வியாழன், 10 பிப்ரவரி, 2011

காணாமல் போனவர்கள் பற்றிய கதை - Part-1

        திடீரென்று கோமாவில் இருந்து விழித்தது போல், காலக்கிரமத்தில் நாம் தொலைத்த/ இழந்த / மறந்த மனிதர்கள் பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தேன். இப்போது நான் உள்ளது சென்னையாய் இருந்தாலும், என் கிராமங்களில் தொலைந்து போன மனிதர்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு அல்லது பட்டியல்.

1 . முதல் நபர் :-
கையிலே நீண்ட ஒரு கம்புடன் தெருவில் செல்லும் ஒரு அழுக்கு சட்டைக்காரன் அவன் , அவனை சுற்றி ஒரு குழந்தைகள் கூட்டம் எப்போதும் இருக்கும். பெயர் அது தானா என்று சரியாக தெரியாது ? -சவ்வு மிட்டாய் என்று வைத்து கொள்வோம்- ஆரஞ்சு, சிகப்பு கலரில் ஒரு கம்பின் மேல் ஒட்டியிருக்கும்.ஆம் , இன்றைய hygienic பற்றி விழிப்புணர்வு/தேவை/அவசியம் இல்லாத காலத்தில் தான் அப்படிப் பட்ட ஒரு இனிப்பு மிகப் பிரபலம் - அந்த கம்பின் மேற்புறத்தில் (மேற்ச்சொன்ன) அவ்வண்ணங்களில் மைதா கோந்து போன்ற பசையுடன் ஒட்டியிருக்கும்  -சொல்லப் போனால் அது 5 நிமிடம் மென்ற பபுள் கம்மின் பக்குவத்தில் தான் இருக்கும்.

அந்த இனிப்பின் விற்பனை யுக்தி தான், அவனது  இழப்பை தற்பொழுது எனக்கு ஞாபகப் படுத்தியுள்ளது.ஆம், அந்த கோந்தினை பிய்த்து - வாட்ச், மீன், நாணயம்,பொட்டு எனப் பல்வேறு வடிவங்களில் சிறுவர்களின் கையிலிலோ இல்லை கன்னத்திலோ ஒட்டி விடுவான்.

சிறுவர்கள் ஒவ்வொருவரும் வீட்டிலே, அடம் பிடித்து ,திருடி, நண்பனிடம் வாங்கி என கூட்டமாக அம்மிட்டாயை வாங்கி தங்கள் உடம்பில் ஒட்டி மகிழ்வர்.சில சமயம், அதை ஒட்டிக் கொண்டு பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் சிலர் அடி வாங்கிய துயர சம்பவமும், அதை பிய்த்து தின்ற ஆசிரியரின் சாகசமும் நடந்ததுண்டு.

இதில் முக்கியமாக குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவென்றால் - அச்சிறுவர்கள் அனைவரும் அந்த சவ்வு மீட்டாய் - தொழில் அதிபர் cum விற்பனையாளரை "மாமா" என்று உறவு சொல்லி தான் அழைப்பர்.. .அந்த மாமாவும் அக்கூட்டத்தில் காசில்லாமல் வந்து நிற்கும் சிறுவனை முதலில் விரட்டிவிட்டு, தன் விற்பனை முடிந்தவுடன் கொஞ்சம் மிட்டாயை எடுத்து அக்குழந்தைக்கு மீசையாய் வைத்து விட்டு போவான்..

அறிவிப்பு 

  • இவர் எனக்கு தெரிந்து காணமல் போன வருடம் 1990
  • கடைசியாக இவரை நான் பார்த்த இடம் , தூத்துக்குடி மாவட்டம் - நாகலாபுரம் எனும் கிராமம்.
  • கடைசியாக பார்த்த பொழுது - கையிலே ஒரு சின்ன காகிதத் துண்டினை வைத்து ஏளனமாய் சிரித்துக் கொண்டிருந்தார்.(அந்த காகிதத்தில் big -fun -bubble gum என்று இருந்தது)

பின் குறிப்பு :
இந்த மாமாவைப் பற்றி எனக்கு ஞாபகப் படுத்திய குடிமகன் - கொஞ்ச நேரத்திற்கு முன் நான் கை வைத்த ஒரு பேருந்தின் கைப்பிடியில், ஒரு சூவிங் கம்மினை ஒட்ட வைத்திருந்தான்.     

3 கருத்துகள்:

  1. i can realize your words, which try to depicts the changing world.

    the change is inevitable, if a human doesn't prepare to change - he could have been as ape till now.

    but you narrate the individual's point of view - good post - expecting some more interesting personalities in this series

    Good luck comrade

    Red & Indian
    red.indian26@yahoo.in

    பதிலளிநீக்கு
  2. Interesting one. By the way, what is your connection with Nagalapuram? I am so interested because I am from Nagalapuram. :)

    பதிலளிநீக்கு
  3. Dear Brother,

    There are so many nagalapuram, are you from the place where umarupulavar born. I belong to it. My native is nagalapuram, pallivaasalpatti near mosque.....

    பதிலளிநீக்கு