வியாழன், 6 பிப்ரவரி, 2014

பஜ்ஜி - சொஜ்ஜி - 61 ; அசுரன் ஆளும் உலகு

        


ஆதார் தேவையில்லை
முந்தைய பதிவுகளுக்கான சுட்டி இங்கே

ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்தினால், யாருக்கும் அரசின் சலுகைகளை மறுக்கக் கூடாது. சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்க்கு ஆதார் அட்டை வழங்கப்படக் கூடாதுஎன ஆதாருக்கு எதிரான வழக்கில் செப்.23 அன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.  ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு என்று அத்தியாவசியமான அடையாள அட்டையாக இருக்க வேண்டிய ஆதார் கார்டு நாட்டின் ரகசியங்களை உலகிற்கு விற்கப் பயன்படும் கருவியாகவும், மக்களைச் சுரண்டுவதற்குத் தேவைப்படும் கருவியாகவும் மட்டுமே செயல்படும் என்பது மட்டும் உண்மை.

ஆதார் அட்டையை எதிர்ப்பது நாட்டின் பாதுகாப்பை எதிர்ப்பது என்று ஒருபோது ஆகிவிடாது, மாறாக உலகின் வளரும் நாடுகளின் மக்களை, மக்களின் சேமிப்புகளை, அந்நாட்டின் ரகசியங்களை எல்லாம் உலக வங்கியின் நிர்பந்தம் என்ற பெயரில் நேட்டோ நாடுகள் போன்ற ஒரு சில நாடுகள் மற்றும் அந்நாட்டின் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதில் இருந்து மீட்டெடுத்து நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகும்.

சமீபத்தில் உலக வங்கி நடத்திய கருத்தரங்கில் பேசிய நந்தன் நிலேகனி, 19-ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்க கண்டத்திற்கு பிழைக்க வந்த ஐரோப்பியர்களை, கனடாவின் எல்லிஸ் தீவைச் சேர்ந்த குடியேற்றத் துறை அதிகாரிகள் அங்கு குடிவந்த வெவ்வேறு நாட்டினரின் பெயர்களையெல்லாம் ஆவனங்களில் இருந்து நீக்கி விட்டு, ஒவ்வொருவருக்கும்  அந்த அதிகாரிகளே ஒரு பெயரை சூட்டி, இனி இந்த நாட்டில் இதுதான் உன் பெயர் என்று அறிவித்தார்கள். ”ஆதார் என்பது உலகின் பிரம்மாண்டமான பெயர் சூட்டும் விழாஇது 21-ஆம் நூற்றாண்டின் எல்லிஸ் தீவுஎன்றார் நிலேகனி
வெவ்வேறு மொழி பேசும், இனம், மதம், கலாச்சாரம் கொண்ட மக்களை பார் கோடு ஆக்கும் முறை தான் ஆதார் கார்டு என்று விளங்குகிறது.

சென்ற மாதம் கூட மதுரை ஹைகோர்ட்டு, ஒரு குடும்பத்திற்கு சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்று தீர்ப்பளித்தது. உண்மையில் ஆதார் அட்டையின் தொழில்நுட்பம் அத்தனை பாதுகாப்பானதா?? ஒரு நிபுணரிடம் விசாரித்தேன்.

நுகர்வோர் நல ஆர்வலரான திரு.விசுவநாதன் பகிர்ந்து கொண்ட தகவலின் படி
ஆதார் கார்டு நாட்டின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்ற போதிலும், அந்தப் பாதுகாப்பு அம்சத்தை ஒப்படைத்திர்க்கும் கைகள் தான் பிரச்சினைக்குரியதாகத் தெரிகிறது. WWW போர்டலில் இருக்கும் நமது அரசாங்க இனையங்களின் பாதுகாப்பிற்கே உத்தரவாதம் இல்லாத நிலைமையில் இது போன்ற பாதுகாப்பு அம்சங்களில் எந்த உத்திரவாதமும் இல்லை.
·         அடிப்படையில் ஆதார் கார்டு மூன்று அம்சங்களைத் தகவலாகத் திரட்டுகிறது:1. பயோ மெட்ரிக் எனப்படும் கண்கள் மற்றும் விரல்களின் ரேகைகள் ஆகியவற்றின் தகவல்கள், நிழற்படம் மற்றும் குடிமகனின் இதர் ஆவனங்களின் தகவல்கள். இதில் ஒரு குடிமகனின் கைரேகைகள் எந்த ஒரு குற்றமும் இன்றி பதியப் படுவது ,ஒரு தனி மனிதனுக்கான அடிப்படை உரிமை மீதான அத்துமீறல் என்று அரசியல் சாசனமே கூறுகிறது. ஒவ்வொரு குடிமகனின் பயோ மெட்ரிக் தகவல்களையும் சேமித்து வைத்திருப்பதற்கு முன்பு நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற்றிட வேண்டும், ஆனால் இதற்கான சட்ட திருத்தம் இன்னும் செய்யப் படவில்லை.
·         உண்மையில் தொழில்நுட்பத்தில் இருக்கும் பிரச்சினையாக இதில் வரும் உறுதியளிப்பு எவ்வளவு தூரம் நடை முறையில் இருக்கிறது என்றால் அதற்கு பதிலில்லை தான். இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னால் அளிக்கப்பட்ட தகவல்களை உறுதிப் படுத்த அவருக்கு 4 நாட்கள் வரை அவகாசம் கொடுக்கப் பட்டிருக்கிறது, ஆனால் இதைத் திருத்துவதெற்கென்ற சிறப்புக் கவுண்டர்களோ, இந்த தகவல்களை (முக்கியமாக பயோ மெட்ரிக்) உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எந்த ஒரு குடிமகனுக்கும் வாய்ப்பு வழங்கப் படுவதில்லை. இதனால் வரும் ஆபத்து தான் DATA MIS-MATCH, ஒரு குடிமகன் சங்கேத எண்ணாகப் பதியப் பட்ட பின் அவனாக நினைத்தாலும் தவறான தகவல்களை மாற்றிவிட முடியாது.
·         ஒருவர் தன் தகவல்களை ஆதார் மூலம் பதிவு செய்தால், இணையத்தில் சென்று அதை சரிபார்த்துக் கொள்ள இடமிருந்தும், வழங்கப்பட்ட பல அட்டைகளுக்கு இன்னமும் இணையத்தில் தகவல்கள் சேமிக்கப்படவில்லை.
·         பல ஊர்களின் ஏற்கனவே வழங்கப்பட்ட ஆதார் கார்டு, திரும்பப் பெறப்பட்டு, புதிய அட்டையாக வழங்கப்பட்ட விதம் தான் இது குறித்த சந்தேகத்தை எழுப்பியது. அதாவது இந்த அட்டை 2010ல் வழங்கப் பட்ட போது வெறும் அடையாள அட்டையாகவும், இப்போது SMART CARD ஆகவும் மாறிவிட்டது என்று சொல்கிறார்கள்.
·         50% சதவீத மக்களின் அடையாளங்கள் இந்த திட்டத்திற்காக சேமிக்கப்பட்டாலும், பொதுவாக குடும்பத் தலைவருக்கு மட்டும் இந்த அட்டை வழங்கப்படுவதற்கு தாமதம் ஆவதாகத் தெரிகிறது, இதற்காக நடைபெற்ற ஒரு சிறிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த தாமதம் குடிமைப்பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு போன்றவை குடும்பத் தலைவரின் பெயரிலேயே வழங்கப் படுவதால், இதில் சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் அரசு தரும் மானியங்கள் -குடிமகனைச் சேர்வதற்கு வழியில்லாமல் போய் விடும்
·         எல்லாவற்றிற்கும் மேலாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிற்கும் குடிமக்களுக்கு மட்டுமின்றி அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்குமே இதில் பிரச்சினைகள், உறுதியளிக்க இருக்கும் அவகாசம், அட்டை வழங்கப்படும் முன் இணையத்தில் ஏற்றப் பட வேண்டிய தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது தான் கவலைக்குரிய விசயம். இதனால் பாதிப்படையப் போவது நடுத்தர மற்றும் ஏழை ஜனங்களே.

  எல்லா வகையிலும் ஆதார் அட்டைக்கான எதிர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

நன்றி

-ஜீவ.கரிகாலன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக