செவ்வாய், 12 மார்ச், 2013

நான்

முக்கோணத்தின்
குறும்பகுதியாக, அளவுகளில் ஒரு பின்னமாக
வாழும் துர்பாக்கிய நிலையில் 
நான் உழன்று 
கொண்டிருக்கின்றேன்.

என்னை அறியாமல்,
என்னிடம் கேட்காமல்.
நான் கணக்கெடுக்கப் பட்டுள்ளேன்
சமூகச் சலனங்களின்
என்னை வகுத்துப், பெருக்கிக்
கூட்டிக், கழித்து அழிக்கின்றனர்.

பண்பாட்டுச் சமன்பாடுகளில்
நிறுவிய என் ஆன்மா
சித்தரவதை அனுபவிக்கின்றது.

தசம புள்ளிகளில்
என் ஆசைகள் விலைபேசப் படுகின்றன.
எண்ணிக்கைகளின் பற்றாக்குறையில்
காதலின் கணக்கு பிழையாகிறது.
பிரிந்த பின்னும் காயப்படுத்தும்
அல்ஜீப்ரா கனவுகள்.

பூஜ்யமாய் என்னை சுவீகரித்து
வாழ்கிறேன் முழுமையாய் இருந்தும்
அருகில் ஒரு இலக்கம் வைத்தே
மதிப்பீடு செய்கிறது.
புள்ளியியல் தகவல்களாக
என் தோல்விகளைக் கண்டெடுக்கிறது
இச்சமூகம்

கணித விளக்கங்களில்
வாழ்வின் சூத்திரம்
என்னிடம் கேளாமல் 
திருத்தி எழுதப் பட்டு விட்டது

- ஜீவ கரிகாலன்

1 கருத்து: