வியாழன், 31 அக்டோபர், 2013

வசந்தகால நினைவுகள்

இந்தப் பதிவு முழுதும் எனது கல்லூரி நண்பர்களுக்காக!!

ஒரு கதை எழுதத் தோன்றிய நள்ளிரவில் உங்களுக்கு ஒரு கடிதம் எழுத விரும்புகிறேன்... ஏனென்றால் இது தான் கடவுள் வாழ்த்து....

நண்பர்களே எங்கே இருக்கிறீர்கள்!! நலமா?? உங்கள் குடும்பம் நலமா??

இங்கே நான் நலமாகத் தான் இருக்கிறேன், என்னைச் சுற்றி எல்லோருமே நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நான் தான் நல்லவனாக இருக்க முடியவில்லை, அவர்களுக்கு ஏற்றவனாக இருக்க முடியவில்லை. எத்தனை களிப்புடனும், நிறைவுடனும் வந்தாலும் வீட்டிற்குத் திரும்பியதும் வெற்றிடம் தான் மிஞ்சுகிறது.

அப்போது தான் உணர்கிறேன் நானாகிய என்னில் அரிதாரம் மட்டுமே வெளி உலகிற்குள் உலவுகிறது, என் அகம் விரும்புவது உங்கள் அண்மை தான். உலகம் நன்றாகத் தான் இயங்குகிறது, அது நான் பிறப்பதற்கு முன்பு சுழன்ற அதே அச்சில் தான் இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது... எனக்குத் தான் வித்தியாசமாகத் தெரிகிறது.

எனக்கென்று இந்த சமூகம் பல செயல்களைப் பணித்திருக்கிறது, உங்களுக்கும் கூட அப்படித் தான் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் முன்னரே சொன்னேன் அல்லவா?? "நான் தான் எனக்குப் பிரச்சினையாக இருக்கிறேன்" என்று, நண்பர்களே எல்லாம் பொருள் சேர்க்கும் ஒரே அச்சில் தான் நாமும் சுழன்றுக் கொண்டிருக்கிறோம். நமக்கு வயதாவது தெரிவதில்லையா??

நாம் இன்று பேசிக் கொண்டிருக்கிறோம் !! நல்லவேளை இந்தத் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தி விட்டது, நமக்கிருக்கும் இடைவெளியை அது குறைக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை. நானும் மனிதன் தானே எல்லோரையும் போலவே ஆசை வருகிறது, நான் யார்?? நீ யார்?? உன் அந்தஸ்து என்னவாகிப் போகிறது? நீ என்னவாகப் போகிறாய்? இவள் மகிழ்ச்சியாய் இருப்பாளா?? இவன் வெற்றியடைவானா? இவன் மேலே படிப்பானா? இவள் காதல் கைகூடுமா என்றெல்லாம் நாம் நினைத்துப் பார்க்கவில்லை.

நமக்கு இருந்ததெல்லாம், நாம் தினமும் பேச வேண்டும், சிரிக்க வேண்டும் அவ்வப்போது அழவேண்டும், குட்டிக் குட்டிச் சண்டைகள் போட வேண்டும்.. களிப்போடு கழித்தோம். இப்போது நிழற்படங்களில் தெரியும் எடை குறைந்த அன்றைய நான் இன்று நானாகயில்லை, அது போல தான். ஒருவொருக்கொருவர் பிடுங்கித் தின்ற பண்டங்களின் சுவை, திரும்ப கிடைக்கவேயில்லை. என் தோள் சாய்வதும், அடிப்பதும், கிள்ளுவதும் நம்மில் நிகழ்ந்துக் கொண்டு தான் இருந்தது. வகுப்புகளின் போது நாம் பேசிக் கொள்ள கிழித்த பேப்பர்களின் சத்தம் இன்னும் என் ஆழ்மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஏதாவது ஒரு நிகழ்விலும், விழாக்களிலுமே என்னைக் கிண்டல் செய்த வார்த்தைகள் எவ்வளவு மென்மையானவை, இங்கே வாழ்த்தும் சொற்களிலேயே வலையும் வீசுகின்றனர். என் டைரிக் குறிப்பில் இருந்த உங்கள் வாழ்த்துகள் தான் என்னை எழுப்பி விடுகிறது, நான் அடிக்கடி விழுந்துவிட்டேன்.

நம் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ஒரு காதல் கதை இருந்து, நமக்குள்ளும் சில காதல்கள் இருக்கவே செய்தது. காதலுக்கு உதவிகள் நடந்தன, ஆலோசனைகள், புத்திமதிகள், வசவுகள் இருந்தன. காதல் பயணித்தது. அது தன் வேலையைச் செய்து கொண்டிருந்த போதும் நம் நட்பில் திளைத்துக் கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட உங்களின் இல்லாமையைத் தான் நான் பெரிதும் உணர்கிறேன். உண்மையான பாராட்டுகளும், புத்திமதிகளும் எனக்குத் தெரியாத வண்ணங்களில் வலம் வருகின்றன.

ஒட்டுமொத்தமாக மொத்த வகுப்பும் ஒரு குடும்பமாய் மூன்று நாட்கள் வாழ்ந்தோம், அந்தச் சுற்றுலா போல் திரும்ப கிட்டாத சந்தோஷம் என் வாழ்வில் இதுவரை இருந்ததில்லை, இனிமேலும் கூட வராது என்பதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன். நாம் ஒரு மரணத்தைக் கடந்து வந்தோம், வெறுமனே அல்ல கரைந்திருப்போம் ஒரு துளியாவது..

ஒருவரை ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொண்ட பொழுதுகளில் எல்லாம் யாரோ ஒருவர் தேவதையாக்கப் பட்டிருந்தோம். நமது சிரிப்பொலிகள் பதிந்த திரையரங்கு நினைவுகளில் ஒட்டடை மட்டுமே படிந்திருக்கிறது. யாரோ ஒருவர் குடும்பத்தின் வேதனைகளை, நண்பர்கள் பகிர்ந்து கொள்ள பாடங்களில் படித்ததில்லை. ஏன் நாமெல்லாம் அருகருகே வாழ்ந்து முடிக்கும் வரம் கிடைக்கவில்லை??!!

நண்பர்களே!! வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் சந்திக்கிறோம். முதலில் அதே நெருக்கம் இருந்தது, பின்னர் நெ ரு க் க மானது, அடுத்து நெ
                                                                                                               ரு
                                                                                                                க்
                                                                                                                க
                                                                                                                மாகின்றது.

உலகில் எல்லோருக்கும் இப்படித் தான். அதை மாற்ற முடியாது. ஆனால் ஒரு அரிய புகைப்படமோ!! திரைக்காட்சியோ அல்லது திடீர் தனிமையோ நம்மை ஞாபகப்படுத்தும். நம் கண்ணீர்களை எண்ணிப் புன்னகைப்போம், சிரிப்பொலிகளின் நினைவு கண்ணீரை வரவழைக்கும். சிலருக்கு வாய்ப்பு கிட்டும், சிலருக்கு அது வெறும் வாய்ப்பாக மட்டுமிருக்கும்.பின்னொரு நாள் காதோர நரையிலோ, பல் விழுந்த வயதிலோ நம் அண்மை தேவைப்படும், அதற்காவது நமது பிரிவில் சேர்க்கின்ற பணம் பயன்படட்டும் என்று நம்புவோமாக.

ஆம் உங்களை எண்ணுகிற இந்த நிசி தான் என்னை தூண்டுகிறது ஒரு கதை சொல்ல, நம் தாக்கம் இருக்கின்ற ஒரு காதல் கதை, நண்பர்களைப் பற்றிய கதை.. எத்தனையோ முறை சொல்லப்பட்ட மற்றுமொரு அதே கதை.. எண்ணிக்கைகளுக்காக இல்லாமல், உங்களோடு மீண்டும் கல்லூரி செல்வதாக நினைத்து எழுதுகிறேன், அநேகமாக அடுத்த வருடத்திற்குள்ளாவது இந்தக் கதையினை முடிக்கலாம்,, முடிப்பேன். இதுவே அதற்கு முன்னுரை..

நண்பர்களே!! உங்களால் தான் நான் படிப்பினைத் தொடர்ந்தேன்!! அந்த மூன்று வருடம் என்னும் வசந்த காலம் வாழ்ந்தேன்.... எனக்குத் தெரியாது திரும்பக் கிடைக்காது என்று, ஆனால் இதில்  அந்த வாழ்க்கை திரும்பவும் பயணிக்கும்... மீண்டும் ஒரு கல்லூரிக் காலம்.

வருகிறேன்...

1 கருத்து:

  1. மனது கிடந்து தவிக்கிறது, அந்த நாட்களை எண்ணி..

    பதிலளிநீக்கு