பஜ்ஜி சொஜ்ஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பஜ்ஜி சொஜ்ஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 டிசம்பர், 2013

கிராஃபிக் நாவல் vs காமிக்ஸ் - பஜ்ஜி-சொஜ்ஜி - 52

கிராஃபிக் நாவல் vs காமிக்ஸ் 


கிராஃபிக் நாவலுக்கும்,காமிக்ஸிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது தெரியுமா? "என்னடா இன்னும் காமிக்ஸ் வாசிச்சுக்கிட்டு இருக்கிற?" என்று என்னைக் கேட்கும் நண்பர்களுக்குத் தெரியாது தமிழ்நாட்டின் காமிக்ஸ் சாம்ராஜ்யம் பற்றி. விக்கிப்பீடியாவில் சென்று டெக்ஸ்வில்லர் என்று தேடினால் அந்த ஸ்பானிய கௌபாய்க்கு தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்கள் பற்றிய தகவல் இருக்கும். பெரிய ஹீரோக்களான டெக்ஸ், லக்கிலுக்,ஸ்பைடர், இரும்புக்கை மாயாவி மட்டுமின்றி காமிக்ஸ் உலகில் பெரிதாக சோபிக்க முடியாத மாயஜால மன்னன் மான்ட்ரேக், கார்த், ப்ளாஸ்மா போன்றவர்களுக்கும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் ரசிகர்கள். ஆனால், 25-15 வருடங்களுக்கு முன்பு யாரெல்லாம் வாசித்து வந்தார்களோ, இன்றும் அவர்கள் தான்  தமிழ் காமிக்ஸ் வாசிக்கும் பெரும்பான்மையானவர்கள்.

சீரியஸ் Literature இல் இல்லாத மரியாதை இதுபோனற படக்கதை Illustratorகளுக்கு இருப்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால் மட்டுமே, காமிக்ஸ் ரசிகர்களின் taste என்னவென்று உங்களுக்குத் தெரியும். காரணம் இந்த illustratorகளை மதிக்கக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் விஜயனின் முயற்சிகள் தான்,  Aurelio Galleppini, Jesus Blasco போன்ற Illustratorகள் பற்றி காலச்சுவடு எனக்கு அறிமுகமாகும் முன்னரே தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் இன்று வரை illustratorகளை தூக்கி வைத்துக் கொண்டாடும் மரபினை சிறுபத்திரிக்கைகளில் பார்க்கவில்லை, அதில் விஜயன் மிகக் கவனமாய் செயல்பட்டிருக்கிறார்.

 கிராஃபிக் நாவல் என்றால் அட்டைப்படம், வண்ணங்கள், பக்கங்கள் என எல்லாவற்றிலும் உங்களுக்கு வித்தியாசம் தெரியும், ஆனால் அது கிராஃபிக்ஸ் நாவலுக்கான விளக்கமல்ல. கிராஃபிக்ஸ் நாவலும் காமிக்ஸ் இதழில் வருவது தான், ஆனால் மற்ற தொடர்களைப் போன்று ஒரு கதாநாயகரின் சாகசம் என்றில்லாமல் ஒரு தனிக் கதை மட்டும் காமிக்ஸில் வருவதை கிராஃபிக் நாவல் என்று தெரிந்து கொள்ளலாம். அது காமிக்ஸ் எனும் வடிவத்திற்காக எழுதப்படாமல், எழுதி வைத்திருந்த நாவலை கிராஃபிக்ஸ் ஃபார்மில் கொண்டு வருவது என்று எளிதாகச் சொல்லலாம். சில பப்ளிகேஷன்ஸ் தனிப் பிரதியாய் ஒரு கிராஃபிக்ஸ் நாவலை உருவாக்கும், அதே சமயம் இவை தொடராகவும் வரும். முதன்முதலில் அமெரிக்காவில் 1960லிருந்தே புளங்கப்பட்ட வார்த்தை தான் கிராஃபிக்ஸ் நாவல் - நமக்கு இப்போது தான் அறிமுகமாகிறது.


சமீபத்தில் நான் வாசித்த ’சன்ஷைன்’ கிராஃபிக்‌ஸ் நாவலான  -”சிப்பாயின் சுவடுகள்” வாசித்த பின், கிராஃபிக்ஸ் நாவலின் scope பற்றி உணர்ந்தேன். கதை ஆரம்பத்திலிருந்து, முடியும் வரை, தொடர்ச்சியாக வாசித்து வந்த காமிக்ஸ்களைப் போன்றில்லாமல் அதிரடி தாக்குதல்கள், கொடூர முகம் கொண்ட வில்லன்கள், பஞ்ச் வசனங்கள் என எதுவில்லாமல் ஒர் சோகப் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் கதைக்களமது. 70களில் இருந்த ரயில் பாதை செல்லும் தாய்லாந்தின் நெல் வயல்கள், மறு ஆக்கம் பெற்ற ஜெர்மனியின் பெர்லின் என காட்டும் Landscapeகளிலிருந்து. கதையில் வரும் FLASHBACK காட்சிகளிலிருந்து, கதை நடக்கும் காலத்திற்கு பயணிக்கும் காட்சிகளின் கிராஃபிக் யுக்திகளை உணரும் பொழுது, உங்களுக்கு ஒரு திரைப்படத்தின் அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி.

 தாய்லாந்து வயல் வெளி  

  இந்த பீரியட் நாவல் வழியாக கிடைக்கப்பெறும் சில செய்திகள், நமக்குத் தெரியாத வரலாறு தான். ஆனாலும் ஒரு நாட்டுப் புரட்சியில் மற்றொரு நாடு தலையிடுவதும், அக்கிரமம் செய்வதும், அதே அணியில் ஒரு துரோகி - இன்னொரு நாட்டின் தலைவன் ஆக்கப்படுவதும். இனப்படுகொலை, அத்துமீறல்கள், ஊழல் என்பனவற்றை இயல்பாகத் துப்பறியும் ஒரு ரிப்போர்ட்டரின் கதையாக உருவாக்கப் பட்டிருக்கின்றது. 1963 வியன்னா ஒப்பந்தம் போன்று  உலக விஷயங்களைப் பேசும் இந்நாவலில் சுவாரஸ்யம் என்பது வேறு ஒரு தனிச்சுவை .

இது போன்ற கதைகள் தொடர்ந்து வந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் நிகழும் அது - மீண்டும் தேவனின் கதைகளோ, சுஜாதா, அ.மி போன்றோரின் கதைகள், இது போன்ற கிராஃபிக் நாவலாக வரும் சாத்தியம் உருவாகலாம் அல்லது சில பப்ளிஷர்கள் test drive பண்ணுவார்கள்.



-ஜீவ.கரிகாலன்





ஞாயிறு, 10 நவம்பர், 2013

அலங்காரம் என்றொரு கலையுணர்வு - பஜ்ஜி-சொஜ்ஜி /046


எல்லா விடியல்களுமே அன்றைய இரவு எப்படி ஒரு மனநிலையைத் தரும் என்ற ரகசியத்தை மறைத்து வைத்தபடியே தான் விடிகின்றன..

நேற்று  “நம்மோடு தான் பேசுகிறார்கள்” எனும் ஒரு உரையாடல் தொகுப்பிற்கான விமர்சனக் கூட்டத்திற்கு சென்று வந்தேன். நண்பர்களோடு அமர்ந்து சினிமா பார்ப்பதெல்லாம், இது போல கூட்டங்களுக்குச் செல்லும் நிறைவில் பத்து சதவீதம் கூட தராது என்று சொல்லலாம். அப்படியொரு நாள் தான் நேற்று.

இன்றைய நவீனச் சூழலில் தொன்மை, கிராமியம், ஆறு, இழப்புகள் என்று பேசிக் கொள்ளும் இடங்களில் பெரும்பாலும் மிஞ்சுவது எல்லாம் விரக்தி தான் இருக்கும் என்பது என் அவதானிப்பு, நேற்றோடு அவை மடிந்துவிட்டன. அப்படிப் பட்ட ஒரு உற்சாகமான கூட்டம் இந்த புத்தகத்தை முன் வைத்துப் பேசியது, அந்தவகையில் இந்த புத்தகம் சாதித்திருப்பது ஒரு பெரிய விஷயம் தான் என்று தோன்றியது. கலையானது எப்படி சாதாரன வாழ்வியலில் இருந்து உருப்பெற்று தன் மீடியத்தைத் தேடிப் பிடித்து ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுத்து தேவையைத் திட்டமிட்டு ஒரு வடிவத்தில் சென்று அமர்கிறது என்று இந்த புத்தகத்தைப் பார்க்கும் பொழுது ராட்டினச் சக்கரப் பயணமாக உற்சாகம் தொற்றிக் கொள்கிறது, இந்த புத்தகம் பற்றி இன்னொரு பதிவில் பேசுவோம்.

புக்பாயிண்டில் நடந்த இந்த புத்தகத்தைப் பற்றிய விமர்சனக் கூட்டத்தில் பவா, சைலஜா, சௌமியா, தமிழச்சி தங்க பாண்டியம், பாரதி கிருஷ்ணக் குமார் மற்றும் இந்த புத்தகத்தின்ஆசிரியர்களான ஓவியர்கள் ஸ்ரீநிவாசனும், பாஸ் என்கிற கே.பாலசுப்ரமணியன் அவர்களின் பேச்சுகளில் கிளம்பிய உற்சாகம் அறை முழுதும் பரவியிருந்தது. பாரதி கிருஷ்ணக்குமார் இதுவரை நான் பார்த்திராத மாதிரி வேறு மாதிரியான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

இதில் கோணங்கியின் ஓவியங்கள் பற்றிய ஒரு பதினைந்து நிமிடங்கள் நிகழ்ச்சியின் உச்சம் என்று உணர்த்தியது, இந்தப் பேச்சினை என் ஆயுள் உள்ளவரை மறக்க இயலாது. சித்திரங்கள் பற்றிய அவரது பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வெடிப்பு நிகழ்ந்துக் கொண்டிருந்தது. Naked Eyeன் மகத்துவம் பற்றி ஒரு மாபெரும் கதை சொல்லி சில

வந்துப் பேசிய எல்லோருமே, சிலாகித்த ஒரு சொல்லானது என்னவென்றால் “அலங்காரம்” என்பது தான். தமிழச்சி ஞாபகம் கொண்ட தன் அப்பாவின் ஞாபகம் மற்றும் அலங்காரம் பற்றிய அவரது அபிப்ராயங்கள் (அதில் அவரது பூ, வளையல்கள் பற்றி அவர் பேசுவதற்கான வாய்ப்பை இந்த புத்தகம் உருவாக்கி வைத்திருப்பதை அவர் பேசும் பொழுது, என்னைப் போஒல பலருக்கும் அவரது அலங்காரம் பற்றி மனதில் இருக்கும் சில கேள்விகளுக்கான விடைகளை அவரே கேள்விகளை முன் வைத்து பதில்களையும் அளித்தார்). B.கிருஷ்ணக்குமார் ஞாபகம் வைத்திருந்த தன் அம்மாவின் நினைவுகள் எனக்கான குரலாக அவர் பேசியது போன்று இருந்தது. அலங்காரம் எனும் கலையம்சம் கொண்ட வார்த்தையானது மிகப்பெரிய உரையாடலை அந்த அரங்கில் முன்வைத்திருந்தது.

நிகழ்வு மிகவும் வித்தியாசமாக, நமது இலக்கியக் கூட்டம் போன்ற இறுக்கம் இல்லாமல் நடந்து முடிந்தது.

அலங்காரம்
************

ஓவியர் ஸ்ரீநிவாசனோடு கேட்டுக் கொண்டிருக்கையில் அலங்காரம் எப்படி கலையுணர்வாக மாறுகிறது என்ற transformation தான் இந்த நூலின் அடிநாதம் என்று தெரிய வருகிறது. அதற்கான யுக்தி தான் - இது போன்ற ஒரு உரையாடலைத் திட்டமிடுவது, அப்படி வந்திருக்கும் இந்த புத்தகம் தான் தான் இது போன்ற ஒரு அரங்கத்தை சாத்தியப்படுத்தியது. அதுவும் சரியான பதில் தான் வெற்றிகரமாக முடித்து விட்டனர் அந்த இரு நண்பர்களும்.

இவ்வளவு பேர் அலங்காரம் பற்றிப் பேசினார்களே என்று யோசிக்கும் பொழுது, கண்டிப்பாக இதன் ஆசிரியர் என்பவர் இது போன்ற ஒரு உரையாடல் உருவாகும் என்று எப்படியும் எதிர்பார்த்திருப்பார்கள் என்று தோன்றியது. அலங்காரம் பற்றி தனது ஏற்புரையில் ஃநிவாசன் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பும் கூடவே இருந்தது, உலகம் முழுக்க சுற்றி வந்தாலும் தன் நிலத்தின் மக்கள் தரும் அன்பும் மரியாதையும் சேர்ந்து உணர்ச்சி வயப்பட்ட நிலையில் நன்றிவுரையாக முடித்து விட்டுக் கீழிறங்கி விட்டார். கடைசியாக வெளியே வரும் பொழுது, பாலசுப்ரமணியன் அவர்களிடம் சென்று என்னை சுய அறிமுகம் செய்யும் பொழுது, அவர் என்னை முன்னமே அறிந்திருந்தார் (ஸ்ரீநிவாசன் சார் மூலம் தான்) என்பது எனக்குக் கிடைத்த ஒரு பரிசாகவே தோன்றியது. கீழே இறங்கும் போது தான் சிந்தித்தேன், அங்கே தேனீரோடு வழங்கப்பட்ட இனிப்பு மற்றும் சமோசாவும் தான் இந்நிகழ்வை மிக அழகாக அலங்கரப்படுத்தியிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அடடா இந்த ஏற்பாட்டை யாரும் கவனிக்கவில்லையா என்று வியந்தேன்

இந்திய ஓவியச் சூழலில் இருக்கும் பிரதான ஓவியப் பள்ளிகள் என்று எடுத்துக் கொண்டால் பாம்பே, வதோதரா(குஜராத்) மற்றும் வங்காளத்தின் பாரம்பரியமிக்கப் பள்ளிகளே, இந்த தென்னிந்தியக் கலைஞர்களின் (madras movement)  விழாவுக்கு அலங்காரம் செய்வது போல் - முறையே பாம்பே சமோசா, வதோதரா மில்க் ஸ்வீட் ஒன்று(டோட்லாவோ கோட்லாவோ பெயர் அடிக்கடி மறந்து விடுகிறது) மற்றும் பெங்காலி ஸ்வீட்டான ட்ரை ஜாமூன் என்று அலங்காரப் படுத்தியவற்றை நான் உணர்ந்து கொண்டேன். அலங்காரம் எனும் சொல் இத்தனை கலைநயம் மிக்கதா என்று சந்தோஷத்துடன் உறங்கச் சென்றேன்..

What A Sweet Memories

ஜீவ.கரிகாலன்




புதன், 27 மார்ச், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி 16- ஊடகமும் முகநூலும்



*விஸ்வரூபம் பட விவகாரத்தில் செய்திப் பிச்சைக்காக இங்கேயே டெண்ட் அடித்த ஊடகங்கள், ஈழம் விசயத்தில் மாணவர்களின் உணர்வையும், போராட்டத்தின் அம்சங்களையும், கோரிக்கைகளையும் ஒளிபரப்பியதா? இன்று IPL கை வைத்ததும் குதிக்கின்றன..






*கூடங்குளம் பற்றி பேசினால் இந்தியாவின் மின் பற்றாக்குறை எனவும், மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்து தமிழக மீனவர்களின் பிரச்சனை என்று பெரிதாகக் கண்டு கொள்வது இல்லை, இன்று வரை.அதிலும் கேரள் மீனவர்களுக்காக மத்திய அரசும், ஊடகங்களும் எடுத்துக் கொண்ட அக்கறையை நம் நிலையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் வருகிறது.






*இந்து, துக்ளக் போன்ற பத்திரிக்கைகளையும் அதன் செய்திகளையும் CNN IBN பயன் படுத்துகிறதோ, ஏன் இருக்காது? CNN-IBN Chief News Editor சுஹாசினி ஹெய்டர் மாண்புமிகு சுனாசானாவின் மகள் என்பது போதுமான காரணம் தானே..






*NDTV, CNN-IBN போன்ற செய்தி வலைதளங்களில் பார்க்கும் பொழுது தான் தெரிகிறது. பிற மாநிலங்களில் தமிழன் மீது இலங்கை வீரர்கள் சென்னயில் ஆடுவதற்கு தெரிவித்த எதிர்ப்பையும் தொடர்ந்து வட இந்திய ஊடகங்களும், வட இந்திய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் களில் தமிழர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள்.






*எல்லாவற்றிற்கும் மேலே இருக்கும் தலையாயப் பிரச்சனை நமது மாநிலத்தின் நிலை சன் டீவீ ஒரு அப்பட்டமான வியாபாரி, மற்ற எல்லா சேனல்களும் துதி பாடிக்ளாகவே வலம் வருகின்றனர். புதிய தலைமுறை, முகநூலைத் தவிர வேறு வழிகள் இல்லை செய்திகள் பரப்பிட.




* முகநூலை சரியாகப் பயன்படுத்திய வேண்டிய காலம் இது எனபதை முதலில் உணர வேண்டும்.


*வெறும் வணிக நோக்கினை மனதில் வைத்து தமிழர்களையும் , அவர்கள் நலன்களையும் சிறுமை படுத்தும் ஊடகங்கள் , தமிழ் தேசியவாதிகள் மற்றும் காங்கிரஸை விட பிரிவினை கோரவேண்டிய நிர்பந்தத்தை திணிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை


* தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளைப் புறக்கணித்து வரும் வட இந்தியச் செய்தி ஊடகங்களுக்கு இது போன்ற நிகழ்வுகளுக்கு எதிர்வினை, கருத்துகள் பதிவதன் மூலம், இன்னும் நாம் இந்தியாவின் தென் திசை மூலையில் தான் இருக்கிறோம் என்று தெரியப் படுத்துவோம்....


எகிப்தில், லிபியாவில், ஈரானில் எல்லாம் புரட்சி வர முதன்மையானக் காரணமாக முகநூல் இருந்தது எனும் செய்தி, டில்லி பெண் பாலியல் பலாத்காரத்தில் எழுந்த போராட்டத்தில் நாமும் பார்த்திருப்போம். இன்று மாணவர்கள்  போரட்டத்திற்கு நாமும் உதவி செய்துக் கொண்டிருக்கிறோம், இதனால் தான் முகநூல் எனும் மாபெரும் ஊடகத்தை சரியான வழியில் பயன்படுத்துதல் அவசியமாகிறது. அதே சமயம் இணையம் வாயிலாகக் கொண்டு செல்லும் செய்தி மிக எளிதாகவும் சென்றடைகிறது... வாருங்கள் பதிவிடுவோம்...................







வெள்ளி, 15 மார்ச், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி 15 - கவர்ச்சி உடையும் தடையும்


டெல்லியில் நேர்ந்த பாலியல் வன்முறை சம்பவத்திற்குப் பின் இப்பொழுது தொடர்ந்து பெண்கள் மீதான் தாக்குதல்கள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பொது மக்களின் மீதும் இந்தப் பிரச்சனையைப் பற்றி ஒவ்வொருவரும் அலச வேண்டிய, கருத்து சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை சூழலாக ஊடகங்கள் உருவாக்கி விட்டன. பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பரவலாக எல்லோருமே கருத்து ஒன்றை வைக்கும் அளவிற்கு சூழல் உருவாகிவிட்டது.

இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு பல பிரிவுகள் தங்கள் கொள்கைகளை தங்கள் வழியில் பரப்புகின்றனர். ஒரு பக்கம் நீதி கேட்டு இது போன்ற குற்றச் செயல் புரிவோருக்கு அதிகப் பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்கிற போராட்டம், இன்னொரு பக்கம் சூழலின் கருவியாகத் தான் சமூகக் குற்றங்கள் நடைபெருகின்றன. ஆதலால், மரண தண்டனையை இவர்களுக்கும் வழங்கக் கூடாது என்று மற்றொரு புறம். பெண்களுக்கான பாதுகாப்பை முன்வைத்து மத்திய அரசும் தனி சட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்தப் பிரச்சனை ஏற்படக் காரணங்களை விவாதிக்கும் பொழுதெல்லாம் மிக முக்கியமாக ஒரு சர்ச்சை வந்து விடுகிறது அது தான் உடைகள். உடைகள் விசயத்தில் வரும் விவாதங்கள் தான் அதிகமான அளவு முக்கியத்துவம் பெருகிறது.

Don't Teach Me How To Dress, Tell your Son Don't Rape" என்கிற அட்டைகளை தாங்கியிருக்கும் பெண்ணிய வாசகங்கள் எவ்வளவு தூரம் சமகாலத்தின் தீர்வு என்று எடுத்துக் கொள்ள முடியும் என்கிற வினாவிற்கு பெண்ணிய வாதிகளிடமிருந்து நடைமுறைக்கு தக்க பதில் இன்னும் வரவில்லை. நாகரிகமடைந்துவிட்ட சமூகம் என்று கல்வி, அறிவியல், விஞ்ஞானம், தொழிற்நுட்பம் என இந்தக் கணினி யுகத்தில் எந்த பெற்றோரும் தம் மகனை பாலியல் வன்முறை செய்ய கற்றுக் கொடுப்பதில்லை.Tell your Son How To Treat Women”- சமூகத்தில் ஒருவன் பெண்களிடம் வன்முறை செய்யத் தூண்ட எத்தனைக் காரணங்கள் வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றன?? சினிமா, ஊடகங்கள், மதுக்கடை, போதைப் பொருள், கூடாநட்பு, இந்தப் பட்டியலில் ஆபாசமான உடைகளை மட்டும் சேர்க்கலாமா??

இது போன்ற கேள்விகளுக்கு, இரு தரப்பு பதில்களும் வருமுன்னே பெண்களின் உடைபற்றி பேசுபவர்களை ஆணாதிக்கவாதி, நாகரிமற்ற, கிராமவாசிகளாக, காட்டுமிராண்டிகளாக, பழமைவாதிகளாக சித்தரித்து தடுக்கும் விமர்சனங்கள் வந்து விடுகின்றன. அப்படி தடுக்கும் பொழுது முக்கியமாக மேலை நாட்டு பெண்ணியக் கருத்துகளும், அவர்கள் உடைகளுக்கான சுதந்திரம், அரசியல் பங்களிப்பு என்று கதைகட்டவும் ஆரம்பிக்கின்றனர்.  


பல புள்ளிவிவரங்கள் வாரியாக பெண்கள் அதிகம் சுதந்திரமாக நடமாடும் தேசங்கள் என பெண்ணியவாதிகள் கொண்டாடும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பெண்கள் மீதான வன்முறைப் பட்டியல் மற்றும் புள்ளிவிவரங்களைப் பார்க்கும் பொழுது அவர்கள் கூற்று தவறாகிப் போகிறது.
  1. அமெரிக்காவிலுள்ள மிசௌரி மாகாணத்தில் பெண்களின் மேலாடை கண்ணியமாக இருக்க வேண்டும் என்று.Dress Code வகுத்துள்ளது –பிப்ரவரி -7
  2. இங்கிலாந்தில் உள்ள ஹெர்ட்ஃபோர்ட்சைட் மாஹாணத்தில் மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியர்கள் உடையில் ஆபாசம் இருந்தால் பணிநீக்கம் செய்யப் படுவர் – டெலிகிராஃப் செய்தி (மேலும் அவர்கள் டாட்டூ, முடிகளை கலரிங் செய்வது போன்றவையும் தடை செய்யப் பட்டது)
  3. சென்ற வருடம் US ஏர்லைனில் லாஸ்வேகஸில் இருந்து நியூயார்க் புறப்பட்ட ஒரு பெண்மணிக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.- தி சன், இங்கிலாந்து
  4. சென்ற வருடம் நடந்த ஐரோப்பிய செஸ் போட்டியில் கவர்ச்சியாக ஆடை அணிந்து வர தடை விதித்தது
  5. இந்த செய்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, உலகப் புகழ் பெற்ற இசைக்கான விருது வழங்கும் விழாவான கிராமி விருது வழங்கும் விழா இந்த வருடம் ஜெர்மனியில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பெண்களுக்கான ஆடை நிபந்தனைகள் மிகப் பெரிய பட்டியல். அவர்கள் மேலாடை, ஆடைகளின் இறுக்கம், முதுகுப் பகுதி, பின் பகுதி, கால்கள் என ஒவ்வொரு உடைக்கும் வரையறை வகுத்திருக்கிறது – சேனல் 2 (பார்க்க கீழே பெட்டிச் செய்தி)
மேற்கண்ட இந்தப் பட்டியலைக் கொண்டு மேலை நாடுகளில் பெண்களுக்கான பாதுகாப்பின்மையை அடையாளம் காண முடியாது. ஆனால் ஆடைகளால் ஏற்படும் பெண்களுக்கான மரியாதையைக் காணலாம். ஆபாசமாக, பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமாக ஆடை அணிவதை மரியாதை குறைவாகக் கருதும் நிலைமை இன்று உலகம் முழுக்கவும் இருக்கிறது

பெண்களுக்கான புதுப் புது தியரிகளை உருவாக்கி பெண்ணியத்தை மிகவும் கடினமான வேதியல் சமன்பாடு போல் மாற்றுகின்றனர். ஆடைகளைப் பற்றி ஒருவன் குறை கூறும் பொழுது அவர்களிடம் சில கேள்விகள் எழுகின்றன :
1.  “உமக்கும் சகோதரிகள் இருந்து, அவர்கள் ஆடைகளால் கூட நீ காமுறுவாயா?? என்றும்,
2. கிராமத்திலும், நாகரிகமாக – கண்ணியமாக உடையணியும் பெண்கள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனரே அதற்கு என்ன காரணம்?? எப்படி நீங்கள் உடைகளைக் காரணம் கேட்கலாம்? என்ற கேள்வியை முன் வைக்கின்றனர்.


உண்மை தான் இப்படிப் பார்க்கும் பொழுது பெண்கள் மீதான வன்முறைக்கு உடைகளை மட்டும் சொல்ல முடியாது தான். அதனால் தான் ஒரு காலத்தில் நம் நாட்டில் வேத பாட சாலைகளில் இருந்து, சங்கங்களிலும், அரசவையிலும் பணிபுரிந்து வந்தப் பெண்களை அந்நியப் படையெடுப்பிற்குப் பின் வீட்டில் பூட்டி வைக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் பெண்கள் மீதான வன்முறையை உடல்ரீதியான பலாத்காரம் என்று நினைத்துக் கொண்டால் உடைகளைக் குற்றம் சொல்வதை தவிர்க்கச் சொல்லும் பெண்ணியக் கூற்றுகள் சரியானவையே.

ஆனால் ஒரு பெண் மனதளவில் எத்தனை விதமாக வன்முறைக்கு ஆளாக்கப் படுகிறாள். ஆபாச/கவர்ச்சி உடை அணியும் பெண்களை மிக மோசமாக எப்படியெல்லாம் சித்தரிக்கின்றது இன்றைய ஊடகங்கள், ஒரு ஆணிற்கு சவரம் செய்யும் பிளேடு விளம்பரத்திலிருந்து, டியோடரண்ட், சோப்பு, ஆடை, கார், பைக் என நுகர்வு மாயையை உருவாக்க ஆபாசமாக உடையணிந்த பெண்களை உபயோகப் படுத்துவது எவ்வளவு பெரிய வன்முறை? ஒரு கவர்ச்சியான உடையணிந்த பெண்ணுடன் ஒரு சகோதரனோ, நண்பனோ செல்லும் பொழுது கிடைக்கும் மோசமான கருத்துகள் வன்முறையில்லையா?? உரிமை தான் பிரதானம் என்று கோரும் பெண்களுக்கு மரியாதை தேவையில்லாத ஒன்றா?.

இப்பொழுது உளவியல் ரீதியாக பார்க்க ஆரம்பித்தால், உடைகளுக்கும் பாலியல் தூண்டல்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது என்பதை மறுக்கவே முடியாது. உடல் பாகங்களை தெளிவாக, மெல்லியதான துணி வழியூடே காட்டும் ஆடைகளைத் தேர்வு செய்வதன் உளவியல் என்ன? பெரும்பாலும் வெப்பத்திலேயே வாழும் நம் நிலத்தில் ஜீன்ஸ் துணியின் தேவையென்ன? அதுவும் மிக இறுக்கமான ஆடைகளின் வழியே நாம் தேடும் அங்கீகாரம் என்ன? உயர் அந்தஸ்த்து கொண்ட மக்களைப் பார்த்தும், சினிமா, டீவியின் வழியாகவும் உந்தப்பட்டு அவர்களைப் போலவே நாமும் வலம் வரவேண்டும் என்கிற எண்ணம் வருகிறது. அதாவது இன்றையப் போலி நவநாகரிக உலகில் அழகியல் பற்றியத் தவறான கூற்றுகளும், கற்பிதங்களும் தான் உடைகளில் கவர்ச்சியையும், முகத்திலும்,அகத்திலும் வேஷம் கட்டக் காரணமாகிறது.


ஆபாசக்/கவர்ச்சி உடைகளை பொது இடங்களிலும், சமூக விரோதிகளின் முன்னேயும், குடிகாரர்கள் மத்தியிலும் அணிந்திருக்கும் போது நம் பாதுகாப்புக்கு நாம் தானே கேடு விளைவிக்கும் பிரதானக் காரணம்.எப்படியிருப்பினும் ஒரு பெண்ணுக்கு தொல்லைகள் தரும் அதிகாரத்தை எந்தச் சமூகமும் அங்கீகரிப்பதில்லை தான், ஆனால் அவர்களாகத் தொல்லைகளைத் தேடிச் செல்வதை தடுப்பதில் தவறில்லையே. ஏனென்றால் இன்றைய சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு, சமூகத்தோடு சேர்ந்து அவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும்


கிராமி விருதுக்கான ஆடை நிபந்தனைகள்:-

Please be sure that buttocks and female breasts are adequately covered. Thong type costumes are problematic. Please avoid exposing bare fleshy under curves of the buttocks and buttock crack. Bare sides or under curvature of the breasts is also problematic. Please avoid sheer see-through clothing that could possibly expose female breast nipples. Please be sure the genital region is adequately covered so that there is no visible "puffy" bare skin exposure. 

Please avoid commercial identification of actual brand name products on T-shirts. Foreign language on wardrobe will need to be cleared. OBSCENITY OR PARTIALLY SEEN OBSCENITY ON WARDROBE IS UNACCEPTABLE FOR BROADCAST. This as well, pertains to audience members that appear on camera. Finally, The Network requests that any organized cause visibly spelled out on talent's wardrobe be avoided. This would include lapel pins or any other form of accessory.

Sources:


ஜீவ கரிகாலன்

நன்றி

வியாழன், 25 அக்டோபர், 2012

பஜ்ஜி சொஜ்ஜி-4

சப்தங்கள்


நீங்கள் வாசிக்கப் போவது கவிதை என்று முதலில் நம்பிவிடுங்கள்

தனிமை

தவிர்க்க முடியாத
நிசப்தப் பேரிரைச்சல்
காதைப் பிளக்க,
செவிடாகிப் போனேன்....

தனிமையின் வாதையை சொல்லிப் போகும் இந்த கவிதை நிசப்தத்தினை ஒரு இரைச்சலாக, பேரொலியாக பாவிக்கிறது. சப்தங்களைப் பற்றிதான் இந்த பஜ்ஜி சொஜ்ஜியில் சுவைக்கப் போகிறோம்.

சப்தங்கள், ஒலி, ஓசை, இரைச்சல், ஸ்வரம், இசை, பாடல், மொழி என பல பெயர்கள், பயன்கள், பரிமாணங்கள் என நம் வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் சப்தங்களுடன் பிண்ணிப் பினைந்திருக்கின்றன. ”ஆதியில் ஒசை இருந்தது”!! ஏன்? மொத்த பிரபஞ்சமும் ஒரே ஒசையாக அக்ஷ்ரமாக சொல்வது ப்ரணவ மந்திரமாய் ஒலிக்கின்றது என்று வேதம் கூருவதாக சொல்லுவர். சூக்குமமான சப்தங்கள் பற்றி பேசுவது ஒரு புறம் இருக்கட்டும், நம் அன்றாடம் கேட்கும் சப்தங்களின் தனித்தன்மை பற்றி ஏதாவது பேசுவோம்.

நமது ஊர்களில் டீக் கடைகளிலும், பரோட்டா, பிரியாணிக் கடைகளிலும் கடைக்காரர்களின் வியாபரத்தில், அவர்களுடைய பணியின்போது நாம் சில ஓசைகளை கவனிக்கின்றோமா ? அதாவது டீ மாஸ்டர் டீயை ஆற்றிவிட்டு, கிளாசை அவர் பாய்லரை வைத்திருக்கும் ட்ரேயில் ஒரு தட்டு தட்டுவதும், பிரியாணிக்கடையில் சிக்கன் பீஸ், முட்டை வைத்து மேலே பிரியானியை அடிக்கும் ஒவ்வொரு இடைவெளியிலும் அந்தப் பாத்திரத்தை தட்டுவதும்,  வெறும் கல்லில் கொஞ்சம் தண்ணீரை தெளித்து சில ஈர்க்குச்சிகளால் வாரிவிட்டு வெறும் இட்லியுடன் எழுந்துவிட எத்தனிக்கும் வாடிக்கையாளாருக்கு குறைந்தபட்சம் ஒரு ஆஃப் பாயிலாவது வாங்க வைப்பதும், குழந்தையோடு கடற்கரைக்கோ;கோயிலுக்கோ செல்லும் பொழுது குழந்தைக்கு கேட்குமாறு தந்திரம் செய்யும் ஐஸ்கிரீம், பஞ்சுமிட்டாய், பலூன் வியாபாரிகளின் சைக்கிள் ஹாரன்களும், பலூன் கீரல்களும் நாம் அன்றாடம் சந்திப்பவையே, கடினமான தொழில் செய்கின்றோமே என்று வெறுமனே வாழ்க்கையை நொந்துக் கொண்டே இருக்காமல், ஒரே ஒரு அற்புத நிமிடத்திற்காக வேண்டிக் கொண்டே சோம்பேறியாகவும் இல்லாமல், அதே சமயம் தங்கள் இருப்பையும், நம்பிக்கையையும் உலகிற்கு தெரியப் படுத்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது. முதன் முதலில் உங்கள் வீட்டில் ஒலித்த ரேடியாவின் கானம் தந்த ஈர்ப்பு இன்று லட்சம் பாடல்களை மெமரியில் வைக்கும் கேட்ஜட்டுகளில் கண்டிப்பாய் இராது தானே?? வைரமுத்து தன் வரிகளில் சொல்லும் “பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம் என்ற வரிகளில் பாருங்கள் - எவ்வளவு எளிதாக ஒரு உளவியல் செய்தி இருக்கிறது? வெறும் அற்பமான சப்தம் நம் பசிக்கும் நேரத்தில் சங்கீதமாகும் ரசவாதம் என்று.

ஆனால் புதிய கரும்பலகையில் சாக்பீஸால் கீறும் கணித வாத்தியாரின் செயலைப் போல அருவருக்கச் செய்யும், வெறுக்க வைக்கும் சப்தங்களும் அன்றாட வாழ்வில் நிறைய இருக்கின்றன, மஞ்சள் விளக்கைக் கண்டு நிறுத்தக்-கோட்டோரம்(stop line) நம் இரு சக்கர வண்டியை நிறுத்தும் போது, நம் பின்னால் வந்து அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் எழுப்பும் சப்தமான ஒலி மிகவும் கண்டிக்கத் தக்கது. அது போல, பொது இடங்களில் கொரியன் மொபைல்களில் பெரும்பாலும் கானாப் பாடல்களை லவுட் ஸ்பீகரில் வைத்துக் கொண்டு செய்யும் வாலிப மந்திகளின் பேரிடர்கள் மிகக் கொடுமையானது. சில பெரிசுகளும் அதே போல MGR ரொமான்ஸ் ,ரவிச் சந்திரன் ரொமான்ஸ் பாடல்களைக் கேட்பதும் அதே அளவுக் கொடுமையானது. பக்தி என்ற பெயரில் போடும் காட்டுக் கூச்சல்களை வைத்து கன்னாபின்னாவென்று டெசிபல்கள் எகிறும் பிரார்த்தனைப் பாடல்கள் பல இடங்களில் (முக்கியமாக பொது இடங்களில்) ஒரு இடரே1 (இது சர்வ சமயத்திற்கும் பொருந்தும்).

*எங்கேயாவது கேட்கும் ஆம்புலன்ஸ் சைரனில் எல்லாம், ந்ம்மையும் அறியாது ஒரு நடுக்கமோ, பயமோ வந்துவிடுகிறது, அடுத்த விநாடி நம்மை எந்த பாதளாத்திற்கும் கொண்டு செல்லும் வலிமை மிக்கது என்று எண்ணும் அதே நேரம், காதில் கேட்டுக் கொண்டே இருக்கும் சைரன் ஒலியில் ஆம்புலன்ஸில் செல்லும் யாரோ ஒருவருக்கு பிரார்த்தனை என்ற மலர் எடுத்து வைக்க நம்மைப் பணிக்கும்.
* சினிமாவில் ஹீரோயிசத்தைக் கொண்டுவர உபயோகப் படுத்தும் “விஷ்”, “ஷ்க் என்கிற வாயுச் சப்தங்களும், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றில் நவநகாரிகத் தம்மிள் பேசும் தொகுப்பாளார்களின் மொழியும் நான் அறவே வெறுக்கும் சப்தங்கள்.
*உலகம் அழியப் போகிறது, லாஸ்ட் சான்ஸ், கலிகாலம் போன்ற பயமுறுத்தி மதக் கேன்வாஸ் செய்யும் சப்தங்களுக்கு நான் செவியெடுப்பதில்லை. கரை படியாத கை, லட்சியம், அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, வாழ்க ஒழிக கோஷங்களைக் கேட்பதற்கு நான் காது கேளாதவனாகவே போகலாம்.


நமது கிராமத்தின் விடியல் அன்று எப்படியெல்லாம் இருந்தது? நீரின் சலசலப்பு, பறவைகளின் கூச்சல், மெல்லியக் காற்று எழுப்பும் புழுதி ஒலி,
காலையிலேயே வேலைக்கு செல்லும் சைக்கிள் பெல்கள், சிறிய தட்டிச் சுவர்களுக்குள் கேட்கும் குளியல் ஓசைகள், தெரு நாய்களின் கொட்டாவி அல்லது சுரம் குறைந்த குரைப்பு, பால் சுரந்து கொண்டிருக்கும் பசுமாட்டின்  “மா..சப்தம் , பால் காரனின் பாத்திர இழுவை சப்தம், பேருந்துகளில் - டி.எம்.எஸ் பக்திப் பாடல்கள், தேய்ந்துப் போன கிராமத்து கோயில்களின் சுப்ரபாதமும், தேவாலய மணியும், ஆல் இண்டியா ரேடியோவில் நேரம் அறிவிப்பு “ஆறு மணி, ஐந்து நிமிடம்என்று சொல்லியவுடன் ஒலிக்கும் நாகூர் ஹனீபாவின் “இறைவனிடம் கையேந்துங்கள்பாடலும் எல்லாமுமாய் சேர்ந்து ஒரு நாளை எப்படி இனிமையாகத் துவக்கியது அந்நாளில் என்று வியக்கிறேன். எத்தனை துயரங்களில் கிராமம் உறங்கச் சென்றாலும் அதற்கு ஒவ்வொரு விடியலும் உற்சாகமே.

முடிந்தால் ஒரு ஞாயிறு அதிகாலையிலேயே நகரத்தின் பார்வையில் இருந்து தொலைந்து ஏதாவது ஒரு கிராமத்திற்கு சென்று அல்லது ஒரு இயற்கையான சூழ்நிலையில் விடியலின் சப்தங்களைக் கேட்டு வருவோமா??

சென்னைக்கு மிக அருகில் வேடந்த்தாங்கல், புலிக்காட் ஏரி ஏன் வேளச்சேரியை அடுத்து இருக்கும் சதுப்பு வனக் காடுகளில் (இப்பொழுது குப்பைகளின் புகலிடமாகவும் இருக்கும்) வந்து செல்லும் பறவைகளிடம் எப்போதாவது விடியலின் செய்தியை கேட்டு அனுபவித்திருக்கிறீர்களா? 

பஜ்ஜி-சொஜ்ஜி
இன்னும் சுவையாக அடுத்த பாகத்தில்
ஜீவ.கரிகாலன்

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

ANTIDISESTABLISHMENTARIANISM (பஜ்ஜி சொஜ்ஜி -3)



ANTIDISESTABLISHMENTARIANISM

          எனது கல்லூரிக் காலத்தில், இரண்டாம் ஆண்டின் ஒரு நாள், எங்களது வேப்பங்காய் பாட வேளையான ஆங்கில வகுப்பில், எங்களை எப்பொழுதும் ஏளனமாகப் பார்க்கும் ஒரு ஆங்கிலப் பெண் விரிவுரையாளர், ஆங்கிலத்தின் மிக நீளமான இந்த வார்த்தையை எழுதி எல்லோரையும் வாசிக்கச் சொல்லி அங்கலாய்த்தார். இதை வாசித்து தற்கொலை முயற்சி பண்ணத் துணிவற்று, நாங்கள் பேசாமலேயே நின்றபடி இருந்தோம்.  வழக்கம் போல, இதை சாக்காக வைத்துக் கொண்டு சயின்ஸ் ஸ்டூடண்ட்ஸ் தான் உயர்ந்தவர்கள், ஆர்ட்ஸ் என்பதே வெத்து வேட்டுகள் என்று எங்களை வெறுப்பேற்றினார். இவர்கள் போன்ற ஆசிரியர்கள் தான் இது போன்ற ஒப்பிடுதல் மூலம் மேலும் ஒரு பிரிவினையை இந்த சமூகத்தில் உண்டாக்குகிறார்கள், அது கல்லூரியோடு நின்று விடுவதில்லை. கலை அறிவியல் கல்லூரிகளில் எல்லாம் தமிழ் இலக்கியம், வரலாறு, வணிகவியல், பொருளாதாரம் படிக்கும் மாணவர்களுக்கு இது போன்ற அனுபவங்கள் சாதாரணம்.

இதில் அந்த வார்த்தைக்கு அர்த்தம் கேட்கும் போது அந்த விரிவுரையாளர் திணறியது வேறு கதை.

     இதே போன்ற ஒரு வேறுபாட்டை ஒரு நண்பன் தான் வேலை பார்க்கும் வங்கியில் அனுபவிப்பதாகச் சொல்கிறான். வங்கி வேலை என்பதால் கிளெரிகல் வேலைகளில் கூட எங்களுடன் போட்டிக்கு வந்து பணியில் அமரும் பொறியியல் படிப்பு படித்தவர்கள் ஒரு அணி சேர்ந்து அரசியல் செய்கின்றனர் என்று நொந்தான். பொறியியல் படிப்பிற்கும் வங்கி குமாஸ்தா வேலைக்கும் என்னடா சம்பந்தம்?, என்று உன்னுடன் அவர்கள் வந்து அமர்ந்தார்களோ? அன்றிலிருந்து They are no more Engineers அதை நீ பொருட்படுத்தாதே!! என்று சொன்னேன். கரூரில் எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார், அவர் அந்த நகரத்தின் அரசு மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவர். பங்கு வர்த்தகத்தில் இருந்த ஆர்வம் காரணமாக அவர்  முழுவதுமாக பணியை விட்டு வர்த்தகத்தில் ஈடுபட, தன் பெயருக்கு முன்னால் போடும் “DR” எனும் பட்டத்தை துறந்து விட்டார். பெயருக்குப் பின்னால் ஜாதியையே தூக்கி எறிந்தாயிற்று, உபயோகப்படா(இருந்தால்) படிப்ப மட்டும் பெயரோடு சேர்த்து வைத்து என்னதான் சாதித்திட ?

வங்கி வேலை கூட பரவாயில்லை பத்தாம் வகுப்பை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட கிராம நிர்வாக அதிகாரித் தேர்விற்கு ஆயிரக் கணக்கில் பொறியியல் படித்த இளைஞர்கள் எழுதும் நிலையை பார்க்கும் போது நம் கல்வித் தரத்தை என்ன்வென்று சொல்ல?

***********************************************************************

திரையுலகில் காணாமல் போன நடிகர் வடிவேலுவைப் பற்றிய புலம்பல்கள் இப்போது ஆங்காங்கே ஒலிக்க ஆரம்பிக்க, நாமும் கொஞ்சம் சீரியஸா எதாவது அவரைப் பற்றி எழுதனும் என்கிற ஆசை சில நண்பர்களோடு நடந்த உறையாடல்களில் முகிழ்ந்தது. வடிவேலுவின் பஞ்ச் வசனங்கள் சபைக்குறிப்பிற்க்கேற்ற வார்த்தைகளாகவும், மேலாண்மை யுக்திகளாகவும் பல நிறுவனங்களில் இன்று இருப்பதைக் காணலாம். அதில் ஒருவித மன இறுக்கங்கள் தளர்வதற்கும், அடுத்த வேலைக்கு நம்மை உடனேயே இட்டுச் செல்லவும் உதவுகிறது என்பது மிகையல்ல.

ஆணியப் புடுங்க வேண்டாம்எனும் வசனம் பல கார்ப்பரேட் மீட்டிங்களில் ஒலிப்பதைப் பார்க்கலாம். குறிப்பிட்ட ஒரு பணியை, செயலைத் தவிர்ப்பதற்க்கும், கைவிடுவதற்க்கும் தேவைப்படும் நீண்டதொரு காரணத்திற்கு/விளக்கத்திற்கு மாற்றாக அந்த மூன்று சொற்களைப் பயன்படுத்த, பல நேரங்களில் சுமூகமான விளைவுகளை மட்டுமே தந்திருக்கும். இது போலவே சில உயர்/மேலதிகாரிகளிடம் வாங்கும் வசவை சக ஊழியனோடு பகிர்ந்து கொள்ள “why blood, same blood என்கிற வசனத்திலோ, சேல்ஸ் டார்கெட்டிற்காக தன்னைக் கண்டபடி திட்டும் மேனஜர், அதற்கு முந்தைய நாள் தன்னோடு சேர்ந்து உற்சாக பானம் அருந்தியதை நினைக்கும் போது “அது வேற வாய்!என்று தன் மேலாளரை நினைக்கவும், “ரைட்டு விடுஎன்று தன் மீது விழும் அவமானங்களைத் துடைத்துவிட்டு அடுத்த மாத டார்கெட்டிற்கு நகர்வதும் இன்று தமிழ் கூறும் நிறுவன உலகில் சாதாரணமே. மிக முக்கியமாக எப்படிப்பட்ட இழப்போ அல்லது நஷ்டமோ நம் வியாபரத்திலோ, பணியிலோ சந்திக்க நேரிட்டாலும் “அய்யோ வடை போச்சே!” என்று சொல்லும் பொழுது அந்தக் கவலைகள் நீங்கி சாந்தி கிட்டுவதும் வழக்கம். இது போல பலரிடத்தில் இவரது மேனரிசங்கள் சோக நிலையில், காதல் பார்வையில், ஏமாற்ற நிலையில் பிரதி எடுக்கப் படுகிறது.

  மேலே சொன்ன இரு பத்தியில் நான் சொன்னவைகளோடு உடன்பட்டால் மட்டும் கீழே தரப்பட்ட இரண்டு விசயங்களைப் படியுங்கள், இல்லையெனில் இந்த பத்தியை விடுத்து அடுத்த பத்திக்கு செல்லலாம். இதன் படி சொல்வதெனில்,

1.தமிழ் சினிமா ரசிகர்களாகிய நாம் வடிவேலுவை எவ்வளவு தூரம் இழந்திருக்கிறோம்?.
2.வடிவேலுவின் வசனங்கள் நம் பணிச்சூழலில் உதவுவது உண்மை தான் என்றால், இத்தனை அறிஞர்கள், யோகிகள், மேதைகள் வாழ்ந்த நாட்டில் உருப்படியாக எந்த ஒரு முன்னேற்ற சிந்தனையும் நாம் கற்றுக் கொள்ளவில்லை, குறிப்பாக சுயமுன்னேற்ற, மேனேஜ்மெண்ட் புத்தகங்களால் நாம் வாழும் பணிச்சூழலுக்கு நமக்கு பிரயோஜனம் என்று  எதுவும் பெரிதாய் இல்லை.
            
               “அப்படி சொல்லுடா என் கன்று
****************************************************************************

கவிஞர் யவனிகா ஸ்ரீராமிடம் பேசும் வாய்ப்பு கிட்டிய போது, அவர் தன்   நண்பரான கவிஞர் ஐய்யப்ப மாதவனின் சொந்த ஊரான நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பர் அடக்கம் செய்யப்பட்ட நினைவுப் பூங்காவில் இருந்தார், ஆக கிடைத்த வாய்ப்பில் கம்பரைப் பற்றிய பேச்சை எடுத்தேன். சடையப்ப வள்ளல் ஆதரவிலும், பின்னர் சோழ மன்னனின் ஆதரவிலும் வாழ்ந்து வந்ததாகவும் சொல்லும் வரலாற்றில் அவர் இறுதிக் காலங்கள் பற்றிய குறிப்பு இல்லை என்றும்? எதற்காக இந்த ஒரு மாபெரும் கவிஞன் தன் இறுதிக் காலத்தை தன் ஊர், அரண்மனை, பரிசில், நல்வாழ்வு என எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கி வாழ்ந்தான்? என்று அவர் சொல்லும் போது கம்பன் கூட சமகால கவிஞர்களின் இன்றைய நிலையில் இருந்திருக்கிறானா என்ற கேள்வி எனக்குள் வந்தது

யவனிகாவின் கட்டுரைத் தொகுப்பான “நிறுவனங்களின் கடவுள்நமக்குக் கிடைக்கப் பெற்ற மிக முக்கியமான புத்தகம். நவீனம், அதன் அரசியல், மொழியின் அதிகாரம் பற்றி அதிகப் பரிச்சயம் வேண்டி சிந்தனைத் தெளிவு தேடும் இளம் படைப்பாளுகளுக்கு அவருடைய இந்த எழுத்துகள் மிகவும் உதவும். பெரிய அளவில் இன்னும் பேசப்படாத இந்த புத்தகம் சமூகவலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டால், புதிதாக எழுதுபவர்களுக்கு மிகவும் பயன்படும்.

வாசகனாக கவிதைகளை அனுகுதல், அதன் பிரச்சனைகள் குறித்து சின்ன சின்ன கட்டுரைகளில் மிக எளிமையான உதாரனங்களில் தன் வலைதளத்தில் சொல்கிறார் கவிஞர் வா.மணிகண்டன். இதில் கவிதைகளை, அதன் பரிமாணத்தை தன் சொந்த அனுபவத்திலும், பிறர் கேள்விகளுக்கும் பதிலாக அவருடைய தளத்தில் பார்க்கலாம் சில சுட்டிகளின் இணைப்பு நூல் கீழே!
http://www.nisaptham.com/search/label/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இந்த தளத்தில் இருக்கும் மின்னல் கதைகள் எனக்கு மிகவும் பிடித்த சுவாரஸ்யமான சிறுகதைத் தொகுப்பு
*********************************************************************** 

  மிகுந்த சிரமப்பட்டு இந்தக் கட்டுரைத் தலைப்பை வாசித்தீர்களா ? இல்லையா?? இதன் அர்த்தம் தெரியுமா? “Establishment” என்ற சொல்லை வேராக வைத்து சொல்லப்பட்ட இந்த சொல். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிருவப்பட்ட ஒரு புதிய சர்ச்சும் (Church of England), அது ப்ரிட்டீஷ் அரசின் மற்ற மாகாணங்களிலும் பரவிட எடுத்த முயற்ச்சிகளும் அந்த அமைப்பின் செயல்கள்Establismentarianism” என்றும், அதைத் தடுப்பதற்காக ஸ்காட்லேண்ட், அயர்லாண்ட் மற்றும் வேல்ஸ் ஆகிய மாகாணங்கள் எடுத்த முயற்சி, கூட்டங்கள், பேரணிகள், சதித் திட்டங்கள் என்றும் “Dis-establishment ”என்றும் புரிந்து கொண்டால், நீங்கள் அடுத்தது (Anti-disestablishment) யாரை ஆதரிக்கிறது என்று தெரியும்!??! தெளிவாக சொல்லப் போனால் இது ஒரு அதிகாரமிக்க ஒருவரின் எண்ணப்படி(Anti-disestablishment + arianism = Anti-disestablishmentarianism) எதிர்ப்புகளைக் களைவதாகும். அது நாட்டின் வலிமைமிக்க (monarch/supreme power) ஒருவரின் அரசியல் லாப நோக்குகளோடும், சூழ்ச்சிகளோடும் சாத்தியமாகிறது என்றும் தெரிகிறது.

இன்றைய சூழ்நிலையில் ஒரு வலுவான அமைப்பு எங்காவது காலூன்ற விரும்பினால் அதற்கான எதிர்ப்பை திட்டமிட்டு அதைச் சமாளித்து ஒழித்துக் கட்டும் திட்டங்களே அதிமுதற் தேவையாகிறது.

இதே போன்ற சூழ்நிலையில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதும் (establishment) அதை நாம் எதிர்ப்பதும் (disestablishment), எல்லாவற்றிற்கும்(எதிர்ப்புகளுக்கு) ஆயத்தமாக தேவையற்ற நுகர்வுப் பண்பிற்குள் நம்மை நுழைத்து, அதே சமயம் அடிப்படைத் தேவையாக இருக்கும் எல்லாப் பொருட்களின் விலையையும் பன் மடங்கு உயர்த்தி. இதன் விளைவாக போராட்டத்தை விடுத்து மக்கள் யாவரையும் ஏதோ ஒரு மாற்றத்தை எதிர் நோக்கியோ, பிரார்த்திக்க வைத்தோ அரசியல் செய்து; நமது எதிர்ப்பை சீர்குலைத்து;- அதை இந்த அந்நியப் படையெடுப்போடு சேர்த்து வைத்து நம்மை ஏற்றுக் கொள்ளச் செய்யும் தந்திரம் தான் Anti-disestablishmentarianism.


நேரடியாகச் சொல்ல விடாமல் இந்தக் கட்டுரையில் உறுத்தி வந்த Anti-disestablishmentarianism எவ்வளவு தேவையற்றதோ, அவ்வளவு தேவையற்றது சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு. (மேற்கு வங்க முதல்வர் தீதி பானர்ஜிக்கு ஜே)

“ஷப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே

குறிப்பு : இது தான் ஆங்கில வார்த்தையில் மிகப் பெரியது என்று என் கல்லூரிப் பேராசிரியர் சொன்னது தவறு, ஆங்கிலத்தின் மிக நீளமான வார்த்தை இதோ
PNEUMONOULTRAMICROSCOPICSILICOVOLOCANOCONIOSIS எனும் ஈரல் சம்பந்தப்பட்ட நோயின் பெயர். 
ஹி ஹி....ஹி ஹி



பஜ்ஜி சொஜ்ஜி
இன்னும் சுவையாக, அடுத்த பாகத்தில்
ஜீவ.கரிகாலன்