வெள்ளி, 17 ஏப்ரல், 2020

ஜான்சி மேடம்

நாகலாபுரத்திலிருந்து, கரூர் வந்தவுடன். அருகிலிருக்கின்ற ஒரு பள்ளிக்கூடம் என்கிற வகையில் பெரிய சந்தோசம். லஞ்சிற்கு வீட்டிற்கு வந்துவிடலாம். அது ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியின் கிளை வெள்ளியனையில் இருந்தது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே.

நானும் தம்பியும் பள்ளியில் சேர்ந்தோம்.

பெரிய மிஸ், பெரிய மாஸ்டர் தெரியுமா என்று பூதாகரமான விசயத்தைப் பற்றி முதலில் எனக்கு விளக்கியவன் செல்வராஜ், முஷ்டகிணத்துப்பட்டி என நினைக்கிறேன். இரண்டு பேரும் பெரிய ஸ்கூல்ல இருந்து பைக்லயே வருவாங்க, எல்லாத்தையும் கேள்வி கேட்டு அடிச்சு தொம்சம் பண்ணிடுவாங்க என்றான்.

நான்லாம் டவுசர்லயே போயிடுவேன். அப்பதான் விடுவாங்க. உனக்கும் தப்பிக்கனுனா மொதல்ல அடிக்கும் போதே போயிடு என்றான்.

முதன்முதலில் அவர்களைப் பார்க்கும் போதே, எனக்கும் வந்துவிடும் என உறுதியாகத் தெரிந்தது. எதற்கும் டவுசர் நனையாமல் போயிடுச்சின்னா என்ன பண்றதுன்னு ரெண்டு டம்ளர் தண்ணிக் குடிச்சு வைச்சேன்.

பெரிய மிஸ்ஸுக்கே இவ்ளோ பயம்னா, மாஸ்டருக்கு. மாஸ்டர் பற்றி இன்னொரு நாள் பேசுறேன். மிஸ் வந்ததுமே செல்வராஜ் தன் காதுகளைப் பரிசளித்தான். அந்த கிராமத்துல் ஐம்பது ரூபாய், அறுபது ரூபாய் ஃபீஸ் தான் கட்டணம், பெரிதாக நிர்பந்தம் இருக்காது. மூணு மாசம் வரை நிலுவையில் உள்ள கேஸ் ஒரு பாடு இருக்கும்.

தெற்கு மாவட்டங்களில் நாடார் சமுதாயம் ஒரு கூட்டு முதலைப் போட்டோ அல்லது தனி ஆளாகவோ ஒரு பாடசாலையை ஒவ்வொரு ஊருக்கும் திறந்து வைத்திருந்தார்கள், அந்த எண்ணிக்கை 60-70களிலேயே கணிசமாக இருந்தது. அதற்கு முன்னர் கிருஸ்தவ பள்ளிகள் தான், சில விவேகனந்தா, ராமகிருஷ்ண மடங்களும் இருந்தன என்று சொல்லாவிட்டால் Pseudo Secular ஆகிவிடுவேன். ஆனால் அந்த ஊரில் அப்படியான பெரும்பான்மைச் சமூகம் கல்வியின் முக்கியத்துவத்தை (பிற்பாடு - அதுவே கோழிப்பண்ணை, ஈமூ பண்ணை வளர்ப்பது போன்ற தொழிலாக மாறி, சாதி வளர்ப்பிலும் பங்காற்றி வருவது தனிக்கதை) உணர்வதற்கு முன்பாகவே தன் ஊருக்காக ஒரு ஆங்கிலப்பள்ளியை கொண்டு வந்திருந்தார் ஆறுமகம் மாஸ்டர். அதற்கு ஒரே காரணம் எங்கள் ஜான்சி மிஸ் தான்.

எத்தனை நினைவுகள் ??

என் அருகே வரும்போது ஒர் க்யூட்டிகுரா வாசம் இருந்தது. ராஜபாளையம் செம்மண்ணும் கரிசல் மண்ணும் இருக்கற இடம்தான். எங்க மிஸ் கரிசல் மண். எதற்கும் தயாராக ஆயுதங்களை விரைப்பாகவே வைத்திருந்தேன் அன்றிலிருந்து ஒரு அடி வாங்குவதற்கு நான்கு வருடங்கள் ஆகியிருந்தது. அவுங்களோட பெட் மாதிரி தான் இருந்தேன். திருச்சிக்கு ஒரு க்விஸ் காம்பிடிஷன்க்கு அழைச்சிட்டுப் போனாங்க, மடியில் தான் உறங்கினேன். முதன் முதலில் சில்லி பரோட்டா வாங்கிக் கொடுத்தாங்க.

ஆறாம் வகுப்பிற்கு விவேகானந்தா பள்ளிக்கு மாற்றம் கேட்கும்போது அனுப்பமாட்டேன் காளிதாஸ் என் பையன் என்று சொன்னாங்க.
ஆறாம் வகுப்பில் முதல் மிட்டெர்மிலேயே பயாலஜியில் ஃபெயில் (மிஸ்ஸோட சப்ஜெக்ட்), கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆகுதுன்னு ஒரு அடி. முதல் அடி. அதற்கப்புறம் நிறைய அடி. மிஸ்ஸோட பையன் ஷாம். ரெண்டு பேரும் சேர்ந்தே அடி வாங்கியிருக்கிறோம். என்னா அடி. அப்படி வகை தொகையில்லாம அடி வாங்கினாலும், பாட்டு பாடுறது, நடனம் ஆடுறது, நாடகம் போடுறதுன்னு ஒவ்வொரு மாசமுமே ஏதாவது ஒரு போட்டியில் கலந்துக்கிட்டே இருப்பேன்.

அப்படியே வண்டி ஓடிடுச்சு, எட்டாம் வகுப்பு முடிக்கும்போது அம்மா அப்பாக்கு வேலை போனது. கவர்மெண்ட் ஸ்கூலுக்குப் போகலாம் என்று டீசீ கேட்க எங்க அம்மா போனபோது, தரவே மாட்டேன் ஃபீஸே நாங்க இனி கேட்கலை, ரெண்டு பேரும் படிக்கட்டும். நீங்களும் ஸ்கூல்ல ஆஃபிஸ் ட்யூட்டி பாருங்க என்று சொன்னார்கள்.

நானும் தம்பியும் தான் ஒரு வரட்டு கவுரவத்தில் (வேற என்ன சொல்றது, நம்ம டிசைன்னு சொல்லிக்கலாமா) டீஸியை வாங்கிக் கொண்டு அரசுப்பள்ளியில் சேர்ந்தோம். அப்படி இப்படின்னு வாழ்க்கை கீழ்யே தள்ளிக்கொண்டு போக 414 மார்க்கை வாங்கிட்டு, மிஸ்கிட்ட போய் காண்பித்தேன். தன் மகனாக நெற்றியில் ஒன்று கொடுத்து ப்ளெஸ் பண்ணாங்க, சென்னையில் கம்பெனி செகரட்ரிஷிப் இண்டெரில் ஒரு  க்ரூப் க்ளியர் பண்ண சேதி கூட வூட்டுக்குத் தெரியாது. நம்ம ஏரியா இது இல்லைன்னு தோணுது.

எழுத்தா சோறு போடும்னு எத்தனை பேரு கேட்ருந்தாலும், என்னை நானே ஒரு முறை கூட அப்படிக் கேட்டதில்லை. இங்கன அப்படி இப்படி எழுதிக்கிட்டு இருக்கற நான் ஜீவிக்கறது கொஞ்சம் நஞ்சம் நான் எழுதுனதால தான். அதற்கு மாஸ்டருக்கும், ஜான்சி மேடத்துக்கும் நான் எப்பவும் கடன் பட்டிருக்கிறேன்.
சாதிய கட்டுமானத்தில் அல்லது கல்வியை 100% வணிகப்படுத்த இயலாத பள்ளி வரலாற்றில் நிற்காது. மேடமும் ரிடையர்டாகிட்டாங்க. செயல்படாத அந்த பள்ளி வளாகத்தின் மாடியில் தான் இன்னமும் வசிக்கிறார்கள். ஒருநாள் வீட்டிற்கு வெளியே துவைத்துக் கொண்டிருந்தபடி இருந்த அவுங்களைப் பார்க்கையில் மிகவும் பாரமாக இருந்தது. எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது, நாங்கள் வசித்துவந்த வீட்டின் உரிமையாளரின் மகன் எங்க கூட தான் படித்து வந்தான். அவனை அவன் பிறந்த சமூகத்தாரால் அப்போது உருவான பள்ளிக்கு ஒரு ஆண்டு முழுக்க பேருந்து கட்டணம் கிடையாது என்றெல்லாம் சொல்லி அவர்கள் அந்தப் பள்ளியை வளர்த்தெடுத்தார்கள்.
நான் படித்த பள்ளிக்கு எத்தனையோ குற்றச்சாட்டுகள் கூட இருக்கலாம். இன்று அரசியல் வழி சமூகத்தைப் பார்க்கும்போது தான் தெரிகிறது, கல்வியால் மட்டுமே விடிவு என்று சொன்னதை உணர்ந்தவர்கள், செய்து காட்டிய ஒரு முன்மாதிரிப்பள்ளி தான் அது என்று.

பத்தி எழுத்துகளை புத்தகமாகப் போட்டால் நான் அதை மாஸ்டருக்கும் ஜான்சி மேடத்திற்கும் தான் சமர்பிப்பேன்.

பிறந்தநாள் வாழ்த்துகள் மேடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக