சனி, 8 ஜூன், 2013

மது

மது - பட்டியல்


ஒரு மதுக் குடுவையின் துணை
நட்பினைக் கொடுக்கிறது,
கண்டு களித்து, உண்டு செறித்து
இலக்கியம் பேசி, பாடி, உமிழ்ந்து
வாந்தி எடுத்து, கழுவி விட்டு
முத்தம் கொடுத்து,
அள்ளிக் கொடுக்கிறது வாக்குறுதிகளை
பின்னர் அவதூறு எழுப்பி,
விவாதம் செய்து,
வன்சொல் பேசி, கைகள் நீட்டி
சட்டையைக் கிழித்து
நட்பு முறிகிறது, பகை பிறக்கிறது 

ஆனால் இது மது இல்லாமலும் நடக்கிறது

வெள்ளி, 7 ஜூன், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு

நாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு:

உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இதில் நாகஸ்வரம், நாகர் இனத்தவரால் உபயோகிக்கப்பட்டு வந்தது என்பதால் இந்தப் பெயர் பெற்றிருக்கலாம, மேலும் இதற்கு நாகபாசுவரம் என்ற பெயரும் உண்டு.

மணிமேகலை, சிலம்பு போன்ற சங்க இலக்கியங்களில் நாக நாடு என்ற பெயர் வருகிறது. மணிமேகலையில் நாகநாடு என்பது நானூறு யோசனை தூரம் இருந்தது என்றும் அதை ஆண்ட மன்னவன் பெயரும் வருகிறது. அதே போல 2000 ஆண்டுகட்கு முன்னரே, ஈழத்தீவினை நாகத்தீவு என்று அழைக்கப்பட்டு வந்தது, அவர்கள் வாசித்து வந்த இசைக்கருவியின் பெயர் நாகம் என்று அறியப்படுகிறது.

இதை நம்பும் படியாக, இன்னும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவத்தின் போது “நாகோபாசம் வாசியுங்கள் என்று நாதஸ்வரம் வாசிக்கப்படுகிறது. பழமையான நாதஸ்வரம் கருப்பு நிற மரமான ஆச்சாமரத்தின் கட்டையில் இருந்து செய்யப்படுகிறது. அம்மரம் வெட்டப்பட்ட பின் குறைந்தபட்சம் 100 வருடங்களாவது காய்ந்திருக்க வேண்டும். ஆக பல நாதஸ்வரங்கள் வீட்டிலிருக்கும் ஆச்சமரத் தூண்களிலிருந்து பெயர்த்து எடுத்தும் செய்யப்பட்டன.

காற்றினால் ஊதப்படும் கருவி என்றாலும் குழலைப் போல நேரடியாக இதனை வாசிக்க முடியாது, இதற்கு சீவாளி என்ற தட்டைக் குறுத்து தேவைப்படுகிறது, இந்தப் புல்லினம் காவிரி, கொள்ளிடக் கரைகளில் மட்டுமே காணப்பெறும், இதை வெட்டியெடுத்து நிழலில்,பனியில், இளஞ்சூரிய வெயிலில் என 15,15 நாட்கள் காயவைத்து, வெட்டி சிறு துண்டுகளாக்கி நெல் மற்றும் ஆட்டு மாமிசத்தோடு சேர்த்து வேகவைத்து, 6 மாதம் பதப்படுத்தி உறுவக்குவர்.

இது ஒரு இணைக்கருவி, அதாவது இசை அரங்கில் நாதஸ்வரமும், மேளமும் இரு ஜோடிகளாய் இருக்கும். அதில் நாதஸ்வரத்தின் இணை ஒத்து நாகஸ்வரம் என்று அழைக்கப்படும். ஒத்து நாகஸ்வர்ம என்பதும் நாகஸ்வரம் போல் தான் இருக்கும், ஆனால் அதில் நாகஸ்வரம் போன்ற விரல்துளைகள் இருக்காது. கீழ்வாய் அருகே மட்டும் நான்கு அல்லது ஐந்து துளைகள் இருக்கும், இதில் இருக்கும் துளைகளை அடைப்பதன் மூலம் நமக்கும் தேவைப்படும் ஆதார சுருதி ஒன்றை தக்கவைத்துக் கொள்ளும். 1950க்குப் பிறகு ஒத்து நாகஸ்வரத்தின் பயன்பாடு மறைந்து தனியாக சுருதிப் பெட்டி என்ற ஒன்று நடைமுறைக்கு வந்து விட்டது. இன்று படிப்படியாக குறைந்து வரும் இந்த இசைக் கருவியின் பயன்பாட்டை, ஒலிநாடாக்கள் ஒரு புறமும், கேரள வாத்தியங்கள் மற்றும் மேற்கத்திய பேண்டுகளின் பால் உள்ள நம் ஈர்ப்பு இதை பெரும்பாலும் குறைத்துவிட்டது. நாளடைவில் இந்த இசைக்கருவியும், கலைஞர்களும் வரலாற்று செய்தியாக மட்டுமே இருப்பார்களோ என்ற அச்சமும் எழாமல் இல்லை

- ஆதாரம் : திருக்கோயில் நுண்கலைகள்

ஜீவகரிகாலன்

சனி, 1 ஜூன், 2013

பஜ்ஜி சொஜ்ஜி 22 -சைப்ரஸ் வீழ்ச்சியின் பின் விளைவுகள்

கடந்த மார்ச் மாத இறுதியில் ஐரோப்பிய யூனியன் ஆட்டம் கண்ட விவகாரம் உலகமே அறிந்தது தான். குட்டித் தீவு நாடான சைப்ரஸ், ஐரொப்பிய யூனியனின் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் மிக அதிகமானது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தானாம் என்கிற பழமொழி உங்களுக்கு ஞாபகத்தில் வரவேண்டுமானால் இந்த சைப்ரஸ் சமாச்சாரம் உங்களுக்கு உதவும்.

சைப்ரஸ் ஒரு சிறு வரலாறு:
மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு குட்டித் தீவாக இருக்கும் சைப்ரஸ். காலனி நாடாக் இருந்து வந்த சைப்ரஸ் 1960ல் குடியரசு பெற்றாலும், உள்நாட்டில் இருந்த துருக்கிய (18% சதவீத மக்கள் தொகை மற்றும் கிரேக்க ஆதரவாளர்களிடையே இருந்த கலகங்களாலும் பிரச்சினைகளாலும் 1964ல் உருவான கலவரங்கள், 1975ல் வடக்கு சைப்ரஸாக தனியாகப் பிரியும் அளவுக்கு கொண்டு சென்றது.பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பதால் ஐக்கிய நாடுகள் அமைப்பு பெரும் முயற்சி எடுத்து 2004ல் மொத்த தீவையும் ஒன்றினைத்தது. இந்த ஒருங்கிணைப்பு நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று ஏற்பட்ட நம்பிக்கையின் விளைவு. அதே 2004ல் ஒருங்கிணந்த சைப்ரஸ் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராகச் சேர்ந்தது.


ஜனவரியில் உறுப்பினராக சேர்ந்த சைப்ரஸ், அடுத்த மாதத்திலேயே சவால்களை எதிர் கொள்ள ஆரம்பித்தது. அப்போது தான் அமெரிக்காவில் Sub-Prime கடன்களால் வந்த பொருளாதாரச் சரிவு தொடங்கியது. சைப்ரஸை உறுப்பினர் நாடாக சேர்த்துக் கொள்ள ஐரோப்பிய யூனியன் விருப்பப்பட்டமைக்கு காரணம் சைப்ரஸின் மிக வேகமானப் பொருளாதார வளர்ச்சி. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள் என்று பார்த்தால், முதல் காரணம் அந்த நாட்டின் சுற்றுலாத் துறை, இரண்டாம் காரணம் அந்த நாட்டின் வங்கி நிதிக் கொள்கை. அதாவது விதிகள் குறைந்த, வேறு நாட்டில் இருந்து பதுக்கிவைக்கப் படும் கருப்பு பணங்களுக்கு கேள்வியின்றி அனுமதிக்கப் பட்டு வந்தது. மொரிசியஸ், பனாமா, பிலிப்பைன்ஸ் போல சைப்ரஸும் இது போன்ற பெரிய அளவில் கருப்புப் பண பதுக்கலுக்கு உதவி புரிந்தது.மூன்றாம் காரணம்:சைப்ரஸின் இயற்கை வளமான எரிவாயு.

சைப்ரஸ் வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கை தொடங்கி, அதில் பணத்தை போட்டு வைத்தாலே. அந்த தொகைக்கு, வேறெந்த நாட்டிலும் இல்லாதவாறுபல மடங்கு அதிகமான வட்டி கிடைப்பது மட்டுமல்ல, அரச கண்காணிப்பும் மிகக் குறைவு. அது போல வேற எந்த நாட்டில் இருந்து வந்தும் அங்கு தொழில் தொடங்குவது வெகு எளிது, சொல்லப் போனால் ஒரு நிறுவனம் தொடங்குவதற்கு என கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை, அது போக அந்த நாட்டில் வசூலிக்கப்படும் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கான வரிவிகிதம்ய்ம் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் சைப்ரசில் இரண்டு அல்லது மூன்று மடங்கு குறைவு.

சைப்ரஸ் வங்கிகள் எல்லா நாட்டிலிருந்து வரும் கறுப்பு பணத்திற்கும் பாதுகாப்பு கொடுக்க ஆரம்பித்தது. அதிலும் ரஷ்யா வழியாக வரும் கருப்பு பணம் தான் இந்த நாட்டின் வங்கிகளில் இருக்கும் பிரதான வங்கி இருப்பு, அதாவது கிட்ட தட்ட சைப்ரஸின் மொத்த வங்கியிருப்பில் 30% ஆகும். இப்படி இருக்கும் நிலையில் தான் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக தன் காலைப் பதித்தது சைப்ரஸ்.

பொருளாதாரச் சரிவில் முதல் கட்டத்தில் ஐரோப்பிய யூனியனின் ஸ்பெயினும், க்ரேக்கமும் பெரிய பின்னடைவைச் சந்திதன, அவ்விரு நாடுகளுமே ஐரோப்பிய யூனியனிடம் பிணை (Bail Out) கேட்டு இருந்தன. கிரேக்கத்திற்கு இனத்தொடர்புடைய சைப்ரசும் இந்த பிரச்சினையில் கிரீஸ் நாட்டிற்கு பிணை கொடுக்க வலியுறுத்தியது. மேலும் தாமாக முன்வந்து கிரீஸ் நாட்டின் கடன் பத்திரங்களில் சுமார் 4.5 பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்தன சைப்ரஸ் வங்கிகள். ஆனால், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத கிரேக்க அரசு, அந்நிய கடன்களை திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்கு திவாலாகும் நிலையை அடைந்தது. அந்த இடத்தில் இருந்து தான் சைப்ரஸிற்கு பிரச்சினை உருவாக ஆரம்பித்தது.

சைப்ரஸ் வங்கிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்தன, இதன் சார்பாக புதிய கடன் கொடுக்க முடியாத சூழலும், ஆட்குறைப்பும், வேலையின்மையும் தலைகாட்ட ஆரம்பித்தன. சைப்ரஸில் தற்பொழுது 13 சதவீதத்திற்கும் மேலேயுள்ள வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை இன்னும் சில மாதங்களில் 25 சதவீதம் வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வேறு வழியின்றி ஐரோப்பிய யூனியனிடம் கையேந்தி நின்றது சைப்ரஸ். ஐரோப்பிய யூனியன், உலக நிதி நிறுவனம் (IMF) ஆகியன சேர்ந்து சைப்ரஸிற்கு பிணை கொடுத்து உதவ முனைந்தது. அதனால் சைப்ரஸிற்கு ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்துப் பணிய வைத்தது.


அதாவது மொத்தமிருக்கும் 17 பில்லியன் யூரோக்கள் கடனில் 10 பில்லியனை ஐரோப்பிய யூனியன் அளிப்பதற்கு சம்மதம் தெரிவித்தது ஒரு நிபந்தனையுடன், அதாவது மீதமிருக்கும் 7 பில்லியன் யூரோக்களை முதலில் சைப்ரஸ் வேறு இடங்களிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று. சைப்ரஸ் வேறு எங்கே செல்லும் ரஷ்யாவைத் தவிர்த்து, பெரும் நிதியைப் போட்டு வைத்த ரஷ்யப் பிரதிநிதிகளின் அழுத்தத்தில் ரஷ்ய அரசு 2.5 பில்லியன் யூரோக்களைக் கொடுத்து உதவியது. மீதத் தொகைக்காக சைப்ரஸ் வங்கிகள் மீது பார்வை விழுந்தது.

வங்கிகளின் கடனின் அளவு அந்த நாட்டின் மொத்த உற்பத்தியை (GDP) விட பல மடங்கு இருப்பதால் அந்த நாட்டின் அரசால் அந்நாட்டு வங்கியை காப்பாற்ற வாய்ப்பில்லை. ஐரோப்பிய யூனியன் கட்டாயப்படுத்துய சேமிப்பு வரி காரணமாக மக்களுக்கும், வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கிகள் மீதான நம்பிக்கையின்மை குறைய ஆரம்பித்த்து, உள்நாட்டு அரசியலிலும் இந்த தீர்வுகளுக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்ப அடுத்த அதிரடி முடிவை எடுத்த்து ஆளும் கட்சி. இதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்கும் வரை அந்நாட்டின் எல்லா வங்கிகளையும் மூடப் பணித்தது. ஏடிஎம்-ல் கூட யாராலும் பணம் எடுக்க முடியாத நிலை. பொதுவாக ஒரு நாட்டில் இது போன்ற கடினமான சூழ்நிலையில் நல்ல விளைவுகளைத் தராத குறுகிய கால நோக்குடன் சில அதிரடி திட்டங்களை ஒரு அரசு செய்யும், அதாவது தனக்குத் தேவையான கரண்சிகளை அச்சிட்டுக்கொள்ளும் (இத்தியா இதில் சிறந்த உதாரணம்) ஆனால் ஐரோப்பிய யூனியனில் பொது பணத்தை உபயோக்கும் உறுப்பினர் நாடாக வேறு வழியின்றி ஐரோப்பிய யூனியனின் எல்லா கட்டளைகளுக்கும் வேறு வழியின்றிப் பணிந்து போக வேண்டிய சூழல் அமைந்துவிட்டது.



ஐரோப்பிய யூனியன் கொடுத்த கடனை திருப்பி வசூலிக்கும் வழிகளாக மேலும் சில நிபந்தனைகள் முன்வைக்கப் பட்டன. இதன் படி உள்நாட்டு வங்கிகள் எல்லாம் தங்களது வங்கியில் பணத்தை போட்டு இருப்பவர்களிடமிருந்து சேமிப்பு வரி பிடித்துக் கொள்ள வேண்டும் என்பது தான். அதாவது ஒரு யூரோ முதல் 1 லட்சம் யூரோ வரை வங்கியில் டெப்பாசிட் வைத்திருப்பவர்களிடமிருந்து 6.75 சதவீதம் பணமும் அதற்கு மேல் இருக்கும் பணத்தில் 9.9% சதவீதமும் சேமிப்பு வரியாக வங்கிகள் தனது வாடிக்கையாளரிடமிருந்து எடுத்து கொள்ளும் நிபந்தனை அது.

இந்த வரி விதிப்புக்கு பதிலாக அதற்கு ஈடான வங்கியின் பங்கினையோ அல்லது அவர்களுக்கு அஃப்ரோடைட் போன்ற எரிவாயு நிறுவனத்தின் பங்குகள் கொடுக்கப் பட்டன. அந்த பங்குகள் எதிர்காலத்தில் வரும் வருமானத்திலிருந்தே பங்காதாயத்தை பிரித்துக் கொடுக்கும் வகையில் இருந்தது (securities linked to future revenue ).இதில் மாதச் சம்பளம் வாங்கி குடும்பம் நடத்துபவர்களின் சேமிப்போ, பணியோய்வு பெற்றவர்களின் பென்ஷன் பணமோ, இன்ஷ்யூரன்ஸ் வைப்பு நிதியோ, குழந்தைகள் கல்வி நிதியோ, வேறு ஏதாவது இழப்பீட்டு நிதியோ என்று பொருட்படுத்தாமல் எல்லா வகையான சேமிப்பிலும் ஐரோப்பியா கை வைத்தது, இதனால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இது போன்ற நிலையினை முன்னரே தெரிந்து கொண்டு தனக்கு வேண்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை மட்டும் முன்னராக எடுத்து வேறு இடத்தில் பதுக்கிய அந்நாட்டின் ஜனாதிபதி கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார்.


சைப்ரஸ் நாடாளுமன்றத்தில் இந்த நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. ஆனால் எப்படியும் சைப்ரஸ் வங்கிகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆபத்து மட்டும் உறுதியாய்த் தெரிய, சைப்ரஸ் நாடு முற்றிலுமாக செய்லிழக்கும் பட்சியில் அது ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனுக்கும் ஆபத்தாக உலகை அச்சுறுத்தியது. இறுதியில் சிறு முதலீட்டாளர்களைத் தவிர மற்றவர்களுடைய கணக்கிலிருந்து வரிப்பணத்தையும். ஏடிஎம் வாயிலாக பணம் எடுப்பதற்கு கூட அளவி நிர்ணயித்த்து, அதுவும் கூட முதலில் 700யூரோவில் இருந்து 260 யூரோக்களாகவும் இப்பொழுது 100 யூரோக்களாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான லெய்கியின்(LEIKI) நஷ்டத்தை கணக்கில் வைத்து அந்த வங்கியை படிப்படியாக சைப்ரஸ் நாட்டின் பொருள் உற்பத்தியை (GDP)விட அதன் வங்கித் துறை மிகப்பெரியதாக உள்ளதால் முடிந்த அளவிற்கு வங்கிகளின் எண்ணிக்கையை குறைத்திடவும் பரிந்துரைத்தது. இப்பொழுது வேறு வழியில்லை ஐரோப்பிய யூனியன் சொல்லும் எல்லா நிபந்தனைகளையும் கடைபிடிக்க வேண்டியது தான் வழி. ஜெர்மனி போன்ற நாடுகள் இந்த நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே வந்தன.
இந்த நிலையிலும் அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோஸ் அநாஸ்டாடியாசிஸ் தன் குடும்ப உறுபினர் மூலம் எல்லாவற்றையும் பதுக்கி வைத்துவிட்டார் என்ற செய்தி எல்லோரையும் அதிரச் செய்தது.

சைப்ரஸ் போலவே, பனாமா, மொரிசியஸ், பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ போன்ற நாடுகளும் கருப்பு பணம் பதுக்கும் முதலைகளுக்கு தஞ்சம் கொடுத்து வரும் தேசம். தொழில் துறையில் உலகம் தொடர்ந்து சந்தித்து வரும் பின்னடைவில் இருக்கும் வீரியம் இன்னும் அதிகமாகும் பட்சத்தில் அமெரிக்கா போன்ற தாதாக்கள் எண்ணெய் வளமுள்ள நாட்டில் கைவைத்தது போலே இங்கேயும் வைக்கும் காலம் வரலாம்.

உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிக முக்கியமானதொரு நிகழ்வே ஐரோப்பிய யூனியனின் நிதி ஒருங்கிணைப்பு தான். இன்று அதுவே ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. ஐரோப்பிய நலனுக்காக சைப்ரஸ் காவு கொடுக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அது நிகழ ஆரம்பித்து விட்டது. இன்று சைப்ரஸிற்கு வந்த நிலை, நாளை ஐரோப்பிய யூனியனில் வேறு எந்த நாட்டிற்கும் வரலாம். ஏன் ஐ.யூவிற்கும் வெளியே கூட பிரச்சினைகள் வரலாம்? அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ, ஐ.நாவோ இந்தியா மீது அப்படி ஒரு நெருக்கடியைக் கொண்டு வரலாம். ஏனென்றால் இந்தியாவும் தான் அமெரிக்காவின் மந்தநிலையின் போது அவர்கள் கடன் பத்திரத்தை மிகக் குறைந்த வட்டியில் வாங்கியது நினைவிருக்கிறதா, இதற்காகத் தான் ஹிலாரி வெளியுறவுத் துறை அமைச்சரானது ஒவ்வொரு நாட்டிற்கும் சுற்றுப் பயணம் மேற் கொண்டார் (சென்னையில் வந்தபொழுது கூட தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்), ஐரோப்பாவிற்கு 10 பில்லியன் டாலர்கள் (56000 கோடிகள்) பிணைத் தொகை தருவதாக (G-20 மாநாட்டில்) கூறியது போன்ற நிலையை எல்லாம் யோசித்துப் பார்த்தால், சைப்ரஸ் மாதிரி நிலை நம் நாட்டிற்கும் ஏன் வாராது?? என்ற கேள்வி எழும்பும்.

-----
ஜீவ.கரிகாலன்
.