திங்கள், 26 ஆகஸ்ட், 2013

விஸ்வரூபம் - த்ரிவிகர்ம சிற்பத் தொகுதி - மகாபலிபுரம் -05

(பஜ்ஜி சொஜ்ஜி - 32 சிற்பம் ஓவியம் ரசனை)

           விஸ்வரூபம்

வெறும் உற்று நோக்குதலில் ஆரம்பித்தது தான், ஆனால் இப்பொழுது சிலைகள் என்னோடு பேச ஆரம்பித்து விட்டன, ஏனென்றால் புராணங்களை தொன்மை வடிவத்திலேயே பார்க்காமல் என் இன்றைய வாழ்வோடு பொருத்திப் படுத்திப் பார்க்க முடிகின்றது, அதனை அறிவியல் தத்துவத்துடனோ அல்லது முரண்களுடனோ ஒப்பிட்டுப் பார்ப்பதில் ஒரு அலாதிப் பிரியம் இருக்கிறது.

ஆயிரமாண்டுகளைத் தாண்டி நிற்கும் இது போன்ற கலை படைப்புகள் வரலாற்றைத் தாண்டி வேறு என்னவெல்லாம் சொல்கின்றன?. அதை அறிந்து கொள்ளப் பெரிய அளவிலான சிற்ப அறிவோ, புராண-வேத ஞானமோ, இல்லை அறிவியல் கோட்பாடுகளையோ அறிந்திடாத சாமான்யனாலும் எவ்வளவு தான் ஒன்றிட முடியுமோ?

விஸ்வரூபம் என்பது மனிதன் தன் அகந்தையை அழிக்க உதவும் காட்சி, அகந்தை அழியும் போது அவன் இதுவரை வாழ்வில் தீர்மானித்து வைத்த அத்தனை ஒப்பீடுகளும், வேறுபாடுகளும், சுயகௌரவமும் அழிந்து போய் விடும் தான் என்பது ஒன்றுமில்லை என்று தெரிந்து கொள்ளும் பொழுது. தன் கர்வத்தை அழிப்பதற்கு, தான் ஒன்றும் விஷேடமானவனில்லை, தன்னால் மட்டும் எல்லாம் முடிவதில்லை என்று எண்ணுவதற்கு, நாம் சிறியவனாக, வரியவனாக தெரிவதற்கு நம்க்கு முன் ஒரு பிரம்மாண்டம் இருக்க வேண்டும், அந்த பிரம்மாண்டம் நம் கண்களுக்கு புலனாவதில்லை எறும்பினைப் போன்று.

  ஆம், எறும்பின் பார்வையில் எதிரில் நிற்கும் நமது முழு உருவமும் தெரியுமா என்ன?? ஆனால் இங்கு ஒரு ரூபம் விஸ்வரூபம் அடைந்திருக்கிறது என்பதை உணர மட்டும் முடியும், ஏனென்றால் நாம் எல்லோரும் அகந்தை ஒழியவே விரும்புகிறோம், அதுவே உன்னதமான தேடலாக ஒரு மனிதனுக்கு இருக்க முடியும். தன்னைப் பற்றி இனிமேல் வியப்பதற்கோ, பேசுவதற்கோ இனி ஒன்றுமில்லை என்று உணரும் கணம் தான் எத்தனை விஷேசமானது?? - கடினமானது.. அதை ஒரு மொட்டை மாடியிலோ, திறந்த வெளியிலோ படுத்துக் கொண்டே ஒரு அகண்ட குடையாய் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை பார்க்கும் போதும் நிகழும், அந்தக் குடைக்குப் பின்னும் மிகப்பெரிய பிரபஞ்சத்தை நாம் உணரும் பொழுது அதே மாதிரி அகந்தை அழிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வராக மண்டபத்தின் இடப்பக்கச் சுவற்றில் இருக்கும் த்ரிவிகர்ம சிலைத் தொகுப்பில் இப்படி உலகை வென்ற பேரரசனினின் அகந்தை அழிந்த காட்சி புடைக்கப் பட்டிருக்கிறது. இந்தச் சிற்பக் காட்சி வடிப்பதற்கு மிகக் கடினமான நிகழ்வாக பதிந்துள்ளது என்பது மறுக்கமுடியா உண்மை. காரணம் இதை காட்சிப்படுத்தத் தேவைப் படும் கற்பனைத் திரன் தான் இதற்கு அடிப்படை, மகாபலியினை வதம் செய்யும் பொருட்டு இரண்டடியில் உலகத்தையும், விண்ணையும் அளக்கும் வாமனனின் விஸ்வருபத்தை வடிக்க வேண்டும் என்றால் எளிதாகக் கிட்டுமா கற்பனை.

இந்தப் 19ம் நூற்றாண்டு நேபாள ஓவியத்தில் பார்க்கும் பொழுது, மூன்று கால்கள் மட்டுமே தெரியும், மூன்று அடிகளையும் காட்சிப் படுத்த வேண்டும் என்பதால் முதல் அடியை நிலத்திலும், இரண்டாம் அடியை விண்ணிலும், மூன்றாம் அடியை மூன்றாவதாக ஒரு காலினைக் கொண்டு மகாபலியின் தலையில் வைப்பதாக இதன் ஓவியர் கற்பனை செய்திருக்கிறார். மிகக் கடினமான கற்பனை தான், ஆனாலும் மூன்றாவது காலுக்கு இணையாக மற்றொரு காலினை இவரால் காட்ட முடியாது போய் விட்டது. ஏனென்றால் அது நான்காவது அடி என்று சொல்லிவிடும், அதற்காக வெறும் மூன்று கால்களை மட்டும் வரைந்து வைத்துள்ளார் ஓவியர்.

மகாபலிபுரம் எனும் பெயர்க் காரணத்திற்கான மகாபலியின் சிற்பத் தொகுதி இந்த வராக மண்டபத்தில் தான் அமைந்திருக்கிறது, குரு சுக்ராச்சாரியாவின் எச்சரிக்கையினையும் பொருட்படுத்தாது, அந்தணச் சிறுவனான வாமனனிடம் வாக்கு கொடுக்கிறான். வாமனன் விஸ்வரூபம் எடுக்க முதலடியில் உலகையும், இரண்டாமடியில் விண்ணையும் அளக்கிறான். இதே போன்று தத்ரூபமாக வராக மண்டபத்தில் அந்த இரண்டடியினையும் வைத்து விட்ட திருமாலின் விஸ்வரூபம் படைக்கப் பட்டுள்ளது, அப்படியென்றால் மூன்றாவது அடி??

மூன்றாவது அடி இங்கே தேவைப்படுமா என்ன? தன் கர்வம் அழிந்து சக உயிர்களில் ஒருவனாக தன்னை ஒரு பேரரசன் உணர்ந்து கொள்ளும் இடம் தானே மூன்றாவது அடி, மூன்றாவது அடி என்பது அவன் தலையில் அல்ல தலைக்கணத்தில். திருமாலின் இடப்புறம் அமர்ந்திருக்கும் சிலை தான் ம்காபலியாக இருக்க வேண்டும் அவனது இடப் புறம் குரு சுகராச்சாரியராகவும் காலின் வலது புறம் இருப்பவர்கள் மகாபலியின் ஆரவாரங்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம, அல்லது நாக ராஜனும், இந்திரனும் என்றும் வைத்துக் கொள்ளலாம். இந்திரன் தன் உடைவாளில் கை வைத்திருக்கிறான். ஒருவேளை இந்த அவதாரம் வாயிலாக சகோதரனாகிய திருமாலினை சரணடையாவிட்டால் அவனிடம் போர் செய்யும் பொருட்டு இப்படி வாளினில் கை வைத்த படி இருக்கலாம்.

மொத்தம் மூன்று வரிசைகளில் இச்சிற்பத் தொகுதி படைக்கப் பட்டிருக்கிறது, அதில் கீழ் வரிசையில் நமக்கு வலப்புறம் உள்ள இந்திரனைத் தவிர மற்ற மூவரும் துயரில் இருப்பதாகக் காட்டுகிறது. இந்திரனுக்கு சொர்கத்தை மீட்டுத் தரும் பொருட்டு தான் வாமன அவதாரத்தினை இறைவன் எடுப்பதால் அந்தச் சிற்பம் இந்திரனாகவே இருக்கட்டும். மேலிருக்கும் முதல் வரிசையில் மொத்தம் மூன்று சிற்பங்கள், நமக்கு இடப்புறத்தில் தாமரையில் அமர்ந்திருப்பது சிவன், தாமரை மீது அவர் அமர்ந்தபடி ஆசி வழ்ங்குவது போல் படைக்கப் பட்டிருக்கிறது, அதற்கு எதிரே மூன்று முகம் கொண்ட பிரம்ம தேவன் விண்ணில் அடியெடுத்து வைத்த விஸ்வரூபப் பெருமானின் பாதம் தொட்டு வணங்குவது போன்று படைக்கப் பட்டிருக்கிறது, பிரம்ம தேவனும் தாமரை மீதமர்ந்தபடி பக்தியோடு திருமாலின் திருவடியை வணங்க அவருக்கு எதிரே கையில் நீர்க்குடத்தோடு ஒரு கரடி உருவம் ஒன்று, திருவடிக்குப் பாதாபிஷேகம் செய்ய கொணர்ந்து வந்தது போல் இருக்கின்றது, அது பிரம்ம தேவனுக்கு உதவியாக இருக்கலாம். அந்தக் கரடி , இமயத்தின் அரசனாகிய சம்புவதன் (ஜாம்பவானாக இருக்கக் கூடும்), இரண்டடியில் உலகை அளந்த இறைவனை ஏழுமுறைச் சுற்றி வலம் வந்ததாகக் கதை இருக்கிறது அல்லவா??

இராண்டாம் வரிசையில் எதிரெதிரே இரண்டு தேவர்கள், பார்த்தவுடனே எளிதாகச் சொல்லிவிடலாம அவர்கள் சூரியன் சந்திரனென்று. மேலே நாம் விவரித்த நேபாளச் சித்திரத்தில் விண்ணை அளப்பதற்காக உயர்த்தியிருக்கம் காலகளை தமது கரங்களில் ஒன்றைக் கொண்டு பற்றியிருப்பது போல் வரையப் பட்டிருக்கும். அது அவர் தன் கால்களை அந்தரத்தில் தூக்கியிருப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் ஒரு கரம் காலினை பிடித்துக் கொண்டிருக்கும், இந்தச் சிற்பத் தொகுதியில் அப்படியல்ல, ஒரு காலினைத் தூக்குவதற்கு ஏதுவாக தனது வலது கரத்தினையும் தூக்கியிருப்பது போல் காட்சிப் படுத்தப் பட்டிருக்கும் (well balanced), நாட்டிய முத்திரை போல.

தன் எட்டுக் கரங்களில் இரு கரங்களைத் தவிர சக்கரம், சங்கு, குத்துவாள், வாள், கேடயம் மற்றும் வில் ஆகிய ஆயுதங்களை ஏந்திய படியும், ஒன்றினை காலைனைத் தூக்குவதற்கு ஏதுவாக மேலே தூக்கியபடியும், மற்றொன்றினால் ஆசி வழங்க்வும் செய்யும் விஸ்வரூபத்தின் அழகு இதற்கு ஒப்ப வேறெந்தச் சிற்பத் தொகுதியிலும் கிடைக்கவில்லை (இணையம் வாயிலாக மட்டுமே தேடினேன் என்பது வருத்தமே!!). சிலவற்றை பின்னிணைப்பாகத் தருகிறேன். புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் குகைச் சிற்பங்களை இதற்கு ஒப்பாகவும் தனிச் சிறப்புடனும் வியப்பதற்கு இடமுண்டு, ஆனால் மாமல்லையைப் போல் நாமக்கலில் ஒரு பார்வையாளனுக்கு அனுமதியில்லை அங்கு வழிபடப்பட்டுக் கொண்டிருக்கிறது, புதுக் கோட்டையிலோ அழிந்துக் கொண்டிருக்கிறது..

ஆனால் இந்தச் சிற்பத் தொகுதியில் எனக்குக் கிடைக்கும் புனைவுக்கான இடம் இங்கு இல்லையோ என அஞ்சினேன்...... நல்ல வேளை, என் Fictionக்கு இடமளித்தான்.... இரண்டாம் வரிசையில் தலைகீழாக ஈர்ப்புவிசைக்கு எதிராக கையில் குறுவாள் ஏந்தியபடி ஒருவன். பரவசத்துடன் அதை அடுத்த பகுதியில் சொல்ல விரும்புகிறேன்....அதுவரை உங்களுக்கு அவனைப் பற்றி ஒரு துப்பு இந்தப் படத்தில்.
அந்தரத்தில் தொங்கும் பேரரசன்





பிற வாமனச் சிற்பங்கள்:
-------------------------------------------------------------------------------------------------------
நாமக்கல் குகை சிற்பம்
Taken at Rani ki Vav, Patan, Gujarat.





கோசல சிற்பம் -கர்நாடகா





பட்டடக்கல் சிற்பம் - கர்நாடகா





4 கருத்துகள்:

  1. விஸ்வரூபம் என்பது மனிதன் தன் அகந்தையை அழிக்க உதவும் காட்சி, அகந்தை அழியும் போது அவன் இதுவரை வாழ்வில் தீர்மானித்து வைத்த அத்தனை ஒப்பீடுகளும், வேறுபாடுகளும், சுயகௌரவமும் அழிந்து போய் விடும் தான் என்பது ஒன்றுமில்லை என்று தெரிந்து கொள்ளும் பொழுது. தன் கர்வத்தை அழிப்பதற்கு, தான் ஒன்றும் விஷேடமானவனில்லை, தன்னால் மட்டும் எல்லாம் முடிவதில்லை என்று எண்ணுவதற்கு, நாம் சிறியவனாக, வரியவனாக தெரிவதற்கு நம்க்கு முன் ஒரு பிரம்மாண்டம் இருக்க வேண்டும், அந்த பிரம்மாண்டம் நம் கண்களுக்கு புலனாவதில்லை எறும்பினைப் போன்று.


    ஜீவன் ததும்பும் அற்புதமான பகிர்வுகளும் .. படங்களும் ..பாராட்டுக்களும் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி, தொடர்ந்து வரும் உங்கள் கருத்துகள் எனக்கு ஊக்கமளிக்கின்றன

      நீக்கு
  2. Thanks for you comments Mr.Jayakumar.

    Pls go thru the following link for full thread on Mahabalipuram
    http://kalidasanj.blogspot.in/search/label/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

    பதிலளிநீக்கு