செவ்வாய், 19 நவம்பர், 2013

பாரத ரத்னா சச்சின் - பஜ்ஜி - ஜொஜ்ஜி 48


வழக்கம் போல மக்கள் கவனம் இருக்கும் இடத்தில் எல்லாம் அரசியல் செய்து லாபம் பார்க்கும் மீடியாக்களும், அரசியல் கட்சிகளும் சேர்ந்து சமீபத்தில் கொள்ளையடித்த இடம் கிரிக்கெட் மைதானம்.

கடந்த உலகக்கோப்பையுடனோ அல்லது இன்னமும் விளையாடும் ஆசையுடனோ இருக்கும் சச்சினை 200 என்கிற Benchmarkஐ வைத்து கேட்கப்பட்ட கேள்விகள், அவரை ஓய்வு குறித்த ஒரு முடிவை எடுக்க வைத்தது. சுமார் 2 மாதங்களுக்கு முன்னராகவே அவர் சொன்ன ஓய்வுத் தேதியை மட்டும் வைத்து எத்தனையோ கோடிகள் அள்ளப் பட்டிருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே, அவர் ஓய்வு பற்றிய தகவல் சொன்ன அன்றே ஓய்வு எடுக்க ஆரம்பித்தது போல் எத்தனை விஷேசக் கட்டுரைகள், செய்திகள் , விவாதங்கள்.

இது ஒரு குறிப்பிட்ட ஒரு விளையாட்டின் மீது மட்டும் அக்கறை கொண்டுள்ள ஒரு நாட்டின் அவல நிலையினைக் காட்டுகிறது. உண்மையில் இது பணத்தைக் கொட்டிக் குவிக்கும் விளையாட்டாக இருந்த கிரிக்கெட், ஐ.பி.எல்-ற்குப் பின் சூதாட்டங்களை சட்டப்பூர்வமாக்கும் கோரிக்கைகளின் சப்தமும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடந்த சி.பி.ஐ அமைப்பின் கருத்தரங்கில் அதன் இயக்குநர் ரஞ்சித் சிங் பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்கினால் கருப்புப் பணப் புழக்கத்தைக் குறைக்கலாம் என்று கருத்து சொன்னது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பேச்சு.

நாட்டு மக்களின் ஒட்டு மொத்த கவனமும், ஆர்வமும் ஒரே விளையாட்டின் மீது படிந்திருப்பது வளர்ச்சி ஆகாது அது ஒரு வீக்கம் மட்டுமே. கடந்த ஆண்டு மகளிருக்கான கபடிப் போட்டியில் தங்கம் வென்று வந்த மகளிரைக் கண்டு கொள்வாரில்லை. சிறப்பு ஒலிம்பிக்குல் 2 பதக்கங்கள் வென்ற சீதாசாஹூ இன்னமும் சாலையோரம் பாணி பூரி விற்கும் தொழிலையே செய்து வருகிறார்.

செஸ் நமது நாட்டின் தொன்மையான விளையாட்டு என்பதைக் கூட நாம் மறந்து விட்டிருக்கிறோம், கபடியை சீண்டுவாரில்லை, தேசிய விளையாட்டான ஹாக்கியைப் பற்றிப் பேசுவாரில்லை, உலகத்திலேயே தலை சிறந்த விளையாட்டாகக் கருதப்படும் கால்பந்து விளையாட்டின் நிலைமை நம் நாட்டில் பரிதாபம். பாய்சங் பூட்டியா இந்திய கால்பந்திற்குக் கிடைத்த கடவுளின் குழந்தை என்று பாராட்டப் பெற்றவர். இந்த சிக்கிம் மனிதரைப் பற்றிய கேள்விகள் கூட நமது பள்ளிக்கூட விநாடி வினாக்களில் கேட்கப் படுவது இல்லை. அரசு நினைத்திருந்தால் உலக அரங்கில் ஒரு நல்ல கால்பந்து அணியை உருவாக்கியிருக்க முடியும், சரவதேச தரத்துடன் விளையாடி வந்த இவர் வேறு நாட்டில் பிறந்திருந்தால் இந்நேரம் மிகப்பெரிய புகழும் பணமும் ஈட்டியிருப்பார் என்பது மட்டும் உறுதி.

அது போல சர்வதேச ஹாக்கிப் போட்டிகளில் மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்த தியான் சந்த் நம் நினைவுகளில் இருந்து காணாமல் போய்விட்டார். இவர் பிறந்த ஆக்ஸ்டு 09 தான் இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. விஸ்வநாதன் ஆனந்தின், லியண்டர் பயஸ் போன்ற அத்தனை பேரும் அவரவர் துறைகளில் சாதித்தவர்களே, இதில் கிரிக்கெட்டிற்கு மட்டும் இத்தகைய கௌரவம் கொடுப்பது அரசின் பொருப்பற்ற தன்மையினையே காட்டுகிறது.

நமது மற்ற அமைச்சகங்களைப் போன்றே நாட்டின் விளையாட்டு அமைச்சகமும் ஊழல் மிக்கதாகவே காணப்படுகிறது, கிரிக்கெட் மட்டுமே விளம்பரங்களாலும், கார்ப்பரேட் நிறுவனங்களில் ஈடுபாட்டிலும், இப்போது ஆட்டம், பாட்டம் கவர்ச்சி என்று மாறி விட்ட 20-20 போட்டிகளாலும் மற்ற விளையாட்டுகளை இன்னமும் சீரியதாக அகற்றிக் கொண்டிருக்கிறது. இதில் சச்சினுக்குக் கொடுக்கும் பாரத ரத்னா மற்ற துறையை, சமூகத் தொண்டு புரிந்து வருபவர்களை அவமதிப்பதைக் காட்டிலும், கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டைப் பற்றிய கனவையும் நம் இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்காது என்பது மட்டும் உறுதி.

- ஜீவ கரிகாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக