வியாழன், 19 மார்ச், 2015

ப்ளீட்ஸ் கூட்டம் - 04

ப்ளீட்ஸ் கவிதைக்கான ஒரு கூட்டம் என்ற ஒரு தீர்மானத்தைத் தவிர வேறு எந்த மாதிரி டிசைன்களும் இல்லாத ஒர் ஏற்பாடு. ஒரு கூடல் மட்டுமே சாத்தியப்படுத்தும் சில இலக்குகளை என்று அவர் சொல்லும் போது நிச்சயமாக இத்தனை தூரம் அது பயணப்படும் என்று நினைக்கவில்லை. மூன்றாவது கூட்டம் முடிந்த பின் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்,

அது தானா

அதே தான்

***


கணையாழியில் நான் சேர்ந்த நாளும் ப்ளீட்ஸின் முதல் கூட்டமும் ஒரே நாளில் தான். அன்று ப்ளீட்ஸை ஏற்பாடு செய்ததோடு சரி – அடுத்தக் கூட்டத்தில் கவிஞர் உமாசக்தி சிறப்பு அழைப்பாளராய் வந்திருந்தார். உமாசக்தியின் கவியுலகம் பற்றி ஆரம்பித்த பேச்சு, வேல்கண்ணன் மற்றும் அர்விந் யுவ்ராஜ் ஆகியோர் வந்தவுடன் சுவாரஸ்யம் கூட்டியது. இளங்கோ ஃபேஸ்புக்கில் எழுதிய ஒரு கவிதையை வாசித்து நீண்டதொரு சர்ச்சையைக் கிளப்பி விவாதம் செய்தோம். எந்த முடிவுக்கும் வந்துவிடாத கூட்டம் நிறைவாகவே இருந்தது தோன்றியது. எல்லோரும் கவிதை வாசித்தோம்.

உமாசக்தியிடம் பெர்சனலாகவே கேட்டேன் – உபநிஷதங்கள் போன்ற மிகப்பழமையான வடிவங்கள் தருகின்ற டெம்பிளேட்டைக் கூட நவீன கவிதைக்கான வடிவத்தில் பார்க்கமுடிகிறது போன்று எனக்குத் தோன்றுவது குறித்துக் கேட்டேன். ”அப்படிப் பார்க்க முடியும் என்று சொன்னார். சில கவிதைகளை முன்வைத்துப் பேசினேன்.

மூன்றாவது கூட்டம் அத்தனை விசாலமாக இருந்தது. பிரமாதமானதொரு நிலவின் அழகில் கவிதை குறித்துப்பேசுவது உன்மத்தமாக – ஷான் கருப்பசாமி ஒர் இன்ட்ரெஸ்டிங்கான மனிதர். ஏன் இப்படி எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களை, அவர்களின் நியாயங்களை (புரட்டுவாதங்களை) முன்வைத்துப் பேசினார். தனக்கென்று ஒரு சித்தாந்தமோ அல்லது தத்துவமோ உடன்வைத்துக் கொள்ளாதவன் கவிதை எழுதக்கூடாதா என்கிற தொனியில் அமைந்தது அவரது பேச்சு - கூட்டம் முடிந்து இரவு உணவு அருந்தும் வரை பின்னவீனத்துவம் பற்றிய பேசிக்கொண்டிருந்தார் அந்த சீரியஸ் கவிஞர்.

மூன்றாவது கூட்டத்தில் பல விஷயங்கள் பேசினோம்
ஆர்ட் ஃபார்ம் குறித்து,
ஒரு நல்ல CRAFTஐ குறித்து
துறை சார்ந்த கவிதைகள் குறித்து
நேட்டிவிட்டியோடு இருக்கின்ற கவிதைகள் குறித்து
ஃபேஸ்புக்கில் எழுதுபவர்களின் கவிதைகள் குறித்து

நிகழ்வு பிரம்மராஜனின் கவிதை ஒன்றை வாசித்துத் தான் ஆரம்பிக்கப்பட்டது, முடியும் போதும் அவரின் மொழிபெயர்ப்பில் சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதைகளோடு முடிந்தது. இடையில் – ஆத்மாநாம், ப்ரமிள், பசுவைய்யா, நகுலன், ஞானக்கூத்தன் போன்ற Legendsஉடன், நக்கீரனின் ஜிப்ஸி, சவரக்காரனின் மயிர் கவிதைகள் தொகுப்புடன் முகநூலில் எழுதுபவர்கள் வடிவங்கள் பற்றி நிறைய ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்க வேண்டிய தொகுப்பாக ஐயப்பமாதவனின் நிசி அகவல் ஆகிய தொகுப்புகளைப் பரிந்துரைக்கப்பட்டன.
**
இந்த முறை நான்காம் கூட்டம் – ஸ்டார் வேல்யூ உள்ளக் கூட்டம் தான். சரியாகப் பவுர்ணமி அன்று 04ஆம் தேதி மாலை 06.00 மணி அளவிலோ அல்லது சற்றுத் தாமதமாகவோ இல்லை கொஞ்சம் முன்னாடியோ ஆரம்பிக்கப்படலாம். மிகவும் முக்கியமான இந்தத் தலைமுறை கவிஞராக அறியப்பட்டுத் திடீரென்று “நான் இலக்ஸ்” என்று இனி அறியப்படமாட்டேன் என்று V.R.S கொடுத்த வா.மணிகண்டனைத் தான் இந்த மாதம் சிறப்பு அழைப்பாளராக அழைத்திருக்கிறோம். மறுபடியும் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கும்வரை அவர் ரிட்டயர்ட் ஆனதாகச் சொல்வதே உசிதம்.

அண்ணாச்சி கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டதாகச் சொன்னாலும், அவரது வலையில் கவிதைகள் குறித்த பகுதிகள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப் பதிவு வந்தவுடன் சில பிரதிகள் விற்பனை ஆவதையும் நானே கண்டிருக்கிறேன். கவிதைகள் மீது அப்படியென்ன சலிப்பு? என்பதில் ஆரம்பித்து நிறையக் கேள்விகள் கேட்கலாம். வேல்கண்ணனுடன் - வா.ம கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டதை முன்வைத்து நிறைய பேசியிருக்கிறோம். இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. வா.மவும் அழைப்பு விடுத்தவுடன் ஏற்றுக்கொண்டதோடு அவருக்குப் பிடித்த சில கவிதைளோடு வருவதாகச் சொன்னார். நிச்சயமாக இந்தக் கூட்டம் வேறு சில DIMENSIONகளைக் காட்டும் என்பது உறுதி. அத்தோடு கூட்டத்தில் கொளுத்திப் போடுவதெற்கெனச் சில தயாரிப்புகளை நானும் செய்து வருகிறேன்.


கவிதைகள் மீது ஆர்வமிருக்கின்ற யாவரும் பங்கு கொள்ளலாம். முக்கியமாக இதுவரை எந்தத் தொகுப்பும் கொண்டு வராமல் இருக்கும் புதிய தலைமுறைக்கான நிகழ்வாகத்தான் PLEATSஐ ஆவனப்படுத்த விரும்புகிறோம்.

ஜீவ கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக