வெள்ளி, 28 மே, 2021

எண்ணும்மை 4 - நல்லூழும் நலம்விரும்பியும்

 “உனது பதிவுகளில் வைரமுத்துவை ஏன் வறுத்தெடுக்கிறாய். அவரை விமர்சித்தால் திமுகவிலிருந்து உனக்குப் பகை வரும் என்று சொல்கிறார்கள். நசிந்து கொண்டிருக்கின்ற தொழிலுக்கு கழக ஆட்சியிலாவது லைப்ரரி ஆர்டர் கிடைக்குமென்றால் இப்படியா பதிவுகள் போடுகிறாய்” என்று ஒரு நல விரும்பி என்னை அழைத்துப் பேசினார். 

நலம்விரும்பி என்கிற பெயரில் இங்கே என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாம் இல்லையா?

உன் நல்லதுக்கு தான் சொல்றேன், இந்த க்ரூப் எடு

உன் நல்லதுக்கு தான் சொல்றேன், இந்த கோர்ஸ் எடு

உன் நல்லதுக்கு தான் சொல்றேன், இந்த காலேஜ், இந்த வேலை, இந்த பொண்ணு/ இந்த பையன செலக்ட் பண்ணு

என்று ஆரம்பித்து

உன் நல்லதுக்கு தான் சொல்றேன் இந்த இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி எடு, இந்த கம்பெனில சீட்டு போடு, இந்த இடத்தை வாங்கிப் போடு, இந்த ஸ்கூல்க்கு விண்ணப்பி என்று இன்னொரு சக்கரத்தில் நம்மை தள்ளிவிடுவார்கள் பின்பு அதிலும் நலம் விரும்பிகள். நாமும் நலம் விரும்பிகளாக பலருக்கு..

வைரமுத்து திமுகவோடு நல்லுறவைப் பேணி பாதுகாப்பவராக இருந்தாலும், இன்றைய அரசாட்சியில் அவர் பங்கு என்ன? அவர் என்ன கட்சிக்காக பிரச்சாரம் செய்தவரா? திமுகவின் பரம வைரிகளான அதிமுக ஆட்சி செய்யும்போதே, அதுவும் ஆண்டாள் குறித்த சர்ச்சையிலேயே அவரை யாரும் கைது செய்யவில்லை. நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் அவருக்காகத் தெருவில் இறங்கிப் போராடினார். பா.ஜ.க தருண் விஜயோடு நெருக்கத்திலிருப்பவர்,  நரேந்திர மோடியின் கவிதைகளை வெளியிட்டவர், ரஜினியோடு நெருக்கமாக இருந்தவர். ஒரு பொது ஆளாகவும் தன்னை நிறுவிக்கொண்டவர். அதாவது எல்லோருக்கும் நல விரும்பி..



உண்மையான திமுக நல விரும்பிகள் வைரமுத்துவை ஆதரிப்பது தங்களது விசுவாசத்தின் செயல்பாடு என்று நினைக்கிறார்கள். நான் இதை ஒருபோதும் நம்புவதில்லை. எனக்கு வைரமுத்து விருது வாங்குவது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் அது சேட்டன்களின் இலக்கிய விழுமியம் சார்ந்த பிரச்சினை. ஆனால் இத்தனை குமுறல்களுக்கும் கேள்விகளுக்கும் எந்தவித பயமும் கொள்ளாமல் ஒருவரால் அடுத்தடுத்து நகர்ந்து முன்னேறி போக முடிவதும். பெருந்தொற்று காலத்திலும் தனது பாதுகாப்பிற்காக முதல்வரைச் சந்திப்பதுமாக தன்னை மிகவும் கவனத்தோடு இந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டவனாகக் காட்டுவது தான் எதிர்ப்பைக் காட்டத் தூண்டுவது.

நலம்விரும்பிகள் அமரத்துவம் பெற்றவர்கள்

நம் சமூகத்தில் நலம் விரும்பிகளின் உண்மையான பங்கு என்ன?

“இப்படியே ஆள் ஆளுக்கு பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி, மொதல்ல ஆக வேண்டியது என்னனு பார்ப்பம்” என்கிற வசனத்தைப் பேசும் மூன்றாம் நபர் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறார். சுயமாக ஆர்டர் பண்ணத் தெரியாத நமக்கு, பக்கத்து டேபிளில் ருசித்து சாப்பிடுபவர் நலம் விரும்பி ஆகிறார். நம்மாலும் ஒரு நலன் விரும்பியல்லாமல் வாழ முடிவதில்லை.

ப்ளாக் எழுதும் ஆரம்ப காலத்தில், நான் நிறையவே நலம்விரும்பிகளைத் தேடி வைத்திருந்தேன். ஒரு இடுகையை பதிவேற்றியதும் ஒவ்வொருவருக்கும் இதை யாஹூ, ரெடிஃப் மெஸஞ்சர்கள், ஆர்குட் இன்பாக்ஸ், மின்னஞ்சல் என அனுப்பிவிட்டு ஒவ்வொருவருக்கு போனில் அழைத்தும் வாசித்துக் கருத்திடச் சொல்லிக் கேட்பேன். அத்தனை பேரும் எனக்கு நலவிரும்பிகள் என நினைத்துக் கொண்டேன். 

நலம்விரும்பிகள் நாம் விரும்பும் பதில்களைத் தருபவர்கள்

“மொதல்ல நீ புக்ஸ் வாசிடா என்றோ.. நீயே எழுதனத படிச்சுப்பாரு” என்றோ சொல்வாரில்லை. குறை, விமர்சனம் சொல்பவர்களை நாம் நலவிரும்பிகளாகவும் கொள்வதில்லை.

ஒரு கட்டத்தில் நான் கோவைக்கு சென்றபோது என் நண்பன் ஒருவனைப் பார்க்கச் செல்லலாம் என்று முடிவெடுத்து முகவரி கேட்க அழைத்தால்..

“நான் படிச்சிட்டு சொல்றண்டா” என்று நான் ஏதும் பேசுவதற்கு முன்னரே அழைப்பைத் துண்டித்தான். அதனாலெல்லாம் திருந்திவிடவில்லை சமூக ஊடகங்களில் ஒத்த மனநிலையோடு இருப்பவர்களை இன்னும் தொந்தரவு செய்தபடி தான் இருக்கிறேன். என்ன இந்த எண்ணிக்கை மீச்சிறியது.

நலம் விரும்பி எனும் வேள்வி

உண்மையில் ஒருநல விரும்பியாக இருக்க விரும்புபவன், கசப்பாகத் தான் இருப்பான். நான் அக்கறைப்படும் நண்பர்களுக்கு நான் அவ்வாறு தான் இருக்கிறேன். இதனால் எனக்குப் பிரியமான நண்பர் ஒருவர் தான் எழுதுவதை நிறுத்த நீ தான் காரணம் என்றார். மிகக்கடினமான விமர்சனம் அது. சில காலம் நான் அவரோடு பேசாமலே இருந்தேன். உண்மையில் அவர் என் நலன்விரும்பியாக ஏன் இருக்கக்கூடாது. நான் ஏன் சர்கரை தூவிய மாத்திரையாக இருக்கக் கூடாது என்று நினைத்துக்கொள்வேன். என் சுபாவம் நான் அக்கறை கொண்டவர்களோடு அப்படி இருக்கமுடிவதில்லை. சில சமயம் நானே தவறிழைத்திருப்பேன்.

அண்மையில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எழுதிவரும் கட்டுரைகளில் மகிழ்ச்சி குறித்த தத்துவங்கள் அப்படித்தான் இருக்கின்றன. அதன் மையம் நாம் மகிழ்ச்சி குறித்து அதிகக் கவலைப்படுகின்றோம். 

நல்லது, நன்மை, வெற்றிபயக்கும் காரியங்களை பிரார்த்தனைகளை உடன்படுதலை செய்யவே துணிகிறோம். தமது குழந்தைகளின் வெற்றிக்காக தாம் தோல்விபெறும்/துக்கத்தை/நிம்மதியற்ற வாழ்வுக்கு நலம்விரும்பிகளாக பொறுப்பேற்கிறோம். தமது குழந்தையின் யூட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள், அவரை வெற்றி பெற ஓட்டளியுங்கள், அவர் கல்விபெற கடனளியுங்கள் என்று நலம்விரும்பிகளை நாடுகிறோம்.

நம்பிக்கையின் கருவி நலம்விரும்பி

நலம் விரும்பியாகத்தான் காலையில் தினசரி பலன்கள், பங்குவர்த்தகப் பரிந்துரைகள், ஹவுஸ்ஹோல்ட் விற்பனை விளம்பரங்கள், குண்டாக/சர்கரை/இரத்த அழுத்தம் குறைய ஆலோசனைகள், மனநலப்பயிற்சி வகுப்புகள், போர்னோ சைட்கள், யூட்யூப் சமையல் குறிப்புகள், பிரார்த்தனைக் கூட்டங்கள், வாக்குறுதிகள், நலத்திட்டங்கள். 

முறையான அரச ஆவணங்கள் நமக்கு கல்வெட்டுகள் வாயிலாகத் தான் கிடைக்க ஆரம்பித்தது என்பதை வைத்துக்கொண்டு (சோழர்கால கல்வெட்டுச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு)யோசித்தால், அத்தனை விதமான வரிகளைத் தாண்டி, நிலவுடமையாளர்களின் அதிகாரத்தைத் தாண்டியும் எல்லா வர்கக்குடிகளும் தம்மை இன்றுவரை சமூகத்தில் அங்கம் வகிக்க, அது எந்த நலவிரும்பிகளையும் நம்பாதது காரணமாகியிருக்கும். எல்லா துயர்களையும், ஒடுக்குதல்களையும், வலிகளையும் தாங்கிக்கொண்டு தன்னை தக்கவைப்பதற்கான முனைப்பு (survival instinct) மட்டுமே. அவர்கள் நலவிரும்பிகள் பற்றிய சரித்திரக்கதைகளில் வரும் துணைப்பாத்திரங்கள் மட்டுமே.

நலம்விரும்பி எனும் சித்திரவதை

இப்படித்தான் ஒருநாள், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வற்ற ஊரடங்கையும் அதற்கு ஆயத்தமாக்க மக்களின் நலன்விரும்பிய அரசு ஒன்னரை நாள் கடைகளைத் திறந்துவைக்கச் சொல்ல, ஒட்டுமொத்த நலன்விரும்பிகளும் ஒன்றாய் சேர்ந்து சூப்பர் மார்க்கெட்டுகளைச் சூறையாடிக் கொண்டிருந்தது செய்திகளில் ஒளிபரப்ப என்னோடு படித்த ஒரு நலன்விரும்பி என்னை அழைத்தான்.

ரவை, சேமியா, நூடல்ஸ் பாக்கெட்டிற்காக சண்டைபோட்டு முண்டியடித்துக் கொண்டிருந்த மக்களோடு நின்று கொண்டிருந்த நான் அவன் அழைப்பை லவுட் ஸ்பீக்கரில் போட்டபடி நின்றுகொண்டிருக்க

“மச்சான் எப்படிடா இருக்க”

“நல்லாதாண்டா இருக்கேன், ஊரு முழுக்க கொரோனாவாம் அதான் கேட்டேன் ”

“ஆமா திங்க கெழமல இருந்து லாக்டவுன் தான, கொஞ்சம் கொஞ்சமா கட்டுப்படும்.. சரிடா நான் அப்புறமா கூப்டுறேன்.. கடைல கூட்டமா இருக்குடா”

“பாத்துடா.. முக்கவசம்லாம் அணிந்து இருக்கதான”

அவன் அரசியலில் சேர்ந்துவிட்டதாக ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். அவனது அக்கறையில் தொனித்திருந்த ஆங்கிலக்கலப்பற்ற தமிழ் எனக்கு அதனை நினைவூட்டியது.

“ஆமாண்டா டபுள் மாஸ்க்தான் போட்டுருக்கேன்”

“பார்த்துடா இரட்டை முகக்கவசம் போட்டா மட்டும் போதாது. உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன் பாதுகாப்பான உடலுறவை மெயிண்ட்டெய்ன் பண்ணு”

 “என்னதெ”

நாமும் யாருக்கோ நலவிரும்பியாக இருந்தே ஆகவேண்டும். நமக்கும் சிலர் இருந்தே ஆகவேண்டும் அதுவே விதி.

என் நண்பனின் நலம்விரும்பி அவனை ஆங்கிலக்கலப்பற்ற தமிழைப் பேசச் சொல்லியிருக்கலாம். ஆனால் கூடுதலாக அதிலிருக்கும் அபாயங்களையும் உணர்த்தியிருக்கனும். சமூக இடைவெளிக்கு பாதுகாப்பான உடலுறவு அர்த்தம் ஆகியது போல். 

நலம்விரும்பி எனும் நல்லூழ்

வைரமுத்துவைக் காப்பாற்றுவதற்கு பல்வேறு வியாக்கியானங்கள் உலவுகின்றன. அவர் மட்டும் திமுகவின் நலம்விரும்பியாக இருந்தால் நிச்சயம் பாதுகாப்பான .. நல்லுறவை வளர்க்கவும், முதல்வரின் மீதிருக்கும் அபிமானத்திற்காகவும் நிச்சயம் அவரைச் சந்தித்திருக்கமாட்டார். சரி பொள்ளாச்சியிலே இத்தனைக்குப் பிறகும் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ போல நமக்கிருக்கும் நலவிரும்பிகள் நம்மைக் காப்பாற்றுவர்கள் என்கிற நம்பிக்கை நம்ம வைரத்திற்கு அதற்காக இவ்வளவு உழைக்க வேண்டியிருப்பது இந்த எழுத்துச்சமூகத்திற்கு நல்லூழ் தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக