சனி, 3 செப்டம்பர், 2016

எவ்ளோ நாளாச்சு..



வீட்டுல அம்மா கையால ஒரு கோப்பைத் தேநீரோடு இப்படி போஸ்ட் எழுதி. சுமார் இரண்டு வருடங்களிருக்கும். கணினியில் பழுதானவுடன் நிறுத்தினேன். சொல்லிக்கொள்ளும்படியாக புதிதாக எந்தக் கதையும் கட்டுரையும் எழுதவில்லை. ஆனால் நிறைய வேலைகள் இருந்தன, மீண்டும் பழுது பார்க்கும் வரை இவற்றை நிறுத்தி வைப்போம் என்ற முடிவில் இருந்தேன்.

புத்தக வெளியீட்டிற்கு அதிகப்பட்சம் 3000 – 4000க்குள் இதுவரை நடத்தியிருந்தோம். ஆனால் ஏதோ ஒரு பேராசை, இக்சாவில் சற்றே கூடுதலான பட்ஜெட்டில் ஒரு நிகழ்வு நடத்திவிட்டோம். ஏனென்றால், என் எழுத்தை கவனித்து யாரும் வரப்போவதில்லை. கிட்டதட்ட 40 கூட்டங்கள் வரை இந்த ஐந்து வருடங்களில் நடத்திய ஒரு மனிதனாக என்னை நண்பர்கள் அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். கண்டிப்பாக நூற்றுக்கு குறையாது என்று நினைத்திருந்தேன். குறையவில்லை. வந்திருந்த அனைவருக்கும் நன்றி.

கௌதம சித்தார்த்தனும், அபிலாஷும் நான் சந்தித்தவரை நல்ல விமர்சகர்கள். ஆகவே, அவர்கள் வைக்கப் போகும் விமர்சனம் குறித்து அச்சமிருந்தது. அதனாலேயே வீட்டில் அம்மாவிடமும், மாமாவிடமும் மட்டும் சொல்லிவைத்திருந்தேன் (இவர்கள் தான் என்னை எந்தக் குறையுடனும் ஏற்றுக்கொள்பவர்கள்). ஆனால் சென்னை தினக் கொண்டாட்டத்தில் என்னுடைய நிழற்படத்தோடு செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. வீட்டில் விசாரித்த எல்லோருக்கும் அடுத்த நாள் நிகழவிருக்கும் புத்தக வெளியீடு பற்றிய செய்தியும் சொல்லப்பட, கிட்டதட்ட 15 பேர் கொண்ட குழுவாகத் தயாரானது. சரி, அதுவும் நல்லது தான் மழைக்காலத்தில் நண்பர்கள் வரமுடியாமல் போனாலும், பேச்சாளர்களுக்கு தெம்பாக இருக்கும் என்று நினைத்தேன். மழை போல நட்பு வந்தது. மழை வரவில்லை.

கடைசியாக நான் எழுதிய கதை – 23-04-2014. இந்தத் தொகுப்பில் இருக்கும் நீரோடை. 2010ல் எழுதப்பட்டிருந்த கரூரிலிருந்து மான்செஸ்டர் வரை என்கிற கதையும் இந்நூலில் உண்டு. ஓரளவுக்கு நல்ல பெயரெடுத்துக் கொடுத்திருக்கிறது இந்தத் தொகுப்பு. செலவோடு செலவாக கணினியும் பழுது பார்க்கப்பட்டது. இனித் தொடர்ந்து எழுத எனக்கு சாத்தியம் இருக்கிறது. பார்ப்போம்.

என் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம், என் அலுவலகம் தான். நான் எழுதுபவனாக என்னை, நிறுவனத்தின் இரு நிறுவனர்களும் அங்கீகரித்துள்ளனர். எனக்கான வெளியை சாத்தியப்படுத்தியது அதுதான். இல்லாவிட்டாலும் எழுதிக்கொண்டிருப்பேன். ஆனால் தனியாகத் தான். நண்பர்களோடு இப்படி சேர்ந்து இயங்கிட முடியாது.
மிக முக்கியமாக நான் குறிப்பிடப்படவேண்டியது, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாரதியைப் பற்றி, பாரதி என்றால் வெறும் பாரதி மட்டுமல்ல அவனது நான்கைந்து நண்பர்களோடு சேர்த்து தான். இதோடு நாகப்பிரகாஷையும் சேர்த்துக் கொள்ளலாம். தமிழில் வாசிப்புக் குறைந்துவிட்டது என்று சொல்பவர்களுக்கு, தமிழ் எழுத்தின் எதிர்காலம் என்ன என்று கேட்பவர்களுக்கெல்லாம் பதிலாக இவர்களைத் தான் பார்க்கிறேன்.

நாளைய எழுத்து இவர்களிடம் தான் இருக்கிறது. இவர்கள் ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் தீவிர வாசிப்பு இருக்கிறது, முக்கியமாக தொழிற்நுட்ப சாத்தியங்கள் அவர்களுக்கு மிகப் பெரிய பாய்ச்சலை சாத்தியமாக்கும். ஆனால் இவர்கள் இன்றைய மடாதிபதிகளாக சுற்றித்திரியும் எழுத்தாள பிம்பங்களை நெருங்காமல் இருக்க வேண்டும். ஆசான், குரு என்று எவரையும் சொல்லிடக் கூடாது, அவர்களை POLLUTE பண்ணுவதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்யத் தயாராகிவிடுவார்கள்.

இவர்கள் தீவிரமாக எழுத ஆரம்பிக்கும் காலக்கட்டம் இலக்கியத்தில் மீண்டும் ஒரு போக்கை உருவாக்கும். ஏனென்றால் 1990-2010வரை அல்லது 1995-2005 வரை சமூகச் சூழலில் அடிப்படையாக ஒரு குழப்பம் இருந்தது. தலைமுறை இடைவேளைகளில் இருந்த தூரங்கள் குறைந்ததிலிருந்து, தொழிற்நுட்பம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த திடீர் மாற்றங்கள், நுகர்வுத் தன்மை ஆகியன உருவாக்கிய சிக்கல்களில் எழுதிக் கொண்டிருந்தவர்கள், அதை மோசமான காலக்கட்டமாக பலர் சொல்லிக்கொண்டு வருவதைக் கேட்டிருக்கிறேன். குறிப்பாக 2000க்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த எழுத்தும் வரவில்லை என்று சொல்பவர்களுக்கு, நம்பிக்கை அளிக்கும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது என்று நான் நம்புகிறேன்.


நம்பிக்கை என்பதே ஒரு தொடக்கம் தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக