திங்கள், 14 மார்ச், 2016

அது - 05

08/03/2016.     12:56 pm..    செவ்வாய்க் கிழமை:

இந்த வெயிலில்… உன்னோடு பேசிக் கொண்டிருக்கும்போது… யாரோ பேஸ் கிட்டார் கொண்டு வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்… அதன் நோட்ஸ்களைப் பற்றி வேறெதுவும் எனக்குச் சொல்லத் தெரியாது.
சூழ்ந்துள்ள சப்தங்களை விழுங்கிவிட்டு மற்றவற்றை எழுதிப்பார்க்கும் துர்பாக்கியம் தான் என் முயற்சி என்றாலும்… நான் அதிர்ஷடசாலியும் தான். ஏனென்றால் அதில் நீயும் இருக்கிறாய் அல்லவா?
ஆமாம் நீ என்ன அமானுஷ்யமா?  பூக்கள் பற்றி எழுதினாலும், புயல் பற்றி எழுதினாலும் வந்துவிடுகிறாயே நீ.
நல்லவேளை இங்க் கேட்ரிட்ஜ்களைக் கொண்ட பேனாக்களை நான் உபயோகிப்பதில்லை, எழுதும் முன் தெளித்துப் பார்த்தாலும், அதில் நீ வந்துவிடுவாய் என்று அஞ்சியதால் சொல்கிறேன்.
அவலங்களுக்கு மத்தியில் வாழும் வாழ்க்கை பற்றிய சிந்தனைகள், உன்னோடு பேசிக்கொண்டிருக்கும்போதும் வருவது துரதிர்ஷடத்தின் நிழல் தான். ஆனால் அந்த அவலங்களும் என்னைப் போலவே இளைப்பாறத் துடிக்கின்றன. உன்னிடத்தில்.
After all, என்னைச் சுற்றியிருக்கும் அவலங்கள் என்னை விட பருமனானது தெரியுமா? இதுவும் எனக்கு ஓர் ஆறுதல் தான்.
நீ கேட்கிறாய்.. நான் தேடியது அந்த மூன்று வார்த்தைகளையா என்று?? இல்லை நான் தேடுவது நான்கு வார்த்தைகளை.
மூன்று, காலத்தால் சமைக்கப்பட்டு நான்காகிவிட்டது.. வேடிக்கையாய் இருக்கிறது அல்லவா?
“………………….”
இங்கே என்ன அபத்தமாய் இருக்கிறது என்கிறாயா?
காதலைச் சொல்வது கூட ஒரு காலத்தில் அபத்தமாய் இருந்திருக்கவேண்டும் என்று என் நண்பர் சொல்லியிருக்கிறார்.
ஆம். அது காதல் .. அது அரூபம்.. அது காற்று.. அது… அது தான்
அது இப்போது நான்கு வார்த்தைகளாக..
நான்கு வார்த்தைகளாக மாறும்பொழுது, காதல் தன்னை பரிணமித்திருக்கிறது.. அது தன்னைத் தானே ஜீவிக்கத் தெரிந்திருக்கிறது.
பிரிவுகளுக்கு அங்கீகாரமும், முன்னுரிமையும், வாழ்த்தும் கொடுக்கும் அதிகாரப் பீடங்களாக ஜனநாயகம் என்ற பெயரில்…. மாசாகும் சூழலைக் கண்டு மூக்கைப் பொத்திக்கொள்ள மட்டுமே சட்டம் பிறப்பிக்கின்றது.
காதல் எனும் உணர்வை, உணர்த்த இயலாமல், மொழியின் உதவியை நாடுவதே முதலில் காதலுக்கு காலம் கொடுத்த இறங்குமுகம் தான்.
சொல்லித்தான் புரிய வேண்டும்..
புரியும்படி சொல்ல வேண்டும்
சொல்லத் தெரிய வேண்டும்
புரியும்படி சொல்ல வேண்டும்
சொல்ல வேண்டும்
புரிய வேண்டும்
ஏனென்றால் வேண்டும். அது வேண்டும்.
அதற்கும் அது வேண்டும்
இப்போது அது
ஐந்து வார்த்தைகளாகவும் ஆகிறது
”AM IN LOVE WITH YOU” … It’s purely unconditional state.

நீ மறுத்தாலும், பிரிந்தாலும்… “AM IN LOVE” ஆக இருக்கும். மொழி தோற்கும் இடங்கள் உனக்குத் தெரியுமா?
·         பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்குவது
·         கடவுளைப் பற்றி புரிய வைப்பது
·         உணர்கின்ற காதலை மொழியாக சொல்லிப் பார்ப்பது
என்ன செய்ய முடியும் இந்த அற்ப உயிரியால்.. அவனுக்கு மொழி மட்டுமே ஏதோ கொஞ்சம் கிடைத்திருக்கிறது.
பால்யத்தில் நம்மோடு நெருங்கி இருந்தவர்களோடு மொழியாலா வாழ்ந்தோம்?
மொழியாலா ஸ்நேகித்தோம்?
விளையாடினோம்?
சண்டையிட்டோம்?
முத்தங்கள் கொடுத்தோம்?
திரும்பப் பெற்றோம்?
ஆனால், அவையெல்லாமே காதல் தான்.. மொழி பிறந்ததும்.. எல்லாவாற்றுக்கும் அந்தந்தப் பெயர் வைக்கத் தெரிந்ததும் விலக ஆரம்பிக்கிறோம். மனிதர்களாகிய நாம் பிரிந்துக் கிடக்கிறோம். சேர்ந்திருக்க வேண்டிய நாம், இத்தனை ஆண்டுகளாய் பார்த்திருக்கவில்லை என்பதே உலகம் எத்தனை மாசுபட்டிருக்கிறது என்பதற்கு உதாரணம்.
உலகம் மாசுபட்டிருக்கிறது.. மனிதம் மாசுபட்டிருக்கிறது.
அமானுஷ்யமே மீட்க இயன்ற ஒரே சக்தி.
காதலே அமானுஷ்யம்
நீயே என் அமானுஷ்யம்
அதுவும் அமானுஷ்யம்….
உன் பாதங்களை எனக்குக் காட்டாதே. இரண்டு பிரச்சனைகள் வரக்கூடும்..
கவிதை எழுதுவேனா என்று கேட்கிறது வேறு பிரச்சனை…. அது சுவாரஸ்யமற்ற இரக்கமற்ற இலக்கிய உலகத்திற்காக வெட்டப்படப்போகும் காகிதக்கூழ் சூல்கொண்ட மரத்தின் வேதனை.
உன் பாதங்களை எனக்குக் காட்டினால், இருவருக்குப் பிரச்சினை. எனக்கும் ”அது’-க்கும்
நான் பாதங்களை நைஸாக ஸ்பரிஸித்து விடுவேன்
’அது’ உன் இருப்பைக் கண்டுவிடும்… துரத்த ஆரம்பிக்கும்..
ஆகவே நீ அமானுஷ்யமாக இரு..
நான் அமானுஷ்யமாக மாறி உன்னைக் கெஞ்சும் வரை, நீ திமிர்ப் பிடித்தவளாகவாவது நடி!!
ஏனென்றால், நாம் இக்காலத்தின் விதைகள். உன் உணர்வுகளை என்னால் புரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு இறுக்கமானவளாய் இருக்க வேண்டும்.
*
டெடி பியர், ஆட்டுக்குட்டியாக மாறியதன் பெயர் ரசவாதமா.

“………………….”

!! அது தான் காதலா.. மீண்டும் சொல்கிறேன் கேள்!
*

டெடிபியர் ஆட்டுக்குட்டியாக மாறியது.
இந்தப் பிரபஞ்சத்தில் புதிய நடுகற்களை நட்டு வைத்திருக்கிறாள் நிமினி..
இப்போது பேஸ் கிட்டாரோடு சேர்ந்து, லீட் கிட்டார், ட்ரம்ஸ், சிந்தஸைசர் எல்லாம் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.. எல்.ஈ.டி விளக்குகள், பல வண்ணங்களில் ஒளிரும் ஃபவுண்டெயின் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கின்றது.
போதை வஸ்து நிரம்பியிருக்கும் பாட்டிலை வேண்டாமென, ஒரு கிட்டாரிஸ்ட் சுவற்றில் வீசி எறிகிறான். பட்டுத் தெறிக்கிறது அது.. பாட்டும் தெறிக்கின்றது..
He is weird.. just like me..
அந்தக் கலைஞனும் காதலிக்கிறான்… மொழி தேவையில்லை.


*

சனி, 5 மார்ச், 2016

ஆம் இந்த முறை சீமானுக்கு தான்



இந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்..

சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும்.
ஆம் ஆதரிக்கின்றேன் என்று சொல்கிறேன். பிடிக்காதவர்கள் இங்கிருந்து கழண்டு கொள்ளலாம்.

ஏனென்றால் நாம் ஓட்டுப் போடும் கட்சி இந்த தேர்தலில் இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்கிற எளிய கணக்கு சலூனிலும், டீக்கடையிலும் அரசியல் பேசும் மக்களின் எளிய நம்பிக்கை.. ஐம்பது ஆண்டுகளில் இரண்டு கட்சிகளைத் தாண்டி வேறு எதுவும் பொது மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக இருந்தது இல்லை. கொள்கை அளவில் பார்த்தால், 1960களுக்குப் பிறகு, இந்தி எதிர்ப்பு - ஆரிய எதிர்ப்பு தவிற வேறேதும் பெரிதாக மக்களை பாதிக்கவில்லை. ஈழமும் தான், ஈழம் பயன்படுத்தப்பட்டிருக்கிறதை விட, ஏற்படுத்திய பாதிப்புகளை விட, அவ்வுணர்வு முடக்கப்பட்டிருக்கது. நிறைய சந்தர்ப்பங்களில், அதுவும் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு நம் காதுகளையும், கவனத்தையும் ஊடகங்கள் திசை திருப்பின.

ஊடகங்கள் என்றால் எல்லா ஊடகங்களும் தான். புன்னகை மன்னன் திரைப்படத்திலிருந்து, அண்மையில் வெளிவந்த பாக்ஸ் நாவல் வரை OVER RATED ஆக ஈழம் குறித்த பார்வைகள் மற்றும் போதனைகள். இவ்வுணர்வை தேர்தலின்போது வாக்களிக்கும் காரணியாக மாற்றவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நுண்ணரசியலில் தான் தமிழ் தேசிய உணர்வின் அடிப்படையிலிருந்தே நசுக்க ஒரு பெரும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் தேசிய உணர்வு என்பது, அடிப்படையில் ஈராயிரமாண்டுகட்கும் முன்பான நம் வரலாற்றிலிருந்து நீள்கின்ற ஒரு தொடர் சிந்தனை… அசோகனை, மௌரிய அரசினை தடுத்து நிறுத்துய “தமிழ் தேசிய சங்காதம்”, மூவேந்தர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் பின்காலனியத்தில் பரிணமித்த திராவிடக் கோட்பாட்டில் அந்த தொடர்ச்சி அறுந்துவிட்டது என்றும் சொல்லமுடியும்.

இனவாதியென்று அருவருப்பாகப் பார்க்கப் பழகிக்கொண்டிருக்கும் கணவான்களே.. நீங்கள் இன்னும் இந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தால், முக்கியமாக ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள். உங்களுக்கு என்று பிரத்யேகமாக இருந்து கொண்டிருக்கும் உங்கள் மதத்தினையோ, தேசியத்தையோ அல்லது சித்தாந்தத்தையோ (வலதோ/இடதோ) முன்வைத்து இந்த மொழியுணர்வை பரிகசித்தால் அது பரிதாபத்திற்குரியது. ஏனென்றால் மொழியுணர்வு மேற்சொன்ன அனைத்தையும் அடக்கியிருப்பது, மொழி ஒரு சமுதாயத்தின், பண்பாட்டின், கலாச்சாரத்தின் ஒட்டுமொத்த அடையாளம்.
தொடர்பறுந்து 50 ஆண்டுகள் வரை ஆகிவிட்ட நிலையில், அதனை வரையறுப்பது அத்தனை எளிதான ஒன்றல்ல.. மொழிக்குள் ஒரு பன்மைத்துவம் இருக்கின்றது, பன்மைத்துவம் இருக்கின்ற சமூகத்தின், கலாச்சாரத்தின் தோல் தான் மொழி. 

மொழியை முன்னெடுத்து ஒரு அரசியலைப் பேசுவது என்பது பன்முக பரிமாணங்களோடு அணுகவேண்டிய செயல்.

சீமான் அப்படியான அணுகுமுறையைக் கையாள்கிறார். அவரைத் தலைவராக நான் ஏற்றுக்கொண்டு எழுதவில்லை, பெரியாரியவாதியாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்த போது, பிராமணர்கள் மீதும் , இந்துத்வர்கள் மீதும் துவேசம் காட்டினார், கம்யுனிஸ்டாக தன்னைக் காட்டிய இடங்களில் எதிர் அரசியல் பேசுவோர்களிடம் துவேசம் காட்டினார், ஈழத்தை முன்வைத்த போது துரோகக் கும்பல்களிடம் எதிர் அரசியலை முன்வைத்தார். அப்போது அவர் சீமானாக மட்டுமே இருந்தார்
நாம் தமிழர் கட்சி அரசியல் கட்சியாகின்றது – கொள்கையாக தமிழ் தேசியம்.
இப்போது நாம் தமிழர் கட்சி – தேர்தலுக்கான அவர்களது உழைப்பு, திட்டங்கள், முன்னெடுப்பு எனப் பார்க்கும் பொழுது. அவர்களது அனுகுமுறையில், அந்தப் போக்கில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இவருக்கு மாற்றாக இருக்கும் கட்சிகளாக இருக்கும் .. அதிமுக, திமுக, ம.ந.கூ, பா.ஜ.க ஆகிய கட்சிகள் எடுத்துள்ள அல்லது முன்வைக்கும் கொள்கைகளைக் காட்டிலும் தமிழ் தேசியம் எனக்கு அர்த்தமுள்ள உணர்வாக எனக்குத் தோன்றுகிறது.

யாரையும் வெளியேற்றுவது நோக்கமாகத் தெரியவில்லை, யார் ஆள்வது, ஆள வேண்டியது என்பதைப் பேசும் அரசியல் தான்.
மொத்தக் கட்டுரையின் சாராம்சமாக கொள்கைகளாகப் பிரித்துப் பார்க்கிறேன்.

தலித் என்றாலோ, சிறுபான்மை என்றாலோ ஒடுக்கப்படும்போது எழும் குரல்களில்… நிலம், தொழில், வாழ்வாதாரம், பண்பாடு, கலாச்சாரம், தனிமனித உரிமைகள் என எல்லாவகையிலும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழன், தமிழ் இன உணர்வு என்றால் மட்டும் உங்களுக்கு கசக்கிறது இல்லையா??

ஆப்பிரிக்க, தென்னமெரிக்க, அரபுப் புரட்சிக் கவிகள் மட்டும் படைப்புகள், தமிழ் தேசியம் பேசினால் அருவருப்பு?

இந்திய அளவில் பேசும் கருத்தியல் புரட்சிவாதிகளைத் தலைவனென்று கொண்டாடலாம், மே17, இளந்தமிழகம், கலகம் அமைப்புகளில் இருந்து ஒலிக்கும் குரல்கள் இனவாதக் குரல்கள்?

விஷயம் இது தான் – எந்த தலைவனோ, கட்சியோ முக்கியம் இல்லை.
தமிழ் தேசியம் ஒரு கருத்தியலாக முன்னெடுத்து வைக்கும் கட்சியை… நான் ஆதரிக்கின்றேன். குறிப்பாக, ஆர்.கே. நகர் தொகுதியின் வேட்பாளருக்காக நான் ஆதரிக்கின்றேன். மற்ற சித்தாந்தங்களை வெறுப்பதற்கான காரணங்கள் தேவையில்லை, தற்பொதைய தேவையை உணர்கிறேன். 

தமிழ் தேசியம் என்பது கனவாகவே இருக்கட்டும்… முதலில் கனவு வரவேண்டும் என்பது தான் என் விருப்பம்….  இந்தக் கனவுக்கான அவசியம் இருக்கிறது.. இப்போதைக்கு நாம் தமிழர் கட்சி அதற்கான மாத்திரைகளைக் கொடுக்கிறது என்று நம்புகிறேன்.
நான் மனிதனாக மட்டுமல்ல, வெறும் உயிரியாக இருக்கவே ஆசைப்படுகின்றேன்.. ஆனால், நான் எந்தப் பெயர் கொண்டு ஒடுக்கப்படுகின்றேனோ, அதைக் கொண்டே தான் எழவேண்டும் என்று நம்புகிறேன்...

ிகாலன்



ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

அது - 04

எழுதப்படுபவைகளும் வாசிக்கப்படுபவைகளும் விதிவசத்தாலே தான் நிகழ்கிறது என்று முன்னாள் காம்ரேட் ஒருவன் சொன்ன நாளொன்றில் தான் இது நிகழ ஆரம்பித்தது.

எது
அது தான்

சொற்களில் இருக்கின்ற அயற்ச்சிக்கு மொழியையும் பயிற்றுனரையும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை, நாற்பது நாட்களுக்கொருமுறையாவது முடிவெட்டுவதற்கு சலூன் செல்பவர்களால் இவற்றைப் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. வெட்டுவது, வளரும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையின் முதலீட்டு அனுமதி தான். அந்த முன்னாள் காம்ரேடின் பயணத்தில் ஒன்றில் சூனியக்காரி ஒருத்தியைக் கண்டதில் அவன் வியந்ததாகச் சொல்லியிருந்தான்.  அன்றிலிருந்து நான் அவனை நம்ப ஆரம்பித்தேன். அதுவரை இல்லாமல் இப்போதுவரை நான் அவனை காம்ரேட் என அழைக்க ஆரம்பித்தேன். இப்போது அவன் சொன்ன வாக்கியம் எனக்கு முக்கியமாகத் தெரிகிறது

இதில் சுவாரஸ்யம் என்ன என்றால், இந்த எழுத்துகளுக்கு ஆதாரமாக அவர் சொன்ன வாக்கியம் அமைவது தான். இன்று தன் ஆதர்ஸங்களின் ஒருவனின் மறைவை அனுஷ்டிப்பதற்காக மதுபுட்டியை எடுத்துக்கொண்டு செல்லும் வழியில் அவன் என்னோடு பேசினார். அப்போது தான் அந்த வாக்கியத்தை உணர்வுவயப்பட்ட நிலையில் பேசினார். உணர்வுவயப்பட்டால் அதில் பொய் கலந்திருக்கமுடியாது அல்லவா? அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்களில் எந்த புத்தகம் வாசிக்கப்படவேண்டும் என்பதை உங்கள் விதி தான் தீர்மானிக்கிறது. என்ன நம்பவில்லை, ஆகச்சிறந்த்தென நீங்கள் நம்பும் ஏதோவொன்றினை விட்டுவிட்டு இப்போது இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களை விதி தானே அனுப்பிவைக்கிறது. துரதிர்ஷடமாக இந்த வரிகளில் என் நண்பர் என்று அவரைக் குறிப்பிட்டதால், இவற்றிட்கு கொஞ்சமும் சம்பந்தமற்ற என்னை இந்தப் பக்கங்களில் நுழைத்து விட்டதற்காக நான் தங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஏனென்றால் நான் மட்டும் இங்கே தனியாக வரவில்லை, அதுவும் உடன்வந்துவிட்டது.

ஆர்கெஸ்ட்ராவில் ஒருங்கிணைப்பாளரின் கைகளைப் பார்த்துக் கொண்டே இசைப்பவனாய் என்னை இங்கே எழுதவைத்துக் கொண்டிருக்கும் ’அது’வே, உம்மை மன்றாடிக் கேட்கிறேன் என்னை இந்த சம்பாஷனைகளில் இருந்து உதிர்த்துவிடு, அப்படிச் செய்தால் இதை வாசிப்பவர்களுக்கு உன்னதமானது என்று நம்பும் ஏதோ ஒன்றினை கட்டமைத்துத் தரயியலும். அது இயல்பாகவே என்னை ஏளனமாகப் பார்க்கும், இப்போது அதனிடம் மன்றாடிக் கேட்கும் நிலையில் நான் இறங்கி வந்ததைப் பார்க்கும் போது அதன் சந்தோஷம் பன்மடங்கு பெருகிவிட்டதை உணர்கிறேன்.

வாசிப்பதன் வழியாக வருத்தப்பட்டு பாரஞ் சுமப்பவர்களே, இறைவன் இருப்பதை நம்புங்கள். விதி இருப்பதை நம்புங்கள்.. நீங்கள் வாசிப்பதை நிறுத்திவிட ஊழி மழை பெய்ய ஆரம்பிக்கலாம், பூமி அதிரலாம், கடல் பொங்கலாம் வேறெதுவும் ஆகலாம்… அப்போது உங்களுக்கும் எழுதுவதற்கு நிறைய கிடைக்கலாம். ஆம்..

இலக்கியத்தில் இருக்கும் PATTERN படி நான் இப்போது ஒரு ஃபிளாஷ் பேக் காட்சியைச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். ஆனால் நான் அந்த பேட்டர்ன்களை நம்பவில்லை, இந்த எழுத்துகள் யாவும் பிழைகள் கூட திருத்தப்படாமல் அப்படியே வரவேண்டும். ப்ரூஃப் ரீடர்கள் இந்த எழுத்துகளை பார்த்தால் விரைப்புவந்த சேவலாய் மாறி இந்த அற்பக் கோழியினை வன்புணர்வு செய்வார்கள். கோழிக்கு முட்டை போடும் ஆசையெல்லாம் வரவில்லை, அது தினமும் ஃபெமினிஸம் பேசும் ஆண்டி ஒருத்தி வீட்டின் கூரைக்கு சென்று வருவதால் அதன் நிலை அப்படி. ப்ரூஃப் ரீடரோ, எடிட்டரோ கைகளால் தொட்டுப்பார்க்காத கன்னியாகத் தான் இவ்வெழுத்துகள் உங்கட்கைகளைத் தேடி வரவேண்டும். ஏனென்றால், என்னால் முடிந்த குறைந்தபட்ச அன்பு அதுமட்டுந்தான். இந்தப் பகுதியை முன்னுரையாக எடுத்துக் கொள்ளுங்கள் இதற்கு முன்னே எழுதியிருக்கும் மூன்று பகுதிகளை ‘அது’ என் மீது செலுத்தி வரும் அதிகாரத்தின் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.


இனி நானும் உங்களுக்கு ஊழிகாலத்தின் கதை ஒன்றினை அறிமுகம் செய்யப்போகிறேன். ஆம் கிட்டதட்ட அதன் விளிம்புக்குள் நின்று கொண்டிருக்கும் நமக்கு அந்த காலத்தை முன் கூட்டியே அனுபவிக்கக் கிடைத்த வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

(முற்றும்)

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

அது - 3

அலுத்துவிட்டது என்று ஃபேஸ்புக்கில் பதியும் போது உண்மையில் அலுத்துதான் போனது…
 
பயணத்தின் போது செலுத்திக் கொண்டிருந்தவண்டியை ஓரங்கட்டிவிட்டு எங்கிருந்து, எங்கே பயணிக்கிறேன், எதற்காக, யாருடன் என்று கேட்கத் தோன்றியது. அத்துடன் எவற்றை சுமந்து செல்கிறேன், எவற்றை மறந்துவிட்டுவிட்டேனோ என்றும் குளம்பிய நிலையில் தான் பயணத்தின் அலுப்பு தெரிகிறது ஒவ்வொன்றின் விடைகளிலும். உச்சிவெயிலில், சூட்டுக்கொப்புளங்களின் சாத்தியத்துடன் கான்க்ரீட் பாலத்தில் அமர்ந்து எழும் போது வெயில் சற்றுத் தணிந்திருந்தது.

பசியில் என்னசெய்வதென்றே தெரியவில்லை, இதற்கு முன்பு வரை பசித்தால் சாப்பிடத்தான் தெரியும். அநேகமாக பசிக்க ஆரம்பிக்கும் கணத்திற்கு முதல் நொடியே சாப்பிட்டு முடித்திருப்பேன், மற்ற நாட்களில் பசித்த நேரத்திலிருந்து ஐந்து நிமிடத் தொலைவில் உணவிருக்கும். இப்போது என் ஞாபகத்தில் பசி மட்டுமே ஆக்கிரமித்து இருக்கிறது, எவ்வளவு நேரமாக என்பதற்கான பதிலுக்கு கூட இடமில்லாமல் பசியாக என்னை விழுங்கிக்கொண்டிருக்கிறேன் நான்.

நீட்டிய கைகளின் முகத்தைப் பார்க்கவில்லை புசிக்கத் தொடங்கினேன். பசி நிரப்பியிருந்த நினைவுகள், உணவு சமன் செய்ய காலியாகிக் கொண்டிருந்தது. அது அங்கே தான் இத்தனை நேரம் இருந்திருக்க வேண்டும், வெற்றிடத்தில் தெரிந்தது அது.

அது என் ஞாபகத்தில் இருக்கிறது… ஆனால் அதை வைத்து என்ன செய்ய  வேண்டும் என்று தெரியவில்லை. அது இப்போது என்னோடு இருக்கிறது, என்னோடு அதுவாக வருமா, நான் தான் தூக்கிக் கொண்டு வரவேண்டுமா என்று தெரியவில்லை. கைகள் கோர்த்துக் கொண்டோம், யார் யாரை அழைத்துச் செல்கிறார்கள் என்று தெரியாத பயணம் ஒன்று துவங்கியதாய் தோன்றியது.

மெதுவாக சாலை இருக்கும் மேட்டிற்கு ஏறிச் சென்று ஒரு சிமென்ட் பாலத்தில் அமர்ந்து கொண்டோம். சாலை இரு புறமும் நீண்டு நெளிந்து சென்று கொண்டிருக்கிறது. மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டோம். பயணத்தை தொடங்க வேண்டும் என்று அது சொன்னது. மனதில் எழுந்த கேள்விகளின் சப்தங்கள் அகச்செவியின் சப்தங்கள் புரியாத பாஷையாக இருந்தது. இது நான் அனுபவித்திராத ஒன்று, நான் அனுபவித்தவை எவை என கேட்டுக்கொண்டாலும் அதற்கு விடையில்லை. முடிவெடுக்கத் தெரியாத நான் அதனை நம்பியாக வேண்டும். நான் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டதாய் அதன் புன்சிரிப்பு உணர்த்தியது.

“என்ன செய்யட்டும்?”
“பயணிப்போம்”
“சரி எங்கே செல்வோம்?”
“அங்கேதான்”
“சரி”
“இப்படியே செல்வோம்”



அது என்னை செலுத்த ஆரம்பித்தது, அது சொன்னத் திசையில் பயணிக்க ஆரம்பிக்கின்றேன், தூசு படிந்த வாகனம் ஒன்று கேட்பாரற்று சாலையோரம் நிறுத்துவைக்கப்பட்டிருந்தது. எட்டிப் பார்த்தேன், தொடர்ந்து வந்த அது என்னை முறைத்தது.

“உள்ளே யாருமில்லை..”
“தெரியும்… நட.”

அந்த வாகனத்தைக் கடந்து நடந்து கொண்டிருந்தோம். அது யாரையோ பார்த்து கையசைத்தது. பதிலுக்கு எங்களை வழியனுப்பியது ஒரு கையசைவு.


இத்தனை நேரத்தில் மிஞ்சியிருக்கும் ஒரே ஞாபகம், எங்களை வழியனுப்பிக் கொண்டிருக்கும் அந்தக் கரம்.. என் ஞாபகத்தில் இருக்கிறது, அதன் வளைகளின் சப்தம், அதே தொனியில் என் ஞாபகத்தில் இன்னமும் இருக்கிறது… இன்னமும் இருக்கிறது

சனி, 13 பிப்ரவரி, 2016

ஞாபகம் - நினைவு



தற்செயலாக ஒரு விதியை

கண்டுபிடித்தேன்

 
‘நினைவுக்கும், ஞாபகத்திற்கும்’ இடையேயுள்ள LEXICON வேறுபாடுகளோ, Etymological விளக்கங்களில் கிடைக்கும் வியாக்கியானங்களில் அக்கறையில்லை

ஞாபகம் தப்பி விட்டது
நினைவு மறந்து விட்டது

எழுதமுடியாதவற்றை
TRANSITION EFFECT
என்று சொல்லி விடலாம்
எழுதியவற்றை கவிதை என்று
பொய் சொல்லலாம்
பகடி செய்யலாம்

கிழித்தவற்றை,
ஒட்டிப் பார்க்கலாம்
தைத்தும் பார்க்கலாம்

என்றைக்கோ
காலியான லஞ்ச் பாக்ஸை
தினம் தினம் சுமந்து செல்கிறேன்

எதற்கோ   
சிரிக்க ஒரு காரணமிருக்கிறது
அழுதிட ஒரு காரணமிருக்கிறது

 வலி கொஞ்சம் கொஞ்சமாய் 
முன்னேறி விபரீதத்தை நிகழ்த்தும்.

அஞ்சலிக் கட்டுரைகளில் 
எழுத்துப்பிழை இருக்கலாம் 
தவறில்லை.

ஆங்!!
ஞாபகம் வந்துவிட்டது
நினைவு தப்பிவிட்டது எனக்கு


ஜீவ கரிகாலன்
lonely - deviant art