செவ்வாய், 29 நவம்பர், 2011

தலைவன் இருக்கிறான்

சேலம்: சிங்களப் பெண்ணின் கற்புக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் என்று கவிஞர் அறிவுமதி கூறினார்.

வீரம், அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துறையிலும் இல்லாத மனித நேயங்களை நாம் விடுதலை புலிகள் இயக்கத்தில் மட்டும் பார்க்க முடியும்.

திருமணமான சில மாதங்களில் போருக்கு வந்த ஒரு சிங்கள் வீரன், விடுதலைப் புலிகளிடம் சிறைபட்டுவிட்டான். கைது செய்யப்பட்ட அந்த வீரன் புலிகளின் சிறையில் சில வருடங்கள் இருந்தபோது அவன் தன்னுடைய இளம் மனைவியை சந்திக்க வேண்டும் என்று இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு கடிதம் எழுதினான், அந்த கடிதம் தலைவரிடம் சென்றது.

தலைவரிடம் அதற்கு அனுமதியும் கிடைத்தது. குறிப்பிட்ட ஒருநாளில், சிங்கள் வீரனின் மனைவி அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்தார். தந்து கணவனை சந்தித்து பேசினாள், மாலை வரை இருவரும் குடும்ப விஷயங்களை பேசினார்கள். மாலையில் அனுராதபுரத்துக்கு செல்லும் ரயில் நிலையத்துக்கு அந்தப் பெண்ணை புலிகள் அழைத்துச் சென்றனர்.

ஆனால், ஏதோ காரணத்தால் அன்று அந்த ரயில் வரவில்லை. என்ன செய்வது?, ஒரு பெண்ணை அதுவும் சிங்கள இனத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் மனைவியை எங்கு தங்க வைப்பது? என்று பொறுப்பாளர்கள் தடுமாறினார்கள்.

தகவல் தலைமைக்கு சென்றது, அந்த பெண் தனக்கு எந்த இடம் பாதுகாப்பானது என்று கருதுகிறாளோ அந்த இடத்தில் தங்க வையுங்கள் என்று தலைவர் சொல்லிவிட்டார். அந்த பெண் தன் கணவனுடன் தங்க விரும்பினாள். அவளின் விருப்பப்படியே கணவனும் மனைவியும் தங்கினார்கள்.

இரவு முழுவதும் கணவனுடன் தங்கிய அந்த பெண், மறுநாள் மகிழ்ச்சியுடன் தன்னுடைய உறவினர்கள் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டாள். ஆனால், மூன்று மாதத்திற்கு பிறகு புலிகளின் தலைமைக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், தான் கணவனை சந்திக்க வந்தபோது மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தாள் அந்த பெண்.

கூடவே தான் கருவுற்று இருப்பதாகவும், ஆனால் இந்த கரு எப்படி உருவானது என்று உறவினர்கள் கேட்டால் நான் என்ன செய்யட்டும், நானும் எனது கணவனும் சேர்ந்து இருந்ததால் தான் இந்த கரு உருவானது என்று சொன்னால் இந்த உலகம் நம்புமா?. இதனால் என் நடத்தையின் மீது கெட்டபெயர் உருவாகுமோ? என்று தான் பயப்படுவதாக சொல்லி கடிதம் வந்தது.

அந்தப் பெண்ணின் கடிதம் தலைவரின் பார்வைக்கு போனது, ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கல் சாதாரணமானதல்ல. இதை தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்த தலைவர் மீண்டும், அந்த பெண்ணுக்கு கடிதம் எழுதினார்.

நீ, உனது மாமியார் மற்றும் உங்கள் ஊரின் பெளத்த மத குரு மூவரும் குறிப்பிட்ட இந்த நாளில் கிளிநொச்சிக்கு வாருங்கள் என்று அந்த கடித்தத்தில் எழுதப்பட்டிருந்தது.

அதன்படி கிளிநொச்சிக்கு வந்த அந்த மூவரையும் அழைத்து சென்று அந்த சிங்கள் வீரனிடம் விட்டார்கள், தாங்கள் இருவரும் ஒருநாள் இரவு சேர்ந்திருந்தது உண்மை என்றும் தன்னுடைய மனைவியின் வயிற்றில் வளரும் கரு என்னுடையதுதான் என்றும் தான் தாயிடமும், மத குருவிடமும் சொன்னான் அந்த சிங்கள ராணுவ வீரன்.

என் கணவன், மாமியார், மத குரு மூவரும் உட்கார்ந்து பேசி விட்டாதால் எனக்கு குடும்பத்தில் ஏற்ப்பட்ட களங்கம் தீர்ந்துவிடும். ஆனால், ஊரில் உள்ளவர்கள் எப்படியும் என்னுடைய நடத்தையை தவறான கண்நோட்டத்தில் தான் பார்ப்பார்கள், பேசுவார்கள் நான் என செய்யட்டும் என்று அந்த சிங்கள பெண் கண்ணீரோடு நின்றாள்.

அந்த சிங்கள பெண்ணின் கற்புக்கு களங்கம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் தலைவர். உலகின் எந்த நாட்டு ராணுவத்திலும் செய்யாத ஒரு காரியத்தை செய்தார். ஆமாம், அந்த ராணுவ வீரனை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்தார்.

பெண்ணின் கண்ணீருக்கும் கற்புக்கும், நெரிக்கும், மதிப்பளிக்கும் வழக்கம் தமிழில் உள்ள புறநானூற்று பாடல்களில் மட்டுமே நான் கண்டுள்ளேன், ஆனால் பிரபாகரன் என்ற தலைவரிடம் அதை நேரில் கண்டுள்ளேன் என்றார் அறிவுமதி.





தலைவன் இருக்கிறான் 

திங்கள், 28 நவம்பர், 2011

ஆட்டோகிராப் ( நிறைவுக் கதை) - நிலவுக்கும் களங்கம்


            நிசப்தம் குடிகொண்டிருந்த அந்த அறையின் அமைதியை குலைக்கும் விதம் அந்த கருப்பு நிற பழைய டெலிபோன் சப்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அன்று தனக்கு மிகவும் மோசமான நாள் என்று தன்னைத் தானே சபித்துக் கொண்டும் , அந்த அழைப்பு தனக்கு வரும் என்று தெரிந்ததால், பயத்துடன் காத்திருந்த அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை நீலா மெதுவாக போனை எடுத்து காதில் வைத்தாள்.

              நீலா- தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்று ஒரு மாதம் தான் ஆகியுள்ளது ,  அம்மாவட்டத்தில் விருதிற்காக பரிசீலிக்கப்பட்ட பல ஆண் ஆசிரியர்களையும் தாண்டி அவ்விருது நிலாவை கௌரவப்படுத்தியது. அப்பொழுது மாவட்டக் கல்வி அதிகாரியையும் மீறி கல்வி அமைச்சரிடம் சென்று இடைநிலைப் பள்ளியினை, உயர்நிலைப் பள்ளியாக்க நீலா டீச்சர் எடுத்த போராட்டங்களும், அவள் மீது வளர்ந்து வந்த செல்வாக்கும், இன்று அந்த அதிகாரி நீலாவை வஞ்சம் தீர்ப்பதற்கு மேலும் ஒரு வாய்ப்பை அமைந்தது . பள்ளியின் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து ஒரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தார்.


எல்லா ஆசிரியர்களும் பள்ளியின் பெயர் ரொம்ப கெட்டுப் போனதாய் வருத்தம் தெரிவித்தனர்.இதில் சண்முகம் வாத்தியார் தன் வெறுப்பினை வெளிக்காட்ட யோசனை சொல்வது போல ஆரம்பித்தார்,
"பேசாம,  நம்ம பள்ளி இடைநிலைப் பள்ளியாகவே இருந்திருக்கலாம்" என்று புலம்ப,

"உங்க ஊருக்கு ஹைஸ்கூல் வந்ததனால தான் இப்ப கெடுதலாக்கும்? " என்று காட்டமாய் அவனைப் பார்த்து நீலா  கேட்டாள் ,

அதற்கு - ஆறுமுகம் வாத்தியார், "ஆமா மேடம், அந்த 2 பேரும் வீடு திரும்பலேன்னா, ஜாதிக் கலவரமே வந்துருக்கும் தெரியுமில்ல " என்று எகத்தாளமாய் பேச,

"சண்முகம் சார்! உங்க வகுப்பு மாணவி அவள், நீங்க எல்லாரையும் ஒழுங்க கண்காணிக்காம இப்போ பொறுப்பில்லாம பதில் சொல்றிங்க" என்று சற்று கோபாமாகவே அவனைப் பார்த்துக் கேட்டாள்.

 "ஆமா, நான் தான் காரணம், இனிமே ஒவ்வொரு பொண்ணு வீட்டுக்கும் போய் வாட்ச்மேன் வேலை தான் பார்க்கணும் " -சண்முகம் வாத்தியார்,

மேலும் ,"ரெண்டு ஸ்கூலா பிரிச்சிரிந்தா இந்த அவலம் வந்திருக்குமா? , இல்லைன்னா ,எட்டாம் வகுப்புக்கு மேல பசங்கள மட்டும் வச்சு பள்ளிக்கூடம் நடத்தியிருக்கலாம், அதை விட்டுட்டு இந்த மலைக்காட்டு கிராமத்துல வயசுக்கு வந்த பொண்ணுங்கள எல்லாம் படிக்க வச்சு இப்ப என்ன பெருசா மாறப் போகுது?, இதுல இவுங்களுக்கு கேம்ஸ் பீரியட் வேற, அந்த பெருமாயி இருக்காளே, அவளுக்கு  மனசுல பெரிய பீ.டி உஷான்னு நினைப்பு, அரை டவுசரு போட்டுக்கிட்டு ஓட்டப் பந்தயம், கபடின்னு ஊர் ஊரா சுத்துவா- எனக்கு அப்போதே பயம் வந்துச்சு "

"சார்! நீங்க உங்க பசங்கள சரியா கவனிக்காம, ஏதேதோ காரணம் சொல்லறிங்க? இனிமேலாவது நாம் என்ன செய்யலாம்னு சொல்றீங்களா? நாம் எடுக்கும் முடிவுகள் பற்றி நான் D.E.O கிட்ட சொல்லணும் " நீலா,

"மேடம் மறுபடியும் நீங்க எம்மேலேயே பழிய சுமத்துறிங்க, நீங்க தான் வயசுக்கு வந்த பெண்களைக்கூட விளையாட அனுமதிக்கிரிங்க, நீங்க தான் கண்டிப்பா நடந்துக்கணும். அவுங்க வந்தோமா படிச்சோமான்னு தான் இருக்கணும் " என்று மீண்டும் நீலா மீதே குற்றம் சுமத்தினார்.

           அந்த மீட்டிங்கில் ஒரு முடிவு எடுக்கப் பட்டது , பிரேம், பெருமாயி இருவரையும் பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர், ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ளவோ தடை செய்யப்பட்டது , சந்தேகம் வருமாதிரியான மாணவர்களைப் பற்றி ஒரு பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது . அப்படி சந்தேகத்தில் உள்ளோர்கள் யாவரும் பாரபட்சமின்றி 'களை' எடுக்கப் பட வேண்டும் என்று சண்முகம் பிடிவாதமாய் நின்றார்.


           அப்படி தயாரிக்கப் பட்ட பட்டியலில் முதல் ஆளாக வெண்ணிலா இருந்தாள், வெண்ணிலா நன்றாகப் படிப்பாள், பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி என்று எல்லா போட்டிகளிலும் முதலிடம் வாங்குவாள், பெருமாயியின் தோழி, சக விளையாட்டு வீராங்கனை. மேலும் ஒரு முக்கிய காரணம் காட்டி அவளைப் பள்ளியில் இருந்து நீக்கிவிடுமாறு சண்முகம் வாத்தியார் கூறினார்.

            அந்தக் காரணத்தை அறிந்த நீலாவோ கோபத்ஹ்டின் உச்சிக்கே சென்றாள் பின்னர் சற்றுக் கட்டுப்படுத்திக் கொண்டே, "அவளை டிஸ்மிஸ் செய்வது அவள் வாழ்க்கையை பாழாக்கி விடுமே , நாம் வேண்டுமானால் அவள் பெற்றோர்களை அழைத்துப் பேசலாமே" என்று நீலா சொல்ல,

"அவளை பள்ளிலேயே வச்சிங்கன்னா இன்னும் பல பிரச்சனைகள சந்திக்க வேண்டியது வரும்" என்று ஆணித்தரமாக எச்சரித்தார்.

             சண்முகம் வாத்தியார் மற்ற எல்லா ஆசிரியர்களையும் வெண்ணிலாவை பள்ளியில் இருந்த வெளியேற்ற வேண்டியதன் அவசரத்தை விளக்கினார்.எல்லோரும் ஒப்புக் கொண்டனர், நீலாவின் நிலைமையோ மிகவும் தர்ம சங்கடமானது, வெண்ணிலா நல்ல பெண், படிப்பிலும் கெட்டி இப்படி எதுவும் செய்ய மாட்டாள் என்று அவளுக்கு ஒரு திடமான  நம்பிக்கை இருந்தது , எல்லாவற்றிற்கும் மேல் சண்முகம் வாத்தியாரின் கொடூர எண்ணங்கள் அவளை மிகவும் எரிச்சலடையச் செய்தன.  வெண்ணிலா பெருமாயியின் தோழி என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமல்லாது, ஒரு பூப்படைந்த பெண் தொடர்ந்து 6 மாதங்கள் பள்ளிக்கு வருவது அவருக்கு சாதரணமாகத் தெரியவில்லை, அந்த பட்டிக்காட்டுப் பள்ளியில் பூப்படைந்த பெண்கள் யாவரும் அந்த நாட்களில் ஒன்றிரண்டு நாள் விடுமுறை எடுப்பது வழக்கமாய் இருந்தது, இதை எப்பொழுதும் கூர்ந்து கவனிக்கும் சண்முகம், ஆறு மாதங்களுக்கு முன்னரே அவள் பூப்புனித நீராட்டு விழாவுக்கு சென்றிருந்ததால், அவள் விடுப்பின்றி வாரத்தின் ஆறு நாட்களும் வருவது சந்தேகத்தைக் கொடுத்தது. அவர் சொன்னதை மற்ற ஆசிரியர்களும் ஆமோதித்தனர்.

               வெண்ணிலாவும் விளையாட்டுகளில் பங்கேற்ப்பவள் என்பதால் பெருமாயியைப் போலவே சட்டையும்,கால் சட்டையும் அணிந்து பயிற்சி செய்வதையும், அவள் நிறைய ஆண்களோடு பேசிப் பழகுவதையும் ,எல்லாவற்றிற்கும் மேல் "அவள் நடத்தையே சரியில்லை'' என்றும் அடுக்கிக் கொண்டிருந்தார் .

"வெண்ணிலாவை நானே விசாரிக்கிறேன் அதன் பின் நாம் முடிவெடுப்போம்" என்று நீலா அவரிடம் சொல்லி, "இதைப் பற்றி வேறு யாருடனும் விவாதிக்க வேண்டாம்" என்றும் தீர்கமாய் சொல்லிவிட்டாள்.

                 அன்றிரவு , ஒரு வாரமாய் தனக்கு நேர்ந்த பிரச்சினைகளை ஒரு கணம் நினைத்து பார்த்தாள், நடந்தவை யாவும் சினிமாவில் வந்ததைப் போலவே இருந்தன. அன்று காலை- திங்கட்கிழமை என்பதால் எப்போதும் போல கொடி ஏற்றத்துடன் பள்ளி ஆரம்பித்தது, சற்றும் எதிர்பாராமல் திடீரென்று ஒரு கூட்டம் ஆவேசத்துடன் பள்ளிக்குள் வந்து , பள்ளியின் வாசலில் கூச்சல் போட்டுக் கொண்டும், உதவித் தலைமை ஆசிரியருடன் பயங்கரமாக வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தனர்.

        'என்ன விஷயம் ?' என்று கேட்கச் சென்ற தலைமை ஆசிரியர் மீது அந்தக் கூட்டத்தின் கோபம் திரும்பிக் கொள்ள, அப்பொழுது தான் அவருக்குப் புரிந்தது, இன்று பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என்று.'ஒன்பதாவது படிக்கும் பெருமாயி என்கிற பெண்ணும், 10ஆம் வகுப்பு படிக்கும் பிரேம்குமார் என்கிற பையனும் ஓடிப் போயினர்' என்றத் தகவல் தான் அது. பெருமாயி  படிக்கும் ஒன்பதாம் வகுப்பு 'D' செக்சனின் வகுப்பாசிரியர் என்பதால் உதவி ஆசிரியர் சண்முகம் மீது அம்மக்கள் அதிக வெறியுடன் இருந்தனர். அதே நேரம் பிரேம்குமாரின் சொந்தமும் திரண்டு வந்தது பள்ளிக்குள், கொஞ்ச நேரத்தில் இரண்டு கோஷ்டிகளும் செய்து கொண்டிருந்த வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.  பெருமாயியின் தாய் மாமன் ஒரு கத்தியைக் கொண்டு பிரேம்குமாரின் தந்தையைக் குத்த முயற்சித்தான் நல்ல வேளையாக அங்கு வந்த காவலர் ஒருவர் அவனை தடுத்தார் , பிரச்சனையை சமாளிக்க ஒரே வழி போலீஸ் தான் என்பதை முன்னரே உணர்ந்து காவல் நிலையம் சென்று யாரேனும் அங்கு அழைத்து வர பியூனை அனுப்பியதால் இங்கே பெரும் பிரச்னை தவிர்க்கப்பட்டது.

       காவல்துறை ஆய்வாளர் அங்கு  வந்து அவர்களை முதலில் கண்டித்து, பின்னர் சமதானப் படுத்தினார். சற்று நேரத்தில் எல்லோரையும் பள்ளிக்கு வெளியே அனுப்பினார். ஓடிப்போன மாணவர்களை பிடித்துத் தருமாறு போலீசில் விண்ணப்பம் வைத்தார் தலைமை ஆசிரியர். சற்றைக்கெல்லாம், அந்த ஊரில் அந்த மாணவர்கள் ஓடிப்போன விஷயம் காட்டுத் தீயாக பரவியது. இரண்டு பேரும்  வெவ்வேறு ஜாதிக் காரர்கள் என்பதால் பிரச்சினை பெரிதாகி எதாவது ஜாதிக்கலவரம் ஆகிவிடுமோ என்று ஊரில் பதட்டம் நிலவியது. பள்ளியிலும் , இந்தப் பிரச்சனையை முன்னிட்டு மாணவர்கள் ஸ்ட்ரைக் பண்ணலாம் என்று பியூன் மூர்த்தி யூகித்து வந்தான்.

       ஒரே நாளில் ஊர்ப் பெரியவர்கள், அந்தக் குடும்பத்தினர்கள், காவல் துறையினர் என எல்லோரும் தலைமை ஆசிரியரிடம் பல கேள்விகள் எழுப்பி விட்டனர். எல்லாவற்றிற்கும் மேல், இந்த விஷயம் மாவட்ட தலைமை அதிகாரியிடம் சென்றடைந்தால் தன் பெயருக்கு பெறும் பங்கம் நேருமே  என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அவரும் போனில் அழைத்து தன் வஞ்சம் தீர்த்துக் கொண்டிருந்தார், யாரோ அதற்குள் அவருக்கு இந்த செய்தி பற்றி அவரிடம் போட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்று உணர்ந்தாள். ஒரு வழியாக இரண்டு நாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு அவரை டீ.ஈ.ஓ பணித்தார். அந்த ஊரிலும் எப்போது வேண்டுமானாலும் ஜாதிக் கலவரம் வந்து விடும் என்ற அபாயம் இருப்பதால், நீலாவுக்கும் அந்த முடிவு நல்ல முடிவாகத் தோன்றியது.

           நீலாவுக்குத் தெரியும் ,'அவருடைய வகுப்பு மாணவி தான் இப்படி செய்திருக்கிறாள்' என்ற ஒரே காரணத்தால் தான் உதவித் தலைமை ஆசிரியர் சண்முகம் சற்று அடக்கி வாசிக்கிறார்,  இல்லாவிட்டால் - தான் அரும்பாடுபட்டு முயற்சித்த தலைமை ஆசிரியர் பதவிக்குத் தடையாய் நின்ற தன்னை இந்த விஷயத்தை வைத்து வஞ்சம் தீர்த்திருப்பார் . 

               ஏனென்றால், அந்த ஊரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே  இருந்த இடைநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக்க அனுமதி கிடைத்த போது, இரண்டு பள்ளியாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனிப் பள்ளியை இருந்தால் தனக்கும் தலைமை ஆசிரியர் பதவி கிடைக்கும் என்று அவர் வைத்திருந்த திட்டம், நீலாவின் திடமான முடிவிலும், முயற்சியிலும் ஒரே உயர்நிலைப் பள்ளியாக மாறியது.

                   தன் வாழ்க்கையிலும், தன் பன்னிரண்டு வயதில் ஒருவனை நம்பி மோசம் போனதை எண்ணிப் பார்த்தாள்,  தான் முதலில் ஒருத்தனை நம்பி வீட்டை விட்டு வெளியேறி வந்ததும், ஒரு வாரத்தில் தனியாக குடும்பம் நடத்த பயந்து தன்னை அப்படியே விட்டுவிட்டு வேறு ஊர் ஓடிய தன் பழைய காதலனும், தன்னை அடித்து உதைத்த பெற்றோர்களும் நினைவிற்கு வந்தனர். அந்த அறியாத வயதுக் காதல், இரண்டு வருடங்கள் தன் படிப்பை முடக்கி விட்டதையும்,  பிறகு தன் தாய் மாமனின் அறிவுரைப்படி தன் படிப்பை தொடங்கச் சம்மதம் பெற்று வரும் போது, சமூகம் தன்னை அழைத்த பெயர்களான "ஓடுகாலி, மூதேவி, மோசம் போனவ " என்று தன்னை பழித்ததையும் நினைத்துப் பார்த்தாள். பல வருடங்களுக்கு முன் பெண்களுக்கு நேர்ந்துக் கொண்டிருக்கும் இம்மாதிரியான கொடுமைகள் இன்னும் தொடர்வதை எண்ணி பெருமாயியின் நிலையை எண்ணிக் கவலை கொண்டாள், அதற்கேற்றாற்போல் பெருமாயி , பிரேமுடன் ஓடிப்போன இரண்டாவது நாளே அவனால் கைவிடப்பட்டாள், முதலில் பெருமாயி வீடு வந்து சேர்ந்தாள், போலிசுக்குச் சென்ற பிரச்சினை கூட பணம் கொடுத்து சரி செய்யப்பட்டது, இருவரும் அவர்களுடைய வீடு திரும்பினர். ஊரிலும் கூட அமைதி திரும்பியது , ஆனால் பள்ளியில் மட்டும் அந்தச் சம்பவம் பல கொடுமைகள் நடைபெறக் காரணமாய் அமைந்தது.

                                       அடுத்தநாள் மதியவேளை, வெண்ணிலாவைத் தன் அறைக்கு நீலா அழைத்தாள், சற்றுக் கடுமையான குரலுடன் வெண்ணிலாவை நோக்கி  "கடைசியா உனக்கு எப்போ தீட்டு வந்தது" என்று அதட்ட , வெண்ணிலா - கண்களில் கண்ணீருடன்  - "மிஸ் என்னை மன்னிச்சிடுங்க மிஸ் " என்று அழுதாள் ,
 "அழாமல் ஒழுங்கா உண்மையச் சொல்லு !! இல்லன்னா பள்ளியிலிருந்தே உன்னை அனுப்பிடுவோம்"என்றாள் நீலா.
 மறுபடியும், வெண்ணிலா அழுதுக் கொண்டே, "மிஸ் என்னை மன்னிச்சிடுங்க மிஸ் !! எங்க அய்யாவுக்கு நெறைய கடன் இருந்துச்சு, அதனால நான் வயசுக்கு வந்ததா பொய் சொல்லி தெரட்டி  வச்சு மொய்ப் பணம் சேர்த்து கடனக் கட்டுச்சு ,அதனால தான் நான் காலாண்டுத் தேர்வுல லீவு போட்டேன், நான் இன்னும் வயசுக்கே வரல. என்னை ஒன்னும் செஞ்சுராதிங்க மிஸ்." என்று கதறினாள். நீலாவால் அதற்கு மேல் ஒன்னும் கேட்க முடியவில்லை , அந்த இடத்திலேயே சிறிது நேரம் கல்லாய் நின்றாள் .
 
             வெண்ணிலாவை வகுப்பிற்கு அனுப்பிவிட்டு,  தன் பழையக் காதலன், பிரேம் குமார், சண்முகம் வாத்தியார், டீ.ஈ.ஓ என்று நான்கு பேருக்கும் இணையாக நான்கு தலைவலி மாத்திரைகளை வாங்கி வர தன் பியூனை பணித்தவாறே, மறுபடியும் தலையில் கை வைத்து தன் இருக்கையில் அமர்ந்தாள்.

வெள்ளி, 25 நவம்பர், 2011

பாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்

நிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு,


நிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர்  செந்தமிழனுக்கு,

பெருமையுடன் ஒரு முதல் வரிசை ரசிகனின் பார்வையும் பாராட்டுகளும்,

முதலில் இது ஒரு வெற்றிப் படம் என்றுத் தெரிந்து கொண்டேன், வந்தேறிகளை நேரடியாக எதிர்க்கும் படம் என்பதால் மட்டுமல்ல, இப்படி ஒரு படைப்பு நம் மொழியில் உருவானதே ஒரு வெற்றிதான்.

அநேகமாக டாப் டென்னில் வரும் அனைத்து படங்களும் பார்க்கும் பழக்கமுள்ள எனக்கு இந்தப் படம் ஒரு வித்தியாசமானப் படம் என்று இருந்தாலும் , கதைக்குள் நம்மை கரையவைக்கும் மந்திரப் படைப்புகள்(திரைப் படங்கள்) மிகச்சில மட்டுமே உள்ளன, அந்தமிகச் சில படைப்புகளில் ஒரு சிறந்த படைப்பு எனச் சொல்லும் திருப்திக்காக இதை அரிய படைப்பு எனலாம். இந்த பார்வையை எழுதும் அதே வேளையில், இந்தப் படம் வணிகரீதியாக சந்தித்துக்கொண்டிருக்கும் சிக்கல்களை நினைக்கையில் தாங்க முடியா வலி ஒன்றும் கூடவே இருக்கிறது...

வலி ஏன்? இன்றைய சினிமாச் சந்தை -  கார்ப்பரேட் முதலாளிகளிடமும், அரசியல்வியாதிகளிடமும், மசாலா ரசனைகளிலும் சிக்கியதால், இன்று புதியவர்கள், புரட்சியாளர்கள், திரைப்படங்களை நல்லதொரு ஊடகமாக்க நினைக்கும் கலைஞர்கள் என்ன நிலைக்கு ஆளாகின்றனர் என்று தங்கள் கட்டுரையை முகநூலில் இன்று வாசிக்கும் போதே நன்று புரிந்துகொண்டேன், தங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட 1911  படத்திற்கு கிடைத்த வரவேற்பை பற்றியும் எழுதியிருந்தீர்கள், அந்தப் படம் கூட (வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களைச் சொல்லாமல் ஒரு வரலாற்றுப் புரட்சியைத் தான் சித்தரிக்கிறது) இங்கு பெரும் தோல்வி அடைந்தாலும், அவர்கள் ஊரில் நல்ல மதிப்பையும் வெற்றியைப் பெற்றதன் காரணம் அவர்களுக்கு தெரிந்திருந்த அந்த வரலாறு. இந்த படம் பற்றிய அறிவு நமக்கு சிறிதேனுமிருந்தால் மட்டுமே கதைக்குள் நாமும் அமர முடியும்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், சில வணிகரீதியான் (economical  advantage) சாதகங்கள் தங்களுக்கு இருப்பின் நீங்கள் இமாலய வெற்றியை வெகுஜனங்களிடம் இந்தப் படத்தின் மூலம் எட்டியிருப்பீர்கள், இப்பொழுதும் உங்கள் வெற்றி அத்தகையது தான் - ஏனெனில்,எத்தனையோ மாபெரும் கலைஞர்கள் இருக்கும் இந்தத் துறையில் இந்த அளவுக்கு தனது முதல் படைப்பில் எடுத்திருக்கும் கடுமுயற்சி, எம்மைப் போன்ற எளிய பார்வையாளனுக்கும் புலப்படுவதில் நீங்கள் பெரிய சிகரத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது.


எங்கே இந்தப் படம் உங்களுக்கு ஊக்கம் கொடுக்கத் தவறிவிடுமோ? என்கிற பயமும் எனக்கு இருக்கிறது, ஒரு பொழுதுபோக்கில் கூட முழு ஈடுபாடற்ற சமுதாயம் (சினிமாவிற்கு கூட மிகத் தாமதமாக வந்துவிட்டு படத்தினை புரிந்து கொள்ள முடியாது கம்மென்ட் அடிப்பது) தங்கள் படங்களை பார்க்கும் கண்ணோட்டம் சரியாக இருக்கவேண்டும் என்று வேறு பயம் தருகிறது, இதற்கு நான் மிகவும் ரசித்த "வாகை சூட வா" படத்தின் தோல்வியும் ஒரு மண்ணுக்கும் உதவாத சில சூப்பர் ஹீரோக்களின் வசூல் ரிப்போர்ட்டுகளும் தான் காரணம்.

தங்கள் படத்தை பார்த்த முதல் கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதால் படத்தில் எனக்கு தோன்றிய விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்,  இந்தக் கதைக்களத்திற்க்கான உங்கள் உழைப்பு மற்றும் தேர்வுக்கே மிகுந்த பாராட்டுகள், முட்புதர்கள், செம்மண் நிலம், கண்மாய் என வறண்டு போன வானம் பார்த்த பூமியின் வெப்பம், குளிரூட்டப் பட்டுள்ள அறையிலும் எனக்கு உஷ்ணத்துடன் இருந்தது.

தோள்களில் சுமந்துகொண்டு காமிரா அலைந்து திரிந்து எங்களுக்காக படமாக்கிய விதம் மிக அருமை, கண்மாயில் எதிர்த்தண்ணியில் பாயும் மீன்கள், தோல் உறிக்கப்படும் மாடு என்று எல்லா காட்சிகளையும் எந்த மிகைப் படுத்துதலில்லாமல் தந்தமைக்கு நன்றி. மேலும், வீரர்கள் எறியும் அம்புகளுடனும், வேல்களுடனும் பயணிக்கும் காமிரா கோணங்களும், கம்ப்யுட்டர் சித்து விளையாட்டுகளையும்  தவிர்த்தமைக்கு பெரிய கும்பிடு. எளியோரின் போர் முறை எளிமையாகவே இருந்தது தான் மிகப் பெரிய பலம்.

இசை, அந்த கால நினைவுகளை கொண்டுவரவில்லையே என்றாலும், நீங்கள் அதையும் justify  பண்ணியதாகவே தோன்றுகிறது. இந்த கால இசைக் கருவிகளைக்  கொண்டே அந்தக்  கால  மனிதர்களின் உணர்வுகளை கொண்டு வந்துவிடுகிறது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் வெறும் தாரை தப்பட்டை சப்தங்கள் பண்டைய காலம் போன்றே இருந்தால், கண்டிப்பாக நாம் இந்த படத்தின் சீரியஸ் கட்டங்களை உணரமுடிவது கொஞ்சம் சிரமம் தான்.ஆதலால் ஒரு harmonious string நாம் விருப்பான கட்டங்களில் தேவைப் படுகிறது. 

படத்தில் பாலைமறவனின் வசனங்கள் மற்றும் அவர் தலைவனுக்கு சொல்லும் உபதேசங்கள், மற்றும் பாலை பற்றி அவர் சொல்லும் கதையும் விதமும் உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டியது, ஷம்மு மற்றும் அவள் தோழிக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம், அடிமைகள் இல்லாத இனமாக நம்மை காட்டியிருப்பது எல்லாம் இன்றைய தமிழர்கள் (குறிப்பாக சாதி, வர்க்க அரசியிலால் பாழ்படுத்தப்படும் இளைஞர்கள்) பார்க்கவேண்டியது.


எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கம், புலி பற்றி முல்லைக்கொடித் தலைவர் தன வீரர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் விதம் தான், இந்தப் படம் பேசும் அரசியலாக நான் உணர்கிறேன், "சிங்கம் வலிமையானது தான், ஆனால் பசியும் , வலியும் தாங்காது, ஆனால் புலி பசியையும் தாங்கும், பதுங்கியும் தாக்கும்"என்று சொல்லும்போது உணர்சிபெருக்கு கண்ணீரை உருமாறும் யதார்த்தம் " இருக்கிறது, "நீங்கள் யாரும் தலைவனின் கட்டளைக்கு காத்திருக்கத் தேவையில்லை தனித் தனியாக போராடுங்கள் " எனும் இடங்களில் உணர்ச்சிகள் கட்டுப்படவில்லை, இதை சாதுரியமாக திமிர் பிடித்த தணிக்கை நண்பர்களிடமிருந்து புரியா வண்ணம் கொணர்ந்த உமக்கு மேலும் ஒரு மலர்மாலை.

மேலே சொன்ன இந்த அரசியலைப் பேசத் தான் நாம் 2000 வருடங்கள் முன்னோக்கிப் போகவேண்டியுள்ளது."திருப்பி அடிக்கனும்னு" (7aam அறிவு ) சொல்லும் உணர்வு கூட இன்று கமர்சியல் ஃபார்முலாக்கலாக மட்டுமே வெகுஜனங்களிடம் மிஞ்சுகிறது, அந்தப் படங்களில் சென்னை சூப்பர் கிங்க்சுக்காக கை தட்டும் ரசிகனைப் போலவே என்னை நான் உணர்ந்தேனே தவிர எந்த ஒரு ஆழ்ந்த உணர்விலும் அல்ல .

உடன்போக்கு, ஆநிரைகவர்தல், வழிப்பறி, மீன்பிடித்தல், பறை, காதல், வானசாத்திரம், கள்வெறி, மயக்கம் என இலக்கிய அடித்தளங்கள் இப்படத்தில் வலுவாக இருந்தது, என்ன வசன உச்சரிப்பில் ஷம்மு நிறைய தடுமாறியிருப்பதாய் தோன்றியது (ஒருவேளை இது என் தவறான கணிப்பாகவும் இருக்கலாம்). மீண்டும் ஒருமுறை இந்தப் படத்திற்கு உழைத்த எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், வாழ்ந்து காட்டிய நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். பாடல்களில் பாலையின் தீம் சாங்கும், முதல் பாடலும் நன்றாக இருக்கிறது .

திரு.செந்தமிழன் அவர்களே!!
உங்களுக்கு நிற்க ஒரு அடி மண் மட்டும் தானா, இந்த மாதொரு படைப்பின் மூலம் எங்கள் மனதில் நின்றுவிட்டீர்கள்.....இந்தப்படம் கண்டிப்பாய் வெற்றிபெறும், எங்களுக்கு மேலும் பல நல்ல படைப்புகளை தருவீர்கள் என்று வாழ்த்துகிறேன்

எமது முகநூல், ப்ளாகர் நண்பர்களே!!  நல்ல படைப்பை ஊடகங்கள் வணிகரீதியாக ஏற்காவிடினும் , நமது முயற்சிகூட பெருமளவு கைகொடுக்கும் , தயவு செய்து இந்தப்படம் பார்த்து தேவையற்ற மசாலா, தழுவல் படங்களைப் பார்த்த பாவங்களை கழுவுங்கள்.படத்தை பாருங்கள் திரையில்.......
Screens  in  Tamilnadu  



காக்கா கடி:

*பாலை படத்தின் இறுதிப் போர் காட்சி தான் படத்தின் முக்கிய அம்சம் என்பதால் இதில் முல்லைக்கொடி கிராமத்தில் இருந்து வரும் ஒரு சொற்பக் கூட்டம் 5 -6  வீரர்கள் செய்வதை போரை நாம் எண்ணுவது கடினம் தான் என்றாலும், இனக்குழுக்களுக்கு மத்தியில் நடக்கும் போர் இப்படித் தான் இருக்கும் என்று நம்புவது தகும்.

*கொஞ்சம் " பாலை" (திணை)பற்றிய அறிவுடன் படம் பார்ப்பது நல்லது, ஒன்னும் தெரியவில்லை என்றால் எட்டாம் வகுப்பு தமிழ் புத்தகங்களை பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/Sangam_landscape  உதவக்கூடும்

*எனக்கு இந்தப் படம் மிக வேகமாக சென்றுகொண்டிருப்பதாய் தோன்றியது, பலர் இதை ரொம்ப ஊர்ந்து செல்லும் கதை என்று நொந்து கொள்ளும் லாஜிக் எனக்குப் புரியவில்லை, (what else you need எனி kuthu song or santhaanam??)

* எங்கேயாவது சில இடங்களில் எனது பார்வை மிகைப்படுத்தியிருந்தால், என்னை மன்னிக்கவும்  .. எளிமையாய் சொல்லும் கலை மிகக் கடினம் என்று பாலை படத்தில் புரிந்துகொண்டேன்.



--
அன்புடன் 
J .கரிகாலன் 









ஞாயிறு, 20 நவம்பர், 2011

1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி

1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி
1911-XINHAI REVOLUTION

இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச் சக்திவாய்ந்த ஊடகமாகவே நமது நாட்டின் அரசியலில் அங்கம் வகிப்பதால் இது அரசியல் பேசும் கட்டுரையாய் உங்களுக்குத் தெரியலாம். திரைப்படங்களின் மூலம் அரசியல் வளர்ந்த மாநிலம் என்று நம் மாநிலத்தினையும், ஆந்திராவையும் முதன்மையாகச் சொல்லலாம் , அமைச்சர்களை  உருவாக்குவதிலிருந்து, கலாச்சார மாற்றம், பழக்கவழக்கங்களின் மாற்றம், நுகர்வுப் பண்புகளின் மாற்றம் என திரைப்படங்களின் தாக்கம் மிக இருக்கிறதென்பதை யாரும் மறுக்க இயலாது.


1911  புரட்சி  :- உலகிலேயே மிகப் பிரபலமான கமர்சியல் ஹீரோக்களில் ஒருவரான "ஜாக்கி சானின் " 100வது படம். 25  படம், 50  படங்களுக்கே மகா பந்தா காட்டும் நாயகர்களுக்கு மத்தியில் தனது நூறாவது படத்தினை தன இனத்தின் பெருமையை , அவர்களின் வரலாற்றைக் காட்டும் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கும் ஜாக்கிக்கு ஒரு பெரிய மலர்கொத்து.

Oneline
படம் 1911 -இல் நடந்த உள்நாட்டுப் போர் பற்றியது, கியுங்(Qing Dynasty ) அரசாட்சிக்கெதிராய்ப்  போராடும் ஒரு புரட்சி பற்றிய வரலாற்றுக் கதை இது.


கதை


1911  புரட்சி என்பது (Xinhai புரட்சி) சீனாவில் நடந்த ஒரு உள்நாட்டுப் போர், Huang Xing (ஜாக்கி) தளபதியாகவும் , Sun Yat-sen  தலைவராகவும் உருவாக்கியப் புரட்சி படை கொண்டு சீனாவை குடியரசாக்கும் வரலாற்றுப் பதிவு தான்.

எனது பார்வை  


படம் தொடங்கும் போதே ஒரு பெண்மணி சங்கிலியால் பிணைக்கப்பட்டு, மரணதண்டனை வழங்கும் காட்சி.இவ்வினத்தின் சுதந்திரத்திற்கு சிந்தப்படும் முதல் துளி இரத்தம் எனது என்று, கடைசி மூச்சை சுவாசிக்கும் போதே நம் மனம் ஈர்த்துவிடுகிறது.

  நம் தற்போதைய சூழலில் இப்படம் பார்க்கும் போது வரும் உணர்வுகள் யாவற்றையும் பார்க்கும் பொது தமிழனாய் இருப்போர் ஈழ விடுதலை பற்றி ஒரு கணமாவது சிந்திப்பீர்கள். இந்தியன் என்று சொல்வோர் கூட கஷ்மீர் முசுலீம்களையோ, மத்திய - கிழக்குப் பிரதேச நக்சல்,மாவோயிஸ்ட் , மலைவாழ் அல்லது பழங்குடிகளையோ எண்ணுவர். அப்படி எண்ணாதோர் காங்கிரஸ் கட்சியின் கடைசித் தொண்டனாக இருக்கக் கடவுக.

  Sun Yat-sen மேலை நாடுகளுக்குச் சென்று தமது நாட்டில் நடைபெறும் அரசின் மக்கள் விரோத போக்கை சுட்டிக் காடும் வேலையைச் செய்வார் ( ஆண்டன் பாலசிங்கம்). புரட்சியை நடத்தும் வேலை அவர் நண்பரான ஜாக்கிக்கு கொடுக்கப் படும் (தலைவர்).கியுங்(Qing Dynasty ) ராணியோ உள்நாட்டுப்போர், ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டைப்  பற்றிக் கவலைப் படாது (தனக்குத் தான் மெஜாரிட்டி என்கிற நினைப்பு) தன இஷ்டப்படி முடிவுகளை எடுக்கிறாள். ஆனால் அவளின் படைத் தலைவனோ அரசிடம் இருந்து புரட்சியாளர்களை துரத்துகிறேன் என்று அரசிடமிருந்து மிக அதிகமாக பணம் பிடுங்குகிறான். நாட்டில் ஊழல் மலிந்து கிடக்கிறது, கடன் சுமை பெருகி வருகிறது, ஆக உள்நாட்டுக் கலவரத்தைக் கட்டுப் படுத்த தனக்கு இன்னமும் அதிக பணம் தேவை படுகிறது. இங்கு தான் இங்கிலாந்து தன் சுயலாபத்தை கணக்கில் கொண்டு, உள்நாட்டு மக்களின் உணர்வை மதியாமல் அரசியலைத் துவக்குகிறது , ராணிக்கு உதவி செய்வதாய் அதாவது கடனளிப்பதாய்க் கூறி, சீன இரயில்வேயினை அடகு கேட்கிறது .( நிற்க, நான் இங்கிலாந்து என்று தான் சொன்னேன், இந்தியா என்று தோன்றினால் நான் பொறுப்பல்ல). மிக முக்கியமாய் சொல்ல வேண்டியது, இந்தப் படத்தில் புரட்சியாளர்கள் நடத்தும் புரட்சிக்காக செலவிடும் பணத்தை வழங்கும் அயல் நாட்டுச் சீனர்கள் , நம் ஐரோப்பா,ஆஸ்திரேலியா, கனடா வாழ் ஈழத் தமிழரின் உள்ளங்களை எனக்கு நினைவுக்கு கொண்டுவருகின்றனர். வெறும் ஆயுதத்தால் மட்டும் புரட்சி ஒன்றும் செய்ய முடியாது.

       அதே சமயம் Sun Yat-sen தன் நாட்டில் நடைபெறும் அநீதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துரைத்து, தன் நாட்டில் தன் மன்னரால் அடகுவைக்க முற்படும் ரயில்வேத் துறையை காப்பாற்ற போராடுகிறார். ஒரு கட்டத்தில், புரட்சிப்படை கைகள் ஓங்க ஆரம்பிக்க 1912 பிப்ரவரியில் மன்னராட்சி கவிழ்ந்து குடியரசு ஓங்குகிறது. குடியரசுச் சீனாவில் முதல் தலைவராக  சென்னும் , இராணுவத் தளபதியாக ஜாக்கியும் தேர்ந்தெடுக்கப் பட.நாட்டின் மக்கள் ஆட்சி நிலைபெற தன் பதவியையும் விட்டுக் கொடுக்கிறார். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நண்பர்களின் கனவினை மறுபடியும் திரும்பி பார்க்குமாறு அப்படம் முடிகிறது.

       "தமிழனைப் பற்றிப் பேசும் படம்" நிறைய இடங்களில் திரித்துக் கூறி, போதி தர்மனை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டு (அதற்கும் மேல் போதி தர்மனின் வரலாற்றிலும் பல பிழைகள்), வெறும் வியாபரத்திற்க்காக கொணரும் தமிழ் உணர்வுகளை விட (7 -ஆம் அறிவு) , நமது போராட்டம் பற்றிய கனவுகளையும், தியாகங்களையும் அவர்களின் (சீனர்களின்) வரலாற்றைச் சித்தரிப்பதிலேயே நம்மை உணர வைத்திருக்கும் இந்தப் படம். இந்த(ஈழ) உணர்வைக் கொணர ஜாக்கி மெனக்கடவில்லை என்றாலும், உலகின் அனைத்துப் புரட்சியிலும் உள்ள மைய உணர்வை நன்றாகக் காட்டியிருப்பதே போதுமானது. பல இடங்களில் Sun Yat-sen ஆக வரும் மனிதரின் வசனங்கள் படத்தின் ஆணி வேர்.


    இப்படத்தின் ஒளிப்பதிவு மிகப் பெரிய முயற்சி, நூறு ஆண்டுகள் பின் சென்றபின்பு ஒரு கணம் கூட நாம் வெளியே வராதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறார், ஒளிப்பதிவாளர்.இப்படத்தில் கதை சொல்லும் முறை சற்று நமக்கு (தமிழ்படுத்துதலில்) பிடிபடவில்லை என்றாலும் ஒரு பெரிய வரலாற்றை ஒன்னேகால் மணி நேரத்தில் சொல்லவேண்டிய கட்டாயம் இருப்பதால், படம் சில நேரங்களில் டாக்குமெண்டரி போலே தோன்றுகிறது.

* ஒவ்வொரு புரட்சியின் தீர்வையும், ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் துரோகம் தான் தீர்மானிக்கிறது (நம் கதைகளில் துரோகம் இளைக்க நம் இனத்திலே பலர் உண்டு ), இங்கு துரோகம் நல்லவேளை புரட்சிப்படையிடம் இல்லை.

*ஜாக்கியின் காதல் திணிக்கப்பட்டுள்ளதாய் தோன்றுகிறது (போதிய அவகாசம் இல்லாததால்).

*நூறாவது படமாய் இருந்தாலும் தனக்கு இப்படத்தில் அதிகமாக முக்கியத்துவம் தராத நேர்மையினை நம் ஆட்கள் பாடம் கற்றுக் கொள்வார்களா??

*அவதார் படம் கூட அடிப்படைக் கதையில் மாவோயிஸ்ட்களின் போராட்டத்தில் உள்ள நியாங்கள் பற்றி பேசுவதாய்த் தோன்றும், இப்படம் ஈழ வரலாற்றோடு எவ்வளவு ஒத்துப் போகிறது , ஆனால் இந்த மாபெரும் குடியரசு எப்படி இலங்கைக்கு உதவுகிறது.

* " திருப்பி அடிக்கணும் " என்கிற வசனத்திற்கு கைதட்டிய ரசிகப் பெருமக்களே (நான் உட்பட), உண்மையான ஈழ உணர்வு பற்றி ஒரு சீனன் நமக்கு படம் எடுத்து தந்திருக்கிறான் தவறாமல் பார்த்து விடுங்கள் , ஈழத் தமிழன் பற்றிய படங்களான "எல்லாளன்" போன்ற திரைப் படங்களை இந்தியம் அனுமதிக்காது, ஆக இந்தப் படத்தையாவது பாருங்கள்.

* புரட்சியில் ஆயுதப் படையைக் காட்டிலும், அரசியல் பகடை தான் முக்கிய ஆயுதம் என்று உணர்த்தும் இந்தப் படம்.

ஜாக்கி சான் தன் நடிப்பிலும், படைப்பிலும் பல தூரங்களைக் கடந்து விட்டார், ஜாக்கி சான் ரசிகர்கள் முக்கியமாக இப்படத்தினைப் ஒரு கலைஞனுக்குச் செய்ய வேண்டிய மரியாதையும் கூட.

மொத்தத்தில் இப்படம் தமிழர்களுக்கானச் சீனனின் வரலாறு

காக்க கடி 


1 .இது நீங்கள் பார்க்கும் சாட்சாத் ஜாக்கிசானின் படம் அல்ல
2 . படம் பார்க்கும் முன் சீன வரலாற்றை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள், இல்லையேல் சீனப் பெயர்கள் புரியாமல் தடுமாற ,கொஞ்சம் விளங்க ஆரம்பிக்கும் போது படம் முடிந்து விடும்.





















திங்கள், 14 நவம்பர், 2011

கடைசிச் சங்கிலியையும் கால்களுக்கு கொடுத்தவள்


கைக் குழந்தையாக 
பேருந்தில் தாய் மடியில் ,
முகத்தில் அறையும் காற்று 
மூச்சுத் திணற வைக்க 
மார்போடு எனை அணைத்து 
மீண்டும் உயிர் கொடுத்தவள் !!.

எனக்குச் செலுத்த வேண்டிய 
மருந்தை அவள் எடுத்து ,
அம் மருந்தையும் பாலாய்க்
கொடுத்தவள்!!

எத்தனையோ முறை 
வாந்தி எடுக்கும் வேளை!
தன் கரங்கொண்டு ஏந்தினாள்..
நானோ - ஒரு குவளை தண்ணீர் 
கேட்டாலும் சலிப்புடனே கொடுக்கின்றேன்.

படுக்கையில் வீழ்ந்தாலும்
நான் தடுக்கினாலே 
பதறுகிறாள்.
நானோ கடமை செய்ய 
தயங்குகிறேன் 

கழுத்தில் இருந்த 
கடைசிச்  சங்கிலியையும் 
என் உடைபட்ட 
கால்களுக்கு கொடுத்தவள்.

தம் மகவைச் சிரமப்படுத்தும்
தன்னை இன்னும் 
வஞ்சித்துக் கொண்டிருக்கிறாள்.
சொல்லாதத் துயரில் 
துஞ்ச முடியாது அழுகின்றாள் ..

நானோ கொசுவலைக்குள் உறங்கி 
கனவுக்குள் அவளுடன் 
தொலைந்துகொண்டிருந்தேன்