ஞாயிறு, 17 நவம்பர், 2013

ஒரு ஆக்ஸிடெண்டல் ஸ்டோரி அல்லது புத்தகப் பார்வை

பஜ்ஜி -சொஜ்ஜி - 47

ஒரு ஆக்ஸிடெண்டல் ஸ்டோரி அல்லது புத்தகப் பார்வை



இந்த புத்தகத்தின் திறனாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அன்றிரவு வீடு திரும்புகையில் நள்ளிரவு மணி 12.30 இருக்கும், இடையில் நண்பர் பாலாவை வீட்டில் சேர்த்து விட்டு என் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். நான் மட்டும் தனியாக தெருக்களின் வழியே குறுக்கு வழியில் சென்று கொண்டிருந்த பொழுது, ஒரு வளைவில் திரும்பியவுடன் வண்டியை நிறுத்திவிட்டேன். நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ.. அந்த நேரம் நான் எங்கிருக்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன்.. ஆம், ஏதோ ஒரு நள்ளிரவில், ஏதோ ஒரு நகரத்தில் (நான்கைந்து- நகரங்களில் நான் தங்கியிருக்கிறேன்) இருக்கிறேன் என்ற உணர்வு மட்டுமே இருந்தது. வேறு எந்த பிரக்ஞையும் இல்லை.
எல்லா நகரங்களுமே கிட்டதட்ட இரவில் இப்படித்தான் ஒரே மாதிரியான விளக்கொளி, நாய்கள், நிசப்தம் என்ற ஒழுங்கில் இருக்கின்றன. நான் எப்படி இந்த இக்கட்டில் இருந்து வீடு திரும்பப் போகின்றேன்.....???

**************************

சுஜாதா எழுதிய புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்கள் என்று ஒரு பத்து பேரிடம் பட்டியலை வாங்கிப் பாருங்கள், பெரும்பாலோனோர்களின் பட்டியலில் ஒரு புத்தகம் இடம் பெற்றிருக்கும் -அது ஸ்ரீரங்கத்து தேவதைகள். அவர் கொஞ்சம் கூட சிரமப்படாமல் எழுதியிருக்க வேண்டிய புத்தகம் இது. அவருடைய Nostalgic பக்கங்கள் தான், ஆனால் ஒரு மனிதன் இழந்துவிட்ட தன் பால்யங்கள், தனக்குத் திரும்பவும் கிடைக்காத சந்தோஷங்கள், காணாமல் போன பழமையின் சுவடுகள் போன்ற சமாச்சாரங்கள், நமக்கு சம்மந்தமே இல்லாத ஒரு அக்ரகாரத்து நினைவுகள் கூட நமக்கு நெருக்கமான புத்தகமாகப் பிடித்துப் போகக் காரணமாயின.

அப்படிப் பட்ட ஒரு புத்தகமாகத்தான் எனது favorite பட்டியலில் சேர்ந்து கொண்டது இந்த புத்தகம். அந்த புத்தகத்தின் பெயர்  “நம்மோடு தான் பேசுகிறார்கள்”. இரண்டு நண்பர்களின் உரையாடல்கள் தான் இந்த தொகுப்பு. இவர்கள் நண்பர்கள் என்பதால் தான் அவர்களுக்கு இடையே இருக்கும் மீடியத்தில் எந்த வித அலங்காரமும் இன்றி(?) எளிமையாக உரையாடல் நடந்தேறக் காரணமாகிறது, ஆனால் அலங்காரம் பற்றிய உரையாடல்கள்  இதில் அதிகம் இருக்கிறது என்பது வேறு விஷயம் (அதைப் பற்றி பல கட்டுரைகள் வந்துவிட்டன). இதைப் பற்றி நான் கூட முன்னரே ஒரு பதிவு செய்திருக்கிறேன். இப்படி இரண்டு ஆத்மார்த்தமான நண்பர்கள் முன் வைக்கும் உரையாடல்களும், அவர்கள் கையாளுகிற மொழியும் தான் நம்மையும் அவர்கள் அருகில் சம்மணமிட்டு அமர வைத்து, கலந்து கொள்ள வைக்கிறது.

அப்படி அவர்கள் நம்மோடு என்னதான் பேசுகிறார்கள்?? என்று கவனிக்கும் போது முதலில் மிகச் சாதாரணமாய் தோன்றுகிற விசயங்கள் தான் நமக்கு அணிவகுத்து நிற்கின்றன. ஆனால் அவை எதற்கு அப்படி ஒருமித்து க்யூவில் நிற்கின்றன என்று மறுமுறை வாசிக்கும் பொழுது தான் விளங்க ஆரம்பித்தது. கடந்து செல்ல முடியாத வலிகள் தான் இந்த தொகுப்பிற்கான உந்துதல் என்று என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அது நவீன உலகில் பிழைப்பதை மட்டுமே வாழ்க்கையாக நம்பிவிட்டு நாம் அப்புறப்படுத்திவிட்ட கலையுணர்வு மற்றும் தொன்மைகள் மீது நமக்கிருக்கும் கடமைகளை எண்ணி அவர்கள் வருந்தியிருப்பதைக் காட்டுகிறது. எவ்வளவு எளிதாக சுவர் ஓவியங்கள் மீது நமது பெயரை எழுதி அதை சேதப்படுத்தும் மனநிலை பொது ஜனங்களுக்கு உருவாகிவிட்டது என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பொறுப்பற்றச் சமுதாயம் மீது, இளைஞர்கள் மீது தமது கோபத்தையும், ஆற்றாமையும் வெளிப்படுத்தி எத்தனையோ எழுத்துகளையோ பார்த்துவிட்டாயிற்று, இவர்கள் என்னப் பேசப் போகிறார்கள் என்று கேட்கிறீர்களா?? ஆம் அவர்களும் மீட்டெடுப்பைப் பற்றித் தான் பேசுகிறார்கள். ஆனால் இந்த மீட்டெடுப்பு ஒரு புரட்சிப் படையை உருவாக்கி நம் அரும்பெரும் பொக்கிசங்களைக் காப்பதோ அல்லது மீட்டெடுப்பதோ அன்று. இயல்பான வளர்ச்சியில் இருந்து, திடீரென்று ஒரு அசுர வேகத்தில் நமக்கு ஏற்பட்ட வளர்ச்சி நிலை, அறிவியல் தொடர்பு சாதனங்கள், மேலைநாட்டு மோகங்கள் கட்டிபோட்டு விட்ட நம் கண்களை அவிழ்த்து விடுவது தான் இந்த மீட்டெடுப்பு.

இங்கேயும் எப்படி உலகமயமாக்கல் பற்றிய உரையாடல் வந்து விட்டதே என்று சலிப்படையத் தேவையில்லை. உலகமயமாக்கல் பற்றி நேரிடையாக அவர்கள் பேசவில்லை, அவற்றின் நல்லது கெட்டது பற்றிய உரையாடல்கள் நடத்தவில்லை, இந்த தொன்மையான தேசம், தன் கலைத் தன்மையை உலகம் முழுக்க வியாபித்திருந்த காலம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே. ஆனால் இந்த உலகமயமாக்கல் தந்திருக்கும் வளர்ச்சியில் நமது மனநிலையில் ஏற்பட்டிருக்கும் அதீத மாற்றங்கள் தான் எவ்வளவு பெரிய இடைவெளிகளை விட்டிருக்கிறது என்று இத்தொகுப்பு பேசுகிறது, நம்மோடுதான்.

செவ்வியல் கலைகளை நோக்கித் தேடியலையும் பயணம் என்பது ஏதோ சில கலைஞர்களுக்கானது மட்டுமல்ல, நமது வாழ்க்கையில், பொருளாதாரத்தில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் அதே சமோசா கடை, அதே காபி கடையைத் தேடிச் சென்று அருந்துவதைப் போலத் தான் என்று நம்மைவிட்டு அந்நியப்படாமல், வாசகர்களாகிய நம்மையும் அவர்கள் தேடலில், உரையாடலில் இணைத்துக் கொள்கிறார்கள் இந்த கலைஞர்கள்.

சமோசா, காபிக் கடை  என்றும் தஞ்சாவூர் கோயில், ஓவியங்கள், பேராசிரியர் இராமனுஜம் மீட்டெடுத்த ஒரு நாடகம் என்று ஆரம்பிக்கின்ற உரையாடல் ரசனை என்றால் என்ன? அலங்காரம் என்றால் என்ன? கலையுணர்வு என்றால் என்ன? thought process என்றால் என்ன? என்ற கேள்விகளைக் கேட்டுவிடுகின்றனர். சரியாக ஒவ்வொரு கேள்வியாய் நாம் பயணிக்கிற வழியும் சுவாரஸ்யமாகத் தான் செல்கிறது, தேர்த் திருவிழா, கோலங்கள், அம்மாவின் கலையுணர்வு, அப்பாவுடன் உரையாடல், பிராண்டிங் பற்றிய உரையாடல், ஸ்ரீதர் படத்தின் வண்ணங்களின் நேர்த்தி என்றெல்லாம் நம்மை ஒரே மூச்சில் வாசிக்க வைக்கத் தூண்டுகின்றன. முதன் முறை வாசிக்கும் போது உங்களுக்கு இந்த சுவாரஸ்யங்கள் மட்டுமே தென்படலாம், இவர்கள் அடுக்கும் கேள்விகளை கோர்த்துக் கொண்டே வந்தால் தெரியும் அவர்கள் மிகவும் திட்டமிட்டு பின்னப்பட்ட உரையாடல்களின் தொகுப்பு தான் இத்தனை எளிமையாகத் தோற்றமளிக்கிறது.

கலை உணர்வு ஒரு மீடியத்தைத் தேடி அது உருப்பெரும் முன் அது எப்படி இருக்கிறது என்ற உரையாடலைப் பதிவு செய்வதற்கான முயற்சி தான் அது, thought process & intellectual thought process பற்றிய பதிவுகள் தான் அவை, ஒரு படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இடையே இருக்கும் இயக்கம் பற்றி கலைஞர்கள் பேசிக் கொள்ளலாம், ஆனால் நம் போன்ற வாசகர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு சமோசா கடை, ஊர்த் திருவிழா, ஸ்ரீதர்,பாலா திரைப்படங்கள், சின்ன யானை வழியாகக் கூட்டி வருகிறார்கள். இப்போது அந்த கேள்வியை உற்று கவனிக்கலாம் அல்லவா??ஒரு படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இடையே இருக்கும் இயக்கம் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவல் எழுகிறது. இது இந்த நண்பர்களின் வெற்றி

இப்புத்தகம் வாசித்தவுடன், முழுமையாக நாம் எத்தனையோ சந்தோசங்களை பறிகொடுத்து விட்டு நிற்கிறோம் என்ற வெறுமை அப்பிக் கொள்கிறது. எங்கேயோ ஓடுகிறோம், தேடிகிறோம், ஏதோ கிடைத்துவிட்டதாக மகிழ்வடைகிறோம், ஆனால் அந்த மகிழ்ச்சி நிறைவானதா அல்லது உண்மையானதா என்றால் இல்லை. அது எப்படி மகிழ்ச்சியானதாக இல்லை என்ற பட்டியலும் இந்த புத்தகத்தில் கிடைக்கிறது.

*1980களில் தஞ்சை சுவோரோவியங்கள் மீது Distember பூசும் பொழுது, சாலையில் நின்று போராடிய மனங்கள் இன்று எந்த அக்கறையும் காட்டாமல் வெறும் இஞ்சினியர்களாய் மட்டும் எண்ணிக்கை காட்டுகிறது.

*மஹாராஸ்ட்டிராவில் 450க்கும் மேற்பட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆர்ட் சொல்லிக் கொடுக்கும் கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. (ஆனால் நம்மூரில்???)

*பரவலாக இயல்பாக இருந்த தொழிலை  அரிதாக்கி, இது அரிதாகிவிட்டது காப்பாற்ற நான் மட்டுமே மிச்சம் என்று கொள்ளையடிக்கும் பண்பாட்டுக் காவலர்கள்

இது போன்ற கேள்விகள் எழுப்பும் தாக்கம் எளிதில் சொல்லி விட முடியாது தான். ஆனால் ஒரு பொறுப்புணர்வைத் தூண்டும், ஆனால் செயல்பாடுகளைக் கோருமா என்கிற கேள்வி Out of the context தான். அதே சமயம் செயல்பாடுகளைத் தூண்டும் என்பது உறுதி, “ஒரு சாதாரணமான, ஒரு இயல்பான, ஒரு சந்தோஷ்மான, ஒரு முழுமையான வாழ்க்கையை வாழக்கூடிய ஒவ்வொருத்தனுமே ஒரு படைப்பாளி, ஒரு நல்ல இயக்குமுடன் கூடிய படைப்பைப் படைப்பவன்”, இதை மனதிற்குள் கோயில் கட்டி இறைவனுக்கு சேவை செய்த முக்கிய நாயன்மார்களுள் ஒருவரான பூசலார் நாயனாருடன் இந்த உரையாடல் முடிவடைகிறது.

அதற்குப் பின்னர் இருக்கும் அரூபம் பற்றிய பதிவுகள் இந்த கருத்துகளோடு முழுதும் ஒத்த நிலையில் தான் முழுமையாக நாம் ஒன்ற முடியும், அது நவீன ஓவியங்களோடு பரிச்சயமாகத் தேவைப்படும் மனநிலை.
*******************************
ஒரு மனநிலை ஓர் இரவில் ஒரு பத்து நிமிடம் என் இயக்கத்தை, என்னை ஒரே இடத்தில் நிறுத்தியிருக்கிறது. நிச்சயமாய் இது மரணம் இல்லை, இது விபத்து இல்லை உறுதியாக இது தியானமும் இல்லை. இந்த புத்தகத்தின் தாக்கம் இல்லை என்று என்னால் சொல்லிவிட முடியவில்லை ( இரண்டு முறை வாசித்திருந்தேன்), ஏனேன்றால் எனக்குள் உரையாடல் நிகழத் துவங்கியிருந்தது. நான் அந்த நேரத்தில் எதை மறந்திருந்தேன் என்பதை உறுதிப் படுத்த வேண்டியிருந்தது. நான் முதலில் என்னை யார் என்று நினைவில் கொள்ள வேண்டுமா?? அல்லது எனது முகவரி எங்கு என்று தெரிந்து கொள்ள வேண்டுமா??

இப்போதைக்கு என் முகவரி மட்டும் போதும் என்று நினைத்தேன், ஆனால் பிரயோஜனம் இல்லை. எங்கிருந்து வந்தோம் என்று கூட மறந்து விட்டது. சரி, நான் யார்?? என்றெல்லாம் கேள்வி கேட்பது எனக்கே ”கொஞ்சம் ஓவரா போறோமா??” என்று கேட்க வைத்தது. கொஞ்ச நாட்களாக SELF பற்றிய விவாதங்களில் வேறு நிறைய கலந்து கொண்டேன், ஒரே ஒரு வழி தான் இருந்தது, நான் மறந்து விட்டது மற்றும் நினைவில் மீந்து கொண்டு இருப்பது இவ்விரண்டிற்கும் இருக்கும் இடைவெளி பற்றி கொஞ்சம் கவனிப்பது

ஆம், சற்று நேரத்தில் அந்த இடைவெளி நன்கு புலப்பட ஆரம்பித்தது, இடையே இருப்பது கொஞ்ச தூரம் தான், வண்டியை எடுத்துக் கொண்டு செல்வோம் என்பது தான் அது. பயணப்பட்டால் வேறு ஏதாவது ஸ்தூலங்கள் நமக்கு நியூரான்களுக்கு SMS அனுப்பி ஞாபகம் கொள்ள வைக்கும் என்று தோன்றியது. சில தெருக்கள் தாண்டும் வரை இல்லாத ஞாபகம், ஒரு விமானத்தில் ஒலியைக் கொண்டு - இது சென்னை கண்டிப்பாக 2008க்குப் பிறகு (2008ல் தான் நான் சென்னை வந்தேன்) என்று முடிவுக்கு கொண்டு வந்தது. பின்னர் கூவத்தின் நாற்றம், ஆஹா இது ஜாஃபர்கான் பேட் என்று ஞாபகம் அளித்தது. அப்படியெ கத்திப்பாரா வரை ஒரே Mental work தான், வண்டியை ஓட்டியது எல்லாமுமே -Sub-conscious தான். கத்திப்பாரா பாலத்தில் இருந்த சோடியம் விளக்கொளி, இரவல் நிலவொலி, மெட்ரோ ரயில் கட்டுமானச் சத்தங்கள், வாகனங்கள் இல்லாத சாலைகள் எல்லாமுமே ஒரு கம்போஷிசனாகி... என்னை மீட்டுத் தந்தன.

“நீ காளிதாசன் எனும் இயற்பெயர் கொண்ட ஜீவ கரிகாலன், படா குண்டன், லாஜிஸ்ட்க்ஸில் வேலை பார்க்கிற, அம்மா உன்னை வசைபாட வீட்டில் காத்திருக்கிறாள், வீட்டிற்கு போனதும் பாலாவுக்கு //am reached//என்று தகவல் கொடு, அந்த நிகழ்வைப் பற்றி ஒரு பதிவிடு , முக்கியமா மூனு ட்ரை ஜாமூன் சாப்பிட்டிருக்கிற ENO போட்டுக்கோ” என்று என்னை சகஜநிலைக்குத் திருப்பியது.

இந்தப் பதிவில் வரும் ஒர் இரவில் நடந்த கதையினை இவர்கள் தொகுப்பில் இறுதியாகப் பேசிய ஓவியத்தின் ILLUSTRATION ஆக நான் செய்திருக்கிறேன் (ஆனால் இது உண்மைச் சம்பவமும் கூட). ஏனென்றால் இந்த தமிழ்ச் சூழலில் ILLUSTRATION பற்றிய உரையாடல்களைக் கூடத் தேடிப் பிடிக்க முடியவில்லை,  நாம் ஏன் ஓவியத்திற்கு ILLUSTRATION ஆக கதைகள் சொல்லக் கூடாது என்று தோன்றியது.

பல புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன, வெகு சில புத்தகங்கள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. நான் கொண்டாடுகிறேன் இந்த புத்தகத்தை, இவர் படைப்புகளைப் பற்றி பேசுவதற்கான பயிற்சியை, அந்த SPACEஇனை அவரிடம் இருந்தே எடுத்துக் கொள்கிறேன், இந்தப் புத்தகம் வழியாக இந்த புத்தகத்தை மீண்டும் வாசிக்கையில், அரூபம் எனும் கடைசிப் பகுதியில் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எழுந்து தான், இந்தப் பதிவை எழுதுகிறேன்.
நன்றி

புத்தகம் : நம்மோடுதான் பேசுகிறார்கள்
ஆசிரியர்கள் : சீனிவாசன் - பாலசுப்ரமணியன்
பதிப்பகம் - வம்சி

5 கருத்துகள்:

  1. “நீ காளிதாசன் எனும் இயற்பெயர் கொண்ட ஜீவ கரிகாலன், படா குண்டன், லாஜிஸ்ட்க்ஸில் வேலை பார்க்கிற, அம்மா உன்னை வசைபாட வீட்டில் காத்திருக்கிறாள் :)

    பதிலளிநீக்கு
  2. உள்ளார்ந்த அருமையான விமர்சனம்..!

    பதிலளிநீக்கு
  3. *
    ஜீவா..!
    ஒரு புத்தகம் குறித்த திறனாய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொள்வது முக்கியமல்ல..
    கூடுதலாக அந்தப் புத்தகத்தை வாங்குவது மட்டும் முக்கியமல்ல..
    அதனை உடனடியாக வாசித்துவிடுவது அதி முக்கியமானது என்று உரைக்க வைக்கும் ஒரு பதிவை.. எழுதி உள்ளீர்கள்.

    Thought Process -ம் அரூபமும் உங்களைப் படுத்திய பாட்டை நினைக்கும்போது..
    இருக்கும் நகரம் குறித்தக் குழப்பம் எனக்கும் எழவே செய்கிறது.

    ஆனால் அது
    வேறொரு Genre -ல் எங்கோ கரை ஒதுங்குகிறது.

    புத்தகத்தை வாசித்த பிறகு நாம் உரையாடுவோம்.

    - இளங்கோ

    பதிலளிநீக்கு
  4. 127 பக்கம் என்பதால் என்னால் முடிந்தது இளங்கோ.... ஹி ஹி ஹி...

    பதிலளிநீக்கு