ஞாயிறு, 10 ஜனவரி, 2016

பஜ்ஜி - சொஜ்ஜி 92 - தலைவன் இருக்கிறான்

முன் குறிப்பு:

ஆம் விகடனில் சிறுகதை வந்தால் அது பெருமை தரும் விஷயமாகத் தான் இருந்தது. நானும் சில மாதங்கள் முன்பு வரை அதற்கு கதைகள் அனுப்பியிருக்கிறேன்.


பல மாதங்களுக்குப் பிறகு விகடனை இரவல் வாங்கிப் பார்க்கும் அரிய வாய்ப்பு கிட்டியது. MAIN STREAM பத்திரிக்கை 25 ரூபாய் மாறியது தெரியாது, நான் கடைசியாக வாங்கும் போது 17 ரூபாய். நண்பர் அகரமுதல்வனின் கதை இந்த இதழில் வெளியாகி இருப்பதால் அதை வாசிக்கும் பொருட்டு இரவல் வாங்கினேன். விகடன் விருதுச் சிறப்பிதழாக இவ்விதழில், சினிமா கலைஞர்கள், ஊடக நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள், சிறந்த பைக், சிறந்த கார், சிறந்த விளம்பரம் ஆகியவற்றுடன் சிறந்த இலக்கியவாதிகளுக்கும் விருது வழங்கப்பட்டிருந்தது.

கடந்த ஒரு வருடத்தில், விருதுகளை முன்வைத்து விருதுகளையும், விருது அமைப்புகளையும் விஜயகாந்தை விட அதிகமாகவே காரித் துப்பிக் கொண்டிருக்கும் கூட்டமாக பல அமைப்புகள் இருக்கத் தான் செய்கிறது. நானும் அந்த வரிசையில் சேர்ந்து கொள்ள நாட்டமில்லை என்பதால் இப்போதைக்கு பாராட்டுகிறேன்.. சிலர் துரதிர்ஷடவசமாக அந்த பட்டியலில் சேர்ந்திருப்பதும் அவர்கள் பிழையல்ல. எத்தனையோ நல்ல பாடல்கள் வந்திருந்தாலும், ஏ.ஆர். ரகுமானின் மகனென்பதால் தான் இந்த விருது(சிறந்த ஆண் பாடகர்) அந்தச் சிறுவனுக்கு வழங்கப்படுகிறது என்கிற லாஜிக் சாமான்யனுக்குப் புரியாது என்கிற விகடன் விருதுத் திட்டக் குழுவிற்கு பாராட்டுகள். இந்த வருடம் ”சிறந்த வில்லி” என்கிற விருது வேறு, அடுத்த வருடம் வில்லி கதாப்பாத்திரம் உள்ள படங்கள் வராவிட்டால் இந்த விருதுக்கான ஆப்ஷன்?? இது போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட விகடன் விருது பற்றி ஆய்வுக் கட்டுரை எழுத நேரம் விரயம் செய்ய இயலாது இருந்தாலும்,   "பாக்ஸ்" எனும் நூலிற்கான விருது குறித்து சற்றே சஞ்சலமடைகிறது. ஷோபா சக்தியின் படைப்புகள் குறித்தும் அவர் அரசியல் குறித்தும் வாசிப்புத் தளத்தில் தீவிரமாக இயங்கும் நபர்களுக்கு மட்டுமே தெரியும். விகடன் மட்டுமில்லாமல் முக்கிய ஊடகங்கள் இந்நாவலை முன் வைக்கின்றன.

ஷோபாசக்தியை புலம்பெயர் இலங்கைத் தமிழனாக முன்னிறுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, அவரது படைப்புகள் எந்த அரசியலோடு வேண்டுமானாலும் இருக்கலாம் இது அவரது உரிமை. ஆனால் ஊடகங்களும், விமரச்கர்களும் அங்கீகரிப்பதற்குப் பின்னாலிருக்கும் அரசியலைப் பற்றி என்னவென்று சொல்வது. பிரச்சார இலக்கியங்களுக்கு பிரச்சாரம் செய்வது ஊடக அரசியல் தான் என்று திட்டவட்டமாக எப்படிச் சொல்ல முடிகிறது என்றால். இந்த இதழில் வந்திருக்கும் அகரமுதல்வனின் சிறுகதையை வைத்து தான். அதாவது கணக்கை டேலி செய்துவிடுகிறார்களாம். இது கதை விவாதக் குழு, தேர்வுக் குழு போன்றோர்கள் எடுக்கும் முடிவு என்று உள்விவகாரம் பற்றியெல்லாம் கேள்வி கேட்கவும் வேண்டாம்.

பரிசு கொடுக்கும் இவர்கள் (விகடன்) , இந்நூலினைக் குறித்து என்ன சொல்கிறார்கள் தெரியுமா “வரலாற்றில் தோற்கடிக்கப்பட்டவர்களின் வலியை உரக்கச் சொன்ன வகையில், பாக்ஸ் ஒரு முக்கியமான நாவல்”. ஷோபாசக்தியின் குரல் தோற்கடிக்கப்பட்டவர்களின் சார்பாகவா இருக்கிறது? புலிகள் மீதான விமர்சனம் இன்று ELITE ஆக்கப்பட்டிருக்கிறது. புலிகளின் மீதான விமர்சனமே மெல்ல தமிழீழம் என்கிற கருத்தாக்கத்தையே எதிர்க்கும் குரலாக மேதாவிகளாலும், புரட்சியாளர்களாலும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த DISESTABLISHMENT, அண்மைக்காலத்தில் மிகத் தீவரமாகப் பரவி வருகிறது. ஓஷோவை எதிர்க்கும் பொழுது நாத்திகர்களும், மத நிறுவனங்களும் ஒன்றாக ஒரே வரிசையில் நிற்பது போல, வலதும், இடதும் பாரபட்சமின்றி ஒன்றாக நிற்கின்றன. முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது இயக்கத்தையும், ஈழ உணர்வையும் ஆதரித்து எழுதியவர்கள் பலர் தங்கள் நிறத்தை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிவிட்டனர். இவர்களுக்காக வெள்ளை நிற சொகுசு கேரவேன்களில் அந்த ஆப்ரேஷன்கள் நிபுணர்களால் வெற்றிகரமாகக் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நிறம் மாறியதும் ரத்தம் - சர்பத் ஆகிவிடுகிறது. சர்பத் சிவப்பிற்கும், காவிக்கும் மத்தியிலிருக்கும் நிறம்.

தமிழ் இந்துவும் இந்நாவலைச் சிறந்த நாவலாகக் கொண்டாடுகிறது, // நமது அரசியல் சார்புகளுக்கும் லட்சியவாதங்களுக்கும் அப்பாற்பட்டு எல்லாத் தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட வதைகளின் கதைகளைத்தான் இந்த நாவல் சொல்கிறது. // இது தமிழ் இந்துவின் குரல். தமிழ் இந்து, தி இந்து குழுமத்தின் அங்கம் என்பது அவ்வப்போது மறந்துவிடுகிறது. இதற்கு மேல் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. இங்கே நடுநிலை என்று எதனையும் சொல்ல முடியாத போது. ”இவற்றையெல்லாம் நான் ஏன் எழுத வேண்டும்?” என்றும் சொல்லத் தோன்றுகிறது..


பிரபாகரனின் முகம் பதித்தக் காலண்டர் ஒன்றினை எடுத்துச் சென்றேன். என் வீட்டின் படிக்கும் அறையில் என் கணினியின் முன்னே தொங்கவைத்து விட்டு வேலைக்குச் சென்றேன். பின்னர், வீட்டிற்குத் திரும்புகையில் அந்தக் வரவேற்பறைக்கு மாறியிருந்தது. இதற்கு முன்னர் அவ்விடத்தில் பிள்ளையாரும், பாலாஜியும், ஏசுநாதரும் தான் இருந்திருக்கிறார்கள். ”இங்கே ஏன்” என்று கேட்டேன், ”இங்க தான் இது இருக்கணும்” என்று பதில் வந்தது.



மன்னார்குடியில் பத்துக்கு ஒன்பது டீக்கடைகளில் பிரபாகரனின் படத்தைப் பார்க்க முடியும். வத்திராயிருப்பில் எம்.ஜி.ஆர், பிரபாகரன் இவர்கள் மரணமடைந்ததை இன்னும் ஏற்கமாட்டார்கள். எத்தனை லங்காதி, அமெரிக்க, இந்துத்வ, ருஷியக் கோட்பாடுகளாலும் பிரபாகரனை மறக்கடிக்கச் செய்ய முடியாது.. ஏனென்றால் இது ஒரு இனத்தின் நீண்ட கால தாகத்தின் அடையாளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக