ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

அது - 9

”எதுவொன்றைப் புரிந்துகொண்டால் எல்லாமுமாக இருக்கமுடியுமோ அந்த ஒன்று தான் அதுவாக இருக்கிறது”


படிக்கட்டுகள் வழியே கீழிறங்கி வந்தால் அந்த அறையின் கதவு தென்படும். அறை முழுதும் ஆப்பிளின் நறுமணம் கமழ்ந்திருந்தது. பச்சை வண்ண விளக்கொளியில் அறையின் மையத்தில் ஒரு நீண்ட மீன் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. மீன் தொட்டிக்கு அருகிலேயே நீச்சல் குளம், கண்ணாடியாலன்றி பெரிய பெரிய கற்களால் ஆன நீச்சல் குளம். நவீனமயமாகக் கட்டப்பட்டிருக்கும் இவ்வறைக்குள்ளே, பாரம்பரியமான குளம். மேல்தளத்திலிருந்து சூரிய ஒளி படுவதற்குப் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூரை நீச்சல் குளத்திற்கு சரியாக மேற்புறம்.


அந்திவேளையின் வீரியம் குறைந்த சூரியன் ஒளி, சாளரங்களற்ற அந்த அறையின் பச்சை விளக்குகளின் ஒளியை FLOUROSCENTஆக மாற்றியிருந்தது.

சன்னமாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்துஸ்தானி இசைக்கு காதுகொடுத்தும், குமார சம்பவத்திற்கு கண்களைக் கொடுத்தபடி நான் தரையில் படுத்திருந்தேன்.

துவட்டாத மேனியோடு சாய்ந்து கொண்டாள் என் மீது.

மீன் தொட்டியைப் பார்த்தபடியே நீந்துவது அவள் வாடிக்கை. அவள் நீந்தும் போது அத்தொட்டியில் இருக்கும் தங்க மீனும் அவளோடு போட்டிபோடும். அவளுக்கு இணையாக மெதுவாக நீந்துவது தான் போட்டி. இந்த முனையிலிருந்து அந்த முனை வரை அவள் செல்லும் நேரத்தில், தங்க மீனும் இந்தப் புறத்திலிருந்து அந்தப் புறம் சென்றிருக்கும். இரவரும் நீந்திக் கொண்டிருப்பதை மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருப்பது இவன் வழக்கம்.

அவளுக்குப் பிடித்ததாக தன் வீட்டினை மாற்றிக் கொண்டே வந்தான். விளக்கொளி, நறுமணம், நீச்சலறை, மீன்தொட்டி எல்லாமுமே அவளுக்குப் பிடித்த்தென அவன் அறிந்து வாங்கியவை. அவளிடம் இவை பிடித்திருக்கிறதா என்று கேட்டதும் கிடையாது. அவளும் சொன்னது இல்லை.

எப்பொதும் அப்படித்தான் நான் பேசிக்கொண்டிருப்பவனாகவும், அவள் கேட்டுக் கொண்டிருப்பவளாகவுமே இருக்கிறாள். உண்மையில் அவள் குரல் மிக மிக வசீகரமானது. வசீகரமானது என்றால் அதை விவரிக்க முடியாது. விவரிக்க முடியாத உலோக உருளைக்குள் உருண்டுக் கொண்டிருக்கும் வாயுவின் ஓசையாக, ஆனால் வேக வேகமாகப் பேசக் கூடியவள். இருந்தும் நானே அதிகம் பேசுபவனாகவும். அவள் கேட்டுக் கொண்டிருப்பவளாகவும் இருக்கிறாள்.

அவளிடம் நான் என்ன கேட்பது, அவளைப் பற்றி நான் தெரிந்து கொள்வது. அவள் இப்பொழுது வாழும் காலத்தில் மட்டும் அவளுடைய தேவைகள் பற்றி அறிந்துவந்தால் போதுமா? அவளுக்கு முன்னர் எது தேவையாக இருந்தது, இனிமேல் என்னென்ன தேவையாக இருக்கும், அதற்கும் அப்பால் அவளுக்குத் தேவைப்படுவது என்ன என்று யுகங்களைக் கடந்து தெரிந்து கொள்ளும் சாத்தியம் இருந்திருந்தால் நான் ஒரேடியாகக் கேட்டுத் தெரிந்திருப்பேன். அதுவரை அவள் உணர்த்துவதைத்தான் நான் செய்ய முடியும்.

அந்த தங்கமீன் எங்களைப் பார்த்தபடி, கண்ணாடித் தொட்டியின் சுவர்களை முட்டிக்கொண்டிருப்பதாய் தோன்றியது. அது முட்டுவது போலவும் இல்லை, பசியோடு இருக்க வேண்டும், வாயை நன்றாகப் பிளந்து கொண்டிருந்தது

அவள் தலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த ஈரம் என் இதயத்திற்கு மேற்புறம் நின்று கொண்டிருந்தது. கைகளிலிருந்த புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு. அவள் கீழ்தாடையைப் பற்றிப் பிடித்தபடி அவளைத் தூக்கி என் பக்கம் இழுக்க முயன்றேன். அவள் உடல் வலுவாக இருந்தது. தலையின் கணம் என் நெஞ்சை அழுத்தியது. பச்சை நிற அறை அடர்த்தி மிகுந்திருந்தது. அவள் இன்னும் என் நெஞ்சை அழுத்தினாள், உடல் அழுந்தியது. ஆப்பிள் நறுமணம் திண்மையாகவும், தாங்க முடியாத நெடியுடனும் மாறியது. மீன் தொட்டியின் கண்ணாடிச் சுவர்களை, அந்த மீன் தன் பற்களால் கடித்துக் கொண்டிருந்தது. தொட்டியில் விரிசல் பெரிதாகிக் கொண்டிருந்தது.

நீச்சல் குளத்தில் யாரோ கைகளையும் கால்களையும் தண்ணீரில் அடித்துக் கொள்வது போல சப்தம். எழுந்து என்னால் பார்க்க முடியவில்லை. மீன் தொட்டியில் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. சூரியன் முழுமையாக மறைந்து இருந்தது. என் நெஞ்சில் தலை சாய்த்தவள் முழுமையாக மேலேறினாள் உடல் அவளைத் தாங்க முடியாமல். சுவாசத்தைத் தடுத்தது. முகத்தில் யாரோ அறைந்தது போல் இருந்தது.

தலையைச் சுற்றிப் பிடித்திருந்த ஏதோவொன்று அகன்றுவிட்டதாய் விழித்துப் பார்க்க, அதே நாற்றத்துடன் கூடிய தண்ணீர் என் முகத்தில் வழிந்துக் கொண்டிருக்க, என் எதிரேயிருந்தப் பெண்மணி நான் விழித்ததைக் கண்டு புன்முறுவலித்தாள்.

”சார் , காலைல இருந்து எதுவும் சாப்பிடலையா சார்” என்று என் முகத்தில் தண்ணீர் தெளித்த தேநீர்கடைப் பையன் என்னைக் கேட்டேன் அவனுக்கும் பின்பு நான்கைந்து பேர் நின்றுக் கொண்டிருந்தனர். தண்ணீர் தெளித்தும் கண் விழிக்காததால், அவள் என்னை அறைந்திருக்கிறாள். கன்னம் வலித்தது. வயிற்றிலிருக்கும் கட்டியையும் தடவிப் பார்த்தேன், மருத்துவமனை என்னை அவ்வளவு எளிதில் விடாது என்று தோன்றியது.

நான் இப்போது என்ன செய்யட்டும்
தூக்கத்தை தேடட்டுமா?
மனநோய்க்கு மருந்து தேடவா?
வயிற்றை பரிசோதனை செய்யவா?

*
வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
சிரசாசனம் செய்துகொண்டிருந்தது அது.

ஒன்றும் பேசாமல் கட்டிலில் விழுந்தேன். என்னைப் பார்த்து உரத்தக் குரலில் கேட்டது?

“ மீன்களுக்கு அத்தனை வலிமையான பற்களா? ”

அடுக்களையில் ஏதோ ஒரு பாட்டில் விழுந்துடையும் சப்தம்.


அதனைப் புரிந்துக் கொள்ளுதல் என்பது ஒரு நாளும் அதுவாக ஆக முடியாது 







(மன்duk0101)

வியாழன், 7 ஏப்ரல், 2016

அது - 8

திங்கள் காலை : 11:30
“ம்ம்.. என்ன அந்த லெட்டர அவ படிச்சாளா?”
நான் பதில் சொல்லவில்லை. அது காலாட்டிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு,
“ஓகே நான் செத்தொழிஞ்சா பரவால்லனு தோணுதோ”
ஆமாம் எனக்கு தோணுது.
“அவளுக்கும் தோணுதா?”
அதிலென்ன சந்தேகம் உனக்கு
“சரி… நான் தூங்கப் போறேன்”.
முதன்முறையாக ஓர் இரவில் தூங்கச் செல்கிறது அது.
“இந்த இரவில்… நீ சந்தோஷமாய் இரு” சபித்தலின் மிக இளகிய குரல் அது.

*

(அது இல்லாத இரவு)

நான் ஆழ்ந்த தூக்கத்தில் இல்லை என்று மனம் சொல்கிறது


அந்த விபத்திற்குப் பின்பு, அது இல்லாத இரவாக இன்று கிடைக்கப்பெற்றிருக்கிறது. முகம் கழுவிவிட்டு என் அறைக் கதவை திறக்கும் போது, என் அறையின் நிறம் மாறியிருந்தது.

நிறம் மாறிய அறை குறித்த கவலைப்பட அவகாசம் இல்லை. என் எழுது மேஜக்கு கீழே படுக்கையை விரித்து, நானும் படுத்துக் கொண்டேன். அது இல்லாத இரவில், கண்களை மூடினால் தூக்கம் வந்துவிடும் என்று யாரோ சொல்லியது போன்ற ஞாபகம். விசித்திரமான இரவாக இருந்தாலும், ஏற்கனவே எனக்குப் பழக்கப்பட்ட இரவு தான். வயிற்றில் கூடியிருக்கின்ற சின்ன கட்டியை தடவிப் பார்த்தேன். சதைக்குள்ளே சட்டை பொத்தான் அளவு உருண்டிருந்தது.

படுக்கைக்கு எதிரே நான் படிக்கும்/எழுதும் மேஜையும், நாற்காலியும் இருந்தது. இப்போதெல்லாம் எதையும் உருப்படியாக எழுதுவது இல்லை, ஏன் வாசிப்பது கூட இல்லை.

அது இல்லாத இரவில், தூக்கம் எளிதானது தான் என்றாலும், உடனேயே கண்களை மூடக் கூடாது என்று கவனமாய் இருந்தேன். இந்த தனிமையை, இந்த வெற்றிடத்தை, இந்த நிசப்தத்தை உணர வேண்டும். எத்தனைக் கொடுமையான இரவுகளைக் கடந்திருக்கேன்?. ஒருநாள் ‘அது’ தொல்லை பொறுக்க முடியாமல் அதன் கைகளையும் கால்களையும் சங்கிலியால் கட்டிப்போட, அது சங்கிலியைத் தரதரவென இழுத்தபடி என்னைத் தொல்லை செய்தது. எத்தனையோ ஸ்லீப்பிங் ப்பில்களை ஜெம்ஸ் சாக்லேட் போல் கடித்துத் தின்றும், அது தூங்காமல் என்னை வாட்டி வதைத்த இரவுகள் எத்தனையோ.

வெற்று மேஜையை எத்தனை நேரம் பார்த்துக் கொண்டேயிருக்க முடியும், ரொம்ப நாட்களுக்குப் பிறகு முதல் கொட்டாவிக்கே மரியாதை செலுத்தி கண்ணயர்ந்தேன்.

ஆழ்ந்த தூக்கத்தில் இல்லை என்று மனம் சொல்கிறது. ஜீரோ வாட்ஸ் பல்பின் ஒளி, தூண்டி விடும் அரிக்கேன் விளக்கைப் போலவே கொஞ்சம் கொஞ்சமாக அறையை வெளிச்சத்தில் நிரப்ப ஆரம்பிக்கின்றது. கண்களைத் திறக்க முடியாமல் தவிக்கிறேன். திறந்தால் குருடாகும் சாத்தியமிருப்பதாய் தோன்றியது. இந்த இரவு ஏன் இத்தனை குரூரமாக மாறியது? ஜீரோ வாட்ஸ் விளக்கிருக்கும் திசைக்கு எதிரிபுறம் ஒருக்களித்துப்படுத்தேன்.  என் தனிமையைப் போன்ற மேஜையின் தோற்றம் ‘உம்’மென்று இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமாக எரிந்துக்கொண்டிருந்த  விளக்கு, தன் பழைய ஒளிக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. சற்றைக்கெல்லாம் அறை எப்போதும் போல இயல்பாக மாறிவிட, கண்களை மூடிப் புரண்டு படுத்தேன்.

கொசுவர்த்திச் சுருளின் நாற்றம், வீட்டில் தான் கொசுவர்த்திச் சுருள் இல்லையே, பக்கத்து வீட்டிலிருந்து நீள்கிறதா என்று செயற்கையான முடிவுடன். உறக்கத்திற்குத் திரும்பினேன். ஃபேன் சப்தம் இரைச்சல் மிகுந்ததாய் தோன்றியது. ஆனாலும் கடிகாரத்தின் நொடிமுள்ளின் ஓசையும் கேட்டுக்கொண்டிருந்தது.

கண்களைத் திறந்து பார்த்தேன் கண்முன்னே என் மேஜையும், நாற்காலியும்.
எதிர்புறம் ஒருக்களித்துப்படுத்து மீண்டும் கண்களைத் திறந்தேன் மேஜையும், நாற்காலியும்
மீண்டும் எதிர்புறம் படுத்துப் பார்த்தேன் அதே காட்சி.

சரி மல்லாக்க படுத்துப்பார்க்கலாம் என்று தோன்றிட அதே காட்சி. என் மேலே விழுந்துவிடுமோ என்று  பயந்தபடி எழ முயலும் போது, தலையில் தட்டியது நாற்காலி.

பீதியில் கரைந்து கொண்டிருந்தது இரவு. இருள் புதிய நிறத்தில் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

சங்கிலியோடு பிணைக்கப்பட்டிருந்த அது தரதவென்று இழுத்ததைப் போல, இந்த மேஜையையும், நாற்காலியையும் இழுத்து அறையின் வெளியே போட்டேன்.

வெறும் அறை ஃபேனின் சப்தத்தை மட்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. கொஞ்ச காலமாகவே சரியாகத் தூங்காமல் இருக்கும் எனக்கு, தூக்கம் மிக அவசியமானதாகத் தோன்றியும் தூங்க முடியாமல் என்னை மிரட்டுகின்ற இந்த உருவங்கள், திகிலூட்டுகின்றன. இப்போது அறையில் எந்தப் பொருளும் இல்லை. கண்ணயர்ந்தேன்.

கனவு உலுக்கிக்கொண்டு விழித்துப் பார்க்கத் தூண்டியது. கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன் அந்த மேஜை இப்போது எப்படியும் என்னை மீண்டும் மிரட்டும் என்று நம்பினேன். என் கண்களைத் திறப்பதர்காக மேஜை முயற்சிப்பதாகத் தோன்றியது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்த மேஜையும், நாற்காலியும் இங்கும் அங்கும் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

நரநரக்கும் சப்தங்கள் ஏற்கனவே கொதித்துக் கொண்டிருக்கும் மூளையை இன்னும் உஷ்னப் படுத்த, நரம்புகளுக்கு மூளை இடும் கட்டளைகள் வீபரீதத்தை துவக்கியிருந்தது. கை கால்கள் வெட்டி இழுக்க ஆரம்பித்தன. இறுதியில் நான் ஓலமிட்டேன்.

என்னைக் ரட்சிக்கப் போகும் கடவுள் யார் ?


*

மனநல மருத்துவரிடம் சென்ற விஷயத்தை அவளுக்கும், அதுவுக்கும் தெரியாமல் மறைக்க வேண்டும் என்கிற பதட்டம் வேறு. ஸ்லீப்பிங் டிஸ் ஆர்டர் என்று சொல்கிறார்கள், இன்சோம்னியா என்று சொல்கிறார்கள்.

ஆனால் குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் கூட அந்த மருத்துவர் நான் சொன்னதைக் கேட்கவில்லை. தூங்க முடியவில்லை என்றதும் அவர் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.

”ஸ்ட்ரெஸ்ஸா ஃபீல் பண்றிங்களா?, சூசைடல் பத்தி யோசிக்கிறிங்களா?”
அதற்கு சரியான பதிலைச் சொல்லும் முன் ‘அது’வைப் பற்றி முதலில் அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் என் பதிலுக்காகக் காத்திராமல் ஏழு எட்டு மாத்திரைகளின் பெயர்களை அந்தத் தாளில் எழுத ஆரம்பித்தார். மனம் கூடுதலாக எரிச்சலடைந்தது. அந்த மருத்துவர் கொடுத்த குறிப்பைத் தூர எறிந்துவிட்டேன்.

மாத்திரை சாப்பிட்டு அல்சரில் சாவதைவிட, இன்சோம்னியா நோயாளியாகவே இருந்துவிடலாம் என்று தோன்றுகிறது. அதே போல இன்சோம்னியாவாக இருப்பதற்கு பதில் ‘அது’வுடன் இருந்துவிடலாம் என்று தோன்றியது. ’அது’ – ஆனால் நான் நோயாளியாக ஆனதற்கும் அது தானே காரணம்.  

நண்பர்களை விட்டு வெகு தூரம் வந்துவிட்டேன். ஒருவேளை அவர்கள் என்னுடனிருந்தால் எனக்கு இவை நேராமல் இருந்திருக்கலாம், அதுவும் தான். ஏதோ ஒன்றைக் கையில் கொடுப்பதும், பின்னர் அதைப் பிடுங்கிக் கொள்ளவும் செய்கிறது காலம். இப்போதும் அவர்களைத் தொடர்பு கொள்ளமுடியும், அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் ஏதோ தடுக்கிறது. ஆரம்பத்தில் ‘அது’ நண்பர்களின் பிரிவை ஈடுகட்டியது, இப்பொது ‘அது’வைப் பிரிந்தால் நண்பர்கள் தான் ஈடுகட்ட முடியும். ஆனால் நான் அவர்களிடம் செல்லும் பொழுது, இப்படியான நிலையில் செல்லக் கூடாது. தூங்காத விழிகள், வெயிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சுனங்கிக் கொண்டிருந்தது.

ஒரு தேநீர் கடையில் பழச்சாறு ஆர்டர் செய்தேன்.

அவள் என்னை அழைத்தாள், இன்னும் ஆறுநாட்கள் தான் இருக்கிறது என்றாள்.

அவள் ஏன் என்னை விட ‘அது’ இறந்துப் போவதை விரும்புகிறாள் என்று எனக்கு வியப்பளித்தது. நான் அவளிடம் என் அவதிகளைச் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். உண்மையில் அவள் எனக்காகத் தான் சொல்கிறாளா? இல்லை ‘அது’ அவளையும் துன்புறுத்தியிருக்கிறதா? வாய்ப்பில்லையே. ஆர்டர் பண்ணியிருந்த பழச்சாறு என் மேஜையில் வைக்கப்பட்டது
அருகில் அமர்ந்திருந்த நடுத்தரவயதுப் பெண்மணியின் மொபைல் அந்தப் பாடலை ஒலிபரப்பியது. அந்த மெல்லிய பியானோவும், கிட்டாரும் என்னுள் கணமாக இறங்க ஆரம்பிக்க. கண்களை மூடினேன்.


தொடரும் - அது