வியாழன், 25 ஜூலை, 2013

அசுரன் ஆளும் புதிய உலகம் -01 / All Seeing Eye

(புதிய தொடர்)

எல்லாவற்றையும் பார்க்கும் கண்கள் (All Seeing Eye)

 “நாம செய்றது எல்லாத்தையும் மேலெ ஒருத்தன் பார்த்துக்கிட்டு இருக்கிறான்ல அவன் பதில் சொல்லுவான்” என்று கடவுளை நோக்கி நாம் சொல்லுவோமே அந்தக் கண்களைப் பற்றியல்ல இந்தக் கட்டுரை. ஆங்கில திரில்லர் படங்களைப் போல அல்லது ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் போல உலகின் அத்தனைப் பகுதியினையும் ஒரே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரும்பும் ஒரு அசுர சக்தியின் கண்களாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

எதற்காக இதைப் பற்றி பேச வேண்டிய அவசரம் என்றால், அவசரம் தான் இது பேச வேண்டிய நேரம் தான். ஒரு வகையில் எல்லா நாடுகளுமே தம்மை ஒரு வலிமையான நாடாக உலகில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரயர்த்தனம் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்கா, ரஷ்யாவிடம் மட்டும் தான் அந்த சாத்தியம் இருந்தது. ஆனால் பொருளாதார ரீதியாகப் பெரிய முன்னேற்றம் அடைய முடியாத ரஷ்யாவை பின்னுக்கே தள்ளிவிட்டு சீனா எதிரில் நிற்கிறது, மற்ற ஐரோப்பிய, ஆசிய எல்லாமும் இதற்குப் பின்னர் தான் வருகிறது.

National Treasure படத்தில் வரும் இந்த  All Seeing Eye, அதாவது கட்டி முடிக்கப் படாத பிரமிட் ஒன்றின் முகட்டின் மீது அமைந்திருக்கும் இந்த ஒற்றைக் கண்ணானது அமெரிக்காவின் சின்னம் ஆனது. அது அமெரிக்கா கரன்சியான டாலர் நோட்டிலும் இருக்கும் அதன் அடியில் ஒரு வாக்கியம் Novus Ordo Seclorum அப்படியென்றால் "New Order of the Ages". அதாவது இது free mason என்று அழைக்கப்படும் ஐரோப்பிய சகோதர்கள் சபையின் முக்கிய குறிக்கோளான புதிய உலகை படைப்போம் (New Old Order) என்ற கொள்கையை ஒத்து இருக்கிறது. அதாவது இந்த சபையினரால் தான் கனவு தேசமான அமெரிக்கா எனும் நாடே உருவாக்கப்பட்டது என்றும் கூறுவார்கள் (G.W.வாசிங்டனில் இருந்து அமெரிக்கா Free Mason வசம் வந்தது என்று நம்பப்படுகிறது). அதற்கேற்றார் போல் இன்றைய அதிபரான ஒபாமா வரை தனது முதல் அதிபர் உரையில் உலகை நல்ல முறையில் ஆள வேண்டும் என்று தன்னை உலகின் பிரதிநிதியாக பாவிக்கும் வழக்கம் இருக்கிறது.



இங்கு மறுபடியும் அமெரிக்க சினிமாக்களைப் பற்றியும் பேச வேண்டும், பெரும்பான்மையான படங்களில் உலகிற்கு வரும் ஆபத்துகளை எல்லாம் அமெரிக்காவே ரட்சிப்பது போல இருக்கும். இந்த லட்சியத்தில் இன்றைய நிலையில் கிட்டதட்ட ஒரு நூறு ஆண்டுகள் வந்த அமெரிக்காவின் வெற்றிப் பயணத்தில் 2008 பொருளாதாரச் சரிவு மட்டும் அமெரிக்காவிற்கு ஏற்படாமல் இருந்திருந்தால் இன்னும் ஒரு 20 ஆண்டுகளுக்குள் உலகின் ஒரே நாட்டாமையாக அமெரிக்கா வந்திருப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம். ஆனால் அந்தச் சரிவில் அமெரிக்கா பெரிய அளவில் நிலை குலைந்துப் போனது. அங்கிருக்கும் பல குடிமகன்களுக்கும் நமது அரசு, நமது வாழ்க்கை முறை, நமது எதிர்காலம் குறித்த கேள்விகள் எழத் தொடங்கின.

ஒரு சில மனிதர்கள் தன் தேசமாக இருப்பினும் அது செய்யும் கேடுகளை உலகிற்கு வெளிக்கொணர முயற்சித்தனர். அதில் இரண்டு பேர்கள் மிக முக்கியமானவர்கள் :
அசாஞ்சே

ஸ்னொடென்
இந்த இருவரும் தங்கள் உயிருக்கு  இருக்கும் ஆபத்தினையும் பொருட்படுத்தாது அமெரிக்காவின் உண்மை முகத்தை ஆதாரத்தோடு வெளிப்படுத்தி மற்ற நாடுகளை எச்சரித்தனர். இது 2008ல் வந்தப் பொருளாதார சரிவிற்கு பின் இன்னும் எத்தனை தூரம் அமெரிக்கா தன் எதிர்காலத் திட்டங்களை வீரியத்துடன் கொண்டு வர இருக்கிறது என்பதை உணர்த்தியது. தமிழ் ஈழத்தை தகர்ப்பதிலிருந்து, தென் அமெரிக்க வளங்களைச் சுரண்டுவது, சீனாவை சமாளிப்பது, வடகொரியாவைக் கைக்குள் கொண்டு வருவது, இந்தியாவில் தன் கோட்டையை எழுப்புவது என்று பல திட்டங்களை வெளிக் கொணர்ந்தது. இதில் அமெரிக்கா - இந்தியாவில் வைத்திருக்கும் திட்டங்கள் எல்லாம் இதுவரை வெற்றிகரமாகவே செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

இந்தியா போன்ற மனிதவள மிக்க ஜனநாயக நாட்டினைக் கைபற்றுவதிலேயே தனது உலகை ஆளும் கனவில் ஒரு பெரும்பகுதி முடிந்து விடும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை. அதற்கான திட்டத்தில் முதல் படியாக, அமெரிக்கா இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு கையினையும், பாதுகாப்பில் மற்றொரு கையினையும் வைத்து விட்டது.

முதலில் வால்மார்ட், டெஸ்கோ போன்ற சில்லறை வணிக முதலைகள் பத்து ஆண்டுகளுக்குள் நம் நாட்டில் ஒரு பெரிய கபளீகரம் செய்து விடும். அது நம் நாட்டின் பெரும்பானமையான மக்களை சொந்தத் தொழிலிருந்து, Salary class மக்களாக மாற்றிவிடும் என்பதால், நம் நாடு பின்னர் சுதாரித்தாலும் கூட திரும்பி எழுவதற்கு பல வருடங்கள் ஆகலாம், ஏன் அதுவும் கூட முடியாமல் போகலாம்.

மேலும் நடைமுறையில் இருக்கும் அமெரிக்க-இந்திய அணு ஆயுத ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா நம்மீது மேற்சொன்ன இரண்டு வகையான நெருக்கடியும் கொடுக்க முடியம், ஒன்று நம் ஆயுத பலத்தை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் (இது ஒப்பந்ததின் நேரடிச் செயல்பாடு), இரண்டாவது இதற்காக ஒரு பெரும் தொகையினை அமெரிக்க பாண்ட்களில் குறைந்த வட்டி விகிதத்தில் முதலீடு செய்தது மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது. அதாவது அந்த நாட்டின் பெரும் வணிக் மையங்களை அழைத்து வந்து நம் உள்ளூர் சந்தையை சூரையாடச் செய்வது.

அத்தனைக்கும் மேலே மொத்த இந்தியர்களின் கோப்புகளையும் அமெரிக்கா தன் வசப்படுத்தும் முயற்சி தான் All Seeing Eye என்று சொல்ல் வருகிறேன். அது எப்படி சாத்தியம் என்று சொல்கிறீர்களா?? அது தான் Aadhar அட்டை.
அந்நியன் படத்தில் விக்ரம் சொல்வது போலே “உங்க மொத்த Databaseம் எங்கிட்ட இருக்குது டா!!!” என்று அமெரிக்கா சொல்லாத செய்தியைத் தான் ஸ்நோடென் சொல்கிறார்.

அது எப்படி சாத்தியம்  என்கிறீர்களா ?? 

அதற்கு அடுத்த பகுதி வரை காத்திருங்கள்
ஜீவ.கரிகாலன்


2 கருத்துகள்: