வியாழன், 29 மே, 2014

ஆகவே.....ஜல்லிக்கட்டு வேண்டும். (பஜ்ஜி - சொஜ்ஜி -70)

ப்ளுக்ராஸ் அமைப்பில் வரும் பதிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்தபடி இருப்பது எனது வாடிக்கைகளில் ஒன்று, ஒரு நாள் அவர்கள் பதிந்த செய்தியில்  சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் எதிரொலியாக காட்டுமிராண்டித்தனமான ஜல்லிக்கட்டுகளில் இருந்து காப்பாற்றப் பட்ட காளைகள் கேரளாவில் அடிமாடுகளாகக் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து அறிக்கை ஒன்றை பகிர்ந்திருந்தது. இதில் இரண்டு அதிர்ச்சிகள் 

1. காளைகளினால் வேறு பயனில்லாததால் அவை அடிமாடுகளாகிப் போன துயரம்.
2. நமது வாழ்க்கை முறை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களாக ஜல்லிக்கட்டினை தவறாகப் புரிந்து கொண்ட ஒரு மேட்டிமைத்தனம் உருவாகியிருப்பது.

*
சுதந்திரம் அடையும்போது நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருந்த இந்தியாவில், இன்றைக்கு கிட்டதட்ட 30 வகையான நாட்டு மாடுகளே இன்றைக்கு இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதில் ஒரு இனம் அழிந்த வரலாற்றை உங்களுக்கு சொல்கிறேன், காங்கயம் காளைகளைப் போல் ஒரிஸ்ஸாவின் தட்பவெப்பத்திற்கும் வறட்சியில் வாழ்வதற்கு ஏற்ற அவ்வூரின் பூர்வீகக் காளை இனம் - காரியார் காளைகள்.

அந்த ஊரின் வறட்சிக்கு நிவாரணத் திட்டம் வழங்குவதற்காக சாமன்விதா எனும் திட்டத்தை ஒரு தொண்டு நிறுவனம் கொண்டுவந்தது. இதன்படி அவ்வூர் மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் நிலமும், அதில் பயிரிடுவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட கொன்றை மரக் கன்றுகளைத் தந்தது.(1970-80களில் கிழக்காசிய நாடுகள் முழுவதும் வறட்சி நிவாரணமாகவும், காடுகள் வளர்ப்பிறகாகவும் வளர்ககப்பட்ட மரவகை - எதிர் விளைவுகளையே கொடுத்தவை).

இப்படி இத்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டவர்களுக்கு மற்றொரு நிபந்தனை, விளம்பரமாக அம்மக்கள் கண்ணுக்குத் தெரிந்தது. அவர்களின் பசுக்களுக்கு அதிக பால் சுரக்கும் என்று ஜெர்ஸி காளைகளின் உயிரணுக்கள் செலுத்தப்பட்டன, காரியார் காளைகள் விதையறுப்பு செய்யப்பட்டன. அவர்கள் சொன்னது போல அதிக பால் சுரக்கவில்லை, வளர்த்து வந்த மரக்கன்றுகள் ஒரு முறை வெட்டப் பட்டாலும் மறுபடியும் துளிர்க்கும் என்று அவர்கள் சொன்ன வாக்குறுதியும் பொய்த்தது. தனது திட்டத்தை நிறைவேற்றியவுடன் சாமன்விதா திட்டம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. அவர்கள் திட்டம் - காரியார் எனும் காளை இனத்தை அழிப்பது. இந்த திட்டத்தின் தோல்வியினால் அந்தப் பகுதியில்ஏற்பட்ட வறட்சி கடுமையாக பத்தாண்டுகள் வரை நீடித்தது என்கிறார் இதழாளர் திரு.பி.சாய்நாத் அவர்கள்.

1970களில் ஆரம்பிக்கப்பட்ட வெண்மைப் புரட்சி  வெளிநாட்டு ஜெர்ஸி பசுக்களைப் போன்ற இறக்குமதி இனங்களை இந்தியாவில் கொண்டு வந்து, அரிய இனங்கள் பலவற்றை முழுதுமாக அழித்ததற்கு மேற்சொன்ன கதை ஒரு சோறு பதம்.

*
உண்மையில் வெண்மை புரட்சி, பசுமைப் புரட்சி போன்ற திட்டங்கள் எல்லாம் இந்த தேசத்தின் சுயத்தை, அதன் மரபின் தொடர்ச்சியை, பன்முகத் தன்மையை அறுத்தெரியும் முயற்சிகளாக இருந்து வருகின்றன என்றே உணர்ந்து கொள்ள முடிகிறது. 

ஜல்லிக்கட்டு எனும் ஏரு தழுவுதல் விளையாட்டு மீது இன்றைய நாகரிகத்தின் கண்ணோட்டத்தில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். மிருக வதை, சாதியத்தை ஆதரிக்கின்றது என்று பல குற்றச்சாட்டுகள் நியாங்களின் கூறுகளோடு இருக்கலாம். ஆனால், அந்த விளையாட்டுகளில் பொதிந்திருக்கும் சமூகக் கட்டமைப்புகளை ஆராய்ந்தால், இதன் முக்கியத்துவம் தெரியும். தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்டு முழுதும் நீர் செழிப்பான மாநிலமாக இருந்தது கிடையாது. 

விவசாயத் தொழில் மாடு வளர்த்தலோடு தான் நிறைவான சுழற்சியைத் தந்து ஒரு குடியானவனைக் காப்பாற்றுகின்றது. வெறும் விவசாயியாகவோ அல்லது மாடுகளை வளர்ப்பவனாகவோ தன்னைக் காப்பாற்றிக் கொள்வது மிகக் கடினமானது. விவசாயத்தில் களைகள், வைக்கோல் என்று நிலத்தில் உபரிகளையும், தேவையற்றதுகளையும் மாடுகளுக்குக் கொடுத்து, அவற்றை விவசாயத்திற்குப் பயன்படுத்தி உழுவதற்கும், உரத்திற்கும் என தமிழர்களின் வாழ்க்கைச் சூழலில் ஒரு முக்கிய இடத்தில் இருக்கும் மாடுகளைப் பற்றி நாம் எல்லோரும் அறிந்ததே.

மாடுகளுக்கு வரும் நோய்களில் இருந்து தன்னை தற்காத்து கொள்வதற்கு அதன் மரபணுவிலிருந்தே அடிப்படை எதிர்ப்பு சக்தி அமைய வேண்டும். அதற்கு உள்ளூரின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ற மாதிரியான திடகாத்திரமான சந்ததியாக கன்றுகளைத் தான் மாடுகள் ஈன வேண்டும். இவை யாவுமே காளைகளைப் பொறுத்து தான் அமையும். விளையாட்டுகளில் பங்கேற்கும் காளைகள் மூர்கமாக, காட்டு விலங்கினைப் போல் இருக்கும். அதற்குத் தரப்படும் உணவுகளும், அதைப் பராமரிக்கும் விதமும் தலைமுறை தலைமுறையாக நாம் பெற்ற அனுபவத்திலிருந்து தான் உருவாக்க முடியும். வருடத்தில் ஒரு மாதம் மட்டும் இது போன்ற விளையாட்டில் பங்கேற்கும் காளைகள் அதன் பின்னர் இனவிருத்திக்காக பயன்படுத்தப்படும், அதுவே நாட்டு மாடுகளை ஆரோக்கியமாக வளர்க்க அடிப்படை.

இப்பொழுது உச்சநீதி மன்றம் விதித்திருக்கும் தடை ஒரு விளையாட்டு மீதான தடை இல்லை, விவசாய நாடான இந்த நாட்டின் ஒரு பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை மீதான தடை. கலாச்சாரம், பண்பாடு போன்ற விழுமியங்களை நாகரிகம், நவீனம் என்ற கருத்துகளைக் கொண்டு ஒரேடியாகப் புறந்தள்ளுவது என்பது அபத்தமானது. இந்த தீர்ப்பினை எப்படிப் பார்க்க வேண்டும் என்றால், இன்றைய சமூகத்தின் நவீன தர்கங்களின் எதிர்வினையாகத் தான் பார்க்க வேண்டும். கிராமங்களின் சமூக அமைப்பினை ஒரே ஒரு காரணம் சொல்லி புறந்தள்ளுவது எதிர்காலத்தில் பல ஆபத்துகளை விளைவிக்கும்.

சங்ககாலத்தில் இருந்து, சிந்துச் சமவெளிகாலத்திலிருந்தே மாடுகளுக்கும் ந்மக்குமான தொடர்பினைப் பறைசாற்றும் தொடர்ச்சியாக இந்த ஏறு தழுவுதல் விளையாட்டைப் பார்த்திருந்தால், ஜல்லிக்கட்டு விளையாட்டினை நவீனப்படுத்தி சுற்றுலாத் தளமாக மாற்றியிருக்கலாம், அல்லது விதிமுறைகளைக் கடுமைப்படுத்தியாவது இப்போதிருக்கும் வடிவத்திலேயே செயல்படுத்த அனுமதிக்கலாம். பொறுப்புள்ள அரசு என்ற ஒரு அரசாவது இந்த ஜனநாயகத்தில் சாத்தியப்பட்டிருந்தால் இவ்விளையாட்டு இன்று உலக அரங்கில் பேசப்பட்டிருக்கும்.

இன்று வேண்டுமானால் நம் அன்றாடப் பிரச்சினைகளை அடிக்கோடிட்டு விட்டு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறைவு என்று பேசிக் கொள்ளலாம். ஆனால் இது போன்ற முன்னுதாரணங்கள் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை விவாதிக்க வேண்டியது மிக்க அவசியமான ஒன்று. இந்தப் பிரச்சினையின் அடிப்படை ஜல்லிக்கட்டினைப் பற்றிய தவறான பார்வை மக்களுக்கு இருப்பதே, சட்டங்கள் பெரும்பான்மை மக்களின் பொதுபுத்தியில் தான் இயங்க விரும்புகிறது. வடஇந்தியாவில் ஜல்லிக்கட்டினை அவர்கள் மதச்சடங்குகளுக்கு எதிரானதாகவும் காட்டுமிராண்டித்தனமாகப் பார்க்கப்படலாம். ஆனால், அதை மட்டுமே பொதுவானதொரு கருத்தாக வைத்துக் கொண்டு இவ்விளையாட்டை ஒரு அநீதியாக பாதித்து அதை தடை செய்யும் முறை, இந்தியா முழுமைக்குமான ஒரே சட்டம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஆகும். உண்மையில் இந்த அளவுகோல் தான் காட்டுமிராண்டித் தனமானது.

ஆகவே.....ஜல்லிக்கட்டு வேண்டும்.

-ஜீவ.கரிகாலன்

சனி, 24 மே, 2014

அன்பு சிவன் எப்படிப் பறந்தான்??

அன்பு உனக்கு நான் இரங்கற்பா பாட முடியாது ஏனென்றால் எனக்குத் தெரியாது.



அன்புக்கு வேறு என்ன தெரியும்?? அன்பைத் தவிர யாராவது அன்பானவர்களைப் பற்றி பேசினேன் என்று தான் அநேக நாட்களில் இப்படி உறையாடல் துவங்கும்.

அய்யப்ப மாதவனிடம் அந்த நாவலை முடிங்கன்னு சொன்னேன், வேல்ஸ் என் கவிதைக்கு லைக் போட்ருக்கார் பார்த்திங்களா, நாளைக்கு ஜிந்தாவா பார்க்க அங்க வர்றேன் கரிகாலன், அமுதா தமிழ் கிட்ட சேட் பண்ணா எவ்ளோ உற்சாகம் வரும் தெரியுமா - such an energetic girl she is, கணேசகுமாரன் கிட்ட பேசினேன்,ரமேஷ் ரக்சன்னு புதுசா ஒருத்தன் கவிதைய வாசிச்சேன் அவன் டைம்லைன்ல பாருங்க, வாசு தான் என் புத்தகம் போடனும்னு அக்கறையா கேக்குற மனுசன் நீங்களும் இருக்கிங்களே, பாலசுப்ரமணியன் பொன்ராஜை ஏர்போர்ட்ல பார்த்தேன் - ரொம்ப ஸ்மார்டா இருக்காரு அந்த மனுஷன், மஹேந்திரன் என்ன அப்பா மாதிரின்னு சொல்லுவான், மழைக்காதலன் என் மகன் மாதிரி தான் அவன் என் மேல கோபப்பட்டால் கூட அதைப் பத்தி நான் கவலப்படல - ஆனா காலம் கொஞ்ச காலம் அவனோட அன்பு பாராட்டாம இருக்கச் சொல்லுச்சு, அ.மார்க்ஸ் - தமிழச்சி தங்கபாண்டியன் ரெண்டு பேர்களோட பேச்சைக் கேட்பதற்கு மட்டும் தான் ஒரு கணம் கூட நான் யோசித்துப் பார்த்தது இல்லை, MP உதயசூரியன் மாதிரியான ஜெண்டில் மேநை பார்ப்பது கஷ்டம், ராமச்சந்திரன் அவரு கொழந்த மாதிரி, கவிதைக்காரன் டைரி அதெல்லாம் வாசிச்சுட்டா கவுத எழுத முடியுங்கற அளவுக்கு நான் வொர்த் இல்லப்பா, இந்தக் கண்ணதாசன் பையன் எழுதவே மாட்டானா? ஈரோடு கதிர பார்த்துவிட்டுத் தான் வந்தேன், , பாலா ஒரு கொழந்தப்பய, சுந்தரபாண்டியனும், தினகரனமும் தான் என் வாழ்வின் பெரும் சம்பாத்யங்கள், அடுத்த உறவுகள் கூட்டத்திற்கு உங்களைக் கூட்டிட்டு போறேன், யவனிகா எங்கையோ இருக்காரு, ஆனா எனக்கு பக்கத்து வீட்டுக்காரன் மாதிரி, இந்த அமிர்தம் சூர்யாக்குன்னே ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனும், புகழேந்தியோட பேச்சக் கேட்டேன் நைட்டெல்லாம் தூங்கமுடியல, கரிகாலன் - வா.ம ஒரு இண்ட்ரெஸ்டிங் கேரக்டர்..



கரிகாலன் நம்ம சீக்கிரமா பப்ளிஷிங் ஆரம்பிக்கனும், தனியிதழ் ஆரம்பிக்கனும் கண்மணி குணசேகரன், பெருமாள் முருகனல்லாம் கூப்பிடனும் - எனக்குத் தான் சில பேரோட பிணக்கு வந்துவிட்டது நீங்க அவுங்களுக்காக தாராளமாக கூட்டங்கள் நடத்தலாம் நான் அதுல interfere ஆகமாட்டேன்.

எல்லோருக்கும் ஏதாச்சும் செய்யனும் போல இருந்துச்சு அதான் இந்த பேக்காவது ஆளுக்கு ஒன்னு கொடுக்கலாமே என்று இருந்தேன்..

நாம எல்லாருமே ஒரு நாள் வெளியில் எங்காவது போகனும்....

எனக்கும் சாத்தப்பனுக்கும் ஆயிரம் இருக்கும் அத நாங்களே பார்த்துப்போம்.

கரிகாலன் கடைசி வரைக்கும் என் கவித புத்தகத்த வரவிட மாட்டிங்க போலிருக்கே என்ற பிராண்டட் சிரிப்பு சத்தம்

இறுதியாக ஒன்று ஞாபகம் வந்தது

 “கரிகாலன் நான் எடைய கொறைச்சுட்டேன் அடுத்தது நீங்கதான்.. ”

******

உச்சியைத் தொட்டிராத சூரியனின் வெப்பம் நினைவில் இருந்தது. கிழக்கில் ஒரு மூலையில் இருந்து வந்த ஒரு தூர தேசத்துப் பறவையின் குரல், அந்த மலைப் பிரதேசம் முழுவதும் எதிரொலித்தன. எப்போதும் கூட்டமாகவே பறக்கின்ற இயல்பை உடைய பறவை அரிதாகத் தான் தனியாகப் பறக்கும், தன் கூட்டாளிகளோடு வரும் பொழுது பாதையைத் தொலைத்து விட்டதோ!! மனிதர்களின் மனநிலையா பறவைகளுக்கு, பின்னர் அவை எப்படி பாதையை தொலைக்கும்? அது புதிய பாதையிலோ வேறு பாதையிலோ போய்க் கொண்டிருக்கிறது. குரல் ஒன்றினை வைத்துக் கொண்டே தான் அதனைப் பறவை என்று நினைத்துக் கொண்டேன், அருகில் வந்தால் தான் அது பறவை என்று உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியும். மிக வேகமாகத் தான் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது அது. ஆனால் அது தலைகீழாகத் தெரிந்தது. இல்லை நான் தலைகீழாக மலை முகட்டில் இருக்கின்றேன், அத்தனை வேகமாக வந்துகொண்டிருக்கும் பறவை தான் அத்தனை நிதானமாக ஒவ்வொரு அங்குலமாக நகர்வதையும் என்னால் உள்வாங்கிக் கொண்டிருந்தது, அது எனக்கான பறவையல்ல என்று எனக்குத் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பறவை என்ற கணக்கு பற்றி இன்னும் சில விநாடிகள் கடக்கும் வரை தெரியவில்லை தான். அந்த வெயிலில் மலை முழுதும் படர்ந்து கொண்டோ அல்லது போர்த்திக் கொண்டோ குளிரான பனித்திரை மூடிக்கொண்டிருந்தது, எனக்குத் தெரியவே தெரியாது பனித்திரைக்கு இப்படி ஒரு சுகந்தம் இருக்குதென!! என்ன நறுமணம். அது இப்பொழுது நெருங்கிவிட்டது, அது பறவையே தான், என்ன விநோதமான ஓசை அதனுடையது..

ஆம் நேராக பறந்துக் கொண்டிருக்கும் பறவை ஏன் அந்தரத்திலேயே நிற்கிறது அதுவும் எனக்கு நேராய்!!

அந்த விநாடி வந்து விட்டது - பறவையானது என் முகத்தை பார்த்ததும், அது என்னை நோக்கு வர ஆரம்பித்தது அது எனக்கான பறவை..

அன்பு சிவனின் ஆத்மா அமைதியில் உறங்கட்டும்

- ஜீவ கரிகாலன்

வியாழன், 22 மே, 2014

ப்ராஜக்ட் சாரு நிவேதிதா



சென்ற புத்தகச் சந்தை நிறைவடையும் பொது என் நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த விஷயம் light reading எனும் வாசிப்புத் தன்மை பற்றி உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? Light reading என்று சொல்லப் படும் புத்தகங்களை ஒரு நல்ல வாசகன் திரும்ப வாசிக்கவே கூடாதா? எல்லா வாசகனுமே இந்த வாசல் வழியாகத் தான் வந்திருப்பார்களா என்றெல்லாம் வாசித்தபடி தேநீர் கடைக்காரனின் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தோம்.

அவர்களுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தேன் - அது புத்தக வாசிப்பைப் பற்றிய என் நண்பனுடைய அனுபவக் கதை


*

நண்பர்களுடன் தங்கி ஒரு நான்காண்டு காலம் பேச்சிலர் ரூம் வாழ்கை. எந்தக் கட்டுப்பாடுகளுமற்ற வாழ்க்கை, பெருநகரங்களில் வாழும் பேச்சிலர்களுக்கான எல்லா இலக்கணங்களுடனும் வாழ்ந்த காலங்கள் அவை. அந்த அறையின் ஐடியா மணியாக அடியேனே இருந்தேன். அது என்ன ஐடியா மணி என்கிறீர்களா?, ஐடியா மணி என்பவன் தான் ரூமைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.  அது அதிகாரத்தின் தொனியல்ல, ஐடியாவின் தொனி.

ஐடியா மணியின் இலக்கணங்கள் யாவை?, அவனின் தகுதிகள் என்னென்ன??
ஐடியா மணி என்பவன், தங்களுக்கு ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால் யோசனைகளுக்காக அனுக வேண்டியவன் அவனே. எல்லாமும் தெரிந்தவன் என்கிற பிம்பம் எப்போதும் அவன் மீது படிந்திருக்கும். ஆனால் ஐடியா மணியாக உருவாகுவது அத்தனை எளிதல்ல முதலில் அளவு கிடந்த மொக்கை போட வேண்டும், நம்ம பேச ஆரம்பித்தால் அதற்கு பயந்தே நாம் சொல்ல வந்த விஷயத்தை ஒப்புக் கொள்வார்கள். அதே சமயம் அதற்காக சில இழப்புகளையும் சந்திக்க வேண்டு வரும், வீட்டு ஓனரைச் சரி கட்டுவது, ஏதாவது குறைகள் சொன்னால் சமாளிப்பது போன்ற இது போன்ற பிரச்சினைகளை முன்னின்று தலையிட வேண்டும். இப்படி எல்லாம் செய்து பட்டம் வாங்கினால் என்ன லாபம் ? 

“மூணே மூணு இட்லி, ஒரு வடை, கொஞ்சமா கட்டிச் சட்னி” என்று இலவசமாக ஆர்டர் செய்து கொள்ள முடியும். இது போன்ற லாபத்திற்காகத் தான் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடித்தேன்.

ஆனால் இந்த பதவி அவ்வளவு சீக்கிரமாக உங்களுக்கு கிடைத்து விடாது? அதற்கு நீங்கள் அதிகம் புத்தகங்கள் படிக்க வேண்டும்!! புத்தகம் என்றால் ஒரே வெரைட்டியாக இருக்கக் கூடாது கன்னாபின்னாவென்று வேறு வேறு வெரைட்டிகளைப் படிக்க வேண்டும். பேசும்பொழுது அடிக்கடி “இந்த புத்தகத்துல இந்த Author என்ன சொல்ல வர்றார்னா ” என்கிற மாதிரியான reference தர வேண்டும்.  சாதாரணமான ராஜேஸ்குமார் புத்தகம் படிக்கிறீர்கள் என்றாலும் அதை “ராஜ தந்திர யுத்த களப் பிரசங்கங்கள்” போன்ற புத்தகத்திலோ அல்லது “Angels and demons” போன்ற புத்தகத்திலோ வைத்து படிக்க வேண்டும்.

நண்பர்கள் யாராவது கண்டுபிடித்தால் கூட சலனமே இல்லாமல்,  “இந்த ரா.கு SEMIOTICS பத்தி ஒரு நாவல் எழுதியிருக்கிறதா ஒரு நண்பன் சொன்னான், அதான் இதை வாசிச்சு டான் பிரவுன் கிட்ட இருந்து எங்கவெல்லாம் இவர் காப்பியடிச்சு இருக்கிறார் என்று நோட்ஸ் எடுக்கிறேன் மச்சி” என்று நிதானமாக சொல்லியவாறே அவன் சந்தேகம் தீரும் வரை கொட்டாவியைக் கட்டுப்படுத்திக் கொண்டாவது Angels and Demonsஐ வாசிக்க வேண்டும். இப்படியெல்லாம் தான் இமேஜை தக்க வைக்க வேண்டும். ஆனால் ஒரு சில நபர்களை நீங்கள் என்ன செய்தாலும் கவர முடியாது.

அப்படித்தான் புதிதாக ஒரு நண்பன் எங்கள் அறைக்கு வந்தான். அவன் அந்த அறையில் அதுவரை வசித்து வந்த மற்றொரு நண்பனின் அண்ணன். அவன் வெளிநாடு போகவும், இந்த அறையில் இடம் காலியாவதை அறிந்து அவன் அண்ணனைச் சேர்த்து விட்டான். மற்றவர்களுடன் எளிதாகப் பழகும் சுபாவமற்றவனாக இருந்தான். சேர்ந்து சாப்பிடும் பொழுது கூட சரியான கூட்டாளியாக இருக்க மாட்டான், யாரிடமும் அதிகமாகப் பேசவும் மாட்டான். ஏற்கனவே ஐடியா மணியாக இருந்த என்னை அவன் சட்டை செய்வதேயில்லை. மூன்று வருடங்களுக்கு முந்தைய புத்தகச் சந்தைக்கு சென்று புத்தகங்கள் வாங்கத் திட்டமிட்டோம் ( அப்போது எல்லா நண்பர்களும் சேர்ந்து வாசிக்க ஆரம்பித்து இருந்தோம் இவனைத் தவிர) நானும் மற்ற அறை நண்பர்களும் செல்வதற்கு திட்டமிட்டோம். அவனும் உடன் வருகிறேன், நானும் சில புத்தகங்கள் வாங்கி வாசிக்க ஆரம்பிக்கிறேன் என்றான்.

இது தான் அவனைப் பழி வாங்குவதற்குத் தக்கச் சமயம் என்று திட்டம் தீட்டினோம், அதற்குப் பெயர் தான் ப்ராஜக்ட் சாரு நிவேதிதா. ஒரு முன் கதை- நாங்கள் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த பின் அடிக்கடி ப்ளாகில் வசைபாடப்பட்டுவரும் பெயர் இது என்று தெரிந்தவுடன், முதன் முதலில் “ஜீரோ டிகிரி” எனும் புத்தகத்தை வாங்கி ஆளுக்கு இருபது பக்கங்கள் என கிழித்துக் கொண்டோம். இப்போ தான் எக்ஸைல் வந்திருக்காமே!! அதைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வாங்கிவிடச் செய்து விடுவோம். அதோடு நம்ம ஏரியாவுக்கே வர மாட்டான் என்று திட்டம் தீட்டினோம்.

இரவெல்லாம் சாருவைப் பற்றி தான் பேச்சு, “அவரைப் படித்த பின்னர் இசை, கலவி, சமூகம், இஸ்பானியக் கலாச்சாரம் என்றெல்லாம் நம் ரசனை மாறிவிட்டது அல்லவா??” என்று எங்களுக்கும் பேசிக் கொண்டோம் அவன் காது கொடுத்து கேட்குமாறு.

 “ஜீரோ டிகிரி எனும் நாவல் போஸ்ட் மாடர்னிசம் என்று சொல்கிறார்கள் தெரியுமா?”

 “ம்ம்ம்!!”

“அதில் ஒரு வரி வருது பாரு... அதை வாசிக்கும் பொழுது போரைச் சந்திக்கும் எந்த இனத்திலும், ஒரு பகுதி மோசமான அழிவைச் சந்திக்கும் பொழுது நடைபெறும் விஷயங்கள் உலகம் முழுக்க ஒன்றாக இருக்கின்றது என்று அந்த வரியை வாசிக்கும் போது தான் டா உணர்ந்தேன்”

“ம்ம்ம்!!”

“இந்த முறை சாருவோட இன்னொரு மகத்தான் நாவல் வந்துருக்கு டா.. அத நான் என் காசு போட்டு வாங்கிக்கிறேன். ஏன்னா எல்லாரும் வாசிச்சதுக்கப்பறமா நான் அதை பத்திரப்படுத்தி அப்பப்போ வாசிக்கனும் என்றேன்”

“ம்ம்ம்!!” என்றான். ஆனால் இந்த முறை என் நண்பன் இல்லை, எங்கள் திட்டப்படி நாங்கள் பேசிக் கொண்ட சுவாரஸ்யத்தில் எங்கள் வலையில் விழுந்த டார்கெட்.

அடுத்த நாள், புத்தகக் கண்காட்சிக்கு சென்றோம், இவனைக் கவிழ்ப்பதற்கான சரியான இடம், அந்த சந்தையில் புதிதாகக் கடை போட்டிருக்கும் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் தான் என்று முடிவெடுத்தோம். ஏற்கனவே எங்கள் பட்டியலில் இருந்த புத்தகங்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டே டிஸ்கவரி புக் பேலஸிடம் சென்றோம். வேடியப்பன் அப்பொழுது ஒரு ஸ்டால் மட்டும் தான் புக் பண்ணி அரங்கு அமைத்திருந்தார், இருந்தபோதும் கையில் அரிவாள் இல்லாத குறையாய் அந்த பக்கம் போவோர், வருவோரை எல்லாம் உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். நாங்களே உள்ளே சென்றோம்,  என் நண்பன் என்னைப் பார்த்து கண் சிமிட்டினான், நான் அவனுக்கு வலை விரிக்கலானேன்.

“அந்த போஸ்ட் மடர்னிசத்தில புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறதே!! அதன் பெயர் என்னவென்று சொன்னாய்??” என் நண்பன் என்னிடம் கேட்டேன்

“யாரு சாரு புக்கா” -இது நான்

“எக்ஸைல் தான” - இது எங்கள் டார்கெட்.

நானும் என் நண்பனும் கை குலுக்கிக் கொண்டோம்.

“ஆஹா!! அமௌண்ட் கொறையுதே ” என்று பர்ஸைத் தடவினேன்.

“பரவாயில்ல, இத நான் வாங்கிக்கிறேன், நானும் புத்தகம் வாசிக்கலாம்னு ஆசப்படுறேன்” என்றேன்.

“இதாண்டா நீ வாங்கும் ஃபர்ஸ்ட் அண்டு லாஸ்டு புக் ” என்றேன். வேடியப்பனின் தம்பி சஞ்சய் எங்களை கவனித்துக் கொண்டிருந்தார்.

“பாஸ் கண்டுக்காதிங்க!! எப்டியோ உங்களுக்கு சேல்ஸ் ஆகுதுல்ல” என்று சிரித்துக் கொண்டே வெளியேறினோம்.

ஆப்ரேஷன் சாரு நிவேதிதா சக்ஸஸ்.

“என்னங்கடா இது செக்ஸ் புக் மாதிரி இருக்கு?? நீங்க என்னென்னமோ சொன்னிங்க??”

நாங்கள் இதுவரை தொடாத அந்த புத்தகத்தை, அவன் முதன் முதலாக வாசிக்க ஆரம்பிக்கும் போது - புலம்பிக் கொண்டே தான் வாசித்தான். நாங்கள் அவன் புலம்பல்களை ரசித்துக் குதூகலித்துக் கொண்டோம் அவனுக்குத் தெரியாமலே.

திடீரென்று அடுத்த வாரம் ஒரு நாள் அறைக்குத் திரும்புகையில் அவன் கையில் மகாபாரதம்.

“எக்ஸைல் என்னாச்சு??” என்றேன்

“முடிச்சுட்டேன், இனிமே சினிமா போறத கொறைச்சுட்டு புக் வாசிக்கனும்” என்றான்.

***

இந்தக் கதையை முடிக்கும் பொழுது என் அருகில் இருந்த நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

“Light Reading, Entrance Exam, Channel என்றெல்லாம் வாசிப்பிற்கு எந்த அவசியமும் இல்லை.. எவனுக்கு எந்த கதை தன் சொந்த அனுபவத்தையோ இல்லை தான் கண்டிருந்ததை/அறிந்ததைப் பற்றிப் பேசி மறுத்தோ அல்லது ஒப்புக்கொள்ளவோ செய்கிறதோ?? அது தான் அவனைத் தொடர்ந்து வாசிக்கத் செய்யும், என்றபோதும் இங்கே யாராலும் வாசகனின் pulseஐ பிடித்துப் பார்க்க முடியாது. ஒரு வாசகன் எவனை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளவோ!! மறுத்து போகவோ முடியும் - அவனை கட்டுப்படுத்த முடியவே முடியாது” என்றேன்.

மேலும் “ இல்லாவிட்டால், வாசகனாகக் கூட இல்லாதவன், வாசிப்பினால் ஈர்க்கப்பட்டு இன்று பதிப்பாளனாக வரும் வரை மாறுவதற்கு சாரு நிவேதாவின் எக்ஸைல் தன் காரணம் என்று ஒருவன் இருக்கிறான் என்றால் நம்புவீர்களா?” என்று கேட்டேன். THUS PROVEN YOU CAN'T IGNORE CHARU

யாரைச் சொல்கிறேன் என்று எல்லோரும் என்னைப் பார்க்க என் பக்கத்து டேபிளில் - டிஸ்கவரி புக் பேலஸில் மட்டும் 3000 ரூபாய்க்கு கார்டு தேய்ச்ச ட்ரூத் ப்ரெஷ்ஷைப் பார்த்தேன். அநேகமாக என் ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் அவனைத் தெரியும் தான். அவன்.... (இந்த சுட்டியை க்ளிக்கி பாருங்கள்)


ஜீவ.கரிகாலன்




புதன், 21 மே, 2014

யாவரும் நிகழ்வு - 21

         சித்திர அன்ன விருந்தும் - இஞ்சி மரப்பாவும்

சகோதரி ரேவா அவர்கள் என்னிடம் ஃபேஸ்புக்  தனிச்செய்தியில் ஒரு கோரிக்கை வைத்தார்கள். //தொடர்ந்து நிகழ்வுகள் நடத்துகிறீர்கள், ஆனால் அதைப் பற்றி சுருக்கமாகக் கூட எழுதாமல்/பதியாமல் இருப்பது// குறித்து கவலைப் பட்டார். உண்மையில் எனக்கு அந்த கோரிக்கை மிகவும் வருத்தம் அளித்தது. 21 நிகழ்வு வரை நடத்தியும் க்ரூப் போட்டோவைத் தவிர வேறு என்ன ஆவனப்படுத்தியிருக்கிறோம் என்கிற போது கொஞ்சம் வருத்தம் வரவே செய்தது.

*
17 மே சனிக்கிழமை மாலை, வழக்கம் போலவே டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக் கடைக்கு கீழேயுள்ள தேநீர் கடையில் வழக்கம் போலவே சரியான நேரத்தில் முதலாம் அமர்வு ஆரம்பித்தது. நிகழ்வின் இறுதி அமர்வும் இங்கே தான் நடக்கும் என்பது கலந்து கொண்டவர்களுக்கு மட்டும் தெரியும். நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர், மோடியின் வெற்றி தமிழகத்தில் அநேக பேரைக் களைப்படையச் செய்திருந்தது. தி.மு.கவைப் பற்றியும், விஜயகாந்தைப் பற்றியும் தமிழகமே உற்சாகமாக பரிகாசம் செய்து கொண்டிருந்த உற்சாகமான நாள் அது. ஆனால் இலக்கியம் பேச வேண்டுமென்று வந்திருப்பதால் முதலாம் அமர்வை முடிந்த அளவுக்கு சீக்கிரமாக முடித்து விட்டு, கடைக்கு சென்றோம்.

...

இரண்டாம் அமர்வு - முதலாம் அமர்வினைப் போல் சரியான நேரத்தில் இது தொடங்குவதில்லை, அமிர்தம் சூர்யா, நறுமுகை தேவி, ஐயா குமரேசன், பத்மஜா, சக்தி ஜோதி, ஐயப்ப மாதவன், நர்மதா குப்புசாமி என்று ஒவ்வொருவராக வந்து சேர்வதற்குள் 06.30 தாண்டிவிட்டது. முதன் முதலாக ஃபேஸ்புக் ஈவெண்ட்ஸ் அழைப்பிலேயே 65 பேர்கள் வருவதாக போட்டிருந்ததால் இந்த முறை அரங்கு நிறையும் என்று நம்பினோம் (70க்கும் குறையாமல் வந்திருந்தனர்).

யாவரும்.காம் பற்றிய ஒரு சின்ன அறிமுகத்தோடு(50 பேருக்கும் மேல் வந்திருக்கிறார்கள் இல்லையா??) உற்சாகமாக அண்ணன் அய்யப்ப மாதவன் ஆரம்பித்து வைத்தார். அதற்கு முன்னர், இந்த புத்தகச் சந்தையில் வெளியான இம்மூன்று புத்தகங்களையும் எளிமையாக அறிமுகப் படுத்துவது அவசியம் என்று அய்யப்ப மாதவன் முன்மொழிந்தார். எதிர்பார்க்காத வரவாக இருந்த கவிஞர்.ஃபிரான்சிஸ் கிருபா அவர்களை வைத்து சாத்தானின் அந்தப்புறம் , தெரிவை என்னும் இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டது. சொல் எனும் தானியம் - இந்நூலை இயக்குநர்/கவிஞர் சூரியதாஸ் வெளியிட்டார் -கவிஞர் ஆதிரா முல்லை பெற்றுக் கொண்டார்.

**
முதலில் தீக்கதிர் ஆசிரியர் குமரேசன் நறுமுகை தேவியின் “சாத்தான்களின் அந்தப்புரம்” பற்றி பேச ஆரம்பித்தார்.

கிட்டதட்ட இரண்டு மாதங்களாக - நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கட்டுரைகளும், பேச்சுகளும், நேர்காணல்களுமாக தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஐயாவுக்கு இரண்டு நாட்களாக தன் கைகளில் ஒரு கவிதை புத்தகம் இருப்பது உற்சாகமாய் இருக்கிறது என்று  தன் பேச்சினை ஆரம்பித்தார். கவிதைகளை முழுக்க முழுக்க தனது அரசியல் கண்ணோட்டத்தில் தனது பார்வையாக முன்வைத்தார். கவிதை நூலில் இருக்கும் கவித்தன்மைகளைச் சுட்டிக் காட்டதவும் அவர் தவறவுமில்லை , எனினும் நறுமுகையின் கவிதைகளை அரசியல் பார்வையுடனும், அதில் பெண்ணியப் பார்வையுடனும் சுட்டிக் காட்டுவதைத் தான் அவர் விரும்புகிறார் என்று தெரிந்தது.

“சமூகத்தின் பிரச்சினைகளை நான்கு பக்கங்களில், தலையங்களில் அலசி அதற்கு தீர்வினையும் எழுதும் என் கர்வம் - சில நேரங்களில் ஒரு நான்கு வரிக் கவிதையில் காணாமல் போகிறது” என்று சொல்லும் பொழுது கவிதை மீதான அவர் காதல் தெரிந்தது. நிகழ்வின் இறுதியில் ஏற்புரை வழங்கிய நறுமுகை தேவி - உணர்ச்சி வயப்பட்ட நிலையிலும், கவிதைகளை தன் ஆயுதமாக(சாட்டையாக) பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் எதனால் வந்தது என்று அழுத்தமாகக் கூறினார். அதனால் தொடர்ந்து சமூகத்தின் மீதான என் கோபத்தினை வெளிப்படுத்தும் கவிதைகள் எழுதுவது தான் என் இயக்கமாக இருக்கும் என்று ஏற்புரை வழங்கினார்.

**
அடுத்தது பத்மஜாவின் தெரிவை நூலுக்கான விமர்சனம், கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட நண்பர் அமிர்தம் சூர்யாவின் விமர்சனம்.

வழக்கம் போலவே எதிர்பார்ப்புடன் வந்திருந்த தன் ரசிகர்களுக்கு ஒரு குறையும் வைக்காத நிறைவான போஜனம் சூர்யாவால் அளிக்கப்பட்டது. “கவிதை நூலினை ஒரு பாதி பத்மஜாவின் கவிகளும், மற்றொரு பாதி மொழிபெய்ரப்புமாகக் கொண்டு வந்தது ஏன்?” என்று விமர்சனத்துடன் ஆரம்பிக்கப் பட்ட இவர் பேச்சு. சமகாலத்தில் பெண்கள் எழுத வேண்டிய கட்டாயம் பற்றி பேச ஆரம்பித்த சூர்யா, சில மொழிபெயர்ப்புகளை முன் வைத்து ஆரம்பித்தார் Anne Sexton குறித்து பேச ஆரம்பித்தார். அவரின் வரிகளில் இருந்து பெண்கள் எழுதுவதற்கான தடைகள் பற்றி என இந்த நூலிற்கான புற வெளிகளைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டு, புத்தகத்திற்குள் நுழைந்தார்.

ஒரு கவிதையில் வரும் “கொல்வாயா” என்னும் வார்த்தைக்கு, ஒரு பெண் “கொல்வாயா?” என்று சொல்வது என்னவாக இருக்கக்கூடும் என்று விவரிக்க ஆரம்பித்தார். தொல்காப்பியர் பெண் கவிஞர்களின் செயல்பாடுகளை வரையறுக்க, அதை எப்படி தகர்த்து எறிந்த பெண் கவிஞரான வெள்ளி வீதியாரின் முதல் முயற்சியை வியந்தபடி வந்த அவர்,  “கொல்” எனும் வார்த்தை காமமாக இங்கே இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

 “கவிதை எழுதுபவர்கள் முடிந்த அளவிற்கு எவ்வளவு விரைவாக முதல் புத்தகம் போட முடியுமோ போட்டு விடுங்கள், அது தான் உங்களைத் தொடர்ந்து இயங்க வைக்கும், அதைப் போட்டு விட்டு வேண்டுமானால் சில வருடங்களுக்குப் பின்னர் அது நான் எழுதியதில்லை என்று தப்பித்துக் கொள்ளுங்கள்!!” என்று பதிப்புலகிற்கு லாபகரமான இந்த அறிவுரையை சூர்யா வழங்கிய போது ஒரு பெரிய கைதட்டல் ஒன்று வந்தது. அவர்களில் பல பேர் முதல் புத்தகம் அல்லது அதைப் போடுவதற்காக யோசித்துக் கொண்டிருப்பவர்கள் என்று தோன்றியது.. நானும் கைதட்டினேன் கவிஞன் என்பதால் அல்ல, பதிப்பகம் ஆரம்பித்து விட்டதால் :).

முத்தம் பற்றிய ஒரு கவிதைக்கு - முத்தம் பற்றி சுவாரஸ்யமான தகவல்களுடன் அரங்கத்தை கலகலப்பூட்ட, தக்க சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அய்யப்ப மாதவன் அங்கே அரங்கில் இருந்தோர் பலரை பகடி செய்து (குறிப்பாக அடியேனை) கலகலப்பாக மாற்றிவிட்டார். முத்தம் பற்றிய கவிதைக்கு சுகுமாரனின் கவிதையும், வீடு பற்றிய கவிதைக்கு மாலதி மைத்ரி எனவும் பல கவிதைகளை குறிப்பிட்டு. பெண் கவிஞர்களில் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களில் என முக்கியமான இடத்தை நோக்கி செல்லும் பத்மஜாவை வாழ்த்திய படி நிறைவு செய்தார்.

பத்மஜா தன் விமர்சனத்திற்கு ஏற்புரை வழங்கிய போது, தன் கவிதைகள் தனிமை குறித்த பதிவாகத் தான் எழுதியதாக விளக்கமளித்தார்.

*
இறுதியாக சக்தி ஜோதியின் நூல் குறித்த விமர்சனத்தை நர்மதா குப்புசாமி அவர்கள் முன்வைத்தார்.

முதல் முறை அவர் பேசுவதாக சொல்லிக் கொண்டாலும், கவிதைகளோடு அவருக்கு இருந்த நீண்ட பரிச்சயம் அவர் கவிகளின் nuances பற்றியும் கவிதைத் தன்மை குறித்த பேச்சிலும் நிறைய முதிர்ச்சி வெளிப்பட்டது. தன்னுடைய வாழ்வுடன், தன்னனுபவத்துடனும் மிகவும் நெருங்கிய கவிதைகளாக அவர் குறிப்பிட்டார்.

ஆத்மாநாமின் கவிதைகளையும், வான்காவின் சில குறிப்பிட்ட ஓவியங்களுக்கு மிடையேயான தொடர்பினைக் குறிப்பிடவும் செய்தார். சக்தி ஜோதியின் கவிகளில் காணப்படும் எல்லையற்ற அன்பினை வர்ணித்தார்.

இதற்கு ஏற்புரை வழங்கிய சக்தி ஜோதி தன் கவிதை மீது பொதுவாக வைக்கப்படும் விமர்சனங்களுக்கான பதிலாக தனது வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். எல்லையற்ற காதலுக்கும், அன்பிற்கும் காரணமாக தனது POSITIVE அனுகுமுறையைப் பற்றிக் கூறினார். ஒரு சதவீதமாவது நல்ல குணம் உள்ள எந்த மனிதரையும் நான் நேசிக்கத் தவறுவதில்லை என்றார். மேலும் தன் கவிகளில் வரும் இயற்கையைப் பற்றிய வர்ணிப்பகளுக்கு தன் சிறு வயதிலேயே தான் வாழ்ந்து வந்த மலை மற்றும் நதிகளின் பிரதேசங்களைப் பற்றிச் சொல்லி முடித்தார். தான் வாழ்ந்த ஊர் இன்று ஒரு அணைக்குள் மூழ்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். அவரது கவிகளின் தனித்தன்மை என நான் நம்பக் கூடியவை மீதான என மனதிலிருந்த கேள்விகளுக்கு அவரிடமிருந்த பதிலாக அந்த ஏற்புரை இருந்தது.

(சமூகம் பற்றிய அக்கறை அவர் கவிகளில் இல்லையா என்று யாரும் கேட்கவில்லை, கேட்டிருந்தால் இன்னமும் அழுத்தமான கதை ஒன்று அவரிடமிருந்து வரும் என்பதும் எனக்குத் தெரியும்)

இப்படியாக வேல்கண்ணனின் உரையுடன், அருந்திய லெமன் டீ மற்றும் இந்த சிந்திர அன்னவிருந்தின் நினைவாக சில குழு போட்டாக்கள் க்ளிகிடப்பட்டது.  விழாவுக்கு முக்கியமான படைப்பாளிகள் நிறைய பேர் வந்திருந்தனர். பெரும்பாலான நண்பர்கள் இந்த அமர்வுடன் கலைந்து சென்று விட்டனர் - இரவு 10.00 மணி.

***
சற்றுத் தாமதமாக ஆரம்பிக்கப் பட்ட இறுதி அமர்வு மீண்டும் தேநீர் கடையில் ராகி மால்ட்டுடன் ஆரம்பித்தது சினிமா, அரசியல், கம்யுனிஸ்டுகள் என்ற தலைப்புகளில் சிறு சிறு குழுக்களாக கு.பட்சம் மூன்று குழுக்களாவது பேசிக் கொண்டிருந்தது. இறுதியில் கவிதையிலேயே இந்த அமர்வும் தன்னை முடித்துக் கொண்டது. கவிதைகளைப் பற்றி அதன் கோணங்கள் பற்றி என்று, சினிமா பற்றி பேசிக் கொண்டிருக்கும் அர்விந் கவிதைகள் பற்றி நிறைவுரையாற்றினார்.

இஞ்சி மரப்பா குறித்து தலைப்பிட்டு விட்டு அதை விளக்காமல் போனால் எப்படி - வழக்கம் போல சூர்யாவின் ஒவ்வொரு பேச்சிலும் சலசலப்பிற்கும் குறைவில்லாமல் ஏதோ ஒரு விஷயம் அசை போடுவதற்கு கிடைக்கத் தான் செய்யும். இந்த முறையும் ஒரு நண்பர் சூர்யாவின் பேச்சில் புராணங்களில் இருந்து தரவுகளை( ஒரு கவிதையில் காதலை பிரம்மஹத்தி தோஷம் என்று பத்மஜா குறிப்பிட்டமைக்காக - பிரம்மஹத்தி தோஷம் பற்றியும், சதாசிவம் எனும் புராணத்தில் வரும் சிவனின் உடலமைப்பைப் பற்றியும்) எடுத்துப் பேசியமைக்காக தன் கண்டனங்களை பதிந்து விட்டுப் போனார். அதைச் சொல்லி சொல்லி நண்பர்களுடன் சிரித்துக் கொண்டே சபையை கலைக்கும் முடிவுக்கு வந்தோம்.நான்கு இரண்டு சக்கர வாகனங்கள் ஒவ்வொரு திசையில் கிளம்பியது.

சூர்யா - பனங்காட்டு நரி இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது, அது தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருக்கும்.

இந்தக் கட்டுரையை எழுதச் சொன்ன சகோதரி ரேவா பக்கங்களுக்கே சமர்பிக்கிறேன்.


இதை வாசிப்பவர்களுக்கு இலவசமாக இந்த காணொளிக் காட்சியும் காட்டப்படுகிறது
https://www.youtube.com/watch?v=4hYXmgEwbh0

- ஜீவ.கரிகாலன்


சனி, 10 மே, 2014

பஜ்ஜி-சொஜ்ஜி - 67 - சரஸ்வதி எனும் தேவதை

*Content not suitable for all - Myth is associated with curse :P

இவள் ஏன் முக்கியமானவள். உலகில் வாழ்ந்து வந்த மொத்த மனித இனத்தையும் வேட்டைச் சமூகத்திலிருந்து நாகரிகம் நோக்கி நகர்த்தி செல்வதற்கு பெருமனே உதவியவள் இவள். எல்லா தொல் மதங்களையும் இணைக்கும் புள்ளிக்கான மற்றொரு ஆரம் அவளே. அவள் அழகானவள், ஆயுதம் கொண்டவள், ஆற்றல் நிறைந்தவள் புத்தி படைத்தவள்.
*

இந்தியாவில் மட்டுமல்ல இன்றைய மியான்மர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பண்டைய நாகரிகங்களான ரோமன், கிரேக்க மற்றும் பாரசீக(zorastrian)பழங்கதைகளிலும் அதன் வழி வந்த மத நம்பிக்கைகளிலும், கலை வடிவங்களிலும் காணப்படும் ஒரு முக்கியமான பாத்திரம்/தேவதை தான் இவள்
*

இவளைப் பற்றிய கலை வரலாறு ஒன்றை தொகுப்பது மிக முக்கியமான வேலை என்று பேராசிரியர் வரதராஜன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, கலை வரலாறு குறித்து பேச்சு திரும்பியது. அதில் எனக்கு நாட்டமிருக்கிறது என்பதைப் புரிந்த கொண்ட அவர். குறிப்பிட்ட ஒரு அம்சம்/தத்துவம்/கதை புராணக் காலங்களில் இருந்து சமகாலம் வரை கலை வடிவங்கள் மூலம் அடைந்த  மாறுதல்களைப் பதிவதன் முக்கியத்துவம் பற்றிக் கூறினார். அதற்கு உதாரணமாக சரஸ்வதியின் கலை வடிவத்தினைப் பற்றி, இந்திய தேசம் முழுக்க இருக்கும் அதன் வெவ்வேறு அம்சங்கள் குறித்து என்று தேடிப் பார்த்தால் இந்த துறை மீதும், myth மீதும் அபார ஈடுபாடு வந்துவிடும் என்றார். அவர் கூறிய உதாரணம் சரஸ்வதியின் வடிவங்களைப் பற்றி, இக்கட்டுரையும் அந்த கலை வரலாற்றை தெரிந்து கொள்ளத் தேவைப் படும் புவியியல் வரைபடம் ஒன்றை வரைந்து பார்க்கும் நோக்கம் தான் இக்கட்டுரை.

அது என்ன சரஸ்வதி பூஜை முடிந்த பின்னர் ஆயுத பூஜை என்று எதன் பொருட்டு ஆயுதம் ஏந்தாத தேவதையை பிரதானப் படுத்தி பூஜைகள் செய்கிறோம்??

*

Syncretism என்பது பல்வேறு தத்துவங்களை ஒரே/வேறொரு தத்துவத்தின் அடிப்படையாக /சாரம்சமாகப் பார்க்க வைக்கும் தன்மை ஆகும். அதன்படி மதங்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமைகளை வைத்துப் பார்க்கும் பொழுது ஒரே ஒரு பொருளை / பரம்பொருளை / மீப்பொருண்மையை நோக்கி தான் அதன் மைய நீரோட்டம் அமைந்திருக்கும், அதனில் இருந்து அம்மதத்தை பின்பற்றுபவர்களுக்கான சமூக அமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கும் .சரஸ்வதியை உலகம் முழுக்க உள்ள அனைத்து தொல்நாகரிங்களிலும் வணங்கப்பட்டிருக்கும் விதம் அடிப்படையில் ஒரே மாதிரியானது. கோயில்களில் தேவதைகளுக்கு அணிவிக்கப்படும் ஆடை ஆபரணங்களில் இருக்கும் மாற்றம் மனித நாகரிகத்தோடு தொடர்புடையது என்பதை நீங்கள் அறிவீர்களா?

19ம் நூற்றாண்டு வரை எல்லாம் நம் சமூகத்தில் பெண்களுக்கான மேல்சட்டை அணியும் பழக்கம் பெரும்பாலும் இருந்தது இல்லை. மேல்தட்டு வர்கத்தினர் மற்றும் நடுத்தர வரகப் பெண்கள் அணியும் போதே தங்களது கடவுளர்க்கும் அது போன்ற உடைகளை அணிவிக்க ஆரம்பித்து விட்டனர். நாம் வணங்கும் தேவதைகளை இப்படித் தான் நம் காலத்திற்கு ஏற்றவாறும், நமக்கு ஏற்றவாறும் மாற்றிக் கொண்டிருக்கிறோம். சென்ற நூற்றாண்டில் தான் ராஜா ரவி வர்மாவின் சரஸ்வதி ஓவியம் அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்ட புரட்சி மிகு காலம். பின்னர் வரையப்பட்ட எல்லா ஓவியங்களிலும், காலண்டர் அட்டைகளிலும், நாடகங்கள், திரைப்படங்கள் என தேவியர்களின் ஆடை முறை மாறிவிட்டது. அதற்குமேல் நிர்வாணங்களில் வரைபவர்கள் கண்டிக்கப்படவும், தண்டிக்கப் படவும் ஆரம்பித்தார்கள்.

ஆடை ஒரு புறமிருக்க, சரஸ்வதி கையில் நூல் எப்படி வந்தவை என்று பார்த்தல் நலம். கணாபத்யம் எனும் தனி மதத்திலிருந்து பிள்ளையார் வழிபாட்டை ஸ்வீகரித்துக் கொண்ட இந்து மதத்தின் மரபு போன்று தான், சரஸ்வதிக்குப் பின்னால் இருக்கும் கதையும் இருக்க வேண்டும்.  சரஸ்வதியின் கைகளில் இருக்கும் சுவடியின் வயதுக்கும், சரஸ்வதி வழிபாட்டின் ஆரம்ப நிலைக்கும் இடையே கால வித்தியாசம் இருக்கும் என்று நம்புகிறீர்களா??

மனித நாகரிகம்  வளர்ச்சி பெற ஆரம்பித்த பின்னர் கல்வி பயிலும் முறை, ஓலைச் சுவடிகளை கையாளும் முறை என்பனவெல்லாம் நன்றாக நாகரிகம் அடைந்த நாகரிகங்களில் தான் தோன்ற ஆரம்பித்தன. நன்றாக நாகரிகம் - என்பது வேட்டைத் தொழிலிருந்து விவசாய முறைகளைக் கையாளத் தெரிந்த நாகரிகம் என்று புரிந்துகொள்ளப்பட வேண்டியது.

விவசாய முறைகளைக் கையாள  ஆற்றோரங்களில் உகந்த நிலங்களைக் கையகப் படுத்துவது, பின்னர் அந்நிலத்தைப் பண்படுத்துவது, விவசாயம் மூலமாக உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது, அதை பாதுகாப்பது, பாதுகாக்க வேண்டி இருப்பதால், போர் செய்யவும் பழகுவது என இத்தனை செயல்களை புரிவதற்கான ஒரு சமூக அமைப்பினை உருவாக்குவது. ஒரு சமூக அமைப்பினை கட்டமைப்பிற்குள் கொண்டு வர மதகுரு உருவாக்கும் வழிபாட்டு முறைகளில் தான் மக்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள், கருவிகள் தெய்வங்களிடமிருந்து கொடையளிக்கப் பட்டதாகக் கருதப்பட்டவை.

பெண் தெய்வ வழிபாடு  மிகப் பழமையான எல்லா நாகரிகங்களிலும் இருந்தே வந்தன. சரஸ்வதியின் கைகளில் உழுவதற்கு தேவைப்படும் ஏர் போன்ற ஆயுதமும், போர் கருவிகளும் என அளிக்கப்பட்டிருந்தது. நாகரிகமடைந்திருந்த சமூகத்தில் ஏரினை வீணையும், போர் கருவியை சுவடிகளும் மாற்றாகப் பொருந்தின, இன்னும் இரண்டு கரங்களில் மாலை என்று தவக்கோலத்திற்கான வடிவத்துடன் பிரம்மனின் இணையாக இன்று நாம் பார்க்கிறோம்.

முதலில் நமது சமூக அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு தகுந்தவாறு - வேளான் மற்றும் போர்த் தொழிலுக்கு ஏற்றவாறு ஒரே பெண் தெய்வமே இரண்டாகப் பகுக்கப் படுகிறாள்(சரஸ்வதி -பார்வதி). உற்பத்தி முறை சமூகத்திலிருந்து, பண்ட மாற்று முறைகளை கற்றுக் கொண்ட பிறகு சமூகத்திற்கு தேவைப்படும் மற்றொரு தெய்வமென செல்வத்திற்கான ”லட்சுமி” எனும் வடிவம் பொருளாதாரத்திற்கான தேவதையாக உருவெடுக்கிறது. இத்தகைய மாற்றத்தைப் போலவே ஜப்பான் மற்றும் கிழக்குச் சீனாவில் வணங்கப் பெற்று வரும் BENZAITEN எனும் பெண் தெய்வமும் இப்படி ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு ஒரு கம்பித்தந்தி இசைக்கருவியை எடுத்துக் கொண்டாள்.


அனாஹிதா
பார்ஸி இனத்தில் - ஜொராஸ்ட்ரிய மரபில் அனாஹிதா என்றும் , கிரேக்கத்தில் எதேனா என்றும், ருமானியத்தில் மினர்வா என்றும் அறிவின் தேவதையாக (GOD OF WISDOM) வணங்கப்படும் தேவதை , தாய்லாந்திலும், பிலிப்பைன்ஸிலும் சரஸ்வதியாகவே(suraswadee) வணங்கப்படுகிறாள்.

மினர்வா
இப்பொது என் கையில் ஒரு நில வரைபடம் இருக்கிறது, சரஸ்வதி எனும் பெண் தெய்வம் / தேவதை வழிபடப்படும் பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்கள். ஆனால் நான் தெரிந்து கொள்ள விரும்புவது சரஸ்வதி எனும் தேவதை இந்தியா முழுக்க எவ்வாறெல்லாம் வணங்கப்பட்டு வருகிறாள்? அவளது உருவங்களில் இருக்கும் வேறுபாடுகள் என சேகரிக்க விரும்புகிறேன். அவற்றினைக் கொண்டு வேறுபாடுகளுடைய ஒவ்வொரு பகுதிகளிலும் சரஸ்வதி தன் சமூகத்தை எப்படிப் பிரதிபலிக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அதற்கான முதல் முயற்சி - சரஸ்வதி எனும் நம்பிக்கையை(myth), அதன் அடிப்படையை உணர்ந்து கொண்டு நெருங்கிச் செல்வது. இப்போது அவள் எனக்கு மிக அருகில் இருக்கிறாள்.

-ஜீவ.கரிகாலன்

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

பஜ்ஜி - சொஜ்ஜி - 66 / மண் வாசனை

கோடை எல்லார் வீட்டிலும் பட்ஜெட்டை எகிற வைக்கும் விரயங்களுக்கான மாதம் என்பது பொருந்தும். அதிகளவு குடிதண்ணீர், மின்சாரம், தர்பூசனி, ரஸ்ணா, பொவண்டோ, நைசில் போன்ற variable costகளோடு சில fixed costஐயும் உருவாக்கும். அது ஒவ்வொரு வீட்டிற்கும் தகுந்த மாதிரி ஏர் கூலர், ஏர் கண்டிஸன், யூபிஎஸ்/இன்வெர்ட்டர், பேட்டரி ஃபேன் போன்ற இமாலய செலவுகளையும் வைத்துவிட்டு பல்லிளித்தபடி யாரிடமாவது கை நீட்டச் செய்யும். என் நண்பர்கள் தமது குழந்தைகளுக்கு சம்மர் கோச்சிங், ப்ளே ஸ்டேஷன், தீம் பார்க், ஷாப்பிங் என்றெல்லம் தமது குழந்தைகளுக்காக, பள்ளிக் கட்டணம் போகவும் இது போன்ற செலவுகளுக்கு ஆளாகும் போது, பேச்சிலராகவே வாழ வேண்டும் என்கிற எண்ணம் வந்து சூடம் ஏற்றி சத்தியம் செய்து கொள்கிறது. இத்தனை கடினங்களையும் சமாளித்து தன் மனைவி மக்களை ஊருக்கு அனுப்பிவிட்டு கிடைக்கும் பத்து நாட்களில் தான் வாழ்ந்த அடையாளமாக தன் வரலாற்றில் பதிய முனைகிறான் என் நண்பன்.

“லக்‌ஷ்மிபதி ஓடியா ஓடியாஎன்று நண்பர்களை அழைத்த படி தன் கோடையை கொண்டாடத் துவங்குகிறான்.
****


தெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும், என்னுடைய கோடை கொண்டாட்டம் பற்றியும் சொல்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக எனக்கு இருந்ததெல்லாம் ஒரே திட்டம் தான். அது என் சொந்த ஊருக்கு சென்று மூன்றே நாளில் திரும்பி வருவது எனும் திட்டம் தான். அந்த கரிசல் கிராமத்தில், சுடுமணலில், சிமெண்ட் சாலைகளில், நெருஞ்சி முட்கள் மீது என ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் மிதித்துப் பார்ப்பது மட்டுமே எனது பயண அனுபவம். ஆனால் போன வருடம் வரை அங்கு செல்வது என்றால் ஒரு இனம் புரியாத சந்தோஷம் இருக்கும்.

அது ஐந்து வயது வரை மட்டுமே நான் வாழ்ந்த ஊர். பிழைப்பு தேடி பிறகு எங்கள் குடும்பம், எங்கெங்கோ அலைந்து திரிந்து இறுதியில் சென்னையில் சங்கமித்தாகிவிட்டது. சென்னையைப் பொறுத்தவரை நாம் எப்போதுமே யாரோ ஒருவன் தான், இங்கே கோடீஸ்வரனும், பாமரனும் கூட யாரோ ஒருவன் தான். எல்லோருக்குமே வேலை இருக்கிறது, வேலையே செய்யாதவனுக்குக் கூட மற்றவர்களைப் பார்த்து அலட்டிக் கொள்ளத் தேவைப்படாமல் கடந்து செல்வதற்கு காரணங்கள் இருக்கின்றன.

ஆனால் கிராமத்தின் நிலை வேறு, அங்கே நான் வாழ்ந்த சுவடு முற்றிலும் போய்விடவில்லை, எங்களைத் தெரிந்தவர்கள் யாரேனும் மட்டுப்படுகிறார்கள்; அவர்களிடம் கதைகள் இருக்கின்றன; அச்சம் இருக்கின்றன; நினைவுகள் வந்து செல்கின்றன. அடுத்த வருடம் எப்படி வரவேண்டும் என்று வாழ்வை இயக்குவதற்கான அச்சானியாகிறது. பால்யத்தில் பார்த்த நண்பர்களின் முகத்தை அவர்களின் ஏதோ ஒரு சொல்லிலோ, தொனியிலோ கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிட்டுகிறது. எல்லாவாற்றிற்கும் மேலே தலைமுறை தலைமுறை நம்மைக் காப்பதாக நினைத்து ,ஒரு கோயிலை உருவாக்கி, காலங்காலமாக கை கூப்பி வணங்கி வந்த எங்களது முன்னோர்களின் வார்த்தைகள் அங்கே இருக்கின்றன. கோரிக்கைகளாக, மன்றாடல்களாக, வரமாக இருக்கும் அவ்வார்த்தைகள் கோயிலுக்குள் எப்போது சூழ்ந்திருக்கும் ஒரு கப்பிய வாசனையாய் நிறைந்திருக்கிறது. அதே போல நிராசைகள், வஞ்சனைகளும் துருப்பிடித்த கதவுகளின் ஈன முனகலாக சேர்ந்தே இருக்கின்றன.

இப்படியெல்லாம் ரசித்துக் கொண்டிருந்த ஊருக்கு ஒவ்வொரு வருடமும் செல்வது எனக்கு உற்சாகமானது. அந்த ஊருக்கென உரித்தான பண்டங்களுடன் அந்த நாட்களை கழிப்பது மேலும் உற்சாகம் தரக்கூடியது. எல்லாம் போன வருடம் வரை தான்.

****

சென்னையை எத்தனை தூரம் ஒரு காலத்தில் வெறுத்திருக்கிறேனோ அத்தனை தூரம் இன்று ரசிக்கிறேன் அதற்கு மற்றுமொரு காரணம் தான் மேற்கூரிய அக்காரணம். போன வருடம் அப்படித்தான், கடைத் தெருவில் நடந்து வருகையில் இரு வயதானவர்களுடன் பேச்சு கொடுத்தேன் :

ஒரு இருபது வருடங்களுக்கு முன்னரெல்லாம் கிராமத்திலிருந்து நகரம் தேடி செல்பவர்கள் இரண்டு விதம். ஒருவர் தன் கிராமத்திலிருந்து கடன் வாங்கி வெளியூரில் தொழில் தொடங்குபவர்களும் அல்லது வேலை/ படிப்புக்காக இடம்பெயர்பவர்கள் முதல் வகை. இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் இங்கே வாங்கியிருந்த கடனால ஊரில் வாழ முடியாமல் வேறு ஊர் சென்றவர்கள்.

யார் எப்படி சென்றாலும் சரி, உழைத்து முன்னேறியோ, படித்து முன்னேறியோ இல்லை, அதிர்ஷ்டத்திலேயே முன்னேறியோ நகரத்தில் வாழ்பவர்கள் தான் கிராமத்திற்கு திரும்புவதற்கான தகுதியைப் பெற்றவர்கள் போன்ற ஒரு பிம்பம் உருவாகிவிட்டது. முதலாளி சரியில்லை, தொழில் அமையவில்லை, கம்ப்யூட்டர் வகுப்பில் சேராமல் விட்டு விட்டேன் என்றெல்லாம் அவர்களிடம் பதில் சொல்ல முடியாது. வெற்றிக்கான அடையாளமாக தன் சொந்த ஊர்க்காரர் முன் காரிலாவது வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குறைந்த பட்சம் குடும்பத்திற்கு ஒரு TCS emplyeeஆவது உருவாகி தன் குடும்பத்தை எப்படி லிஃப்ட் பண்ண முடியும் என்று காண்பித்து விடுகிறான்.

இந்த திறந்தவெளியில் உனது இடத்தைப் பெற/தக்கவைக்க ஒரு பெரிய போட்டியில் ஜெயித்தாக வேண்டும். ஆனால் இந்த போட்டியின் வெற்றியை ஆடும் திறமை, ஆட்டக் களம், உபகரணங்கள், பயிற்சி, சக ஆட்ட வீரர்கள் அவர்களது திறமை போன்றவற்றை விட ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னே போடும் டாஸ் ஏற்படுத்தும் விளைவுகள் தான் அதிகமாக இருக்கும். படிப்பிலோ, வேலையிலோ, நிறுவனத்திலோ அல்லது வேறு ஏதேனும் வாய்ப்பிலோ நாம் சொல்லும் yes or no தான் deciding factor. மற்ற சமாச்சாரங்கள் எல்லாம் பின் தொடரும் காரணிகளே.
நகரம் சிதறி விட்ட சில்லறைக் காசுகளில் சிலருக்கு ஐம்பது பைசா, சிலருக்கு ஒரு ரூபா, சிலருக்கு ஐந்து, வெகு சிலருக்கு பத்து ரூபா. நம் கையில் இரண்டு ரூபா காயின் தானே கிடைத்தது என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டாலும். கொட்டப்பட்ட சில்லறைகளில் நாம் தான் சரியாக பொறுக்கவில்லையோ என்று நம்மையே வலுவற்றவர்களாக்கி விடுகின்றது இவர்களின் ஒப்பீடுகள்.

எத்தனையோ புத்தகங்களில், சிலரது பேச்சுகளின் வழியே நாம் கற்றுக் கொண்ட நிதானங்கள் இது போன்ற மனிதர்களின் விஷமத்தனமான பேச்சில்  தகர்த்து விடுகிறது. ஒரு குடும்பத்தின் தோல்வியை தன் ஆயுள் முழுக்க பார்த்து வந்திருப்பதாக ஒருவர் சொல்வதைப் பார்க்கும் பொழுது நடுங்கவே செய்தேன். அவருக்கு பதிலாக என்னிடம் ஒரு சொல் கூட உயிரோடு இல்லை. உலகம் நம்புகின்ற அளவுகளின்படி தன்னை வெற்றி பெற்ற மனிதனாக நிரூபித்துக் கொள்ளாதவனின் குற்ற உணர்வுடன் வீடு சேர்ந்தது அத்தனை எளிதாக மறக்க முடியாதது தான்.

சில நாட்கள் என் பெற்றோர்களிடமே சரியாகப் பேச முடியாத அளவுக்கு குற்ற உணர்வு இருந்த்தை எண்ணிப் பார்த்தாலும் வியப்பாகத் தான் இருக்கிறது. எப்படி எத்தனையோ முறை பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என விமர்சனங்களை கடந்து வந்த நம்மை சம்மந்தமே இல்லாத ஒருவர் எப்படி காயப் படுத்தியிருக்க முடிந்தது? என்று. மூன்று தலைமுறைகளாக ஒரு குடும்பம் தேய்ந்த கதையை வேறு ஒருவன் இத்தனை ரசனையாக சொல்ல முடியுமா? என்று தெரியவில்லை. ஒருவேளை உங்கள் ஊரிலும் நீங்கள் பேருந்தில் இறங்குவதைப் பார்த்தபடி உங்களை விசாரிக்க வரும் ஒரு பழைய ஆசாமியிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முழுவதும் உண்மையாகவும், அதிகம் பொய் இல்லாமலும் பதில் சொல்லத் தயாராக வேண்டும்.

இன்னும் இந்தக் கதை முடியவில்லை என்பதால் தான் இந்த வருடமும் செல்கிறேன். இந்த வருடமும் அவரைப் பார்க்க நேரலாம். அதே கேள்விகள் என்னை துளையிடலாம், நான் தோற்றுப் போகலாம். ஆனால் காலத்திடன் இதற்கான பதில் இருக்கிறது. அது யாருக்கு சாதகாமான பதிலை வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்த எதிர்காலம் ஒளித்து வைத்திருக்கும் பதில் தான் இந்த வருடமும் ஊருக்கு செல்ல எனக்கு தைரியம் கொடுக்கிறது. கிளம்பிவிட்டேன்.

அந்த மனிதர் என்னிடம் கடைசியாக கேட்ட கேள்வி,  இவர்களை பொருட்படுத்தாமல் நம் பாதையே சரி என்று நம்பி செல்வதற்கு காரணமாக அமைந்தது.

“தம்பி, அப்படியே நமக்கு ஒரு நன்னாரி சர்பத் ஒன்னு வாங்கிக் கொடேன்

- ஜீவ.கரிகாலன்


வியாழன், 27 மார்ச், 2014

இந்த வருடம் என்ன செய்யலாம்??


ஏதோ நாம் எழுதும் கட்டுரைகள் அங்கங்கே பத்திரிக்கைகளின் வரும் பொழுது கிடைக்கும் சந்தோஷத்தோடு நிவர்த்தி செய்து கொள்ளலாம் தான். சிலர் என் மீது வைத்த நம்பிக்கைகளுக்கு நான் செயல் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. அழுத்தம் என் மனதில் ஏற்கனவே இருந்து தான். இதைப் பதிவதின் மூலம் இன்னமும் வீரியமாகவே செயல்படுவேன். ஏற்கனவே நான் செய்திருந்த ஸ்டெரிலைட் ஆலை குறித்த கட்டுரை தான் எமக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்பதும் மிகையல்ல.

ஆம் இந்த ஆண்டு முழுதும் நான் களத்தில் இருக்கப் போகிறேன், இதைப் பற்றிப் பேசும் போது ஒரு பக்கம் அளவிலா சந்தோஷமும், பொதுவில் சொல்லி விட்டதால் அதை நிறைவேற்றியே ஆகவேண்டிய நிர்பந்தமும் ஏற்படும் என்பதால் தான் இந்தப் பதிவு.

சுற்றுச்சூழல் தொடர்பான, இயற்கை விவசாயம் தொடர்பான ஆவனப் படங்களும், கட்டுரைகளும் இனி தொடர்ந்து நம் வலை தளத்தில் பதிவேற்றப் படும். கட்டுரைகள் மட்டுமன்றி இதற்காக நான் சுற்றியலைந்த இடங்கள் குறித்த பதிவுகள், அதற்கான செலவு, பயண அனுபவம் என எல்லாவற்றையும் தொடர்ந்து பதிவிட உத்தேசித்துள்ளேன்.

சுற்றுச் சூழல் தொடர்பாக ஸ்டெரிலைட் மற்றும் நன்னிலம் - மீத்தேன் கால்வாய் பற்றிய கட்டுரைகளும், இயற்கை விவசாயம் குறித்த பதிவுகளுமாக இரண்டு வேலைகளாக பிரித்து செய்வதென ஏற்பாடு. இதில் ஒரு பாதி வேலைகளுக்காக எனக்கு sponsor கிடைத்திருக்கிறது என்பது தான் என்னை உத்வேகத்துடன் நகர்த்திச் செல்லும் விஷயம். நண்பர்கள் யாரேனும் என்னுடன் சேர்ந்து பயணம் செய்ய விரும்பினாலும் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் அது முதல் சுற்று முடிவடைந்த பின்னர் தான்.

இந்த வழியில் எனது அடுத்த பதிவு என் களப்பணி பற்றிய செய்தியில் இருந்து ஆரம்பிக்கும்.

வேறென்ன வேண்டும் உங்கள் வாழ்த்துகளைத் தவிர??

-
ஜீவ.கரிகாலன்




செவ்வாய், 25 மார்ச், 2014

பஜ்ஜி-சொஜ்ஜி - 65 / கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு

ஒரு நாள் சகோதரர் அகரமுதல்வன் வீட்டிற்கு சென்றிருந்தேன், அவர் தன் ஊருக்கு(ஈழம்) மிகவும் நெருக்கமான பழக்க வழக்கங்கள் உடையவர்களாக திருநெல்வேலி மற்றும் நாஞ்சில் பகுதி மக்களின் வழக்குகள் இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தார். அப்படியென்றால் “தங்கள் வீட்டில் சொதி செய்வீர்களா” என்றேன்?? .  “சொதி இல்லாமல் எங்கள் தினம் முடியாது” என்றார்.

அடுத்த வாரமே அவர் வீட்டிற்கு மதிய உணவுக்கு சென்றோம், சொதி என்றால் அது திருநெல்வேலி சொதியில்லை, கொழுப்புச் சத்து குறைந்த நாகர்கோயில் சொதி என்று சொல்லலாம். சொதியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு மச்சம் சமைத்திருக்கிறேன் என்றார், எனக்குத் தூக்கி வாரி விட்டது. “நான் தான் சைவம் என்று சொன்னேனே” என்றேன்.  அவரோ அதை விளங்காதது போல் “அதனால் என்ன??” என்று கேட்டுவிட்டு, அடுத்ததாக சுதாரித்தபடி “நீங்கள் மரக்கறி” உண்பவரா என்று கேட்டார். “ஆம்” என்றேன், அந்த அளவிற்கு எனக்குத் தான் எனக்கு தமிழ் தெரிந்திருந்தது என்ற வெட்கம் வேறு. பின்னர் ஒரு வழியாக எனக்கு அவசரத் தயாரிப்பாக உருளைக்கிழங்கு சமைத்து வழங்கப் பட்டது அருமையான, மறுக்க முடியாத விருந்து.

சைவம், மரக்கறி இதில் எது சரியான பதம்?

சைவ மதத்தைத் தழுவிய எத்தனையோ சமூகங்கள் எல்லோருமே ஏன் புலால் உணவு சாப்பிடுபவர்களாகவும், குறைந்த எண்ணிக்கையுள்ளவர்கள் மட்டுமே சைவர்களாக இருக்கின்றனரே என்கிற குழப்பமும் வந்தது. இப்போதைக்கு சில வெள்ளாளர்கள் சமூகத்தினரும்(திருநெல்வேலி, தஞ்சை, தொண்டை மண்டல, தேனி பகுதியைவ் சேர்ந்த வெள்ளாளர்கள்), முதலியார்களில் ஒரு பிரிவும், தென்னிந்திய பிராமிணர்களும் (பல வடமாநிலங்களில் பிராமிணர்கள் அசைவம் சாப்பிடுவதை தங்கள் உணவுப் பழக்க வழக்கத்தில் வைத்திருக்கின்றனர்), அதே நேரம் இங்கே வீட்டிற்கு தெரியாமல் சாப்பிடும் நபர்கள் வேறு கணக்கு.

ஒரு காலத்தில் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி காலம் அல்லது ஆறாம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை மிகப் பரவலாக சமண மதம் தமிழகத்தில் பரவி இருந்ததே புலால் உண்ணாமை எனும் கொள்கை தென்னிந்தியாவில், குறிப்பாக அது தமிழகத்தில் நன்கு பரவிட காரணமாக அமைந்தது. பின்னர் சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் வரவாலும், மூவேந்தர்களும் வைதீக மதத்தை ஏற்றுக் கொண்டபடியாலும் மெல்ல, மெல்ல என்றில்லாமல் அம்மாற்றங்கள் மிக வேகமாக நடந்தேரின. தன் சக்தியை, மக்களை, அரசியல் செல்வாக்கை இழக்க ஆரம்பித்தது சமண மதம். இருப்பினும் ஆழமாகப் பொதிந்து போன பல சமண மதக் கொள்கைகள் நமது வைதீக மதத்தோடு இணைந்து கொண்டன. திருஞானசம்பந்தரும் அப்படித் தான் வைணவத்திலிருந்து சைவராக மாறுகிறார் என்பதை நீங்களும் அறிவீர்கள். சமணத்தில் முக்கியமான ஒரு கொள்கையான “புலால் உண்ணாமை” தமிழகத்தின் சில சமூகப் பிரிவில் நன்றாக வேரூண்றியது. அவர்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகள் இல்லாத மதத்திலும் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டனர். சமூக அமைப்பில் மிகுந்த செல்வாக்குடையவர்களாகவும், சொத்துகள் கொண்டவராகவும் இருந்த அம்மக்களின் உணவுப் பழக்க வழக்கம், பின்னர் தனித்துவமிக்கதாகவும். ஆச்சாரம், உன்னதம் என்ற கற்பிதங்களோடும் கலாச்சாரத்தோடு இணைந்தன. அசைவம் என்ற சொல் பிறந்தது இப்படித்தான். மரக்கறி உண்ணும் சைவர்கள் தான் சைவர்கள் என்றும், பிறர் அசைவர்கள் என்றும் பகுக்கப்பட்டது. பின்னர் புலால் உணவு எனும் பதமே அசைவம் என்று கருத்தாக்கம் கொள்ளப்பட்டது.

அது போலவே வேறுபாடுகளை வளர்ப்பதற்கும் இந்த உணவுப்பழக்கம் உதவிட, High Class Vegetarian என்கிற போர்டுகள் உருவாகின. அதனாலெல்லாம் தீங்கு இல்லை, ஆனால் சமகாலத்தில் TO LET ONLY FOR VEGETARIANS / BRAHMINS என்கிற பிற்போக்கு வாசகங்களெல்லாம் வாழ்வியல் சுதந்திரத்தின் மீதான கோபத்தைக் கிளரி விடவே செய்கின்றன

நானும் வெஜிடேரியன் தான். மன்னிக்க, நானும் மரக்கறி உண்பவன் தான் எதற்கான இந்த அரசியல் பேசுகிறேன் என்றால் இன்னுமொரு குட்டிக் கதை(சம்பவம்) சொல்வதற்கு தான்.

நேற்று, என் நண்பர் ஒருவரோடு நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல திண்டுக்கல் தலப்பாகட்டி நாயுடு உணவகத்திற்கு சென்றேன். அந்த நண்பரோடு நான் எங்கு சென்றாலுமே அன்று எனக்கு ஒரு ப்ளாக் போஸ்ட் போடுமளவுக்ககு நிறைய விஷயங்கள் கிடைக்கும் என்றாலும், basically சோம்பேறியாகிய நான் அப்படிப் போடுவதில்லை. நேற்று அவரோடு உணவகம் செல்லும் வாய்ப்பு கிட்டியதால் வயிற்றை நன்கு தயார் செய்து கொண்டேன், இனி நடக்கப் போகின்றவைகளை நான் இப்படி எழுதிக் கொண்டிருப்பேன் என்று எனக்கு மட்டும் தெரியுமா என்ன??.

அந்த மதிய வேளையில் மாங்கு மாங்கு என்று அங்கு தின்று கொண்டிருந்தவர்கள் என்னை உசுப்பேற்றி விட, புலால் உணவிற்கு இணையாக நாமும் களத்தில் குதிப்போம் என்ற சபதத்தோடு - வரிசையாக ஆர்டர் பண்ணின சைவ, மன்னிக்க மரக்கறி ஐட்டங்கள் யாவுமே தற்காலிக இல்லை லிஸ்டில் தான் இருந்தன, இன்னும் சில ஐட்டங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டிருந்தன போலும். அந்த அளவிற்கு அந்த உணவகத்திற்கு செல்பவர்கள் 100% PURE NON-VEGETARIAN ஆக இருந்து வந்ததால் இப்படி கேட்பவற்றிற்கெல்லாம் இல்லை என்று சொல்லு வந்தனர்.  அப்போதாவது நான் கொஞ்சம் உஷாராக் இருந்திருக்கலாம் தான்.

புலால் உணவிற்கு இணையான(விலையிலும் வண்ணத்திலும்) காளானை தேர்ந்தெடுத்தேன். காளான் பிரியாணியும் இல்லை என்று சொல்ல, “ காளானில் எதையாவது கொடு” என்று அன்புடன் ஆர்டர் செய்தேன். நல்ல ஒரு லோடு ஜீரா ரைஸும், காளான் மஞ்சுரியனுமாக விழுங்கிவிட்டு, அலுவலகம் திரும்பினேன். ஆரம்பத்தில் ஏதோ மூக்கு அரிப்பது போன்ற உணர்வு, திரும்ப அலுவலகம் வரும்பொழுது, உதடு தடித்திருந்தது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தூக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வர, அப்படியே மேஜையில் சாய்ந்தேன். ஒரு மணி நேரமாவது இருக்கும், விழித்த போது தான் என் முகத்தில் மாற்றங்கள் இருப்பதாக உணர்ந்தேன், கண்ணாடியில் பார்த்தால் முகம், கண், மூக்கு என்று சிவந்தும் வீக்கத்துடனும் இருந்தது.

காளான் விருந்துக்கு 600 ரூபாய் கட்டணம் மூன்று நாள் மாத்திரை, இரண்டு அவில் ஊசி, ஒரு நாள் விடுப்பு என்றெல்லாம் விளைவுகள் ஆயின. வீட்டிற்கு சென்றால் பயந்து விடுவார்கள் என்று மிகத் தாமதமாக தான் சென்றேன், பதறித் தான் போனார்கள். நல்ல கொடை வேறு கூடுதலாகக் கிடைத்தது.

நண்பர்களும் என்னை இப்படியெல்லாம்ஆற்றுப் படுத்தினர்
*தலப்பாகட்டி போய் வெஜ் ஐட்டம் கேட்டல்ல அதனாலத் தான் வந்துருக்கும் போல.
*கல்யாணம் ஆயிருக்கு இல்லன்னா அட்லீஸ்ட் கேர்ள் ஃபிரண்டு இருக்குன்னா கூட கொஞ்சம் ஸுவாரஸ்யமா கதை போயிருக்கும்
என்ற கமெண்டுகள் வேறு.

ஊசி போடும் டாக்டர் என் கதையைக் கேட்டு வயிறு வலிக்க சிரித்தார், அந்த கதை ஒன்னும் அவ்வளவு பெரிய ஜோக்காக அமையவில்லை என்ற போதும் அவர் சிரிப்பதற்கு வேறு ஏதாவது கதை இருக்கலாம் என்று நினைத்துவிட்டேன்.

இந்த வேதனையிலும் நான் கண்டுகொண்ட உண்மை இதுதான், அத்தனை கோரமாக என் முகம் மாறியதாகத் தோன்றியது என் குடும்பத்தினருக்கான, என் நண்பர்களுக்கான, என்னைத் தெரிந்தவர்களுக்கான என் முகம் தான். ஒரு மணி நேரம் சாலையில் அந்த கோர முகத்துடன் நான் பயணிக்கும் பொழுது என்னைக் கடந்த சில ஆயிரம் மனிதர்களிடம் ஒரு பாடம் கற்றேன். இந்த நெருக்கடி மிகுந்த வாழ்வில் வேடிக்கை பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும், அனுதாபப்படுத்துவதற்கும் ஏன் கேலி செய்வதற்குக் கூட நேரம் தராத பரபரப்பான உலகில் தான் நாம் பிரதிநிதியாகி இருக்கிறோம். இந்த அடுக்குகளில் வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு எல்லாமே தற்காலிகம் தான். ஒரு பத்து நிமிடம் நடக்கலாம் என்று நினைத்தவன், ஒரு மணி நேரமாவது தெருக்களில் நடந்திருப்பேன்.

மனதில் இருந்த பலவிதமான எண்ணங்கள், கேள்விகள் ஒன்றை ஒன்று அடித்துக் கொன்று தின்றுவிட்டன. காலியான மனதுடன் வீடு திரும்பினேன். இத்தோடு இயன்றவரை ஹோட்டல் உணவிற்கு இடம் கொடுக்கப்படாது என்று சங்கல்ப்பம் செய்து கொண்டேன்.

எனக்கு இருக்கும் ஒரே சந்தேகம் என்னவென்றால், கொஞ்சம் கூட hygienic இல்லாத சாலையோரக் கையேந்தி பவன்களில் கொடுக்கும் 20 ரூபாய் காளான்கள் கொடுக்காத இந்த பக்கவிளைவை, சொகுசு இருக்கையில் இருந்து சில நூறு ரூபாய் கொடுத்து சாப்பிடுவதால் ஏற்படுகின்றது எனும் logic என்ன??


- ஜீவ.கரிகாலன்


செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

பஜ்ஜி-சொஜ்ஜி - 64 / தேடல் உயிர்ப்பானது



தேடலென்பது என்ன?? விளக்கம் தெரியாது. ஒரு செயலைப் பற்றிய விவரணைகள் எனக்கு எப்போதும் தேவைப்படவில்லை, செயல் வெறுமனே செய்யப்படும் போது அதில் பற்றிருக்காது என்று இன்று உபநிஷதத்திலிருந்து ஒரு செய்தியை உணர்ந்து கொண்டேன்.

வலைப்பூவிற்கு பெயர் தேட ஆரம்பித்ததிலிருந்து மேலோட்டமாக எத்தனை தளங்களில் நுனிப்புல் மேய்ந்திருப்பேன் என்ற வியப்பிலிருந்து தான் இந்தப் பதிவு தொடங்குகிறது. நுனிப்புல் மேய்வதால் விளைச்சல் காரனுக்கும், குதிரைக் காரனுக்கும் நஷ்டம் உண்டு, பசியாரும் அளவுக்கு நுனிப்புல் மேய முடிந்ததால் மேய்ச்சலில் திருப்திபட்டுக் கொள்ள குதிரையால் முடிகிறது என்பது சந்தோஷம்.

இந்த வலைப்பூவிற்கான பெயரைத் தேடும்போதே மொழிச் சிக்கலில் இருந்து தான் ஆரம்பித்தேன், தனித்தமிழ் எனப்படும் தனித்த தமிழின் நடைமுறைச் சிக்கலிலிருந்து விவாதம் தொடங்கியது. பல நண்பர்களுடன் இதைப் பற்றி பேசும்பொழுது, நிச்சயமாய் நான் ஒன்று சொல்லிட வேண்டும். ஜெயமோகன் தமிழ் இந்துவில் எழுதிய கட்டுரை ஒன்றில் ஆங்கில லிபியில் தமிழ் மொழியை எழுதிப் பழகுவதை ஆதரித்தவற்றை கண்மூடித்தனமாய் நான் எதிர்த்திருக்கிறேன் என்று. ழகரம், றகரம் என்ற எழுத்துகளை சுத்தமாக உச்சரிக்க வரும் என் உறவினரின் மகனுக்கு தனது 10 வயதிற்குப் பின்னர் தான் மூன்றாவது மொழியாக தமிழ் கற்றுத்தரப்படுகிறது. அவன் பேச்சு வழக்குக்கு, ஆங்கில லிபியில் தமிழ் எழுத ஆரம்பித்திருந்தால்?? - பெரிய ஆபத்தாகியிருக்கும், இந்த மூன்றாம் மொழியாகக் கூடக் கற்றுக் கொடுத்திருக்க மாட்டார்கள். இந்த மாற்றம் ஏற்றுக் கொள்ளப் படும் அளவிற்கு மோசமான சூழல் உருவாகுமென்பது ஜெ.மோவின் கணக்கு.

இப்படி ஒரே அலைவரிசையில் பயணிக்காமல், கலித்தொகை, பெரிய புராணம், சில ஓவிய புத்தகங்கள் என்று சுழற்றிப் பார்த்தேன். சங்க இலக்கியங்களில் மது வகைகளுக்கு இருக்க்கும் பெயர்கள், நீர்நிலைகளுக்கு இருக்கும் பெயர்கள், சிற்பக் கலையிலிருந்து ஏதாவது ஒரு சொல் என்று தேடிக் கொண்டிருந்தேன்.

ஒரு கதைசொல்லியாக இருக்க ஆசைபட்டாலும், நண்பர்களுக்கு மட்டுமே இது வரை என் கதைகள் வாசிக்கப்பட்டு இருப்பதால் “ட்ரங்குப் பெட்டி என்று வைக்கலாமே” என்று யோசித்தேன். மறுபடியும் ட்ரங்கு எனும் மொழி இடித்தது.

கல்வெட்டியல் படித்துக் கொண்டிருப்பதால், அத்துறை சார்ந்து ஏதாவது கிடைக்கின்றதா என்றும் சில கல்வெட்டு வாசிப்புகளையும் எடுத்துப் பார்த்தேன் கிட்டவில்லை.

நான் தேடும் பெயர் மயக்கநிலை தருவதாக இருக்க வேண்டும், அல்லது அழகியலின் உச்சபட்ச நிலையில் இருக்க வேண்டும் தீர்மானமாக இதில் நின்று கொண்டேன்.

மயக்க நிலை என்றால்; வள்ளுவனின் மயக்க நிலை போல

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

இப்படி ஒரு மயக்கநிலையை வள்ளுவன் சொல்லியிருக்கின்ற இடத்திலிர்ந்து தான், துகில் எனும் வார்த்தைக்கு அருகில் சென்றேன்.

முலைமேல் துகில் - இலக்கியங்களில் தொய்யில் என்ற ஒரு கலை பற்றிய பதிவு நிறைய கிடைக்கிறது.

தொய்யில் - மருதாணி இடுதல் போன்றே உடலில் வண்ணமேற்றும் கலை தான். பெண்களின் மார்பு மற்றும் முதுகு தனில் வரையப்படும் அழகுச் சித்திரங்களோ?கோலங்களோ? அவை ஆடையைப் போல உடலை மறைக்கும் தன்மையில் வரையப் பட்டவை; அவை பெரும்பாலும் காதலனால், காதலிக்கு வரையப்பட்டவை; அவை பெரும்பாலும் கூடி முடித்த நிலையில் அளவிலாக் காதலோடு வரையப் பட்டவை. 

சங்க காலத்தில் புணர்ச்சிக்கு முன் தலைவியின் மார்பிலும் தோளிலும் முகத்திலும் குங்குமம் மற்றும் சந்தனக் குழம்பால் ஆன கலவையைக் கொண்டு ஓவியம் வரைவது மரபு. ஓர் இரவில் புணரும் ஒவ்வொரு புணர்ச்சியிலும் வெவ்வேறு வகையான தொய்யில் எழுதுவர். தொய்யிற் கலையை கூத்தர்கள்(கூத்தாடுபவர்கள் ) தலைவனுக்கு கற்ப்பிப்பார்கள். இவ்வ்வாறு தொய்யில் எழுதுவது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் மிகுந்த அன்பை விளைவிக்கும் என்பது சங்க கால மக்களின் நம்பிக்கை.

தொய்யில் எனும் வார்த்தை வள்ளி, கரும்பு என்ற பெயர்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது.
1.
(தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் மனைவியின் தோள்களில் வெண்ணிறத்தில் வள்ளிக்கொடி எழுதப்பட்டிருந்தது.)
வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத்தோள் - நெடுநல்வாடை 36 - (விக்கிப்பீடியா -தமிழ்)

2.
உழுந்து உடைக் கழுந்தில் கரும்புடைப் பணைத்தோள்
நெடும்பல் கூந்தல் குறுந்தொடி மகளிர்
நலனுண்டு துறத்தி யாயின்
மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூளே.

(குறுந்தொகை 384, ஓரம்போகியார்,  மருதம்  திணை – தோழி தலைவனிடம் சொன்னது)

3.
(அகநானூறு 389, நக்கீரனார், பாலை திணை தலைவி சொன்னது)
அறியாய்- வாழி தோழி!- நெறிகுரல்
சாந்தார் கூந்தல் உளரிப் போதணிந்து
தேங்கமழ் திருநுதல் திலகம் தைஇயும்
பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட
நல்லிள வனமுலை அல்லியொடு அப்பியும்
பெருந்தோள் தொய்யில் வரித்தும் சிறுபரட்டு
அஞ்செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்
எற்புறந் தந்து நிற்பா ராட்டிப்



4.
(நற்றிணை 225, கபிலர்,  குறிஞ்சி  திணை – தலைவி சொன்னது)முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல் வரும் மால் வரை நாடனை
இரந்தோர் உளர்கொல் தோழி திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே.


என் எழுத்தில் நான் அதிகம் கவனமாகக் கையாள வேண்டியதாக நினைக்கும் அழகுணர்வின் காரணமாக, என் படைப்பு முயற்சிகளை இனி தொய்யில் எழுதுவது போலத் தான் அணுகவேண்டும் என்று விரும்புகிறேன். ஆகவே,தொய்யில் என்ற பெயரை என் வலைப்பூவிற்குத் தேர்ந்தெடுத்துள்ளேன். இனி thoyyil.blogspot.com தான்

- ஜீவ.கரிகாலன்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

பஜ்ஜி-சொஜ்ஜி/ 63 கலித்தொகைப் பாடலும் Contemporary காதலும்

சீரியஸாக ஒரு funny attempt.....

சுடர் தொடீ இ! கேளாய் தெருவில் நாம் ஆடும்மணல்
சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து,வரிப்பந்து கொண்டு ஓடி,
நோதக்கச் செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லீரே!

உண்ணுநீர் வேட்டேன் என்வந்தார்க்கு அன்னை,
அடர்பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்
உண்ணுநீர் ஊட்டுவா என்றாள்; என் யானும்
தன்னை யறியாது சென்றேன்; மற்று என்னை
வலை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
அன்னாய்!இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா,
அன்னை அலறிப் படர் தரத் தென்னையான்
உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி
நகைக் கூட்டம் 
செய்தான் என் கள்வன் மகன்

(கலி:51)

மேற்கண்ட கலித்தொகைப் பாடலுக்கு விளக்கம் கூறுவதற்கு எண்ணற்ற உரைகள் இணையத்திலும் கிடைக்கின்றன.

சங்க இலக்கியங்களில் இருக்கும் அகத்திணைப் பாடல்கள் அப்படியே இன்றளவும் சமூகத்தில் நிலவும் உண்மைகளை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன என்பதை இப்பாடலின் உணர்ந்து கொள்ள முடிகிறது. சமகாலத்தில் ஒரே ஒரு வித்தியாசம் தான் கருப்பொருள் மட்டும் மாறி விடுகிறது,  உரிப்பொருள் அப்படியே தான் இருக்கிறது.

சங்க காலத்தில் வரும் தலைவன், தலைவிக்கு  இந்த நாட்களைப் போலில்லாது விடலைப் பருவம் முடிந்த சில காலங்களுக்குள்ளாகவே திருமணம் நடந்து விடுகிறது. அதனால் இன்றைய காலத்தோடு ஒப்பிட்டால் சங்க இலக்கியங்களில் தலைவன் வினைப் பயணால் தலைவியைப் பிரிந்து சென்று பொருள் தேடி திரும்பும் காலத்தில் தான் இன்று திருமணமே நடைபெறுகிறது, ஆனால் நம் எல்லோருக்கும் இருக்கும் விடலைப் பருவத்து முதல் காதலை தான் சங்க இலக்கியங்களில் காண்பதாக உணர முடிகிறது.

நமது முதல் காதலில் தான் குருட்டு தைரியம், பைத்தியக் காரத்தனம், நிதானமற்ற நிலை என மனதின் வசம் இருக்கும் காதலாக தெரிகிறது. அது  மட்டுமே அகம்பாவம் இல்லாத காதல். ஆனால், படித்து முடித்து வேலை தேடும் பருவத்திலெல்லாம் நமக்கு ஒரு நிதானம் வந்து விடுகிறது, அறிவின் கட்டுப்பாட்டிற்கு மாறி விடுகிறது. சங்க இலக்கியப் பாடல்களில் வரும் காதலுக்கும், நமது காலத்தில் திருமணமாகும் போது வரும் 25வயதுக்குப் பிறகான காதலும் வேறு வேறு. அதனால் நமது டீன் ஏஜ் காதல் நினைவுகளுடன் கலித்தொகைப் பாடலில் வலம் வருவோம்.

தோழியிடம் தலைவி தலைவனைப் பற்றிக் கூறுவதாய் அமைகின்றது: 
“தோழி!! நாம் தெருவினில் மணல் வீடு(சிற்றில் வீடு) கட்டி விளையாடும் போது அதை மிதித்துக் கலைத்து விட்டவன்; நமது மாலைகளை அறுத்து மகிழ்ந்தவன்; விளையாடிக் கொண்டிருந்த வரிபந்தினை பிடுங்கிச் சென்றவன்; பின்னர் ஒரு நாள் நானும் என் அன்னையும் மட்டும் வீட்டில் இருந்த பொழுதில், எங்கள் வீட்டிற்கு வந்து தாகமாக இருப்பதாகச் சொன்னான், என் அன்னை அவனுக்கு நீர் கொடுக்கச் சொல்லி என்னைப் பணித்தாள். அவனோ தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் போது என் முன்கையினையும் பற்றி முறுவலித்தான். அங்கணம் நான் அலறிய சத்தம் கேட்டு ஓடி வந்த அன்னையிடம் ‘விக்கினான்’ என்று பொய்யுரைத்தான்; அதைக் கேட்ட அவள் தாய் அவன் முதுகை நீவி ஆற்றிட முனைந்தாள்; அந்நேரத்திலும் தன் கடைக்கண்ணால் எனைப் பார்த்து நகைத்தானே என் கள்வன் மகன்”

*****
இப்படி ஒரு காட்சியை ஒரு 15-20 வருடங்களுக்கு முன்னர் நானும் உணார்ந்திருக்கலாம்:

 “அவன் நான் தினமும் வாசலில் வந்து கோலம் போடும் போதே என்னிடம் சைக்கிளில் பெல்லடித்தவாறே அங்குமிங்கும் சென்று என் கோலத்தை அழித்து விடுவான்; நான் படிக்கும் நேரங்களிலெல்லாம் உரக்க கத்தி விளையாடியும் என் புனைப் பெயர் சொல்லியும் என்னை அழவைப்பான்; பள்ளி விட்டு வீடு திரும்பும் வேளைகளிலெல்லாம் தன் நண்பர்களுடனே வந்து கேலி பேசுவான்; ஒரு நாள் பூக்கூடையுடன் என் வீட்டிற்கு வந்த அவன், பூ விப்பதாகச் சொல்லி வீட்டிற்கு வந்த அவன், என் அன்னையிடம் கேட்கும் விலைக்கு பூ தருவதாகச் சொல்ல, பூ வாங்கிட காசெடுக்க அடுக்களைக்குள்  அவள் தாய் நுழைந்து நேரத்தில், ஒரு ரோஜாவை எடுத்து என் கையில் வைத்து அழுத்தி விட்டு ஓடி விட்டான் அந்த திருட்டுப் பயல். என் அம்மா ‘அந்த பூக்காரப் பயல் எங்கே, இந்த ரோஜா எப்படி வந்தது?’ என்று கேட்கிறாள்”


-
ஜீவ.கரிகாலன்





சனி, 8 பிப்ரவரி, 2014

தனியறைக் கொலைக் களம்

புதிதாய் வாங்கிய மின்விசிறியின்
டெசிபல்கள் செவிடாக்கிய பின்னும்
மிச்சமிருக்கிறது அவள்
சொல்லாத வார்த்தையின் ஒலி
தற்கொலைக் கருவிகளான
எழுதுபொருட்களைக் கொண்டு
கொண்டை ஊசிப் பயணம்
ஆறுதல் கிடைக்காத வெறுமையில்
சுயவதை மட்டுமே தீர்வாக இருக்கிறது.
கவிதைகளின் வழியெ இறந்து பார்த்தபின்
பிழைகள் வழியே ஜனனம் நேரிடுகிறது.
நீண்டு தனித்த மலைப்பாதையில்
என்னைத் தொலைக்க நினைக்கும் நேரம்
கைகளுக்கு வலிப்பு..

நிர ந்தரமா கட்டும்

-ஜீவ.கரிகாலன்

பஜ்ஜி-சொஜ்ஜி-62 என்ன பெயர் வைக்கலாம் என் ப்ளாகிற்கு


மொக்கையாக ப்ளாக் எழுத ஆரம்பித்த காலத்தில்(இப்ப மட்டும் என்னவாம்!!), அலுவலகத்தில் கிடைத்த சொற்ப LEISURESம், வாசிப்பதற்கு கிடைத்த எனது நண்பர்களும்(கல்லூரி நண்பர்கள் ரூமில் உடனிருப்போர்கள்) தான் மூலதனம். இதை வைத்துக் கொண்டு மனதில் எழுத்தாளர் ஆகி காரில் கை காட்டிய படியே வண்டி ஓட்டுவோம் நண்பர்கள் போஸ்டர்கள் ஒட்டுவார்கள் என்றெல்லாம் கனவு காணவில்லை. ஹாபி என்று பொழுதுபோக்கிட வேறு எந்த வழியும் இல்லாத போது, ‘நாம் தான் ஊரெல்லாம் அரட்டை அடிக்கிறதுலையும், கதை சொல்லுறதுலயும் பெரிய ஆளாச்சே’ என்று மனதுக்குள் ஒரு சுயபிம்பம்.

2005லயே ஒரு வலைப்பூவை ஆரம்பித்து தங்க்லீஸுலையே பதிவுகளிட ஆரம்பித்தேன், நம்ம காதல் வாழ்க்கையெல்லாம் அதில் டைரி குறிப்பு போல எழுதினேன். அப்புறம் 2008 பொருளாதாரச் சிக்கலில், நான் மட்டும் விதிவிலக்கா என்ன சுமார் ஏழு கம்பெனிகள் ஒரே வருடத்தில் மாறிவிட்டு, வாழ்க்கையை மறுபடியும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கிட்டதட்ட 5 : 2 என்ற அளவில் எனது சம்பாத்திய விகிதத்தை விட்டுக் கொடுத்து நிம்மதியான வேலையொன்றை வாழும் ஊரை விட்டு மாநகரத்தில் தஞ்சம் புகுந்தேன். எழுதுவது மூலமாக எனக்கு ஆறுதல் கிடைத்தது. எனக்கான எழுத்தாக என் சுபாவத்தை மகிழ்வுடன் வைத்துக் கொள்ள என்று ஆரம்பித்தேன். வலைப்பூவிற்கான எந்த அணியிலும் சேர்ந்து இயங்க விருப்பமில்லை, வார வாரம் 2-3 சினிமாக்கள் சென்றாலும் எல்லாவற்றிற்கும் விமர்சனம் எழுதும் ஆசையும் வரவில்லை. ஆனாலும் வாரத்துக்கு 02-03 பேர் பார்த்து வந்தார்கள். 

2012 மார்ச் மாதம் ஒரு நண்பர் என்னுடைய ப்ளாகில் இருந்த பதிவை திருத்தி, இதை நான் எடுத்துக் கொள்கிறேன் என்றார், அடுத்த மாதமே அதை அச்சில் பார்த்தேன். ப்ளாகில் எழுதுவதற்காக வாசிக்கக் கிடைக்கும் புத்தகங்கள், இணையத் தரவுகள் என்று தேடியதில் தான், புது நண்பர்கள்; யாவரும்.காம், ஓவியக் கலை வரலாறு என்று என்னை தக்க வைத்துக் கொண்டேன் ஒரு 30 கட்டுரைகளாவது பிரசுரமாகியிருக்கும், தினமும் 50பேர்களாவது வலைப்பூவை வாசிக்கிறார்கள். நிற்க. இந்த சுயபிரதாபங்கள் எல்லாம் எதுக்கு??

ஆரம்பத்தில் வலைப்பூவிற்கு ஒரு நல்ல பெயர் கூட வைக்கத் தெரியாது என் பெயரையே வைத்துவிட்டேன் கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டும் 20000 பேர்களாவது வாசித்திருப்பார்கள் இப்போதாவது ஒரு நல்ல பெயர் சூட்டலாமே என்று தோன்றுகிறது.

பேசாமல் பஜ்ஜி-சொஜ்ஜி என்று வைத்து விடட்டுமா??

அல்லது கரிகாலன் என்று வைக்கட்டுமா??, நல்ல தமிழில் இருக்கவேண்டும் என்று தீர்மானித்ததால். “காலன்” என்பது வடமொழி என்று ஒரு நண்பர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது, இப்படியெல்லாம் மொழி மீது வடிகட்டிக் கொண்டிருந்தால் நாம் நமது வழக்கு மொழியையே இழந்து விடும் அபாயம் இருக்கிறது. என்னைப் போல ஏழு ஊர்களில் நாடோடி போல வாழ்ந்தவனுக்கு தாய்மொழி உண்டென்றாலும் தாய்மொழி வழக்கு சரியாக இராது, கரூரிலேயே வாழ்வின் பெரும்பகுதி இருந்ததால் எனக்கு கொங்கு வட்டார வழக்கின் சாயலே இருக்கும், அதிலும் கொஞ்சம் மதுரைக் கலப்பு கலந்திருக்கும். தனித்தமிழ் முயற்சி என்று நண்பர்கள் பேசும் தெளிவான உரைநடைத் தமிழால் மற்ற மொழியின் ஆதிக்கத்தை விரட்டும் போது உடன்சேர்ந்து நம் வட்டார வழக்குமல்லவா ஓடிவிடுகிறது. வட்டார வழக்குகளில் நம்மையே அறியாமல் நம் முன்னோர்களிடமிருந்து காலங்காலமாக கடத்தி வந்த சில் சொற்றொடர்களின் பின்னேயிருக்கும் செய்திகள், இது போன்ற நல்ல தமிழுக்கு மாறும் பொழுது அறுபட்டுப் போய்விடுமே என்கிற அச்சம் இருக்கின்றதென்றாலும். இந்த விவாதம் இந்த பதிவுக்கானது அல்ல. கரிகாலன் என்ற பெயரை தேர்ந்தெடுக்காததால் இதையும் நிறுத்தி விடுகிறேன்.

சரி கரிகாலன் வேண்டாம் என்றாலும் ஏதாவது குறியீட்டுத் தன்மையுள்ள பெயரை பட்டினப்பாலையிலிருந்து தேர்ந்தெடுக்கலாமா என்றும் யோசித்தேன். 

ஏதாவது மதுவின் பெயர் இலக்கியங்களில் இருக்கிறதா என்றால்:தென்னங்கள், பனைக்கள், அரிசிக்கள், தோப்பி, தேக்கள்,பிழி ,மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல்,நறவு என பலவகைகள் உண்டு. நெல்லால் சமைத்த கள் நறவு எனவும்,  தேனால் சமைத்த கள் தேறல் எனவும்,  பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள்தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர். கள் தயாரிக்கும் முறைகூட சில பாடல்களில் விளக்கப்படுகின்றன. (நன்றி ஆதித்த இளம்பிறையன்.
இத்தனை குழப்பமாகி விடுகிறது. 

சரி இன்றிரவுக்குள் பெயர் மாற்ற வேண்டும், இதை வாசிக்கும் நண்பர்கள் யாராவது பரிந்துரைத்தாலும் சரி.

-ஜீவ.கரிகாலன்





வியாழன், 6 பிப்ரவரி, 2014

பஜ்ஜி - சொஜ்ஜி - 61 ; அசுரன் ஆளும் உலகு

        


ஆதார் தேவையில்லை
முந்தைய பதிவுகளுக்கான சுட்டி இங்கே

ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்தினால், யாருக்கும் அரசின் சலுகைகளை மறுக்கக் கூடாது. சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்க்கு ஆதார் அட்டை வழங்கப்படக் கூடாதுஎன ஆதாருக்கு எதிரான வழக்கில் செப்.23 அன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.  ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு என்று அத்தியாவசியமான அடையாள அட்டையாக இருக்க வேண்டிய ஆதார் கார்டு நாட்டின் ரகசியங்களை உலகிற்கு விற்கப் பயன்படும் கருவியாகவும், மக்களைச் சுரண்டுவதற்குத் தேவைப்படும் கருவியாகவும் மட்டுமே செயல்படும் என்பது மட்டும் உண்மை.

ஆதார் அட்டையை எதிர்ப்பது நாட்டின் பாதுகாப்பை எதிர்ப்பது என்று ஒருபோது ஆகிவிடாது, மாறாக உலகின் வளரும் நாடுகளின் மக்களை, மக்களின் சேமிப்புகளை, அந்நாட்டின் ரகசியங்களை எல்லாம் உலக வங்கியின் நிர்பந்தம் என்ற பெயரில் நேட்டோ நாடுகள் போன்ற ஒரு சில நாடுகள் மற்றும் அந்நாட்டின் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதில் இருந்து மீட்டெடுத்து நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகும்.

சமீபத்தில் உலக வங்கி நடத்திய கருத்தரங்கில் பேசிய நந்தன் நிலேகனி, 19-ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்க கண்டத்திற்கு பிழைக்க வந்த ஐரோப்பியர்களை, கனடாவின் எல்லிஸ் தீவைச் சேர்ந்த குடியேற்றத் துறை அதிகாரிகள் அங்கு குடிவந்த வெவ்வேறு நாட்டினரின் பெயர்களையெல்லாம் ஆவனங்களில் இருந்து நீக்கி விட்டு, ஒவ்வொருவருக்கும்  அந்த அதிகாரிகளே ஒரு பெயரை சூட்டி, இனி இந்த நாட்டில் இதுதான் உன் பெயர் என்று அறிவித்தார்கள். ”ஆதார் என்பது உலகின் பிரம்மாண்டமான பெயர் சூட்டும் விழாஇது 21-ஆம் நூற்றாண்டின் எல்லிஸ் தீவுஎன்றார் நிலேகனி
வெவ்வேறு மொழி பேசும், இனம், மதம், கலாச்சாரம் கொண்ட மக்களை பார் கோடு ஆக்கும் முறை தான் ஆதார் கார்டு என்று விளங்குகிறது.

சென்ற மாதம் கூட மதுரை ஹைகோர்ட்டு, ஒரு குடும்பத்திற்கு சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்று தீர்ப்பளித்தது. உண்மையில் ஆதார் அட்டையின் தொழில்நுட்பம் அத்தனை பாதுகாப்பானதா?? ஒரு நிபுணரிடம் விசாரித்தேன்.

நுகர்வோர் நல ஆர்வலரான திரு.விசுவநாதன் பகிர்ந்து கொண்ட தகவலின் படி
ஆதார் கார்டு நாட்டின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்ற போதிலும், அந்தப் பாதுகாப்பு அம்சத்தை ஒப்படைத்திர்க்கும் கைகள் தான் பிரச்சினைக்குரியதாகத் தெரிகிறது. WWW போர்டலில் இருக்கும் நமது அரசாங்க இனையங்களின் பாதுகாப்பிற்கே உத்தரவாதம் இல்லாத நிலைமையில் இது போன்ற பாதுகாப்பு அம்சங்களில் எந்த உத்திரவாதமும் இல்லை.
·         அடிப்படையில் ஆதார் கார்டு மூன்று அம்சங்களைத் தகவலாகத் திரட்டுகிறது:1. பயோ மெட்ரிக் எனப்படும் கண்கள் மற்றும் விரல்களின் ரேகைகள் ஆகியவற்றின் தகவல்கள், நிழற்படம் மற்றும் குடிமகனின் இதர் ஆவனங்களின் தகவல்கள். இதில் ஒரு குடிமகனின் கைரேகைகள் எந்த ஒரு குற்றமும் இன்றி பதியப் படுவது ,ஒரு தனி மனிதனுக்கான அடிப்படை உரிமை மீதான அத்துமீறல் என்று அரசியல் சாசனமே கூறுகிறது. ஒவ்வொரு குடிமகனின் பயோ மெட்ரிக் தகவல்களையும் சேமித்து வைத்திருப்பதற்கு முன்பு நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற்றிட வேண்டும், ஆனால் இதற்கான சட்ட திருத்தம் இன்னும் செய்யப் படவில்லை.
·         உண்மையில் தொழில்நுட்பத்தில் இருக்கும் பிரச்சினையாக இதில் வரும் உறுதியளிப்பு எவ்வளவு தூரம் நடை முறையில் இருக்கிறது என்றால் அதற்கு பதிலில்லை தான். இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னால் அளிக்கப்பட்ட தகவல்களை உறுதிப் படுத்த அவருக்கு 4 நாட்கள் வரை அவகாசம் கொடுக்கப் பட்டிருக்கிறது, ஆனால் இதைத் திருத்துவதெற்கென்ற சிறப்புக் கவுண்டர்களோ, இந்த தகவல்களை (முக்கியமாக பயோ மெட்ரிக்) உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எந்த ஒரு குடிமகனுக்கும் வாய்ப்பு வழங்கப் படுவதில்லை. இதனால் வரும் ஆபத்து தான் DATA MIS-MATCH, ஒரு குடிமகன் சங்கேத எண்ணாகப் பதியப் பட்ட பின் அவனாக நினைத்தாலும் தவறான தகவல்களை மாற்றிவிட முடியாது.
·         ஒருவர் தன் தகவல்களை ஆதார் மூலம் பதிவு செய்தால், இணையத்தில் சென்று அதை சரிபார்த்துக் கொள்ள இடமிருந்தும், வழங்கப்பட்ட பல அட்டைகளுக்கு இன்னமும் இணையத்தில் தகவல்கள் சேமிக்கப்படவில்லை.
·         பல ஊர்களின் ஏற்கனவே வழங்கப்பட்ட ஆதார் கார்டு, திரும்பப் பெறப்பட்டு, புதிய அட்டையாக வழங்கப்பட்ட விதம் தான் இது குறித்த சந்தேகத்தை எழுப்பியது. அதாவது இந்த அட்டை 2010ல் வழங்கப் பட்ட போது வெறும் அடையாள அட்டையாகவும், இப்போது SMART CARD ஆகவும் மாறிவிட்டது என்று சொல்கிறார்கள்.
·         50% சதவீத மக்களின் அடையாளங்கள் இந்த திட்டத்திற்காக சேமிக்கப்பட்டாலும், பொதுவாக குடும்பத் தலைவருக்கு மட்டும் இந்த அட்டை வழங்கப்படுவதற்கு தாமதம் ஆவதாகத் தெரிகிறது, இதற்காக நடைபெற்ற ஒரு சிறிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த தாமதம் குடிமைப்பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு போன்றவை குடும்பத் தலைவரின் பெயரிலேயே வழங்கப் படுவதால், இதில் சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் அரசு தரும் மானியங்கள் -குடிமகனைச் சேர்வதற்கு வழியில்லாமல் போய் விடும்
·         எல்லாவற்றிற்கும் மேலாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிற்கும் குடிமக்களுக்கு மட்டுமின்றி அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்குமே இதில் பிரச்சினைகள், உறுதியளிக்க இருக்கும் அவகாசம், அட்டை வழங்கப்படும் முன் இணையத்தில் ஏற்றப் பட வேண்டிய தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது தான் கவலைக்குரிய விசயம். இதனால் பாதிப்படையப் போவது நடுத்தர மற்றும் ஏழை ஜனங்களே.

  எல்லா வகையிலும் ஆதார் அட்டைக்கான எதிர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

நன்றி

-ஜீவ.கரிகாலன்