வியாழன், 12 ஜூலை, 2012

புதிய நீதிக் கதைகள் - பாகம் 3 /டெலிபோன் பூத்


புதிய நீதிக் கதைகள் - பாகம் 3

"சொல்லுங்கண்ணே அடுத்த நீதிக் கதை கேட்டு நாளாச்சுண்ணே   "
"பிரபாகர்,முருகன்,குண்டன் என்று  மூன்று பேர் இருந்தனர் " 
"மறுபடியும் அவுங்க தானா?? போர் அடிக்குது, சரி சொல்லுங்க அந்த லூசுப் பசங்க என்ன செஞ்சாங்க ??"

                  **************************************
பிரபாகர்,முருகன்,குண்டன் மூன்று பேருமே கில்லாடிகள் தான், ஆனால் அவர்களில் குண்டன் சற்று திறமை குறைந்தவன்.  ந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் ஐந்து ஆண்டுகளில் மொபைல் போன் என்பது மிகப்பெரிய விஷயம், பிரபாகர் வைத்திருந்தான். ஒரு ஏரியல் கம்பி உடைய செல் போனை தன் கல்லூரியின் கட்டணத்தை அதிகமாக வீட்டில் காட்டி லபக்கியிருந்தான், வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளையான முருகனோ அயல் நாட்டில் இருந்து வரும் தான் தந்தையிடம் கெஞ்சக் கூத்தாடி 6600 எனும் அதிநவீன மொபைல் போனைக் கொண்டு வந்து அந்தக் கல்லூரியையே ஆச்சரியப் படுத்தினான்.

ஆனால் அந்த இரண்டு பயல்களும் செல்போன் வாங்கினார்கள் தவிர அதை உபயோகிப்பதில்லை அப்போது இன்கமிங்கே கட்டணம் என்பதால் அவர்கள் அதை ஒரு ஆபரணமாகத் தான் அணிந்து வந்தார்கள். மற்றபடி அவர்கள் கடலை எல்லாம் பப்ளிக் டெலிபோன் பூத்தில் தான். முதலில் முருகனுக்கு தான் பெண் தோழிகள் கிடைத்தனர், பினனர் பிரபாகரனுக்கு. இவர்களுக்குப் பின் பெஞ்சில் அமர்ந்திருந்த குண்டனும்( ஆண்கள் பள்ளியிலேயே படித்தவன் ) "பக்கத்து இலைப் பாயசமாவது கிடைக்குமே" என்று அவர்களோடு ஒட்டிக் கொள்ள விரும்பினான்.

"படிக்கிற பிள்ள, நல்ல பையன் மாதிரி இருக்கிறான்" இவன நம்ம கூட்டணி சேர்த்துக்கலாமா என்று அந்த இருவரும் யோசிக்கும் போது, சில கிளுகிளுப்பான சர்தார் ஜோக்குகளை சொல்லி மயக்கினான்.
அவர்கள் முழு ஒப்புதல் கொடுக்கும் முன்பே அவர்களின் நண்பன் என தன்னையும் சேர்த்து அழைத்துக் கொண்டான்.

அதற்கு பின் கல்லூரி ஆசிரியர்களோ , அந்த வகுப்புப் பெண்களோ, மற்ற வகுப்பு பெண்களோ பார்க்கும் பொழுது அவர்கள் மூவர்களாகவே இருந்தனர். தியேட்டரிலோ, இன்டர்நெட் சென்டரிலோ, டவுன் பஸ்சிலோ, காலேஜ் கேண்டீனிலோ, டீக் கடையிலோ, மங்களம சாரின் கடையிலோ, ஏன் பாழாய்ப் போன அந்த வகுப்பறையிலோ கூட மூவரும் ஒன்றாகவே அந்த உலகத்திற்கு காட்சி அளித்தனர். ஒரு இடம் தவிர , அது தான் பப்ளிக் டெலிபோன் பூத்தில்.

ஒவ்வொருவரும் தனித்தனியாகத் தான் டெலிபோன் பூத்திற்கு செல்வார்கள், காரணம் கீழே :
1 .முருகனின் பெருமிதம் , "பக்கத்திலிருந்தால் தன் வித்தைகளைக் கற்றுக் கொள்வார்கள்" என்று தனியாகவே பேசி வந்தான் .
2 .பிரபாகரின் எச்சரிக்கை, "அவன் தன் தோழிகளிடம் பேசும்பொழுது யாராவது இருந்து தன்னை ஏதாவது சீண்டிவிட்டால் என்ன செய்வது என்று பயம் ( அந்த குண்டன் அவனை வேண்டும் என்றே பெண்களை அருகில் வைத்துக் கொண்டு அவன் தலையில் அடிப்பது, கிள்ளுவது என்று அவனை உசுப்பேத்துவான், அப்படி செய்தால் எந்த இடம், பொருள்  என எதையும் பார்க்காமல் கெட்ட வார்த்தைகளை உதிர்ப்பான் பிரபாகர், அது அவன் பலவீனம்)
3 .குண்டன் -  இந்த வித்தையில் ஜாம்பவான்களின் அறிவுரை கேளாமல் தனக்கு எல்லாம் தெரியும் என்ற அகம்பாவத்தில், அவன் பல முறை போனில் தன் தோழிகளுக்கு அழைக்கும் போது அவர்களின் அண்ணன் மார்களிடமோ, தகப்பன் மார்களிடமோ மாட்டிக் கொண்டு அடிக்கடி திட்டு வாங்கும் வழக்கம் உடையவன்.

மூவரும் இதில் மட்டும் தங்கள் ரகசியங்களை காத்து வந்தனர், அவர்கள் வாழ்க்கையில் கல்லூரிக் காலங்களுக்குப் பிறகாவது தங்கள் விசயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம்,அதையும் அவர்கள் செய்யவில்லை. இதனால் அதிகம் பாதிக்கப் பட்டவன் குண்டன் , ஆனால் அது அவன் திருமணத்திற்குப் பின் தான் நடந்தது. இதற்கும் அதற்கும் என்ன சமபந்தம் என்று கேட்குறீங்களா ?? சொல்றேன்.

பின்னே, 'கட்டிய மனைவிடம் போனில் பேசிக்கொண்டிருந்த  குண்டன், அப்பொழுது தன் மனைவியுடைய அப்பா அவர்களுடைய வீட்டிற்கு திடீரென்று வந்ததை ,"அப்பா வந்துட்டாரு " என்று சொல்ல, அதற்கு உடனேயே ""அய்யய்யோ அப்போ போன வச்சுடு நாளைக்கு பாத்துக்கலாம்" என்று அழைப்பைத் துண்டித்து விட்டானே ' இதை நீங்க என்னன்னு சொல்வீங்க??. குண்டன் மற்ற இவர்களின் அறிவுரையைக் கேட்டிருந்தால்  இப்படி ஆயிருக்குமா ??? 
                       *********************
"என் குண்டனுக்கு என்ன ஆச்சுண்ணே!  "
"அவ்ளோ தாம்பா! கதை முடிஞ்சு போச்சு  -no space, இனி கதைக்கான நீதி "

நீதி: தன் நண்பர்களிடம் தன் கெத்தை விட்டுக் கொடுத்து அவர்கள் அறிவுரைகளைக் கேட்பவன்  எப்பொழுதும் மனைவியின் உதைகளுக்கு ஆளாகமாட்டான்.
        

வியாழன், 5 ஜூலை, 2012

மின்னல்

இருளில் தொலைந்த 
பூமியின் நிர்வாணத்தை 
மின்னல் கீற்றுகள் 
வெளிக் கொணர்கின்றன

செவ்வாய், 3 ஜூலை, 2012

முகநூல் கவிஞன்

ஓலைச் சுவடியில் இருந்து, எழுத்துகள் அச்சில் ஏறும்போதும் இப்படித் தான் இருந்திருப்பார்களா 
இந்தப் பெருமக்கள் ?? முகநூல் கவிஞன் என்று தீண்டத்தகாதவனைப் போல் பார்க்கிறார்கள்.

முகநூல் வந்த பின் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது , படைப்பாளிக்கும் - வாசகனுக்கும் உண்டான இடைவெளி குறைகிறது , போலிகள் எளிதில் விமர்சிக்கப் படுகின்றன, உலகம் முழுக்க வாசகர்கள் இணைவதற்கு ஒரு தளம் கிடைத்துள்ளது. வெகு சீக்கிரம் அவனுக்கு பல தளங்களில் வாசிப்புகள் சாத்தியமாகின்றன, அவனது சந்தேகம் தீர்த்து வைக்கப் படுகின்றன .

இதில் என்ன பிரச்சனை, அதே சமயம் அவன் சீக்கிரமே எழுத முயல்கிறான், அதைப் படைப்புகள் என்று நினைக்கிறான், உடனே இலக்கியம் பற்றிப் பேசுகிறான், அது தானே உங்கள் பிரச்னை ?? படைப்புகள் என்ன தான் உருவானாலும், சிறந்த படைப்புகள் தானே தொடர்ந்து நிற்க முடியும் ஒருவன் அரைகுரயைத் தெரிந்தால் அவன் எளிதாக இங்கும் ஓரங்கட்டிவிடப் படுவான், அப்படியிருக்க உங்களுக்கு ஏன் இத்தனை கோபம் , வஞ்சம்??

இது பரிணாமம், நவீனத்தை நம்பினால் இதையும் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் ஆப்பிள் ஸ்டோரில் ஒரு கவிஞர் வெளியிடப் போகும் கவிதைத் தொகுப்பு உங்கள் வயித்தெரிச்சலைக் கிளப்பும் அபாயம் இருக்கிறது.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

மரணம்

மரணம் என்பது ஒரு நிறைவு.

மலர் உதிர்ந்தாலும் அந்த மரணமானது, அதன் மகரந்த சேர்க்கையை முடித்ததிலும், நறுமணம் வீசியதிலும், நந்தவனத்தில் வீற்றிருப்பதும் நிறைவடவதே அதன் மரணம்.
இருளை அகற்றி ஒளி பாய்ச்சிய மெழுகுவர்த்தியும் , விளக்கும் அணைந்து போவது தான் அதன் நிறைவு .இல்லையேல் தீபத்தின் அருமையும், பூக்களின் நறுமணத்தையும் நாம் நின்று நோக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மனிதன் மரணம் அற்றவனாக இருந்தால் அவனுக்கு கலைகள் தேவையில்லை, ஓவியம், கவிதை, சிற்பம், இசை என்று எதுவுமே தேவையற்றது ஆகிவிடும்.ஆகவே தான் கலைகளினால் ஒருவன் இறந்த பின்னும் வாழமுடிகிறது மரணம் தான் நிறைவு, மரணம் தான் வாழ்வின் முழு அர்த்தம், மரணம் தான் கலைகளின் ஆதாரம்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்

 வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்னவனின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று நான் அப்போது உணர்ந்தேன். கி.ரா தொகுத்த கரிசல் கதைகளில் அந்த வலி மிகுந்திருந்தது. வள்ளலார் தான் வாழ்ந்து வந்த மண்ணில் வாடும் பயிரைக் கண்டு தானும் வாடியிருந்தார். அதுபோலவே நீரின்றி வற்றி போகும் பயிர்களைப் பார்ப்பது என்பது எங்கள் மண்ணிற்கு ஒரு உரிப் பொருளானது என்று சொன்னால் அது மிகை அல்ல.  இன்று வரை எத்தனையோ நூற்றாண்டுகளாய், ஒவ்வொரு வருடமும் தனது காட்டிலோ, தோட்டத்திலோ தன் விவசாயம் வீணாகிப் போனதைப் பார்க்கும் நிலைமை இம்மண்ணில் தான் தொடர்ந்து இருந்து வருகிறது.


     ஒவ்வொரு வருடமும் அங்கு வாடும் பயிர்களோடு அவர்கள் நம்பிக்கையும், வசந்தமும், எதிர்பார்ப்புகளும், மகிழ்ச்சியும் சேர்ந்தே வாடுகிறது. அம்மண்ணில் யாரோ ஒருவன் அவ்வப்பொழுது
அந்த துயரத்தில் தன் உயிரையும் துறந்து கொண்டு தான் இருக்கிறான். அவன் உழைப்பிற்கும், நம்பிக்கைக்கும் பதில் சொல்ல வேண்டிய இயற்கை இன்னும் கடனாளியாய் தான் இருக்கிறது. இத்தனைக்கும் இயற்கைக்கு அதிகம் மதிப்பு தரும் மண் எங்கள் மண் தான்.

   நதியோடும் வண்டல் மண்களில் இயற்கையின் கொடையை மக்கள் எப்பொழுதும் போற்றுவதில்லை, இயற்கையோடு இயைந்த வாழ்வுகொண்ட மலைவாழ் மக்கள், அவ்வளத்தில் வாழ்கிறார்களே தவிர அதன் அருமையை அவர்கள் மலைகளிலிருந்து கீழிறங்கும் வரை உணர்வதில்லை, மீனவனும் , எம்மண்ணில் வாழ்பவனும் தான் நித்தமும் இயற்கைத் தொழுகிறான். அவன் ஒவ்வொரு பொழுதும் இயற்கையின் தீர்மானத்தில் தான் விடிகிறது. இவர்களில் மட்டும் தான் கற்றறிந்த மனிதனும், கடைநிலை மனிதனும் கூட இயற்கையை முழுதுமாக ஒரே மாதிரி நேசிக்கிறான்.
       எம் மண்ணில் வாழும் மக்களைக் காட்டிலும் மழையை அதிகம் நேசிப்பது யார்?, எப்பொழுதாவது பெய்யும் மழையில் ஒரு ஊரே ஆனந்தக் குளியல் போடுவதை நீங்கள் பார்த்திருக்கீர்களா? அவனுக்கு மட்டும் தான் மழையின் கடைசித் துளி வரை தேவையாகிறது. ஆனால் அம்மழை கூட சில நேரம் கரிசல் மண்ணிற்கு கரிசனம் காட்டுவதாய் கடுமையாய் பொழிந்து மறுபடியும் அவனை ஏமாற்றிடும்,கண்மாய்கள் உடைபட்டு அவனை மறுபடியும் பழிவாங்கும், பாளம் பாளமாய் பெயர்ந்துக் கொண்டிருக்கும் நிலத்தில் அவன் கனவு கண்டிருந்த திருமணம், திருவிழா சடங்குகள், வைத்தியம், கடன், வீடு என்ற ஆசைகள் எல்லாம் பொய்த்துப் போகும். அவன் எல்லாவற்றையும் தாண்டி பல நூற்றாண்டுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான், அவன் வீரம் மிகுந்தவன், உழைக்க அஞ்சாதவன், மண்ணை நேசிப்பவன், குடும்பத்திக்காக கரைந்து கொண்டே இருப்பவன், தண்ணீருக்காக அலைந்து கொண்டே இருப்பவன்,அவன் கரை படிந்த வேட்டிக்கு நேர்மாறாய் வெண்மையான இதயம் படைத்தவன், ஆனால் எப்பொழுதும் சுரண்டப் படுபவன்.


   ஒரு குடம் நிறைக்க ஒரு மணி நேரம் நீர் இரைக்கும் நிலை, சென்ற நூற்றாண்டுவரை எல்லோர் வீட்டினிலும் இருந்தது, எங்கள் கரிசல் மண்ணின் பெண்கள் தான் மிக மென்மையான இதயமும் மிகக் கடுமையான கரங்களும் கொண்டிருப்பார்கள், அவர்களின் கரங்களை கந்தகமும், அரிவாளும், வாளிக் கயிறும் நித்தமும் கடுமையாக்கிக் கொண்டே இருக்கும். அன்று, நீர் இரைக்கும் பொழுது அறுந்து விழும் வாளிகளை எடுப்பதற்காகவே முள் சங்கிலியை வாடகைக்கு விடும் தொழில் எங்கள் வறுமைக்கும், உழைப்பிற்கும் மற்றொரு சாட்சி.

                 தேய்ந்து போன வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் உங்கள் நகரங்களில் பிழைப்பதற்காக பல இடங்களில் அண்டியிருபார்கள், அவர்கள் எந்தத் துறையிலும் இன்று நல்ல நிலையில் இருப்பார்கள் . காரணம், பல தலைமுறைகளாய் அவர்களுக்குள் மாறிக்கொண்டிருக்கும் மாபெரும் சொத்தான உழைப்பு. இயற்கை காய்ந்தாலும், பெய்தாலும் அஞ்சுகிறவன், அவனுக்கு தெரிந்தது எல்லாம் உழைப்பு மட்டுமே. இன்று இயந்திரங்களின் உதவியால் வர்கள் கடும் உழைப்பிற்கு சற்று தளர்வு கிடைத்திருந்தாலும் இன்னும் கிராமங்களில் வாழும் அவர்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் மற்றவர்களை விட.

        எம் மக்களின் கண்ணீர் துளிகளுக்கும் குறைவான தண்ணீர்த் துளிகள் கொண்ட கரிசல் மண் இதுவரை எத்தனையோ வள்ளலார்களை ஈன்றெடுத்தது, நான் கூட என் சிறுவயதில் கிணற்றில் ஏற்றம் போடும் ஒரு வள்ளலாரை எங்கள் வீட்டு அருகில் பார்த்துள்ளேன், அவர் கண்ணீரோடு எனக்கு பல கதைகள் கேட்கக் கிடைத்தன. அது, என் நகரத்தில் ஆழ்குழாய் கிணற்றில் நீர் வற்றும் நேரத்திலும், மழைத் துளி என் மீது பட்ட பொழுதிலும், யாரோ ஒருவர் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்த செய்தியை வாசிக்கும் பொழுதும், வள்ளலாரின் இந்த "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று கேட்கும் பொழுதும் வந்து போகின்றன.