வியாழன், 20 ஆகஸ்ட், 2015

பஜ்ஜி -சொஜ்ஜி 81- மிச்சம் வைக்கப் பிடித்திருக்கிறது.




சென்ற சனிக்கிழமை மாலை உருவாக்கித் தந்த அற்புத வாய்ப்பினால் நிகழ்ந்த அப்பயணம் ஒன்றில் மனிதர்களை வைத்து அனுபவத்தின் வழியே கோட்பாடுகளை INSTALLATION செய்யும் ஒரு கலைஞனைப் பற்றி அறிவதற்கு மேலும் ஒரு பெரிய வாய்ப்பு கிட்டியதை ஹைவேயில் இருக்கும் அந்த ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி – ஒன்லி காஃபி மேல் சத்தியம் செய்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

இப்படியாக ஒரு கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் போதே மிஸ்டர் வேல்கண்ணன் அவர்கள் முதல் பத்தியிலேயே கோபம் கொண்டு வாசிக்காமல் போய்விடுவார் என்று நம்பியபடி இவ்வரிகளைத் தொடர்கிறேன். ஆம் இந்தப் பயணம் வேல்கண்ணனுக்கானது. அவ்வாறே இது எனக்கானதாகவும், எல்லோருக்குமானதாகவும் இருந்தது, ஒருவரைத் தவிர.

இன்னும் நிராகரிக்கப்படாத படைப்புகளை ட்ரெங்குப் பெட்டியில் போட்டு வைத்துக் கொண்டு, தர தரவென இழுத்துச் சென்று கொண்டிருக்கும் எனக்கு இது போன்ற கரிசனமான வாய்ப்புகள் இன்னும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதில் ஒரு நிம்மதி. காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்று சொல்வதைப் போலே காலம் என்பதே ஒரு வாய்ப்பு தான் என்று கருதுவதும் உண்மையானதே.

காலையில் தனியாக ஒரு அறுபது கிலோ மீட்டர் தந்த உற்சாகம் இல்லாதிருந்தால், அப்போது உண்ட உணவுக்கு மரியாதை கொடுத்து தூங்கச் சென்றிருக்கலாம். ஆனால் அதிகாலை தனியாகவேனும்  மாமல்லை போகவேண்டும் என்று தீர்மானித்து தான் கூடுதலாக ஒரு சட்டை ஒன்று எடுத்து வைத்திருந்தேன். ஃபலூடாவை சாப்பிடுவதற்கு அலுத்துக் கொண்டிருந்த க்ருஷ்ணப் பிரபுவோடு விளையாடிப் பார்க்கலாமே என்று தான் விளையாட்டாகக் கேட்டேன்.

“ஜீ போலாமா”
“நீங்க பைக்க நிறுத்திட்டு, நடந்து வாங்க நாங்க வெயிட் பண்றோம்”

திட்டம், ஆலோசனை, ஐடனரி, பவர் பாய்ண்ட் பிரசண்டேசன் எல்லாமுமே பயணத்துக்கானவை தான். ஆனால் பயணம் இவைகளால் தீர்மானிக்கப்படுபவையல்ல. அவருடன் ஆரம்பித்த எங்கள் பயணம் சௌகரியமாகத் தான் தொடங்கியிருந்தது, கால்நடையாகவே தன் சௌகரியங்களை இழப்பதில் வருத்தமேதுமில்லாமல் இலக்கியத்தின் பிடிமானங்களில் இருக்கும் துருக்களில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருப்பதை FUNஆகவும் செய்யாமல், பிரதிபலனும் எதிர்பார்க்காத உயிரி ஒன்றுடனும், அநேகமாக இன்னும் பத்தாண்டுகளுக்குள் 296 பருத்திவீரர்களாலும், தாமதமாய் எங்களுடன் வந்து சேர்ந்த அசல் பருத்திவீரன் ஒருவனாலும் அதிகம் வெறுக்கப் படப்போகின்ற வேல்கண்ணனுடனும் பயணம் தொடங்கியிருந்தது சௌகரியம் தான்.

புன்னகைகளும், லேசான ‘களுக்’ சிரிப்புமாய் மட்டுமே இருந்து கொண்டிருந்த அந்த ஓ.எம்.ஆர் பயணம் மாமல்லையை நோக்கித் தான் என நானும் அது வரை நம்பிக்கொண்டிருந்தேன். வெண்டோவின் ஸ்டியரிங்கைப் போலவே.

ரமேஷ் ரக்சனின் நினைவு வந்த கணம் – யூ டர்ன் அடித்திருந்தோம், யூகித்து வைத்த ஒரு மணி நேர கால் டாக்ஸி பயணத்திற்கு தோதாக, பங்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய மண்மேட்டில் ஒதுங்கிக் கொண்டோம். க்ருஷ்ணப் பிரபுவுடன் நான் அப்போது பேசிய ஒரு விஷயம் தான் முதல் பத்தியாக மாறும் என்பதை உணரும்போது ஃபேஸ்புக்கின் விநோத ஸ்டிக்கர் கமெண்டுகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

தொடங்கினால் முடிக்கத் தெரியாத ரமேஷ் எனும் பாலகன், சிக்னலைத் தாண்டுவதற்கு எங்கள் நால்வரையும் ஏக காலத்தில் வைய ஆரம்பித்திருந்தான். மாமல்லை என்றால் அர்ஜுனன் தபசு மட்டுமே இருக்கிறது என்று அறிந்திருந்த ரமேஷ், கூகிளில் சென்று கடற்கரைக் கோயிலைத் தேடப் போவதில்லை என்பதும் சாஸ்வதம். ஒருவேளை துரிதமாக கிழக்குக்கடற்கரைச் சாலை சரிசெய்யப்படிருந்தால் மாமல்லையைத் தாண்டி பாண்டிச்சேரிக்கே சென்றிருக்கலாம். ஆனால் ஓ.எம்.ஆரில் சென்று கொண்டிருந்த எங்களுக்கு ஹைவேயில் உள்ளே ஏதேனும் ஒரு கும்பகோணம் காபி கடை போதுமானதாக இருந்தது. மழை சற்றே தூரத் தொடங்கியிருந்த கணத்திலே அது உத்திரமேரூராக மாறியிருந்தது. அதிகாலைக்குள் வேல்கண்ணனையும், கிபியையும் வீடு சேர்ப்போம் என்று நம்பிக் கொண்டு அப்பாவிகளாய் தெரிந்தார்கள்.

நட்சத்திரங்களின் சுவடுகள் கூட இல்லாத அந்த மேகம் சூழந்த இரவின் ஒளியை சுற்றிலும் மலைகளுக்கு நடுவே இருந்த கணத்தில், ரமேஷ் தன் சிறுதுரும்பில் படங்கள் எடுக்க ஆரம்பித்திருந்தான். உத்திரமேரூருக்கு செல்லும் வழியிலேயே திசை மாறிச் சென்று கொண்டிருந்த எங்களை ஒரு தெருக்கூத்து ஒன்று சற்று நேரத்திற்கு நிறுத்தி வைத்திருந்தது. புதிதாய் ஊருக்கும் வந்திருக்கும் அந்நியர்களின் விவரங்களை கேட்காத ஊர்ப்பெரியவர்கள் வாழும் கிராமம் எவற்றையெல்லாம் தொலைத்திருக்கிறது என்று கூத்துக்காரர்களின் படைப்பு “கடல்” படம் பார்த்த சலிப்பாக மாறியது. அங்கிருந்து திரும்பும்போது, உத்திரமேரூர் பக்கம் சாதிக் கலவரம் நடந்து கொண்டிருப்பதாக ஒரு காவலர் தெரிவித்த தகவல், உத்திரமேரூர் தான் செல்ல வேண்டும் என்று ஜீயை, அவர் உறுதியைத் தூண்டியிருக்கும். மனதிற்குள் லேசான கிலி இருந்தாலும், காஃபிடே நிறுத்தம் ஒன்றில் போதிய அளவு பண்டங்களை நிரப்பிக் கொண்டு கிளம்பலானோம். டீசல் பற்றிய சிந்தனையே இல்லாமல்

உத்திரமேரூர் சாலையைக் கண்டுபிடிப்பதில் எனக்கு ரமேஷுக்கும் விவாதம் வந்தது. ஆம், இப்படி ஒவ்வொருவராக வம்பிழுக்கும் ரமேஷ் வராவிட்டால் இத்தனை சுவாரஸ்யமான பயணமாக அமையாது என்பது உண்மை தான் என்றாலும். அவனோட நேரடி டார்கெட்டில் இருப்போர் நிலைமை பரிதாபம் தான். வேல்கண்ணன் கைகளில் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலையும், கி.பி தமக்கென தாமாக வடிவமைத்துக் கொண்ட ஒரு மந்திரம் ஒன்றை ஓதி அவனைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தனர். பல நேரங்களில் அஹிம்சை காலாவதியாகிவிட்டது என்கிற தத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் தூதுவனாகிய ஆர்.ஆர், கடைசி வரை பயணத்தை மிகச் சௌகரியமாகக் கழித்தவன் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த மொபைல் போனில் எடுத்த போட்டோக்கள் தான் பலருக்கு புரொஃபைல் போட்டாவாக இருக்கும் என்கிற காரணத்தால் தான் நட்பு பாராட்டுகிறோமோ என்கிற எண்ணமும் எழாமலில்லை.

இராஜராஜனின் குடவோலை சாஸனம் இருக்கும் உத்திரமேரூர் கல்வெட்டு இருக்கும் மண்டபத்தின் வெளிவாயிலில் நின்று கொண்டிருந்தோம். காலை வேளையிலேயே அந்த மண்டபத்திற்கு அனுமதியில்லை என்கிற நிலையில் ASIன் டெம்பிளேட் போர்டுக்கு அருகில் செல்ஃபி எடுத்துக் கொள்ளாமல், அத்தனைக் கொசுக்கடிக்கும் மதிப்பு கொடுக்காமல் சோடியம் வேப்பர் விளக்கொளியில் ஒரு போட்டோ ஷூட். இந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் எதிரெதிர் துருவங்களாய் வாழ்வியல் முறை, வாசிப்பு, எழுத்து, குணம், பழக்கவழக்கங்களில் இருக்கும் கிபிக்கும் ரமேஷுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி என்னென்ன விளைவுகளை உண்டாக்குமோ என்கிற ஆச்சரியம் ஒருபுறம், குறுநகையோடு சிகரெட்டின் கடைசிப் புகையை விடும்போது, வெடிச்சிரிப்பு எழும்பியது. இந்த ஊரிலும் யாரும் எங்களை எதுவும் விசாரிக்கவில்லை, எல்லா ஊர்களும் மெட்ராஸாக முயன்று கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

உத்திரமேரூர் – காஞ்சிபுரம் சாலையை நாங்கள் பார்த்த கணத்திலேயே “காஞ்சிபுரம் இட்லி சாப்பிட்டு இருக்கிறீர்களா” என்று ஒலித்த கேள்வியின் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்துவிட்டது. பயணத்தில் மீண்டும் மாறுதல் என்றதும்,  கி.பி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று அடுத்த நாள் மாலையிலாவது வீடு சேர்த்தால் சரி என்று ஒப்புக் கொண்டார். வேல்கண்ணனுக்கு தலைவலி ஆரம்பித்து இருக்க வேண்டும். “பேபிமா பிலிவ் மி” என்று வடிவேல் சொல்லும் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வந்தது. காஞ்சிபுரம் வரை நாங்கள் சிரிப்பதற்காக மட்டுமே காரிலிருந்து ஆறு முறை இறங்கியிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது, எல்லோரும் அவரவர் பிரச்சினைகளையும் கைப்பையில் சுமந்துக் கொண்டு தான் அந்தச் சனிக்கிழமை மாலையிலும் சந்தித்தோம். ஜீ-யின் ஒரு கண முடிவில் 24 மணி நேரத்திற்கு அவற்றை வென்டோவின் டிக்கியில் போட்டு வைத்ததால் தான் அப்படிச் சிரிக்க முடிந்தது. ரமேஷோ தன் பிரச்சினைகளை பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்திருப்பவன், ஜீ அவனை “ஒழுங்கா வேட்டி கட்டிட்டு வா” என்று சொன்னதால் அவன் தன் பிரச்சினைகளை வீட்டிலேயே வைத்துவிட்டான். கிண்டலும், நையாண்டியுமாக கட்டுப்பாடற்ற  சிரிப்பில் இரவு உண்ட Heavyஆன உணவும் வேகமாகச் செரித்தது. அதுவும் சிரிப்பென்றால் ஒரு கிராமத்தின் மக்களை ஒட்டுமொத்தமாக எழுப்புமளவு சிரிப்பு.


அதிகாலை நான்கு மணிக்கு வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு முன்னர் வண்டி நிறுத்தப்பட்டிருந்த சமயம். மழை தன் வீரியத்தைக் கூட்டியிருந்தது. காஞ்சிபுரம் இட்லி கிடைக்கும் இடம் அது தானாம். எல்லோரும் தூங்க ஆரம்பித்திருந்தோம். அது பூனைத் தூக்கம், மீண்டும் ஒரு லாட்ஜைத் தேர்ந்தெடுத்து குட்டித்தூக்கம் போடலாம் என்று தீர்மானித்திருந்தார்கள் போலும், என்னை எழுப்பும் போது நகரின் வேறு எங்கோ ஒரு மூலையில் இருந்தோம். அறைக்கு செல்லும் போதே, ரமேஷை ஜீயுடன் தங்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இல்லாவிட்டால் அந்த சொற்ப நேர தூக்கமும் “மிஸ்டர் வேல்கண்ணன்” எனும் அவனின் நாமாவளியில் கெட்டுப் போயிருக்கும், எப்படியோ கதவை சாத்திவிட்டு காலை எழுந்தாகிவிட்டது.

கோயில்களின் நகரத்தில் ஏதாவது நான் ஆசைபட்டபடி கோரிக்கை வைத்திருந்தால் மூன்றுபேரின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமென்பதால், வாயை மூடிக்கொண்டேன். வேல்கண்ணன் ஏதாவது பேருந்திலாவது ஏற்று விடுங்கள் என்று கோரிக்கை, வேண்டுகோள், கெஞ்சல், கொஞ்சல், மிரட்டல் என்று தொனியை மாற்றிக் கொண்டிருந்தார். காஞ்சிபுரத்தில் ஒரு ஓவியர் ஒருவர் இருக்கிறார் என்று ஜீ சொன்னார். கிபி – ஜீகேவை தான் பார்க்க வேண்டும் என்று மனு கொடுத்தார். ரமேஷ் ஸ்டார் பிரியாணி என்று முடிவாய்ச் சொன்னான். ஏற்கனவே தன் நண்பனுக்கு கொடுத்த வாக்கு ஒன்றை நிறைவேற்றாமல், ஒரு ஆர்டிகள் ஒன்று எழுதுவதாய் பொய் சொன்ன பாவத்துக்கு அவனது கோரிக்கை நிராகரிக்கப்படும் என்று எதிர்பார்த்தேன், பொய்க்கவில்லை.

வேல்கண்ணனிடம் முடிவு எடுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது. ஜீ நீட்டிய ஒரு விரல் கண்ணாடி அணிந்த வேல்கண்ணனுக்கு மட்டுமல்ல எங்கள் அனைவருக்குமே மூன்று விரல்களாய் தெரிந்தது. ஜீ.கே என்கிற ஜீ குப்புசாமி அவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம். பத்து நிமிடம் மட்டுமே இருப்போம் என்று முன்னமே சொல்லி வைத்திருந்தோம். எங்கள் எல்லோரையும் விடவும் இளமையாகத் தெரிந்த மனிதராகக் காணப்பட்டார், எங்களை வரவேற்ற நர்மதா குப்புசாமி அவர்கள் பிரியாணி போட வேண்டும் என்கிற அக்கறையும் அவ்வப்பொழுது சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த வண்ணமே மும்முரமாயிருந்தார். சைவப்பட்சியான என் நாசியையும் துளைத்தது பிரியாணி வாசம். நான் சாப்பிடப் போறதில்லை என்றால் இந்த உலகத்தில் எனக்காக யாரும் வருத்தப்படப் போவதில்லை என்பது வரம் தான். சுவையான தேநீரைக் குடித்து முடிப்பதற்கு ஜெமோ பற்றிய பேச்சு உருவானது. நான்கு எழுத்தாளர்களுக்கும் மேல் சந்தித்துக் கொண்டால் – ஜெமோ எப்படி வராமல் போவார்.



கிபி அங்கேயும் ப்ரூஃப் பார்த்துக் கொண்டிருந்தார், க்ரூப் போட்டோ எடுத்தாலே அந்த அமர்வு நிறைவுபெறுகிறது போலும். எல்லோரிடமும் விடைபெறும் போது தான் ஜீகே எங்களை மொத்த கணையாழிக்கும் விருந்தளித்ததாகச் சொன்னது ஞாபகம் வந்தது. நாங்கள் எந்த ஒரு திட்டமும் இல்லாது கிளம்பிய பயணம், எங்களை ஏதாவது ஒரு வகையில் ஒருங்கிணைக்கிறதா என்று யோசித்தேன். சற்றைக்கெல்லாம் தீவிரமாக இலக்கியம் பக்கம் மாறிய பேச்சு அதை உர்ஜிதப் படுத்தியது.

இமயத்தின் ”எங் கத” குறித்த விவாதம் தீவிரமாகப் போக, அதை வாசிக்காத நானும் ஜீயும் அதைக் கொஞ்ச நேரம் கவனித்துக் கொண்டே இருந்தோம். அந்த ஒரு புத்தகம் குறித்த விமர்சனம், ஜீயின் கேள்விகளுக்குப் பின்னர் விமர்சனக் கோட்பாடுகள் பற்றிய பொதுமைப் பண்புகளைப் பேசும் தீவிரமான அமர்வாக மாறியது. இவற்றை வேடிக்கை மட்டுமே பார்த்தபடி இருந்த நான் ஒரு முருக்கு பாக்கெட்டை காலி செய்து முடித்த நொடி , என்னையும் இழுத்துப் போட்ட போது தான் உணர்ந்தேன்.

ஜீ இந்த விவாதத்திற்கான மனநிலையை  காலையில் இருந்தே உருவாக்கிக் கொண்டிருந்தார் என்பது தாமதமாகாத்தான் விளங்கியது, பார்க்கிங் டோக்கனுக்கு வசூல் செய்த ஒருவனோடு வம்பிழுத்ததிலிருந்து, சரவணபவனில் செய்த வாதங்கள், என்னையும் கிபியையும் இணைக்கின்ற புள்ளி ஒன்றில் இருக்கின்ற எங்கள் மனநிலையை கீறி விட்டது, பின்னர்  ஜீகே வீட்டிற்கு சென்றது என மாறிவிட்ட மனநிலை எப்படி வெறுமனே எப்படி களிப்புடன் மட்டும் ஒரு பயணத்தை நிறைவுபெற வைக்கும்.

ஆடிக்காற்றில் இலகுவாகிப் போன புழுதி மண்ணில் விதை தூவுவது எளிமை தானே.

அதற்குப் பின்னர் எங்கள் பயணம் அதிகம் மௌனமாகவே இருந்தது. எல்லோர் மனதிலும் ஜீயுடன் விவாதித்த கோட்பாடுகள் வேறு வேறு பரிமாணங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் ஒரு வெற்றிடம் கண்ணில் தெரிந்தது நிச்சயம், யார் அங்கே ஆக்கிரமிக்கிறார்கள் என்பது காலத்தின் கைகளில்.

கொஞ்சம் கருப்பு வெள்ளை காலத்திய இந்திப் பாடல்களும், தமிழ்ப் பாடல்களும் இதமாகியிருந்தது. வேல்கண்ணன் வீட்டிற்கும் முன்னரே என் வீடும் இருந்தது, எனினும் பயணத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்று மனதில் இருந்த ஆசைக்கு வெகுமதியாக A2Bயில் ஒரு மெதுவடையும், காஃபியும் கிடைத்தது.

சுமார் 500 கிலோ மீட்டர்களாவது கடினமான பயணம் செய்திருப்போம். இதெல்லாவற்றிட்கும் காரணம் ஜீ தான்.

அன்றிரவு பாண்டவர்கள் அனைவரையும் க்ருஷ்ணன் வண்டியில் ஏற்றிச் செல்வதாக கனவு ஒன்றைக் கண்டேன். எங்கள் நால்வரில் யார் அர்ஜுனன்?, யார் தர்மர்? என்றெல்லாம் தெரியாது. ஆனால் ஐந்தாவதான ஒரு சகோதரன் இல்லாமல் போனதில் வருத்தம் தான். அவர் யார் என்று உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.



மனிதர்களை வைத்து INSTALLATIONகள் உருவாக்கும் கலைஞன் என்று சொன்னேனில்லையா? அதை விளக்குவது மிகக் கடினம் தான் எனினும் அதற்கு இன்னும் சில பிரயாணங்கள் பற்றியும் சொல்ல வேண்டும், சில இனிமேல் தான். இதற்கு முந்தைய பயணங்கள் பற்றியும் சொல்லலாம் தான் – ஆனால் எனக்கு இன்னும் மிச்சம் வைக்கப் பிடித்திருக்கிறது.

- ஜீவ கரிகாலன்


(  24 மணி நேரம் - சுமார் 500 கி.மீ பயணத்தை சாத்தியப்படுத்திய அவர் கேட்டதெல்லாம் - “ இதைப் பதிவு பண்ணிட வேண்டும் ” என்று, நண்பர்களோடு செய்த ஒரே பயணம், எல்லோருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்கவில்லை. இதை வாசிப்பதோடு மட்டுமல்லாது நண்பர்களின் வலைப்பூக்களையும் பாருங்கள் 1. http://thittivaasal.blogspot.in/2015/08/blog-post.html 2.http://rvelkannan.blogspot.in/)

1 கருத்து:


  1. ”அன்றிரவு பாண்டவர்கள் அனைவரையும் க்ருஷ்ணன் வண்டியில் ஏற்றிச் செல்வதாக கனவு ஒன்றைக் கண்டேன். எங்கள் நால்வரில் யார் அர்ஜுனன்?, யார் தர்மர்? என்றெல்லாம் தெரியாது. ஆனால் ஐந்தாவதான ஒரு சகோதரன் இல்லாமல் போனதில் வருத்தம் தான். அவர் யார் என்று உங்களுக்குச் சொல்லப் போவதில்லை”...?!!!சந்தடியில்லாமல் முடிச்சிட்டீங்களே ஜீவ்ஸ்...!!!!

    பதிலளிநீக்கு