சனி, 8 பிப்ரவரி, 2014

பஜ்ஜி-சொஜ்ஜி-62 என்ன பெயர் வைக்கலாம் என் ப்ளாகிற்கு


மொக்கையாக ப்ளாக் எழுத ஆரம்பித்த காலத்தில்(இப்ப மட்டும் என்னவாம்!!), அலுவலகத்தில் கிடைத்த சொற்ப LEISURESம், வாசிப்பதற்கு கிடைத்த எனது நண்பர்களும்(கல்லூரி நண்பர்கள் ரூமில் உடனிருப்போர்கள்) தான் மூலதனம். இதை வைத்துக் கொண்டு மனதில் எழுத்தாளர் ஆகி காரில் கை காட்டிய படியே வண்டி ஓட்டுவோம் நண்பர்கள் போஸ்டர்கள் ஒட்டுவார்கள் என்றெல்லாம் கனவு காணவில்லை. ஹாபி என்று பொழுதுபோக்கிட வேறு எந்த வழியும் இல்லாத போது, ‘நாம் தான் ஊரெல்லாம் அரட்டை அடிக்கிறதுலையும், கதை சொல்லுறதுலயும் பெரிய ஆளாச்சே’ என்று மனதுக்குள் ஒரு சுயபிம்பம்.

2005லயே ஒரு வலைப்பூவை ஆரம்பித்து தங்க்லீஸுலையே பதிவுகளிட ஆரம்பித்தேன், நம்ம காதல் வாழ்க்கையெல்லாம் அதில் டைரி குறிப்பு போல எழுதினேன். அப்புறம் 2008 பொருளாதாரச் சிக்கலில், நான் மட்டும் விதிவிலக்கா என்ன சுமார் ஏழு கம்பெனிகள் ஒரே வருடத்தில் மாறிவிட்டு, வாழ்க்கையை மறுபடியும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கிட்டதட்ட 5 : 2 என்ற அளவில் எனது சம்பாத்திய விகிதத்தை விட்டுக் கொடுத்து நிம்மதியான வேலையொன்றை வாழும் ஊரை விட்டு மாநகரத்தில் தஞ்சம் புகுந்தேன். எழுதுவது மூலமாக எனக்கு ஆறுதல் கிடைத்தது. எனக்கான எழுத்தாக என் சுபாவத்தை மகிழ்வுடன் வைத்துக் கொள்ள என்று ஆரம்பித்தேன். வலைப்பூவிற்கான எந்த அணியிலும் சேர்ந்து இயங்க விருப்பமில்லை, வார வாரம் 2-3 சினிமாக்கள் சென்றாலும் எல்லாவற்றிற்கும் விமர்சனம் எழுதும் ஆசையும் வரவில்லை. ஆனாலும் வாரத்துக்கு 02-03 பேர் பார்த்து வந்தார்கள். 

2012 மார்ச் மாதம் ஒரு நண்பர் என்னுடைய ப்ளாகில் இருந்த பதிவை திருத்தி, இதை நான் எடுத்துக் கொள்கிறேன் என்றார், அடுத்த மாதமே அதை அச்சில் பார்த்தேன். ப்ளாகில் எழுதுவதற்காக வாசிக்கக் கிடைக்கும் புத்தகங்கள், இணையத் தரவுகள் என்று தேடியதில் தான், புது நண்பர்கள்; யாவரும்.காம், ஓவியக் கலை வரலாறு என்று என்னை தக்க வைத்துக் கொண்டேன் ஒரு 30 கட்டுரைகளாவது பிரசுரமாகியிருக்கும், தினமும் 50பேர்களாவது வலைப்பூவை வாசிக்கிறார்கள். நிற்க. இந்த சுயபிரதாபங்கள் எல்லாம் எதுக்கு??

ஆரம்பத்தில் வலைப்பூவிற்கு ஒரு நல்ல பெயர் கூட வைக்கத் தெரியாது என் பெயரையே வைத்துவிட்டேன் கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டும் 20000 பேர்களாவது வாசித்திருப்பார்கள் இப்போதாவது ஒரு நல்ல பெயர் சூட்டலாமே என்று தோன்றுகிறது.

பேசாமல் பஜ்ஜி-சொஜ்ஜி என்று வைத்து விடட்டுமா??

அல்லது கரிகாலன் என்று வைக்கட்டுமா??, நல்ல தமிழில் இருக்கவேண்டும் என்று தீர்மானித்ததால். “காலன்” என்பது வடமொழி என்று ஒரு நண்பர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது, இப்படியெல்லாம் மொழி மீது வடிகட்டிக் கொண்டிருந்தால் நாம் நமது வழக்கு மொழியையே இழந்து விடும் அபாயம் இருக்கிறது. என்னைப் போல ஏழு ஊர்களில் நாடோடி போல வாழ்ந்தவனுக்கு தாய்மொழி உண்டென்றாலும் தாய்மொழி வழக்கு சரியாக இராது, கரூரிலேயே வாழ்வின் பெரும்பகுதி இருந்ததால் எனக்கு கொங்கு வட்டார வழக்கின் சாயலே இருக்கும், அதிலும் கொஞ்சம் மதுரைக் கலப்பு கலந்திருக்கும். தனித்தமிழ் முயற்சி என்று நண்பர்கள் பேசும் தெளிவான உரைநடைத் தமிழால் மற்ற மொழியின் ஆதிக்கத்தை விரட்டும் போது உடன்சேர்ந்து நம் வட்டார வழக்குமல்லவா ஓடிவிடுகிறது. வட்டார வழக்குகளில் நம்மையே அறியாமல் நம் முன்னோர்களிடமிருந்து காலங்காலமாக கடத்தி வந்த சில் சொற்றொடர்களின் பின்னேயிருக்கும் செய்திகள், இது போன்ற நல்ல தமிழுக்கு மாறும் பொழுது அறுபட்டுப் போய்விடுமே என்கிற அச்சம் இருக்கின்றதென்றாலும். இந்த விவாதம் இந்த பதிவுக்கானது அல்ல. கரிகாலன் என்ற பெயரை தேர்ந்தெடுக்காததால் இதையும் நிறுத்தி விடுகிறேன்.

சரி கரிகாலன் வேண்டாம் என்றாலும் ஏதாவது குறியீட்டுத் தன்மையுள்ள பெயரை பட்டினப்பாலையிலிருந்து தேர்ந்தெடுக்கலாமா என்றும் யோசித்தேன். 

ஏதாவது மதுவின் பெயர் இலக்கியங்களில் இருக்கிறதா என்றால்:தென்னங்கள், பனைக்கள், அரிசிக்கள், தோப்பி, தேக்கள்,பிழி ,மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல்,நறவு என பலவகைகள் உண்டு. நெல்லால் சமைத்த கள் நறவு எனவும்,  தேனால் சமைத்த கள் தேறல் எனவும்,  பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள்தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர். கள் தயாரிக்கும் முறைகூட சில பாடல்களில் விளக்கப்படுகின்றன. (நன்றி ஆதித்த இளம்பிறையன்.
இத்தனை குழப்பமாகி விடுகிறது. 

சரி இன்றிரவுக்குள் பெயர் மாற்ற வேண்டும், இதை வாசிக்கும் நண்பர்கள் யாராவது பரிந்துரைத்தாலும் சரி.

-ஜீவ.கரிகாலன்





1 கருத்து:

  1. பெயரை மாற்றலாம், அதையும் செந்தமிழில் வைக்கலாம் என்று நினைத்ததெல்லாம் சரிதான்..... மதுவின் பெயரை வைக்கலாம் என்று தங்கள் திருவுள்ளத்தில் தோன்றியதுதான் ஏனென்று தெரியவில்லை.....

    பதிலளிநீக்கு