விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 மே, 2015

தமிழக ஓவியங்கள் - ஒரு பார்வை

தமிழக ஓவியங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

நமது வரலாற்றை நாம் தெரிந்துவைத்துக் கொள்வதில் இருக்கும் ஆர்வத்தை விட மேலை நாடுகளில் இருக்கின்ற வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆர்வம் அதிகம். தென்னிந்தியக் கலை குறித்த ஆய்வு ஆவனங்கள் குறித்து வெளிவந்த ஆங்கில நூல்களோடு, இதுவரை வெளிவந்துள்ள தமிழ் நூல்களை ஒப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சும். இந்திய மண்ணில் ஓவியங்கள் குறித்த ஏராளமான நூல்கள் வந்துள்ளன. ஆனால் தமிழக மண்ணில் இதுவரை ஓவியங்கள், ART MOVEMENTS பற்றிய ஆய்வுகள், வரலாற்று ரீதியான நூல்கள் குறிப்பிடப்படும்படியாக எதுவுமில்லை. அண்மையில் வெளியான ”தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு” அந்த குறையை போக்கியிருக்கிறது. ஒரு ஆய்வறிக்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்நூல், வாசிப்பதற்கு கடினமாக இல்லாமல் ஒரு பரந்த வாசிப்பை உருவாக்கும் வகையில் எளிமையான சொற்களோடும், விளக்கப்படங்களோடும் வந்திருப்பது சிறப்பு.

இந்நூலில் வெறுமனே புராணங்களின் உதவியை மட்டும் நாடாது இலக்கியங்களில் இருந்தும் தகவல்களைத் திரட்டித் தரும் ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. ஏனெனில், இந்திய மண்ணில் வேறெந்த பிராந்தியங்களையும் விட இலக்கியச் செறிவு மிக்க தமிழக மண்ணில் கலைவரலாற்றைச் சிறந்த முறையில் ஆவனப்படுத்த முடியும் என்று இந்நூல் நிரூபித்திருக்கிறது. இதற்காக சங்க இலக்கியங்களில் இருந்து விஜயநகரக் காலக்கட்டத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ‘மதுரா விஜயம்’ வரை வெவ்வேறு காலத்தில் வெளிவந்த இலக்கியங்களில் இருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

காலவரிசைப்படி தமிழகத்தில் உருவாக்கப்பட்ட ஓவியங்களை தொகுத்திருக்கிறார் ஆசிரியர். ஆரம்பத்தில் பாறை ஓவியங்கள் பற்றிய கட்டுரையிலிருந்து ஆரம்பிக்கிறார். பாறை ஓவியங்கள், பழந்தமிழர் ஓவியங்கள், பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகரக் கால, நாயக்கர் கால, மராத்தியர், கிழக்கிந்திய காலம் என வரலாற்றின் பின்புலத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய கலைப்படைப்புகள் பற்றிய இவரது எளிமையான விவரணைகள், ஆய்வுகளின் மதிப்பீடுகள், மிக முக்கியமான வரலாற்றாசிரியர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான ஓவியங்களின் நிழற்படங்கள் மற்றும் விளக்கப்படங்கள், அழிவு நிலையில் இருக்கின்ற பல கலைப்படைப்புகள் பற்றியத் தகவல்கள் என மிக அரிய தகவல்களை அள்ளித் தரும் அனைவராலும் வாசிக்கப்படவேண்டிய நூல் என்பதில் சந்தேகமேதும் இல்லை.
நூலில் வெறுமனே தகவல்களாக மட்டும் சொல்லிச் செல்லாமல், பாறை ஓவியங்கள் பற்றிய கட்டுரையில் அவ்வோவியங்களை படைப்பாக அல்லது கலையாகக் கருதுவதன் அம்சங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.

இந்நூலை 1350-1650 வரை உருவாகியிருந்த ஓவியங்களை வைத்து உருவாக்கிய ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாய் வைத்து உருவாகிய நூல் என்று குறிப்பிட்டாலும், 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பெனி மற்றும் காலனிய காலத்து ஓவியங்களையும், ஓவியர்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றோடு ஆசிரியர் விளக்கியிருக்கும் இடங்கள் மிக முக்கியமானவை. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து - கம்பெனி காலத்து ஓவியங்கள் வரை காலவரிசைப் படி தொகுக்கப்பட்ட நூல் என்பதால் இதை ஓவியங்கள் பற்றிய அடிப்படை வாசிப்பிற்கும் சரி, ஆய்வுக்காகவும் (reference)வைத்துக் கொள்ளலாம். எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
நூல் : தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு (கட்டுரைகள் – மொழிபெயர்ப்பு)
ஆசிரியர் : ஐ. ஜோசப் தாமஸ்

விலை : ரூ:475


- ஜீவ கரிகாலன்

நன்றி - தினமலர்

சனி, 7 செப்டம்பர், 2013

ஆனந்த யாழின் அற்புத இசை

                                      தங்க மீன்கள் - பார்க்கத் தவற விடக் கூடாத படைப்பு


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தக்குடி” என்று தமிழராய் நம் பெருமையை சொல்லும் இனத்தவர் தானே நாம்? இதில் நமக்கு ஒரு கேள்வி -

அது எப்படி??? நம் பூமியில் கல்லும், மண்ணும் தோன்றும் முன்பே உலோகத்தை வைத்து செய்யப்படும் வாளோடு பிறந்த தொல்குடி என்று நம்மைச் சொல்லிக் கொள்ள முடியும்?? இந்த வரியானது புறப்பொருள் வெண்பாமாலையில் (அல்லது புறப்பாட்டு), போர் முடித்து வாகை சூடிச் செல்லும் இரு போர் வீரர்கள் கள்வெறியில்(போதையில்) உளறியதாம். அதனால் இதை வைத்து நம் பெருமை பேசியதை எல்லாம் அநியாயம் என்று உதறித் தள்ளிவிட முடியுமா?? தற்குறிப்பேற்ற அணியோ, ஏதோ ஒரு மிகைப்படுத்தல் வகையறா அணியோ என்று இலக்கணம் வகுத்து நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா??.. இவையாவுமே இலக்கியத்திற்கு மட்டும் தான் அனுமதியா?? அதையே ஒருவன் தன் சினிமாவில் சொன்னால்......??

”மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத் தான் தெரியும், முத்தம் என்பது காமத்தில் சேராது என்று!!” இந்த தொடக்கம் தானே பலருக்கு எரிச்சலூட்டியது?? அவர் கூறியது தவறாகவே இருக்கட்டும் !! எதற்காக இத்தனை கொந்தளிப்பு?? உணார்ச்சிவசம்?? ஆர்ப்பாட்டம்??.

இதை “I am the happiest man in the world” என்று சொல்லும் ஒரு தனி மனிதனின் சந்தோசமாகப் பார்ப்பதற்கு இடமிருக்கிறது இல்லையா?? இல்லை  Tranquilityல் இருக்கும் ஒரு நல்ல கலைஞனின்  அகந்தையாகப் பார்க்கலாமே!! இந்த வரிகளுக்கு இவ்வளவு ரியாக்‌ஷன் கொடுத்தலே போதும் என்று நினைக்கிறேன், அதை விடுத்து மொத்த படத்தையும் இந்த வரிகளைக் கொண்டு justify பண்ணுவது ரொம்பவே எரிச்சலூட்டுகிறது.


என் உலகம் மிகச் சிறியதாகவும் - அதில் என் குடும்பம் தவிர, சில உறவுகள் மட்டுமே இருக்குமெனில் என் தத்துவங்கள், சித்தாந்தங்கள் எல்லாம் உலகத்தோடு பொருந்தாது, அங்கே எனக்கென தர்ம நியாங்கள் வேறுபடும்.
அது போலத் தான காமம் என்பது ஒரு infinite matter, முத்தம் கூட தேவையில்லை காமத்திற்கு ஒரு கற்பனையான நிழலே போதுமானது, அதுவும் தனிமையில் வாழும் ஒரு மனிதனுக்கான காமமே வேறு தானே!!.

நான் கூடத் தான் இதுவரை சில முத்தங்களைப் பெற்றிருக்கிறேன் (சிறுவயதில்) அதில் யாவிலுமே நான் காமம் என்ற உணர்வைக் கண்டதில்லை, இன்னும் எனக்கு அடுத்த முத்தம் கிடைக்கும் வரை முத்தமெல்லாம் காமத்தில் சேராது என்று தான் நான் நம்புவேன்(அறிவு சொலவ்து வேறு). ஆனால் இந்த வெற்று தர்கங்களை வைத்துக் கொண்டு இந்த அற்புத, ஆமாம் இந்த அதி அற்புதப் படைப்பை பரிகசிப்பதோ, இல்லை குறைத்துப் பேசுவதோ மிகுந்த வருத்தத்தினை அளிக்கிறது.



வெறும் குழந்தைகளைப் பற்றிய படமாகத் தான் நினைத்துக் கொண்டு தியேட்டரில் நுழைந்தேன். அப்புறம் தான் தெரிந்தது அந்தப் படத்தில் நானும் இருக்கிறேன், அது போல என் குடும்பமும் அதில் இருக்கிறது என்று. ராம் தனது முதல் படத்தில் தமிழ் பட்டப்படிப்பைப் படித்தவனின் வாழ்க்கையை உலகமயமான கார்ப்பரேட் உலகில் சிக்கித் தவிப்பதை காட்டியிருந்தார். இந்தப் படத்திலும் அதன் நீட்சி இருக்கிறது, கல்வி பெரிய வணிகமாகிப் போனதும், நவீனமயமான உலகில் பல தொழில்கள் முடங்கிப் போவதும், இதில் Survivalக்காக fittஆக இல்லாத ஒருவனை இந்த சமூகம் எப்படி அலைய வைப்பதும், வெளிநாட்டிற்கு கடத்தப் படும் நமது தொல்பொருள்கள் என  நிறைய விஷயங்களை அவர் காட்சிப்படுத்தியிருந்தாலும், படம் ஒரு முழுமையான குடும்பப் படமாகவே இருக்கின்றது.. ஏனென்றால் இன்றைய சிக்கலானப் பொருளாதாரச் சூழலில் குடும்பம் எனும் அமைப்பு மிக முக்கியமான தீர்வாகவும் இருக்கும், அதுவும் nuclear familyயில் இருந்து திரும்பி கூட்டுக்கு செல்லும் அமைப்பில் இருக்கிறது. அதனால தான் இந்தப் படத்தில் ஒரு Negative பாத்திரம் கூட அமைக்கவில்லை. ராமின் மனைவி, தந்தை, தங்கை என எல்லோரும் கச்சிதம். Superb Casting

ஆனந்த யாழை மீட்டுகிறாய், மிக அற்புதமான பாடலிலேயே லயித்து விடுகிறது மனசு, பார்ப்பதற்கு அந்த குளம் செஞ்சிக் கோட்டை போல் இருக்கிறது. முதல் பாதியில் வரும் நாஞ்சில் தேசம் இதுவரை வேறு எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டோம், இரண்டாவது பாதியில் எர்ணாக்குளம் மற்றும் மலைத் தொடர் என கண்களை குளுமையாகவே வைத்திருக்கப் பணித்து விட்டார், போதாதைக்கு நான்கு - ஐந்து இடங்களில் நமக்கு கண்ணீர் வேறு உருண்டோடியது.

 “அப்படி கண்ணீர் விடுற அளவுக்கு இந்த படத்துல?” என்ன இருக்கு என்று கேட்டீர்களானால் :
1. நீங்கள் தொடர்ந்து பவர் ஸ்டார், சந்தானம், சிவா, விமல், சிவகார்த்திகேயன், சூரி என்று திரும்ப திரும்ப திருமப்வெளிவந்து கொண்டிருக்கும் படங்களை கைகொட்டிப் பார்ப்பவர்களாய் இருக்கவேண்டும்.
2. அல்லது, நீங்கள் ஒரு க்ரீமி லேயர் வாழ்க்கையை வாழ்ந்து, அனுபவித்து அல்லது ஏழ்மையை மறந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஏனென்றால், நான் ஒரு திருமணம் ஆகாதவன், ஏன் குழந்தை கூட இல்லாதவன்(இந்த இரண்டுக்கும் சம்பந்தமில்லை தானே!!) , நான் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறேன், ஏனென்றால் நான்இயக்குனர் ராமாகப் பல இடங்களில் என் தந்தையைப் பார்த்தேன், சில இடங்களில் என்னையும் பார்த்தேன், அது தான் என்னை நெகிழ வைத்திருக்கிறது போலும்.

“பணம் இல்லைன்னா சொல்லுங்களேண்டா!! எதுக்கு டா நாலு நாள் -அஞ்சு நாளுன்னு அலைய விடுறிங்க... இல்லைன்னு சொல்றது என்ன அவ்வளவு கௌரவ கொறைச்சலா??”

“பணம் இல்லாதவன எல்லாம் முட்டாள்னு நெனைச்சுடாதிங்கடா!!” பெற்றோரின் வைத்தியத்திற்கும், கடன் நெருக்கடியிலும், கல்லூரிக் கட்டணத்திற்கும் என்று எத்தனை கிலோ மீட்டர்கள்? எத்தனை கும்பிடுகள், கெஞ்சல்கள், அவமானங்களை சந்தித்திருப்பேன் நான்.  ஆக அந்த காட்சியில் இருப்பது நான் தானே!!

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது, (எனது பள்ளிப் பருவத்தில்) நான் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் (அப்படி என் பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில்), என் காதில் விழாதவாறு அல்லது அடுக்களையில் அல்லது மெதுவாக ஜாடையிலோ இன்றும் தனக்கு சம்பளம் வாராததை என் அப்பா என் அம்மாவுக்கு சொல்ல, என் பிறந்தநாளோ அலல்து தம்பியினோடதோ, பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டிய நாளோ இல்லை தீபாவளியோ வரும் காலண்டரின் தேதியில் என் அம்மாவின் ஏக்கப் பார்வை விழும். அந்த தவிப்பை எனக்கு கிருஸ்துமஸ் தாத்தாவைப் போல ராம் தன் மகளுக்குப் பேசும் காட்சியில் பார்க்கும் பொழுது வலி இரட்டிப்பானது.

பள்ளிக்கூடத்தில் ராம் பேசும் காட்சியிலும், க்ளைமேக்சில் ராம் பேசும் காட்சியிலும் வரும் வசனங்கள், இதே சமூகம் மீது நமக்கிருக்கும்(அட்லீஸ்ட் எனக்கிருக்கும்) அதே கோபத்தின் எதிரொலியாகக் கேட்கும் சாட்டையடி. பத்மப்ரியாவின் கணவரின் பாத்திரப்படைப்பிலிருந்து, நித்யஸ்ரீயின் பாத்திரம் வரை எல்லாமுமே மனதில் எளிதில் பகிர்ந்து கொள்கின்றன.


ராம் மற்றும் அவரது மனைவியின் பொருத்தம் படத்திற்கு கூடுதல் பலம், “நீ சொல்லி நான் வராமலா இருந்தேன்??” என்று ராமின் மனைவி அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதை நினைவு கொள்கையிலும், “நானும் செல்லம்மா மாதிரி தானே!!” “ஏன் காலையும் அமுக்கி விடு” என்று சொல்லும் காட்சிகள் அத்தனையும் கவிதைகள், ராம் இலக்கியத்தோடு மிக நெருக்கம் என்பதை டைட்டில் கார்டில் வேறு போட்டு விட்டார்கள் (வண்ணதாசன், பவா, மாரி செல்வராஜ், சாம்ராஜ்).

“ஏன் இந்த நாய அடிக்கிறிங்க??”
“அது மேலையாவது என் கோபத்தை காட்டுறேண்டி”

அதே போல டீவி விளம்பரங்களினால் ஒரு பாமரக் குடும்பத்தில் ஏற்படும் இன்னல்கள், நம்மை அறியாது நம் மூளைக்குள் சென்று பிராண்ட் நேம்களை விதைத்துச் செல்லும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதிருக்கும் கோபத்தையும் வெளிக்காட்டுகிறார். விளம்பரங்கள் குறித்து அவர் பேசும் வசனங்கள் எல்லாம் எனக்காகவும், என் சகநண்பர்களின் நலனுக்காகவும் பேசும் மற்றொரு நண்பனின் குரலாகவே இருந்தது. உண்மையில் இந்த விளம்பரம் தான் ஒரு சிறுமியினை தற்கொலை செய்யும் அளவிற்குக் கொண்டு செல்லும் பின்னணியில் இருக்கிறது என்பதை உணரலாம்.

”அவன் நல்லவங்க” - ராமின் தாய்
“அவன் ரொம்ப நல்லவன்டி, அதான் கொஞ்சம் கெட்டவனாகட்டும்” -ராமின் தந்தை மனமுடைந்து அழும் காட்சியில், “எங்க அண்ணன் வாங்கிக் கொடுத்தது என்று சாக்லேட்டை மகனிடமிருந்து சாக்லேட்டை பகிர்ந்து கொள்ளும் தங்கையின் வசனமும் - இயக்குனருக்கு இந்த மாறிவிட்ட நவீன இயந்திர வாழ்க்கைச் சூழலிலும் குடும்பம் எனும் அமைப்பு மீதும் உறவுகள் மீதும் இருக்கும் நம்பிக்கை தெரிகின்றது. இதையும் கெடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய போலியான கல்வி மோகத்தினை தான் அறுத்து எரிவதென தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்கிறார் ராம்.

ராமின் நடிப்பினையும், பாடி லாங்குவேஜும் சிலர் ஓவர் ஆக்டிங் என்று சொன்னார்கள். ஒரு முறை தான் ராமினை நேரில் பார்த்திருக்கிறேன் என்றாலும் இந்த வசன உச்சரிப்பிற்காகவும், உடல் மொழிக்காகவும் இந்த படத்தில் மெனக்கெட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவர் குடும்பத்தின் பின்புலமாக கொஞ்சம் high class என்று சொல்லிக் கொள்ளும் பிள்ளை மார்  சமூகத்தின் சாயல்கள் தெரியுமாறு திட்டமிட்டு செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகின்றது ( வேறு சமூகமாகக் காட்டியிருந்தால் நிச்சயமாக ரோஹினி ஒரு மீனை அறுக்கும் காட்சியாவது வைத்திருப்பார்கள்) , இதுவும் கூட இந்த களத்திற்காக தேவைப்படும் பாத்திரப்படைப்பு தான், ராமின் அப்பா வெளித் திண்ணையில் அமர்ந்தபடிப் பாடும் தேவாரப் பாடல் தான் இந்தக் குடும்பத்தின் சமூகம் பற்றிப் பேச வைக்கின்றது..


***************************************************************************
தங்க மீன் தேவதையின் தேர்வு Justify செய்யப்பட்டுள்ளது.
அவள் கேட்கும் அத்தனை கேள்விகளிலும் குழந்தைகளுக்கான SPACE நமது அவசர யுகத்தில் (அதுவும் படத்தில் வருவது கிராமம் தான்) எத்தனை தூரம் காணாமல் போயுள்ளது என்பதை உணர்த்தியிருக்கிறார்கள். இது குழந்தைகளுக்கான இலக்கியம், விளையாட்டு, பெற்றோர் மற்றும் பெரியவர்களின் அரவணைப்பு மிக முக்கியமாக நமது செயற்கையான தனியார் பள்ளிக் கல்வி மோகம் என  பட்டியலிடுகிறது.

படத்தின் தலைப்பாக வரும் தங்கமீனாக ஆகும் பொருட்டு குளத்தில் குதித்த குழந்தையைத் தேடி குதிக்கும் ராமின் பாய்ச்சலோடோ அல்லது குழந்தையைக் காப்பாற்றிய கணத்திலோ அந்த செல்லம்மாவின் பொம்மை குளத்தில் மிதப்பது போன்ற காட்சியிலேயே முடிந்து விடுகின்றது, ஆனால் வெகு சிறப்பாகக் காட்சிப் படுத்திய நிகழ்வுகளையே!! நாடக வடிவில் வெற்றி பெறும் மாணவியாகக் காட்டி நிம்மதியாக வீட்டுக்குப் போங்கள் என்று அறிவுரை சொல்லவும் முனைந்திருக்கிறார்.  அதையும் நாங்கள் நின்று கொண்டு கைதட்டிய படியே  தியேட்டரை விட்டு வெளியேறினோம்.

தாரே ஜமீன் பர் போன்ற ஜெர்க் இல்லை, முருக்கு இல்லை என்று கூவாமல், ஒரு நல்ல படத்திற்கு உங்கள் ஆதரவினைத் தாருங்கள்... இல்லையேல் உங்களுக்காக இந்த வாரம் வந்திருக்கிறது “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” உடனேயே ரிசர்வ் செய்யுங்கள்.

இயக்குநர் ராமின் கரங்களுக்கு என் முத்தங்கள்
         
         - என்ன லாஜிக் என்றே தெரியலையே இயக்குனரே!! இந்த படத்தின் மீது பலருக்கு இருக்கும் கோபம்???

- ஜீவ.கரிகாலன்

செவ்வாய், 30 ஜூலை, 2013

#டூரிங் டாக்கீஸ் -01 / நெஞ்சே எழு....காதல் அழியாது


சினிமா விமர்சனம் எழுத வேண்டும் என்று நான் இந்த பிளாக் ஆரம்பிக்கவில்லை, ஆனால் என்னை பாதித்த கலை படைப்பு என்று எதை நான் உணர்ந்தாலும், அதை நான் எழுதலாம் என்று தான் இப்பொழுது சினிமாவையும் சேர்த்துக் கொள்கிறேன். ஆகவே, லைவ் ஓபனிங் டே கமெண்ட்ஸ், இண்டெர்வெல் ரெவியூ, இன்ஸ்டண்ட் அப்டேட்ஸ், கலெக்‌ஷன் ரெக்கார்ட், ஓபனிங் ஹிஸ்டரி என்றெல்லாம் எழுதாமல் எந்தக் காலமாக, எந்த மொழியில் எடுக்கப் பட்டதாக இருந்தாலும் அதைப் பற்றி எழுதலாம் என்று தான் தீர்மானம். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் இன்று மரியான் படம் பார்த்து விட்டு வந்தேன், இங்கிருந்தே தொடங்குகிறேன்
*********************************************************************************
 மரியான் - எனது பார்வை, அனுபவம்



ஆள்-அரவமற்ற பாலை நிலத்தில் ஒன்பது நாட்கள் உயிர் வாழ்ந்திட முடியுமா? உயிர் எந்த கணமும் பிரியலாம் என்ற நிலையில் அவன் திசை தெரியா சுடுமணலில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியுமா??  அந்தப் பாலைவனத்தில் ஏன் ஒரு சாமியால் (ஜெகன்) முடியாததை, மரியானால் மட்டும் செய்ய முடிகிறது?? எப்படி அவன் மட்டும் பாலைவனத்தைக் கடக்கிறான்?  பாலைவனத்தில் அலைவதை விட “சாவது பெரும் வரம்” என்று மாய்த்துக் கொள்ளாமல் உயிரைச் சுமந்து செல்ல பலம் தரும் சக்தி எது

கண் முன்னே சிறுத்தை வந்து நிற்கவும், அவநம்பிக்கையின் உச்சம் தன் உடலை மூர்ச்சையாக்குகிறது. உயிர் துடிப்பில் ஒரே ஒரு மந்திரம் ஜெபிக்கப் பட்டு வருகிறது பனிமலர்”. பனிமலரும் ஜபிக்கிறாள் சர்ச்சிற்கு வெளியே (!!) மரியான்என்று. பாலை வனத்தில் பல ஆயிரம் மைல் தாண்டி, உயிர் பிரிந்து செல்ல எத்தனிக்கும் பாதையை, பனிமலரின் வியர்த்திருக்கும் தாவனியின் நிழல் அடைக்கின்றது. மரியான் விழிக்கின்றான், கண்முன்னே பனிமலர்.

 “நெஞ்சே எழு .... நெஞ்சே எழு.... நெஞ்சே எழு...
பனிமலருக்கு இடம் கொடுத்த ( ப.ம: உன் நெஞ்சு தான் காலி கிரவுண்டுன்னு சொன்ன, மரியான் :அதான் நீ பிளாட் போட்டுட்டியே) வரண்டு கொண்டிருக்கும் நெஞ்சம் எழுந்தால் மட்டும் போதுமே, உடலை இழுக்கும் சக்தி அந்த நெஞ்சத்தில் தானே இருக்கிறது?? மரியான் நடக்கிறான்... தத்தி தத்தி, சில சமயம் கைகளையும் ஊன்றி, கொதிக்கும் சுடுமணலில் அடுத்த அடியை அவன் எடுத்து வைத்துக் கொண்டே இருப்பது தான் அவனுக்குக் கிடைக்கும் ஒரே ஆறுதல், நடந்து கொண்டே இருக்கிறான், பனிமலர் அவனை நடத்துகிறாள்.

 “ஆயிரம் சூரியன் சுட்டாலும்,
கருணையின் வர்ணம் கலைந்தாலும்,
வான் வரை அதர்மம் ஆண்டாலும்,
மனிதன் அன்பை மறந்தாலும்.........

அவன் மறுபடியும் முயல்கிறான், நடக்கிறான், காதல் அவனை நடத்துகிறது, பனிமலர் அவனை நடத்துகிறாள். அவன் அடைந்துவிட்டான். 
 “உன் காதல் அழியாது..
நெஞ்சே எழு ..நெஞ்சே எழு .... நெஞ்சே எழு... “


* ரோஜா படத்தில் மதுபாலாவைப் போல,
* இல்லை இல்லை வினை பொருட்டு தலைவன் வேறு நிலம் செல்லும்  தலைவனை ஏங்கும் ஏதோ ஒரு அகத்திணை துறையைப் போல.
* அல்கெமிஸ்ட் நாவலில் கூட ஃபாத்திமா பாலை நிலத்தின் பெண்கள், தாங்கள் வாழும் நிச்சயமற்ற உலகில், தங்கள கணவனைப் பிரிந்து வாழும் துயரின் கொடுமைக்கு ஒப்பாக
* நம் கடற்புறத்து மீனவர்கள் வாழ்வில் அன்றாடம் இருக்கும் அச்சம் போல..

ஒரு பெண்ணின் அன்பை விட உலகில் வேறு என்னப் பெரிய விஷயம் இருக்கிறது அடைவதற்கு?? அதனால் தானே நாம் எல்லோரும் வீடு திரும்புகிறோம்?? . இந்தப் படம் வெளிவந்த அன்றே ஒரு மாதிரியான மிக்ஸட் ரெவியூவினைப் பார்த்தேன். நான் எந்த வகையறா ரசிகன் என்பதும் எனக்கே இதுவரை தெரியாது. இருந்தாலும் விமர்சனங்களை இந்தப் படம் முடிந்த பின் எப்படி பார்க்கிறேன் என்று சொல்ல வேண்டும்

# படம் பார்ப்பதற்கு வெகு ஸ்லோவாக இருக்கிறது, செகண்ட் ஹால்ஃப் ஆமை போல ஊர்கிறது என்று சிலர் விமர்சித்தார்கள். ஹரி படம் போல ஸ்கிரீனில் நாலு கட்டம் கட்டி காட்சிகளை வேகமாக நகர்த்திவிடுதலில் என்ன அனுபவம் இருக்கின்றது எனக்குப் புரியவில்லை? மரியான் மனதில் தங்கி நிற்கிறான், தனுஷ் எனும் தமிழின் முக்கிய கலைஞன் இங்கிருந்து இன்னும் பல உயரங்கள் செல்வார் என்று உள்ளிருக்கும் ரசிகாத்மா சொல்கிறது. பனிமலர் கண்களாலேயே, புருவங்களாலேயே மிகப் பிரகாசமாக மரியானைக் காதலிக்கிறாள், அவனுக்காக காத்திருக்கிறாள். அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி போன்ற கதாப் பாத்திரத்தை தேர்ந்தெடுத்தது கச்சிதம்.

#நான் அமர்ந்திருந்த வரிசையில் அநேகம் பேர் இந்த படத்தை ஒரே மொக்கை மொக்கை என்று விமர்சித்தார்கள், ஏன் அடிக்கடி மொக்கை “மொக்கைஎன்று பேசி வருகிறோம். தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஹாஸ்யமில்லா, இரட்டை அர்த்தக் காமெடி, நக்கல் பாணி(கலாய்த்தல்) காமெடிகளிலேயே நாம் மொன்னையாகி விட்டு நமது அளவீடுகளைத் தொலைத்து விட்டோமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. அதனால் பரவாயில்லை, தனுஷும் படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற படங்களில் நடிக்கவும் தானே செய்கிறார்

#பாடல்கள் அந்த அளவிற்கு இல்லை, பீ.ஜி.எம் மோசம் என்றெல்லாம் சொன்னார்கள். வழக்கம் போல இசைப்புயல் கேட்கக் கேட்கத் தான் தெரியும் என்று நண்பர் ஜெகன் சொல்வது போல், படத்தோடு ஒன்றிக் கேட்க முடிகின்றது, கடல் படத்திலிருந்து ஒரே பின்புலம் கொண்ட இந்த படத்தில் இருக்கும் பாடல்கள் எத்தனை தூரம் வேறுபட்டு இருக்கிறது. இந்தப் படத்திறகு ஓட்டு கேட்பது போலே இந்தக் கட்டுரை போய்க் கொண்டிருப்பது ஏனென்றால் , இதுவரை நான் பார்த்த அத்தனை நெகடிவ் விமர்சனங்கள். அதனால் தானே என்னவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி சென்றான், நிறைவாகத் திரும்புகிறேன்.

# கடற்புறத்தே எடுத்த படங்களில் மிக நேர்த்தியாக வெளிவந்த இயற்கை படத்தின் Back Drop ஒரு கற்பனைத் துறைமுகமாகவே எடுக்கப்பட்டிருக்கும், மற்றபடி நீர்பறவை, கடல் திரைப்படங்களில் காட்சிப் படுத்தப்பட்ட ஒரே நிலம் தான் இந்தப் படத்திலும் வருகிறது. திருச்செந்தூரை ஒட்டிய கடற்புறம், மனப்பாடு வரை நீள்கிறது. (கடற்புறம் யாவும் நாஞ்சில் தேசம் அன்று), ஜோ டீ குருஸ் வசனம் என்பதால் அந்த ஊர் பாஷை மற்ற இரு படங்களை விடத் தேவலாம் என்று சொல்ல முடியும்.. மீனவர்களின் பின்புலத்தை மிகச் சரியாகக் காட்டியிருக்கும் படம் முதல் பாதி முழுக்க மீன் எங்காவது சமைக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றது, எல்லா இடமும் சிலுவை மயமாகவும் இருக்கிறது. பனிமலரின் தந்தை சரியான தேர்வு, ஆனால் எந்த சர்சிலும் ஒரு ஃபாதர் கூட ஸ்கிரீனில் தெரியவில்லை, இது ஏதேச்சையா நடந்ததா? இல்லை திட்டமிட்டா என்று தெரியவில்லை.  மேலும், ஒரு பாடல் காட்சியில் (புயலில் படகில் சென்ற தனுஷை நினைத்தபடி பாடும் பாடல்) சோகத்தில் பனிமலர் கடற்கரையில் ஒரு சூரிய அஸ்தமனம் பார்ப்பது போல வருகிறது, வங்காள விரிகுடாவில் எப்படி சூரிய அஸ்தமன்ம் பார்க்க முடியும் என்று தெரியவில்லை ஒரு வேளை நான் தான் தவறாகப் பார்த்து விட்டேனா??

#கடல் திரைபடத்தில் திடீரென கடலை கேரளா போல் ஒரு பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டாக (ஆலப்புழாவைக் காண்பித்து) காட்சிப் படுத்தியிருப்பார்கள். சில காட்சிகளில் கதாநாயகன் கேரள வல்லத்தில் தான் வலம் வருவார், அழகியல் என்று பார்ப்பவர்களை முட்டாளாக்குவது மிகக் கொடுமையான் விஷயம். அதே போல இலங்கைக்காரன் சுட்டான் என்பதை, கதையின் மையக் கருவாக ஒரு மரணம் இருந்திருந்தும், இலங்கை எனும் பதத்தைக் கூட சொல்லாது விட்ட தமிழுணர்வு அது. நீர்ப்பறவை போல் இங்கே இல்லை.  “சிங்களவனுக சுட்டுட்டானுக என்றே சொல்லப்படுகிறது. ஜோவையும், இயக்குனரையும் இதற்காகவே பாராட்ட வேண்டும், நன்றி சொல்ல வேண்டும். ஜோ டி குருஸிடம் இருமுறை பேசியிருக்கிறேன், ஒரு முறை அவர் பேச்சினைக் கேட்டிருக்கிறேன் இந்தியக் கடல் அரசியலும், கடல் வாழ்வும் பற்றி அறிந்து வைத்துள்ள மிகச் சில மனிதர்களில் ஒருவர் அல்லவா இவர்!! அதனால் தான் கடலோடு ஒன்றிப் போதல் சாத்தியமாகிறது. 

தனுஷ் கடலைப் பார்க்கும் பொழுது “ஆத்தா” என்று சொல்கிறாரே, நவநாகரிக நவீனச் சிந்தனைகளில் ஒன்றான இகோ ஃபெமினிசம்(ECO Feminism) இது தான். கடலை இயற்கையாக பயந்து, வணங்கி, பெண் போல் உருவகம் செய்து அன்னையாக்கி, கடலாத்தா, கடலம்மா என்று சொல்லி பின்னர் அது கடல் மாதாவுமாகக் கூட மாறுகிறது. பெண்ணையும் இயறகையை போற்றுவது போலே மதிக்க வேண்டும் என்பது தான் இகோ ஃபெமினிசம். அந்த பெண் தான் போராடி வெல்லும் சக்தியை இறுதியில் மரியானுக்குத் தருகிறாள்.
*******************************************************************************

அப்புறமாக மரியான் படத்தில் அதிகமாக வைக்கப்பட்டுள்ள அரசியல் விமர்சனம், பன்னாட்டு நிறுவனங்கள் உண்டாக்கிய பஞ்சத்தால் உருவான தீவிரவாதிகளைக் கெட்டவர்களாக காண்பித்திருப்பது என்கிற தீவிரமான விமர்சனம்.
·         மரியான் என்பது தனியாள், வீடு திரும்ப நினைக்கும் ஒரு கூலித் தொழிலாளி. தன் குடும்பத்தினை வறுமையில் இருந்து மீட்பதற்காக தன்னேயே அடகு வைப்பவன். அந்தத் தனிமனிதனின் காதல் முன்னால் பன்னாட்டுக் கம்பெனியென்ன, புரட்சியாளர்களின் கொள்கை எது குறுக்கே வந்தால் அவனுக்கு என்ன?
·         இரண்டாவது அவன் ஒரு சிறிய போராட்டக் குழுவில் சிக்குவதால் தான் தப்பிக்க முடிகிறது, இதுவே ஒரு பன்னாட்டுக் கம்பெனியின் அதிகாரியாக ஒரு வில்லன் இருந்தால், ஒரு சாமான்யன் தப்பித்தல் சாத்தியம் ஆகுமா என்ன? இல்லை அதற்கு பஞ்ச் பேசும் சூப்பர் ஹீரோக்களை அமர்த்த வேண்டும்.
·         இந்தப் விஷயத்தில் மிகக் கவனமாக பன்னாட்டு நிறுவனத்தின் அட்டுழியங்களை ஒரு தீவிரவாதி பேசும் வசனங்கள் வழியாக பதிவு செய்யவும் தவறவில்லை இயக்குனர்.
·         பனிமலரின் பாத்திர அமைப்பு, பூ பார்வதியாகவே என்னைக் கவர்ந்துவிட்டவரின் மேல் இருந்த கவனம் பல மடங்கு அதிகமாகிவிட்டது. எத்தனை dignified ஆக ஒரு பெண் பாத்திரத்தை அமைக்க முடியும் என்பதை இந்த படத்தில் பதிவு செய்துள்ளனர். அவள் மரியான் வந்துவிடுவான் என்று சொல்கின்ற கணம் மிக அழகானது.
·         பனிமலர் “என்னால தான் நீ இவ்ளோ கஷ்டப்பட்ட?? அழுகிறாள்
மரியான் “ உன்னால இல்ல, உனக்காக


 காதல் அழியாது... நெஞ்சே எழு








#டூரிங் டாக்கீஸ்
அடுத்த ஷோவில் ஸ்பானியப் படம் பார்ப்போம்
ஜீவ.கரிகாலன்

திங்கள், 20 மே, 2013

தூப்புக்காரி - பார்வை

தூப்புக்காரி

- இளம் எழுத்தாளருக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல்

தத்துக் கொடுக்கப்பட்ட தன் குழந்தையை தத்தெடுத்தவர்களிடம் இருந்து திரும்ப வாங்கியதும், தத்தெடுத்தவர்கள் அவளுக்கு போட்டிருக்கும் புது ஆடையைப் பார்த்து “இது முள் மாதிரி உடம்புல குத்துமே, என் செல்லத்திற்கு இது வேணாம்” என்று சொல்லும் இடத்தில் பூவரசிக்கு இருக்கும் நம்பிக்கையில், அன்பில், திமிரில் அது வரை விரவியிருந்த லேசான வலி சட்டென கண்ணீர் துளிகளாய் அகன்று முற்று பெறுகிறது கதையோடு.

கண்டிப்பாக இந்த நூல் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்று நம்புகிறேன். மனித மலத்தை மனிதனே அள்ளுவது “ஒரு காலத்துல தான்” என்று சொல்லித் திரியும் மனிதர்கள் இந்த சமகால பதிவாக வந்துள்ள இந்த கதையினைப் படிக்க வேண்டும். வெறும் புனைவாக இல்லாமல் இந்த கதை கொணர்ந்திருக்கும் அவலங்களின் ஆவனம்  என்றென்றும் நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் கரும் புள்ளியாக இருக்கும். வெறும் பாரம்பரியமான, புனிதமான, ஆன்மீக பலம் பெற்ற, ஜனநாயக நாட்டின் உடலில் போர்த்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள சீழ்வடியும் கொப்புளமாய் ஒரு சாரரை இழி நிலைக்கு தள்ளப்பட்ட தேசம் இது என்று உலகம் வியந்தோம்பும்.

கதையில் பீ, குண்டி, தூம இரத்தம் என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. உங்களுக்கும் அந்த மலம் அள்ளும் இடத்தை விவரிக்கும் இடத்தில் முகச்சுளிவோ, ஓங்கரிப்போ(வாந்தியோ) ஏற்பட்டிருந்தால் குறித்துக் கொள்ளுங்கள், நீங்கள் வருந்துவதற்கு இவ்வுலகில் முக்கியமான சில தவறுகள் இருக்கின்றன. தினம் தினம் குளித்து உன் அழுக்கினைப் போக்கி ஊரினை நாறடிக்கும் பிரதிநிதியாக இருக்கும் நாம், அந்த துப்புரவு தொழிலாளர்களைக் காணும் போது மூக்கைப் பொத்திக் கொண்டோ, இல்லை விலகியோ கடந்து செல்வோமாயின் அதற்கும் நாம் தான் காரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கதைக் களமாக நாஞ்சில் தேசத்து கிராமம் இருக்கிறது. தூப்புக்காரியில் துப்புரவுத் தொழில் செய்யும் பாத்திரங்களின் வழியே சாதி, ஆணாதிக்கம், அதிகாரம், சமூக அவலங்கள் என பேச வைத்திருக்கிறார். மாரி பேசும் வாக்கியங்களில் மலர்வதியின் கோபமும், கேள்விகளும்,யதார்த்தமும், பகுத்தறிவும், தத்துவமும் கலந்து வருகிறது. அது இந்தக் கதைக்கு பொறுத்தமில்லாமல், அதே சமயம் அதை வைப்பதற்கான அவசியமும் இருக்கிறது. நாஞ்சில் தமிழென்பதால் ஒரு அகராதியும் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணின் காதலை எந்த சமரசமும் இன்றி யதார்த்தமாகப் படைத்திருக்கிறார், பூவரசி தோல்வியுறும் ஒவ்வொரு முறையும் வலி எளிதாக வாசகனுக்கு கடத்தி விடுகிறது. அதுவும் செருப்பில்லாமல் பூவரசி கழிவறைக்குள் மலம் அள்ள நுழையும் இடம் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது என்றால், மாரி மலம் அள்ளி குப்பை கூடையில் போட்டு அதைச் சுமந்து வ்ரும் பொழுது வடிந்து வரும் மலநீர் அவன் வாயிலும் நுழைகிறது என்று சாதாரணமாகச் சொல்லிப் போகும் இடத்தில் ஏற்படும் அதிர்வுகள் மிக மிக வீரியம். றோஸ்லினின் கடவுளோ, பூவரசியின், மாரியின் கடவுளர் யாவரும் இவர்களுக்கு உதவப் போவதுமில்லை.

இந்த நாவலிலும் ஒரு புளியமரம் வருகிறது, அதுவும் பீக்காட்டின் பகுதியாகக் காணப்படுகிறது. சின்னஞ்சிறு வயதில் கழிவறைகள் இல்லாத ஊரில் மலம் கழிக்கும் வேளைகளின் துயரங்கள் இருக்கின்றன, ஆனால் அப்பொழுது இப்படி ஒருவரின் மலத்தை ஒன்னொருவர் சுமக்க வேண்டியது இல்லை. ஒவ்வொருவர் இருக்கும் இடத்திலும் அடையாளக் கற்கள். நாகரிகத்தின், நகரங்களின் விளைவாக உருவாகும் கழிவறைகளுக்கென வேறு தொழில் செய்து வந்த சாதியினருக்கு கூடுதல் தகுதியாக இந்த வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது என்று தான் நம்புகிறேன். ஆனால் வேறு சாதியில் பிறந்தவளைக் கூட ஏழ்மை அந்த வேலையைச் செய்ய வைக்கின்றது என்பது முக்கியமான ஆவனம்.  “பொருள்(பணம்)”தான் மிகப் பிரதானமான மாற்றங்களை எல்லாம் வரலாற்றில் தீட்டுகிறது என்பதும் உண்மை.

கனகம் தன் மகளைத் தூப்புக்காரியாக்கும் இடத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை வாசிக்கும் பொழுது இதயம் அதன் எடையை பல விகிதங்களில் அதிகரித்துக் கொண்டிருந்தது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார் சமுதாய மக்களின் திருமண வரதட்சனை அளவு மிக அதிகமாக இருக்கும் வழக்கம் உள்ளது. ஆக, பூவரசியின் தாய் கனகம் நாடார் சமூகத்தைச் சேர்ந்திருந்தும் தூப்புக் காரியாக வேலைக்கு சேர்ந்தவள், தன் மகளை மாற்றி விடுகிறாள்: அது போல அந்த மாவட்டத்தில் உணவுப் பயிர்களை அழித்து ரப்பர் தோப்பு அமைக்கும் முறைகளை கடுமையாகச் சாடுகிறார். ஆணும், பெண்ணும் சேர்ந்த காதலில், பெண்ணின் தவறு மட்டும் ஏன் காட்டிக் கொடுக்கிறது போனற வாக்கியங்கள் இந்த புத்தகத்தின் பெண்ணியக் கருத்துகளுக்கு சான்று. இடையிடையே கவி நடையும் வருகிறது. பெண்ணின் காதலை கூடவௌம் இல்லாமல், குறையவும் இல்லாமல் யதார்த்தமாக பதிவு செய்தது போல் நான் வாசித்து உணர்ந்தேன். அதில் மிக முக்கியமான காட்சியாக தன் தாய் உடல்நலக் குறைவில் அல்லலுறும் பொழுது கவலை கொண்டாலும், பூவரசியின் காமப் போராட்டத்தை அந்த இடத்தில் பதிவு செய்திருப்பது கதையின் உச்சம்


//மலத்தை பார்த்தாலே முகம் சுளித்து ஓடும் மனிதர்கள் மத்தியில் மலக்கூட்டத்திற்கு மத்தியில் உணவு சாப்பிடும் ஆயிரக்கணக்கான விளிம்பு நிலை மனுஷிகளில் ஒருவராகத்தான் என் அம்மா இருந்தார்.
தன்னை அசுத்தப்படுத்திக்கொண்டு தன் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொண்ட அம்மாவைப் போன்ற பெண்களுக்கான சமர்ப்பணம்தான் இந்த நாவல்//  என்று இந்த நாவலுக்கான முகாந்திரத்தை தன் கதை மூலம் முன் வைக்கும் மலர்வதிக்கு என் பாராட்டுகள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வட இந்திய அளவில் இப்பொழுது நிறைய தலித் தொழிலதிபர்கள் (அஷோக் காடே போன்ற!!) மற்ற சாதியினருக்கும் வேலை போட்டுக் கொடுக்கும் நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், இப்பொது டெல்லி போன்ற பெருநகரங்களின் வணிக மால்களில் உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்ளும் பல பிரிவினரும் கூட வணிக விடுதிகளில், மருத்துவமனைகளில்  துப்புரவு வேலை செய்யத் தொடங்கியது எனும் செய்தியை எப்படி எதிர்கொள்கிறீர்கள் ?  ஏழ்மையில் வாழ்பவனுக்கு சாதி அடையாளம் என்ற ஒன்று தேவையில்லை. ஆனால் மனிதன் ஏதொ ஒரு பிரிவினையை ஏற்படுத்தி மக்களிடையே இடைவெளி ஏற்படுத்துகிறான், இதுவும் வியாபாரம் தான் இதிலும் ஒரு பக்கம் கொழுத்த லாபம் இருக்கிறது.  இந்த சமூகத்திற்கு பொருளாதார விடுதலை  மட்டுமே உண்மையான விடுதலை எங்கிருக்கிறது என்பதைத் தெளிவாய்க் காட்ட முடியும். 

அது போல மாரி  பூவரசியின் கரம் பிடித்தவுடன் எங்கே சொந்தமாகத் தொழில் தொடங்கி முன்னேறுவானோ என்று தான் என்னை எதிர்பார்க்க வைத்தது, முடிவினில் இருக்கும் வலி இந்த எதிர்பார்ப்பினால் பன்மடங்காய் பெருகியது.  அதனால் இப்படி தேற்றிக் கொண்டேன் பரவாயில்லை மாரியின் விருப்பப்படி அவர்கள் குழந்தை இந்த துப்புரவு தொழிலார்களின் நிலை மாற்ற புரட்சி செய்யட்டும்!!

- ஜீவ.கரிகாலன்



சனி, 16 பிப்ரவரி, 2013

ரூபம், விஸ்வரூபம், அரூபம்

(விஸ்வரூபம்-தணிக்கை-விமர்சனம்-அரசியல்-தடை-இசுலாம்)

முதலில் எல்லோரும் சொல்லிக் கொள்வது போல நானும் கமல் ரசிகர் தான், கமலிடம் தான் நான் கம்யூனிசம், அறிவியல், சிந்தனை என பல விசயங்களைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன் ஒரு வழியில் என்னை அதிகமாகப் பாதித்த மனிதர்களுல் ஒருவராக கமல்ஹாசனைச் சொல்வேன். கம்ல்ஹாசனின் வழியாகத் தான் காந்தி, கார்லமார்க்ஸ், சாப்ளின், பெரியார் பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டேன்.
விமர்சனம் செய்யும் முன்பே சொல்ல வேண்டியது இதைத்தான் கதக் நடனக் காட்சிக்காகவே இந்தப் படத்திற்கு செல்லலாம், பாடல், இசை, கமலின் பாவனைகள் என மயக்கிவிட்டது. அதற்கு நேர்மாறாய் முதல் சண்டைக் காட்சியின் பிரமிப்பு... பிரமிப்பு... என உச்சகட்ட க்ளைமேக்ஸ் காட்சிக்காக காத்திருந்து ஏமாந்தேன். வெறும் இடைவெளி போலெ படம் முடிந்துவிட்டது... இனி என் விமர்சனம்


ரூபம், விஸ்வரூபம், அரூபம்



ஒரு திரைப்படம் இத்தனை நாட்களாக சொல்லப் போனால் ஒரு மாதமாகவே தலைப்பு செய்திகளில் இடம்பெற்று, போராட்டங்கள், தடை, தீர்ப்பு, மறு-தீர்ப்பு, அரசியலாக்கப்பட்டு வெகுஜனமக்களாலே வாய்மொழியால் விமர்சிக்கப்பட்டு, பேசப்பட்டே விளம்பரமாகி வெற்றி அடைந்துள்ளது. இந்த படம் குறித்த பார்வையும், அதன் அரசியலும், கலையில் இன்றைய தேவை குறித்தும் கீழே விவாதிப்போம். இதில் கேபிள், டிடிஎச் பிரச்சினை விவாதிக்கப் படபோவதில்லை

விஸ்வரூபம்:
உலக நாயகன் என்ற பட்டமும், ஆஸ்கார் நாயகன் என்கிற கனவுப் பட்டமும் ஒரு நல்ல கலைஞனை உச்சகட்ட அபாயகரமான முயற்சியை செய்ய வைத்திருக்கிறது என்பது மிகையல்ல. ஒரு எளிய பார்வையாளனாக இந்தப் படம் பார்க்க செல்லும் ஒரு பாமரன் எந்த அளவு நல்லபடியாக வெளியே வருவான் என்று தெரியவில்லை. அவ்வளவு கடினமான திரைக்கதையில், அறிவியல் பின்புலமுள்ள (அணுக்கதிர்வீச்சு) கதையில், பரிச்சயமே இல்லாத தலிபான்களின் ஆப்கன் பகுதி, மெதுவாக நகர்ந்து செல்லும் கதையமைப்பிலும், பாதி வசனங்கள் ஆங்கிலமும், அரேபிய வசனங்களும் என திரை அரங்கில் பார்க்கும் பலருக்கும் இந்தப் படம் சலீப்பூட்டுபவையாக இருந்தாலும். ஊடகங்களும், இசுலாமிய அமைப்புகளும் ஏற்படுத்திக் கொடுத்த விளம்பரத்தில் வண்டி கட்டி திருவிழாவிற்கு செல்வது போல, தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இப்படத்தைக் காண மக்கள் சென்று வந்தது என இந்தக் கட்டுரை வரை விஸ்வரூபம் படம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. இருந்தபோதும் கமலஹாசன் ரசிகர்களுக்கும், வித்தியாசமான, கலையம்சம் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் சிறந்த படங்கள் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு நிறைவான படமாகவும் இருக்கின்றது. ஆனால் அந்தப் படம்தி ஆப்கன்எனும் நாவலைத் தழுவி எடுக்கப் பட்டிருக்கிறது என்றும் விமர்சனம் வருகிறது.

தேவையற்ற செயலாக தன்னை ஒரு செக்யூலர் என்றும், பகுத்தறிவுவாதி (நம் ஊர் பகுத்தறிவுவாதிகளுக்கு தான் நாத்தீகம் என்பது இந்து மத எதிர்ப்பும், மற்ற மதச் சடங்குகளை விமர்சிக்கும் தைரியம் அற்றவர்கள் தானே!!) என்றும் தன்னை நிறுவிக் கொண்ட கமல், போதிய அளவு விளம்பரங்களை டிடிஎச் பிரச்சினையிலேயே சந்தித்திருந்தபோதும். தணிக்கை செய்யப்பட்டு அனுமதி கிடைத்த படத்திற்கு தம் இசுலாமிய சகோதர அமைப்புகளை அழைத்துச் சென்று படத்தை திரையிட்டு காண்பித்து விஸ்வரூபத்தை கிணறு வெட்ட கிளம்பிய விஸ்வபூதமாக்கிவிட்டார். உடனேயே சில அரசியல் லாபங்களுக்காக காய்கள் நகர்த்தப்பட்டு இது தடை, 144 உத்தரவு, போஸ்டர் கிளிப்பு, திரையரங்கு முதலாளிகள் மிரட்டப் படுதல், கல்வீச்சு, ரசிகர்கள் போராட்டம், முகநூல் புரட்சி, ஊடகங்களில் டீ.ஆர்.பி என பலருக்கும் வேலை வைத்துவிட்டது. கடைசியில் தன் மொத்த சொத்தையே விலை கொடுக்க வேண்டி வருகிறது என்று சொல்வதோடு நில்லாமல் இந்த நாட்டை விட்டே செல்ல வேண்டி வரும் என்று உச்சக்கட்டத்திற்கு குமுற இந்தப் பிரச்சினை தேசியப் பிரச்சினை ஆகியது.

காவேரியில் இருந்து தண்ணீர் கேட்டு வரண்டு கொண்டிருக்கும் மருத நிலங்களைப் பற்றி புறந்தள்ளிவிட்டு மத்திய அமைச்சர்கள் ஒரு மாநில அரசின் அராஜக போக்கை கண்டித்துக் கொண்டிருந்தனர். தன் சக பகுத்தறிவுவாதி கமலஹாசனுக்கு நேரிடையான ஆதரவை தெரிவித்து தமது இசுலாமிய சகோதரத்துவத்தையும், ஓட்டு வங்கியையும் இழக்க விரும்பாதவராக கருணாநிதியோ தமிழக முதல்வர், கமலஹாசன் மீது கொண்ட தனிப் பகைமையாலும், ஜெயா டீவிக்கு படத்தின் ஒளிபரப்பு உரிமையை தராததாலும் தான் படத்திற்கு தடை விதித்தார் என்று அறைகூவல் விடுத்தார். தமிழகத்தில் பற்றி எரிந்த பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி துளியும் கவலை கொள்ளாத டெல்லி  ஊடகங்கள் (கூடங்குளம், முல்லைப் பெரியாறு, காவேரி பிரச்சினைகள், இராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சினை குறித்து) தமிழகம் பற்றி பேசிக்கொண்டேயிருந்தது. ஒரு பக்கம் தமிழக அரசும் உயர்நீதி மன்றம் தடையை நீக்கிய மறுநாளே மேல்முறையீடு செய்து தடை செய்து தடை உத்தரவு வாங்கியது. எல்லாவற்றிற்கும் மேலாக பொதுவாக ஊடகங்களுக்குத் தலைகாட்டாத தமிழக முதல்வரும், ஒரு நீண்ட விளக்கத்தை ஊடகங்களுக்கு தந்து, தனக்கும் ஜெயா டீவிக்கும் சம்பந்தமே இல்லையென்று உறுதி கூறினார்.

உண்மையில் இவை யாவிலும் பாதித்தவர்கள் நடுத்தர குடும்பத்தினர் மட்டுமே, அவர்களுக்கு இது வெறும் குழப்பமாக மட்டுமே மிஞ்சியிருக்கிறது. தங்கள் குடும்ப அட்டையை புதுப்பிக்கும் பணியையும், இறுதித் தேர்வுக்கு குழந்தைகளை தயார் செய்யும் பணியையும் மறந்துவிட்டு இன்னும் விஸ்வரூபம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்பது மிகையல்ல.

ரூபம்:
இந்தப் படம் சர்வேதச அரசியலை மையமாக வைத்து சற்றே குழப்பம் தரும் திரைக்கதையுடன் அமைந்திருக்கிறது தலிபான்களின் தீவிரவாதம், கல்வி மற்றும் அமைதியை விரும்பும் ஆப்கன் மக்கள், ரெட்கிராஸ் அமைப்புகள், சில வியாபாரிகளின்(பாகிஸ்தான் இசுலாமியர்) வியாபார ஒத்துழைப்பு (கள்ளக் கடத்தல், ஆயுத பேரம், போதைப் பொருள்) அவர்களையும், பொதுமக்களையும் கணக்கு பார்க்காமல் சுட்டுத் தள்ளும் நேட்டோ(NATO) படைகள், தீவிரவாதிகளுக்கு உதவும் அமெரிக்க வாழ் இந்தியர், FBIக்கு உதவும் இந்திய ஆபிஸர், அணு ஆயுதம், கதிர்வீச்சு என்ற பல விசயங்களைக் கலையம்சத்துடன், பல நவீன தொழிற்நுட்பத்துடன் பேசியிருக்கும் இந்தியச் சந்தையின் முக்கியப் படம் என்பது உண்மை.

ஆனால் இந்தப் பிரச்சினையின் தீவரம் நம் சமூகத்திற்கு இத்தனை தாக்குதல்களைக் கொணர்ந்திருக்கிறது
1.       ஒரு தனிமனித் தாக்குதல்
2.       கலை மீதான விமர்சனம்
3.       இறையான்மை மற்றும் சமூக பாதுகாப்பு
4.       அரசியல் சூழல்

கமல்ஹாசன் தனிமனிதனாக எத்தனையோ தாக்குதல்களையும், மிரட்டல்களையும் சந்தித்தாலும் இறுதியில் அவர் தன் படத்தை வெற்றியடையச் செய்து விட்டார். எந்த பெரிய பிரமோஷன்களும் இல்லாமல் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் மிகப் பெரிய வெற்றியை குவித்திருக்கிறது விஸ்வரூபம். ஆனால் இவர் கூறியிருந்த  “கலாச்சார தீவிரவாதம்குறித்த கருத்துகள். இனி ஒவ்வொரு சர்ச்சைக்குறிய படத்தின் மீதும் கேள்விகளை எழுப்பும் என்பது ஆனால் மறுக்கமுடியாத்து.

சமூகப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை தகர்க்க குறிவைக்கும் படங்களை அரசு தடை செய்வது சரிதானா? என்கிற விவாதம் பெரிய கேள்விக்குரியது:
இசுலாமியர்களை பயங்கரவாதிகளாகக் காட்டும் காட்சியமைப்பு நமக்கு சமூக அச்சுறுத்தலை தருகிறது என்றால், பெரும்பானமையான படங்களில் கதாநாயகர்கள் குடிப்பதும், பெண்கள் மீதான வக்கிரங்களைத் தூண்டும் காட்சிகளும் எந்த சமூகப் பாதுகாப்பைத் தருகின்றன. இதே கமல்ஹாசன் தன் படங்களில் பலமுறை விமர்சித்த, கேலி செய்த இந்து கடவுள்களுக்காகவும், மத நம்பிக்கையாளர்களுக்காகவும் மன்னிப்பு கேட்பாரா? படத்தின் காட்சிகளை எடிட் செய்வாரா? இல்லை நாத்திகம் பேசினாலும்  “ஹோலி குரான்என்று சொல்ல அனுமதிக்கும் இவர் செக்யூலர் கொள்கை “ஹோலி கீதாஎன்ற சொல்ல அனுமதிக்குமா?. இத்தனை அரைவேக்காட்டுத் தனத்திலும் இந்து மதத்தை நிந்திக்கும் போது இருந்த சகிப்புத் தன்மை சரிதானா? இசுலாமியர்கள் பெரும்பகுதி வாழும் கேரளாவில் கூட இசுலாமியர்கள் எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதும் இங்கே கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படும்.

இனிமேல் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு கமல்ஹாசன் தான் விதை விதைத்துள்ளார் என்பது அவர் வாயிலே வந்த உண்மை. இனி கலைகளுக்கான விதிமுறைகள் வலுப்பெறுமா?? தளர்த்தப் படுமா?? என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக பெரிய பெரிய விவாதங்கள் நடைபெறும் என்பது ஒருவகையில் நல்லதும் கூட. எம்.எஃப்.ஹுசைன் மீது எழுந்த விமர்சனங்கள், எதிர்ப்புகள் தவறு என்றால், சல்மான் ருஷ்டியை தடை செய்வதும் தவறு தான். இது போன்ற கலை விசயத்திலும் இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு தருவது முற்றிலும் கேலிக்குரியது. இங்கு பொதுவான வரையறை உடைய தணிக்கை முறை ஒன்று தேவைப் படுகிறது. என்னதான் பொய்யுரைகளும், கவர்ச்சியும் ஈர்க்கப்பட்டாலும் அவை காலத்தால் நீர்த்துப் போய்விடும்.

அரூபம்:


அரூபம்:
இப்படத்தை எதிர்க்க குரான் ஓதும் ஒருவர் கொலை செய்ய மாட்டார் என்பதும், தமிழ் பேசும் தீவிரவாதி என்று யாரும் இல்லை என்று வந்த எதிர்ப்புகளையும் பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கிறது. தலிபான்கள் இசுலாமியர்கள் இல்லையா? தலிபான்கள் செய்தவை மனிதத் தொண்டா? அதே சமயம் தலிபான்கள் கொன்று வந்த அப்பாவி மக்கள் கூட இசுலாமியர்கள் தானே!!?? மிக புத்திசாலித்தனமாக தலிபான்களுக்கு வலை விரிக்கும் ரா உளவுத்துறை அதிகாரியையும் இசுலாமியராக கமல்ஹாசன் ஈடுகட்டியிருக்கும் விதம் இங்கு எடுபடாமல் போய்விட்டது ஆச்சரியமாக இருக்கிறதா?? இங்கு தான் இந்தப் படம் மிக முக்கிய இடத்தை தொடுகிறது அது தான் தேசியம்எனும் கொள்கை

 “தேசம் என்பது இன்றைய சூழலில், அதுவும் உலகமயமாக்கப் பட்ட பின்பு தான் தன் எல்லைகளை இழந்துவிட்டதாக எண்ணிவிட வேண்டாம். சுதந்திரம் வாங்கும் முன்பே இருந்த பிரிவினைவாதம் இன்னும் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது. பள்ளிக்கூடங்களின் பாடச்சுமைகளில் பாடங்களாக இருந்த சமுக ஒழுக்கமும், தேசப்பற்றும் சுமையென் கீழிறக்கி வைக்கப் பட்டுள்ளது. கமல்ஹாசனின் தேசத்தை நேசிக்கும் இசுலாமியர்கள்/இந்தியர்கள் இப்படத்தை ஆதரவு தருவார்கள் என்று அறைகூவல் விடுத்தது தான் மிக அதிகமாக விமர்சனம் செய்யப் பட்டது. ஒரு காஷ்மீரிய முஸ்லீம் ரா அதிகாரியாக காண்பித்தை கிண்டல் செய்தனர், விமர்சனம் செய்தனர். சகலாகலா வல்லவனின் சக சகாக்களே(திராவிட இயக்கத்தினரே) முதலில் இவரை புறந்தள்ளினர், தேசத்தை விட தம் மதம் தான் பெரிதது என்கிற வாதம் சில இடங்களில் முன்வைக்கப்பட்டன. உண்மையில் தேசிய ஒருமைப்பாடு பற்றிய பெரிய கேள்விக் குறி ஒன்று எதிர்காலத்தில் இருந்து நம் கண்முன்னே விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

அதே சமயம், தாலிபான்களின் பிரச்சினை சமகாலத்தில் விவாதிக்கப் படவேண்டிய அம்சமே இல்லை. கமலஹாசன் தனது ஹாலிவுட், மற்றும் ஆஸ்கர் கனவுகளுக்கு வைக்கும் துருப்புச் சீட்டாக தலிபான் திரைக்கதையை அமைத்துள்ளார், ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் போல அமெரிக்க கொடி பறக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் நிறையக் காணலாம், அதுபோல கலாச்சாரத் தீவிரவாதம் எனும் பதம் விவாதிக்கப் பட்டது

உண்மையில் கலாச்சாரத் தீவிரவாதம்:
நிஜத்தில் உலகைச் சிவப்புக் குடைக்குள் ஆள முயற்சித்த ரஷ்யாவைப் பின் தொடர்ந்த அமெரிக்காவும் சரிந்து விழுந்துவிட்டது. கம்யுனிச-முதலாளித்துவம், உலகமயமாக்கல் என்ற இரண்டு கட்டங்களைக் கடந்து அடுத்த பரிமாணத்தில் இருக்கிறது சுதந்திர சந்தையில் இந்தியா, சீனா தேசங்களைத் தவிர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அச்சத்தில் தான் இருக்கின்றன. அமெரிக்கா காலூன்றி நிற்பதற்கு இந்த சீனாவும், இந்தியாவின் சந்தை தேவைப்படுகின்றது.

இந்தியாவின் சந்தையை முழுதும் எடுத்துக் கொள்ளத் தான் குடும்ப அமைப்பை குலைத்து, தனிமனித சுகபோகத்தின் மீது மாயையை உண்டு பண்ணி, அவன் சேமிப்பைப் பிடுங்கி, நுகர்வுப் பண்பை மாற்றியமைத்து, நடுத்தர மக்களின் மூளை நியூரான்களில் ஆடம்பர, அழகுப் பொருட்களின் பட்டியலும், பிராண்ட் மாயை உண்டு பண்ணி இதன் பொருட்டு மக்களைப் பணத்தைத் தேடியலையும் இயந்திரமாக்கி வைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவைப் போல ஒவ்வொரு தனிமனிதனையையும் தனி அடையாளமாக வைத்திருக்கும் அரசைப் போலே, நமது நலத்திட்டங்களும் இலவசங்களுக்கு இடப்பெயர்வதும் அமெரிக்கக் கனவு என்பதில் ஐயமில்லை. இனி ரொக்கமாகப் பெறும் மானியங்கள் வால்மார்டில் ஸ்வைப் செய்யப்படும் அவலம் 2020க்கும் முன்னரே நடக்கலாம். ஏன் விஸ்வரூபம் விமர்சனத்தில் வால்மார்ட் பற்றி பேசப்படுகிறது என்ற கேள்வி எழுகிறதா??
இங்கே நூறு கோடிகள் கொடுத்து படம் உருவாக்கும் தேவை நம் சமூகத்திற்கு என்ன அவசியம் இருக்கிறது? கலையுணர்வு மிக்க நல்ல தரமான ஈரானிய, கொரியத் திரைப்படங்கள் சில லட்சங்களிலேயே எடுக்கப் பட, ஹாலிவுட் தரம் என்பது மோகம் தானே!! இப்படித் தான் அமெரிக்காவை விரும்பி நகல் செய்யும் திரைப்பட கலையுருவாக்கங்களைப் போலவே, நமது கலாச்சாரங்கள் (நுகர்வே இப்பொழுது பிரதானக் கலாச்சாரம்) பொலிவிழந்து திசை மாறிச் செல்ல ஆரம்பிக்கும். இந்த நுகர்வு கலாச்சாரம் தான் கலாச்சாரத் தீவிரவாதம் என்று மிகச் சரியாகப் பொருத்தி விடலாம்.

இதற்கு(கலைப் படைப்பு) தடைக்கல்லாக அரசு மற்றும் சட்டம் இருப்பதும், மதம் இருப்பதும் அவசியமற்றது, நல்ல விவாதங்களிலும், விழிப்புணர்வு மூலமாக நாம் தவிர்க்கக் கூடியவை இவை. இந்தப் படத்தின் நுட்பங்களில் ஒழிந்துக் கொண்டிருக்கும் அரூபப் படிமங்கள் விபரீதமானவை, உலகத்தரம் என்று அமெரிக்காவைக் குறிவைக்கும் கலை தாகம் விபரிதமானது தான் அதனால் இனி கலாச்சாரம் குறித்த கவனம் தேவைப் படும். இந்த சுதந்திரச் சந்தையில், எகிப்து போன்ற தேசங்களில் முதலாளித்துவத்திற்கு எதிராக மக்களை ஒன்று சேர்த்து புரட்சி செய்வது இசுலாம் தான். இங்கே கலாச்சார தீவிரவாதம் காலத்தின் அவசியமாகிறது. நமது பொருளாதாரக் மறுகட்டமைப்பிற்கும் இது தேவைப் படுகிறது

வெறும் விஷ்வரூபம் மட்டுமல்ல வால்மார்ட்டும் மக்களாலேயே தவிர்க்கக் கூடியது தான் இதற்கென்று அரசும் சட்டங்களும் தேவையேயில்லை!!!







புதன், 6 பிப்ரவரி, 2013

டேவிட் - விமர்சனம்



டேவிட் - ஒரு பெயர் இரண்டு வாழ்க்கை.

இரண்டு நிறைவான வெவ்வேறு கதைகளை non-linear திரைக்கதைக்குள்ளே படமாக்கிட தேவைப் படும் ஒரு அம்சமாக  “டேவிட்” எனும் ஒற்றைப் பெயரைக் கொண்டு இணைகிறது.

அவ்வளவு தானா!! வெறும் பெயர் என்ற  ஒற்றைப் புள்ளியில் எப்படி இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் உள்ள கதைகள் இணைகிறது? என்பது முக்கியமல்ல.

 டேவிட் - என்ற பெயர் மூலம் ஒரு கிருத்தவ மனநிலையில், மதத்தின் பால் ஏற்றுக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையை காட்சிப் படுத்துகிறார் இயக்குனர். ஒரு பக்கம் பாதிரியாரின் மகனாக ஜீவாவின் வெளிநாட்டு மோகம், கிருத்துவ போதனைகளின் மீதுள்ள வெறுப்பு, இசையில் தான் அடைய வேண்டிய இலக்கு என்று ஒரு டேவிடின் கதை நகர, தன் திருமணம் நின்று போன நிலையில், முழுநேரக் குடிகாரனாக எதைப் பற்றியும் கவலை கொள்ளாத கேரக்டர் விக்ரமிற்கு, எப்போதும் குடிகாரனாகத் திரியும் அவர் இறந்து போன தன் தந்தையுடன் கற்பனையாக உரையாடுவதைப் போலே தன் நண்பனின் வருங்கால மனைவி தன்னை காதலிப்பதாக கற்பனை செய்து கொள்கிறான்.

விக்ரம், ஜீவா என்ற நிரூபித்துவிட்ட கலைஞர்களின் நடிப்பிற்கு மார்க் போடுவது என் வேலை இல்லை. ஆனால் ஒரு குடிகரனாக ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு ஸ்டைலில் அங்கங்கே மறைத்து வைத்திருக்கும் மதுவைக் குடிப்பதுமாகவே இருந்திருந்தாலும் விகரமின் casual performance சலிப்பு ஏற்படுத்தவில்லை.   அதிலும், போதையிலேயே ஸ்கூட்டர் ஓட்டும் காட்சி மிகவும் ரசிக்க வைக்கிறது. நாசர், விக்ரமின் அப்பாவாக வரும் சௌரப் சுக்லா, தபு, லாரா தத்தா என்று பெரிய castingஐ வைத்துக் கொண்டு பிசிறில்லாமல் கதை சொல்லியதே பாராட்டக்குரியது. ஆனால் தியேட்டரில் அனேகமாக அந்தப் படத்தை ரசித்த சிலரில் ஒருவனாக மட்டுமே என்னை நான் உணர்ந்தேன். நிறைய பேருக்கு கதை நகரும் வேகம் குறைவாக இருப்பதாக அலுப்பை “உச்” கொட்டினர். ஆனால் இரண்டு தனித் தனிக் கதைகளாக எடுத்துக் கொண்டால் இயக்குனர் கதையைத் தாண்டி ஒரு அங்குலம் கூட சொல்லவில்லை என்று உணரலாம்(ஹிந்தியில் மூன்று கதைகள்).

ஒரு கதை ஜாலியாக பயணிக்கிறது கிறுக்கு சாண்டா போன்ற காமிக் சிரிப்புகள் பிடிக்கவில்லையென்றால் படத்தில் கிடைக்கும் ஹாப்பி எண்டிங் கிட்டாமல் ஜீவாவின் வலியோடு வீட்டிற்கு சென்றிருப்போம். இயக்குனர் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டார் என்றெல்லாம் சொல்லத் தேவையில்லை, எங்கும் மிகைப் படுத்துதல் இல்லை, பம்பாய் வாழ் தமிழராக பார்க்கும் போது நமக்கு அந்நியப்படவில்லை ஏனெனில் துப்பாக்கி போன்ற படத்தில் இல்லாத நம்பகத்தன்மை - களம் மும்பை தான் என்று.

அது போலத் தான் விக்ரம் வரும் காட்சிகளில் கோவாவைப் பார்க்கும் பொழுது நீர்ப்பறவை, கடல் போன்ற சலிப்பூட்டும் அலையோசையைக் காட்டிலும் இது அழகான கதையாகவே இருக்கிறது. நன்றாக கிறுத்துவ வாசம் வீசும் திரைக்கதை -ஆமாம் அது தான் இந்தப் படத்தை நிறைவாகச் செய்திருக்கிறது, அதற்காக ஆலப்புழாவை கோவா என்று காட்டினால் நம்புவார்கள் என்று இயக்குனர் நினைத்திருப்பது தான் பரிதாபம்.


சில வசனங்கள் மிகக் கூர்மை :-

”என்ன மதம்”
“கிரிஸ்டியன்”
“கிரிஸ்டியன்னா, எந்தக் கிரிஸ்டியன் நாடாரா! செட்டியாரா! முதலியாரா?”

பல வசனங்கள் , கிட்டதட்ட பத்து நிமிடங்களுக்கும் மேலே ம்யூட் செய்யும் அளவுக்கு சென்ஸேசனலாக இருந்திருக்கின்றன,


தபு, லாரா தத்தா, ஜீவாவின் தங்கை என பெண்களின் வாழ்க்கையைக் காட்டியிருக்கும் விதத்தில் வரும் சில அதிர்ச்சிகள், கிருத்தவக் குடும்பங்களில் கலாச்சார மாற்றங்களின் வேகம் அதிகம் என்றும் சில இடங்கள் காட்டுகிறது யதார்த்தம். ஜீவா தன் தந்தையை அவமானப் படுத்திய இந்து மதவாத அமைப்பினரின் தலைவரை ஒருவன் சுடும் பொழுது, அந்த கிளைமேக்ஸ் காட்சியில் எந்த வசனமோ, ஹீரோயிசமோ அல்லது குண்டடிப் பட்டவருக்கு இரத்தம் கொடுப்பது போன்ற செண்டிமெண்டு காட்சியோ இல்லாமல்,  வெறும் கண்ணீருடன் திரும்பும் காட்சிக்காகவே இந்தப் படம் பார்க்கலாம்.



- ஜீவ.கரிகாலன்




திங்கள், 24 டிசம்பர், 2012

வறட்சியை(பஞ்சம்) விரும்பும் நல்லுள்ளங்கள்

 புத்தக விமர்சனம்



சமன்விதா(
SAMANWITA) என்ற திட்டம் ஒரிசாவிலுள்ள கோம்னா எனும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில், தொண்டு செய்வதற்காக இறங்கிய ஒரு சில பிரபல நிறுவனங்களின் அரசு சாரா தொண்டு அமைப்புகளால் (NGO) 1978  1980ல் தீவிரமாக் கொண்டு வந்து செயல்படுத்தப் பட்ட திட்டம் ஆகும். இதன் படி , அங்குள்ள குடியானவர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மாடுகள் யாவும் இப்போதைய நிலைமையை விட அதிகம் பால் சுரக்கும் என்று ஆசை வார்த்தை சொல்லி, மாடுகளுக்கு ஜெர்ஸி காளைகளின் உயிரணுக்கள் செலுத்தப் பட்டன, மேலும் அவர்களுக்கு தங்கள் மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதற்கு ஒரு ஏக்கர் நிலமும் அதில் பயிரிடுவதற்கு எனும் subabul  (கொன்றை மரம் போலிருக்கும் பூர்விகம்: ஐரோப்பா ஜெர்மனி) மரம் வைத்திடும் திட்டமும், அதற்காக சொற்ப ரூபாய்கள் ஊதியமும் கொடுக்கப் பட்டது.

அதே வேளை அந்தப் பகுதியில் பிரபலமான காரியார் எனும் காளை இனத்தை (நம் ஊர் காங்கேயம் காளை போன்ற சிறப்பு வாய்ந்த காரியார் காளை) இதே அமைப்பினர் விதையறுப்பு செய்து அடுத்த கன்று உருவாகுவதை முற்றிலுமாகவே தடுத்து விட்டார்கள், இன்று அந்த கார்யார் காளை இனம் முழுதுமாய் அழிந்துவிட்டது. அதற்கு பதிலாக உருவாக்கியிருந்த ஜெர்ஸியினமோ குறைவான பால் உற்பத்தியை கொடுத்ததுடன், பெரிய அளவில் கன்றுகள் இறந்து விட்டன, இறுதியில் அந்த திட்டத்தை படு தோல்வியடையச் செய்து அவர்கள் வாழ்வாதாரத்தை மாற்றியமைத்த்து, ஒருமுறை வெட்டிவிட்ட(வெட்டிவிட அறிவுறுத்தப்பட்டு) subabul  மரங்கள் யாவும் மறுபடியும் தளைக்காமல் போக, புதிய கலப்பினம் மற்றும் புது வகை subabul மரங்கள் மூலம் வறுமை ஒழிப்பு என்ற குறிக்கோளில் கொண்டு வரப்பட்ட சமன்விதா (Samanwita) திட்டமும் அடுத்த மூன்று வருடங்களில் முடிவுக்கு வந்தது.

CAG எனப்படும் மத்திய தனிக்கைக் குழு செய்த கிராமப் புற மேம்பாட்டிற்காக செயல்பட்ட திட்டங்களில், சோதனை முறையில் தணிக்கை செய்ய அதில் செயல்நோக்கத்திற்காக அல்லாமல் திருப்பிவிடப்பட்ட நிதிகளைக் கொண்ட திட்டங்களுக்கான பட்டியலில் சமன்விதாவும் இருந்தது (16 கோடிக்கும் மேலேயுள்ள திட்டம்). அதில் குறிப்பிட்ட ஒரு தொண்டு நிறுவனமான BAIFக்கு மட்டும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டிருந்தது). இந்த வீணாய்ப் போன திட்டம் ஏற்படுத்திய வறட்சி பத்தாண்டுகள் வரை நேரிடையாக அந்த மாவட்டத்தில் பாதித்திருக்க, திட்டம் தோல்வியுற்றாலும் இதில் பலனடைந்த நிறுவனமோ?........ தொடர்ந்து படியுங்கள்

வறட்சியை(பஞ்சம்) விரும்பும் நல்லுள்ளங்கள் –முதலில் இந்த புத்தகம் பற்றி சிலாகித்து எழுத வேண்டிய அவசியம்இது 1996ல் வெளி வந்திருந்தாலும் இன்றளவும் நம் நாட்டின் வறுமையைப் பற்றிய முக்கிய ஆவனமாக இந்நூல் திகழ்கிறது. இன்றைய நிலையிலும் வறுமைக்கான அளவீடுகளை மிக முரணான வகையில் அமைத்து வைத்திருக்கும் நம் அரசின் போக்கிற்கு பின்னால் என்னவெல்லாம் இருக்கலாம் என்று யோசிக்க வைக்கும் நூல். வறுமையை ஒழிப்பதற்கு பதிலாய் வறுமைக் கோட்டின் எல்லையை கொஞ்சம் தளர்த்திக் கீழ் இறக்கி வைத்து சில விழுக்காடுகளை விழுங்கிக் கொள்ளலாம் என்று சிந்திக்கும் அரசின் இன்றைய நிலை இப்படி இருக்க பெரிதாக ஏதும் விழிப்புணர்வொ, நவீன ஊடகங்கள் இல்லாத அன்றைய நாட்களிலேயே வறுமையால் பாதிக்கப்பட்ட இடங்களில் வளர்ச்சிப் பணி எந்த அளவு இருந்து வருகிறது என்று அவர்கள் தோலுரிக்கும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.

 நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை புள்ளி விவரங்களோடு ஒவ்வொரு காலாண்டும் உலகிற்கு அறிவித்துக் கொண்டே இருக்கிறது நம் அரசு. ஆனால் நம் நாட்டின் வளர்ச்சியில் உள்ள புள்ளி விவரங்களுக்கும் தங்கள் வாழ்க்கை முறைக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் இந்த தேசத்தில் பெரும் பகுதி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?, இந்த தேசத்தின் வளர்ச்சி என்பது இந்தியர்களின் வளர்ச்சியல்ல. பெரும்பான்மையான ஊடகங்கள் இந்தியாவின் வளர்ச்சியைப் பேசும் போது, ஒரு பெரிய அளவிலான மக்களின் வாழ்க்கை முறை மறைக்கப் பட்டு வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா ? னீங்கள் இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும்.

மகசேசே போன்ற உயர்ந்த விருதுகளாக மொத்தம் பதிமூன்று விருதுகளைப் பெற்ற எழுத்தாளர் திரு.P.சாய்நாத் அவர்கள் தொகுத்திருக்கும் இந்த புத்தகம் வாயிலாக தனிப்பட்ட முறையில் இன்றிருக்கும் பொறுப்பற்ற ஊடக மாந்தர்கள் இதன் சிறப்பை உணர வேண்டும், அன்றைய நிலையிலேயே ஊடகங்களின் பொறுப்பற்ற நிலையை பெரிதும் கண்டித்திருந்திருக்கிறார். அதனால் தான் அவர் தன்னை ஒரு தன்னிச்சையான எழுத்தாளராகவே (free lance  journalist) நிறுவிக் கொண்டு தான் இந்த புத்தகம் எழுதுகிறார்.
இந்த புத்தகம் இந்தியாவின் ஏழைகளிலும் ஏழைகளாக இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறது. மொத்தம் உள்ள் 68 கட்டுரைகளும் வறட்சியையும், பஞ்சத்தையும் காரணமாக வைத்துக் கொண்டு நடக்கும் அதிகார வர்கங்களின் சுரண்டல்களையும், சீர்குலைந்த சமூக அமைப்புகளையும் மிக தைரியமாக ஆவனப் படுத்தியிருக்கிறார். தமிழ்நாடு, ஒரிஸ்ஸா, பிஹார், மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் என அவர் நம் நாட்டின் கடை நிலையில் உள்ள 5% சதவீதத்தினரை சந்தித்திருக்கிறார். கிட்டதட்ட 80000 கி.மீ வெவ்வேறு 16 வகையான வாகனங்களில் பயணித்த இவர், நடை பயணமாகவே நடந்த தூரம் மட்டும் கிட்ட தட்ட 4000 கி.மீ.

இது போன்ற பயணக் கட்டுரைகளில் பொதுவாக அவர்கள் சந்தித்த பெரிய இயற்கை பேரழிவுகளையோ, நோய்களையோ, விபத்துகளையோ தான் ஆய்வுப் படுத்தும் விதமாக அமைக்காமல் அம்மக்களின் தினசரி வாழ்க்கையை, அவர்கள் வாழும் முறையை பதிவு செய்திருக்கிறார். இந்த புத்தகத்தை வாசித்த பின்னர் வளர்ச்சி என்று இத்தனை ஆண்டுகளாய் நமக்கு கிடைத்தவை எல்லாம் மிகச் சாதாரணமான எச்சங்கள் தான் என்ற முடிவிற்கு நாம் வந்துவிடுவதைத் தவிர்க்க முடியாது. ஒரு பெருங்கூட்டம் ஒன்று “நம்மை ஒரு மக்களரசு தான் நிர்வகிக்கின்றது என்று கூட தெரியாமல் வாழ்வது புலனாகிறது. பஞ்சம், வறுமை, உடல்நலக் குறைவு, கல்வியின் இக்கட்டான நிலை என்று பகுப்பாய்வு செய்து அதை சமூகத்தின் சூழலோடு கணக்கிடப்பட்டுள்ளது.

கணக்கிடப்பட்டுள்ளது என்ற கருத்தை இங்கு சொல்லக் காரணம், வெறும் செய்தி ஆவனமாக மட்டும் இவை உபயோகப்பட்டு நின்று விடக் கூடாது என்று, அவர் தன்னுடைய ஒவ்வொரு கட்டுரையிலும் புள்ளியல் விவரங்களோடும், ஒப்பீடுகளோடும் சொல்கிறார். ஆதலால் இவர் சென்று வந்திருக்கும் டெல்லி, கேரளா, உத்திர பிரதேச மாநிலத்தின் தரவுகளும் ஒரு குறிப்பாக பயன் பட்டிருக்கின்றன. இவை யாவுமே ஒவ்வொரு கட்டுரையினை வாசிக்கும் பொழுதும் எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் எளிமையான மொழி நடையில் எழுதப் பட்டிருக்கின்றன. வறட்சியை தவறான கணக்கிடுதலில் உள்ள தீமையையும் ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்கிறார். எ.கா: கலாஹந்தி மாவட்டத்தில் (ஒரிஸ்ஸா) மொத்த நாட்டின் சராசரி மழை அளவை {800 மி.மீ} விடவும் அதிகம் {1250மி.மீ}, ஆனால் அங்கே வறட்சியைக் காரணம் காட்டி நீர்ப் பாசனத்திற்காக ஒதுக்கப் படும் தொகையென்பது தேவையற்றது. இந்த நிதி ஆதரத்திற்காகத் தான் தங்கள் ஊரிலேயே வறட்சியை விரும்புகின்றனரா ??


அண்டை மாநிலமான கேரளாவோடு ஒப்பிடுகையில், தமிழநாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பனையேறியான ரத்னபாண்டிக்கு எந்த ஒரு பாதுகாப்புக் கவசமும் இல்லை. சராசரியாக இருபது-இருபத்தைந்தடியுள்ள பனை மரமாக தினமும் நாற்பது மரங்கள் ஏறி இறங்கினால் தான் அவருக்கு மாதச் சம்பளமாக மாதம் ரூ.600/- கிடைக்கும், இந்த சொற்ப வருமானத்திற்காக அவர் பாதுகாப்பில்லாமல் ஏறும் படிகளை கணக்கிட்டால் அதன் உயரம் 5000 அடிக்கும் மேலே வரும், அது கிட்ட தட்ட 240 மாடிகள் ஏறுவதற்கு சமம், இத்தனை வருடங்கள் அவர் வேலை பார்த்து வந்தாலும் அவர் ஒரு பனை மரத்திற்கு கூட உரிமையற்றவராகவே இருக்கிறார். அதே ராம்நாடில் (இன்றளவும்) நடைபெற்று வரும் மிளகாய் வியாபாரத்தை  பார்க்கும் பொழுது, ஒரு அற்பத் தொகையை விவசாயிக்கு முன்பணமாகக் கொடுத்து மொத்த வற்றலையும் ஏமாற்றும் மண்டி ஆட்களும், கைகளில் துண்டு போட்டு பேரம் பேசி ஏமாற்றும் தரகர்களின் செயல்களும் நமக்கு சொல்ல முடியாத அதிர்ச்சி தருபவை. இப்படி ஒரு தட்டு மக்களின் வறுமையை முதலீடாகக் கொண்டு சுரண்டி வாழும் சமூகத்தை வெளிக்கொணரும் அத்தனை கட்டுரைகளும் நம் சமூகம் இவ்வளவு ஆபத்தானதா என்று அச்சத்தை மூட்டுகிறது.

வரும் வார இறுதியை உல்லாசமாய் கழிப்பதே குறிக்கோளாய் வாழும் பகட்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் உயர்ந்து போன, நவீன வாழ்க்கை முறை என்பது தான் இந்த நாட்டின் நிலை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இதைப் படித்தால் புரிந்து கொள்வார்கள், இந்தியா என்பது வேறு, இந்தியர்கள் வேறு என்று.

இக்கட்டுரையின் முதலில் சொன்ன திட்டத்தை (ஒரிஸ்ஸா - சமன்விதா) கையாண்டுக் கொண்டிருந்த தொண்டு நிறுவனம் BAIF, அன்று (1978) பெற்ற மூன்று கோடி நிதியைக் கொண்டு நிர்மானிப்பதாய் இருந்த செயற்கை முறை விலங்குகள் கருத்தரிப்பு நிலையங்கள் சுமார் 250ம் உண்மையில் கிராம மேம்பாட்டிற்கு என்று ஏதும் செய்யவில்லை என்று மத்திய தணிக்கைக் குழு சொல்லியது என்பதை நினைவில் வைத்து அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை இணையத்தில் தேடிய பொழுது வந்த அதிர்ச்சி, Bharathiyo Agro Industrial Foundation – இன்று BAIF Development Research Foundation என்ற பெயரில் இது வரை 60000 கிராமங்களில் செய்திருக்கும் உற்பத்தியின் அளவு மட்டும் (GDP) 2500 கோடி என்று பார்த்தபோது தான் இந்த புத்த்கத்தின் தலைப்பு எவ்வளவு பொருத்தமாய் போய்விட்டதே!! என்று வருந்துகிறேன்.
            
புத்தகத்தின் பெயர் : Everybody Loves a Good Drought
ஆசிரியர்          : P.Sainath
வெளியீடு         : Penguin Books
விலை            : Rs.399/-


- நன்றி 
ஜீவ.கரிகாலன்