சனி, 11 ஜூன், 2016

டைரிக் குறிப்பாய் மாறிய நாளொன்றில்

ஆரவாரமாகச் செல்லும் புத்தகக்கண்காட்சி இந்த வருடம், அப்படி இப்படி என கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. இந்த ரெண்டு நாள் சேல்ஸ் தான்.
முட்டி தேய வாசகனாய் இருந்த சுதந்தரம் என்ன புத்தகம் வாசித்தாலும் யாரும் கேட்கப்போவதில்லை. மொத்த காசையும் காமிக்ஸுக்காகவே கொட்டிய ஒரு வருடத்திய புத்தகக் கண்காட்சியும், மற்றொரு வருடம் கல்வெட்டு சார்ந்த புத்தகளை வாங்கியதும் நினைவில் வந்து போனது. பணம் கொடுக்காமல் நட்புக்காகக் கொடுக்கும் புத்தகங்களை வாங்கத் தயக்கமாக இருக்கிறது, பதிப்பாளனாக நண்பர்களோடு சேர்ந்து பத்தாவது புத்தகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பும், காதலும் இப்படி புத்தகங்களோடு வாழ்க்கையை மாற்றிவிட்டது. ஒருவேளை இவைகள் நிரப்பிக்கொண்டிருக்கும் பள்ளம் பெரிய ஆபத்தானதாகக் கூட இருந்திருக்கலாம். நிரம்ப இன்னும் நிறைய இடமிருக்கிறது. சென்ற வருடமே ஒரு கதைத் தொகுப்பு கொண்டு வந்திருக்கலாம். இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது. பதிப்பாளனாக மாறிவிட்டதால் என்னுடைய எழுத்தைப் பதிப்பிப்பதில் சிக்கல் வந்து விடுகிறது. ஆனால் ஒவ்வொரு நூலும் என் புத்தகமாகவே பார்த்து வருகிறேன், அது தான் நூலின் தயாரிப்பில் உள்ள ஈடுபாடாக இருக்கிறது.

ஏதோ சொல்ல வந்தும், சொல்ல முடியாமல் போவதாய் நினைக்கிறேன்
எழுத்து, வாசிப்பு எல்லாமே குறைந்து போனதாய் எண்ணும் நாளொன்றில் அடுத்த வருடம் பற்றி யோசித்தபடிக் கழிந்தது. என் இன்றைய நேற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக