வியாழன், 14 செப்டம்பர், 2017

ட்ரங்குப்பெட்டிக் கதைகள் குறித்த ஒரு நேர்காணல்

ஜீவகரிகாலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ட்ரங்கு பெட்டிக் கதைகள், தமிழ் சூழலில் இச்சிறுகதைகளின் வடிவமும் சொல் முறையும் புதிதானது, இத்தொகுப்பை முன்வைத்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்……

(எஸ்.செந்தில்குமார்)

1 கேள்வி: ஓவியங்கள் மேலான ஈடுபாட்டின் உந்துதலில் எழுதமுனைவதாகச் சொல்கிறீர்கள். ஓவியத்திற்கான பார்வை புரிதலும், சிறுகதைக்கான வாசிப்பு புரிதலும் வேறு வேறான வகைமை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களது கதைகளில் இந்த புரிதலை எவ்வாறு முன் வைக்க முயற்சிச் செய்கிறீர்கள்?



ஓவியத்திற்கான பார்வை புரிதலும், சிறுகதைக்கான வாசிப்பு புரிதலும் வெவ்வேறான வகைமை என்பது மிகத்தட்டையான புரிதல் என்று நம்புகிறேன்.

அடிப்படையில் கலை ஆழ்மனதிலிருந்து விழிப்புணர்வுக்கு இடையே நடக்கின்ற தொடர்புகளினால் வெளிப்படுத்தப்பட்ட வடிவம் என்று நம்புகிறேன். எந்தக் கலையையும் புரிந்துகொள்வதற்கு இருக்கும் தடைகளை நாமாக வைத்துக்கொள்கிறோம் அவ்வளவு தான்.

அடிப்படையில் என்னால் ஒரு ஓவியம் தீட்ட இயலாததால், நான் மொழியைப் பிரயோகிக்கிறேன். ஒரு கதை சொல்ல முடிகிறது. அவ்வளவு தான்.  


2 கேள்வி: 2c பஸ்ரூட் எதார்த்தமானகதை. கிராமங்களின் சித்தமும், நகர வாழ்வின் ஆபத்தான நெடுஞ்சாலை விபத்தையும் சொல்கிறது. இந்த அன்றாட எதார்த்தத்திலிருந்து ஓமேகாவின் லீனியர் வரலாறு என்கிற கதையை எழுதுகிறீர்கள். எதார்த்தமற்ற காலமும் வெளியும் அதில் படிந்துள்ளது. இதுதான் ஓவியத்திலிருந்து நீங்கள் எடுத்து கையாளும் முறையா?

வெறுமனே இந்தக் கதைகளில் இருந்து மட்டுமே கேள்வியை குறுக்கிவிடலாகாது. இந்தக் கதையைப் பொருத்தவரையில், ஒரு ஓவியர் – தன் அரூப ஓவியம் ஒன்றிட்கு உருவாக்கிய MASKING பாணியைக் கையாண்டிருக்கிறேன். வேறு வேறு வண்ணங்கள் ஒட்டியும் ஒட்டாமலும் காட்சி தரும்.



3 கேள்வி: கோடுகளில் நெளியும் காதல் கதை ஓவியக்கல்லூரி மாணவனின் வேலை சமரசத்தையும் கூடவே கீர்த்தனாவுடனான காதலை பின்புலமாக வைத்து கதையை முழுக்க முழுக்க அரூபத்தன்மையான குறியீடுகள் மூலமும் ஓவியத்தீற்றல்களின் வண்ணத் தீட்டுகளின் அழுத்தமும் அழுத்தமின்மையைப் போலவும் கதை நகர்ந்து செல்கிறது. கூடவே இசையின் துணுக்குகளும் கலந்துள்ளன. நேரடியான மொழியிலும் வடிவத்திலும் இந்த காதலைச் சொல்ல என்ன குழப்பம்?


நேரடியான மொழி என்று ஒன்றில் எழுத ஆரம்பித்தக் கதை தான். ஆனால் இதை ஒரு சிக்கலான கோட்டுச் சித்திரம் போன்ற வடிவத்தில் இதை மறு ஆக்கம் செய்தேன். நிறைய முறை திருப்பி எழுதிய கதை இது.

ஆயினும் நேரடியாகக் கதை சொல்வது என்பது பழைய சரக்கு என்று சொல்லமாட்டேன். என் பாட்டன் சொன்ன கதைகளும், புராணங்களுமே நேரடியாகச் சொல்லப்படவில்லையே.  அது ஒரு காதல் கதை, ஓவியனின் காதல் கதை. அந்த ஓவியனை நான் சந்தித்திருக்கிறேன். அவன் வாழ்க்கையில் ஓவியங்களும் , சப்தங்களும் நிறைந்திருக்கின்றன. இங்கே மீண்டும் குறிப்பிடுகிறேன் இது இசைத் துணுக்கு அல்ல – சப்தம்.. ஓவியர் இராமானுஜனும், வான்காவுக்கும் கேட்டிருந்த சப்தங்கள்.

ஒரு விஷயம் மட்டும் உறுதி, இந்தக் கதையை நான் இந்த வடிவத்திற்கு வரும் வரை எழுதிக்கொண்டிருப்பேன்.

4 கேள்வி: ஓவியங்களுக்கான படிமம் நிறங்களாலும் அழகியல் காட்சியாகவும் மட்டுமே உள்ள சாத்தியத்தில் சிறுகதையாளராக கதைக்குள் படிமத்தை அழகியல் காட்சியை மட்டுமே உருவாக்கி சிறுகதை வடிவத்தையும் சிறுகதைத் தன்மையையும் அதன் இலக்கையடைச் செய்திட முடியுமென நம்புகிறீர்களா?


சிறுகதைக்கு என்ன இலக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. நீங்கள் சிறுகதை ஆசிரியனாக என்னை பாவிக்கிறீர்கள் நன்றி. நான் கலைஞன் பார்க்கிறேன் சிறுகதை எனது வடிவம். அது என்ன இலக்கைக் கொண்டிருக்கிறதோ அதை நோக்கியே பயணிக்கிறது. இலக்கு எது என்பது எனக்குப் புலப்படவில்லை. பயணிப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறேன்.

5 அலெக்ஸ் கிராஸ்ன் ஓவியத்தை நீங்கள் கதையாக விவரணம் செய்த அனுபவம் எப்படி இருந்தது. இந்த கதை விவரணத்தை ஓவியப்புரிதலற்ற சிறுகதை வாசகன் புரிந்து கொள்வானா?

அந்த ஓவியம் தான் எனக்கு கதை சொல்வதற்கான புதிய வழிகளைக் கற்றுக்கொடுத்தது. அந்த ஓவியம் உருவாக்கிய மொழி தான் அது. இதுவரை இதை வாசித்துக் கருத்திட்டு அனைத்து வாசகர்களும் அதிகம் பிடித்துப்போன கதையாக இதனைச் சொல்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை தொடர்ந்து சிறுகதைகளை வாசிக்கின்ற ஒரு வாசகன் மிகத் திறமையானவன். வாசகன் புரிதலையும் கணக்கில் கொண்டு தான், அச்சிடுவதற்கு முன் சொற்கள் பயன்பாட்டில் கூடியமட்டும் எளிமையாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். கதைகளை அடுக்கிவைத்திருக்க முறையில் கூட ஒரு ஓவியக் கண்காட்சியில் எப்படி அடுக்கி வைக்க வேண்டும் என்று சொல்லப்படும் CREATIVE DISPLAY பற்றிய புரிதலும் உதவுகிறது. ஒரு பதிப்பாளனாக நாங்கள் பதிப்பிக்கும் மற்ற புத்தகங்களுக்கும் அதனையே முடிந்தமட்டும் வலியுறுத்துவேன்.

6 ஓவியத்தின் கேன்வாஸில் அதன் பார்வையாளர்கள் எங்கிருந்து வேண்டுமென்றாலும் பார்த்து கேன்வாஸின் மொத்த சித்திர உலகத்தை புரிய முயற்சிச்செய்யலாம். ஆனால் சிறுகதையை முதலிலிருந்துதானே தொடங்கவேண்டும். முதலிலிருந்துதானே வாசிக்கவேண்டும்.?

சிறுகதையை முதலிலிருந்து தானே தொடங்க வேண்டும். இந்தக் கேள்வி வாசகனுக்கானதும் கூட அல்லவா.

நான் விரும்புகின்ற சிறுகதைகளைத் தான் நான் எழுதியிருக்கிறேன். அது தான் நிதர்சனம்.

ஒரு நெடுஞ்சாலையின் ஏதோ ஒரு பகுதியில் நின்று கொண்டு நீங்கள் பார்ப்பதை எல்லாம் வரிசைப்படுத்தி நேர்கோட்டில் எழுதமுடியுமா? மீண்டும் மீண்டும் எழுதி அடித்தாலும் அது ஒழுங்கான வரிசையாக இருக்குமா. முதலில் இருந்து தொடங்கவேண்டும் என்பது விதியாக இருக்குமேயானால். மிக்க மகிழ்வுடனே அதை உடைப்பவனாகப் பெருமை கொள்ளலாம். ஆனால் ஆயிரமாண்டு பழைய வித்தை தானே.


7.எது சிறுகதையிலிருந்து ஓவியமாகவும் எது அடிப்படையில் ஓவியத்திலிருந்து சிறுகதையாகவும் உங்களது கதையில் இயங்குகிறது?

கதைகள் நான் உருவாக்குபவை தான், அதன் வடிவங்களுக்குத் தேவைப்படுகின்ற impressions வேறு ஒரு முன்னோடியின் சிறுகதையாக இருப்பதற்குப் பதிலாக. ஓவியங்களிடமிருந்து எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறேன், பனமலை தேவியின் ஓவியத்தைப் பார்க்கும் போது வசந்த மண்டபத்தின் சாபமும், சீயமங்கலம் கோபுரத்திலிருந்து காட்சியும், ஒரு மேற்கத்திய ஓவியத்தை அடிப்படையாக வைத்து மஞ்சள் பூவும் உருவாகக் காரணமாக இருந்தன. அது போல நாஞ்சில் நாடன் எனது ஆதர்ஷ எழுத்தாளராக நான் கருதிகிறேன். அவரது சாயல்களைக் கூட சில கதைகளின் கண்டதாக நண்பர்கள் சொன்னார்கள் ஒத்துக்கொண்டேன்.

8.MASKING பாணியிலான சிறுகதை தமிழில் எவ்வாறு சாத்தியமாகும்?
ஏன் சாத்தியமாகாது?


அடிப்படையில் நான் தமிழ்தேசிய உணர்வுகளை ஆதரிக்கும் அரசியலுடையவன். தமிழில் எல்லாவிதமான கலை முயற்சியும், கல்வி முயற்சியும் சாத்தியம் என்று நம்புகிறவன்.

 ஹைக்கூ என்கிற சித்திர மொழிகளுக்கான கவிதை வடிவமே தமிழில் எழுதப்படும்போது. தவிர MASKING என்று சொல்கின்ற ஒட்டியூற்றும் முறையில் ஒரு ஓவியம் எப்படி உருவாகிறது என்கிற அடிப்படையைப் புரிந்து கொண்டால், அதை சாத்தியப்படுத்த முடியும் என்று தோன்றியது. காட்சியும், ஒமேகாவும் அம்மாதிரியான முயற்சியே. தமிழில் சாத்தியமில்லாதவை வேறு எதில் சாத்தியமாகும்.  

10.அடிப்படையில் எழுத்தின் வாசிப்பால் மனதில் உருவாகும் எண்ணங்களக்கும் கண்களால் காட்சியாக மனதில் பதியும் சித்திரத்தை எவ்வாறு ஒன்றென முடிவுசெய்கிறீர்கள்?


  எண்ணங்களைப் பற்றி இப்படி வேறுபடுத்துப்பார்க்கும் நுட்பம் அறியேன். வாசிப்பால் உருவாகும் எழுத்தை விட அனுபவத்தால், பயணத்தால் கிட்டும் எண்ணங்களில் இருந்து உருவாகும் கலைப்படைப்புகள் வீரியமிக்கவையாக இருக்கும்.  உண்மையில் வாசிப்பும், காட்சியும் அவ்வாறான அனுபவத்தை வேறு வழிகளில் தான் பெறுகின்றன

அல்லது இப்படியும் சொல்லலாம் - வாசிப்பினால் உருவாகும் எண்ணங்களுக்கு ஏன் வடிவம் இருக்கக் கூடாது என்றோ, காட்சியாக மனதில் பதிந்தவை ஏன் மொழியில் சேகரித்து வைக்க முடியாது என்று இருக்கவேண்டும். கணினியின் பைனரி குறியீடுகளைப் போல் தான், எல்லாவற்றையும் மூளை சில துகள்களில் சேகரித்து வைப்பதாக நான் நம்புகிறேன்.

நான் முடிவு செய்ததாகக் கேட்பதன் ஆழ்மான அர்த்தத்தை - வாசிப்பின்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க முடியுமா என்றால் - அது முடியாது தான்.  ஏனென்றால் நம்மால் தொடர்ந்து பயணிக்கவும் முடியாது எல்லாவற்றையும் புரிந்து கொள்ளவும் முடியாது எல்லா அனுபவங்களும் பெற்றிடவும் முடியாது.





-நன்றி - பேசும் புதிய சக்தி - செப்டம்பர் மாத இதழ்
கேள்விகள் : எஸ்.செந்தில்குமார்

ஓவியங்கள் : நரேந்திரபாபு , அலெக்ஸ் க்ராஸ்

வியாழன், 7 செப்டம்பர், 2017

உண்மையும் மகத்தான உண்மையும்

(கதைக் கட்டுரை)

எரிக்கப்படும் நூலகங்களை விட எரிக்கப்படும் நூல் கவர்ச்சிகரமாய் இருக்கின்றது என்று ஒரு கட்டுரை எழுதுவதை விட ஆபத்தான செயல் என்னவாக இருக்க முடியும் என்கிறது யாளி? யாளியின் கேள்விகள் சற்று அசாதாரணமானவை, காலங்காலமாக எராடிக் சிற்பங்களைக் கொண்ட கற்மண்டபத் தூண்களை தாங்கிப் பிடிக்கும் வேலை செய்வதாலோ என்னமோ, எனது பதில் எத்தனைத் தாமதமாக வந்தாலும் அது ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் அதற்கு இருக்கிறது. ஆனால் என்னால் தான் அது திருப்தியடையும் அளவிற்கான ஒரு பதிலை சொல்லிவிட முடியவில்லை.

பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளும் உண்மை என்பது ஒரு மகத்தான பொய்யாக மட்டுமே இருக்க முடியும் என்கிறது அது.
என் நண்பன் மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான கவிதை வாசிப்புக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறான். அதில் தமிழில் யாரும் வந்து வாசிக்காததன் காரணம் அங்கே ஒன்று சொல்லப்பட்டது. நம்மைப் பொறுத்தவரை என்னவாக இருக்கும், தேசிய நீரோட்டத்தில் எப்போதுமே திராவிட நீரோட்டம் கலவாது தனித்தே இருக்கும் என்று பெருமை பேசுவோம். திராவிட அல்லது தமிழ் இருவேறு வார்த்தைகள் (அரசியல் ரீதியாக இவையிரண்டும் வெவ்வேறானது) தாண்டி என்ன காரணம் பேசிவிடக் கூடும் என்று எண்ணினால், மிகவும் அதிர்ச்சியான பதில் வருகிறது. அங்கே எழுத்தாளர்கள் எழுத முடியவில்லை என்று பரிகாசம் செய்திருக்கிறார்கள். சொந்த ஊர் மக்களே எழுத்தாளனை மிரட்டுகிறார்கள், புத்தகங்களை கிழிக்கிறார்கள், காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள். ஆகவே அங்கே ஒன்னும் புரட்சிகரமாக எழுதிவிட முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். மிகச்சுமாராக எழுதினால் கூட இப்படி எரித்து விடுவார்களா என்று அங்கேயே ஒருவர் கிண்டலடித்ததாகவும் தெரிவித்தார்.

அவர்கள் அந்த எழுத்தாளருக்கு எழுந்த பிரச்சினையை ஒட்டி அவருக்காக குரல் கொடுத்தவர்கள், அந்த நூலினை வாசித்தவர்கள். (கிட்டத்தட்ட முழுமையாக என்று சொல்ல முடியாவிட்டாலும், தூக்கம்வரும்வரை, அலுப்புத்தட்டும் வரை என்று பொருள்படுமாயின் – முழுமையாக என்று பொருள் கொள்ளுதலே சரி). அவர் ஒரு BEST SELLER ஆக மாறிப்போனது தான் அந்த காட்டுமிராண்டிச் சமூகத்திற்கு விழுந்த அடி என்று  சொல்லிக்கொண்டவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கல்புர்கி போன்ற எழுத்தாளர்களுக்கு நேர்ந்தக் கொடுமையைக் காட்டிலும், தமிழ்தேசம் எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பற்ற தேசம் என்று பறைசாற்றியதன் விளைவு, ஈரோட்டின் புத்தகக் கண்காட்சியிலும் அல்லது ஒட்டுமொத்தமாக அந்த ஊரில் ஒவ்வொரு ஆண்டும் விற்கப்படும் புத்தகங்களின் சந்தை தோராயமாக எட்டு கோடியாவது இருக்கும் என்று சொல்லப்படுவதன் பெருமையின் சங்கில் கால் வைத்து மிதிப்பதற்கு ஒப்பாகும். 



ஆனாலும் ஓவியர் சிவக்குமார் போன்ற ஜாம்பவான்கள் புத்தகம் வெளியிடுவதிலும் ஆர்வம் கொண்டிருப்பதற்கு அதுதான் காரணமோ என்று யாளி சொல்லும் போது எனக்கு மயிர்கூச்செரிந்தது.
அப்போது தான் கவனித்தேன், யாளிக்கு ஒரு பல் இல்லையென, எப்படி இது நிகழ்ந்தது என வினவும்போது, அந்த தூணினை SAND BLAST செய்ய வந்த ஒரு ஆலய பாதுகாப்புக் கமிட்டி ஓநாயைப் பார்த்து சற்று அதிகமாகவே கர்ஜிக்க வேண்டியிருந்ததாகவும், அப்போது பற்களில் சேதாரம் ஏற்பட்டதாகவும் சொல்லிற்று. “ஏன் நீ இன்னும் மற்ற யாளிகளைப் பார்க்கலையா” என்று என்னை வினவும் போது தான் கவனித்தேன். அந்த கோயிலின் ஒவ்வொரு தூண்களையும் தாங்கிக் கொண்டிருக்க்கும் யாளியின் பற்கள் சேதாரமடைந்திருந்தன.
இப்படி தங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காக கல் தூணை, மண்டபத்தின் பாரத்தை தாங்கும் யாளிகளுக்கு, பெரும் சோதனையாக இந்த தர்மகர்த்தா போர்வையில் வரும் புறம்போக்குகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்வது பெரும்பாடாகப் போயிற்று, கோயில் வேறு தோஷப்பரிகாரம் என்று Promote செய்யப்பட்டுவிட்டதால், பெருகிவரும் கூட்டத்தை நம்பவைக்க கம்பிகேட் போட்டு மக்களை மூலவரை நோக்கி மட்டும் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது நிர்வாகம், யாராவது திரும்பி தங்களையோ, அல்லது தங்கள் கீழிருக்கும் மன்மத, ரதி மற்றும் இத்யாதி சிற்பங்களைப் பார்க்க யத்தனிக்கும் மக்களைத் தள்ளிவிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.


இப்படித் தள்ளிவிட்டுக் கொண்டே இருந்தால் தான் மக்கட்கூட்டம் அதிகமாகும், தரிசனத்தின் நேரத்தைக் குறைத்தால் தான் தரிசனத்தின் மகிமை பெரியதாகச் சொல்லப்படும் என்று சொல்வதற்கு, எங்கிருந்தோ ஒரு குந்தவைத்து அமர்ந்திருக்கும் சேட்டன் ஸ்வாமியும், பற்றற்ற தீர்த்தங்கரனாக இருந்து பகட்டான ஆடை அணிகலன்களோடு சௌபாக்கியமாக வாழும் பெருமாளும் ஆமாம் ஆமாம் என்று சொன்னது காதில் விழுந்தது.

அந்த கவிதை வாசிப்புக் கூட்டத்தில், மக்களால் அடித்துத் துவைத்து மிரட்டப்பட்டு விரட்டப்பட்டதாக நம்பப்படும் எழுத்தாளரின் நிலை இப்போது எப்படி இருக்குமோ என்கிற பரிதாபமிருந்தது. அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல திரும்ப வந்திருக்கிறார் என்பதோ, இந்தக் கால இடைவெளியில் அவர் புத்தகங்களே எழுதிக்கொண்டிருந்தார் என்பதே தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தமட்டிலும், தமிழ்சூழலில் ஒரு கவிஞன் எப்படி வந்துவிட முடியும் என்பது தான். அது ஓரளவுக்கு உண்மையும் கூட, கவிகள் உருவாகிட முடியாமல் போனதன் காரணம் கவிகள் தானே தவிர மக்கள் இல்லை என்று அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் மிக துரதிர்ஷ்டமானது.

என் மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட யாளியும் “நீ சொல்வது சரிதான்” என்றது. மேலும் அது “இங்கிருக்கும் சிலைகளை சேதாரப்படுத்தக் காரணம் யார் தெரியுமா?” என்று கேட்கும் பொழுது. அந்த தர்மகர்த்தானே என்று பதில் சொல்லும்போது. யாளி சிரித்துக்கொண்டே சொன்னது:
“அது மறைக்கப்பட்ட உண்மை, ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்பது வேறு ” என்றது. ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்பது மகத்தான ஒரு பொய்யும் கூட என்று யாளி சொன்னதைத் திரும்ப சொல்லிக்கொண்டேன்.

அப்படி என்ன தான் ஏற்றுக்கொண்டார்கள் என்று கேட்டவாறு, பதிலுக்கு காத்த்திருக்க முடியாமல், பின்னே இருந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டு செல்ல, சில தூரம் நான் நடந்து சென்றதும் மீண்டும் அந்தக் கூட்டம் நிறுத்திவைக்கப் பட்டது. எனக்கு ரகஸியம் சொல்ல வந்த யாளி தன் பக்கத்து தூணிலிருந்த யாளியிடம் ஏதோ சொன்னது. அது மெதுவாக ஒவ்வொரு யாளியாக மாற்றி மாற்றி அந்த ரகசியத்தை சொல்லிக்கொண்டே வர, அவர்கள் அசைய ஆரம்பித்ததும். விதானத்துச் சுவர்களில் வரையப்பட்டிருந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்தன. இறுதியாக என் அருகே இருக்கும் யாளிக்கு அந்த ரகசியம் சொல்லப்பட, அது தன் காலின் கீழே நின்றிருந்த நைட்டி அணிந்த தேவதையிடம் சொல்லிவிட்டது. நான் அவளருகில் சென்றேன்.

பதில் சொல்லுமாறு அவள் காதருகே சென்றால்,
“ரகசியத்தைச் சொல்கிறேன். ஆனால் பல நூறு ஆண்டுகளாய் எனக்கிருந்த சுதந்திரத்தை, இப்போது வந்த சில ராட்சதர்கள் கெடுத்துவிட்டார்கள். எல்லா தூண்களில் இருக்கின்ற தேவதைகள் மட்டுமல்ல, உற்சவத்திற்கு கிளம்பும் மூர்த்தியே என்னைக் கடக்கும்போது சற்று திரும்பி என்னைப் பார்த்தபடியே தான் செல்வார். இப்போது இந்த யாளி பய கூட என்னை மதிக்க மாட்டிங்கிறான் ” என்று அழுதது.

சரி அதற்கு நான் என்ன செய்துவிட முடியும். அந்த ரகசியம் என்னவென்று சொன்னால் தான் என்னவாம் என அவள் மீது கோபம்வந்தாலும் பொறுமையாய் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது.

இப்ப உனக்கு என்னாச்சு தேவதையே!

“இன்னுமாடா உனக்குப் புரியலை. என் நிலையைப் பார்.” என்றது எனக்குப் புரியவில்லை என்றதும் அதுவே தொடர்ந்தது. “சுமார் ஆறு மாதக்காலத்திற்கு முன்னர், எனக்கு இந்த உடையை தைத்துப் போட்டார்கள்.”

பார்ப்பதற்கு அது ஒரு நைட்டி போல இருந்தது. அற்புதமான அந்த நிர்வாண சிலையை கூட்டத்தில் வருகின்ற பெண்கள் குழந்தைகளுக்கு ஆபாசமாகத் தோன்றுவதால் அதை அகற்ற வேண்டும் என்கிற ஆலயம் செல்லும் பக்தர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைக்க, துரிதமாகவும், சமயோஜிதமாகவும் செயல்பட்ட ஆலய நிர்வாகக் குழு, அந்த சிலைக்கு ஒரு நைட்டியைத் தைத்துப் போட்டது.

நான் அந்த ரகசியத்தை அவளிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அது சொன்ன நிபந்தனையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவள் பேரழகி வேறு, தன் ஆடையைக் கழட்டச் சொல்லும் எந்தப் பெண்ணுமே அழகானவளாகின்றாள், இவள் பேரழகி வேறு, அதிலும் அவள் தேவதை வேறு, அதிலும் அவள் சிற்பம் வேறு. கரும்புத் தின்னக் கூலியா என்பது போல் அவளருகே நின்று அவள் காதருகே சென்று, இப்போது உன் ஆடையைக் கழட்டுகிறேன்.

கழட்டியதும் எனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லு என்று அவள் முதுகில் இருந்த கொக்கியைக் கழட்டினேன். கிளர்ச்சியானது.

“Thank you” என்று சொன்னது.

மெதுவாக அவள் ஆடையைக் கீழிருந்து மேலாகத் தூக்கும் போது, என் மீது ஒரு தேங்காய் மூடி வேகமாக வந்து விழுந்தது.

அவள் சொல்லாத அந்த ரகசியத்தை….

அந்த செந்தூரமணிந்த மூன்று முரடர்களில் முதலாமவன் என் முகத்தில் ஓங்கிக் குத்துவிட, மூக்கில் ரத்தம் கொட்டியது. ஏற்கனவே காதில் அவர்கள் அறைந்ததன் விளைவாக சங்கொலி கேட்டுக் கொண்டிருந்தது. 

அவர்கள் என்னைப் பற்றி முன்முடிவு கொண்டிருந்தார்கள்

”உம் பேரென்னடா”


“காளிதாசன்னா இருக்கும், இந்த நாய் பேரும் மாலிக் கபூராதான் டா இருக்கும்”

- அகநாழிகை ஆகஸ்டு மாத இதழில்