சனி, 26 ஜூலை, 2014

பஜ்ஜி சொஜ்ஜி - 71 - யாவரும்.காம் - தல வரலாறு, மன்னிக்க தள வரலாறு...

யாவரும்.காம் எனும் அமைப்பை உருவாக்கி இரண்டரை வருடங்களுக்கும் மேலாகிவிட்டது, 25ஆவது நிகழ்ச்சி வெகு விரைவில் நடத்தவிருக்கிறோம். ஆனால் இது வரை எங்கள் அமைப்பு என்ன நோக்கம் கொண்டது? அது எப்படி உருவாகியது என்கிற விஷயத்தை எல்லாம் இதுவரை யாரிடமும் சொல்லியதில்லை. எங்கள் செயல்பாடுகள் மூலமே நாங்கள் யார் என்பதை இது வரை அறிவிப்பது என்பதில் உறுதியாக இருந்தோம். இப்போது அதைப்பற்றி சொன்னாலோ அல்லது எழுதினாலோ கேட்பதற்கும் கருத்து சொல்வதற்குமான நட்புகளைப் பெற்றிருப்பதால் இப்பதிவைத் தொடர்கிறேன்.

யாவரும்.காம் அமைப்பை உருவாக்கும் போது உடனிருந்த நண்பர்களான வேல்கண்ணன், சாத்தப்பன், அன்பு சிவன், கண்ணதாசன், பாலா இளம்பிறை ஆகிய என் நண்பர்களில் இன்று அன்பு சிவன் இல்லை L. வாசகர்களாக (வேல்கண்ணனின் படைப்புகள் மட்டுமே அவ்வப்பொழுது வெளியாகிக் கொண்டிருந்தது சில இதழ்களில்) மட்டுமே நாங்கள் இந்தக் குழுவை ஆரம்பித்தோம். எங்கள் வாசிப்பை எப்படி விரிந்த தளத்திற்குள் கொண்டு செல்வது? எங்களுக்கு விருப்பமுடைய படைப்பாளிகளோடு நாங்கள் அருகில் செல்வதற்கான ஊடகமாகவும் தான் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினோ. ஒவ்வொரு கூட்டமும் கூட பெரும்பாலும் எங்கள் வாசிப்பினை அடிப்படையாய் வைத்து தான், விவாதிக்கப்பட்டு தேர்வு செய்கிறோம். இந்த நண்பர்களோடு, அமிர்தம் சூர்யா, இளங்கோ, ரமேஷ் ரக்சன், அகரமுதல்வன் ஆகிய நால்வரும் தொடர்ந்து கொடுத்து வரும் அதரவு மேற்சொன்ன நண்பர்களுக்கு இணையானதே.

*

இது போக எங்களை ஊக்கப்படுத்தியவர்களில் மிக முக்கியமான ஒருவர் இருக்கிறார். அவர் எங்களுக்கு நிகழ்வுகளின் போது மட்டுமல்லாது, அவற்றிற்கு வெளியேயும் தனிப்பட்ட எங்களது எழுத்து, வாசிப்பு மீதும் அக்கறை கொண்டவர். ஒவ்வொரு முறை எங்கள் கூட்டத்திற்கு அவர் வரும் பொழுதும் அவருடன் , அவர் தங்கியிருக்கும் இடத்திற்கே சென்று பேசிவிட்டு வருவோம். ஒவ்வொரு முறையும் அவர் எங்கள் கூட்டத்தில் பேசியவற்றில் ஏதாவது ஒன்றை உண்டு செரித்து நெடு நாட்கள் அவற்றை விவாதிப்பதுண்டு. நான் பெரும்பாலும் அவற்றை கவிதைக்காரன் இளங்கோவிடம் எடுத்து வைக்கும் குறிப்புகளில் இருந்து ஏதாவது ஒன்றை விவாதிப்பதிலேயே எங்கள் பல நாட்கள் சென்றிருக்கின்றன என்பது உண்மை.

சென்ற முறை தன் கவிதைத் தொகுப்பிற்கான விமர்சன அரங்கின் போது தமது கவிதைகள் எப்போதும் வேறொரு நிலத்தில் நிகழ்வதற்கான காரணமென “இன்றைய சூழலில் தமிழகத்தில் லேண்ட்ஸ்கேப்” என்பதே இல்லை என்றார். போகிற போக்கில் ஒரு கவிஞன் இப்படிப்பட்ட சொல்லினை உதிர்த்துவிட்டு சென்றுவிட முடியுமா என்ன?? அப்படி இயல்பாகவே ஒரு கவிஞன் உதிர்த்துவிட்டுச் சென்றாலும், அதை வாசகன் அப்படியேவா எடுத்துக் கொள்வான்? அவர் சொன்ன விஷயம் – மிகவும் ஆழமானதே – ஒரு நிலத்தில் நின்று கொண்டே அதற்கு நிலக்காட்சியே இல்லை என்று எப்படிச் சொல்ல முடிகிறது அவரால்?? என்றால் சாத்தியமிருக்கிறது.

ஆம் சாத்தியமிருக்கிறது – ஒரு தலைநகரம் வருடத்திற்கு சில கிலோமீட்டர்களை விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டே நீண்டுக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் வாழ்வோரெல்லாம் நகர் வாழ்க்கையிலே மனதைப் பரிகொடுத்து இருக்கின்றனர். நகரத்திற்குள் தங்களை இயக்கத்தெரிந்த புத்திசாலிகள் – நகரத்தின் விலையினையும் ஏற்றிவிட்டு,  – என் சொந்த ஊரிலும் சென்று உழவு நிலத்தை விற்கத் துணிகிறான். அதுவும் சென்னையின் விலையில். இதை அவனுக்கு சாத்தியப்படுத்துகிற சக்தி உண்மையில் ஒரு கொள்ளை நோய் என்பதை உணரமாட்டர்கள். இன்னும் சில காலத்திற்கு. வரைபடத்தில் கூட காணக்கிடைக்காத கிராமமான என் ஊரான நாகலாபுரத்திலும் சில கோடிகளுக்கு விவசாய நிலமானது, அதுவும் சென்னையின் புறநகர் பகுதிகளின் விலைக்கு நிகராக விற்கப்படுகிறது. அப்படியென்றால் நிஜத்தில் தலைநகருக்கும் என் கிராமத்திற்கும் இடையே இருக்கின்ற சில நூறு கிலோமீட்டர்கள் எங்கே போனது. இதைத் தான் கவிஞன் சொன்ன “தமிழ்கத்தின் லேண்ட்ஸ்கேப் மறைந்துவிட்டது” என்கிற வார்த்தையோடு என்னை பொருத்திப் பார்க்கச் செய்தது... அவர் தான் கவிஞர் யவனிகா ஸ்ரீராம்.
 


*

நாங்கள் இத்தனை பேரும் இணைந்த கதை என்ற ஒன்றிருக்கின்றதல்லவா? மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், அந்த பெரிய பதிப்பகம் நடத்திய புத்தக வெளியீட்டு விழா ஒன்றிற்குச் சென்றிருந்தேன், நிகழ்வு ஆரம்பிப்பதற்கு வெகு நேரம் முன்னரே வந்து தேநீர் கடையில் நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் பொழுது தான் ஃபேஸ்புக்கில் பார்த்த முகங்கள் இவர்களென ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டோம். சாத்தப்பன், வேல்கண்ணன், அன்புசிவன், பாலா, கண்ணதாசன் என எல்லோருமே இணைந்ததும், சந்தித்ததும் கூட இந்தப் புள்ளியில் தான். அந்தப் புள்ளி எடுத்துக் கொடுத்த வார்த்தை தான் ”யாவரும்” எனும் சொல், இன்னும் பல திட்டங்களையும் லட்சியங்களையும் கொண்டு பயணிக்க வைத்துக் கொண்டிருக்கும் அந்த உயிர் சொல்லுக்கு உயிர் கொடுத்தவர் தான் கவிஞர் அய்யப்ப மாதவன் - நாங்கள் இணைந்த புள்ளி.

- ஜீவ கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக