சனி, 28 அக்டோபர், 2017

ஓர் ஓவியனின் தற்கொலை என்பது?

https://www.youtube.com/watch?v=BPq2R89o8aM&feature=share

அரசு கவின் கலைக் கல்லூரி மாணவனின் தற்கொலை என்பது பொதுவாக நடைபெறும் மற்ற தற்கொலைகளைப் போன்றது தானா? இதென்ன தற்கொலைகளில் ரேட்டிங் வைக்கிறேன் என்று கேட்கலாம்.
உலகில் அதிகம் தற்கொலைகள் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அனிதாவின் தற்கொலையோ, இளவரசனின் தற்கொலையோ அல்லது நெல்லையில் நடந்த தற்கொலையோ (அந்தக் குழந்தையை எரித்தது தற்கொலை அல்ல) அதற்குப் பின்னால் இருக்கின்ற உலகியல் அழுத்தங்கள், ஒரு கலைஞனுக்குப் பிரதானமாக இருக்காது. எல்லாமே விலைமதிப்பற்ற உயிர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்ற போதும், கலையை நம்பிய மாணவனின் தற்கொலை என்பது சமூகத்தின் மிகப்பெரும் தோல்வியை முன்கூட்டியே அறிவிக்கிறது.
***
பிரகாஷ் தன் நண்பர்களுக்கு அனுப்பிய வீடியோவைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றியதெல்லாம். சமூகத்தின் இது போன்ற பிரச்சனைகளை கையிலெடுத்து வெளியே பேசவேண்டிய கலைஞனையே அந்த அரசியல் கொல்கிறது எனில் அசலான தோல்வி யாருடையது?
**
வாழ்வில் பொருளாதாரத்தைத் தேடியோ, பொருண்மையை மையப்படுத்தி மட்டும் கனவு காணாதவர்கள் தான் நுண்கலையைத் தேடி அலைவார்கள், இசையோ ஓவியமோ திரைப்படமோ நடனமோ எழுத்தோ அவர்கள் கனவு தான் அவர்களின் வாழ்க்கை முறையை வடிவமைக்கிறது.
பொறியாளராகவோ, மருத்துவனாகவோ வணிக மேலாண்மை போலவோ முயற்சிக்கும் மற்ற மாணவர்களின் உந்து சக்தியோ, நோக்கமோ, வாழும் முறையோ மேற்சொன்ன நுண்கலையைத் தேடும் மாணவர்களோடு ஒப்பிட முடியாது.
பெரும்பாலும் அவர்கள் anti-realistic ஆகக் கூடச் சொல்லப்படலாம். ஆனால் அவர்கள் வறுமைக்கும், அவமானத்திற்கும் தோல்விகளுக்கும் அஞ்சுபவர்கள் அல்ல, சமீபத்தில் நான் சந்தித்த சில முன்னாள் ஓவியக்கல்லூரி மாணவர்களில் சிலர் முன்னுதாரணமாய்த் திகழ்கிறார்கள். இருந்த போதும் கல்வி கற்கும் போதே ஒரு கலைஞன் தற்கொலை செய்கிறான் என்பதற்கு நேரடியான காரணம் ஒன்று இருந்திருக்கும்/கலாம்.
கலை அவனுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை என்பது மற்றுமொரு உண்மை. கலை அவனுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை என்பது கலை என்று அவன் நம்பியிருப்பதன் சூழலின், அரசியலின், சந்தையின், தத்துவத்தின் காரணமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவற்றைக் கடந்து நிற்பது தான் கலையாக இருக்க முடியும். ஆனால் “தோற்கடிக்கப்பட்டிருக்கிறது”.
***
இரண்டாயிரத்திற்குப் பிறகான இந்திய வரலாற்றில் மெரினா புரட்சிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அதற்கு வித்திட்டவர்கள் ஓவியக் கல்லூரி மாணவர்கள். அவர்களில் ஒருவன் தான் தன் வாழ்வை முடித்துக்கொண்டிருக்கிறான். கலையால் மட்டும் தான் உணர்வுகளைக் கடத்திச் சென்று தகுந்த வேறு யாருக்கும் ஊட்டிட முடியும். அறிவால் செய்ய முடியாததைக் கலையால் மட்டுமே செய்ய முடியும்.
இவரது மரணம் நிச்சயமாக அரசு கலை கவின் கல்லூரியின் ஒரு செங்கலையாவது நகர்த்திடத் தான் செய்யும்.
ஆனால் இன்று கலையை அரசியல் நசுக்குகிறது, மதம் நசுக்குகிறது, அதிகாரம், பேதமை, பொருளாதாரம் நசுக்குகிறது.
இவற்றிலிருந்தெல்லாம் மீட்சி நிகழுமாயின் அதுவும் கலையால் தான் நிகழும். அதுவே நம்பிக்கை வளர்க்கும் கலை.
ஒரு கலைஞனின் இத்தகையக் கொடும்மரணம் இனத்தின் புற்றுநோயை ஊர்ஜிதம் செய்யும் பயாப்ஸி ரிப்போர்ட் மட்டுமே.
இது வெறும் ஓவியர்கள் உலகு மட்டும் என்று தனியாக அந்நியப்படுத்தும் மற்றவர்கள்......


ஜீவ கரிகாலன்