வியாழன், 20 மே, 2021

எண்ணும்மை

 


எண்ணும்மை :

பரனோயாவும் நாஸ்டால்ஜியாவும்..


இந்த மூன்றாம் உலகப்போரில் கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் தோற்றுக்கொண்டிருக்கின்ற மனித குலம் தன் வீட்டினையே பதுங்குகுழியெனக் கருதி ஒளிந்து கொண்டிருக்கிறது. முழுமையாக இல்லை என்றாலும் அதை முழுமை என்றே சொல்லலாம்.. சில தெருக்கள் முழுவதுமாக சீல் செய்யப்பட்டிருக்கின்றன, போக்குவரத்து தொன்னூறு சதவீதம் இல்லை. நமக்குத் தெரிந்தவர்கள், நம் வீட்டினர் என பலியானவர்கள் எண்ணிக்கை அச்சுருத்திக் கொண்டிருக்கிறது.

மொபைல் சார்ஜர்கள் பழுதானாலோ இண்டர்நெட் வேலை செய்யாமலிருந்தாலோ 2000களில் வாழ ஆரம்பித்துவிடுகிறோம், மின்சாரமில்லையெனில் இன்னும் பின்னே சென்றுவிடுகிறோம். ஆண்ட்ராய்டு டேப்ளாய்டு லூடோக்களில் தாயக்கட்டை அல்லது சோழிகள் உருளும் சப்தங்களை ஒருபுறம் அப்கிரேடு செய்ய யாரேனும் ஒரு டெக்கி வேலை செய்து கொண்டிருக்கலாம். ஒரு நாளின் அடர்த்தி கூடியிருக்கிறது சிலருக்கு, பலருக்கு நீண்டிருக்கிறது. காலிங் பெல்லை அழுத்துவது கொரோனாவாக இருக்கலாம் என்கிற அச்சத்திற்கு இடையில் நினைத்துப் பார்க்க என்ன இருக்கிறது. அசட்டு மனம் தானே இது சர்கரை குறைபாடு உள்ளவனின் நினைப்பிலிருக்கும் இனிப்பைப் போல நினைவுகள் இந்த துயரத்திலும் ஆறுதலாகவும் தான் இருக்கிறது. சில நேரம் சீழ் பிடித்து இருக்கும் புண்ணை பிதுக்குவதாகவும் நினைவுகளில் ஒரு அபாயம் இருக்கிறது. நிகழ்காலத்துடன் எதனை ஒப்பிட்டாலும் அது இனிப்பு தான். 

எத்தனை பேரிடம் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது. சொல்லாமல் விட்ட காதலை, செலுத்தாமல் விட்ட கடனை, பெறாமல் விட்ட அன்பை, அந்த புளியமரத்து பயத்தை அதற்கு ஒப்பான சாமியாடி மீதான பயத்தை, யாரையோ அடிக்காமல் விட்ட ரௌத்திரத்தை. அந்த ப்ரியமான வெக்கையை, பிசுபிசுத்த பனியை, அழுக்காக்கி மகிழவைத்த மழையை. உயிரை உணர வைத்த முதல் வலியை, முதல் பசியை, முதல் காயத்தை, முதல் தோல்வியை, முதல் துரோகத்தை என எல்லோருக்கும் பொதுவான ஒரு வாழ்க்கை எத்தனை நேர்மையானது. ஏழை பணக்காரன் உள்ளிட்ட வர்க்க, சாதி, மத பேதங்களைக் கடந்தும் ஒரு பொதுவான தனிப்பட்ட வாழ்க்கை ஒவ்வொருத்தருக்குமே உள்ளது. இதில் எந்த அனுபவமும் தனித்த ஒருத்தருக்கேயானது என்று எதுவுமில்லை.

இதை தான் அறிஞர் ஆனந்த கூமாரசாமி “....but every person is a special kind of artist” உணர்ந்திருக்கிறார். நான் இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன் நினைவுக்கு இடம் கொடுக்கும் வாழ்க்கை கிடைக்கப்பெற்ற எல்லோருமே கலைஞன் தான்.. 

வாழ்வில் நல்ல ரசனையோடு செய்யப்படும் எந்த வினையும் அதன் நேர்த்தியில் அல்ல அதன் ஈடுபாட்டிலிருந்தே கலைக்கான புள்ளியும் தொடங்குகிறது. நல்ல ரசித்து ருசித்து வாழ்வதை விட தனியாக கலை ஒன்று என்று இருக்கிறதா என்ன? 

அது தனித்தது
அதனாலேயே

 அது உடனிருக்கும்


ஜீவ கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக