வெள்ளி, 3 ஜூன், 2016

புத்தகக் கண்காட்சி 2016 - 01

புத்தகக் கண்காட்சியில் நேற்று: எழுத்தாளர்கள் வாசகர்கள் சந்திப்பு என்கிற அம்சம் மீது அக்கறையற்ற போக்காகத் தான் பபாஸியின் நடவடிக்கைகள் இருக்கின்றன.
தனது நண்பர்களேயானாலும், கிட்டத்தட்ட 25 பேருக்கும் அதிகமானோர் கௌ.சித்தார்த்தனின் உரையைக் கேட்பதற்கு வந்திருந்தார்கள்.
அரங்கு தயார்செய்யப்படாமல் இருந்ததில், அனைவரும் அரங்கிற்கு வெளியே திறந்தவெளியில் ஒரு கூட்டமாக அமர்ந்து ஆரம்பித்தோம்.
ஒருங்கிணைப்பு : டிஸ்கவரி புக் பேலஸ் அண்ணாச்சி
கௌதம சித்தார்த்தனின் கதைகளை முன்வைத்துப் பேச ஆரம்பித்த மனுஷி பாரதியின் உரை சிறப்பாக அமைந்தது. மிகச் சமீபத்தில் தான் நிகழ்வு குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால். அவரது உரைக்கான தயாரிப்பு மிகவும் அற்பணிப்போடு செய்யப்பட்டிருந்ததாய் உணர்ந்தேன்.
கௌதம சித்தார்த்தன் வழமையான உணர்ச்சிவயப்பட்ட நிலையில் பேச ஆரம்பித்திருந்தாலும், அவர் உரையின் மையத்தைத் தொடும்போது, அந்த அமர்வு வேறு ஒன்றாக மாறியது. தனது நீண்ட கால அனுபவத்திலும், வாசிப்பிலும் இருந்து மிகவும் உறுதியாக இலக்கிய உலகில் இருக்கும் மோசமான சூழலுக்கு இடைநிலைப் பத்திரிக்கைகள் தான் காரணம் என அவர் முன்வைத்தது, அவசியமான பார்வை தான். அதுவும் தற்காலச் சூழலில்.

பாப்புலர் கலாச்சாரத்தை ஏன் இடைநிலைகள் சுவீகரித்துக் கொண்டன என்பதை அடிப்படைப் பிரச்சனைகளோடு ஆரம்பித்து, விகடனின் தடம் இதற்கு ஒரு சிகரமாய் அமைகிறது என்கிற கருத்தாக அங்குப் பதிவு செய்யப்பட்டது.

ஓவியங்களை இதழ்களில் பதிவு செய்யும் விதம் இதழ்களின் ஆசிரியர்களளின் செயல்பாடுகள் மீதிருக்கும் விமர்சனங்கள், விமர்சனங்களின் போதாமை,தற்காலச் சூழலில் வாசிப்புக் குறைந்து போன நிலைமை, ஒரு நல்ல புனைவு சாதியத்தை எவ்வாறு அணுக வேண்டும்?, காமத்தை,வன்முறையை எவ்வாறு அணுக வேண்டும்?, ஒரு நாவலைத் தொடங்குவதற்கான மனநிலை எவ்விதம் இருந்தால் உகந்தது என பல விஷயங்களை உணர்வுப்பூர்வமாகப் பேசி முடித்தார்.

கௌதம சித்தார்த்தன் - ஒரு நிலத்தில் நின்று கொண்டு தான் தன் படைப்பிலக்கிக்கியம் குறித்தும் அரசியல் குறித்தும் பேசி வருகிறார். நிறையக் கோபமும், ஆதங்கமும் அவரை அடிக்கடி உணர்ச்சிவயப்பட வைத்து விடுகின்றன. ஆக நிறைய எதிரிகள், முதுகுக்குப் பின்னால் பேசுபவர்கள் உருவாகிவிட்டார்கள். இதற்குப் பெரும்பாலும் அவர் தனித்தே இயங்குவதும் காரணம் ஆகிறது. சில நல்ல நண்பர்களை பட்டென அன்ஃபிரண்டு செய்தும் விடுகிறார்
பொதுவாக, தன் எழுத்துகளில் அவர் தன்னை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாகக் கூறிக் கொள்கிறார். ஆனால் அது ஒரு போதாமையாகத் தான் தோன்றுகிறது.
1990களுக்குப் பிறகு மூன்றாம் உலக நாடுகள் அநேகமாக இல்லாமலே போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
தன் மண் சார்ந்தும், வேர்களில் இருந்தும், சங்க இலக்கியத்திலிருந்தும் பண்பாட்டுக் கூறுகளை, MYTHகளை, புராணங்களை மீள் செய்யும், மறு ஆய்வு செய்யும் இவர், தன்னை மொழி சார்ந்த, இனம் சார்ந்த பிரதிநிதியாகப் பாவிப்பது அவசியம் என்று கருதுகிறேன். அப்போது உடனிருக்க நண்பர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என்பது மட்டுமல்ல. உலகளாவிய கருத்துகளாக மாறும் போது அதைக் கொண்டு செல்ல இந்த அடையாளத்தை விட மூன்றாம் உலக நாட்டின் பிரதிநிதி என்பது சிறந்ததல்ல.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக