புதன், 16 மே, 2012

A tribute to my lovely poet.


...இலக்கியத்தை கொண்டு சேர்க்க வேண்டிய பத்திரிக்கைகள் எல்லாம் இன்று முகநூல் வலைப்பேச்சுகளுக்கு (தங்கள் வியாபாரத்திற்காக) தங்கள் பத்திரிக்கையில் சில பக்கங்கள் தருகின்றன. அவை கொண்டு சேர்க்க வேண்டிய இலக்கியத்தை ஒரு கவிஞன் செய்கிறான். அவருக்கு என் சில வரிகள் சமர்ப்பணங்கள் 



.                       அவர் ஒரு மாபெரும் கவிஞர், எந்நேரமும் கவிதைகளோடு ஆலிங்கனம் செய்துக் கொண்டிருப்பார், அவரை அவர்  கவிதைகளில் இருந்து பிரித்தே எடுக்க முடியாது. அவர் ஒரு மாமரம், தினம் தினம் திகட்டும் கனிகளைத் தருபவர் .. அம்மரத்தில் சிந்தனைப் பூக்கள் மலர்ந்து, அது கவிதைக் கனிகளாய் மாறும்.

                   அதில் ஒன்று ஒன்று ஜென் கனி , மற்றொன்று குழந்தைக் கனி , மற்றொன்று காதல் கனி , சில காமக் கனி, சில விளையாட்டுக் கனி, சில உரைநடைக் கனி, சில நட்புக் கனி , சில துயரக் கனி , சில பலவண்ணக் கனி, அவர் ஒரு கவிமாமரம்.

                         இன்றும் அவருக்கு கிளைகளாய், சிறு கன்றாய் பல கவிஞர்கள் முளைத்தனர். அவர்களின் கனிகளுக்கு இவரே அன்பெனும் அடிவேரில் உயிர் சத்துக் கொடுக்கிறார், சில வெட்டுபட்ட கிளைகளுக்கு கவிதைகளால் பச்சையம் கொண்டு உயிர்கொடுக்கிறார். அவரது கிளைகளில் பல தேசங்களின் பறவைகள் இளைப்பாறுகின்றன.  
               
                     சில பறவைகள் அங்கேயே கூடு கட்டி இருக்கின்றன. சில பறவைகள் அந்தக் கவிதைக் கனியின் விதைகளை பல இடங்களுக்குப் பரப்புகின்றன.அங்கே எழும் மரங்களும் மாமரத்தின் கிளைகளே. மாமரமாய் மாறிய அவன், பறவைகளுக்காகவே கனி தருகிறான். பறவைகளின் உணவாகவும், அதன் எச்சங்களாகவும், அதுவே சில மரங்களின் விதையாகவும் ஆகின்றன. கனிகளும் , பறவைகளும் , அவனாகிய அம்மரமும் ஒன்றே அவர்களைப் பிரிக்க முடியாது. அல்லது அந்த மரத்தின் பாகங்களே அந்தப் பறவைகள்.

                        சில நேரம் சில மனிதர்கள் வருகின்றனர் அந்த மாமரத்தின் கனிகளைப் பறவைகளுக்குத் தருவதற்காக அதன் கனிகளைக் கேட்கின்றனர், அதற்கு பதிலாய் மூன்று குடம் நீருற்றும் உடன்படிக்கைத் தருகின்றனர்.. நீர் என்ற விலைக்கு கனிகள் தரும் காரணம், அம்மரம் உயிர்த்தலில் இன்னும் கனிகள் தரவேண்டும் என்பதே. ஆனால் கனியை வாங்கும் சிலர் அதை யாருக்கும் உண்ணத் தராமல் அழுகிப் போகக் காரணமாகின்றனர். பறவைகள் சில அதைக் கண்டு உயிர் கசிகின்றது ... கவிமரமோ தினமும் கனிகளைத் தந்து கொண்டே இருக்கிறது. இதைப் பற்றிக் கவலைப் படாத கவிமாமரம் கனிகளை மட்டுமே தந்துக் கொண்டிருக்கின்றன, சில நேர்ணகளில்  அதன் மேல் விழும் கோடாரிக் காயங்களின் ரணத்திலும் அது தரும் கனிகள் இனிப்பாகவே இருக்கின்றன.  


              அந்த மாமரத்தின் நீருக்காக பறவைகள் கானம் பாடுகிறது. இனி கவிமாமரத்திற்கு நீர்க் குடங்கள் தேவையில்லை .... கார் முகில்கள் ஒருமித்து மாமரத்தை குளிர்விக்க, ஒன்றுடன் ஒன்று  புணர ஆரம்பித்துவிட்டன..... இனி மழை பெய்யும் எனப் பறவைகள் ஆரவாரமிட்டு கவிஞனின் கிளை மடியில் நிம்மதியுடன் அமர்ந்து விட, முகில்கள் புணர்ந்தும் மழை பெய்ய தாமதித்தது.  

ஒரே கரி(யா) பறவை முகில்களிடம் சொன்னது , "ஓ முகில்களே புணர்ந்தது போதும் பொழியுங்கள் இங்கே உங்களுக்குப் பரிசாய் எங்கள் மரம் மழைக்கனியைப் பிரசவிக்கும்" ..... மழை பொழிய ஆரம்பித்தது . 


A tribute to my lovely poet....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக