாலை ஐந்து மணிக்கெல்லாம் பூட்டிவிடும் ஆரம்பநிலை அரசு சுகாதார நிலையத்தை நம்பாத அவ்வூர் மக்கள் நம்பி வந்த ஒரு தனியார் மருத்துவரும் அரசாங்க வேலை கிடைத்ததால் ஏழரைக்கு பின் தான் வருவார். அதுவும் இப்போது அவர் கட்டு போடும் சிகிச்சையெல்லாம் அனுமதிப்பதில்லை என்பதால் கரூர் செல்வதைத் தவிர வேறு வழியில்லை, அவசர சிகிச்சை தேவைப்படும் அந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் இதே கதி தான். கார் ஒன்று வேகமாக வரும் சப்தம் கேட்டது.

*****************
மெதுவாக காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு அந்த பள்ளியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள், கேனான் வில்லியம்சன் மான்செஸ்டர் நகரில் மிகப் பிரபலமான பள்ளி அது அன்று புதன் மதியம் என்பதால் அந்தப் பள்ளியில் எல்லோரும் எக்ஸ்ட்ரா கர்ரிகுலர் ஆக்ட்விடியில் இருப்பார்கள். அடுத்த நாள் செல்வது தான் புத்திசாலித் தனம் என்று தீர்மானித்தாள். இப்படித் தள்ளிப் போடுவதால் தன் வெறி குறைந்துவிடுமா என்றும் யோசித்தாள், அவள் கொலை செய்வது பற்றி வாசித்த கில்லிங் வில்லிங்என்ற ப்ளாகில் இருந்த டிப்ஸ்களும் அப்படித் தான் சொல்லியிருந்தது. மேலும் அதில் ஒருவரைப் பழி வாங்கும் நேரத்தில் உங்களுக்கு திடீரென்று கருணை ஏற்பட்டால் ஒன்று செய்யுங்கள். ஒரு கணம் அவரோடு அன்புடன் பேசி தன்னிடம் மன்னிப்பு கேட்க சொல்லி ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். அப்பொழுது தெரியும் உங்கள் அன்பு எவ்வளவு பலவீனமானது என்று என்று சொல்லியிருந்ததை நினைத்துப் பார்த்தாள். ஸ்டீபனின் நம்பரை அழைத்துப் பார்க்க முடிவெடுத்தாள்.


மூன்று முறை துண்டித்த அவன், அவளுக்கு வாய்ஸ் மெசேஜில் அவள் தாயைப் பற்றியும் அவளைப் பற்றியும் தரக் குறைவாய் திட்டி அனுப்பியிருந்தான். வாய்ஸ் மெயிலில் அவன் தன்னை திட்டும் போது, அவள் அந்த வலைதளத்தை எழுதியவனை நினைத்துப் பார்த்தாள். முதலில் வீட்டில் வைத்திருக்கும் ஃப்ராயிட், நியீட்சே, தாவோ போன்றோரின் புத்தகங்களை கிழித்து எறிய வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டாள். அடுத்த நாள் என்று தாமதிப்பது தவறு, இன்றே ஸ்டீபன் பழி தீர்க்கப் படவேண்டும் என்று நினைத்துக் கொண்டே புன்னகைத்தாள். அவள் கவர்ச்சியான உடலில் கொலை நாற்றம் வீசத் தொடங்கியது. எப்படியும் இன்னும் சில நாட்கள் மான்செஸ்டர் முழுதும் தன்னைப் பற்றி தான் பேசுவார்கள், ஒருவேளை நாளை உலகம் முழுக்க தன்னைப் பற்றி செய்தி வரலாம் என்று கற்பனை செய்துக் கொண்டிருந்தாள். கையில் வைத்திருக்கும் பிஸ்டலை தடவிக் கொண்டிருக்க அவளுக்கு வெறி ஏறிக் கொண்டிருந்தது.
********
 கரூர் அரசு மருத்துவமனை - மிகவும் பரபரப்புடன் நோயாளிகளும், மிகவும் நிதானத்துடன் மருத்துவர்களும் அங்கே இருந்தனர். வெளியில் இருக்கும் சோடியம் விளக்கைத் தவிர நல்ல வெளிச்சம் தரும் எந்த விளக்கும் அந்த மருத்துவமனை வளாகத்தில் இல்லை. அவசர மற்றும் விபத்துப் பிரிவின் வாயிலில் சுவற்றில் ஒட்டியிருக்கும் வெற்றிலைக் கறை போலே, சுவற்றில் ஒட்டுக் கொண்டு செய்திட ஏதுமற்றுக் கிடந்தாள்.அவளிடம் இருந்த சக்தி அத்தனையும் மருத்துவமனைக்கு வருமுன்னரே கண்ணீரோடு போய் விட்டது, குடியை நிறுத்திவிடுவதாக நித்தமும் சத்தியம் செய்யும் அவள் கணவன், வெள்ளியணை ஊர்க் கிழக்கில் போதையுடன் சாலையோரமாக மல்லாந்து கிடந்ததைப் பார்த்த பின்னர்,அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற யோசிக்கும் திறனை எல்லாம் இழந்திருந்தாள்.


அரசு மருத்துவமனையில் மருத்துவச் செலவு என்று எந்த செலவுகளும் இல்லை தான், ஆனாலும் கையில் பத்து ரூபாய் கூட இல்லாத நிலை  மகாராணிக்கு, ராசுவின் நிலையோ பரிதாபமாய் இருந்தது. அவனுக்கு வேண்டிய AB-ve இரத்தம் அவன் குடிகாரத் தந்தையிடம் இருந்தும் பெற முடியாது அரசு மருத்துவமனையிலும் இல்லை, இரத்த வங்கி மூலம் அவ்வூர் கல்லூரியான கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இருந்து ஒரு மாணவி ஒருத்தி தொடர்ந்து இரத்தம் தானம் தருவதாகவும், அதற்கு அதைப் பெற்றுத் தரும் இரத்த வங்கி நிறுவனத்திற்கு இரண்டாயிரத்து ஐநூறு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த மருத்துவமனை வார்டன் சொல்ல, ஒரு ஆட்டோவை பிடித்துக் கொண்டு அவள் கணவனின் அலுவலகத்திற்கு சென்றாள்.
**********************************************************************

அழுதுக் கொண்டே வந்த மகாராணியின் பாதத்திற்கு அன்று பகலிலே முத்தம் கொடுத்தவன், பணம் கேட்டு நிற்கும் அவளை ஆபாசமாக திட்ட ஆரம்பித்தான்.
தன்னைத் திட்டுவதையெல்லாம் அவள் பொருட்படுத்தவில்லை. அவன் காலில் விழுந்தாள். தன் காலில் விழுந்த அவளைப் பற்றித் தூக்கினான், அழுகையிலும், வியர்வையிலும் அவள் அழகாகவே அவனுக்குத் தெரிந்தாள். அவளால் அவனைத் தடுக்க முடியவில்லை, அழுதுக் கொண்டிருக்கும் அவளைப் பொருட்படுத்தவும் இல்லை.

முதலில் ஸ்கூல் கேட்டைத் தாண்டுவது தான் ஒலிவியாவிற்கு பெரும் சிரமம். ஆனாலும் கையில் இருக்கும் பிஸ்டல் ஒலிவியாவிற்கு ஒரு தைரியத்தைக் கொடுத்தது. தன்னைத் தடுத்து நிறுத்திய செக்யூரிடியிடம் தன்
பிஸ்டலைக் காட்டி தன் கைகளை உயர்த்திப் பிடித்தாள். அதிர்ச்சியுடன் அவளை உள்ளே விட்டான், அதே சமயம் அவன் செய்த எச்சரிக்கையை அவள் சிறிதளவும் பொருட்படுத்தவில்லை.


உடையை சரிசெய்துக் கொண்டே மீண்டும் ஆட்டோவில் அமர, ஆட்டோ மருத்துவமனை விரைந்தது. மருத்ததுவமனைக்கு அருகில் செல்லும் போது அவசரம் பொறுக்க முடியாது ஆட்டொவை ஒரு ஓரமாக நிறுத்திய ஆட்டோ டிரைவர், அங்கு அருகில் நின்றிருந்த ஒரு லாரிக்கு பின் சென்று மருத்துவமனை பின்வளாகச் சுவற்றில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான்.
யாரோடும் சண்டையிட தெம்பில்லாத மகாராணியின் கண்களில் அந்த சிறிய பெட்டிக் கடை தென்பட்டது.

அந்தக் கடையில் சிறிய சைஸ் பொம்மைத் தண்ணீர் துப்பாக்கிகள் தொங்கப் பட்டிருந்தன. ஆட்டோவிலிருந்து கீழிறங்கி, அந்தக் கடைக்கு சென்று அதன் விலையைக் கேட்டாள். “முப்பது ரூவா என்று உரத்த தொனியில் அந்தக் கடைக்காரன் சொல்லும் பொழுதே, அவளுக்கு புரிந்தது அவனிடம் விலையைக் குறைத்துக் கேட்பதைக் கூட அவன் அனுமதிக்கவில்லை என்று, ஆசைத்தம்பி அண்ணனிடம் அப்பொழுது கடன் வாங்கிய சில நூறுகள் எவ்வளவு என்று கூட எண்ணிப் பார்க்கவில்லை, அதிலிருந்து ஒரு நோட்டை எடுத்து நீட்டினாள். ஆட்டோ மருத்துவமனை உள்ளே நுழைந்து, அந்த தண்னீர் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள், "அவள் மனதில் ராசுவுக்கு இந்நேரம் இரத்தம் கொடுத்திருப்பார்களா? இப்போதாவது அவள் கணவன் அங்கு வந்திருப்பானா ?" என்று அடித்துக் கொண்டிருந்தது.
*************************************************************************

ஸ்டீபனின் மகன் ஃபோர்த் ஃபார்ம் படிக்கிறான் என்று அவளுக்கு தெரிந்திருந்தது, அவள் கொல்லத் துடிக்கும் ஸ்டீபனின் மகனுடைய முகத்தை போட்டோவில் குறைந்தது ஆயிரம் முறையாவது பார்த்திருப்பாள். அவன் தற்பொழுது பேஸ்கட் பால் கோர்ட்டில் இருக்கிறான் என்று கேட்டுத் தெரிந்துக் கொண்டாள். கையில் பிஸ்டலுடன் ஸ்கூலுக்குள் ஒரு பெண் நுழைந்துவிட்டாள் என்று செக்யூரிட்டி கொடுத்த தகவலில், பள்ளியின் பிரின்ஸ் பால் போலீஸில் தகவல் சொல்லிவிட்டார். செக்யூரிட்டியின் விசில் சப்தம் அந்தப் பள்ளியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது, சற்றைக்கெல்லாம் தெரு முனையில் போலீஸ் சைரனும் கேட்க ஆரம்பித்து விட்டது.

சைரனை ஒலிவியாவும் கேட்டுவிட்டாள், ஆகவே அவள் உடனடியாக வேலையை முடித்து விட வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள், போதையும்-வெறியும் அவளை மைதானத்தின் உள்ளே வேகமாக நுழைய வைத்தது. கையில் துப்பாக்கியுடன் ஒரு பெண் கோபமாய் பள்ளிக்குள் வருவதைப் பார்க்கும் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுஅப்பொழுது பள்ளியின் உள்நுழைந்த போலீஸ், துப்பாக்கியுடன் ஒரு பெண் நுழைந்தும் அவள் எங்கே போய் இருக்கிறாள் என்று குழம்பியது, சிலர் வகுப்பறைக்குள் என்றும், ப்ரின்ஸ்பால் அறை என்றும், க்ரவுண்டில் போய்க் கொண்டிருக்கிறாள் என்றும் சொல்ல, வந்திருந்த போலீசார்கள் பிரிந்து நாலாபுறமும் அவளைத் தேட ஆரம்பித்தனர். இப்பொழுது ப்ரஸ் வேன் சப்தமும் கேட்க ஆரம்பித்தது, அங்கு வந்த இன்ஸ்பெக்டர், சர்வெய்லன்ஸ் சாப்பர் (ஹெலிகாப்டர்) ஒன்றை கேட்டுக் கொண்டிருந்தார். அதற்குள் அந்தப் பெண் பேஸ்கட்பால் கோர்ட்டில் நுழைகிறாள் என்று தகவல் உறுதி செய்யப்பட மொத்த போலீஸ் டீமும் உள்ளே நுழைந்தது. பேஸ்கட் பால் கோர்ட்டில் சிவப்பு நிற ஜெர்ஸியில் ஸ்ட்டிபனின் மகன் ஹென்றி துள்ளி விளையாடிக் கொண்டிருந்தான். அவளைக் குறிவைக்க பிஸ்டலை உயர்த்திக் கொண்டே அவளும் அந்த கோர்ட்டில் குதிக்க, இவள் வருவதைப் பார்க்காமல் அந்த சிறுவர்கள் விளையாட்டில் ஆர்வமாய் இருந்தனர்.

*******************************************************************************


அவள் பிஸ்டலை அழுத்தும் நேரமும், ஹென்றி கூடையில் பந்தை போடுவதற்காக எழும்பிக் குதித்த நேரமும், அதைத் தடுத்திட இந்த இருவர்களுக்கு மத்தியில் நீல நிற ஜெர்ஸி அணிந்த ஹாரியும் எழும்பியது யாரும் எதிர்பாராதது. பிஸ்டல் கக்கிய குண்டு குறுக்கே குதித்த ஹாரியின் தலையில் பட்டு அவனை சில அடிகள் தூக்கி எறிந்தது, துள்ளி விழுந்த ஹாரி தன் தாய் தான் தன்னை சுடுகிறாள் என்றறிந்தும் அந்த அதிர்ச்சியைக் கூட முழுதும் உணர முடியாது அதற்குள் மடிந்து போனான்.

அடுத்த முறை சுட முடியாமல் சிலையாய் நின்ற அவள், ஹாரியை இங்கே எதிர்பார்க்கவில்லை, விவாகரத்து ஆன பின்பு ஹாரியின் படிப்பைப் பற்றியோ அவன் பள்ளியைப் பற்றியோ அவள் தெரிந்து கொள்ளவில்லை, அவன் ஹென்றியின் வகுப்பு மாணவன் என்று தெரியாது. ஹாரியை நெருங்க முயற்சிக்கும் முன்பே அவள் தலையில் ஒரு அடி விழவும் அவள் மூர்ச்சை அடையவும் சரியாக இருந்தது.


அடுத்த நாள் ஒரு தினசரி நாழிதளில், ஒரு திரில்லர் படம் போல் வர்ணிக்கப்பட்டு ஒரு கவர் ஸ்டோரியில் சில கலர் படங்களுடன் மான்செஸ்டர் சம்பவமும், அந்த கொலைக்கான பின்னனியை ஒரு தனிக் கட்டத்தில் அச்சிட்டிருக்க, அதன் கீழே கரூரில் நடந்த ஒரு சிறிய விபத்தாக ஒரு சிறுவனின் மரணமும் வந்திருந்தது.

ஆனால் ராசுதான் இறந்தான் என்பதும், அவன் சாவிற்கு காரணம் என்ன என்பது எனக்கும், உங்களுக்கும், இந்த சமூகத்திற்கும் தேவையில்லாதது என்று ஊடகங்கள் தீர்மானித்துவிட்டன

அனேகமாக இப்பொழுது மகாராணி தன் மகனின் இறுதிச் சடங்கிற்கு ஆசைத் தம்பி அண்ணனிடம் மறுபடியும் கடன் கேட்டுக் கொண்டிருப்பாள். BBC-இல் ஒலிவியாவிடம் சில கேள்விகளை இன்னும் கொஞ்ச நேரத்தில் கேட்க இருக்கின்றனர் இது நேரடி ஒலிபரப்பு ????

புதன், 17 அக்டோபர், 2012

பேட்மேன்-ம் NEW WORLD ORDER-ம்

– என்றதும் என்னடா இது சினிமா விமர்சனமா என்று சொல்லிட வேண்டாம். கனவுகளின் தேசம் என்று உலகில் எல்லோருக்கும் சென்று விட வேண்டும், பார்த்து விட வேண்டும் என்று தோன்றும் இடம் என்றால் அது அமெரிக்கா தான். உலகின் எந்த மூலையில் தோன்றும் சித்தாந்தங்களும் ஒன்று - இங்கு தான் போய் முடியும்/அல்லது இங்கிருந்து தான் தொடங்கும். ஒரே கூரையின் கீழ் உலகின் அத்தனை தேசங்களையும் சேர்க்க கனவு காண ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நம்மில் எத்தனை பேருக்கு  New World Order எனும் புதிய உலகைப் பற்றிய சிந்தனைகள் பற்றி தெரியும்?? என்னடா இது பேட்மேனுக்கும் New World Orderக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கிறீர்களா?

சமீபத்தில் வெளியான பேட்மேனின் வரிசைப் படமான “The Dark Knight Rising” எனும் திரைப்ப்டத்தில் வரும் சில காட்சிகளின் பாதிப்பை நம் சமகாலப் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு பார்க்கிறேன். சரி, அது என்ன New World Order? இது பாரதியின் “புதியதோர் உலகம் செய்வோம்” என்பது போலவா? இல்லை. ஒவ்வொரு சமூகமும், அது சந்திக்கும் பிரச்சனைகளை முன் வைத்து தான் அதற்கு தேவைப்படும் மாற்றங்கள் குறித்து சிந்தித்து, விவாதித்து தேவையானவற்றைக்(தீர்வினை) கட்டுவித்துக் கொள்ளும், இப்படித் தான் சமூகத்தின் ஒவ்வொரு மாற்றங்களும் நடைபெறும். New World Order - மேலை நாடுகள் முதல் வல்லரசு கனவில் இருக்கும் எல்லா நாடுகளும் தத்தமது பாணியில் சிந்தித்து வருகிறது, அவை உலகின் உள்ள அனைத்து நாடுகளை விட தன்னை மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக தன்னை நிலைநாட்ட முயன்று வருகின்றன.

இந்த இடம் தான் மாற்றத்தின் விளைவுகளை தீர்மானிக்கும் இடம். சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான் தீர்வாகக் கிடைக்கும் மாற்றம், அதன் அடிவேரிலிருந்து மாறாமல் மேலோட்டமாக இருந்தாலோ அல்லது அந்த சமூகம் பிற பிராந்திய மாற்றங்களை கடன் வாங்கிக் கொண்டாலோ அதனால் எந்தத் தீர்வும் கிட்டாமல், அதுவே ஒரு புதிய பிரச்சினைக்கு அடிவகுக்கும். சரி பேட்மேன் போன்ற கற்பனைக் கதைகள் இந்த இடத்திற்கு எப்படி வருகிறது என்று பார்ப்போம்.
******************************************************************
பொதுவாக இந்த மாதிரியான அதிசய மனிதர்களின் உருவாக்கம் குறித்து அலசிப் பார்ப்பது இக் கட்டுரைக்கு மிக அவசியமாகிறது. குழுவாய் வாழத் தொடங்கிய மனித இனத்திற்கு வாழ்தல் மீதான அவநம்பிக்கை தோன்றும் போதெல்லாம் அவர்கள் கடவுளையோ, தேவதைகளையோ வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. அதைப் போலே நேரே அணுகமுடியாத தேவதைகளுக்கு பதிலாக மதத் தலைவர்களோ அல்லது மந்திரவாதிகளோ, அற்புத சக்தி படைத்தவர்களோ மக்களுக்கு நம்பிக்கையூட்டுபவர்களாக இருந்தனர். அவர்கள் சக்தி மீது இருந்த பயமும், நம்பிக்கையும் அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வந்தது, அதற்கு பின் அந்த மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையில் மிக அத்தியாவசியமானவர்கள் ஆயினர்.

புராணக் காலங்களில் இந்த மனிதர்கள் கொஞ்சம் மெருகூட்டப்பட்டு, அவர்களுடைய வடிவங்களில் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து அதிசய மனிதர்களாக உருவெடுத்தனர், இது தான் சூப்பர் மேன்கள் உருவான உண்மையான காலம். இதற்கு முதன்மையான உதாரணம் என்று எளிதாக ஹனுமானைச் சுட்டிவிடலாம், கருடன், பீமன் எனத் தொடங்கும் வரிசையில் கிராமப் புறத் தெய்வங்களான அய்யனார்,முனீஸ்வரர் போன்றோரையும் பட்டியலுக்குள் சேர்க்கலாம். சீனத்தில் கூட புத்தனையும், போதி தர்மனையும் மாயங்கள் செய்யும் ஒரு மஹாபுருசராகவே வணங்குகின்றனர். இயேசுவின் போதனைகள் கூட அவர் செய்த அற்புதங்களைப் பற்றிக் கொண்டு தான் மக்களிடம் வருகின்றன நிற்க, இப்படிப் பட்ட வரிசையில் தான் கற்பனைக் கதாப்பாத்திரங்களாக காமிக்ஸ் புத்தகங்களிலும், திரைப் படங்களிலும் வரும், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், கேப்டன் ப்ளானட், எக்ஸ் மேன், இக்கட்டுரையின் நாயகன்.
*****************************************************************
பதினாறாம் நூற்றாண்டுக்கு பின் அதிவேக மாற்றங்களுக்கு காரணமாக தொழிற்புரட்சியும், கம்யுனிச சித்தாந்தங்களும், அதற்கு பின் ஐரோப்பிய நாடுகள் உருவாக்கிய காலனிகளும் வந்து முற்றிலுமாக மாறிய உலகம் கண்ட இரண்டு உலகப் போர்களின் வடுக்களும் மனித வரலாற்றை சிதைவு படுத்தின. மூன்றாம் உலகப் போர் ஒன்று வந்து விட்டால் மனித இனத்தின் வரலாறும் டைனோசருடன் சேர்ந்து பாறைகளின் படிமங்களாகிவிடும் என்கிற அபாயத்தை உணர்ந்ததால், ஒன்றை ஒன்றுத் தீண்ட முடியாத இரண்டு ராஜநாகங்களின் சீற்றங்களாக இருக்கின்றன, ஆன போதும் உலகையே ஒரு சந்தைக் கடையாக்கிவிட்டு ஒன்றை ஒன்று விழுங்கிடவும் உலகின் வல்லரசுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. கிருத்தவம், இசுலாமியம், கம்யுனிசம், காலனியாக்கல், உலகமயமாக்கல் போன்ற தத்துவங்கள் எல்லாமுமே இப்படி உலகம் முழுவதும் ஒரே அரசை நிறுவுவதை தமது இலட்சியமாக கொண்டுள்ளதை பிரதிபலிக்கின்றன.

இப்படி ஓரளவு உலகை கைப்பற்றும் சித்தாந்தங்களை எல்லாம் இன்று நடைமுறைப் படுத்துவதிலும், அவற்றின் சில நவீன கோட்பாடுகளின் வரையறுத்ததில் (உலகமயமாக்கல், அணு ஆயுதம்) மிக அதிகப் பங்கு உடைய, அமெரிக்கா தான் New World Order எனும் கோட்பாடின் தந்தை.

இதன்படி உலகின் ஒரே நாட்டாமையாக தன்னை நிலைப் படுத்த வேண்டும் என்பது இதன் எளிமையான விளக்கம், அமெரிக்க டாலரை உலகின் பொது செலவானியாக பல வர்த்தகத்தில் வைத்திருப்பது போல (உ.ம். கச்சா எண்ணை), வேளாண்மை, வின்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு(ரக்பி,சாஃப்ட் பால்,WWE,ஐஸ் ஹாக்கி), உடை நாகரிகம், சினிமா, வர்த்தகம் என எல்லாவற்றிலும் உலகின் செயல்பாடுகள் அமெரிக்காவில் இருந்து தான் துவங்க வேண்டும் என்பது அதன் விரிவான விளக்கம். இவற்றோடு சில நாடுகளுடனும், உள்நாட்டிலும் நடைபெற்று வரும்/வந்த போர்களுக்கும் அமெரிக்கா தான் மூலம். ஆனால் நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு இல்லாத ஒரு அமைப்பு, இப்போது உலகையே ஆளும் ஆசையை சுரக்க வைக்க என்ன காரணம் என்பது தான் ஆச்சரியம்.
***************************************************************************
கதை
இந்த படம் பேட் மேன் -3, மிக முக்கியமாக மற்ற வகை அதிசய மனிதர்களோடு சற்று வித்தியாசமானவன். ஆம் இவன் ஒரு சராசரி மனிதன் தான், அதே சமயம் உலகத்தைக் காப்பாற்றும் ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரசாங்க ஏஜன்சி உளவாளியும் கிடையாது. பேட் மேன் அமெரிக்காவின் ஒரு பிரபல தொழிலதிபர், அதே சமயம் மக்களுக்கு ஆபத்தாண்டவனாகவும் விளங்க தனக்கென ஒரு அறிவியல் கூடத்தை நிர்மானித்து, அதில் அதிநவீன கேட்ஜட்கள், மோட்டர்கள், ஆயுதங்கள், கணிணி போன்றவற்றை உற்பத்தி செய்து, தன்னையும் சூப்பர்மேனாக நிர்மானித்துக் கொண்ட ஒரு கோடீஸ்வர மனிதன். பொதுவாக இவர் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவது எல்லாம் கிடையாது. எப்போதும் மெல்லிய வயலின் கீச்சலுடன் சோக இழை அவர் கதையில் மையம் கொண்டிருக்கும் (அது பேட்மேனின் குடும்பத்து சோகப் பிண்ணனி).

தற்பொழுது வந்து வெற்றிகரமாக ஓடிமுடித்த தி டார்க் நைட் ரைஸஸ் சமகாலப் பிரச்சினைகளை நாம் அணுகிட எவ்வாறு உதவுகிறது. படம் ஆரம்பிக்கும் பொழுது எட்டு வருடப் பகைக்காக ”பேன்” எனும் ராட்சத உருவ நிழற்படை ஒன்று கற்பனை நகரான(திரைப்படத்திற்காக) கோதம் நகருக்கு வருகிறான். கோதம் நகரின் நிலை பொருளாதார மந்த நிலையில், குற்றங்கள் பெருகிவிட்ட நிலையில், அரசங்கமும் அதைக் கட்டுப் படுத்த இயலாமல் தவிக்க, மக்களும் அவநம்பிக்கையுடன் திடீரென்று மறைந்து போன தங்கள் ஹீரோ பேட்மேனின் வருகைக்கு காத்திருக்க. அந்த நகருக்குள் இருள் பரவுகிறது, ஓய்விலிருக்கும் பிரபல தொழிலதிபரான ப்ரூசின்(பேட்மேனின்) நிறுவனமோ மிகப்பெரிய வீழ்ச்சியில் இருக்கிறது, இருந்த போதும் மிராண்டவின் மேல் கொண்ட ஈர்ப்பில், அவளுடைய நிறுவனத்தில் உள்ள ஒரு மின்னாற்றல் திட்டத்தில் முதலீடு செய்ய முனைகிறார், அந்த திட்டத்திற்கு தேவைப்படும் ஒரு ஆற்றல் மிகு இயந்திரத்தை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் ப்ரூஸ் அது அணுஆயுதாமாகவும் உபயோக்கும் அபாயம் இருப்பதால் அதைச் செயல்படுத்தாமல் ஒரு நதிக்கு அடியே மறைத்து வைத்திருக்கிறார்.

நகருக்குள் புகுந்த சதிகாரக் கும்பல் முதலில் அங்கிருக்கும் பங்குச் சந்தைக்கு சென்று சில நிமிடங்களில் பெரிய அளவில் ப்ரூஸின் நிறுவனப் பங்குகளை விற்று அவரை அந்நிறுவனத்திலுருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவ்வாயுதத்தையும் கைப்பற்றுகிறான், அத்துடன் அந்த தீவு நகரத்தையும் நாட்டுடன் இருக்கும் எல்லா இணைப்புகளையும் துண்டித்து தன் படையின் உதவியால் கட்டுக்குள் கொண்டுகிறான்.ப்ரூஸ் எனும் பேட்மேனைப் பிடித்து மீள முடியாத மரணச் சிறைக்குள் தள்ளுகிறான்.

நகரத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும் “பேண்”  அந்நகரத்தைப் பழி வாங்கிட அதை அழிக்கும் முன் வேறு ஒரு காரியம் செய்கிறான், அது தான் அங்கு வாழ்ந்து வரும் மக்களின் நம்பிக்கையைக் குழைப்பது. இதுவரை அரசாங்கம் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்றும், மக்கள் அதிகம் நம்பிய அரசாங்க அதிகாரிகள் கயவர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறான்.
மேலும் “பொது மக்கள் யாவரும் சுரண்டப் படுகிறார்கள்” என்றும், சிலர் வசதியுடன் வாழ்ந்திடவே பெரும்பாலோர் கஷ்டப் படுகிறீர்கள் என்றும் கூறுகிறான். அந்நகரத்திலிருக்கும் சிறைக் கைதிகளையும் விடுவிக்கிறான், அந்தக் கைதிகளையும், ஏழைகளையும் சுரண்டியவர்கள் பணக்காரர்கள், அரசாங்க அதிகாரிகள் தான் என்று அடையாளம் காட்டி அவர்களை தண்டிக்க சொல்லிவிட்டு, ஊருக்குள் கலவரத்தை உண்டு பண்ணுகிறான். அதுதான்
மக்களுக்கான ஆட்சி என்று சமத்துவம் சொல்வதாக காட்சிகள் வருகிறது. அவன் அவ்வூரையே அழிக்கத் துணிந்தவன் என்றுத் தெரிந்தும் பெரும்பான்மையான மக்களும் அவனை நம்புகின்றனர், அமெரிக்கர்கள் தான் அதிகமாக தங்களை புதுப்பித்து வரும் மனித இனம் என்பதால் இந்த மாற்றம் சாத்தியம் ஆகிறது இத்திரைப்படத்தில்.
CHANGE”  எனும் வார்த்தையை அமெரிக்காவின் தாரக மந்திரமாகி ஒரு குடியரசுத் தலைவரை(2008) உருவாக்கியதும் பின்னர் அவரால் அப்படி எந்த ஒரு மாற்றம் இது நாள் வரை நம் கண்ணுக்குள் புலப்படாமல் அமெரிக்காவின் பொருளாதார நிலை தொங்கிக் கொண்டிருப்பதும், இப்பொழுது அவர் பதவிக் காலமே சிறிது நாளில் முடிந்து அடுத்த தேர்தலில் என்ன வார்த்தையை அமெரிக்கர்களுக்கு (CHANGE) மாற்றப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறது உலகம். படத்திலும் பெரிய புரட்சி ஒன்று நிகழ்ந்து வெற்றி பெற்ற வேளையில்(மக்களின் மனமாற்றம்), அதனை அழித்து  நீதியைக் காப்பாற்ற மீண்டும் பேட்மேன் அச்சிறையிலிருந்து தப்பித்து, மீண்டும் தர்மத்தை நிலைநாட்டிய வழக்கமான கதை தான் என்றாலும், இது மிக முக்கியமாய் கவனிக்கப் பட வேண்டிய திரைப்படம்.

இதனால் இந்தப் படம் முக்கியமாகிறது
  • கம்யுனிசம் போன்ற சித்தாந்தங்கள் எப்போதுமே அடித்தட்டு மக்களுக்கு மட்டும் ஒரு புரட்சியாகவும் அதுவே மேல் நிலையில் உள்ளவர்களுக்கு கட்டற்ற அதிகாரம் கொடுத்தும் விடுகிறது என்று காட்சியமைகப் பட்டுள்ளது.
  • மக்களைப் பொருத்தமட்டில் அரசங்கம் மீதான நம்பிக்கை என்பது எல்லா தேசங்களிலும் ஒன்று தான் அது காணாம்ல் போய்விட்டது, இதற்குத் தீர்வாக ஒன்று அவர்கள் புரட்சியை நம்ப வேண்டும் அல்லது பேட்மேன் போன்ற ஆபத்தாண்டவனை(அல்லது கடவுளரை) நம்ப வேண்டும்.
  • பேட்மேன் மட்டுமல்லாது அனேகமாக எல்லா அதிசய ஹீரோக்களும், உலகைக் காப்பாற்றுவதாக இருக்கும் பிண்ணனியில், உலகத்தை ஒரே ஒரு இயக்கத்தில் கட்டுப்படுத்த பல தேசங்களிலிருந்தும் விதை தூவப் படுகின்றன.
  • இந்த படத்தில் வருவதுபோல “ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கப் பங்குச் சந்தையில் கை வைப்பது (இரட்டை கோபுரத் தகர்ப்பான 09/11ல் இருந்து பேட்மேன் திரைப்படம் வரை) இது போன்ற தீவிரவாத கும்பல்களுக்கு மிக அவசியமானது” என்று விடுக்கும் ஒரு செய்தி நம்மைப் போன்ற நாடுகளுக்கும் பங்கு சந்தை போன்ற மாயவலையில் மொத்தமாக நம் சேமிப்பு தொலையாமல் இருக்க வேண்டும், அமெரிக்காவில் எழுபத்தைந்து சதவீத மக்கள் பங்குச் சந்தயில் முதலீடு செய்கின்றனர். ஆனால், ஜெர்மனி போன்ற நாடுகளில் ஏழு சதவீதத்திற்கும் குறைவே.
  • New world order குறித்த அறிவு நமக்கு இல்லையென்றாலும், இது போன்ற ஹாலிவுட் படங்களில் சில சமயம், நம் உலகம் எதிர் நோக்கும் ஆபத்துகளை எதிர் கொள்ள பெரும்பாலும் உலகின் பிரதிநிதியாய் வருவது அமெரிக்க அதிபரே. இது போன்ற திரைப் படங்கள் உங்களுக்கும் இது போன்ற செய்தியை கொண்டு சேர்த்திருக்கும் தானே.
  • அவதார் எனும் திரைப்படம் நம் புராணக் கதைகளில் இருந்து கதாப்பாத்திரங்களின் வடிவம், பெயர் போன்றவற்றை எடுத்துக் கொண்டதாய் தோன்றியிருக்கும், ஆனால் அதன் கதை கூட நம் தேசத்தின் கிழக்குப் பகுதிகளில் மலை, காடுகளில் இருக்கும் வளங்களைச் சுரண்டிப் பெரும் லாபம் ஈட்டிட பெரு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பெரிய அளவில் மலைவாழ் மக்கள், பழங்குடியினரை அப்புறப் படுத்தும் கதையோடு பொருந்திப் போகும்.
  • Change –மாற்றம் என்பது இரு பக்கம் கூர்மையான கத்தி போல மிக மிக ஆபத்தானது என்று உணர்வு தருகிறது.
  • எல்லாம் இருந்துவிட்டுப் போகட்டும், இது போன்ற அதிசய மனிதர்களைத் தொட்டுக் கொண்டு முக்கியமான விசயம் எதை வேண்டுமானாலும் கட்டுரை, கதை வழியே எளிதில் மக்களுக்கு கடத்தி விடலாம் தானே??

பேட்மேன் மூன்றாம் பாகத்துடன் இந்த சூப்பர் ஹீரோ வரிசை முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக அச்சத்துடனே வாழும் நம் இனத்திற்கு, கற்பனையிலாவது மக்களுக்கு இது போன்ற அசகாய சூரர்கள் என்றுமே தேவைதான், ஆக புதிய ஹீரோக்கள் இனி வலம் வருவர்.


ஜீவ.கரிகாலன்

நன்றி யாவரும்.காம்

செவ்வாய், 16 அக்டோபர், 2012

அம்மாவின் கைப்பேசி


அம்மாவின் கைப்பேசி , இந்த வார்த்தையை பார்க்கும் போதெல்லாம் மனம் பதறுகிறது.. ஏதோ ஒரு ஆழ்ந்த அவதானிப்பு, கால இடைவெளியை இல்லாது போகச் செய்த மாயையாய் இன்று எத்தனையோ முதியவர்கள் கையில் கைபேசி வைத்திருப்பதைக் காண்கிறோம். அவர்களின்(படிக்காத கிராமத்து) நிலையில் கைப்பேசியை எப்படி உபயோகிக்கின்றனர். ?

*இந்த நம்பரைப் போட்டுக் கொடுங்க
*இந்த போன்ல சார்சு ஏத்தி விடுங்க
*எனக்கு யாரு கூப்பிட்டிருக்காகன்னு பாத்து சொல்லுங்க
*(கடைக்காரரிடம்) ஒரு அம்பது ரூபா ஏத்தி கொடுங்க
*நான் பேசவேயில்லை எப்படி காசு தீர்ந்து போச்சுன்னு தெரியல

இப்படி எத்தனையோ பேர் சாதாரணமாக கேட்கும் உதவிக்கு பின்னர் கண்டிப்பாக ஒரு நல்ல கதையிருக்கும்.... இந்த படத்தை பார்ப்பதற்காக் நான் காத்திருக்கிறேன்.