திங்கள், 24 டிசம்பர், 2012

வறட்சியை(பஞ்சம்) விரும்பும் நல்லுள்ளங்கள்

 புத்தக விமர்சனம்



சமன்விதா(
SAMANWITA) என்ற திட்டம் ஒரிசாவிலுள்ள கோம்னா எனும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில், தொண்டு செய்வதற்காக இறங்கிய ஒரு சில பிரபல நிறுவனங்களின் அரசு சாரா தொண்டு அமைப்புகளால் (NGO) 1978  1980ல் தீவிரமாக் கொண்டு வந்து செயல்படுத்தப் பட்ட திட்டம் ஆகும். இதன் படி , அங்குள்ள குடியானவர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மாடுகள் யாவும் இப்போதைய நிலைமையை விட அதிகம் பால் சுரக்கும் என்று ஆசை வார்த்தை சொல்லி, மாடுகளுக்கு ஜெர்ஸி காளைகளின் உயிரணுக்கள் செலுத்தப் பட்டன, மேலும் அவர்களுக்கு தங்கள் மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதற்கு ஒரு ஏக்கர் நிலமும் அதில் பயிரிடுவதற்கு எனும் subabul  (கொன்றை மரம் போலிருக்கும் பூர்விகம்: ஐரோப்பா ஜெர்மனி) மரம் வைத்திடும் திட்டமும், அதற்காக சொற்ப ரூபாய்கள் ஊதியமும் கொடுக்கப் பட்டது.

அதே வேளை அந்தப் பகுதியில் பிரபலமான காரியார் எனும் காளை இனத்தை (நம் ஊர் காங்கேயம் காளை போன்ற சிறப்பு வாய்ந்த காரியார் காளை) இதே அமைப்பினர் விதையறுப்பு செய்து அடுத்த கன்று உருவாகுவதை முற்றிலுமாகவே தடுத்து விட்டார்கள், இன்று அந்த கார்யார் காளை இனம் முழுதுமாய் அழிந்துவிட்டது. அதற்கு பதிலாக உருவாக்கியிருந்த ஜெர்ஸியினமோ குறைவான பால் உற்பத்தியை கொடுத்ததுடன், பெரிய அளவில் கன்றுகள் இறந்து விட்டன, இறுதியில் அந்த திட்டத்தை படு தோல்வியடையச் செய்து அவர்கள் வாழ்வாதாரத்தை மாற்றியமைத்த்து, ஒருமுறை வெட்டிவிட்ட(வெட்டிவிட அறிவுறுத்தப்பட்டு) subabul  மரங்கள் யாவும் மறுபடியும் தளைக்காமல் போக, புதிய கலப்பினம் மற்றும் புது வகை subabul மரங்கள் மூலம் வறுமை ஒழிப்பு என்ற குறிக்கோளில் கொண்டு வரப்பட்ட சமன்விதா (Samanwita) திட்டமும் அடுத்த மூன்று வருடங்களில் முடிவுக்கு வந்தது.

CAG எனப்படும் மத்திய தனிக்கைக் குழு செய்த கிராமப் புற மேம்பாட்டிற்காக செயல்பட்ட திட்டங்களில், சோதனை முறையில் தணிக்கை செய்ய அதில் செயல்நோக்கத்திற்காக அல்லாமல் திருப்பிவிடப்பட்ட நிதிகளைக் கொண்ட திட்டங்களுக்கான பட்டியலில் சமன்விதாவும் இருந்தது (16 கோடிக்கும் மேலேயுள்ள திட்டம்). அதில் குறிப்பிட்ட ஒரு தொண்டு நிறுவனமான BAIFக்கு மட்டும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டிருந்தது). இந்த வீணாய்ப் போன திட்டம் ஏற்படுத்திய வறட்சி பத்தாண்டுகள் வரை நேரிடையாக அந்த மாவட்டத்தில் பாதித்திருக்க, திட்டம் தோல்வியுற்றாலும் இதில் பலனடைந்த நிறுவனமோ?........ தொடர்ந்து படியுங்கள்

வறட்சியை(பஞ்சம்) விரும்பும் நல்லுள்ளங்கள் –முதலில் இந்த புத்தகம் பற்றி சிலாகித்து எழுத வேண்டிய அவசியம்இது 1996ல் வெளி வந்திருந்தாலும் இன்றளவும் நம் நாட்டின் வறுமையைப் பற்றிய முக்கிய ஆவனமாக இந்நூல் திகழ்கிறது. இன்றைய நிலையிலும் வறுமைக்கான அளவீடுகளை மிக முரணான வகையில் அமைத்து வைத்திருக்கும் நம் அரசின் போக்கிற்கு பின்னால் என்னவெல்லாம் இருக்கலாம் என்று யோசிக்க வைக்கும் நூல். வறுமையை ஒழிப்பதற்கு பதிலாய் வறுமைக் கோட்டின் எல்லையை கொஞ்சம் தளர்த்திக் கீழ் இறக்கி வைத்து சில விழுக்காடுகளை விழுங்கிக் கொள்ளலாம் என்று சிந்திக்கும் அரசின் இன்றைய நிலை இப்படி இருக்க பெரிதாக ஏதும் விழிப்புணர்வொ, நவீன ஊடகங்கள் இல்லாத அன்றைய நாட்களிலேயே வறுமையால் பாதிக்கப்பட்ட இடங்களில் வளர்ச்சிப் பணி எந்த அளவு இருந்து வருகிறது என்று அவர்கள் தோலுரிக்கும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.

 நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை புள்ளி விவரங்களோடு ஒவ்வொரு காலாண்டும் உலகிற்கு அறிவித்துக் கொண்டே இருக்கிறது நம் அரசு. ஆனால் நம் நாட்டின் வளர்ச்சியில் உள்ள புள்ளி விவரங்களுக்கும் தங்கள் வாழ்க்கை முறைக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் இந்த தேசத்தில் பெரும் பகுதி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?, இந்த தேசத்தின் வளர்ச்சி என்பது இந்தியர்களின் வளர்ச்சியல்ல. பெரும்பான்மையான ஊடகங்கள் இந்தியாவின் வளர்ச்சியைப் பேசும் போது, ஒரு பெரிய அளவிலான மக்களின் வாழ்க்கை முறை மறைக்கப் பட்டு வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா ? னீங்கள் இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும்.

மகசேசே போன்ற உயர்ந்த விருதுகளாக மொத்தம் பதிமூன்று விருதுகளைப் பெற்ற எழுத்தாளர் திரு.P.சாய்நாத் அவர்கள் தொகுத்திருக்கும் இந்த புத்தகம் வாயிலாக தனிப்பட்ட முறையில் இன்றிருக்கும் பொறுப்பற்ற ஊடக மாந்தர்கள் இதன் சிறப்பை உணர வேண்டும், அன்றைய நிலையிலேயே ஊடகங்களின் பொறுப்பற்ற நிலையை பெரிதும் கண்டித்திருந்திருக்கிறார். அதனால் தான் அவர் தன்னை ஒரு தன்னிச்சையான எழுத்தாளராகவே (free lance  journalist) நிறுவிக் கொண்டு தான் இந்த புத்தகம் எழுதுகிறார்.
இந்த புத்தகம் இந்தியாவின் ஏழைகளிலும் ஏழைகளாக இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறது. மொத்தம் உள்ள் 68 கட்டுரைகளும் வறட்சியையும், பஞ்சத்தையும் காரணமாக வைத்துக் கொண்டு நடக்கும் அதிகார வர்கங்களின் சுரண்டல்களையும், சீர்குலைந்த சமூக அமைப்புகளையும் மிக தைரியமாக ஆவனப் படுத்தியிருக்கிறார். தமிழ்நாடு, ஒரிஸ்ஸா, பிஹார், மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் என அவர் நம் நாட்டின் கடை நிலையில் உள்ள 5% சதவீதத்தினரை சந்தித்திருக்கிறார். கிட்டதட்ட 80000 கி.மீ வெவ்வேறு 16 வகையான வாகனங்களில் பயணித்த இவர், நடை பயணமாகவே நடந்த தூரம் மட்டும் கிட்ட தட்ட 4000 கி.மீ.

இது போன்ற பயணக் கட்டுரைகளில் பொதுவாக அவர்கள் சந்தித்த பெரிய இயற்கை பேரழிவுகளையோ, நோய்களையோ, விபத்துகளையோ தான் ஆய்வுப் படுத்தும் விதமாக அமைக்காமல் அம்மக்களின் தினசரி வாழ்க்கையை, அவர்கள் வாழும் முறையை பதிவு செய்திருக்கிறார். இந்த புத்தகத்தை வாசித்த பின்னர் வளர்ச்சி என்று இத்தனை ஆண்டுகளாய் நமக்கு கிடைத்தவை எல்லாம் மிகச் சாதாரணமான எச்சங்கள் தான் என்ற முடிவிற்கு நாம் வந்துவிடுவதைத் தவிர்க்க முடியாது. ஒரு பெருங்கூட்டம் ஒன்று “நம்மை ஒரு மக்களரசு தான் நிர்வகிக்கின்றது என்று கூட தெரியாமல் வாழ்வது புலனாகிறது. பஞ்சம், வறுமை, உடல்நலக் குறைவு, கல்வியின் இக்கட்டான நிலை என்று பகுப்பாய்வு செய்து அதை சமூகத்தின் சூழலோடு கணக்கிடப்பட்டுள்ளது.

கணக்கிடப்பட்டுள்ளது என்ற கருத்தை இங்கு சொல்லக் காரணம், வெறும் செய்தி ஆவனமாக மட்டும் இவை உபயோகப்பட்டு நின்று விடக் கூடாது என்று, அவர் தன்னுடைய ஒவ்வொரு கட்டுரையிலும் புள்ளியல் விவரங்களோடும், ஒப்பீடுகளோடும் சொல்கிறார். ஆதலால் இவர் சென்று வந்திருக்கும் டெல்லி, கேரளா, உத்திர பிரதேச மாநிலத்தின் தரவுகளும் ஒரு குறிப்பாக பயன் பட்டிருக்கின்றன. இவை யாவுமே ஒவ்வொரு கட்டுரையினை வாசிக்கும் பொழுதும் எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் எளிமையான மொழி நடையில் எழுதப் பட்டிருக்கின்றன. வறட்சியை தவறான கணக்கிடுதலில் உள்ள தீமையையும் ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்கிறார். எ.கா: கலாஹந்தி மாவட்டத்தில் (ஒரிஸ்ஸா) மொத்த நாட்டின் சராசரி மழை அளவை {800 மி.மீ} விடவும் அதிகம் {1250மி.மீ}, ஆனால் அங்கே வறட்சியைக் காரணம் காட்டி நீர்ப் பாசனத்திற்காக ஒதுக்கப் படும் தொகையென்பது தேவையற்றது. இந்த நிதி ஆதரத்திற்காகத் தான் தங்கள் ஊரிலேயே வறட்சியை விரும்புகின்றனரா ??


அண்டை மாநிலமான கேரளாவோடு ஒப்பிடுகையில், தமிழநாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பனையேறியான ரத்னபாண்டிக்கு எந்த ஒரு பாதுகாப்புக் கவசமும் இல்லை. சராசரியாக இருபது-இருபத்தைந்தடியுள்ள பனை மரமாக தினமும் நாற்பது மரங்கள் ஏறி இறங்கினால் தான் அவருக்கு மாதச் சம்பளமாக மாதம் ரூ.600/- கிடைக்கும், இந்த சொற்ப வருமானத்திற்காக அவர் பாதுகாப்பில்லாமல் ஏறும் படிகளை கணக்கிட்டால் அதன் உயரம் 5000 அடிக்கும் மேலே வரும், அது கிட்ட தட்ட 240 மாடிகள் ஏறுவதற்கு சமம், இத்தனை வருடங்கள் அவர் வேலை பார்த்து வந்தாலும் அவர் ஒரு பனை மரத்திற்கு கூட உரிமையற்றவராகவே இருக்கிறார். அதே ராம்நாடில் (இன்றளவும்) நடைபெற்று வரும் மிளகாய் வியாபாரத்தை  பார்க்கும் பொழுது, ஒரு அற்பத் தொகையை விவசாயிக்கு முன்பணமாகக் கொடுத்து மொத்த வற்றலையும் ஏமாற்றும் மண்டி ஆட்களும், கைகளில் துண்டு போட்டு பேரம் பேசி ஏமாற்றும் தரகர்களின் செயல்களும் நமக்கு சொல்ல முடியாத அதிர்ச்சி தருபவை. இப்படி ஒரு தட்டு மக்களின் வறுமையை முதலீடாகக் கொண்டு சுரண்டி வாழும் சமூகத்தை வெளிக்கொணரும் அத்தனை கட்டுரைகளும் நம் சமூகம் இவ்வளவு ஆபத்தானதா என்று அச்சத்தை மூட்டுகிறது.

வரும் வார இறுதியை உல்லாசமாய் கழிப்பதே குறிக்கோளாய் வாழும் பகட்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் உயர்ந்து போன, நவீன வாழ்க்கை முறை என்பது தான் இந்த நாட்டின் நிலை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இதைப் படித்தால் புரிந்து கொள்வார்கள், இந்தியா என்பது வேறு, இந்தியர்கள் வேறு என்று.

இக்கட்டுரையின் முதலில் சொன்ன திட்டத்தை (ஒரிஸ்ஸா - சமன்விதா) கையாண்டுக் கொண்டிருந்த தொண்டு நிறுவனம் BAIF, அன்று (1978) பெற்ற மூன்று கோடி நிதியைக் கொண்டு நிர்மானிப்பதாய் இருந்த செயற்கை முறை விலங்குகள் கருத்தரிப்பு நிலையங்கள் சுமார் 250ம் உண்மையில் கிராம மேம்பாட்டிற்கு என்று ஏதும் செய்யவில்லை என்று மத்திய தணிக்கைக் குழு சொல்லியது என்பதை நினைவில் வைத்து அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை இணையத்தில் தேடிய பொழுது வந்த அதிர்ச்சி, Bharathiyo Agro Industrial Foundation – இன்று BAIF Development Research Foundation என்ற பெயரில் இது வரை 60000 கிராமங்களில் செய்திருக்கும் உற்பத்தியின் அளவு மட்டும் (GDP) 2500 கோடி என்று பார்த்தபோது தான் இந்த புத்த்கத்தின் தலைப்பு எவ்வளவு பொருத்தமாய் போய்விட்டதே!! என்று வருந்துகிறேன்.
            
புத்தகத்தின் பெயர் : Everybody Loves a Good Drought
ஆசிரியர்          : P.Sainath
வெளியீடு         : Penguin Books
விலை            : Rs.399/-


- நன்றி 
ஜீவ.கரிகாலன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக