வெள்ளி, 7 ஜூன், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு

நாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு:

உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இதில் நாகஸ்வரம், நாகர் இனத்தவரால் உபயோகிக்கப்பட்டு வந்தது என்பதால் இந்தப் பெயர் பெற்றிருக்கலாம, மேலும் இதற்கு நாகபாசுவரம் என்ற பெயரும் உண்டு.

மணிமேகலை, சிலம்பு போன்ற சங்க இலக்கியங்களில் நாக நாடு என்ற பெயர் வருகிறது. மணிமேகலையில் நாகநாடு என்பது நானூறு யோசனை தூரம் இருந்தது என்றும் அதை ஆண்ட மன்னவன் பெயரும் வருகிறது. அதே போல 2000 ஆண்டுகட்கு முன்னரே, ஈழத்தீவினை நாகத்தீவு என்று அழைக்கப்பட்டு வந்தது, அவர்கள் வாசித்து வந்த இசைக்கருவியின் பெயர் நாகம் என்று அறியப்படுகிறது.

இதை நம்பும் படியாக, இன்னும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவத்தின் போது “நாகோபாசம் வாசியுங்கள் என்று நாதஸ்வரம் வாசிக்கப்படுகிறது. பழமையான நாதஸ்வரம் கருப்பு நிற மரமான ஆச்சாமரத்தின் கட்டையில் இருந்து செய்யப்படுகிறது. அம்மரம் வெட்டப்பட்ட பின் குறைந்தபட்சம் 100 வருடங்களாவது காய்ந்திருக்க வேண்டும். ஆக பல நாதஸ்வரங்கள் வீட்டிலிருக்கும் ஆச்சமரத் தூண்களிலிருந்து பெயர்த்து எடுத்தும் செய்யப்பட்டன.

காற்றினால் ஊதப்படும் கருவி என்றாலும் குழலைப் போல நேரடியாக இதனை வாசிக்க முடியாது, இதற்கு சீவாளி என்ற தட்டைக் குறுத்து தேவைப்படுகிறது, இந்தப் புல்லினம் காவிரி, கொள்ளிடக் கரைகளில் மட்டுமே காணப்பெறும், இதை வெட்டியெடுத்து நிழலில்,பனியில், இளஞ்சூரிய வெயிலில் என 15,15 நாட்கள் காயவைத்து, வெட்டி சிறு துண்டுகளாக்கி நெல் மற்றும் ஆட்டு மாமிசத்தோடு சேர்த்து வேகவைத்து, 6 மாதம் பதப்படுத்தி உறுவக்குவர்.

இது ஒரு இணைக்கருவி, அதாவது இசை அரங்கில் நாதஸ்வரமும், மேளமும் இரு ஜோடிகளாய் இருக்கும். அதில் நாதஸ்வரத்தின் இணை ஒத்து நாகஸ்வரம் என்று அழைக்கப்படும். ஒத்து நாகஸ்வர்ம என்பதும் நாகஸ்வரம் போல் தான் இருக்கும், ஆனால் அதில் நாகஸ்வரம் போன்ற விரல்துளைகள் இருக்காது. கீழ்வாய் அருகே மட்டும் நான்கு அல்லது ஐந்து துளைகள் இருக்கும், இதில் இருக்கும் துளைகளை அடைப்பதன் மூலம் நமக்கும் தேவைப்படும் ஆதார சுருதி ஒன்றை தக்கவைத்துக் கொள்ளும். 1950க்குப் பிறகு ஒத்து நாகஸ்வரத்தின் பயன்பாடு மறைந்து தனியாக சுருதிப் பெட்டி என்ற ஒன்று நடைமுறைக்கு வந்து விட்டது. இன்று படிப்படியாக குறைந்து வரும் இந்த இசைக் கருவியின் பயன்பாட்டை, ஒலிநாடாக்கள் ஒரு புறமும், கேரள வாத்தியங்கள் மற்றும் மேற்கத்திய பேண்டுகளின் பால் உள்ள நம் ஈர்ப்பு இதை பெரும்பாலும் குறைத்துவிட்டது. நாளடைவில் இந்த இசைக்கருவியும், கலைஞர்களும் வரலாற்று செய்தியாக மட்டுமே இருப்பார்களோ என்ற அச்சமும் எழாமல் இல்லை

- ஆதாரம் : திருக்கோயில் நுண்கலைகள்

ஜீவகரிகாலன்

2 கருத்துகள்:

  1. நான் பல ஆண்டுகாலமாக நாதஸ்வரம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைப் படிப்பதற்கு முயன்று வந்தேன். விதிவசத்தால் ஜீவகரிகாலன் எழுதிருந்த குறிப்பு என் மனதைக் கவர்ந்தது. இத்தகைய சிறுசிறு குறிப்புகள்தான் எழுதியவனின் அடையாளத்தை காட்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி.. எழுத்து குறைந்தவிட்ட இந்நாட்களில் .. இப்படியான கருத்து எழுதத் தூண்டுகிறது நன்றி

      நீக்கு