திங்கள், 28 அக்டோபர், 2013

பஜ்ஜி - சொஜ்ஜி 43 /ஸ்விஸ் பாங்க் விவகாரம்



அனைத்து நாடுகளில் இருந்தும், அதுவும் குறிப்பாக இந்தியாவில் இருந்தும் அரசியல் வாதிகள், மற்றும் தொழில் அதிபர்கள், திரையுலகினர் என்று தங்களது கருப்பு பணத்தை  பதுக்கி வைக்கும் இடமாக சுவிட்சர்லாந்து வங்கிகள் செயற்பட்டு வந்தன.

அமெரிக்காவின் கடும் நிதிநெருக்கடியைச் சந்தித்ததன் விளைவாக, சமாளிப்பதற்கு எடுத்த பல நடவடிக்கைகளில் ஒன்றாகத் தான் ஸ்விஸ்பாங்கின் இந்த திடீர் நிலை மாற்றம். ஆமாம், நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாயும் என்பது போலவே, பல ஆண்டுகளாக இந்திய அரசு கருப்பப் பணம் பற்றிய கணக்குகளைக் கேட்டுப் போராடிக் கொண்டிருந்ததற்கு, அமெரிக்காவும் அதே கோரிக்கையை அழுத்தமாகக் கோரியதும், இப்போது ஸ்விஸ் அரசு செவி பணிந்து சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருப்பதன் மூலம் இனி ரகசியம் காக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

வரி தொடர்பான நிர்வாக தகவல்களை பரஸ்பரம் தரும் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அளவில் பல நாடுகள் இடையே பேச்சு நடந்தது. அதில் அமெரிக்கா, இந்தியா, சுவிட்சர்லாந்து உட்பட 58 நாடுகள் பங்கேற்றன. அதில் சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் 48 நாடுகளும் கையெழுத்திட்டன. இதில் சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டது.

மேலும், இந்த வங்கிகளில் யார் யார் எவ்வளவு பணம் பதுக்கி வைத்து இருக்கிறார்கள்  என்பது மட்டும் படு ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆனால்,சொந்த நாடுகளை விட்டு, இந்தியா  உள்ளிட்ட வெளிநாடுகளின் வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அவர்களது வங்கி கணக்குகள் பற்றி முழு விவரத்தையும் வெளியில் அறிவிக்க வேண்டும் என்கிற சர்வதேச ஒப்பந்தத்தில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கை எழுத்து ஒப்பந்தம் போட்டுள்ளதால் இனி சுவிஸ் வங்கி தங்களது வங்கி கணக்கு பற்றிய அறிக்கையில் ரகசியம் காக்க முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் இதற்கான போராட்டம் சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்த பணம் இரண்டரை லட்சம் கோடியை தாண்டும் என்று பாஜ உட்பட பல கட்சிகளும் பெரும் கோஷமெழுப்பின. இதன் விளைவாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வெள்ளையறிக்கை சமர்பித்த போது கருப்பப் பணத்தின் பதுக்கல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது, அதாவது சுமார்  பதினாலாயிரம் கோடிகள் மட்டுமே கருப்புப் பணம் இருப்பதாகத் தெரிந்தது.
யூதர்களின் பணத்தை சேமித்து வைப்பதற்காக இரண்டாம் உலகப் போரினை ஒட்டியக் காலக்கட்டத்தில் கருப்புப்பணப் பெட்டகமாக மாறிய சுவிட்சர்லாந்து வங்கிகள். கிட்டதட்ட உலகம் முழுவதும் இருந்து வரும் கருப்புப் பண பதுக்கல் சுமார் 90லட்சம் கோடிகளைத் தாண்டுகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம்.

பொதுமக்கள் இந்த விசயத்தில் கவனம் கொள்ள ஆரம்பித்ததன் விளைவாகவும், எதிர்கட்சிகளின் பிரச்சாரத்தின் விளைவாகவும் வெள்ளையறிக்கைத் தாக்கல் செய்த மத்திய அரசு அந்தப் பட்டியலை வெளியிட மறுத்து விட்டது. அந்த பட்டியலில் கருப்புப் பணத்தின் அளவு எவ்வளவு என்று வெளியிட்ட அரசு, அதைப் பதுக்கியவரின் பெயரை வெளியிடப் போவதில்லை, ஏனென்றால் அவர்கள் இந்த நாட்டிற்கு மிக முக்கியமானவர்கள்.

- தொடரும்
 ஜீவ.கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக