திங்கள், 28 செப்டம்பர், 2015

எதற்காக காமிக்ஸ்




இந்த நான்கு வருடங்களின் முப்பத்தி சொச்சக்கூட்டங்களில், எங்கள் இரண்டாம் வருடத்திலிருந்தே காமிக்ஸிற்கான கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்கிற தாகம் தீர்வதற்கு சற்றே அதிக காலம் தான் ஆகிவிட்டது என்றாலும், இடையில் ஆறு மாதங்கள் நிகழ்வுகளை சற்று தள்ளிப் போடலாம் என்று நினைக்கும் போதே “காமிக்ஸ்” தான் ரீ எண்ட்ரிக்கு சரியாக இருக்கும் என்று தோன்றியது.

காமிக்ஸை ஒட்டி நிகழ்வுகள் நடத்தினாலும், அது வெறுமனே வாசகர்களின் பகிர்வாக இருக்கக்கூடாது என்பதில் தான் தெளிவாக இருந்தோம். இதற்குக் காரணம் என்னுடைய நண்பரும், எழுத்தாளருமான பாலசுப்ரமணியம் பொன்ராஜ், அவர் தீவிர இலக்கிய வாசிப்பும், காமிக்ஸ் வாசிப்பும் உடையவர் – காமிக்ஸ் கான் போன்ற நிகழ்வு எல்லாம் இங்கு சாத்தியம் தானா, நம்ம ஏதாவது ஒரு வொர்க் பண்ணுவோம் என்றென்னை அதிகம் தூண்டியிருக்கிறார். ஆனால் அதற்கான ஒரு சரியான டீம் நாமில்லை, நாம் வெறும் உதிரிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

காமிக்ஸ் பற்றிப் பேசினாலே, NOSTALGIAவாக வாண்டுமாமா கதைகளையோ , சித்திர, ராணி காமிக்ஸ், இரும்புக்கை மாயாவி என்றெல்லாம் பேசி நேரத்தைக் கடத்துவது எளிமையான செயல் தான். ஆனால் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, அதுவும் அதைப் பற்றி என்னைப் போன்றவர்கள் பேசினால்.

பொதுவாகவே தமிழின் செவ்விலக்கியப் படைப்புகளில் பிரதானமாக காதலும், வீரமும் மட்டுமே இருக்கிறது என்கிற தீவிரமான வாதம் ஒன்றை நாமெல்லோரும் நம்புகிறோம். (இப்ப மட்டும் என்னவாம்??) இன்று காதல் காமம்னு பிரிச்சு வச்சு வேணும்னா ரெண்டு வகைப்பாடு இருக்குன்னு சொல்லலாமே தவிர வீரம் பற்றி பேசும் காலத்திலோ அல்லது தகுதியுடையவராகவுவோ நாமில்லை என்பது வேறு விஷயம், அதில் அரசியல் இருக்கிறது. காதல் தவிர மிஞ்சியிருப்பது நம் பெருமிதங்களும் நினைவுகளும் தான். அப்படி ஒரு கூட்டமாக காமிக்ஸ் படித்ததை, சிலாகித்தை வைத்தெல்லாம் கூட்டம் போடுதற்கு நாங்கள் முனையவில்லை.

ஓவியர் மருதுவின் பேச்சுகளில் காமிக்ஸ்களுக்கான உரிய இடம் தரப்படாமல் இருப்பதை வேதனையாகத் தான் கடந்து செல்ல வேண்டியிருந்தது, ஒற்றை மனிதராக இத்துறையில் மிகுந்த சிரத்தையோடும் கவலையோடும் பல இடங்களில் பதிவு பண்ணி வரும் இவரோடு கைகோர்த்து நிற்க மனித வளமும் தேவைப்படுகிறது. அதற்கு ஒரு SYDICATE அமைய வேண்டும்.

காமிக்ஸ் Syndicate
பிரகாஷ் பப்ளிஷர்ஷின் இதழ்களிலேயே - பேனா நண்பர்களாக அப்போதிருந்தே ஒரு வாசகர் வட்டம் உருவாகி இருந்தது நாம் அறிந்தது தான். அ.கொ.தி.க, தமிழ் காமிக்ஸ் உலகம் போன்ற BLOGகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக ஒரு வாசகர் வட்டம் உருவாகிக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் காமிக்ஸ் பற்றி இங்கொன்றும் அங்கொன்றுமாய் வந்து கொண்டிருந்த பலவீனமான கட்டுரைகளாலும் அதன் பிழைகளாலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குழு இன்று களத்தில் இறங்கிக் கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம் என்றே சொல்ல வேண்டும், அதை வரவேற்க நாம் தயாராக வேண்டாமா – அது தான் இந்தக் கூட்டம்.

சென்ற வாரம் ஓவியர் மருது என்னிடம் சொன்னது போல, காமிக்ஸ்களுக்கான இடமென்று ஒரு நிரந்தர இடம் வாசிப்புலகில் இல்லாமல் போனதில் ஏற்பட்டிருந்த விளைவுகள் பற்றி பேசியவை அதிர்ச்சிகரமானவை தான். அதை ஒரு Disconnection என்று சொல்கிறார், உண்மையில் இந்த இடம், அதாவது தொடர்பறுந்து போதல் மிகத்தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய இடம். அவர் கண்டுவரும் கனவும், பார்வையும் (Dream & Vision) இன்றைக்கிருக்கும் சில இளைஞர்களின் செயல்பாட்டின் வழியாக சாத்தியப்படும் என்று நம்புகிறார். இவர்கள் அந்த CREWவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர் PINPOINT பண்ணியது விஷ்வாவகத் தான் இருக்கக்கூடும் என்று நினைத்தேன் - கிங் விஷ்வா – இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் பண்ணிக்காதவர், தொடர்ச்சியாகவும் , தீவிரத்தன்மையோடும் Dedicated ஆகவும் அவர் செய்து கொண்டிருக்கும் பயணம் மிக முக்கியமானது.  விஷ்வா காமிக்ஸ் ரஸிகர்களுக்கான ஒரு பெருங்கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார். நிறைய ஓவியர்களிடம் இருந்தும், கதாசிரியர்களிடம் உரையாடுகிறார், தகவல்களை சேமிக்கிறார், இயங்குகிறார்.

Popular art பற்றி நாமெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம், கலை வரலாறு தெரிந்தவர்கள் பின்னவீனத்தின் ஆரம்ப கட்டங்களாகத்தான் பாப்புலர் ஆர்ட்டை சொல்வார்கள். காமிக்ஸ், மினிமலிஸம் போன்ற போக்குகள் எல்லாம் நவீன யுகத்தின் போக்குகளை காலாவதியாக்கியவை, இதை சரியாக உள்வாங்கிக் கொள்ளாத, இடம்தராத படைப்புலகம் தான் ஓவியர் மருது சொன்ன தொடர்பற்றுப் போனதன் காரணமாக, அந்த DISCONNECTING FACTORஆக இருக்குமோ என்கிற ஐயமாக மாறியிருக்கிறது.

இன்றைக்கு இவர்கள் உருவாக்க நினைக்கும் இந்த தளம் எத்தனை CHALLENGESஐ அவர்களிடையே வைக்கிறது என்பதும் தனி பிரச்சினை. அந்த காலத்தைப் போல ஜாம்பவான்களான ILLUSTRATORகள் சொற்ப வருமானத்திலும் மிக முக்கியமான செயல்பாடுகளை செய்து வந்தனர்.
இன்றைய கணினியுகம் வரைகலையை (GRAPHIC ART) அதன் வீரியத்தை, செயல் வேகத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கும் விதத்திற்கு ஈடாக ILLUSTRATORகளை மிகவும் EXPENSIVE ஆகவும் ஆக்கிவிட்டிருக்கிறது.

இதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம், தமிழ்ச்சூழலில் – வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து கொண்டிருக்கும் சூழலில், இருக்கின்ற வாசக எண்ணிக்கையால் விளைந்த ஒரு சிக்கலாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது. இவற்றையெல்லாம் கடக்க வேண்டுமென்றால், FREE LANCERகள் மட்டுமன்றி, தீவிர இலக்கிய உலகில் இயங்கும் குழுக்களைப் போன்ற செயல்பாடுகள் அவசியமாகும். இப்போது காமிக்ஸ் தளத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்களும் சமகால இலக்கியவாதிகள் என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை. வெகுஜன இதழ்கள் வாசிப்பவர்கள் போல காமிக்ஸ் வாசகர்களை பார்ப்பதும், இந்த வயசிலும் காமிக்ஸ் வாசிக்கிறியா என்று கேட்பதுமான கேள்விகளை அபத்தமென்று சொல்லலாம். ஏனென்றால் இன்றைய உலகில் அப்படியான பொதுவான அளவுகோல்கள் என்றில்லாமல் எல்லாமுமே காலியான இடங்களை நிரப்பிக் கொள்ளும் இயக்கம் பெற்றிருக்கின்றன. காமிக்ஸ் ஒரு மேம்பட்ட ரசனையைத் தேடும் வாசகர்களுக்கு வரப்பிரசாதம். இந்த POPULAR ARTன் சிறப்பம்சங்கள் – தமிழ் காமிக்ஸ் உலகம் தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு,  வாசிப்பையும் பரவலாக்க வேண்டுமென்றே விருப்பம் மேலோங்கி இருக்கிறது. அப்போது தான் BALANCEDஆன வாசகர் உலத்தை ஒரு மொழி பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.

வெகுஜன, தீவிர இலக்கியத்தைப் போன்றே காமிக்ஸும் ஒரு தனி இலக்கிய வகை என்று முன்னிறுத்த உலக வரலாற்றிலும் சமகாலத்திலும் இடமிருக்கிறது. காமிக்ஸ் வெறும் குழந்தை இலக்கியத்தோடு மட்டுமாக நில்லாமல், அது தனித் துறையாக எல்லாவிதமான படைப்புகளும் பாவிக்கப்படவேண்டும் என்பது தான் நாம் எல்லோரின் பொதுவான விருப்பமாக இருக்கக் கூடும். சமகால உலகின் அறிவுச் சூழலில், இலக்கியத்தில் காமிக்ஸை எங்கே Locate செய்யப்படவேண்டும் என்பது தான் விவாதிக்கப்பட வேண்டும், அதை ஜாம்பவான்களிடம் முன் வைக்கின்றேன்.

ஆக இந்தக் கூட்டம், கிராஃபிக் நாவல்களை நேரடியாக எடுத்துப் பேசாமல், BASICSஇல் இருந்து தெரிந்து கொள்வது தான் நல்லது என்று சிறப்பு அழைப்பாளர்களின் கருத்தையே முன்வைக்கிறது. இந்தக் கூட்டம் ஒரு நல்ல BEGINNING ஆகவும் Re-Entryஆகவும் இருக்கக்கூடும் காமிக்ஸ் வாசகர்களுக்கும், தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கும், யாவரும் நிகழ்வுகளுக்கும்.


-ஜீவ கரிகாலன்

                


செவ்வாய், 8 செப்டம்பர், 2015

பஜ்ஜி - சொஜ்ஜி 83 / நேர்கோட்டில் இருக்கும் இரண்டு வருடத்துக் குழப்பங்கள்



ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு நீட்டித்த பயணத்தில் லீனியர், நான் லீனியர் வடிவமைப்பைப் பற்றி பேசுவதால் சுவாரஸ்யமற்ற விவாதமாகத்தான் போய்விடுமோ என்று மனதில் இருந்த அச்சம், இருந்த தடயமே இல்லாமல் போனதுக்கு காரணம் கிருஷ்ணப் பிரபுவின் பதிலிலிருந்து கிடைத்த சந்தோஷம், பின்னர் சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்டாடும் எங்களின் பழக்க தோஷத்தை ப்ளூடூத் வழியாக ஸ்பீக்கரில் போட்டு அனுபவித்துக் கொண்டிருந்தோம். தன்னை விட்டுச் சென்ற கி.பி மற்றும் ஜீயோடு என்னையும் அவன் திட்ட வேண்டியிருந்தது என்ன மாதிரியான DESIGN என்கிற கேள்விக்கு அடிகோலியது. ஏனென்றால் சிவப்புக் கார் தோழர்களை மட்டுமே ஏற்றிச் செல்லும் என்று ஜீ செய்த சத்தியம் தான். அதுவும் அச்சத்தியமும் மேடையிலேயே உணர்ச்சிவயப்பட்டு பேசிய தோழரின் நாமத்தில் என்பதால் நானும் நம்பியிருந்தேன், அவர் என்னை அழைக்கப்போவதில்லை அந்த மர்மப் பயணத்திலிருந்து என. வேடியப்பன் அப்பயணத்தில் இல்லாது போனது பல ரகஸியங்களைத் தவற விட்ட உளவுத்துறையின் கதியாக ஆனது.

இடைவிடாமல் இந்த ஒரு மாதத்திற்குள் தனித்தனியாக, வேறு வேறு காம்பினேஷன்களில், எல்லோருமாக என்று அந்த மனிதனை ஒரு மாதமாக நாங்கள் பாடாய்ப் படுத்தியிருந்தோம். தூக்கத்தைக் கெடுப்பதோடு, நீண்ட தூரப்பிரயாணங்கள், வகைவகையான உணவுகள் என இவற்றோடு திரவமாக திரவியமும் கரைந்து கொண்டிருப்பதும் ஒரு புறம். ஒரு சமயம் விமர்சங்களை மெய்யாக்கும் குழப்பங்களோடு அதே தயக்கத்தில் நிற்கும் போதெல்லாம், கலைக்கான கலை மற்றும் மக்களுக்கான கலை என வேறு நோக்கில் விவாதமாகியிருக்கும். கலைஞனின் வாழ்வு சமகாலச் சூழலில் எத்தனை முக்கியமானது என்று ஒரு மையத்தை காண்பித்தபடி, எம்மை யோசிக்கத் தூண்டிய கற்பிதங்களால் ஆன வாழ்வு எத்தனை அற்பமானதாக ஒரு அளவுகோலை வைத்திருக்கிறது என்கிற கேள்விதான் நாங்கள் திருப்பதியில் இருக்கும் பொழுது முடிவுக்கு வந்த விவாதத்துளி.

ஏஸியின் குளிர்மையால் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் துளிகளை வைப்பரால் துடைக்காமலேயே சாலையில் என்ன தெரிகிறது என்று கேட்டதால்,  என் மனம் ஒழுங்கு என்று நினைத்துக் கொண்ட கற்பிதத்தை நம்பி சாலையை வர்ணிக்கிறேன். சாலை, விளக்குக் கம்பம், ஒளி, பச்சை வண்ண போர்டுகள், கூடவே வரும் மெரிடியன் என்று என்னை நானே மிகவும் நேர்த்தியானவனாகவே நினைத்துக் கொள்ள முடிந்தது. இப்படித் தான் நான் தினமும் எழுதுபவனாக, தினமும் வாசிப்பவனாக, அசலானவனாக என்னைக் கற்பிதம் செய்து கொள்கின்றேனோ??.

சலானவை என்று நான் நினைப்பவைகள் எப்படி இருக்கிறது? யாரோ ஒருத்தி எங்கிருந்தோ எழுதும் கவிதைகள் 1400 கிலோ மீட்டர் பயணம் செய்து எனக்காக எழுதப்பட்ட கவிதையாக உணரும் வேளை, நான் அந்தக் கலையரசியின் மீட்டும் விரல்களைத் தொட்டுப் பார்த்த உணர்வாக அவள் கவிதைகளை சிலாகித்த போதோ அல்லது சமணப்படுக்கையில் நமச்சிவாய என்று சொல்லியதாலோ என்னவோ இறங்கும் வழி தெரியாது நானும் யுவபாரதியும் திக்குத்தெரியாது நிற்க எழுந்து நின்ற யானையாக இன்னும் உயரமானது குன்று அப்படியே புத்தகக் கண்காட்சிக்கு சென்று பாண்டியர்களை கபளீகரம் செய்துவிடுவோமா என்றேன். LAW OF DIMINISHING MARGINAL UTILITY எனும் கோட்பாடு உனக்குப் பொருந்தவே பொருந்தாதோ என்று எனக்குள் சொல்லியபடி உண்ட, அத்தனை கவளச் சோறுக்குப் பின்னும் நன்னாரி சர்பத் மிச்சமிருக்கிறது என்கிற கணம், அதே நிறத்தில் குங்குமம் வைத்து ஆசிர்வாதித்த மணியின் தாயார் செய்த ஆசிர்வாதம் தான் என்று முழு சர்பத்தையும் குடித்தேன். இது நேர்மையான பதிவு தானே தோழா!!

ஒரு நாளில் ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் கேமிராமேனாக மாறிய க்ருஷ்ணப் பிரபுவோடு நான் இத்தனை நெருக்கமானேன் என்பது என்னாலேயே நம்ப முடியாமல் இருக்கும் ஆச்சரியங்களில் ஒன்று, “ஜீவ கரிகாலனுக்கு இப்படியொரு நண்பரா ஆச்சரியமாக இருக்கிறதே”, “இந்த மனுஷன் எத்தனை நாளாய் எங்கிருந்தான்” என்று என்னை நோக்கியும் ஆச்சரியங்கள் இருக்கத்தான் செய்கிறது, ஆச்சரியத்துக்குக் காரணம் பாலசுப்ரமணியம் பொன்ராஜ் அவரோடு குறைந்தபட்சம் ஒரு பயணமாவது திட்டமிட வேண்டும் என்று காவு கேட்கும் முனியாண்டியாக மாறிய சமணத் துறவினை வணங்கி விட்டுத்தான் வந்திருக்கிறேன்.

வா.மணிகண்டனைத் தவிர வேறெந்தக் காரணமும் பிரதானமானதாக இல்லை நான் மூன்று வருடங்களாகப் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதற்கு, அங்கேயிருந்த பத்து புத்தகங்களையும் ஒரே விலை கொடுத்துவாங்கத் துணிந்து அதற்கு மேல் ஸ்டாக் இல்லாததால், ஒன்று மட்டும் வாங்கியதாய் சொல்லும் வாசகர்கள் உருவாகுவது எப்படி, தீவிர வாசிப்புக்கான தேவை பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம், வாசிப்பு என்னும் பழக்கத்திற்கான முகாந்திரம் என்ன என்கிற நோக்கில் தான் என்னுடைய கவனம் குவிந்த வண்ணம் இருக்கின்றன என்று நான் நினைப்பது சரியா தவறா??

எப்படி திட்டமேயிடாமல் அற்புதமான தடாலடி விருந்து தயாராகிறது? சித்தரஞ்சன் பரவாயில்லை, பச்சை லைட்டு ஹோட்டல், கிழங்கு மாவில் செய்யப்படும் மிக்சர் பற்றிக் கூட தெரிந்து கொள்ளாத அளவுக்கு எங்கள் வாசிப்பும், எங்களை வாசிக்க வைத்தக் கல்வியின் தரமும் இருக்கும் நிலையை, யாரோட தவறாகச் சொல்ல முடியும். அரசியல் என்றால் என்ன ? என்று உங்களுக்குச் சொல்லத் தெரிந்தால் தான் COFFEE TABLE புத்தகங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுத முடியும் என்று உணர்ந்தேன்.

புத்தகங்களை மாற்றி மாற்றி அடுக்கும் போது, அரசியலும், வியாபாரமும், ஆன்மீகமும் தந்திரங்களாய் மாறிக் கொண்டிருப்பதாய் நான் எண்ணிக் கொண்டிருந்த வேளை, கை குவித்து காதுகளைச் சுருட்டிக் கேட்டது ஓசையா, மந்திரமா என்று நான் அறியேன். ஆனால் நேர்த்தியாக 630 என்கிற எண்ணைத் தேடிக் கொண்டு நீண்டு செல்லும் பாம்பு, சைரன் விளக்கொளியில் ஸ்தம்பித்த சர்பத்தின் நிலையல்ல, “WHY NOT” என்று என்னைப் பார்த்துக் கேட்ட EROTIC TANKன் சர்ப்பம். அந்த சர்ப்பம் தீண்டி நேற்றோடு இரண்டு வருடம் ஆகிவிட்டது. சர்பத்தை ஈஷாவஸ்ய உபநிடதம் கேட்காமலேயே கேட்டவர்கள் போலானவர்கள், தங்கள் கணையாழியில் வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தச் சர்ப்பம் – என்னைக் கணையாழியில்...

நான் லீனியரோ, லீனியரோ – என் மீது நம்பிக்கை வைத்திருந்தும் நான் பொறுமையாய் இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கக் கூடும், நான் சில நூறுகளைச் சொல்லக்கூடும், சில பத்து காரணங்களை அவர் நம்பக் கூடும். ஆனால் அந்த ஒற்றை உண்மையான காரணம் எனக்கே தெரியாதது என்று அவர் தெரிந்து வைத்திருப்பார் என்றும் நான் புரிந்து கொண்டதற்கு. “யார் ரஸிகன், யார் சிறந்த ரசிகன்” என்று கேட்டக் கேள்விக்கு சொன்ன பதிலும், பின்னர் ஒரு உதாரணமும், அந்தக் கோட்பாடும். ரசனையின் மறுபக்கம் எத்தனை ஆற்றலிருக்கிறது என்று உணரச்செய்வதைத் தான் அந்த ஒரு உண்மை காரணத்தை அவர் தெரிந்திருப்பார் என்று நம்புகிறேன்.

நான் மட்டுமே திட்டமிட்டப் பயணத்தில், திரும்பி வரும் போது மூவராக வந்ததைப் போலே, நான் சென்ற இரயில் பயணமே இந்த விவாதங்களின் முன்விளைவாகத் தோன்றியது என்ன Pattern. ஏனென்றால் அந்த இரயில் தான் என் ட்ரெங்குப் பெட்டி.

ஜீவ கரிகாலன்


வெள்ளி, 4 செப்டம்பர், 2015

பஜ்ஜி - சொஜ்ஜி 82 கஸ்தூரிபா நகரிலிருந்து கருமாரியம்மன் கோயில் வரை.


இந்த குஜிலி டைட்டில்களுக்கும் நமக்குமான பூர்வ ஜென்ம பந்தம் என்ன? ஏது? என்று யோசிக்கும் போது ஆல்ட் F4களால் இந்தக் கட்டுரை நிறைவடையலாம் என்றாலும். கஸ்தூரிபா நகரிலிருந்து கருமாரியம்மன் கோயில் வரை பயணம் செய்து முடிக்கும் வரை, நாங்கள் உண்டதாய் நினைவில் இருந்த ஒரே ஒரு சாம்பார் வடை எந்த ஹோட்டலில் இருந்து என்று யோசித்தேன், பெயர் ஞாபகத்தில் வரவில்லை. நினைவில் இருந்ததெல்லாம் என்னிடம் காபியைக் கலந்து கொடுக்க வேண்டிய கபாலி ஒரு டபராவில் ஸ்ட்ராங் டிக்காஸனும், இன்னொன்றில் கட்டிப்பாலையும் மிகுதியாகச் சேர்த்தது எதற்கு என்று தான். ஒரு வழியாக அது விஷ்ராந்தி என்று நினைவில் வரும் போது என் இலக்கு வந்துவிட்டது.

மாமன் மகள் படத்தில் கவுண்டமனி, கூர்கா, சேட் மட்டும் சத்யராஜின் மாமியாரிடம் அடிவாங்கிய எரிச்சலை விட, அப்பொது ஒலித்த டெலிபோன் மணியின் சத்தம் சென்சார் வசனமாக மாறும் அளவு இருந்ததில் ஆச்சரியமில்லை. அப்படி யாரேனும் என்னை ஜீவ கரிகாலன் என்று அடையாளம் கண்டு ஜீக்கு முன்னரே என்னை நலம் விசாரித்தார்கள் என்றால் நானும் கவுண்டமணியின் செயலைப் போலே இந்தக் கட்டுரையே சென்சார் செய்திருப்பேன்.

எங்கே இருக்கிறீர் என்பதே ஆதி வார்த்தையாக செல்போன வந்தபின் கருதிக்கொண்டிருக்கும் சமூகத்தில், எல்லோரும் எளிமையானவர்களே என்று கற்றுக் கொடுத்த கற்பிதங்கள், என்னைக் கடந்து சென்ற ரகுமானை, ரகுமான் என்று சொன்னாலும், பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்திருக்கும் ரகுமான் தானே என்று எங்கள் பகுதி புரொபசனல் கொரியர் குமாஸ்தாவை நினைத்துக் கொண்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

சமூக இயக்கத்தின் இரத்த ஓட்டத்தினை, நரம்புகளை, சதைகளைப் பற்றி அறிந்திடாமல் தோல் எனும் மொழி அணிந்திருக்கும் மேல்சட்டையையே தோலெனக் கழட்டாது பிழைக்கும் எனக்கு எழுத்துக்காரனாகிய நான். ஒரே ஒரு சாம்பார் வடை மட்டுமே போஜனமாக வாங்கிக் கொடுத்துவிட்டு என்னிடம் பேசுவதற்குத் தயராக இருந்த மனிதரோடு பேசும் போது மெய்மறந்தது ஆச்சரியமல்ல, மெய்யினை பசி மறந்ததே!!

உயிர் பிரபஞ்சத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் போது மெய்யின் பசி, அகங்காரத்திற்கே தெரியாது போகும். அகங்காரம் அற்ற நிலையில் த்ரிவிக்ரம உருவம் கண்களுக்குப் புலனாகும் என்பது மாமல்லைபுரத்திற்கு காதலியோடும், செல்ஃபி எடுக்க விரும்பாதோருக்குமே சாஸ்வதம். அகங்காரமற்ற நிலைக்கும், அகங்காரம் கொண்டிருக்கும் நிலைக்கும் வித்தியாசம் தெரியாத எழுத்துக்காரன் த்ரிசங்க சொர்கத்தில் தான் வாழ்வான் அல்லது கட்டுரையின் கிரந்த ஒலியைக் கண்டு ஆவேசமாகி என்னை தேச பிருஷ்டம் செய்யத் துணிவான். துணியட்டும் துணிவே துணை.

ஒவ்வொரு 350 வார்த்தைகளிலும், 550 வார்த்தைகளிலுமாக பதடிக்கும் சீனிவாசன் ஜியின் நூலுக்காக ஒரு வடிவம் பற்றி யோசித்து வைத்ததைச் சொல்லிய சந்தோஷம் மட்டுமே இன்றைய உண்டியல் காசாக சந்தோசப் பட வைக்கிறது என்றாலும். போலச்செய்யும் சந்தோஷம் எப்படியானது என்று உணரும் பொழுது, அர்விந் யுவராஜோடு 12 மணிக்கு ஃபேஸ்புக்கில் மால்ட்வாதம் செய்து கொண்டிருந்தேன்..

கலைகளை போஷிப்பவன் எப்படி நடந்து கொள்வான் என்று தெரிய வைக்கவேண்டுமென்று, “ஓ” போட்ட நண்பரின் கரிசனம் அளப்பரியது தான். “அளப்பரியது” என்பதை ஓசைக்காகத் தான் பயன்படுத்தினோம் என்று காலரைத் தூக்கிவிட்டுச் சொன்னால் ஒரு கவிஞனுக்கு, ஒத்துக்கொள்வதால் இழப்பது என்னவாம்? என்று மனதில் சிறு கிலேசம் இருப்பது உண்மையே. இது எல்லாம் டிசைன்லயே இருக்கு என்பது ரேஷனல் அறிவு இல்லாவிட்டால் தலவிதி என்று சென்று விடலாம்.

எந்த ஒரு சந்திப்பிலும், சரியாகக் கிளம்ப வேண்டும் என்கிற நேரம் மிச்சமிருக்கின்ற கேள்வி தான் மிக நேர்மையான ஒன்றாக இருக்க முடியும். கைகளில் கொடுக்கப்பட்ட பெரும் பொறுப்பை வைத்துக் கொண்டு, பச்சைத் துண்டி வாங்கிவிட்டால் விவசாயம் செய்யலாம் என்ற மனதோடு நின்று கொண்டிருந்தேன் கேள்வியுடன். இந்தச் சமூகத்திற்கு எந்த சிந்தனையை ஒரு ஊடகம் / இயக்கம் / அமைப்பு முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது, எது ஒட்டுமொத்த மாற்றத்தைச் சாத்தியப்படுத்தும் மாற்றம் என்று சொல்லும் போது கிடைத்த பதில் நம்பிக்கையளித்தது.

சாதியத்தில் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் மாற்றங்கள் எப்படியான மாற்றங்களைக் கொண்டிருக்கிறது என்று யோசிக்க வைத்தது. மிகவும் மெதுவாக வண்டியோட்டும் நான் அப்போது தான் அண்ணா பல்கலைகழகத்தை தாண்டியிருந்தேன். விதைத்து, வளர்ந்து, உபயோகமற்றுப் போன பபூல் மரம் பற்றிய ஒரிஸா கதை ஒன்று நினைவில் வந்தது தற்செயல் தான். சாய்நாத்தின் பயணம் போலே ஒரு பயணம் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தேவையானது தான். கவிதைத் தொகுப்பு ஒன்றைப் போடுவதற்காக அதிகம் பிரயர்த்தனப்பட்ட பதிப்பாளர் என்கிற விருது பெற்ற நண்பர் அவர், அடுத்ததாக அவர் பதிப்பிக்கத் தயாரான கவிதைத் தொகுப்பிற்கான வடிவம் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. ஆர் ஆர் என்னிடம் “இருந்துட்டு போகட்டும்” என்று சொல்லிப் போனான்.

எந்த எதிர்பார்ப்புகளுமற்ற, எந்த நிபந்தனையற்ற அன்பும் – எந்த சமரசமுமற்ற விமர்சனமும் பெருக்கெடுத்து வருவது ஒரே சுனையிலிருந்து தான். அது அண்டத்தையும், பிண்டத்தையும் ஒன்றாகப் பார்க்கச் செய்யும் ஊற்று, தெள்ளத் தெளிவான நீர், எல்லோருக்குமான நீர், எல்லா நிலத்துக்குமான நீர் – வான் வழி உலகம் முழுதும் பரவும் புனித நீர். மண் சுரண்டும் சமூகத்தின் தாகத்திற்காக இன்னும் ஊறிக் கொண்டிருக்கிறது.

  
   மூன்றாவதாக ஒரு ஆள் இருந்தால் கூட ஒரு நல்ல உரையாடல் நிகழ்வது இல்லை என்று சொல்லக் கேட்டிருப்பது எத்தனை உண்மை. சுவற்றில் லேயர் லேயராக வரைந்து வைத்திருக்கும் தம்பிக் குட்டியும் தர விருப்பமில்லாத இடம் ஒன்றைத் தான் அவ்வளவு சாதாரணமாக உணர வைத்த நேரம், எழுந்த சிரிப்பொலி இரவை நீட்டித்தது. தோள்களில் கைகள் போட்டுக் கொண்டு கற்றுக் கொடுக்கும் மனப்பாங்கு இங்கு யாவருக்கும் எளிதில் கிட்டுவதில்லை என்று ஒரு ஐஐடி சூழலில் இருக்கும் பேராசிரியர் ஒருவர் சொல்லாமல் சொல்லிப் போனதில் பாக்கியவானாய் உணரும் நேரம், இன்னும் அந்த வாயில் நுழையாத விஷ்ராந்தி உணவகத்தின் மோர்குழம்பு போண்டா இல்லாததற்கு காரணம் என்ன என்று ஜீயின் தகவலால் குழம்பிய நான், அங்கு கைகழுவும் நேரம் புரிந்து கொண்டேன்.

  பெரும்பாலோனோர் டிக்காஷன் கம்மியான காபியையே விரும்புகிறார்கள் போலும். வடவேங்கடத்துக்கு வெளியே தான் எதையாவது உருப்படியாக செய்ய முடியும் என்று சொன்ன தோழியின் வாக்கில் சத்தியமிருந்தது. 16ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் அதிக பலமிக்க ஆரியநாத முதலியார் செய்த சேவையை வைத்துக் கட்டமைத்த காலனிய கல்வி முறைமைகளை ஆவனப்படுத்தியிருக்கிறதா தெரியவில்லை, ஆர். ஆர் மறுபடியும் “இருந்துட்டுப் போகட்டும்” என்று சொல்லிப் போய்விட்டான்.

எனக்கோ, போலச்செய்த கட்டுரையின் WORK OF ART கண்டு பரமதிருப்தி.

“ஜீ – WORD COUNT – 630 வார்த்தைகள்!!”

- ஜீவ கரிகாலன்