ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

பஜ்ஜி-சொஜ்ஜி/ 63 கலித்தொகைப் பாடலும் Contemporary காதலும்

சீரியஸாக ஒரு funny attempt.....

சுடர் தொடீ இ! கேளாய் தெருவில் நாம் ஆடும்மணல்
சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து,வரிப்பந்து கொண்டு ஓடி,
நோதக்கச் செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லீரே!

உண்ணுநீர் வேட்டேன் என்வந்தார்க்கு அன்னை,
அடர்பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்
உண்ணுநீர் ஊட்டுவா என்றாள்; என் யானும்
தன்னை யறியாது சென்றேன்; மற்று என்னை
வலை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
அன்னாய்!இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா,
அன்னை அலறிப் படர் தரத் தென்னையான்
உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி
நகைக் கூட்டம் 
செய்தான் என் கள்வன் மகன்

(கலி:51)

மேற்கண்ட கலித்தொகைப் பாடலுக்கு விளக்கம் கூறுவதற்கு எண்ணற்ற உரைகள் இணையத்திலும் கிடைக்கின்றன.

சங்க இலக்கியங்களில் இருக்கும் அகத்திணைப் பாடல்கள் அப்படியே இன்றளவும் சமூகத்தில் நிலவும் உண்மைகளை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன என்பதை இப்பாடலின் உணர்ந்து கொள்ள முடிகிறது. சமகாலத்தில் ஒரே ஒரு வித்தியாசம் தான் கருப்பொருள் மட்டும் மாறி விடுகிறது,  உரிப்பொருள் அப்படியே தான் இருக்கிறது.

சங்க காலத்தில் வரும் தலைவன், தலைவிக்கு  இந்த நாட்களைப் போலில்லாது விடலைப் பருவம் முடிந்த சில காலங்களுக்குள்ளாகவே திருமணம் நடந்து விடுகிறது. அதனால் இன்றைய காலத்தோடு ஒப்பிட்டால் சங்க இலக்கியங்களில் தலைவன் வினைப் பயணால் தலைவியைப் பிரிந்து சென்று பொருள் தேடி திரும்பும் காலத்தில் தான் இன்று திருமணமே நடைபெறுகிறது, ஆனால் நம் எல்லோருக்கும் இருக்கும் விடலைப் பருவத்து முதல் காதலை தான் சங்க இலக்கியங்களில் காண்பதாக உணர முடிகிறது.

நமது முதல் காதலில் தான் குருட்டு தைரியம், பைத்தியக் காரத்தனம், நிதானமற்ற நிலை என மனதின் வசம் இருக்கும் காதலாக தெரிகிறது. அது  மட்டுமே அகம்பாவம் இல்லாத காதல். ஆனால், படித்து முடித்து வேலை தேடும் பருவத்திலெல்லாம் நமக்கு ஒரு நிதானம் வந்து விடுகிறது, அறிவின் கட்டுப்பாட்டிற்கு மாறி விடுகிறது. சங்க இலக்கியப் பாடல்களில் வரும் காதலுக்கும், நமது காலத்தில் திருமணமாகும் போது வரும் 25வயதுக்குப் பிறகான காதலும் வேறு வேறு. அதனால் நமது டீன் ஏஜ் காதல் நினைவுகளுடன் கலித்தொகைப் பாடலில் வலம் வருவோம்.

தோழியிடம் தலைவி தலைவனைப் பற்றிக் கூறுவதாய் அமைகின்றது: 
“தோழி!! நாம் தெருவினில் மணல் வீடு(சிற்றில் வீடு) கட்டி விளையாடும் போது அதை மிதித்துக் கலைத்து விட்டவன்; நமது மாலைகளை அறுத்து மகிழ்ந்தவன்; விளையாடிக் கொண்டிருந்த வரிபந்தினை பிடுங்கிச் சென்றவன்; பின்னர் ஒரு நாள் நானும் என் அன்னையும் மட்டும் வீட்டில் இருந்த பொழுதில், எங்கள் வீட்டிற்கு வந்து தாகமாக இருப்பதாகச் சொன்னான், என் அன்னை அவனுக்கு நீர் கொடுக்கச் சொல்லி என்னைப் பணித்தாள். அவனோ தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் போது என் முன்கையினையும் பற்றி முறுவலித்தான். அங்கணம் நான் அலறிய சத்தம் கேட்டு ஓடி வந்த அன்னையிடம் ‘விக்கினான்’ என்று பொய்யுரைத்தான்; அதைக் கேட்ட அவள் தாய் அவன் முதுகை நீவி ஆற்றிட முனைந்தாள்; அந்நேரத்திலும் தன் கடைக்கண்ணால் எனைப் பார்த்து நகைத்தானே என் கள்வன் மகன்”

*****
இப்படி ஒரு காட்சியை ஒரு 15-20 வருடங்களுக்கு முன்னர் நானும் உணார்ந்திருக்கலாம்:

 “அவன் நான் தினமும் வாசலில் வந்து கோலம் போடும் போதே என்னிடம் சைக்கிளில் பெல்லடித்தவாறே அங்குமிங்கும் சென்று என் கோலத்தை அழித்து விடுவான்; நான் படிக்கும் நேரங்களிலெல்லாம் உரக்க கத்தி விளையாடியும் என் புனைப் பெயர் சொல்லியும் என்னை அழவைப்பான்; பள்ளி விட்டு வீடு திரும்பும் வேளைகளிலெல்லாம் தன் நண்பர்களுடனே வந்து கேலி பேசுவான்; ஒரு நாள் பூக்கூடையுடன் என் வீட்டிற்கு வந்த அவன், பூ விப்பதாகச் சொல்லி வீட்டிற்கு வந்த அவன், என் அன்னையிடம் கேட்கும் விலைக்கு பூ தருவதாகச் சொல்ல, பூ வாங்கிட காசெடுக்க அடுக்களைக்குள்  அவள் தாய் நுழைந்து நேரத்தில், ஒரு ரோஜாவை எடுத்து என் கையில் வைத்து அழுத்தி விட்டு ஓடி விட்டான் அந்த திருட்டுப் பயல். என் அம்மா ‘அந்த பூக்காரப் பயல் எங்கே, இந்த ரோஜா எப்படி வந்தது?’ என்று கேட்கிறாள்”


-
ஜீவ.கரிகாலன்





1 கருத்து:

  1. கரிகாலன், கலக்கிட்டீங்க.... எப்படி இப்படியெல்லாம் ஒப்பீடு செய்யணும்னு தோணுது உங்களுக்கு?

    உண்மையில் இந்த அறியாப்பருவத்துக் காதலில் காதலைத் தவிர வேறெந்த நினைவும் இருக்காது... அதை கலித்தொகை கூறும் நயமும் உங்கள் விளக்கமும் அருமை.... தொடர்க நின் தமிழ்த்தொண்டு!!!!! ????!

    பதிலளிநீக்கு