செவ்வாய், 11 அக்டோபர், 2011

விதியின் பகடை - வீர நாயக்கன் பகுதி - 6


                விதி என்ற "வார்த்தை" மனித வாழ்வில் தவிர்க்க முடியாத சொல். தெய்வ நம்பிக்கை இல்லாதவன் கூட தன்னை மறக்கும் நிலையில் விதியினை பற்றி பேசுவான். விதி, இன்பம், துன்பம் இரண்டையுமே ஒரு விதிக்கபட்ட இடைவெளியில் மாற்றி மாற்றி நமக்கு வழங்குகிறது. அந்த விதி இக்கதையில் என்ன செய்கிறது??.

  
                பொருள் தேடி இடம் பெயர்ந்த வேடர் கூட்டமொன்று இந்த சிற்றூரில் தங்குவதில் விதியின் செயல்  ஒன்றும் இல்லை என்றாலும், குலத்தொழிலாம் வேட்டையாடுதலில் வீரன் செய்த புலி வேட்டை ஒன்றும் விதிப் பயன் இல்லை என்றாலும், ஏன் அவ்வூரில் வாழும் அர்ச்சகரை காண அரசியல் சூது கொண்ட முத்தன் அவ்வூருக்கு வந்தது கூட விதியால் அன்று, ஆனால் அப்பேதையாம் கோதையை காப்பாற்ற கோயிலில் நுழைந்த வீரனின் செயலே அவ்விதியால் வந்தது எனலாம்.

             அவன் உள்நுழைந்ததனால் அவ்விதி யாது செய்யும் என்று கேட்டீர்களா ?? தன்னை காத்திட்ட வீரனை காதல் கொள்ள செய்யும் அல்லது அரசியல் செய்ய வேண்டி, அவ்வீரனை பகடையாய் தேர்ந்தெடுக்க வைக்கும். காதலோ, அரசியலோ ஒரு பெண் மையப் புள்ளியாக ஆகும் பொழுது என்ன குழப்பம் வேண்டுமானாலும் நேரலாம் என்பதும் அவ்விதியின் செயலே.


          கோதை தன்னை காப்பாற்றிய ஒருவனுக்கு நன்றி சொல்ல மறந்து விட்டோமே என்று வருத்தமுற்றாலும், காதல் எனும் பயிர் முளைக்காத   பெண்ணாகவே தோற்றமளித்தாள். ஆயினும் தன்னில் விழுந்த காதல் விதயினையும் , அது துளிர் விடுவதும் விதியின் கையிலில் இருப்பதை அறியாமல், பக்கத்தில் வசிக்கும் மருத்துவச்சிக் கிழவியைக் காணச் சென்றாள். விதியும் அவள் பின்னே தொடர்ந்தது.


        தன்னளவில் ஒரு அந்தனப்பெண்ணிடம்  பேசுவதே ஒரு குற்றம் எனும் சமூகத்தின் மத்தியில், எந்த ஒரு விளைவையும் யோசித்து செய்யும் வீரநாயக்கன். கோதையைக் கண்டவுடன் தன்னை மறந்தான். எதோ ஒரு பிணைப்பு தன்னை அக்கோயிலுக்கு இட்டுச் சென்று அவளை தன கண் முன்னே நிறுத்தியதாக எண்ணினான்.


          அதிகாலைப் பொழுதிலே நீராடிவிட்டு கையில் எந்த வாழும் ஏந்தாமல் துரிதமாக கிளம்பினான்.தன் அண்ணன் எங்கே போகிறான் என்பதை அறிய முற்பட்டாலும், அவனிடம் வினவ தயிரியம் இன்றி மலங்க மலங்க விளித்த்க் கொண்டிருந்தாள், வீரனின் தங்கை நல்லாள்.தன் தோழன் பொம்மனுக்கு தெரியுமுன் ஊருக்குள் செல்ல வேண்டும் என்று தமக்குள்ள உளறிக் கொண்டே கிளம்பினேன். தன் தலைவர் எங்கோ செல்கிறார் என்பதை உணர்ந்த அவன் நாய் ஓய்யானும் அவனுடனே விரைந்தது. தன்னுடன் வரும் நாயை திரும்பிச் செல்லுமாறு சுட்டு விரல் காண்பிக்க, ஓய்யானும் திரும்பியது.


          அக்காலையில், செடிகளிலும் , புல்லிலும், வயல்வெளிகளும், காலைக் கதிரவன் தன் பொற்கரம் கொண்டு பொன்னாய்ச் சமைத்திருந்தான். இந்த மகோன்னதமான சூழலில் ஒருவன் காதல் உணர்வு கொள்ளும்போது. புது உலகமே தமக்காக சஞ்சரிப்பது போல் தோன்றும்.ஊருக்குள் ஒவ்வொரு வீடும் சாணமிட்டு மொழுகி, சிக்கலான மாக்கோலங்கள். அந்த ஊரின் தூய்மையினையும், ஒழுக்கத்தினையும் எடுத்துக் காட்டியது. புலிக்களின் தொல்லை வெகுவாக குறைந்து வருவதால் அதிகாலையிலே வயலுக்கு சென்றுவிட்ட கணவன்மார்களுக்கு, கஞ்சியும், தினைச் சோறும்  தயாரித்துக் கொண்டிருந்தனர்.அடுத்த நாள் வரும் சந்தைக்கு தயாராக அண்டை ஊர்களிலிருந்து மாட்டுவண்டிகள் வந்து கொண்டிருந்தன.

            கோயிலுக்கு அருகிலுள்ள வீதியிலிருந்து, மருத்துவக்கிழவியின்   வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த கோதையினை, வெகு தொலைவிலே அடையாளம் கண்டு கொண்ட வீரன் ஒரு புன்னகையுடன் அத்திசையில் நடக்கலானான். இளம் பச்சை நிற கச்சையுடன், பச்சை நிற சேலையணிந்து வயல்வெளியில் ஒரு கையினை மேற்புறமும், மற்றொன்றை செய்தும்   நடந்துவரும் அழகினைக் கண்டு மெய்மறந்த வீரன் வேகமாக அவளை பின்தொடர்ந்தான்.


             கோதை மெதுவாக ஒரு குடிசையினுள் எட்டி பார்த்துக் கொண்டே "அம்மா " என்று அழைத்தாள். அக்கிழவியும் வந்திருப்பது யார் என்பதை அறிந்து ,"யாரது நாகங் கண்டு மயங்கிய பெண்ணா?? ம்ம் ..பூச்சியைக் கண்டு மயங்கியவள் புலியைக் கொன்றதேனோ?? "என்றாள். "போ !! கிழவி ..நானெங்கு கொன்றேன்? ஒரு வில்லேந்திய வீரனும் அவன் தோழனும் வந்தல்லவோ கொன்றனர் .பாவம் அந்த புலி கோயில் வாசலிலேயே உயிர் துறந்தது "என்று பரிதாபம் கொண்டாள். பாரப்பா "புலிக்கு பரிந்து பேசும் பேதையே" என்று மீண்டும் ஏளனம் செய்தாள்.

   
            மீண்டும் அக்கிழவி"ஆமாம் யாரோ ஒரு நொண்டி திருக்கோயில் மேற்பார்வைக்கு வந்தானாமே??"என்றாள், அப்பொழுது கிழவியின் முகம் சற்று மாறியிருந்தது.கோதையும் அவனை நினைக்கையில், தன் இடை பற்ற வந்த அவன் குரூர எண்ணம் அவள் மனதில் ஓட, அவளுக்கும் முகம் மாறியது .சட்டென்று அந்த பேச்சினை மாற்ற அக்கிழவி "ஆமாம் அவ்வீரன் எப்படி இருந்தான் ?" என்றாள்.தான் வீரனை நன்றாக கவனிப்பதற்குள் மூர்ச்சையுற்று விழுந்ததையும், பின்னர் நினைவு திரும்பியும் இரு ஆண் மகன்கள் இருந்ததால் அவர்களை கவனிக்கவில்லை எனவும் ,அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் அதற்கு அக்கிழவியின் துணையினை நாடி வந்ததாக கூறினாள்.

           இதையெல்லாம் கவனிக்காது அக்கிழவி, "ஓகோ!! அந்த வேடனைத் தேடித்தான் இப்பைங்கிளி இங்கு வந்ததா ??" என்று விஷமத்துடன் கேட்க. கோபம் கொண்ட அந்த பெண் "ஏ கிழவி!! நீ பொல்லாதவள் .. உன்னிடம் போய் நான் உதவி கேட்டேனே " என்று கத்தினாள். "கோபம் கொள்ளாதே பெண்ணே!! உன்னைக் கண்டால் யாருக்குதான் உன்னை கவர்ந்து போக எண்ணம் வராது?? ஒருவேளை அந்த வேடனே உன்னைத்தேடி வருவானோ என்னவோ" என்று அந்த பேச்சை முடிக்க எண்ணமில்லாது இழுத்துக் கொண்டிருக்க, அவளை இடைமறித்து "ஊஹும் !! என்னை கவர்ந்து சென்று வாழ முடியாது , ஒரு வேளை காலில் விழுந்தால் வாழலாம் " என்று அவளும் நகைத்தாள் .. சொல்லி வைத்தார் போல், அந்த வேடன் திடுமென கதவு திறந்து கொண்டு நேராக அந்த கோதையின் காலில் விழ, கோதை அலறினாள்.  விதியின் விளையாட்டும் ஆரம்பமானது ....


      வீரநாயக்கனின் வாயில் நுரை கொட்டியிருந்தது...


(தொடரும் )


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக