செவ்வாய், 3 மே, 2016

இந்தத் தேர்தலில் எது மாற்றம் // ப.சொ - 93

இந்தத் தேர்தலில் எது மாற்றம்
*
ஜீவ கரிகாலன்

*

தேர்தலின் சூடு வெயிலைப் போலவே சகிக்கமுடியாமல் இருந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் முதலமைச்சர் கனவு, வாக்குறுதி கூவல், தனிமனித அவதூறு என வியர்த்து வழிகிறது.

எப்போதும் இல்லாதது போல ஐந்து முதலமைச்சர் வேட்பாளார்கள் கனவோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த தேர்தல், ஒருவழியாக இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டது. வழக்கம் போல திமுக, அதிமுக என்கிற நிலைமை தான்.

எப்போதும் போல நடுத்தர வர்கத்தினரின் கற்பிதமாக தேர்தலினை ஒரே ஒரேயொரு புரட்சிக்கான வாய்ப்பாக அதை நோடாவுக்கோ, வேறு யாருக்குமோ போடும் வழக்கமான ஸ்பெசல் கூட்டம் இந்தத் தேர்தலில் பெருகியிருக்கிறது. இவர்கள் தான் திமுக, அதிமுக வெற்றித் தோல்வியைத் தீர்மானிக்க வல்ல 5 – 10% வாக்களிப்பவர்களாக இருப்பார்கள்.

யார் வரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் இந்தக் கூட்டத்தினர் மாற்று அரசியல் என்று முன்வைக்கப்படும் விவாதங்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.

உண்மையில் இந்த தேர்தலில் மாற்றம்என்கிற பதம் மிகச்சரியாக இன்னும் தூக்கிப்பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அது தான் இந்தப் பதிவு எழுதக் காரணமும்.

பெரும்பாலும் மதுவிலக்கு என்பது பொதுபுத்தியில் ஒரு மாற்றமாக இருந்துவருகிறது, தேவைப்படும் அவசியமான மாற்றம் தான். மதுவிலக்கு என்பது ஒரு கனவாக இருந்துவருவதால் அதை ஒருமித்த குரலாக எல்லாக் கட்சிகளும் இப்போது கூவி வருகின்றன.

இலவசங்கள் வாங்கிப் பழகியதால் நடுத்தர வர்கங்கள் இலவசங்கள் மீதும், ரொக்கப் பணம் மீதும் ஆவலாக இருக்கின்றனர். இங்கே போய் என்ன மாற்று அரசியல் பேச முடியும் என்றால் உதிரியான வாக்காளர்களான அதே 10 சதவீத மக்களின் போக்கு எதனை மாற்றமாகப் பார்க்கவேண்டியிருக்கிறது என்று ஆய்வு செய்ய வேண்டும்.

கிட்டதட்ட திமுக, ம.ந.க., அதிமுக ஆகிய கட்சிகள் ஒரே மாதிரியான போன தேர்தலில் இருந்து சற்றே மெருகூட்டப்பட்ட மாய வித்தை தான். பா.ம.க முன்னெடுத்திருக்கும் அரசியல், சாதிவாரியாக பகுப்பினைக்கோரும் என்றாலும் அவர்கள் எடுத்து வைத்திருக்கின்ற அரசியல் பாய்ச்சலில் தலித் வேட்பாளர்களின் எண்ணிக்கை கணிசமானது, இதே எண்ணிக்கை மற்ற கட்சிகளுக்குக் குறிப்பாக ம.ந.கூவில் இருக்கும் மற்ற கட்சிகளின் தலித் வேட்பாளர்கள் எண்ணிக்கையோடு கூட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இங்கே தேடிப்பார்ப்பதெல்லாம் ’மாற்றம்’ என்று சொல்லப்படுவது எது, உண்மையில் மாற்றமாகத் தேவைப்படுவது எது என்கிற வித்தியாசம் தான். இந்தத் தேர்தலில் சாத்தியப்படும் மாற்றம் என யார் எதை முன்வைக்கிறார்கள். தமிழகத்திற்கு தேவையான மாற்றம் என்பது எது.

என்னைப் பொறுத்தவரை சித்தாந்த ரீதியிலாக மாற்றத்தை முன்வைக்கும் பா.ம.க மற்றும் நாம் தமிழர் கட்சிகள் ஆகியன மட்டுமே.  நிற்க. இது தகவல் மட்டுமே, பாராட்டுப் பத்திரம் அல்ல.

ம.ந.கூ விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்த அன்றே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்று மருந்து எக்ஸ்பையரி ஆனது, மருந்து எப்போது ஆக்டிவேஷன்ல இருந்தது என்கிற கேள்வி வேறு. சாதியை முன்னிறுத்தும் எந்த கட்சியும் விஷமானது தான் என்றாலும், அந்தக் கட்சிகளுக்கு போட்டிபோட அதே சாதிக்காரர்களைத் தான் பெரும்பாலும் களமிறக்குகிறது என்பதில், அந்த அம்சமும் பொதுப்படையாகின்றது.

கட்சிகளின் வாக்குறுதிகளை நேரடியாக ஆதரிக்காமல், அதன் இயங்குமுறையில் பின்னணியில் இருக்கும் உணர்வு எதுவெனப் பார்த்தல்  தான் தற்போதைய தேவையாக இருக்கிறது ஒரு பொது அம்சம் மட்டுமே ”மாற்றமாக” இருக்க முடியும்.

அது நிச்சயமாக மதுவிலக்கு அல்ல, தொழில் வளமோ, இலவசங்களோ அல்ல, பூகோள ரீதியில்; மொழி அடிப்படையில், தமிழின பண்பாட்டுக் கலாச்சார உணர்வோடு கூடிய ஜாதிப்பாகுபாடுகளற்ற ஒரு தேசிய உணர்வு. 


பாதுகாப்பான சுற்றுச்சூழல், மின்சாரம், குடிநீர், உள்கட்டமைப்பு போன்றவற்றில் இருக்கின்ற பிரச்சினைகள், அண்டை மாநிலங்களால் நமக்கு வரும் அழுத்தங்கள், தேசிய ரீதியிலான இனப்பாகுபாடுகள் என தமிழகத்திற்கென இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு, தேசியக் கட்சிகளால் அரசியல் தீர்வாக ஒருபோதும் பயன்படும்படி ஏதும் செய்துத் தர முடியாது. ஆகவே பிராந்தியக் கட்சிகள் தான் ஆட்டத்தில் இருக்கின்றன, இருக்கவும் வேண்டும்.


சித்தாந்தமோ, கொள்கைகளோ காலத்திற்கேற்பவும், தேவைக்கேற்பவும் மாறாது இருந்துவந்தால் அது கிழிசல் மிகுந்த, வெளுத்துப்பொன ஆடை போன்று தான் மாறியிருக்கும். Equlaising factor என்பது நிரந்தரமானது கிடையாது. மற்ற மாநிலங்கள் தங்கள் தேவை முடிந்த பின் திராவிடச் சட்டையை உரித்துப் போட்டுவிட்டு தங்கள் பிராந்திய அடையாளத்தோடு வலம் வர ஆரம்பித்துவிட்டன. தமிழ்நாட்டில் தான் அதே ஓவர் கோட், பஞ்சகஜம், தோல் செறுப்பு, நாமப்பட்டையோடு ஜமீந்தார் போர்ட்ரெயிட் போட்ட பழைய ஓவியமாய் இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறது திராவிடம்.

திராவிடம் எனும் ஒரு சொல், தமிழினை மாற்று மொழிபேசுபவர்கள் திரிபாக உச்சரித்துவந்த ஒரு சொல். ஆனால் அதுவே இப்போது ஆழப்பொதிந்திருக்கும் சமூகப்பாகுபாடுகளை உள்ளடக்கிய ஆபத்தான கற்பிதங்களின் பதமாக மாறிவிட்டது. 

ஆனால் இங்கு தமிழ்தேசியம் என்றால் விஷம் கக்கும் முதல் வரிசையில் திராவிடத்தின் சங்கு ஒலிக்கப்படும்போது, அடிப்படையிலேயே ஒரு குழப்பம் வந்துவிடுகிறது, இந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் சாதியொழிப்பு என்கிற அம்சத்தில் குறிப்பிடும்படி எந்த முன்னேற்றத்தையும் திராவிடப் போராளிகள் கொண்டுவரவில்லை. கூடங்குளம், ஸ்டெரிலைட், மணற்கொள்ளை, இயற்கை வளங்கள் கொள்ளை என தேசிய நலனென காவு கொடுக்கப்பட்டு விஷயங்களில் திராவிட முற்போக்குகளின் எந்த முன்னெடுப்பும் செல்லக்காசு தான். ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டுக் கலாச்சார ரீதியிலான பேரிழப்பு, தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் விவசாய நிலங்களை இழந்து கொண்டிருக்கும் அவலம் என தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் இப்போது ஒரு தேவையைக் கட்டமைத்திருக்கிறது.
ஓவியம் கார்டூனிஸ்ட் பாலா
இந்த தேவைகளுக்கான ஒரு பொதுவான வடிவம் ஒன்று வரையறுக்க வேண்டியிருக்கிறது, எந்தப் பெயரால் ஒடுக்கப்படுகிறோமோ அந்தப் பெயரால் எழவேண்டியிருக்கிறது. 

அது தமிழ் தேசிய எனும் அடையாளமாக பரவ வேண்டிய ஒரு உணர்வு. இந்தத் தேர்தலில் பெறப்போகும் இடங்கள் சொற்பமாகவோ, அதுவும்கூட இல்லாமல் போகலாம். ஆனால் மாற்றம் என்ற ஒன்று இந்தத் தேர்தலில் முன்வைக்கப்பட்டிருந்தது என்றால் அது தமிழின உணர்வு மட்டுமே. இதுப் பிரிவினை வாதம் என்று சொல்பவர்கள் நாட்டு நடப்பு அறியாதவர்கள்.

அந்த ஒட்டுமொத்த உணர்வின் பகுதிகளாக தேவைப்படும் மற்றன எல்லாவற்றையும் இந்த ஒன்றே கட்டியமைக்கும். மராட்டியத்திலோ, தெலுங்கானாவிலோ இதுபோன்ற மாற்றங்கள் அடிப்படைவாதமாகத் தேசியவாதிகளுக்குத் தோன்றாது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இது அடிப்படைவாதம் என்று விமர்சிப்பார்கள்.

இந்தத் தேர்தலில் தமிழ் இன உணர்வை அடிப்படையாக வைத்து எழுப்பப்படும் குரல்கள் வெற்றியடையாமல் போகலாம், என்னளவில் நாம் தமிழர் கட்சி, பச்சைத் தமிழகம் ஆகிய கட்சிகள் மீது உருவாகி வரும் நம்பிக்கை கவனப்படுத்தப்பட வேண்டியது. மற்றபடி மதுவிலக்கு, இலவசங்கள், ஓட்டுக்குப் பணம் போன்றவை வழக்கமான செயல்பாடுகள் தான்.

 19ஆம் தேதி இந்தக் கட்டுரையை மீண்டும் வாசிக்கும் போது, இது மாற்றத்திற்கான அறிகுறியாக மாறியிருக்கிறதா என்று பார்க்கலாம்.

 ஜீவ கரிகாலன்