சனி, 16 மே, 2015

தமிழக ஓவியங்கள் - ஒரு பார்வை

தமிழக ஓவியங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

நமது வரலாற்றை நாம் தெரிந்துவைத்துக் கொள்வதில் இருக்கும் ஆர்வத்தை விட மேலை நாடுகளில் இருக்கின்ற வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆர்வம் அதிகம். தென்னிந்தியக் கலை குறித்த ஆய்வு ஆவனங்கள் குறித்து வெளிவந்த ஆங்கில நூல்களோடு, இதுவரை வெளிவந்துள்ள தமிழ் நூல்களை ஒப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சும். இந்திய மண்ணில் ஓவியங்கள் குறித்த ஏராளமான நூல்கள் வந்துள்ளன. ஆனால் தமிழக மண்ணில் இதுவரை ஓவியங்கள், ART MOVEMENTS பற்றிய ஆய்வுகள், வரலாற்று ரீதியான நூல்கள் குறிப்பிடப்படும்படியாக எதுவுமில்லை. அண்மையில் வெளியான ”தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு” அந்த குறையை போக்கியிருக்கிறது. ஒரு ஆய்வறிக்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்நூல், வாசிப்பதற்கு கடினமாக இல்லாமல் ஒரு பரந்த வாசிப்பை உருவாக்கும் வகையில் எளிமையான சொற்களோடும், விளக்கப்படங்களோடும் வந்திருப்பது சிறப்பு.

இந்நூலில் வெறுமனே புராணங்களின் உதவியை மட்டும் நாடாது இலக்கியங்களில் இருந்தும் தகவல்களைத் திரட்டித் தரும் ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. ஏனெனில், இந்திய மண்ணில் வேறெந்த பிராந்தியங்களையும் விட இலக்கியச் செறிவு மிக்க தமிழக மண்ணில் கலைவரலாற்றைச் சிறந்த முறையில் ஆவனப்படுத்த முடியும் என்று இந்நூல் நிரூபித்திருக்கிறது. இதற்காக சங்க இலக்கியங்களில் இருந்து விஜயநகரக் காலக்கட்டத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ‘மதுரா விஜயம்’ வரை வெவ்வேறு காலத்தில் வெளிவந்த இலக்கியங்களில் இருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

காலவரிசைப்படி தமிழகத்தில் உருவாக்கப்பட்ட ஓவியங்களை தொகுத்திருக்கிறார் ஆசிரியர். ஆரம்பத்தில் பாறை ஓவியங்கள் பற்றிய கட்டுரையிலிருந்து ஆரம்பிக்கிறார். பாறை ஓவியங்கள், பழந்தமிழர் ஓவியங்கள், பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகரக் கால, நாயக்கர் கால, மராத்தியர், கிழக்கிந்திய காலம் என வரலாற்றின் பின்புலத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய கலைப்படைப்புகள் பற்றிய இவரது எளிமையான விவரணைகள், ஆய்வுகளின் மதிப்பீடுகள், மிக முக்கியமான வரலாற்றாசிரியர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான ஓவியங்களின் நிழற்படங்கள் மற்றும் விளக்கப்படங்கள், அழிவு நிலையில் இருக்கின்ற பல கலைப்படைப்புகள் பற்றியத் தகவல்கள் என மிக அரிய தகவல்களை அள்ளித் தரும் அனைவராலும் வாசிக்கப்படவேண்டிய நூல் என்பதில் சந்தேகமேதும் இல்லை.
நூலில் வெறுமனே தகவல்களாக மட்டும் சொல்லிச் செல்லாமல், பாறை ஓவியங்கள் பற்றிய கட்டுரையில் அவ்வோவியங்களை படைப்பாக அல்லது கலையாகக் கருதுவதன் அம்சங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.

இந்நூலை 1350-1650 வரை உருவாகியிருந்த ஓவியங்களை வைத்து உருவாக்கிய ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாய் வைத்து உருவாகிய நூல் என்று குறிப்பிட்டாலும், 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பெனி மற்றும் காலனிய காலத்து ஓவியங்களையும், ஓவியர்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றோடு ஆசிரியர் விளக்கியிருக்கும் இடங்கள் மிக முக்கியமானவை. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து - கம்பெனி காலத்து ஓவியங்கள் வரை காலவரிசைப் படி தொகுக்கப்பட்ட நூல் என்பதால் இதை ஓவியங்கள் பற்றிய அடிப்படை வாசிப்பிற்கும் சரி, ஆய்வுக்காகவும் (reference)வைத்துக் கொள்ளலாம். எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
நூல் : தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு (கட்டுரைகள் – மொழிபெயர்ப்பு)
ஆசிரியர் : ஐ. ஜோசப் தாமஸ்

விலை : ரூ:475


- ஜீவ கரிகாலன்

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக