ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

Payback பூதம்

                       என் தம்பி ஒருவன் பன்னாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் ஒரு கடந்த ஐந்து மாதங்களாக வேலை பார்த்து வருகிறான். சென்ற மாத இறுதியில், தமக்குப் பணக் கையிருப்பு மிகவும் குறைந்துவிட்டதாக புலம்பிக் கொண்டிருந்தான். எனக்கோ அது மிக ஆச்சரியமாக இருந்தது, சிக்கனமாய் வாழ்வதை ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் இருந்தவன் அவன் , இந்த வேலையில் சேர்வதற்கு முன்பு அவன் பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்திலோ இப்போது வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகத் தான் வாங்கி வந்தான். இப்படி மிகவும் சிக்கனமாய் இருந்து வந்தவன், பணக் கையிருப்பைப் பற்றிக் கவலைப்பட்டதால் ,"வேறு எதுவும் அவசரத் தேவை இருந்ததா?" என்று அவனிடம் நான் கேட்டேன், அவன் "இல்லை" என்று சொன்னான். அவன் பணம் எப்படி கரைகிறது என்று கொஞ்சம் ஆராய்ந்தால், அவனைச் சுற்றி ஒரு சதிகாரக் கும்பல் விரித்த ஒரு மாய வலையில் அவன் சிக்கியிருப்பதை அறிந்துக் கொண்டேன், அந்த வலை எப்படி விரிக்கப் பட்டது என்பதை நாம் அலசுவோம்  ...........


                           நலிவடைந்துக் கொண்டிருந்த நம் நாட்டைக்  காப்பாற்றிக் கொள்ள, ஒரு பெரியக் கதவு 1991 ல், "நாட்டு நலன்" என்ற பெயரில் நமது மத்திய அரசால் திறந்துவிடப்பட்டது. அதுவரை வெறும் 1.50% மட்டுமே இருந்தே நமது நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி, படிப்படியாக உயர்ந்து 9% வரை உயர்ந்து உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியில் ஒன்றாக தன்னையும் நிறுபித்தது என்று நடுவன் அரசு தன் சாதனையை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியும், வீழ்ந்துக் கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பும், பெரியாதாகிக் கொண்டிருக்கும் பணக்கார-ஏழை இடைவெளியும், உலக அரங்கில் இந்தியாவின் வலிமையை எந்த விதத்திலும் குறைக்காது என்று தன் கொள்கையில் உறுதியாய் இருந்துக் கொண்டு, அந்தக் கொள்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றது . சரி, இதற்கும் என் தம்பியின் பணப் பற்றாக்குறைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? தொடர்ந்து படியுங்கள் ... 

            நமது அரசின் தளர்த்தப்பட்ட பொருளாதரக் கொள்கைதான், நமது சமூகப் பொருளாதாரக் கொள்கையினை மாற்றியமைத்திருக்கிறது என்கிற காரணம் தான் என் தம்பியைப் போன்ற பலரின் திண்டாட்டங்களுக்கு காரணம். முதலில், ராக்கெட் உயரத்தில் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியிலும், கட்டுக்குள் அடங்காது போன நகரமயமாக்கலும் நடுத்தர மற்றும் பாமர மக்களுக்கு வசதியான வீடு, சுகாதாரமான சூழல், தரமான மருத்துவம், கல்வி  ஏன் அத்தியாவசியமான குடிநீர் , மின்சாரம் போன்றவற்றைப் பெறுவதற்கு 365 நாட்களும் அல்லலுறுகின்றனர். இது ஒருபுறமிருக்கட்டும், என் தம்பியைப் போன்ற நல்ல ஒரு உத்தியோகத்தில் ( வங்கியில் , மின் பொறித் துறை, தகவல் தொழில் நுட்பம் போன்ற white collar job) இருப்போர் கூட எதற்காக இப்படிப் புலம்ப வேண்டும் ?? முன்பே சொன்னது போல சமூகப் பொருளாதரக் கட்டமைப்பு மாறியிருக்கிறது என்பது நமது சேமிப்பு பொருளாதாரம் நம்மைச் செலவு செய்யும் பொருளாதாரமாக மாறிவருகிறது.

                       ஆம், முன்பெல்லாம் நம் வருமானத்தில் ஒரு பகுதியை (நடுத்தர, மேல் நடுத்தர மக்களின் நிலை ) சேமிப்பதற்கு என்றே முதலில் எடுத்து விடும் வழக்கம் இருக்கிறது. ஆனால், இன்று சேமிக்கும் வழக்கம் நமக்கு குறைந்துகொண்டே வருகிறது. இது ஏதோ நம்மை திடீரென்று மாற்றிய மாயஜாலம் இல்லை, எப்படி நம் வீட்டிற்குள் தினமும் காலையில் பருகக் கிடைக்கும் நீராகாரத்தை காப்பி(காபி/டீ) துரத்திவிட்டு அமர்ந்து கொண்டதோ அப்படித்தான் மாற்றம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. இன்று மறுபடியும் நாம் நீராகாரம் பக்கம் செல்வோமா ? இதேபோலத் தான் மெல்ல வந்து நம் சட்டைப் பைகளில் அமர்ந்துக் கொண்டது இந்த கிரெடிட் கார்ட் யமன்!!.

                        கிரெடிட் கார்டின் ஆபத்து , இது நம்மை வெறும் கடனாளியாக்குகிறது என்பதோடு  மட்டுமல்லாமல் நம் கலாச்சாரத்தையும் மாற்றிவிடுவதைத்தான் இந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நாம் வாங்கியச் சம்பளக் கவரைப் பிரிக்காமல் வீட்டிற்குக் கொண்டுவந்து தாயிடமோ, பூஜையறை விளக்கு முன்போ அல்லது மனைவியிடமோக் கொடுத்து அதற்கு நாம் மரியாதை செய்கிறோம், பின்னர் அதை  நம் வருங்காலத்திர்க்கோ, குழந்தைகளுக்கோ அதைத் திட்டமிட்டு சேமிக்கிறோம். இன்று, கார்ட் கலாசாரம் என்று மாறிய பின்பு "பாதுகாப்பு" என்ற பெயரில் வங்கிக் கணக்கிலே வைத்துவிடுகிறோம். வங்கிகள் நம் சேமிப்புகளை சூறையாட எல்லா வேலைகளையும் செய்கிறது.அவசரத் தேவைக்கு கடன் வாங்குவதை விட்டு விட்டு ஆடம்பரத் தேவைக்கு நம்மை வாங்க வைக்கும் வேலையைச் செய்து வருகின்றன.இதை எளிமையாக விளக்கும் பொருட்டு ஒரு தனி நபரின் வாழ்க்கை முறையை எடுத்துக் கொள்வோம்.

                              அந்தப் பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவனுக்கு மாதச் சம்பளம் 25000 /- ரூபாய், அதில் பெர்குசைட்ஸ் (perquisites ) என்று மீல் வவுச்சர்களும் (i.e Sodexo Meal Pass) அல்லது food கார்டு என்றோ கிட்ட தட்ட 3000 ரூபாயை அவன் மாதச் சம்பளத்தில் இருந்து கழித்து விடுகிறார்கள், அதை வருமான வரி விலக்கு என்று அவர்களுக்கு கூறி அதை ஏற்க வைத்து விடுகிறார்கள். முதலில் Staff welfare என்ற அடிப்படையில் கொடுக்கப் படும் இந்த சலுகை வருமான வரிச் சட்டத்தின் FBT - Perquistes Act on food coupon /meal vouchers ன் கீழ்  Rule 3(7)(iii ) படி ஒரு நிறுவனத்தில் வேலை நிமித்தமாக, வேலை நேரங்களில் மட்டும் தரப்பட வேண்டிய ஒரு கூப்பனின் விலை ரூபாய் 50/- அதிகபட்சம் ஒருநாளைக்கு இரண்டும்ரை கூப்பனை உபயோகிக்கலாம் என்று இருக்கும் சட்டத்தின் கண்களில் கறுப்புத் துணி கட்டி விட்டு,  பிரபல  நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் Sodexo / orange போன்ற உணவுக் கூப்பன்களும், food கார்டுகளும் எப்படியெல்லாம் உபயோகப் படுத்தப்படுகின்றன என்று பார்க்கும் பொழுது, நம் அரசுக்கு வரியேய்ப்பும், நமது நுகர்வுத் தன்மை மாறிவருவதையும் தெளிவாகப் பார்க்கலாம்.

                               ஆம், அரசு தரும் வரிச் சலுகையானது (As per the IT act) ஐம்பது ரூபாய் வவுச்சர்களுக்கு மேலே பொருந்தாது, ஆனால் sodexo பாஸ் கூப்பனில் 100 மற்றும் 200௦ ரூபாய் வவுச்சர்கள் அதிகமாய் இருக்கும். Food card தேய்க்கப் படும் இடங்கள் எப்படி இருக்கும் உங்களுக்கு தெரியாதா என்ன ? KFC , MacDonald's, Pizza hut போன்ற பன்னாட்டு உணவகங்களோடு நாம் நாட்டு பெரிய நிறுவனங்களான அடையார் ஆனந்த பவன், சரவணா பவன் . வசந்த பவன் , ஸ்ரீ மிட்டா , அஞ்சப்பர் என்று நவநாகரிக ஆடம்பர உணவகங்களில் மட்டுமே இந்த Food கார்டுகளை தேய்க்க முடியும் என்றால் நாம் எப்படிப்பட்ட ஒரு பொறியில் சிக்கிக் கொண்டோம் என்று புரிகிறதா ?? 

                                   இதுவரை தன் வாழ்க்கையில் நூறு ரூபாய்க்குள் மிகத் தாரளாமாக மூன்று வேளையும் உணவு உண்டு வந்த என் தம்பிக்கு, இப்பொழுது ஒரு வேளைச் சாப்பாடே நூற்றைம்பதுக்கும் குறையாமல் இருக்கிறது என்றால் அவனை எப்படி ஒரு கிணற்றில் தள்ளிவிடுகிறது இந்தக் கார்ப்பரேட் கலாசாரம். என் தம்பியும் அந்த கார்டினை வைத்து பத்து - பதினைந்து நாட்கள் சாப்பிடுகிறான், பணம் தீர்ந்தவுடனும் கூட நாவில் ஒட்டியிருக்கும் மாய ருசி அவனை அங்கேயே தொடர்ந்து சாப்பிட வைக்க உந்துகிறது. இந்த இடம் தான் நம் நுகர்வுக் கலாசாரம் மாறும் புள்ளி, இதற்குப் பின் சுவையாக,ஆரோக்கியமாக, மலிவான விலையில் கிடைக்கும் ஏதாவது சிறிய ஓட்டல்களிலோ அவன் சாப்பிடப் போவதில்லை. அதை அவன் மறந்தும் கூட செய்யாதிருக்க அவன் வேலை பார்க்கும் வளாகத்திலே இருக்கும் ஆடம்பர உணவகங்களில் வேலை செய்யும், நுனி நாக்கு ஆங்கிலத் திறமை கொண்ட நவ நாகரிக யுவ யுவதிகளின் விருந்தோம்பல் பண்பினில் (hospitality), அவனுக்கு ஒரு இமேஜ் உண்டாக்கப் பட்டிருக்கும்.

                                 இந்த food கார்டுகளை அவன் காய்கறி, பழம் வாங்க உபயோகித்தாலும் அதையும் "ரிலையன்ஸ் ஃபிரெஸ்", "மோர்", "ஸ்பென்சர்" போன்ற மெகா பஜார்களில் தான் வாங்கவேண்டும். அது போன்ற கவர்சிகரமான ஸ்டோர்களில் சில நேரங்களில் அவன் விலை குறைவாகக் கொடுத்தாலும், தேவையற்ற உணவுப்பண்டங்களை அவன் நுகர்வு செய்வதை அவனால் கட்டுப்படுத்த முடியாது, சில நேரம் தியேட்டர், மால்களில் உள்ள கேண்டீனில் கூட அவன் உபயோகிக்கிறான் என்றால் , இதற்கு வருமானவரி விலக்கு தரும் அரசிற்கு எவ்வளவு நன்மை?. எல்லாவற்றிக்கும் மேல் சாப்பிடும் பண்டங்களுக்கு கொடுக்கும் கூப்பன்களில் நமது நுகர்வு போக எவ்வளவு மீதம் இருந்தாலும் திரும்ப வராது என்பது இதில் பெரிய கொடுமை. இது  போல ஏதாவது ஷாப்பிங் மால்களில் ( ஸ்கைவாக், எக்ஸ்ப்ரெஸ் அவென்யு) இருக்கும் food கோர்ட்டுகளில் மீதம் என்பது கிடையாது.

                     இனி கிரெடிட் கார்டுகள், ரிவார்ட் பாய்ண்ட்டுகள், மற்றும் பேபேக் கார்டுகள் எப்படியெல்லாம் நம்மை சீரழிக்கின்றன என்று பார்ப்போம், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் சில E-ஷாப்களில் நீங்கள் கடன்காரனாய் (கிரெடிட் கார்டை வைத்திருந்தால்) மட்டுமே ஷாப்பிங் செய்ய முடியும், கிரெடிட் கார்டுகளுக்கு டெபிட் கார்டுகளை விட கட்டணம் குறைவாக இருக்கும். இந்தக் கிரெடிட் கார்டுகளை வாங்கி கட்டணக் கொள்கையினை(கொள்ளை) அறிந்து மிகத் துல்லியமாக செலவு செய்து கட்டணத்தில் இருந்து தப்புவோர்கள் நிறைய இருப்பதால், பாங்க்குகள் யோசிக்க ஆரம்பித்து கண்டுபிடித்த மற்றுமொரு கவர்சிகரமான திட்டம் தான் ரிவார்ட் பாயிண்ட்ஸ் , போனஸ் பாய்ண்ட்ஸ் முறை.

                        பல ஷாப்பிங் மால்களிலும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் உங்கள் முதல் நுகர்விலேயே உங்களுக்கு ஒரு உறுப்பினர் அட்டை ஒன்று வழங்கப்படும் அதில் உங்கள் நுகர்விற்கு ஏற்ப உங்கள் அட்டைக்கு போனஸ் பாயிண்ட்டுகள் வழங்கப் படும். அதை உபயோகித்து நீங்கள் மறுபடியும் சில விதிமுறைக்குட்பட்ட ( லாபகரமான) பொருளை வாங்கலாம். ஆனால் அந்தப் பரிசினைப் பெறுவதற்குள் உங்கள் பொறுமையின் எல்லைக்கே செல்ல வேண்டும் ( குறைந்தப்பட்ச ரெடிமபில் வேல்யு 2000  பாயின்ட்டுகளாவது இருக்கும்). 

           இப்பொழுது, ஒரு புதிய பல்பொருள் அங்காடி (குஜராத்தை தலைமையிடமாகக் )கொண்டு NMART என்ற பெயரில் வந்துள்ளது. இந்தக் கடையில் நீங்கள் உறுப்பினராக சேரும் போது ரூபாய் ஐந்தாயிரத்து ஐநூறு கொடுக்க வேண்டும் (உங்கள் வசதிப்படி பத்தாயிரம், பனிரெண்டாயிரம் கூட கொடுக்கலாம்). அதற்கு உங்களுக்கு 220 ருபாய்க்கான பரிசு வவுச்சர்கள் நாற்பத்தெட்டு மாதங்களுக்கு வழங்கப்படும் (ஆனால் அதை நீங்கள் எண்ணெய், நெய் , சர்க்கரை போன்ற மளிகைப் பொருட்களைத் தவிர்த்து வேறுப் பொருட்களை மட்டுமே வாங்கலாம்). இது போக நாற்பதெட்டு மாதங்களுக்கு ரூபாய் 1500/-க்கான கடன் வசதி உங்கள் உறுப்பினர் அட்டையில் வழங்கப்படும், அதற்கு முப்பது நாட்களுக்குள் நீங்கள் அதை செலுத்த வேண்டும். ஏதாவது ஒரு மாதம் நீங்கள்  செலுத்தத் தவறினால் உங்கள் அனைத்து சலுகைகளும் பறிக்கப் படும். இதற்கெல்லாம் நாம் கட்டுப் பட்டு எழுபத்திரெண்டாயிரம் ரூபாய்க்கான பொருட்களை நான்கு ஆண்டுக்குள் வாங்கியிருந்தால், நம் கட்டியிருந்த உறுப்பினர் தொகை பதினோராயிரமாகத் திரும்பக் கிடைக்கும்!!! 

                       இது போன்ற திட்டங்கள் உறுப்பினர் சேர்க்கை, மல்டி லெவல் மார்கெட்டிங் ஆகியன இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வரும் unclaimed ப்ரீமியம் போல செயல்படாத உறுப்பினர் வைப்புத் தொகையினை சுருட்டி வைப்பதில் தான் அதிக கவனம் காட்டுகின்றன. ஆனால் நாமோ!! சேமிப்பின் அவசியத்தை மறந்து தேவையற்ற நுகர்வுகளின் மூலம் நம் குடும்ப நிம்மதி, எதிர்காலத் திட்டங்கள் , பணியோய்வு போன்ற பல காரியங்களை இழந்து. இது தொடர்ந்து மாறிவந்தால் மேற்குலகை அழுகிப் போன கலாசாரமாய் மாற்றிய நுகர்வுப் பொருளாதாரம் நமது ஆணிவேரையும் பிடிங்கிவிடப் பார்க்கும்.

                    SBI கார்டிலிருந்து ICICI கார்ட் வரை, தங்கள் வாடிக்கையாளர்கள் கடன் அட்டையினைத் தொடர்ந்து உபயோகிக்க அவர்களின் நுகர்விற்கு ஏற்ப போனஸ் பாயிண்ட்டுகளை வழங்குகிறது. பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு போனஸ் பாயின்ட்டுகளுக்கு பரிசாக கொடுப்பவை( இதற்கு நாம் குறைந்தது இரண்டாயிரம் பாயின்ட்டுகளையாவது யாதெனில் சில லிட்டர் பெட்ரோல் அல்லது ஏதாவது ஒரு தீம் பார்க் , ரீசொர்ட்களில், விமானப் பயணங்களில் உல்லாச விடுமுறைகளில் சொற்பத்தள்ளுபடி அல்லது ஏதாவது எலக்ட்ரானிக் பொருட்கள், வாட்சுகள் என மறுபடியும் ஒரு ஆடம்பரச் சலுகைகளைக் கொடுத்து அவர்களை மேலும் நுகர்வு செய்யத் தூண்டுகிறது. இதில் ICICI போன்ற வங்கிகளோ நுகர்வு செய்தப் பொருளின் மதிப்பில் வரும் போனஸ் பாயின்ட்டுகளுக்கு ஏற்ப பணமாகவே திருப்பிக் கொடுக்கிறது. இது போன்ற நுகர்வுகளை மட்டுமே நாம் விரும்ப ஆரம்பித்தால், நம் வீட்டின் சுக துக்கங்களில் பங்கெடுக்கும்,முகமறிந்து மட்டும் கடனளிக்கும் நம் மளிகைக் கடை அண்ணாச்சிகளையும், நமக்கென்று ஸ்பெசலாக தோசை சுடும் மாமிகளையும் நம் வாழ்வில் மறந்து விடுவோம். அதே போல ஒரு திடீர் செலவில் கட்ட முடியாமல் போன கிரெடிட் கார்ட் ட்யூவை வசூலிக்க உங்கள் தன்மானத்தை அடகு வைக்க வேண்டி வரும். 


Roger -Sinna says:
இதன் தொடரூட்டமாக, இந்தப் பதிவு இடுகிறேன்.
credit card என்பது payback பூதந்தான். வெளிநாடுகளில் இதனாட்சி மிகவும் அதிகம். நடுத்தரவர்க்கத்தை சுரண்டும் பூதம் இது.
இங்கு பார்த்தீர்களானால், இந்த cardit card , application உடன் பூதத்தின் வரவு ஆரம்பிக்கிறது. வருமானத்துக்கு ஏற்றவாறு வட்டிவீதமும் மாற்றமடையும். ஆரம்பத்தில் அது தெரியாது. இப்போ, 19 .5 % என்று வைத்துக்கொள்வோம். இந்த நடுத்தரவர்க்கம், தொடர்ந்து வட்டியை செலுத்துவதிலேயே குறியாயிருக்கும். இது, முதலில் மாற்றங்களை உண்டாக்காமல், மக்களை, இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிடும். பின்னர், ஒரு நிலையில், ஏதாவது தடங்கள் ஏற்பட்டால், உதாரணத்துக்கு, ஒருமாதம் கட்டமுடியாவிட்டாலோ, அன்றி தவணைக்குப் பிந்தி கட்டினாலோ, கூட்டு வட்டி முறை மூலம் செலுத்தவேண்டிய தொகை அதிகரிக்கப்படும். சில credit card vandors இந்நிலையைப் பாவித்து அவர்களின் வட்டிவீதத்தை அதிகரித்துக்கொள்வார்கள். இது மேலும் பாவனையாளர்களின் வங்குரோத்து நிலையை உருவாக்கிவிடும். இது ஒரு தொடர்கதை. இதன் பின்னணியிலும், விளைவிலும் பயங்கரம் மட்டுமே விளைவாயிருக்கும் சரியான அவதானம் இல்லாவிடினும், திட்டமிடல் இல்லாவிடினும், க்றிஸ் பூதத்தைவிட payback பூதம் கொடியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக