செவ்வாய், 15 மே, 2012

சீனத்து நிலையும் சென்னையின் விலையும்




சீனத்து நிலையும் சென்னையின் விலையும்


               முதல் தகவல் : ஒரு இணைய இதழில் வந்த செய்தி - உலகில் உள்ள நாடுகளில் நகரமயமாக்கலில் முதல் இடத்தில் இருப்பது இந்தியா தான் என்றும், இந்தியாவில் நகரமயமாக்கலில் முதல் இடத்தில் இருப்பது நம் சென்னை தான். நம் நாட்டில் 30௦% மக்கட் தொகை வசிக்கும் மக்கட்தொகை 2030க்குள் நாற்பது சதவீதம் அளவிற்கு போய்விடும் என்றும் , சென்னையிலோ மக்கட் தொகை தமிழகத்தின் தமிழகத்தின் தற்போதைய மக்கட்தொகையில் 53% இருக்கிறது என்றும், அதுவும் கூட 2030இல் 67 % ஆகிவிடும் - என்ற செய்தி உள்ளது.


                          இரண்டாம் தகவல்: CNN money - "Beware of China's Epic Property Bubble " எனும் கட்டுரை சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் வீழ்ச்சியைப் பற்றிய தகவல்களை எச்சரிக்கையாக அளித்துள்ளது. இதில் "சீனாவில் அசுர வளர்ச்சி அடைந்த கட்டுமானம், அசையா சொத்துகள் , ரியல் எஸ்டேட் , ஹவுசிங் என எல்லாத் துறைகளிலும் பெருத்த சரிவு ஒன்று வரும் என்று எதிர்பார்ப்பதால் சீனாவை அடிப்படையாய் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று சொல்கிறது.

         மேலே சொன்ன இரு தகவல்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தோன்றுகிறதா ?? தொடர்ந்து படியுங்கள்

*****

               மூன்றாம் தகவல்: தேசியக் குற்றப் பதிவேடுகளில் இருந்து ஒரு புள்ளிவிவரம் கடுமையான அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. அது என்னவென்றால், தமிழகத்தில் நடக்கும் தற்கொலைகளின் எண்ணிக்கை தான், இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒன்று தமிழகத்தில் தான் நடப்பதாக அந்த அறிக்கை சொல்கிறது. அதில் பெரும்பான்மையான தற்கொலைகள் வறுமையின் காரணமாய் நிகழ்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.தமிழகத்தில் அதிகமாக தற்கொலைகள் நிகழும் இடம் கூட சென்னையே என்று அந்த புள்ளிவிவரம் மேலும் தெரிவிக்கிறது.


ஒருபக்கம் விவசாயிகள் தற்கொலை, தினக்கூலிகள் தற்கொலை என்று கிராமங்களில் இருக்க மற்றொரு புறம் நகரத்தின் கோரப் பிடியில் சிக்கிக் கொண்டு, சிக்கனமாய் எளிய வாழ்க்கை நடத்தினாலும் நிம்மதியாய் வாழ முடியாமல் தினம் தினமும் செத்துப் பிழைக்கும் எதோ ஒரு நடுத்தரக் குடும்பம் பற்றிய செய்தி வந்துக் கொண்டே இருக்கிறது. அவற்றின் சோகச் சித்திரங்கள் நம் நகரத்தின் வரலாற்றில் அழிக்க முடியாதது.

தற்கொலை நிகழ்வதற்கு முன்னர் ஒரு மனிதன் வாழ்வின் தன் வாழ்வில் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விடுகிறான், அவனது கனவுகள் , நம்பிக்கை, ஆசைகள் ஆகியன எல்லாம் அவனை விட்டு வெளி சென்று மடிந்த பின்னர் தான், அவனும் தற்கொலைக்கு முயல்கிறான். இந்தப் புள்ளிவிவரம் சொல்லிய விஷயத்தை கூர்ந்து நோக்கினால் இன்னொரு விஷயம் புலப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் பீகார்,ஒரிசா போன்ற சில வட கிழக்கு மாநிலங்களைக் காட்டிலும் சென்னையில் தற்கொலை எண்ணிக்கை அதிகம் என்றால் என்ன காரணமாக இருக்கும்??

நகரமயமாதல் (நரகமயமாதல் )

           வேகமாக மாறி வரும் கலாசாரத் தேவைகளுக்கும்,கல்வித் தேவைகளும், கிராமப் புறங்களில் அழிந்து வரும் விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களும் நகரமயமாதலை நியாயப் படுத்துகின்றன. ஏன் ?? ஒரு நல்ல விவசாயக் குடும்பத்தில் இருந்து வரும் ஒருவன் கூட தன் கல்வியைக் காரணம் காட்டி விவசாயத்தை புறக்கணித்துவிட்டு நகரம் நோக்கி தான் பயணிக்கிறான். ஆனால்  அவன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகத் தான் நகரத்தில் அவனுக்குத் துயரங்கள் நேர்கிறது. நகரத்தின் செலவீனங்களை அடக்கத் தெரியாமல், அவசியத்திற்கு அப்பாற்பட்ட செல்போன், டிவி, ஃ பிரிட்ஜ், ஏ.சீஎன எல்லாமும் அவனுக்கு தேவைப் படுகின்றன.


                 ஆனால் நகரத்தில் மத்திய தர வர்க்கம் இன்று படும் இன்னல்களில் முதன்மையானது அவர்களுக்கான இருப்பிடம். ஒரு நபர் வருமானத்தில் சாதாரணமாக 50 %வரை குடியிருப்பதற்கான வாடகையாக ஒரு நடுத்தர வர்க்க மனிதன் கொடுக்கிறான். கல்வியிலிருந்து, உணவுப் பழக்க வழக்கங்கள் வரை நமக்கு செயற்கையாக, ஆடம்பரமாக நம்மை ஆட்டுவித்து செலவுகளுக்கு ஈடு செய்ய முடியாமல் ஒவ்வொரு மாதமும் இது தவிக்கும் தொடர்கதையாகச் செல்கிறது.

           இதில் இப்பொழுது, வாடகை வீட்டில் வசிப்போர்களை மட்டும் எடுத்துக் கொள்வோம் . ஒரு மனிதனுக்கு குடியிருப்பதற்கான இடம் என்பது ஒரு அடிப்படை உரிமை ஆகும், உலக சுகாதார அமைப்பு இதற்கான குறைந்தபட்ச தரத்தை நிர்ணயித்துள்ளது, அதில் பிரதிநிதி நாடுகள் (இந்தியா உட்பட ) கையெழுத்திட்டன. ஐ.நாவின் சட்டங்களில் ஆர்டிகிள் 25 விவரிக்கும் அடிப்படை மனித உரிமையில் வரும் Minimum space for Dwelling , "ஒரு மனிதன் வசிப்பதற்கு குறைந்தபட்ச இடமாக முன்னூற்றைம்பது சதுர அடிகளாவது (350 sq feet ) இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதே போல சுகாதர்ரம், குடிநீர், கழிவறை போன்ற வசதிகள் எல்லோருக்கும் அடிப்படை உரிமை என்றும் சொல்லியுள்ளது. இந்த ஊரில்(சென்னையில் ) வாடகைக்கு இருப்போரின் நிலைமையைப் பாருங்கள் எட்டுக்கு பத்து அடிகொண்ட ஒரே ஒரு ரூமில் ஒரு குடித்தனத்திற்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் (குறைந்தபட்சம்) கொடுக்க வேண்டிய கொடுமை , இதில் பல குடித்தனங்களுக்கிடையே பங்கிடப்படும் மின்சாரம் , தண்ணீர் என்று 200 -இலிருந்து 500 வரை வாங்கிக் கொண்டு , எல்லாவற்றிற்கும் மேல் மின்சாரத்திற்கு என இப்பொழுது ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய் வாங்குகிறார்கள்.


         மின்சாரம் திருடுவது குற்றம் என்று சொல்லும் நம் அரசாங்கங்கள், இதுபோன்ற மின்சாரக் கொள்ளையினை கண்டு கொள்ளாதது ஏனோ ? சட்டம் இருப்பதை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை(Sections 142 and 146 of the Electricity Act 2003, இதன் படி மின்சாரக் கட்டணம் அதிகம் வசூலிப்பவர்களிடம் ஒரு லட்சம் அபராதமும் மூன்று மாதம் வரை சிறைத் தண்டனையும் அனுபவிக்க நேரிடும்). ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு வீட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடும் தைரியமும் , நேரமும் , வசதியும் இருக்கின்றது ?? எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்தோ அல்லது தற்பொழுது குடியிருக்கும் வீட்டை விட தொலைவிலோ அல்லது வசதிக் குறைந்த வீட்டிற்கோ இடம் பெயருகின்றனர்.

          சக மனிதர்கள் மீது நம்பிக்கை வைக்காத , அன்பு வைக்காத மனிதர்கள் வாழும் பணத்தை மட்டுமே அளவுகோலாய் கொண்ட சமூகம், இந்த நகரத்தை நாம் வாழத் தகுதியற்றதாக்கி விடுகிறது.. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் ஒரு தலையங்கம் , "கட்டிற்கடங்காத உயரத்தில் செல்லும் தொழில் முன்னேற்றமும் , நகரமயமாதலும் , சுற்றுப் புற சீர்கேடும் சமீபத்தில் வாழும் தகுதியை இழந்துக் கொண்டிருக்கும் பெங்களூரு" என்று 'பசுமை நகரத்தையே' சாடியது. இன்று பெங்களூரில் முன்பு போல மிதமான தட்ப வெப்ப நிலை இருப்பதில்லை, கணக்கிலடங்கா வாகனக் கூட்டம் கார்டன் நகரத்தை, கார்பன் நகரம் ஆக்கிவிட்டது.

            பொருளாதரத்தில், வணிகத்தில் , அறிவியலில் ஒரு விதி ஒன்று இருக்கிறது அதற்குப் பெயர் "லைஃப் சைக்கிள்". எந்த ஒரு ஏற்றத்தையும் தொடர்ந்து ஒரு இறக்கமும் வரும் எனபதுதான் அது, அதுவே கட்டுக்கடங்காத ஏற்றம் உள்ள சந்தையில், சரிவும் மிகப் பெரியதாகவே இருக்கும். சென்னை போன்ற பெருநகரங்களில் நடந்துக் கொண்டிருக்கும் அபார்ட்மென்ட் புரட்சி மிகவும் அசுர வளர்ச்சியில் போய்க் கொண்டிருக்கிறது, அதுவும் மெட்ரோ ரயில் திட்டம் போன்ற உயர்வசதி உள்கட்டமைப்புகள் எல்லாம் நகரத்தில் உள்ள நடுத்தர மற்றும் பாமர மக்களை வெகுவாக பாதித்து நகரத்தில் வாழமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகி வருகிறது, வங்கியில் கடன் பெற்று வாங்கும் அதிக மதிப்புடைய அப்பார்ட்மென்ட்டுகள் கடனை கட்ட முடியாத சூழ்நிலைக்கு பலர் தள்ளப் படுகின்றனர்.


            நகரவாழ்க்கை தாக்குபிடிக்காமல் கிராமங்களுக்குத் திரும்ப அவர்களுக்கு விவசாயம் செய்யும் சூழ்நிலையும் இல்லை, ஏன் விவசாய நிலங்களும் பிளாட்களாக ஆரம்பித்துவிட்டன.எங்கும் நகர முடியாத சூழ்நிலைக் கைதி தன் வாழ்வை முடித்துக் கொள்ள யத்தனிக்கிறான். சமூகத்தின் ஒரு நடுத்தர வர்க்கம் முழுதமாக பாதிக்கப் படும் பொழுது, அந்தப் பாவம் நகரத்தின் அடுக்குமாடிகளையும் குறிவைக்கும்.

******



சீனாவிலுள்ள காலியாக இருக்கும் ஒரு வணிக வளாகம்: விக்கிபீடியா




2 . உலகப் பொருளாதரத்தில் அசுர வேகத்தில் முன்னேறிய மாபெரும் சக்தி என வரலாறு படைத்த சீனா, தன்னை கம்யுனிச நாடாக அரிதாரம் பூசிக் கொண்டாலும்அது ஒரு உலகமயமாக்களில் உருவான மாபெரும் வணிகப் பிரதேசமாய்தன் நாட்டிற்குள் அந்நிய முதலீட்டை அனுமதித்தது. அமெரிக்காவின் நுகர்வு சந்தைக்கான உற்பத்தியும்,அவர்கள் நுகர்விற்கு மூலாதாரமான சேமிப்பும் சீனாவிடம் இருந்தே பெருமளவு பெறப்பட்டனஅமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டம் காணும் போதே சீனாவும் ஆட ஆரம்பித்தது. ஆனால் உலக அரங்கில் அதன்உற்பத்தியை மேற்கோளிட்டு தன் விற்பனை குறைந்து வருவதை சிவப்புத் துணிக்குள் மறைத்து வைத்திருந்தது.


ஆனால் இன்றோ கட்டுமானத் துறையில் உயர்-விலை - வருமானம் விகிதமும் (high price -income ratio), விலை - வாடகை விகிதமும்(price - rental ratio) கட்டுக்கடங்காத உயரத்தில் சென்று ஆறு கோடியே நாற்பது லட்சம் அபார்ட்மேன்டுகள் காலியாக உள்ளன.இது ஒன்றே அந்த நாட்டின் முழுக் கட்டுமானத் துறையினையும் வலுவிழக்கப் போதுமான சவாலாகும். இது மிகப் பெரிய பொருளாதாரப் பாடமாக உலக அரங்கில் எடுத்துக் கொள்ளப்பட்டாலும்இதற்கு தொடக்கப் புள்ளியாய் அமைந்தது ஒரு எளிய காரணமே, அது கீழே தரப்பட்டுள்ளது.

*******

நம் நாட்டிலும் இந்த நிலை நீடித்துக் கொண்டே போனால் நகர வாழ்க்கையில் தாக்குப் பிடிக்க தற்கொலையைத் தாண்டும் வாழும் வைர நெஞ்சங்கள் இதே நிலை தொடர்ந்தால் அவர்கள் வசிக்கும் ஓரளவு அடிப்படை வசதி கொண்ட இடத்தை விட்டுப் புலம் பெயர்வார்கள். அந்த மத்திய வர்கத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் இன்று டெல்லி,பம்பாய்,கொல்கத்தா,சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் சபிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளான பல்லாயிரம் மக்கள் வாழும் இடங்களான தாராவி(மும்பை)பால்ஸ்வா(டெல்லி),நொச்சிக்குப்பம்(சென்னை),ராஜேந்திரநகர் (பெங்களூரு) பாசந்தி (கொல்கத்தா) போன்ற இடங்களில் இடம் பெயரும் நிலைக்கு ஆளாவார்கள்.. குடிசை ஒழிப்பு வாரியம் என்பது அமைச்சருக்கான ஒரு பதவி வாய்ப்பாக மட்டுமே இருக்கும்.

*******

நம் நாட்டின் ரியல் எஸ்டேட்கட்டுமானங்கள் வளர்ச்சி ஒரு நீர்குமிழியைப் போலே பெரிதாகிக் கொண்டிருக்கசீனாவைத் தொடர்ந்து நம் நாட்டிலும் பல அடுக்குமாடி குடியிருப்புகளும்வணிக மையங்களும்மால்களும் காற்றுவாங்க ஆரம்பிக்கும்ஆனால் அதன் விலையோ அல்லது வாடகையோ மட்டும் குறையவே குறையாது. ஒரு அரசாங்கம் நாட்டின் விளிம்பு நிலை மத்திய வர்கத்தின் கவலைகளை பார்வையிடாமல் (அக்கறை கொள்ளாமல்)ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானச் சந்தையின் அசுர வளர்ச்சிக்கு உதவி புரிந்ததால் தான் இந்த தேக்க நிலை உருவானது என்பதை நீங்கள் உணர வேண்டும்.ஏற்கனவே நான் சொன்னது போல,இந்த மிகப் பெரிய பொருளாதார சிக்கல் அடிப்படையில் ஒரு எளிய காரணத்தை பின்புலமாக கொண்டது.

ஒரு உதாரணத்திற்காக சென்னையில் ஒரு சதுரஅடியின் விலை 700 ரூபாயிலிருந்து, 3000, 3500 ரூபாயிலிருந்து எனப் புறநகர் பகுதியிலும், 10000 /- 12000 /- என நகரத்தின் முக்கியமான இடங்களில் ஏறிக்கொண்டே போகிறது. இது அதிக எண்ணிக்கையில் நாள் தோறும் மக்கள் குடியேறும் ஒரு மாநகரத்தின் நிலை என்று ஏற்றுக் கொண்டாலும். சில சிறு நகரங்களில் கூட இது போன்ற நிலை இருப்பது நம்மை எல்லாம் தலை சுற்ற வைக்கும், ஆம், கரூர் நகரத்தில் மையப் பகுதியில் சதுர அடி ரூபாய் 10000இலிருந்து 20000வரை வரை போகின்றது என்ற தகவலை ஒப்பிட்டு பாருங்கள், செயற்கையான ஏற்றம் தான் இந்த சந்தையினை கட்டுக்கடங்காத உயரத்தில் கொண்டு போய்விட்டது.


காரணம் :

தன் சக மனிதனை வாழ விடாமல் தடுக்கும் எந்த ஒரு சமூகமும்,அதே காரணத்தால் தான் மிகப் பெரும் பின் விளைவுகளை எல்லாம் சந்திக்க நேரிடும் என்பதே அந்தக் காரணம் ஆகும். அன்று சீனா செய்த தவறுக்கு இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இன்று நம் ஊரிலும் அளவிற்கு அதிகமாய் வீட்டு வாடகை வசூலித்துஅடிப்படை வசதிகளை பலபேருக்கு எட்டாக் கனியாக்குபவர்களுக்கும் வண்ண வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டகுளிரூட்டிய ஷாப்பிங் மால்களுக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது.


நகரத்தில் வசிக்க ஒருவனுக்கு அடிப்படை வசதி கூட தர மறுக்கும் சமுதாயத்தில் இப்படிப் பட்ட நீர்க்குமிழிகள் வந்து தான் பொருளாதாரத்தை ஆட்டுவிக்கும் .இது மாற்றுப் பொருளாதாரத்தின் தேவையை உணரச் செய்யும்.

இரண்டு செய்திகளுக்கு உள்ள சம்பந்தம் இப்பொழுது தெரிகிறதா ???

இந்த மாதிரியான சூழ்நிலையில் யாரும் நகரத்தை விட்டோ, அல்லது செய்கின்ற தொழிலை விட்டோ உடனடியாக வேறு எதுவும் செய்ய முடியாது. நாட்டின் பொருளாதராக் கொள்கைகளும் ஒரே நாளில் மாற்றி அதனால் பலன் பெற முடியாது. ஆக, இதைப் பற்றிய விழிப்புணர்வு வேண்டும் கடன் கிடைக்கிறதே என்று சொல்லி அதிக தொகை கொடுத்து பிளாட் வாங்குவதை யோசிக்க வேண்டும். அளவுக்கதிகமான செலவீனங்களைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேல் சகமனிதர்களையும் அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். எந்த மாற்றமும் ஒரு புள்ளியில் இருந்து தான் தொடங்குகிறது, அது தொடங்கட்டும். 


--ஜீவ.கரிகாலன் 












1 கருத்து:

  1. மணலில் தோண்டினால் லகுவாக இருக்கிறது என்று தொண்டிக்கொண்டே போனால் அந்த மணல்குழி தொண்டுபவனை மூடிப் புதைத்துவிடும். அதுபோல வரைமுறையின்றி மக்களைக் கொள்ளையடித்துக்கொண்டே போனால் மக்கள் பாதைமாற்றிக் கொண்டால் இவர்கள் விரிக்கும் வலையில் இவர்களே மாட்டிக்கொள்வார்கள் . என்பதைத்தான் இது காட்டுகிறது. சீனாகூட தாக்குப்பிடிக்கும். இந்தியத் திருடர்களுக்கு அந்தத் துணிவும் இல்லை! திருடமட்டும்தான் தெரியும்!பாவம் மக்கள்!

    பதிலளிநீக்கு