வியாழன், 20 ஏப்ரல், 2017

23வதாக எட்டிப்பார்த்தவர்

23வதாக எட்டிப்பார்த்தவர்

ஓவியம் : கணபதி சுப்ரமணியம்




”ஹனி”

“சொல்டா”

அந்த மாலையில் அதற்கு மேல் பேசிக்கொண்டவைகளை நான் என் நினைவில் வைத்துக்கொள்ளப் போவதில்லை. ஏன் என்று கூட கேட்காதீர்கள் நினைவில் அவை யாவும் வந்துவிடக்கூடாது என்பதில் தான் என் அத்தனை பிரயர்த்தனமும் இருக்கிறது. நகரம் அந்தப் பேரிடருக்குப் பின் ஒவ்வொரு நாளும் துயிலும் காலம் நீண்டுவிட்டது போன்ற தோற்றம் மிகுந்திருக்கிறது.

லட்சம் கிலோமீட்டர் ஓடி முடித்து, மீண்டும் முதலில் இருந்து சுற்ற ஆரம்பித்த என் இருசக்கரவாகனத்தின் மீட்டர், கூடுதலாக மேலும் இருபத்தைந்தாயிரம் கிலோமீட்டர் பயணித்துவிட்டது. ஆயிரக்கணக்கில் மைல்களைக் கடந்துவிடுவதெல்லாம் பயணமாகிவிடுமா?. உண்மையில் பயணம் என்பது அச்சத்தைக் களையவேண்டும். அபயம் தருவதே பயணத்தின் இயல்பு. ஆனால் நான் பயணிக்கவில்லை, இராட்டினச் சுற்றாகச் சுற்றிக்கொண்டே இருக்கிறேன். அதைப் பயணம் என்று சொல்ல முடியாது, போதை என்றும் சொல்ல முடியாது வேண்டுமானால் மயக்கம் என்று சொல்லலாம்.
வேறு எங்கேயாவது மனதைச் செலுத்த வேண்டும். அவற்றை மறக்க இயலாது, ஆனால் கலைத்துப்போட முடியும். அன்றைய பயணத்தில் ஜீ சொன்ன வார்த்தைகளை அசை போட்டுப் பார்த்தால், அது ஒன்று தான் இப்போது என்னிடம் இருக்கும் ஒரே உபாயம். களையமுடியாதவற்றை இப்போது கலைத்துப்போட்டுவிடலாம்.
முடியுமா?

பேரிடரின் பதட்டம் தனியாத அந்த பெருநகரத்தின் மாலை கொஞ்சம் ஈரப்பதத்தையும், நிறையவே பயத்தையும் கொண்டிருந்தது. விபத்தில் முதலுதவி அளித்ததாக ஒட்டுப்போட்டிருந்த தார்ச்சாலைகள், அப்புறப்படுத்தாத முறிந்து போன மரங்கள், உடைந்து போன தடுப்புச்சுவர்கள், பறந்து சென்று விழுந்த விளம்பரத்தட்டிகளை ஒவ்வொன்றாகக் கடந்து கொண்டிருந்தேன்.

இன்றைய மாலையைத் தவிர எல்லா பொழுதுகளையும் கலைத்துப்போட்டுப் பார்க்க இயலுமா? இயலுமெனில் இந்த நகரத்தின் நம்பிக்கையைப் போல் நானும் மீண்டெழுவேன்.

”ஹனீ”

“சொல்லுடா”

“உன்கிட்ட ஒன்னு கேட்கனும்”

இல்லை மருந்துண்ணும் போது குரங்கை நினைக்கக் கூடாது என்கிற கதை தான். அதற்கு மேல் யோசிக்கக் கூடாது என்று தீர்கமாக முடிவு பண்ணினால் மீண்டும் மீண்டும் இதையே தான் நினைத்துப் பார்க்க வேண்டி வரும்.

“என்ன கேட்கப்போற”

“நான் கேக்குறன்னு கோச்சுக்காத பொறுமையா பதில் சொல்லு”

சிரிப்பு தான் வந்தது. சிரித்தபடியே சிக்னலைப் பார்க்காமல் கடக்க முற்பட, குறுக்கே வேகமாகப் பாய்ந்த மினிடோர் வேனில் இருந்து ஒருவர் குட் ஈவ்னிங் என்று பொருள் தரும் எதுகை மோனையுடைய இரண்டொரு சொற்களை உதிர்த்துச் சென்றார். அங்கிருந்தபடியே என்னைக் கைகாட்டித் திட்டிக்கொண்டிருந்தக் காவலரை என் கைநீட்டி வணக்கம் தெரிவித்தேன். அது என்னை உள்ளூர்க்காரன் தான் என்றும் தெரியாமல் கடந்து வந்துவிட்டேன் என்றும் காவலருக்கு உணர்த்தும் உடல்மொழி. என்னைக் கடந்து செல்ல அனுமதிப்பார் என்று தோன்றியது.

உலகில் எல்லோர் மீதும் ஒரு நம்பிக்கையும் அனுமானமும் தோன்றிவிடுகிறது. இப்படியான அனுமானங்கள் தான் உறவுகளை, பகையை, நம்பிக்கையை, குரோதத்தை, பக்தியை, காதலை உருவாக்கிறது. எல்லாமே கற்பிதங்கள் தான். ஆயிரமாயிரமாண்டுகளாக நடமாடிக்கொண்டிருக்கும் சகமனிதர்கள் மீதான அனுமானங்களின் சுவடுகளே இப்படி கற்பிதங்களாகின. என்னை அவர் தடுக்கப்போவதில்லை. ஆனால் அவள் தடுத்தாள்.

 “ச்சீ”

“ஹனீ பொறுமையா இரு முழுசா என்னப் பேசவிடு”

“ஷட் அப்”

நான் தடுக்கப்பட்டேன், அவளால்.

குறுக்கே வாகனம் எதுவும் வராமல் இருந்தாலும், சிக்னலுக்காக காத்துக்கொண்டிருந்தேன். சலசலத்துப் போன டூவீலரின் வலதுபுற இண்டிக்கேட்டர் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது. வாகனம் ஓட்டும் போது அது பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருக்கும், அதை ஒட்டுவதற்கோ, அறுத்தெறியவோ தோன்றவில்லை.

“ஏன்டீ இப்படி எரிஞ்சு விழுற. கொஞ்சம் பொறுமையா கேளு”

“…”

“என் நெலமைய யோசிச்சிப்பார்த்தியா”

சிக்னல் மரம் பச்சையை உமிழ்ந்தது. சிக்னலைக் கடந்து பாலத்தில் ஏறினேன். நூறு சீ சீ இஞ்சின் எட்டு வருட உழைப்பில் தன் பெரும்பான்மையான வாழ்நாளை இழந்துவிட்டேன் என்று என்னிடம் சொல்லி சில மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் வண்டி மாற்றிடும் எண்ணம் இப்போது இல்லை. பாலத்தில் ஏறும்போதே அன்றை இரவு நானும் ஜீயும் இந்த பாலத்தைக் கடந்து சென்றது நினைவிற்குள் வந்தது. அவளை விட ஜீயின் அண்மையை நேசித்திருக்கிறேன். இப்போது மனம் விட்டுச் சொல்லலாமே இனி யார் தான் தடுப்பார்கள். இன்றைய பொழுதில் நான் என எதை நம்பிக்கொண்டிருக்கிறேனோ அதன் வடிவத்தை அதிகம் செதுக்கியவர் ஜீ தான். இவளைப் போலவே அவரும் ஒரு புள்ளியில் என்னிடமிருந்து விலகிவிட்டார். யாரும் யாரிடமிருந்து விலகுவதற்கு காரணங்கள் தேவையில்லை அந்த காலம் அல்லது அந்த கணங்கள் மட்டும் போதும். உண்மையில் அவை சில விநாடிகளே. நானும் அவரை விட்டு விலக சில விநாடிகளே போதும். அவளை விட்டு விலகவும் அவ்விநாடிகளே போதும். பாலத்தின் மையத்தில் செல்லும் பொழுது வண்டியை ஓரங்கட்டினேன்.

“லீனியர்னு ஒன்னு இருக்காடா”

“ஏன் ஜீ அப்படி சொல்றிங்க”

“உன்னால நேர்கோட்டுல நீ பார்த்தத அப்படியே வரிசையா சொல்ல முடியுமா?”

“ஏன் ஜீ.. தாராளமா சொல்லாம்”

“எங்க இந்த நைட்டுல அப்படியே உன் கண்ணில் படுறத லீனியரா சொல்லு பார்ப்போம்”

ஒரு பயணம் முடித்து ஜீயுடன் நகருக்குள் திரும்பிக்கொண்டிருக்கையில் இதே சிக்னலைக் கடந்து இந்த பாலத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது தான் இப்படி பேசிக்கொண்டிருந்தோம். எதார்த்தவாதம் குறித்தும் நேர்கோட்டுத்தன்மை குறித்தும் பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் மனதில் நிழலாடின. ஒரு ஓவியராக அவற்றை அபத்தமான கற்பிதங்கள் என்று சாடினார். அதை நிரூபித்தும் காட்டினார். கலையை கலையாக மட்டும் பார்த்தால் போதும் என்பது அவரது கோட்பாடு. மக்களுக்கான கலை என்று சொல்வது வெறும் பிரச்சாரமே என்றும் அவர் சொல்லிக்கொண்டிருப்பார். இதே பாலத்தைக் கடந்து கொண்டிருக்கையில் தான் என்னை நேர்கோட்டில் நான் கவனிப்பதைச் சொல்லச் சொன்னார்.

“பாலம், திசைகாட்டி, இலவச எமர்ஜென்சி போன் பூத், சாலைக்கு நடுவே நடப்பட்டிருக்கும் சிறு புங்க மரங்கள், குரோட்டன்கள், தார்ச்சாலையின் ஒளிரும் ஃப்ளோர்சண்ட் எல்லைக் கோடுகள், எல்.ஈ.டீ நியான் விளக்குகளில் ஒளிரும் அரசின் விளம்பரப்பலகைகள், விளக்கொளியில் தார்ச்சலையில் பதித்துவைக்கப்பட்டிருக்கும் மின்னும் உபகரணங்கள், பாலம், மஞ்சள் விளக்குகள்”

மஞ்சள் விளக்குகள்  என்று சொல்லும் போது நானும் ஜீயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஏதோ ஒன்றை கவனிக்காமல் விட்டுவிட்டதையோ அல்லது எதையோ கவனிக்காமல் போனதையோ மறந்தோம். காரினில் லதா மங்கேஷ்கரும், ஹரிஹரனும் பாட ஆரம்பித்து இருந்தார்கள்.
மீண்டும் சொல்லிப் பார்த்தேன்.

ஒளிரும் அரசின் விளம்பரப்பலகைகள், விளக்கொளியில் தார்ச்சலையில் பதித்துவைக்கப்பட்டிருக்கும் மின்னும் உபகரணங்கள், பாலம், மஞ்சள் விளக்குகள்.
சட்டென ஏதோ பொறி தட்டியது போல் உணர்ந்தோம். அடுத்ததாக வரும் இடைவெளியைப் பயன்படுத்தி வாகனம் யூ டர்ன் அடித்தது.

விளக்கொளியில் தார்ச்சலையில் பதித்துவைக்கப்பட்டிருக்கும் மின்னும் உபகரணங்கள், பாலம், மஞ்சள் விளக்குகள், காரின் விளக்கொளி (ஹை பீம்), காக்பிட், டாஷ் போர்ட், ஸ்டியரிங், கார் பெர்ஃப்யூம். சிரித்தேன். அவரும் சிரித்தார். நாங்கள் எதை கவனிக்காமல் கடந்து வந்தோம்.

அது லதா மங்கேஸ்கர் இல்லை ஆஷா போஸ்லே என்று திருத்திக்கொண்டேன். ஆஷாவின் பெங்காலி போர்ஷன் – இளையராஜாவின் பியானோ சப்தம் மட்டும். பியானோ சப்தம் மட்டும். எங்கள் கண்முன் அந்த காட்சித் தெரிந்தது.

“உன்னால் நேர்கோட்டில் எல்லாவற்றையும் சரியாகச் சொல்லிவிடமுடியுமா” என்று மறுபடியும் என்னிடம் கேட்டார்.

லீனியர் என்பது ஒரு மாயா என்றேன். இருவரும் சிரித்தோம். ஏனெனில் அது ஒரு அற்புதக் காட்சி, அதை நாங்கள் கவனிக்காமல் கடந்து வந்தோமா? இல்லை எங்கள் லீனியர் கற்பிதத்தில் அந்தக் காட்சி கியூவில் வரிசையாக வந்து நிற்கத் தாமதமாகியதா.
அந்தப் பாலத்தில் மஞ்சள் விளக்குகள் இல்லை, எல்.ஈ.டி. வெள்ளை விளக்குகள், ஏதோ மின்சார இணைப்புக் கோளாறோ அல்லது அற்புத அனுபவத்திற்கான ஒரு துளி வரமோ எங்கள் கண்களுக்கு அந்தக் காட்சி கிட்டியது. ஞாயிறு நள்ளிரவு என்பதால் எந்த வாகனமும் எங்கள் கண்ணில் தென்படவில்லை.

பாலம், எல்.ஈ.டி விளக்குகள், மின்சார இணைப்பில் ஏற்பட்டிருக்கும் ஏதோ ஒரு கோளாறு காரணமாக அடுத்தடுத்த விளக்குகள் மாற்றி மாற்றி எரிவதும் அணைவதுமாக இருக்கின்றது. அந்தக் காட்சியை நாங்கள் கவனித்திருந்தோம், ஆனால் அதை உணர்வதற்கு தாமதமாகிவிட்டது.

பாலத்தின் ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு காரிலிந்து இறங்கினோம்.
அருகருகே இருக்கின்ற இரு விளக்குகளில் ஒன்று எரியும் போது மற்றொன்று அணைந்தும், மற்றொன்று அணையும் போது அடுத்தது எரிந்தும் அந்தப் பாலத்தை ஒரு மேடைக்கச்சேரியாகக் காட்டிக் கொண்டிருந்தது. மேடைக்கச்சேரி என்று நான் சொன்னதும் அவர் வேகமாகக் காரினுள் சென்று கதவைத் திறந்துவிட்டார். அந்தப் பாடலை மறுபடியும் ஒலிபரப்பினார். அதிகப்பட்ச ஓசையுடன், அந்தி பியானோ இசை மெய்சிலிர்க்க ஒலித்தது.

“நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” அப்போது தான் அவளோடு பழக ஆரம்பித்து இருந்தேன். அவள் பாடுவாளா என்று நினைத்துப் பார்த்தேன். இளையராஜாவின் அந்த பாடல் இப்படி தான் ஏகாந்தமான சூழலில் இசைக்கப்பட்டிருக்குமா?

அதில் வரும் பியானோ போர்ஷன் இப்படி தான் இருந்திருக்கும் எனத் தோன்றியது. அது அந்த பாலத்தில் நிகழ்ந்த இசைக் கச்சேரியாகவே தோன்றியது.

நாடகம் முடிந்த பின்னாலும் நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்கவேடம் இனி போதும் கண்ணே.

ரசனையான வாழ்வு அத்தனை எளிதானதா என்றால் அது மிக எளிதானது. ஆனால் என் நண்பர் சொல்வது தான் சரி, BEING SIMPLE IS THE TOUGHEST THING.

என் மனம் பதிவு செய்ததைச்சொல்லும் பாணியிலும், தடுமாற்றத்திலும், வேட்கையிலும், தொந்தரவிலும், அயற்சியிலும், அதை வெளிப்படுத்தும் ஆசையிலும், அற்பணிப்பிலும் உணர்ந்து கொண்டதும் இதுதான். EXPRESSIONISM என்றும் IMPRESSIONISM என்றும் அவர் சொல்லிக்கொடுத்தவை அன்று தான், இதே இடத்தில் தன் எனக்குப் புரிய ஆரம்பித்தது அல்லது உணர ஆரம்பித்தேன்.

ஒரு கட்டத்தில் நான் அந்த பியானோவில் தான் நிற்கிறேனோ என்று தோன்றியது. என் முன்னே இருக்கின்ற விளக்கு அணையும் போது, நானும் தடுமாறினேன். அவர் என்னை விட்டுத் தள்ளிச்சென்று சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். எனக்கும் எதுவோ தேவையாக இருந்தது. ஏனோ அவளை நிணைக்கலானேன். அவள் வசீகரமானவள் தான். ஆனாலும் வேறு என்னவோ ஒரு காரனம் இருந்தது. அதையும் தாண்டி அவளை நான் மோகித்த கணம் அங்கிருந்தே தொடங்கியிருக்க வேண்டும். அந்த விநாடிகளை நான் இந்த பாலத்திலிருந்து தான் எடுத்துக் கொண்டேன்.

இப்போதும் இதே பாலம் தான், இன்று அதற்கு நேர் மாறான எண்ணம். அவர் உடைத்துப் போட்ட நேர்கோட்டுப் பார்வையைக் கொண்டு இவற்றை உணர்கிறேன்:
இன்று மாலை அவள் என்னைப் பிரியவில்லை. எப்போதோ பிரியத் தயாராக இருந்திருக்கிறாள். அதற்கான விநாடியைக் காரணமாக நான் தான் தாமதமாகக் கொண்டு வந்திருக்கிறேன்.

அன்று நிறுத்திய அதே இடத்திற்கு எதிர்புறம் என் டூவீலரை நிறுத்திவிட்டு, அந்த பாலத்தின் விளிம்பில் நின்றபடி எட்டிப்பார்க்கலானேன். நகரம் இருளை நைட்டியாக அணிந்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லிப்பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது. இந்த உவமை எக்ஸ்ப்ரெஸனிசமா? இம்ப்ரெசனிஸமா? கலை, காதல் இரண்டும் மயக்குகிறது, போதையை விட மோசமானது, வீரியமானது. அப்படியே குதித்து விடலாமா என்றும் தோன்றியது. திடீரென்று அந்த புறநகர்பகுதியில் ஓங்கியிருந்த சில கட்டடங்களில் நியான் விளம்பரப்பலகைகள் எரிய ஆரம்பித்தன. ஒருவாரம் கழித்து இந்த புறநகர் பகுதிக்கு மின்சார இணைப்புக் கிடைத்திருக்கிறது. நகரம் தன்னை மீண்டுவிட்டதாய் புறநகர் வரை அறிவித்துவிட்டது. எனக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா? புதிதாய் எழ முடியுமா? குதிப்பதற்கு அஞ்சி பிதற்றுகிறேனா? மீண்டும் சிரிப்பு வந்தது.

கடற்காற்று வீசும் அந்த மாலையில் பாலத்திற்குக் கீழே ஒரு தண்டவாளத்திற்கு இணையாக புதிதாகப்போடப்பட்ட சேதமடையாத தார்ச்சாலையும் நீண்டுச் சென்றது, எல் வடிவ வாய்க்கால் சாக்கடையாக இருந்தாலும். சில நாரைகளும், சில அன்றில் பறவைகள் அமர்ந்திருந்தன, தங்கள் சாபத்திற்குப்பின்னும் நீரை சாக்கடையாக்கிய அந்த நகரம் உயிர்த்தெழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தன.

திடீரென்று மற்றொரு தலையும் பாலத்தின் கீழே எட்டிப்பார்த்தது. நான் பார்த்துக்கொண்டிருப்பது அவனைத் தொந்தரவு செய்திருக்கும் போல, நான் எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று அங்குமிங்கும் துலாவிக்கொண்டிருந்தான். நான் அவனைப்பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் என்னிடம் எதுவும் கேட்கவில்லை, அவனாக எதையோ கண்டதைப்போல புருவத்தை உயர்த்தினான். அப்படியென்ன இருக்கிறது என்று நானும் திரும்பி நோக்கினேன். எங்கள் பின்னால் ஒரு கார் வந்து நின்றது.

அன்று நாங்கள் வந்த காரைப் போன்றே மற்றொரு காரிலிருந்து இறங்கிய ஓட்டுனர் வேகமாக இறங்கி வந்து எட்டிப்பார்க்கலானான். எதையோ கண்டு திருப்தியடைந்தவன் போல் மீண்டும் காருக்குச் சென்றான். ஆனால் வண்டியில் ஏறுவதற்கு பதிலாக, கதவைத் திறந்துவிட்டான்.

அவளை எங்கோ பார்த்திருக்கிறேன். பெரிய கண்ணாடியும், வயலெட் நிறத்தில் ஒரு காட்டன் புடவையும் அணிந்திருந்தாள், எங்கள் இருவரையும் பொருட்படுத்தப்போவதில்லை என்கிற யூகம் அவளைத் திமிர்ப்பிடித்தவளாக காட்டியது நேராக அருகில் வந்து அவளும் பாலத்தில் இருந்து எட்டிப்பார்க்கலானாள். என்னிடம் அவள் என்ன பார்க்கிறேன் என்று கேட்பாளோ என்று ஆவலோடு இருந்தேன். கேட்டால் ஆங்கிலத்தில் தான் பதில் சொல்ல வேண்டும். அவள் எதுவும் கேட்கவில்லை, என் வலதுபுறத்தில் பாலத்தின் சுவரைப் பிடித்தபடி கீழே பார்க்கலானாள். அந்த சேலையை எப்படி இத்தனை லாவகமாகவும், இறுக்கமாகவும் கட்டியிருக்க முடியும் என்று வியந்தேன். அவளுக்கு எப்படியும் 35 வயது இருக்கலாம் குறிப்பிடத்தகுந்த அழகு என்று சொல்லமுடியாது, அவள் என்னிடம் பேசினால் அவளை மானசீகமாகப் பேரழகி என்றும் சொல்லலாம்.

அந்த ட்ரைவர் அவளுக்கு மிக அருகில் நெருக்கமாக நின்று கீழே பார்த்தபடி அவள் காதருகில் சென்று ஏதோ சொன்னான். என்னால் இதற்குமேல் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.


அதற்குள் முதுகில் ஒரு நகைக்கடை போர்டைச் சுமந்து நடந்து கொண்டிருக்கும் நவீன சுமைத்தூக்கி, அந்த பலகையைக் கழட்டிவிட்டபடி வேடிக்கை பார்க்கும் கூட்டத்திற்குள் கலந்தான். மற்றவர்களுக்கு காட்சிப்பொருளாய் நடமாடும் இவன் குறைந்தபட்சம் ஒரு டிகிரியாவது முடித்திருக்க வேண்டும், கையால் இழுக்கப்படும் ரிக்சாக்களை ஒழித்ததை இன்னமும் பெருமை பேசிக்கொள்பவர்கள் பேதியில் போக. அவனும் எட்டிப்பார்க்கலானான். இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் அவனையும் எங்கேயோ பார்த்திருக்கிறேன். சூரியன் மறைந்தாலும் இன்னும் வெளிச்சத்தடங்கள் வானில் இருப்பதால் அப்படி ஒன்னும் இருட்டாகவில்லை. பல நாட்களுக்குப் பின்னர் இன்று தான் நகரம் வெயிலில் தன்னை உலர்த்திக் கொண்டிருக்கிறது.

ஆறாவதாக ஏழாவதாக எட்டாவதாக வாக்கிங் சென்று கொண்டிருந்த அரை நிக்கர் அணிந்திருக்கும் மேட்டுக்குடி, குறுந்தாடி அங்கிள்கள் கலந்து கொண்டனர். பேசிக்கொண்டே வந்தவர்கள் பாலத்திலிருந்து எட்டிப் பார்க்க ஆரம்பித்ததும் நிசப்தமானார்கள். ஒருவர் மட்டும் கையை நீட்டிச் சுட்டிக் கொண்டிருந்தார். அப்படி என்ன தான் பார்க்கிறார்கள் என்று நானும் குனிந்தேன். அன்றில் பறவைகள் எங்களை ஆச்சரியமாகப் பார்க்க ஆரம்பித்தன.

ஒன்பதாவதாக டீஷர்ட்டும், ஜீன்ஸும் அணிந்த ஒரு பெண், பத்தாவதாக குள்ள உருவமுடைய ஒரு மனிதன், பதினோரவதாக, குறுக்கே பையை அணிந்திருந்த தன்னை 24 மணிநேர உத்தியோகஸ்தராகக் காட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் வேடிக்கை பார்ப்பவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கம் இருப்பதாலேயே தானும் கலந்து கொள்வதாக நவீன பூணூலாக மாறியிருக்கும் ஹெட்போனில் யாரிடமோ காரணம் சொல்லிக்கொண்டு இந்த கூட்டத்திற்குள் கலந்தான்.

வேகமாக சென்று கொண்டிருந்த கே.டீ.எம் பைக் ஒன்றும் நின்றது. ஓட்டிக்கொண்டிருப்பவன் மேல் விகரமாதித்யனின் வேதாளம் போல் அமர்ந்திருந்த ஒருத்தியும், ஓட்டிவந்தவனும் இறங்கிவந்தார்கள் அத்தனை முக்கியமானதா இது? அவள் தோளில் கைபோட்ட படி இடைவெளி இல்லாதபடி இடையோடு இணைத்தபடி இருவரும் கீழே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் எல்லோரையும் நான் ஏற்கனவே சந்தித்தது போல் இருக்கிறது, அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் எல்லோருமே எதையோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நோக்கும் திசையில் ஒவ்வொருவரும் வேறுவேறு விஷயங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று புரிகிறது. ஏன் இந்த பாலம் இத்தனை விசித்திரமாக இருக்கிறது.

இன்னொரு பழைய பத்மினி கார் ஒன்றும் நின்றது, அதைத் தொடர்ந்து ஒரு புல்லட்டும் – தொப்புளுக்கும் மேலே பேண்ட்டினை டக் செய்திருந்த ஆங்கிலோ இந்திய பாணியில் இருக்கும் ஒருவர் காரிலிருந்தும், என்னைப் போல இரண்டு மடங்கு பருமனான ஒருத்தன் புல்லட்டிலிருந்தும் இறங்கினார்கள். புல்லட்டிலிருந்து பாலத்திற்கு வருவதற்குள் இருவருக்கும் மூச்சு வாங்கியது.

நகரம் அதற்குள் அத்தனை இயல்பு நிலைக்கு மாறிவிட்டதா. எல்லோரும் மிக இயல்பாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவள் மட்டும் இன்று மாலை அப்படி என்னிடம் பேசாமல் இருந்திருந்தால், நான் ஏன் இங்கே வந்து நிற்கப்போகிறேன். நான் நிற்பதனால் தானே இவர்களும். அதற்குள் மூன்று சைக்கிள் பாலத்தின் மேலேறிக் கொண்டிருந்தது எங்கள் எதிர்புறம், சைக்கிள் ஓட்டுவது ஏன் இத்தனை லக்ஸுரியாக மாறிவிட்டது. மிகவும் நவீன சைக்கிள், ஆரஞ்சு வண்ண ஹெல்மெட், சைக்ளிங் டீஷர்ட், ட்ரவுசர்ஸ், கைகளில் க்ளவுஸ், சைக்கிளின் தண்டில் ஒரு தண்ணீர் புட்டி, ஸ்போர்ட்ஸ் வாட்ச், ஷூக்கள் இந்த மாலையிலும் கூலிங்கிளாஸ் என இரண்டு ஆண்களும் ஒரு யுவதியும். சைக்கிளை நிறுத்திவிட்டு, எங்கள் கூட்டத்தில் ஐக்கியமானார்கள். இப்படி சைக்கிள் ஓட்டுவது லக்ஸுரியாகவும், மேட்டிமையானதாலும் தான் சைக்கிள் வியாபாரம் இன்னும் நிலைத்திருக்கிறது. ஒரு சாம்பல் நிற பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டரினை நிறுத்திய சிவப்பு நிற சேலை கட்டியிருக்கும் மற்றொரு பெண் ஒருத்தியும் கலந்து கொண்டாள். அவளது அடர்த்தியான சிகையும் கண்களும் எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்தது, என்னைப் பார்த்தபடியே என்னருகே வந்து அவளும் கீழே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த வாகனத்தை ஒட்டியே மற்றொரு பல்சர் வந்து நின்றது இருவரும் கண்ணாடி அணிந்திருந்த மாணவர்கள் பார்ப்பதற்கு எங்கேயோ ட்யூசன் சென்று வருவது போன்ற தோற்றம். ஊர்ந்து வரும் எம்80 வாகனம் ஒட்டி வந்த வீரபத்ரன் அண்ணாச்சி அப்பளப் பாக்கெட் புதரிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். ஆயிரஞ்சோலிய வச்சுக்கிட்டு அவரும் அக்கறையோடு பாலத்திலிருந்து எட்டிப்பார்க்க ஆரம்பித்தார். எதைப் பார்க்கிறார் என்று தான் தெரியவில்லை.

வௌவால்களும், சிறு பறவைகளும் சற்று அதிகமாகவே பறப்பது போன்ற உணர்வு, இன்றைக்கு தானே இவற்றை கவனிக்கிறாய் என்று மனதிற்குள்ளிருந்து மற்றொரு முரண்படும் குரல். இந்த மனதிற்குள் ஒலிக்கும் குரல் மட்டும் பெண் குரலாக இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும், எந்த ஏமாற்றத்தையும் சகித்துக்கொண்டு வாழமுடியும் அல்லவா. “பைத்தியக்காரத்தனமான ஆசை” என்று மறுபடியும் முரண்படும் அந்தக் குரல்.

‘அது பெண்குரல் அல்லவா?’

என் முதுக்குக்குப் பின்னால் ஒரு ஆண் மிக நெருங்கி நிற்பது போன்ற உணர்வு. “தள்ளிவிட்டுறப் போறான் ஜாக்கிரதை”

மீண்டும் ஒரு பெண்குரல் – அது அவளின் குரலா – இல்லை.

பின்னாடி நிற்பவனைத் திரும்பிப்பார்த்தேன். அவன் எனக்கு மிகப்பரிச்சயமானவன் ஆனால் என்னால் சுட்டிக்காட்ட இயலவில்லை, தொண்டைவரை வந்து விட்டது. ஏதாவது பேசலாமா என்று முயன்றேன். ஆனால் அவன் கண்கள் சிவந்திருந்தன, முகத்தில் ஏமாற்றம், விரக்தி, வெறுப்பு, அவமானம் என எல்லாமும் வெளிப்பட்டது. என்னைப்பார்த்ததும் அவன் உடைந்து போனவனாய்க் குமுறினான். அப்போதும் மற்றவர்கள் கீழேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்குள் அப்போது தான் ஒரு புரிதல் ஏற்பட்டது. ஆனால் அது விபரீதமல்லவா. அவனைத் தடுக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.

“வேண்டம்டா அது உன்னால முடியாது.. நீ தியரிய தப்பா யூஸ் பண்ணுற”



மறுபடியும் என்னுள்ளேயிருந்து முரண்படும் குரல் ஆனால் இப்போது ஜீயின் குரல்.

அந்தக் குரல் ஒலித்தது தான் தாமதம், நான் அவனிடமிருந்து சற்று விலகிக்கொண்டேன். அது புரிந்தவனாக நேரடியாக அந்தச் சுவற்றில் ஏறிக் கீழே குதித்தான். தொப்பென்று சப்தம் கேட்டது, புள்ளினங்கள் கரைந்து கொண்டு மேலெழும்பின, அங்கங்கு வேறு வேறு இடங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவன் விழுந்த இடத்தைப் பார்த்தார்கள்.
நான் திரும்பவில்லை, கீழிருந்தப் பறவைகள் இப்போது என் தலைக்கும் மேலே வட்டமடித்துக்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அது மறுபடியும் கீழ் நோக்கி இறங்கத் தொடங்கியது. எந்தவித சப்தமும் இல்லாமல் மனிதர்கள் அவரவர் வாகனங்களை எடுத்துக்கொண்டு கிளம்பலானார்கள். சில நிமிடங்களில் அந்தப்பாலம் வெறுமையாகியது. மின்சாரம் வந்துவிட்டதால் பாலத்தின் விளக்குகள் எறிய ஆரம்பித்துவிட்டன. ஆனால் அதில் ஒன்று விட்ட அடுத்த விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன, நான் என் டூவீலரை எடுத்துக்கொண்டு இயக்காமல் இறக்கத்தில் அப்படியே உருட்டியபடி இறங்கலானேன். மறுபடியும் பியானோ சப்தம் ஒலிக்க ஆரம்பித்தது.

அந்த பாலத்தில் சோகமான கீதம் ஒன்று இசைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.



- ஜீவ கரிகாலன்
  ( நன்றி:ஏப்ரல் மாதக் காக்கைச் சிறகினிலே இதழ்)









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக